லோகமாதேவியின் பதிவுகள்

Category: கவிதை (Page 2 of 2)

நேசம்

நீ பேசிக்கொண்டிருக்கையில்

செவிகளே உடலாகி

குரலாக மாறிவிட்ட உன்னை கேட்டுக்கொண்டிருக்கிறேன்

 

நான் கேட்க விரும்புவதைத்தவிர

வேறு என்ன என்னவோ பேசுகிறாய் எப்போழுதும்

 

எப்போதாவதுதான் தெரியாமல் கைபட்டு

இனிப்பை தொட்டுக்கொண்டது போல

என் மீதான் உனதன்பை கோடிட்டு காட்டுகிறாய்,

 

நீ பேசி முடித்த பின்னர்

கைப்பேசியின் உள்ளிருந்து உருவி எடுத்து

உன் வாக்கியஙகளை சொல் சொல்லாக பிரித்தெடுத்து

வேறு வேறாக அடுக்கி கட்டமைத்துப்பார்க்கிறேன்

 

ஒளிந்திருக்குமோ என்மீதான உன் காதல்

இவற்றுக்குள் எங்கேனுமென்று!!

எழுதாக்கவிதை

கவிதை மொழியிலேயே பேசுகிறாய் என்னுடன் எப்பொழுதும்,

உன் கவிதையைப்பிடித்தபடிதான்

உன் உலகிற்குள் நுழைந்திருக்கிறேன்.

ஆயினும், ஒன்றே போலிருப்பதில்லை உனது கவிதைகள் யாவும்.

 

ஒரு சில  திரிசூலமும், மழுவும், உடுக்கையுமாய்

மூன்றாம் கண்ணுடன் முப்புரம் எரிக்கையில்

திகைத்து தள்ளி நின்று கொள்கிறேன்.

 

இன்னும் சில ஆயிரம் தடக்கைகளில்

ஆயுத்தத்துடன் ஆங்காரமாய் வ்ருகையில்

அடைக்கலம் கோருகிறேன்.

 

முள்கிரீடம் அணிந்து , சிலுவையில் அறைபட்டு

குருதி கசிகிறது சிலவற்றில்

அவற்றை, பதறி எடுத்து மடியிலிட்டு முந்தானையால் துடைக்கிறேன்.

 

குப்பைத்தொட்டியில் போடப்பட்ட

பச்சிளம் சிசுவாய் பரிதவித்து வீரிடும்

கவிதைகளை

அள்ளிஎடுத்து என் முலைகொடுக்கிறேன்.

 

ஒரு சிலவே மென் திரையாக இருப்பதால்

மெல்ல விலக்கி கடந்து செல்கிறேன்.

 

  வெகு சிலவே    சிற்றகலின் ஒற்றைச்சுடரின்

ஒளியில்  தெரியும்  கடவுள்களைப்போல

சொந்தமென்னும் உணர்வையும் நம்பிகையும் அளிக்கின்றன.

 

கனத்த சில கவிதைகள்

குளிரும் இரவுகளில் என்னை முழுவதும் மூடியிருக்கும்

கதகதப்பான மகிழம்பூ மணக்கும் கம்பளியாகின்றன.

 

இன்னும்   ஒன்றே ஒன்றுதான்

உன்னால் எழுதாக்கவிதையாய் இருக்கிறது

என் கழுத்தின் குருதிக்குழாயை

வலியின்றி வெட்டும் நஞ்சு தோய்ந்த

உன் கூர் வாள் கவிதையொன்றினையும் எழுதி விடேன்.

 

உன் கவிதைகளோடு வாழ்வதைப் போலவே இனிதானது

குருதி கொப்பளிக்க அவற்றாலேயே சாவதும்!

ஆமென் ஆமென்

பேருந்தின் படிக்கட்டுகளில்

ஒற்றைக்கையால் பற்றிக்கொண்டு

ஊசலாடும் பயணமொன்றில்

அறுந்து விட்டதென் செருப்பின் நீல வாரொன்று,

அவசரமாய் உதறினேன் இரண்டையுமே

காலடியில்

விரைந்து கொண்டிருந்த  கரிய தார்ச்சாலையில்,

 

பலநாட்களாய் உயிருக்கு போராடிய

அவற்றினின்றும் விடுதலை பெற்ற

என் பாதங்களின்புத்துணர்வை
சொல்லிப்புரிய வைக்க முடியாதென்னால்!
கீழ்மை நிறைந்த காத்திருப்புகளுக்கும்
கடந்து வந்த கடினப்பாதைகளுக்கும்
இயலாமையும் நிராசையும் நிறைந்த
என்னை இதுவரை சுமந்து தேய்ந்ததற்கும்
மெளன சாட்சியான  அவை அங்கெயே கிடக்கட்டும்
என் இறையே, அருள்வீராக
அதன் மீதாவது ஏதேனும் ஒரு பெரு வண்டியின் சக்கரங்கள் ஏறிச்செல்லும்படி,
ஆமென், ஆமென்

எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!

 

உங்களுக்கு கிடைத்திருக்கிறதா

களைத்துத் திரும்பும் மாலையில் தோட்டத்து வாயிலில் காத்திருக்கும்

ஏதோ பெயர்தெரியாப்பறவை உங்களுக்கெனெ விட்டுவிட்டுப்போன  பூஞ்சிறகொன்று?

உங்களுக்கு வாய்த்திருக்கிறதா

விசிறி வாழைகளின் கொழுத்த இலை மட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பொன்று நீட்டும் பிளவுபட்ட கருநீல நாக்கை காணும் பரவசம்?

உங்களைக்கண்டதும்  காலடியில் நுழைந்து  ஒடியிருக்கிறதா

மரவள்ளிகிழங்குகளை தோண்டித் தின்றுகொண்டிருக்கும்  சாம்பல் வண்ண  முயல்கள்?

நீங்கள் ரசித்திருக்கிறீர்களா

மழை ஓய்ந்த மறுநாள் காலையிலான கழுவித்துடைத்தாற்போன்ற துல்லிய நீல வானை?

பசும் இலைகளின் இடையே  பூத்திருக்கும் செம்பருத்தி மலர்களின் குருதிச்சிவப்பை?

குஞ்சுகளுடன்  தோட்டத்து ஈரமண்ணில் புழுக்களைத் கொத்தித்திண்னும் பெண்மயில்களை?

சின்னஞ்சிரு கைகளில் உதிர்ந்த முருங்கைப்பூக்களை ஏந்தியபடி கொறித்துததின்னும் அணில்களை?

தனித்திருக்கும் முற்பகலில் கேட்டுக்கொண்டேயிருக்கும் ஏதேதோ பறவைகளின் உற்சாகக்கூக்குரல்களை?

கவனித்திருக்கிறீர்களா  தன்னந்தனிமையில்  உங்கள் காலடியில் காலம் நழுவிச்செல்வதை?

பாலெனெப்பொழியும் நிலவில் பனியில் நனைந்தபடி கடந்திருக்கிறீர்களா உறங்காத இரவுகளை?

எனினும் உங்களுக்கு இருக்குமாயிருக்கும்

இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில்  பின்னிருந்து இறுக்கிக்கொள்ள கணவனோ நண்பனோ!!

ஞாயிற்றுக்கிழமைகளின் பின் மதியத்தில் கட்டிக்கொண்டு உறங்க  ஒன்றிரண்டு குழந்தைகள்

திங்கள்கிழமைகளின் சிடுசிடுப்பை காட்டிக்கொள்ள கணவனோ மனைவியோ!!!

தீர்ப்பு சொல்லி சமரசம் செய்து வைக்க குழந்தைகளின் சண்டைகளும்

துவைத்து  உலர்த்தி மடித்து வைக்க நிறைய துணிகளும், கண்ணீருக்கெனெ காரணங்களும்,

உங்கள் வருகைக்காய் காத்திருந்து தேனீர் தயாரிக்கும் யாரோவும்

அவரவர்க்கு அவரவர் வாழ்வு

விருப்பங்களும் விழைவுகளும்  நேர்மாறான  நிஜங்களுமாய் !!!

இனிது இனிதா ஏகாந்தம்? அல்லாமல்

இக்கரையின் இச்சைகளின் வழிதெரியும் அக்கரைப்பச்சையா எல்லாம்? லோகமாதேவி

இத்தனைக்கும் பிறகும்!

 

வீசி எறிந்துகொண்டிருக்கிறாய்

என்மீதான உன் வெறுப்பை அங்கிருந்தபடி,

முகத்திலறைந்தபடி விழுபவற்றையும்

மடிநழுவி சிந்தியவற்றையும் இருகைகளையும் விரித்து

அள்ளிப்பற்றி சேகரித்துக்கொள்கிறேன்

இன்னும் இன்னுமென நீ வாரி இறைப்பாயெனினும்

அள்ளிகொள்கிறேன் அவற்றையும்

முன்பு நீயளித்த முத்தங்களை ஏந்திக்கொண்டது போலவே

முழு மனதோடு,

 

முகாந்திரமற்றதும் யூகிக்கமுடியாததாகவும்  அதற்கான காரணமிருக்கலாம்

எனினும் எனக்கு புகாரேதுமில்லை

முன்னறிவிப்புகளேதுமின்றி  தேவன் தொட்டளித்ததோர் கணமொன்றில்

நீ எனக்கு கையளித்த துய காதலைப்போலவே

இதனையும்  மகிழ்வுடனே ஏற்றுக்கொள்கிறேன்

அள்ளி அள்ளி பூசிக்கொண்டதில் பரிசுத்தமாகியதென்னை உனது காதல்

இதோ இன்றென்னை முழுக்க நனைக்கும்

இவ்வெறுப்பினாலும் ஆசிர்வதிக்கவே பட்டிருக்கிறேன்

ஏனெனில்

வேறுயாறுமல்லவே, நீயல்லவா என்னை வெறுப்பது ?

 

எதற்கும் இன்னொரு முறை   கனவுகளிலும் நினைவுகளிலும்

எனது புன்னகைக்கசடுகள் ஏதேனும்

மிச்சமிருக்கிறதா என தேடிப்பார்த்து சுத்தமாக துடைந்தெறிந்து விடு

வெறுக்கமுடியும் அப்போதுதான் என்னை முழுமையாய்,

குவித்த ககைகளை வானோக்கி உயர்த்தி நன்றி சொல்கிறேன்

உன் வெறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் இதயத்தை எனக்கு படைத்தவனுக்கு,

 

எப்போழுதவது என்னைக்கொல்லும் இச்சை வந்தால் சொல்லியனுப்பு

உன் கையிலிருக்கும்  நச்சுதோய்ந்த கூர்நுனியில் கிழிபடவென

கழுத்தின் நீலநரம்பினை துல்லியமாய் தெரியும்படி

துடைத்துச்சுத்தமாக்கிக்கொண்டு வருகிறேன்

அப்போழுதும் எந்தப் புகாருமின்றி

 

இன்னுமிருக்கிறதோர் வேண்டுகோள்

இ்றுதிக்கணத்திலும் என் கண்களில் ததும்பும்  உனக்கானகாதலை

காண்பாயெனில்  தடுமாறலாம் நீ,

எனவே எனதன்பே,

முகத்தைத் திருப்பிக்கொள்   என் கழுத்தைக்கிழிக்கையில்!

கடைசிக்கணம்

காலடியில் விரைந்து நழுவிக்கொண்டிருக்கிறது   கணங்கள்

நீளும் இரவுகளின் மெளனம் உடைக்கின்றது கேவலின் மொழி

கண்ணீரின் உப்புச்சுவையை நாவைச்சுழற்றி

சுவைத்துக்கொண்டிருக்கிறது போர்த்தியிருக்கும் இருள்

படுக்கையறையெங்கும் இருக்கிறது

குருதியில் பதறியபடி  நடந்து நடந்து

நனைந்த என் காலடித்தடங்கள்

அவற்றிற்கிடையிலும் நீ வந்தால் காணலாம்

கடைசிக்கணத்தில் கைகளினின்றும் நழுவி விழுந்த

உனக்கென சேர்த்துவைத்திருந்த உலர்ந்த மகிழம்பூக்களை

பாசிபிடித்த கிணற்றுச்சுவர்களிலிருந்து

அசைவில்லா ஆழ்நீரை நோக்கி இறங்கிச்செல்லும்

படிக்கட்டுகளில் அமர்ந்து இறுதியாக   என்னிடம்

சொன்னவற்றை நினைத்துக்கொண் டே

இழந்துகொண்டிருக்கிறேன்  துளித்துளியாய்

என்னிடமிருந்து  என்னையே  என்றென்றைக்குமாய்

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑