வீட்டில் நாங்கள் மூவருமே தினசரி காலண்டரில் தேதி கிழிக்கையில் அன்றைய ராசிபலன் பார்ப்போம். ஸ்கூல் வேனுக்குக்காத்திருக்கையில் அதைக்குறித்து விரிவாகப்பேசிக்கொள்வோம்.

எஃப் எம்ரேடியோவில் சிவல்புரி சிங்காரம் சொல்லும் ராசிபலன்களையும் கேட்டு அவர் அன்று என்ன நிறப்புடவை உடுத்தச்சொல்கிறாரோ அதைத் தேர்வு செய்து உடுத்துவதும் வழக்கம். இன்று கூடச் சிவல்புரியார் மேஷ ராசிக்கு பிரகாசமான மஞ்சள் என்றார். நான் மஞ்சளில் தான் கல்லூரி வந்தேன்.

காலண்டரில் இன்று என் ராசிக்கு பீடை என்றிருந்ததைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எழுந்தன

மகன்களின் பள்ளிக்கூட நாட்களில் சரணுக்குத்தமிழ் அவ்வளவாக வராது. அவன் அதிகம் திட்டு வாங்கியது அவனது தமிழாசிரியையிடம் தான். அவனுக்கு மட்டுமல்லாது பெற்றோர் சந்திப்பின்போது எனக்கும் மானாவாரியாகத் திட்டுக்கிடைக்கும்

(“நீங்களே டீச்சரா இருந்துட்டு இப்படி விட்டுருக்கீங்க?)

100 க்கு 11 என்றெல்லாம் வரலாற்றுச்சிறப்பு மிக்க மதிப்பெண்கள் வாங்கிய சரண், அந்த ஆசிரியை வேலையை விட்டுவிட்டு போனபின்பு சங்கீதா என்னும் ஒரு ஆசிரியை வந்தபின்னால் தமிழ்மகனாகி தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெறத்துவங்கினான்.

பின்னர் வெண்முரசு 26 நாவல் நிரைகளையும் வாசித்து நீலம் தொகுப்பை எப்போதும் மார்போடணைத்துக்கொண்டே இருப்பவனாகினான், ஜெ தளத்தில் நல்ல தமிழில் அவனது கடிதங்கள் எல்லாம் வரத்துவங்கின காலமும் வந்தது.

மகன்களின் பள்ளிக்காலத்தில் ஒருநாள் சரண் முதலில் சாமிகும்பிட வந்து காலண்டரில் தேதியைக் கிழிக்கையில் அவனுக்கான மீன ராசிக்கு பீடை என்று இருந்தது.

அவன் …….`தருணிடம் பீடைன்னா என்னடா……? என்றான்

தருணுக்கும் தமிழ் தகராறுதான். அவன் அண்ணனிடம்.

“… அது வந்து அம்மா செய்யுமே பலகாரம் ஒன்னு, குட்டியா பந்து மாதிரி கடிக்கவே முடியாம கெட்டியா இருக்குமே அதோட பேரு....“என்றான்.

நான் சமையலறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தென். சரண் மீண்டும் ….அதுவா ஆனா அதை ஏன் ராசி பலன்ல போட்டுருக்காங்க....என்றான்

தருண் ….“அப்படின்னா இன்னிக்கு உனக்கு ஸ்நேக்ஸ் அதான் கிடைக்கும்…..“ என்றான்.

பீடைக்கு என்ன பொருள் சொல்வதென்று தெரியாமல் நானும் இடைபடவில்லை அன்று

இப்போதும் இருவரையும் இந்த சீடை-பீடையை சொல்லிக்கிண்டல் செய்வேன்.

சரண் ஐந்தில் படிக்கையில் ஒருநால் நூலக அலமாரியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தோம் நான் ஸ்டூலில் ஏறி நின்று அடுக்கினேன் தருண் துடைத்துத்துடைத்துச் சரணிடம் தருவான்.சரண் புத்தகங்களின் பெயரச்சொல்லிச்சொல்லி என்னிடம் எடுத்துக்கொடுப்பான்

ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்த சரண் …இது வந்து சீக்கிரம் தொடு... என்றான்

நான் அதிர்ந்துபோய் .... ச்சீ அப்படி ஒரு புக்கே இல்லடா வீட்டில், கருமம் என்ன அது கொண்டு வா.... என்று வாங்கிப்பார்த்தேன்.

அந்தப் புத்தகத்தின் பெயர் சிகரம் தொடு.🙃

இன்றைய பீடை பலவற்றை நினைவுக்குக் கொண்டு வந்துவிடது

அந்தச் சீக்கிரம் தொடு சரண் இப்போது அர்த்தசாஸ்திரம் முழுமையாகப் படித்து முடித்து அதைத் தமிழில் கொண்டு வரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறான்.

தருண் இசையின்

“நீ ஏன் அவ்வளவு தூரத்தில் இருக்கிறாய்

வந்து பார்க்கும் அளவுக்கு “

என்னும் காதல் கவிதையை எனக்கனுப்பிச் சிலாகிக்கிறான்

மகன்களுக்கு அன்பு!