அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 25 of 39

நிலத்துக்கு மேலே வளரும் வேர்கள்

தாவரங்களின் வேர்கள் என்றாலே நிலத்துக்குக் கீழே இருப்பவை என்றுதான் நாம் அறிந்திருப்போம். தாவரங்களின் வேர் (Root – ரூட்) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு.
வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிக ஆழத்தில் வேர்கள் செல்லமுடியாத ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரெஸ் ரூட்ஸ்) எனப்படும். இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன. மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அதிக அளவில் சத்துகளை சேகரிக்கின்றன. பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும்.
அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது. மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் பட்டுப்பருத்தி, அத்தி மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்

தினமலர் தளத்தில் வெளியானது ]

வேர்களில் இத்தனை விதங்களா!

தாவரங்களின் ஆதாரம் வேர்கள். பூமிக்கு அடியில் மட்டுமல்ல; பூமிக்கு மேலேயும், தாவரத்தின் பிற பாகங்களிலும் தோன்றும் வேர் வகைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.

வேறிடத்துப் பிறப்பவை (Adventitious – அட்வென்டிடியஸ்)
தண்டு, இலை, கிளை, அடி மரம் ஆகிய பகுதிகளில் தோன்றுபவை.
கரும்பு

முண்டு வேர்கள் (Stilt – ஸ்டில்ட்)
பிரதான தண்டில் இருந்து தோன்றி, தாவரத்தை நிலைநிறுத்த உதவுபவை.
மக்காச்சோளம்

தாங்கு வேர்கள் (Prop – பிராப்)
கிளைகளில் உருவாகி, கீழ்நோக்கி வளரும். நிலத்தில் ஊன்றி கிளைகளைத் தாங்கும்.
ஆலமரம்

மூச்சு வேர்கள் (Respiratory – ரெஸ்பைரேட்டரி)
ஊன்று வேர்களில் இருந்து செங்குத்தாக நீர் மட்டத்திற்கு மேலும், நிலத்திலும் வளர்பவை.
அலையாத்தித் தாவரங்கள்

அண்டை வேர்கள் (Root Buttresses – ரூட் பட்ரெஸ்ஸஸ்)
பெரு மரங்களில், பட்டையாகத் தடித்து சுவர் எழுப்பியது போல உயர்ந்து, சுற்றிலும் வளர்பவை.
மருத மரம் (Buttress Tree)

மிதவை வேர்கள் (Floating – ஃப்ளோட்டிங்)
நீர்த் தாவரங்கள் மிதக்க உதவும். மென்மையாகவும், பருத்தும் காணப்படும். காற்று நிறைந்தவை.
ஆகாயத் தாமரை

உறிஞ்சு வேர்கள் (Haustorial – ஹாஸ்டோரியல்)
தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். கொடிகளுக்குத் தேவையான நீர், உணவு போன்றவற்றை உறிஞ்சும் வேர்கள்.
கஸ்குட்டா (Cuscutta)

ஒட்டு வேர்கள் (Clinging – கிளிங்கிங்)
மரங்களில் தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் பதிந்திருக்கும்.
மிளகுக் கொடி

உறிஞ்சு கவச வேர்கள் (Velamen – வெலாமென்)
செடியின் அடியிலிருந்து உண்டாகி தொங்கிக்கொண்டு, காற்றில் உள்ள ஈரத்தை எடுத்துக்கொள்ளும்.
ஆர்க்கிட் தாவரங்கள்

தினமலர் தளத்தில் வெளியானது ]

பறக்கும் புரதங்கள்

2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, 900 கோடியாகப் பெருகும் என்பது ஒரு கணிப்பு. அந்தச் சூழலில், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, வேளாண்துறையால் மட்டும் முடியாது. எனவே, பிற வழிகளின் மூலம் மாற்று உணவைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்று உணவாகப் பூச்சி உணவுகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
தாய்லாந்து, சீனா, ஜப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியை உண்ணும் பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகக் கிராமப்புறங்களில்கூட ஈசல் பூச்சிகளை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது.
மனிதர்கள், பூச்சிகளை உணவாக உட்கொள்வது ‘என்டமோபாஜி’ (Entomophagy) எனப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட உண்ணப்படும் பூச்சிகளின் வரிசையில், வெட்டுக்கிளி, எறும்பு, வண்டு, பட்டுப்புழு, சிலந்தி, தேள், தேனீ, கரப்பான் பூச்சி போன்றவை உள்ளன.
பூச்சிகள், இயற்கையிலேயே அதிகப்படியான புரதம், கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளன. இவை விரைவாக இனப்பெருக்கம் ஆகின்றன. பூச்சிகளை மனிதர்கள் உட்கொண்டாலும், சூழலியல் சமநிலை குலையாது. இன்னும் 30 ஆண்டுகளில், ‘பறக்கும் புரதங்கள்’ என அழைக்கப்படும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள்.

தெரிந்து கொள்வோம்!

1. பூச்சியியல் ஆய்வாளரை, ஆங்கிலத்தில் இப்படி அழைப்போம் ………………………
2. உலகின் நீளமான மீன் எது? ……………………
3. மணிப்பூர், மிசோரம் மாநிலங்களின் மாநிலப் பறவை எது? ………………
4. பறக்க முடியாத பெரிய பறவை எது? ………………………

விடைகள்:
1. என்டமாலஜிஸ்ட் Entomologist-
2. ஜயன்ட் ஓர் மீன் (Giant Oar Fish). நீளம்: 110 அடி
3. மிஸஸ். ஹியூம்ஸ் பீஸன்ட் (Mrs. Hume’s pheasant)
4. நெருப்புக் கோழி (Ostrich)

தினமலர் தளத்தில் வெளியானது ]

உருவத்தில் சிறியது; காரத்தில் பெரியது

சமையலில் மிக முக்கியமான பொருள் கடுகு (Mustard – மஸ்ட்டர்ட்). சிறிய செடியாக வளரும், கடுகுத் தாவரத்தில் இருந்து பெறப்படும் விதையே கடுகு. தாவரக் குடும்பம் ‘பிராசிகேசியே’ (Brassicaceae). ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது.
கடுகுச் செடி நீளமான இலைகளுடன், மென்மையான தண்டுப் பகுதி கொண்டது. 90 செ.மீ. முதல் 4 அடி உயரம் வரை வளரும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும்.
‘சிலிகுவா’ (Siliqua) என்று அழைக்கப்படும் பச்சைக் காய்களில் கடுகு விதைகள் பொதிந்து இருக்கும். 150 நாட்களில் செடி வளர்ந்து, முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும். சமையலில் கடுகின் பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது.
வெண்கடுகைவிட (Brassica alba – பிராசிகா அல்பா) கருங்கடுகில் (Brassica nigra – பிராசிகா நிக்ரா) காரம் மிகுந்து இருக்கும். கடுகைச் சூடேற்றும்போது, அதன் மேல் உள்ள தோல் அகன்று ‘மைரோஸினேஸ்’ (Myrosenase) எனப்படும் மணமுள்ள நொதியம் (enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்குக் காரணம்.
கடுகு அதிக கலோரி கொண்டது. 100 கிராம் கடுகில், 508 கலோரி கிடைக்கும். இதில் செலினியம், மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்ற சத்துகள் உள்ளன. எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. இந்தியக் கடுகுச்செடியின் (Brassica juncea) கீரை, உணவாகப் பயன்படுகிறது. கடுகு எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

கடுகு அருங்காட்சியகம்

அமெரிக்காவில் உள்ள ‘மிடில்டான்’ (Middleton) என்ற இடத்தில் கடுகு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1992இல் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், உலகம் முழுவதும் உள்ள 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட 6,090 கடுகு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் சனிக்கிழமை ‘தேசிய கடுகு தினம்’ (National Mustard Day) கொண்டாடப்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கண்ணாடிப் பூக்கள்

நரம்பு வடிவ மலர்ச் செடி
ஆங்கிலப் பெயர் : ‘ஸ்கெலிடன் ஃபிளவர்’ (Skeleton Flower)
தாவரவியல் பெயர் : ‘டைபிலியா கிரேயி’ (Diphelleia Grayi)
தாவரக் குடும்பம் : ‘பெர்பெரிடாசியே’ (Berberidacea)

மழையில் நனைந்தால் தனது வெள்ளை நிறத்தை இழந்து கண்ணாடி போன்று மாறிவிடும் பூக்களைக் கொண்ட செடி வரி ‘வடிவ மலர்ச்செடி’ எனப்படுகிறது. ஜப்பான், சீனா, அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைப்பகுதி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. குளிர் நிறைந்த மலைப்பகுதிகளே இது வளர்வதற்கு ஏற்ற சூழலைத்
தருகிறது. கிழங்குகளில் இருந்து முளைத்து வளரும் இந்தத் தாவரத்தின் இலை அகலமாக குடைபோல இருக்கும். ஒரு மீட்டர் அகலத்துக்கு இலைகள் பரவியிருக்கும். செடி 40 செ.மீ. உயரம் வரை வளரும்.
மே முதல் ஜூலை வரை மலர்களைத் தோற்றுவிக்கும். செடியின் நுனியில் கொத்தாக 6 மெல்லிய இதழ்கள் கொண்ட சிறிய வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்தச் செடியின் பழங்கள் அடர் நீல நிறத்தில் இருக்கும். பூவின் இதழ்கள் மழையில் நனைந்தால் நிறமிழந்து கண்ணாடி போல ஆகி, பின் ஈரம் உலர்ந்த பின் மீண்டும் வெள்ளை நிறம் தோன்றும். நிறம் மறையும்போது, பூ இதழ்களின் நரம்பு அமைப்பு கண்ணாடிக்குள் தெரியும் மெல்லிய எலும்புகள் போலத் தெரிவதால் இதற்கு ‘ஸ்கெலிடன் ஃபிளவர்’ (Skeleton Flower) என்று பெயர். பூ இதழ்களின் செல்கள் நெருக்கமாக இல்லாமல் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இப்படி நிறமிழக்கக் காரணம். மழைக்காலங்களில் இந்தச் செடியின் பூக்கள் பனிக்கட்டியால் செய்ததுபோல மிக அழகாகக் காணப்படும். இந்தத் தன்மை காரணமாக, ‘தாவரங்களில் பச்சோந்தி’ (Chameleon of the Woods – கேமலியேன் ஆஃப் தி வுட்ஸ்) என்றும் இந்தச் செடி அழைக்கப்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

திருஷ்யம்- 2

2013 ல் வெளியான திருஷ்யம் படத்தின் அடுத்த பாகமான திருஷ்யம் -2 அதே ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் ஆசிர்வாத் சினிமாவின்  அந்தோனி பெரும்பாவூர் தயாரிப்பில்  பிப்ரவரி 19 ,2021’ல் அமேஸான் ப்ரைமில் வெளியானது.சதீஷ் குருப் ஒளி இயக்கம்.

முதல் பாகம் எடுக்கப்பட்ட அதே தொடுபுழாவில் பெரும்பாலான காட்சிகளும் , ஒருசில காட்சிகள் மட்டும் கொச்சியிலுமாக மொத்தம் 46 நாட்களில் படப்பிடிப்பு  முடிக்கப்பட்டது.

முதல் திருஷ்யத்தின் அதே மோகன்லால், மீனா, அன்சிபா ஹாஸன் மற்றும் எஸ்தர் அனில் கூட்டணி இதிலும் . 6 வருடங்களில், கொஞ்சம் வளர்ந்திருக்கும் மகள்களும் மாறியிருக்கும் வீட்டின் கட்டமைப்புமாக இரண்டாம் பாகத்திற்கு தேவையான மாற்றங்கள்இயல்பாக  அமைந்திருக்கிறது..

குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும், அது கொலையானாலும், கொலையை தடயமின்றி மறைப்பதானாலும் தயங்காத குடும்பத்தலைவனும் எந்த அச்சுறுத்தலும் மிரட்டலும் சித்திரவதையும் வந்தாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் குடும்பத்தினருமாக பிரமாதமான வெற்றிப்படமாக அமைந்து விட்டிருந்தது முதல் பாகம்.  மற்ற எதைக்காட்டிலும் குடும்ப நலனெனும் அறத்தில் விடாப்பிடியாக நிற்கும் தந்தையாக, கணவனாக மோகன்லாலெனும் அசல் கலைஞன் பிரமாதாப்படுத்தியிருந்த படமது.

மிக அழகாக, முழுமையாக முடிந்த , இனி  இரண்டாம் பாகமாக தொடர எந்த சாத்தியங்களும் இன்றி கச்சிதமாக, நேர்த்தியாக முடிக்கப்பட்ட ஒரு படத்தை, மிக சாமார்த்தியமாக,   புத்திசாலித்தனமாக, பிரமாதமாக இரண்டாம் பாகமாக எடுத்து அதை வெற்றிப்ப்படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத,போலீஸாரால் துரத்தப்படும்   குறறவாளி ஜோஸ், ஓடிவருவதும், பின்னர் பிடிபடுவதும், பிடிபடும் முன்பு காவல் நிலையத்தில் சவத்தை புதைத்துவிட்டு திரும்பும், ஜார்ஜ்குட்டியை  ஒரு சிறிய இடைவெளி வழியாக அவன் பார்ப்பதுமாக பரபரப்பான துவக்கக்காட்சிகள்.

துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து 6 வருடங்களாகியும்  அந்தக்குடும்பத்தினர் அந்த நினைவுகளிலிருந்து மீளமுடியாமலிருக்கின்றனர். எனினும் காலப்போக்கில் மெல்ல மெல்ல தேறிக்கொண்டும் வருகின்றனர். 12 ல் படிக்கும் இ்ளைய மகளும் படிப்பை முடித்து வீட்டில் திருமணத்திற்கு காத்திருக்கும் மூத்தவளும், சினிமாபித்து பிடித்திருக்கும் ஜார்ஜ் குட்டி திரையரங்கு உரிமையாளராகி இருப்பதும் ,அதன்பொருட்டு வாங்கிய கடனில் மீனாவுக்கு அதிருப்தி இருப்பதுமாக கதை சாதரணமாக நகருகின்றது. ஆனால்  டீக்கடையிலும் ஆட்டோ ஸ்டாண்டிலும் ஜார்ஜ் குட்டிதான் அக்கொலையை செய்திருக்ககூடுமென்றும், அவர் மகளும் செத்துப்போன அந்த பையனும் காதலித்து, நெருக்கமாக வீட்டிலிருக்கையில்  ஜார்ஜ்குட்டி பார்த்து பின்னர் கொலை நடந்ததாகவும் அரசல் புரசலாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

பழைய நினைவுகளினால் அஞ்சுவுக்கு அவ்வப்போது வலிப்பு வருகின்றது , வருந்தும் மீனா இரண்டு வருடங்களுக்கு முன்பாக பக்கத்தில் குடிவந்திருக்கும் சரிதாவுடன் மட்டும் நட்புடன்  கவலைகளை பகிர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறாள். முன்பு போல ஜார்ஜ்குட்டி நல்லவனென்று இப்போது ஊருக்குள் பேச்சில்லாததற்கு  பிறர் கண்களை உறுத்தும் அவர்களின் செல்வச்செழிப்பும் ஒரு காரணமாகிவிட்டிருக்கிறது.

வினய்சந்திரன் என்னும் ஒரு பெரிய தயாரிப்பாளரை அவ்வப்போது சந்தித்து, ஜார்ஜ்குட்டி,  தான் எடுக்கவிருக்கும் ஒரு திரைப்படம் குறித்தும், அதன் திரைக்கதையை குறித்தும் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்.அதை மீனா விரும்பாவிட்டாலும் தொடர்ந்து செய்கிறார்

6 வருடங்களாகியும், அந்த கேஸை முடிக்க முடியாமலானதாலும், செத்துப்போனது காவல் உயரதிகாரியின் மகனென்பதாலும் போலிஸும் ரகசியமாக  ஜார்ஜ் குட்டியை கண்காணித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

மகனின் உடல் பாகங்கள் கிடைத்தாலே ஆத்ம சாந்திக்கான பரிகார பூஜைகள் செய்ய முடியுமென்பதால் மீண்டும் ஜார்ஜை  அவனது தந்தை தேடி வருகிறார், மகளின் கல்யாணமுயற்சிகளுக்கு தடையாக ஊருக்குள் அவளைப்பற்றி உலவும் கட்டு்க்கதைகள் இருப்பதில்  மீனா மனமொடிந்திருக்கிறார், சரியாக இதே வேளையில் 6 வருடங்களுக்கு முன்பு கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்துவந்த  முதற்காட்சியின் ஜோஸ்  விடுதலையாவதுமாக கதை வேகமெடுக்கிறது.

மிக சிறப்பான இந்த அடிப்படை விஷயங்ளைக்கொண்டு மேலே கதையை பின்னிப்பின்னி சாமார்த்தியமாகவும் எந்த தொய்வுமின்றியும் கொண்டு செல்கிறார்கள்.

ஜோஸ் செய்த கொலையால் அவன் குடும்பவாழ்வு சிதைந்திருப்பது, அதற்கு பிழையீடாக அவனுக்கு பணம் தேவைப்படுவது, செத்துபோனவனின் உடல் இருக்கும்  இடம் குறித்து துப்புக்கொடுத்தால் பெருந்தொகை பரிசாக காவல்துறை அளிக்கும் என்றூ தெரிந்துகொண்ட ஜோஸ் அவனுக்கு தெரிந்த உண்மையை போலீஸில் சொல்ல முடிவெடுப்பதுமாக  இரண்டாம் பாதி பரபரப்பாக நகருகின்றது

ஜோஸ் உண்மையை சொன்னதும் போலீஸ் ஸ்டேஷன் தோண்டப்படுகிறது, DNA பரிசோதனைகளுக்குபின் ஜார்ஜ் குட்டியை இந்தமுறை எப்படியும்  பிடித்தே ஆகவேண்டுமென போலீஸ் முனைகிறது, குடும்பத்தை மீண்டும் காவலில் எடுது விசாரிக்கிறார்கள். மனைவியும் மகள்களும் அச்சத்தில் ஜார்ஜ்குட்டியின் திட்டங்களை சிதைக்கிறார்கள். படம்  பல திடீர் திருப்பங்களுடன் செல்கின்றது

வெளிப்படும் சிலரின் சுயரூபங்கள், போலீஸ் விரித்திருந்த கண்காணா வலையில் ஜார்ஜ்குட்டியின் மனைவியும் மகள்களும் விழுந்துவிடுவது என எதிர்பாரா இத்திருப்பங்களால் நாமும் திகைத்துப்போகிறொம்

 புதைத்த உடல் திரும்ப கிடைத்ததா?  ஜார்ஜ் குட்டியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதா? என்னவானது மீதிக்கதை என்று அவசியம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். முதற்பாகத்தின் மிகச்சரியான தொடர்ச்சி என்பதால் அதைப்பார்க்காமல் இந்த பாகத்தைப் பார்கையில் கதை புரியாமலாகும் சாத்தியமிருக்கிறது. எனவே பார்க்காதவர்கள் இரண்டையும் சேர்த்துப்பார்ப்பது மிக நல்ல திரையனுபவமாக இருக்கும்

ஆர்ட் டைரக்டர் ’ராஜீவ் கோவிலகத்து’ மிகப்பிரமாதமாக  முன்பாகத்தின் அதே  தெரு, அதே டீக்கடை, போலீஸ் ஸ்டேஷன், கேபிள் டிவி அலுவலகெமென்று, அச்சுப்பிசகாமல் மீண்டும் செட் போட்டதற்கும், கோவிட் பரிந்துரைகளுக்கென ஒரு மேற்பார்வைக்குழுவொன்றை அமைத்து அதன் தலைமையில் மிகக்கட்டுப்பாட்டுடனும் தேவையான எல்லா பாதுகாப்புடனும் 56 நாட்களுக்கு கணக்கிட்ட முழுப்படப்பிடிப்பை  46 நாட்களிலேயே முடித்ததற்கும்,  தொடர்ந்து திருஷ்யம் 3 எடுக்கும் அளவுக்கு இந்த பாகத்தை வெற்றிகரமாக கொடுத்திரு்ப்பதற்கும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்

திருஷ்யம் 2 தெலுங்கில் வெங்கடேஷும், ஹிந்தியில் அஜய்தேவகனும் நடிக்க  தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழில் கமல் சம்மதிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி.

திரைக்கதை நாயகனின் பார்வையில் நகர்வதாலும், அந்தகொலையின் நியாயம் நமக்கு விளக்கப்பட்டிருப்பதாலும் பார்வையாளர்களாகிய  நாமும் ஜார்ஜ்குட்டி செய்த கொலை மறைக்கப்படவேண்டுமெனவே விரும்புவது உறுத்தலான விஷயமாக இருக்கிறது  உலக நியதிக்கெதிரானதல்லவா இது? மகனை இழந்த எதிர்தரப்பின் நியாயமென்று ஒன்று இருக்கிறதே!ஒருவேளை இனி வரப்போகும் திருஷ்யம்- 3 ல் இந்த உறுத்தலுக்கும் தீர்வு இருக்குமாயிருக்கும்

சக்ரா,

சக்ரா

M.S ஆனந்தனின் (அறிமுக) இயக்கம் மற்றும் திரைக்கதையில் 2021 பிரவரி 19 அன்று உலகெங்கிலும் பலமொழிகளில் வெளியான தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்   ‘சக்ரா’. விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கெஸான்ட்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில், தயாரிப்பு விஷால்

ரோபோ ஷங்கர் , நீலிமா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, வெகுகாலத்துக்கு பிறகு கே ஆர் விஜயாம்மா ஆகியோரும் இருக்கிறார்கள்.

2018ல் வெளியான விஷாலின் இரும்புத்திரை திரைப்படத்தின்  (ஒருவிதத்தில் ) தொடர்ச்சிதான் சக்ராவாம்..

சுதந்திர தினத்தன்று நகரில் தொடர்ந்து 50 வீடுகளில் நடக்கும் தொடர்கொள்ளைகள் என்னும் ஒரே புள்ளியை ஜவ்வாக இழுத்து முழுநீள திரைப்படமாக்கி  1.30 மணி நேரத்திற்கு பாடாய்படுத்தி எடுக்கிறார்கள்

 ஆச்சரயமாக இருக்கின்றது, உலகசினிமா சென்று கொண்டிருக்கும் பாதையைக்குறித்தும்,  வெள்ளித்திரை என்னும் சக்திவாய்ந்த ஊடகத்தில் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்றும் கொஞ்சமும் அறிதல் இல்லாமல், சினிமாவிற்கான அடிப்படை சிரத்தைகூட இல்லாமல்  இந்தக்காலத்திலும் இத்தனை போட்டி நிறைந்த தொழிலில் சக்ராவை எடுத்திருப்பதை நினைக்கையில்.

கதை (?) இதுதான். முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் 49 வீடுகளில் சுதந்திர தினத்தன்று  பெரும்பாலான காவலதிகாரிகள் முக்கியஸ்தர்களுடன் கொடியேற்றும் விழாக்களுக்கு பாதுகாப்புப்பணிக்கு சென்றிருக்கையில் தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். 50 ஆவது வீடு ராணுவத்தில் பணியாற்றும் நாயகன் விஷாலின் பாட்டி வீடென்பதை நாயகனி்ன் காதலியும் காவலதிகாரியுமான ஷ்ரத்தா தெரிந்து கொள்கிறார்.

கொள்ளை போனவற்றில் ராணுவதிகாரியாக இருந்து இறந்த, விஷாலின் அப்பா வாங்கிய அசோக சக்ரா பதக்கமும் இருந்ததால் அதை எப்படியும் மீட்டெடுக்க உறுதிபூண்ட நாயகன் தன் காதலியின்  துறையான காவல்துறையில் இஷ்டம் போல புகுந்து விளையாடி குற்றவாளிகளை, அது சைபர் க்ரைமென்பதால் கையும் கம்யூட்டருமாக பிடிக்கிறார்.

துவக்கத்தில் கொள்ளை நடந்த ஒவ்வொரு வீடாக சாவகாசமாக  காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கொட்டாவியுடன் அடுத்து கதை எப்போது நகரும் என்று காத்திருக்கையில் நாயகன் வந்து விசாரிக்கிறேன் பேர்வழி என்று காலொடிந்த நத்தையின் வேகத்தில் படத்தை நகர்த்துகிறார். இந்த கதைக்கு இரண்டு நாயகிகள் வேறு.

ஷ்ரத்தா கொஞ்சம் நல்லபெயருடன் முன்னுக்கு வந்துகொண்டிருந்தார், சக்ரா அவருக்கு திருஷ்டிப்படம்

ப்ளம்பர், டயல் ஃபார் ஹெல்ப், விதவை மனைவி, வேலைக்காரப்பெண், எப்போதோ இறந்துபோனவரின் அலைபேசி,  கம்ப்யூட்டரில் சேமித்த தகவல்களை திருடி திருட்டு, ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே குறி, விஷாலுக்கு விடுக்கப்படும் மர்ம தொலைபேசி சவால் என்று கதை இலக்கில்லாமல் நூலறுந்த, வாலறுந்த பட்டமாக எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது.

விசாரணையின் முக்கிய பாயிண்டுகளை விஷால் போர்டிலெல்லாம் எழுதி துப்பறிகிறார். கடைசியில் அந்த முக்கிய குற்றவாளி அப்படியொன்றும் திறமையான கம்ப்யூட்டர் திருட்டையெலலாம் செய்யவில்லை சாதா   திருட்டுதான் செய்கிறார்.

அப்பாவின் பதக்கத்திற்கும் விஷாலுக்குமான உணர்வுபூர்வமான பந்தமேதும் சொல்லப்படவே இல்லை. வில்லியின் ஃப்ளாஷ் பேக் கதை எல்லாம் மனதில் ஒட்டவேயில்லை. அம்மாவை  குடிகார அப்பா கொலைசெய்யும், சித்தி கொடுமை செய்யும் அரதப்பழசான முன்கதையெல்லாம் எரிச்சலூட்டுகிறது. கட்டக்கடைசியிலாவது எதாவது உருப்படியாக காட்டுவார்களென்றால் அதுவும் இல்லை. முடிவல்ல தொடக்கமென்று வில்லி குரலில் சொல்லி பயப்படுத்துகிறார்கள் , இனியும் தொடருமா என்று கலக்கமாக இருக்கிறது.

உயரிய ராணுவ விருதான அசோக சக்கரா விருதினை மையமாக கொண்டே சக்ரா எனதலைப்பாம்  சக்கரமென்றே வைத்திருக்கலாம் ,  கதை சுத்திச்சுத்தி   வந்துகொண்டே இருக்கிறது.

ஒரே சமயத்தில் இந்தப்படம்  ஆங்கிலம் உள்ளிட்ட இன்னும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பது, இந்தபடத்திற்கான காப்பி ரைட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால். விஷால் வாழ்வா சாவா என்னுமளவிற்கு பிரச்சனைகளை சந்தித்து, கோர்ட் கேஸ் என்று அலைந்து நஷ்டயீடு கொடுத்ததெல்லாம் வியப்பளிக்கிறது. இத்தனை துயரப்பின்னணிகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதியில்லாத,  திரைக்கதையாக்கம், திரையாக்கம், இயக்கம் மற்றும் நடிப்பு

மனதில் நிற்காவிட்டால் போகிறது காதில் கேட்பதுபோலக்கூட பாடல்கள் இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவா இசை? என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒளி இயக்கமும் கதைக்களங்களும் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ரோபோ ஷங்கர் போன ஜன்ம பழசான  நகைச்சுவையைத்தான் செய்கிறார்.  சிரிப்புக்கு பதிலாக கோபம் வருகிறது. வசனங்களும் இரும்புத்திரையிலி்ருந்து எடுத்து தூசு தட்டப்பட்டவைதான் புதிதாக ஒன்றுமே இல்லை. நாயகிக்கு வேலையே இல்லை  லாஜிக் என்பதே திரைக்கதையில் எங்கும் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. சிக்கலான காவல்துறை விவகாரமொன்றை, பெண்காவலதிகாரியின் ராணுவ காதலரே கடைசி வரை கையாளுகிறார்.

தேவையில்லாத காட்சிகளும் வீண்வசனங்களுமாய் நிறைந்திருக்கிறது படம்முழுக்கவே. அந்த ATM  விஷயமெல்லாம் திணி திணியென்று திணிக்கப்பட்டது. வில்லியைக்குறித்தும் அவரது கம்ப்யூட்டர் திருட்டுக்களைக் குறித்தும் பலமாக பில்டப் கொடுத்து விளக்கிக்கொண்டே இருக்கும் முதல்பாதி ரோதனையென்றால் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லமால் மொக்கை வாய்சவடால்களாக பேசிக்கொண்டு இருக்கும் இரண்டாம் பாதி வேதனை. அதுவும் அந்த செஸ் விளையாட்டு உரையாடல்களெல்லாம் போதுமடா சாமி என்று அலறவைக்கின்றது. வில்லியை வலைவீசிப் பிடிக்கும் காட்சிக்கு நல்லவேளையாக விஷாலே நமக்கு பதிலாக சிரித்து விடுகிறார். படத்தில் ஒரே நல்ல விஷயம்  காதல் காட்சிகளும் காதல் பாட்டுக்களும் இல்லையென்பதுதான்.  

சக்ராவை பார்த்ததற்கு பிழையீடாக, அர்ஜுன், சமந்தாவெல்லாம் இருக்கும் இரும்புத்திரையை இன்னொரு முறை பார்க்கலாம்

பலகை வேர்கள், Buttress Roots

  தாவரங்களின் வேர் (Root ) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு.

 பண்டைய கட்டிடங்களின் சுவர்களின் அருகில் அவற்றை ஆதரவாக தாங்கிப்பிடிக்க அமை்க்கப்படும் அமைப்புக்கள் Buttress எனப்படும். அதைப்போலவே  சிலவகை மரங்களின் பக்கவாட்டில் வளர்ந்திருக்கும் பலகைகளைபோன்ற அகன்ற பக்கவாட்டு வேர்களுக்கு ‘பட்ரஸ்’ வேர்கள் என்று பெயர் ( Buttress Roots)

வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில், ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரஸ் ரூட்ஸ்) எனப்படும்.

இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன.

மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் அவற்றின் வேர்கள் அதிக ஆழத்துக்கு செல்வதில்லை. எனவெ பெருமரங்கள் சரிந்துவிடாமலிருக்க உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அவற்றை தாங்கிப்பிடிக்கின்றன.

 பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும்.

அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது.

மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் இலவம் பஞ்சு, அத்தி, பலா மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்

பெங்களூரு லால் பார்க்கில் இலவம்பஞ்சு மரம் பலகை வேர்களுடன்

பாண்டிச்சேரி தாவரவியல் பூங்காவில் பலகை வேர்களுடனிருக்கும் பல மரங்களை காணலாம். பெங்களூரு லால் பாக்கிலும் பெரும் இலவம்பஞ்சு மரமொன்று பலகை வேர்களுடன் இருக்கும். தாவரவியல் அதிசயங்களில் இவையும் ஒன்று.

கிராம்பு


இந்தியச்சமையல் அதன் பலவகைகளிலான வறுத்தலும், பொடித்தலும், பொரித்தலும், அரைத்தலும் உள்ளடக்கிய மசாலாமணம் வீசும்  உணவு வகைகளுக்கு பிரபலமானது.  இந்தியசமமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலாப்பொருட்களுமே செரிமானத்தை தூண்டுவதிலிருந்து புறறுநோய்க்கு எதிராக செயல்பபடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பவை. இவற்றில் கிராம்பு மிக அதிகமாக அசைவ உணவு வகைகளில் உபயோகப்படுத்தபடும் ஒன்று.

ஆங்கிலப் பெயர்: ‘கிளாவ்’ (Clove)
தாவரவியல் பெயர்: ‘சிசிஜியம் அரோமாடிகம்’ (Syzygium Aromaticum)
தாவரக் குடும்பம்: ‘மிர்டேசியே’ (Myrtaceae)
வேறு பெயர்: லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க் கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்

சமையலில் நறுமணப் பொருளாகவும், சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் 2,000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாயகம் இந்தோனேசியாவின் மலுகா தீவுகள். மரமாக வளரும் இந்தத் தாவரத்தின் நறுமணம் உள்ள உலர்ந்த, விரியாத மலர் மொட்டுகளே கிராம்பு எனப்படுகிறது.
கிரேக்க மொழியில் ‘கிளாவஸ்’ (Clavus) என்றால் ஆணி என்று பொருள். கிராம்பு மொட்டுகள் துருவேறிய ஆணி போல இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

கிராம்பு மலர்கள்

கிராம்பு குட்டையான கிளைகளை உடைய பசுமை மாறா மரம். 8 முதல் 12 மீட்டர் உயரம் வரை அடர்ந்து வளரும். பளபளப்பான இலைகளும் அடர்சிவப்பில் மூன்று மலர்கள் உள்ள சிறுசிறு கொத்துகளும் கொண்டது.

மலர் மொட்டுகள், இளஞ்சிவப்பாய் 1.5 முதல் 2 செ.மீ. வரை நீளம் இருக்கும்போது, கைகளால் அறுவடை செய்யப்படும். பூக்கள் 9 மாதங்களில் முதிர்ந்து கனியாகும். மரத்திலிருந்து ஆண்டு முழுவதும் கிராம்பை அறுவடை செய்யலாம்.

கிராம்பு மொட்டுகளில் குவிந்து உருண்டையாக இருக்கும் 4 இதழ்களும், வெளியில் சிறிய முக்கோண வடிவிலிருக்கும் 4 அல்லிகளும் இருக்கும். மொட்டுகளை உலர்த்தி, அவை துருவின் நிறத்தை (Rust color) அடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றன.

மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் 72 முதல் 90 சதவீதம் இருக்கும் ‘யூஜினால்’ (Eugenol) என்னும் எண்ணெயே இதன் நறுமணத்திற்கும் மருத்துவக் குணங்களுக்கும் காரணம். இது தவிர, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, டி, ஏ, போன்றவையும் உள்ளன.மேங்கனீஸ் சத்து கிராம்பில் அதிகம் உள்ளது.

கிராம்பு எண்ணெயின் பயன்கள்

நறுமணத்தைக்கொண்டு நோய்களை குணமாக்கும் Aromatherapy  யில் கிராம்பு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.  மலர் மொட்டுகளிலிருந்தும், இலைகளிலிருந்தும் குச்சிகளிலிருந்தும் கிராம்பு எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

செரிமானக் கோளாறு, கிருமி, பூஞ்சைத்தொற்று போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. பல் மருத்துவத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும், துத்தநாகத்துடன் கலக்கப்பட்டு பற்குழிகளை நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. வாசனைத்திரவியங்களிலும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. கிராம்பு புற்றுநோய்கெதிராகவும், ஈரல் பாதுகாப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

கிராம்பு உற்பத்தியில் இந்தியா, மடகாஸ்கர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சிறந்து விளங்கினாலும் ஆண்டிற்கு சுமார் ஒரு லட்சம் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்து இந்தோனேசியாவே முதல் இடத்தில் உள்ளது. மடகாஸ்கர், தான்ஸானி்யா மற்றும் ஜான்ஸிபர் நாடுகளே கிராம்பு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன,

தேயிலையும் தேநீரும்,

மனிதன் அருந்தும் திரவ உணவுகளனைத்தும் பானங்கள் எனப்படுகின்றன. தாகம் தீர்க்கும் தண்ணீரிலிருந்து பால், பழச்சாறுகள், காப்பி, தேநீர் உள்ளிட்ட பலவகையான பானங்கள் அனைத்துக் கலாச்சாரங்களிலும் தொன்று தொட்டே புழக்கத்தில் இருந்து வருகின்றது. பானங்களில் மென்பானங்கள், சூடான பானங்கள் மற்றும் மது பானங்கள் என பலவகைகள் இருக்கின்றன.

 உலகின் மிக அதிகமக்களால் அருந்தப்படும் விருப்பபானங்களில் முதன்மையாக குடிநீரும் தொடர்ந்து தேநீரும், பின்னர் மூன்றாவதாக பியரும் இருக்கின்றது.

தேநீரென்பது உலர்த்தி, பொடித்து, பதப்படுத்திய (Camellia sinensis) கமெலியா  சினென்ஸிஸ் என்னும் தாவரத்தின் இலைகளை கொதிநீரில் இட்டு உண்டாக்கப்படுவது.

இதன் தாவரப்பெயரிலிருந்து இவை சீனாவை தாயகமாக கொண்டவை என அறிந்துகொள்ள முடியமென்றாலும் தேயிலையின் தாயகம் இந்தியாதானென்கின்றன ஆய்வுகள். அஸ்ஸாமின் காடுகளில் இயற்கையாக செறிந்து வளர்ந்திருந்த Thea assamica  என்னும் தாவரத்தின் விதைகள், இந்தியாவிற்கு வந்துசென்ற சீனப்பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டு பின்னர் அதுவே கமெலியா சினென்ஸிஸ் ஆனது என்பதே தாவரவியல் அடிப்படையிலான வரலாற்று உண்மை

தேயிலைச்செடிகளில் இரண்டு முக்கியவகைகளே உலகெங்கும் பெருமளவில் பயிராகின்றது ;

Camellia sinensis என்னும் சிறிய இலைகளை கொண்ட சீன வகை

Leavea of Assamica and Sinensis

Camellia assamica  என்னும் சற்றே பெரிய இலைகளை கொண்ட இந்திய வகை

தேயிலைச்செடிகள் நல்ல உயரமான மரமாக வளரும் இயல்புடையவை. ஆனால் இவற்றிலிருந்து தளிரிலைகளை தொடர்ந்து அறுவடை செய்வதன் பொருட்டு,இவற்றை குறிப்பிட்ட இடைவெளிகளில் குட்டையாக கத்தரித்துக்கொண்டே இருப்பதால் இவை புதர்களைப்போல தோன்றுகின்றன.

தேயிலைகளின் ஒரு இலையரும்பு மற்றும் அதனடியிலிருக்கும் இரண்டு தளிரிலைகள் மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த இலையரும்பும் இருஇலைகளுமான பகுதி Golden flush எனப்படும். இவை மூன்று வருடங்களான தேயிலைச்செடிகளிலிருந்து நூறு ஆண்டுகள் வரை 7 லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படும். இந்த இடைவெளி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேயிலை ரகத்துக்கும்  மாறுபடும்

Golden Flush உடன் மேலும் இரண்டு கீழடுக்கு இலைகளும் சேர்ந்த 5 இலைகள் அடங்கிய பகுதி flush எனப்படும் இவையும் பல நாடுகளில் அறுவடை செய்யப்படுகின்றது.

அறுவடை செய்யப்பட்ட இலைகள் உலர்த்தப்பட்டு,  அவற்றில் ஆக்ஸிஜனேற்றம் நடைபெரும் வகையில்  காயப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வெப்பத்தில் உலர்த்தப்பட்டு, நொதிக்கவைக்கப்பட்டு ,பின்னர்  1500க்கும் மேற்பட்ட பலவகைகளில் தேயிலைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஆக்ஸிஜனேற்றத்தை பொருத்தே தேயிலைக்ளின் தரம் வேறுபடுகின்றது.  (உண்ணப்படாத வாழைப்பழங்கள் ஒருசிலநாட்களில் கருத்துப்போவது ஆக்ஸிஜனேற்றத்தால்தான்).  

100 சதவீதம் முழுமையான ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டவை

Black Tea

நாம் அனைவரும் சாதரணமாக அருந்தும் ’Black tea’ எனப்படும் கருப்புத்தேயிலை. 50 சதவிதம் மட்டுமே ஆக்ஸிஜனெற்றம் நடந்தால் கிடைப்பது.  ’Oolong tea; எனப்படும் ஊலாங் தேயிலை, பசுந்தேனீர் ’Green tea’ எனப்படுவது ஆக்ஸிஜனேற்றதுக்கே உட்படுத்தப்படாத உலர்ந்த தேயிலைகளிலிந்து தயாரிக்கப்படுவது.

இம்மூன்று வகைகள் அல்லாது இன்னும் நூற்றுக்கணக்கான ரகங்களில் தேயிலை உலகெங்கிலும். சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பசுந்தேநீரை உலரவைக்கையில் சிறு சிறு வட்டங்களாக சுருண்டு கொள்ளும் ரகம் அதன் தோற்றத்தினால்  ’Gunpowder tea’. எனப்படுகின்றது.

Gun powder Tea

White tea, என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே ஆக்ஸிஜனேற்றம் செய்கையில் கிடைபப்து. இது மிகவும்  மென்மையான் மணத்தையே கொண்டிருக்கும். வெள்ளை தேயிலை சீனாவுக்கு வெளியே அரிதாகவே கிடைக்கும்

 Yellow tea மஞ்சள் தேயிலையென்பது மூடிவைக்கப்பட்ட இலைகளில் ஆக்சிஜனேற்றம் துவங்கப்பட்டு, பச்சையம் மஞ்சளாக ஆனவுடன் நிறுத்தப்பட்டு பதப்படுத்தப்படுவது

Twig tea, குச்சி தேநீர் அல்லது குக்கிச்சா தேநீரென்பது (Kukicha tea) தேயிலைச்செடியின்  இலைகளுக்கு பதிலாக  குச்சிகளையும் தண்டுகளையும் மட்டுமே பதப்படுத்தி  பொடித்து தயரிக்கப்படும் தேநீராகும். இவ்வகைத்தேநீர் ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். குச்சிகளையும் கிளைகளையும் மூன்று வருடங்களுக்கு மேலான தேயிலைச்செடிகளிலிருந்து மட்டுமே எடுப்பதனால் இத்தேநீருக்கு மூன்றுவருட தேநீரென்றும் ஒரு பெயருண்டு. (Three year Tea ) .இதில் காஃபின் துளியும் இLலையென்பதால் உறக்கமிழப்பு, பக்கவிளைவுகள் என எந்தகவலையும் இல்லாமல் எப்போதுவேண்டுமானாலும் எத்தனைகோப்பைகள் வேண்டுமானாலும் அருந்தலாம்.

பதப்படுத்தப்பட்ட தேயிலைச்செடியின் குச்சிகள்

காப்பியிலும் கொக்கோ பீன்ஸ்களிலும் இருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தேநீரிலும் இருக்கின்றது. 250 மிலி அளவுள்ள ஒருகோப்பை தேநீரில் காஃபினின் அளவானது;

Black tea-  45-65 மில்லி கிராம்

Green, white and ooloog teas: 25- 45  மில்லி கிராம்

 தேநீரின் காஃபின் அளவானது தேயிலைதூளின் அளவு, நீரின் கொதிநிலை, தேயிலைத்தூள் கொதிக்கும் நேரம் ஆகியவற்றைப்பொருத்து மாறுபடும். பொதுவாக அதிகநேரம் கொதிக்க வைக்கையில் காஃபினின் அளவும அதிகமாகும்.

ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத, தரமான தேயிலைகளிலிருந்து உண்டாக்ப்பட்ட தேநீரை அருந்துவது இதயத்தை பாதுகாத்து, புற்றுநோய்க்கு எதிரக செயலபட்டு, உடலெடையை குறைத்து ரத்தத்தின் கொழுப்பையும் கட்டுப்படுத்துகின்றது

தேயிலைச்செடி வளரும் மண்ணில் இருக்கும் அலுமினியம் இலைகளிலும் இருக்கிறதென்றாலும் தினசரி சில கோப்பைகள் தேநீர் அருந்துகையில் இவை உடலாரோக்கியத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்குவதிலை. நாளொன்றூக்கு 30 கோப்பைகளுக்கு மேல் தேநீர் அருந்தும் போதுதான் இந்த அலுமினிய உலோகம் நஞ்சாகி ஆரோக்கியகேட்டை உண்டாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத ஆர்கானிக் தேயிலைகளும் இப்போது சந்தைப்படுத்தப்  பட்டிருக்கின்றன.

Bubble Tea

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான் தேநீர் பிரபலமாக இருக்கும் இந்தியாவில் பால் கலக்காத கருப்புத்தேநீரும் பால் கலந்த தேநீரும் பிரபலம். தைவானில் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து செய்யப்படும் சிறு சிறு உருண்டைகளை தேநீரில் போட்டு தரப்படும் குமிழித்தேநீர் (Bubble tea) மிகபிரபலம். கீரைக்குழம்பைபோல பசுங்குழம்பாக அருந்தபடும் மாச்சா தேநீர் ஜப்பானின் பாரம்பரியத்துடன் கலந்துள்ள மிக்கியமான ஒன்று.

மாச்சா

எல்லா வகையான தேயிலைகளிலும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன என்றாலும் தேயிலையின் வகைகளைப்பொருத்து இவற்றின் அளவு மாறுபடும். பொதுவாக பசும் தேயிலை மற்றும் வெள்ளைத்தேயிலையில் Epigallocatechin or ECGC எனப்படும் மிக முக்கியமான, ஆன்டிஆக்சிடன்ட்டுகள்  அதிகம் நிறைந்துள்ளது.. இவை இதயப்பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிசெய்கின்றன

தென்னாப்பிரிக்காவில் வளரும் சிவப்புத்தேயிலைச் செடிகளிலிருந்து எடுக்கப்பட்டு ஆக்ஸிஜனேற்றமே செய்யப்டாத தேயிலைகளிலிருந்து கிடைப்பதே   Rooibos tea எனப்படும் செந்தேநீர்

Pu’er Tea

சீனாவின் யுனான் மாகாணத்தின் பிரத்யேக வகையான pu’er tea எனப்படுவது தேயிலைகளை நுண்ணுயிர்களால் நொதித்தலுக்கு உள்ளாக்கி பின்னர் ஆக்ஸிஜனேற்றமும் செய்யப்பட்டு கட்டிகளாக விற்பனை செய்யப்படும் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஒரு தேயிலை வகையாகும். இது முதியவர்களின் நோய் பிரச்சனைகளுக்கு  அருமருந்தாக கருதப்படுகின்றது

ஊதா தேயிலை எனப்படுவது  உலகின் மிக சமீபத்திய புதிய தேயிலை வரவாகும்

கென்யாவின் ஊதா தேயிலைச்செடிகள்

கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலைச்செடிகளிலிருந்தே இவை கிடைக்கின்றது. நேரடியான சூரிய ஒளிபடும்படி வளர்க்கப்படும் இந்த செடிகளின் இலைகளில் நீல நிறமியான ஆந்தோசையானினின் அளவு பல ம்டங்கு அதிகரித்து இந்த ஊதா நிறம் வருகின்றது. இவை பல நுண்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் கொண்டவை. உடலெடையை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை தடுக்கவும் இந்த ஊதா தேநீர் பெருமளவில் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேயிலைத்தூளின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து சில ஆயிரம்வரை வேறுபடுகின்றது  எனினும் தங்கத்தைக்காட்டிலும் 30 மடங்கு அதிகமான விலையுள்ள தேயிலையும் சந்தையில் உள்ளது

சீனாவின் தாது உப்புக்கள் நிறைந்திருக்கும், குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்த ’வூயி’ மலைப்பகுதியின் 1000 வருடங்களைக்கடந்த 3 தாய் தேயிலைச்செடிகளிலிருந்து  கிடைக்கும் ’’டா ஹாங் பாவ்’’  (Da Hong Pao) தேயிலையே உலகின் மிக விலையுயர்ந்த தேயிலை. இது கிராம் 1400 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகின்றது. பொதுவாக இத்தேயிலையில் உண்டாக்கப்படும் தேநீர் சீனாவிற்கு வருகைதரும் பிறநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. தாவரப்பொருட்களிலேயே விலையர்ந்ததும் இதுவே.

டா ஹாங் பாவ் தேயிலைச்செடிகள்
« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑