லோகமாதேவியின் பதிவுகள்

நெஞ்சாங்கூட்டில்,

ஐரோப்பாவுக்கு மேற்படிப்புக்காகப் போனபின்பு சரண் இந்தியாவிற்கு வந்த சென்ற ஆண்டின் முதல் விடுமுறையின்போது சென்னைக்கு விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரிக்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தான். சரணுக்கு அதற்கு முன்பு  செலிபிரிட்டி க்ரஷ் என்று எதுவும் இருந்ததில்லை, முதலும் கடைசியுமாக விஜய் ஆண்டனிதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஜெர்மனியிலிருக்கையிலேயே கச்சேரியின் தேதிகளைக் குறிப்பிட்டு சென்னை போகனும், போகனும், நீயும் வந்தே தீரனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். 

அவனுக்கு விஜய் ஆண்டனியின் பாடல்கள், இசை, அவரது குரல் எல்லாவற்றின் மீதும் பெரிய மரியாதையும் பிரியமும் இருக்கிறது. எப்போது கார் ஓட்டினாலும் விஜய் ஆண்டனி அவனுடன் இருப்பார். கூடவே உற்சாகமாக உரக்கப் பாடிக்கொண்டே வருவான். அவரது பாடல்களில் பிரத்யேக பொருளற்ற சில சங்கதிகள் வருமல்லவா அது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தனியே சொல்லிச்சொல்லிச் சிலாகிப்பான். எனக்கு அத்தனை பிரியமில்லையென்றாலும் அவரின் நெஞ்சாங் கூட்டில்  போல சில பாடல்களின் மீது தனித்த பிரியமுண்டு.

இப்படி இசைக்கச்சேரிகளுக்கெல்லாம் நான் போனதில்லை. பொள்ளாச்சியின் ஒருகோடியில் ஒரு சிறு இருண்ட வீட்டில் பிறந்து அப்பாவின் ஆணவத்திற்கு அஞ்சியும் ஒளிந்தும் வளர்ந்து, எப்படியோ தப்பிப்பிழைத்து அன்னையாகவும் ஆசிரியையாவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அதற்கான சாத்தியங்கள் வாழ்வில் இல்லாமல் இருந்தது. 

சிறுமியாக இருக்கையில் விடியற்காலை அப்பா ட்ரான்ஸிஸ்டரில் வைக்கும் பாடல்கள் பரிச்சயமானது. பதின்பருவத்தில் அத்தைகள்  இருவரும் பாக்கட் டிரான்சிஸ்டரில் கேட்கும் பாடல்களை நானும் அக்காவும் கேட்போம். அதுவும் வேட்டைக்காரன் புதூர்செல்லும்போது மட்டும்.

கல்லூரிக்காலத்தில் வீட்டில் டிவியும் மர்ஃபி வானொலியும் இருந்தது. இளையராஜா அறிமுகமென்றாலும் பாடல்களை உரக்கக்கேட்கவோ உடன் பாடிமகிழவோ வாய்ப்பிருக்கவில்லை.

ஒரு இருண்ட வாழ்வில் இருந்தோம் நான், அம்மா அக்கா மூவரும்.அப்பா வீட்டில் இல்லாதபோது இரவெல்லாம் வானொலியைத் திருகிக்கொண்டிருப்போம். ரஷ்ய ஒலிபரப்பு விடுதலைபுலிகள் ஒலிபரப்பெல்ளாஆம் சிலசமயம் கேட்கும். பரவசமடைந்து கொள்வோம்.

பின்னர் ஒரு பெரும் கதவு திறந்து முதுகலை படிக்கக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் போனபோது தனியே எனக்கென்று ஒரு வானொலிப்பெட்டி இருந்தது . அதில் எப்போதும் பாடல்கள் கேட்பதுண்டு சில இரவுகள் உறங்காமல்  கூடக் கேட்டிருக்கிறேன். எப்படியோ இந்துஸ்தானி இசையில் பிரியமாகி விட்டிருந்தது.  கூடவே கஜல்களும் ராஜி என்னும் தோழியால் அறிமுகமானது. பங்கஜ் உதாஸ் மீது பெரும் பிரேமை கொண்டிருந்தேன். ’’சிட்டி ஆயிஹே ,பதனுக்கு மிட்டி ஆயிஹே’’வை ஓராயிரம் முறை கேட்டதுண்டு. இளமைக்கனவுகளின் ஒரு பகுதியாகவே அப்போது கஜல் இசை இருந்தது.

அச்சமயம் வீட்டில் குடியிருந்த நாகமாணிக்கம் குடும்பத்தினரால் டேப் ரெக்கார்டர் அறிமுகமானது. பலமுறை முயன்றும் எங்களுக்கென ஒன்று அப்பாவிடம் சம்மதம் பெற்று  வாங்க முடியவில்லை. ஆனால் அவர்கள் வீட்டு டேப்ரெக்கார்டரை எங்களிடமே பெரும்பாலும் கொடுத்திருந்தனர். இசை கேட்டுக்கேட்டு மகிழ்ந்த காலமது.

முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தபோது எனக்கு ஆராய்ச்சிக்கான   மாதாமாதம் கணிசமான உதவித்தொகையும் கிடைத்தது. எனவே ஒரு வாக்மேன் வாங்கினேன் அடிக்கடி ரயிலில் புதுதில்லி ஹைதராபாத், கோவா எனச் செல்லவேண்டி இருந்த போதெல்லம் அதில் தொடர்ச்சியாக இசைகேட்பேன்.

ஆனால் சரண் அழைத்துச் சென்றது போல் திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கானோருடன் இப்படியொரு இசை நிகழ்ச்சியைக் கேட்டதே இல்லை. இப்படி கேட்கக் கிடைக்குமென்று  நினைத்தது கூட இல்லை. ஆனால் சரண் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

நான், சரண், அகரமுதல்வன் மனைவி பிரபா மூவருமாகச் சென்றோம். நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம் இருந்தது அங்கே. பிரபாவின் ஆட்டோ வந்து சேர முடியாத அளவு சாலையிலும் இசை நிகழ்ச்சியால் நெரிசலாகியது.

இருக்கைகள் போடப்பட்டிருந்த இடத்துக்கு வெளியே பல்லாயிரம் இளைஞர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் நாங்களும்.   கட்டணத்திற்கேற்ப வண்ணப்பட்டைகள் கைகளில் கட்டப்பட்டன.  அங்கேயே குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் நொறுக்கு தீனிகள் விற்கப்பட்டன. வேண்டியதை வாங்கிக்கொண்டோம்.

உள்ளே அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். மிக உயரமான மேடை   என்பதால் எல்லாருக்குமே மேடை நன்றாகத் தெரிந்தது ராட்ஷச ஸ்பீக்கர்கள் அங்கங்கே வைக்கப்பட்டிருந்தன. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் படி மஞ்சள் நிறத்தில் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இருந்தன.

ஜொலிக்கும் பல வண்ணமின்விளக்குகளுடன் வண்ணமயமாகத் துவங்கியது நிகழ்வு. கூரையிலிருந்து தொங்கிக்கொண்டு விஜய் ஆண்டனி இறங்கியபோது கூட்டம் வெடித்து ஆர்ப்பரித்தது. 

அவர் எதன்பொருட்டோ மாகப என்னும் ஒரு தொலைக்காட்சி பிரபலத்தை அழைத்துவந்திருந்தார். மாகப நிச்சயமாக இடைச்செருகல் தான். விஜய் ஆண்டனிக்கு மாகபா போன்ற ஒருவர் தோள் கொடுக்க வேண்டியதில்லை. அடுத்தடுத்த பாடல்களைக்குறித்த அறிவிப்புகளுக்கு  எதிர்த்தரப்பில் ஒருவர் வேண்டி இருந்ததால் அவரை அழைத்திருக்கலாம். அசட்டுபிசட்டென்றேதான் அந்த நிகழ்விலும் அவர் பேசிக்கொண்டிருந்தார். நிகழ்வின் வீரியத்தை கொஞ்சம் குறைத்த பெருமை மாகாபவிற்கே.

ஒவ்வொரு பாடலுக்கும் அந்த வெளி அதிர்ந்தது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கிளர்ந்தொளிரும் இளமைப்பெருக்கில் கலந்துகொண்டு உச்சகட்ட ஒலியில்  பாடல்களைக் கேட்டது பெரிய அனுபவமாக இருந்தது.சரண் எழுந்து நின்று மற்றவர்களைபோல் நடனமாடி கொண்டே கேட்டான். நானும் பிரபாவும் கூடவே பாடினோம். மச்சக்கண்ணி, புலி உறுமுது பாடல்களுக்கெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் வெறியாட்டம் போட்டது. அவ்வப்போது சிறு தூறலாக மழை பெய்தது.

பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெரியதிரையில் தனது காதல் மனைவியையும் இளைய மகளையும் காட்டி விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தினார்.

என்னைப்போலவே சில அன்னைகளும் வந்திருந்தனர் அவர்களும் மகள் மகனுடன் சேர்ந்து நடனமாடி ரசித்தனர். எனக்கு முன்பாக ஒரு இளைஞர் கூட்டமிருந்தது. ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அல்லது நண்பர் குழாம். அவர்கள் ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ந்திருந்தார்கள். என் இருக்கைக்கு நேர் முன்பு ஒரு இளைஞன். 22-லிருந்து 24-க்குள் வயதிருக்கும். ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தான் வெள்ளைச் சட்டையும் கால் சட்டையும், கன்னமெங்கும் செம்பருக்கள், அவன் நாற்காலி மேல்நின்று ஆடிக்கொண்டிருக்கையில் என் புடவையின் கீழ்நுனி அவன் நாற்கலிக்கடியில் சிக்கிக்கொண்டது. அவன் ஆட்டம்  ஆடிமுடித்து இறங்கிய பின்னரே புடவையை  விடுவித்தேன்.

ஆனால்  அவனின் அத்தனை கொந்தளிப்புக்களையும் ’’நூறு சாமிகள் இருந்தாலு’’ம் பாடல் பொங்கும் பாலில் நீர்தெளித்தது போல் அடங்கச்செய்தது.

பாடல் பாடப்பட்டுக்கொண்டிருக்கையில் அந்த இளைஞன் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான். கண்களில்இருந்து கண்ணீர் சரம்சரமாய் வழிந்தது. கண்ணாடியைக் கழற்றி பாக்கட்டில் வைத்துக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்தவோ கண்ணீரைத் துடைக்கவோ செய்யாமல் அப்படியே கண்ணீர் சொரிந்தபடி அந்தப் பாடலைக்கேட்டுக் கொண்டிருந்தான். அன்னையை இழந்த மகனாயிருக்கக்கூடும் என்று நினைத்தேன். அவனை அணைத்துக் கொள்ள விழைந்தேன்.  

அதன் பிறகான பாடல்களுக்கு அவனால் அப்படி ஆடவும் கூடவே பாடவும் முடியவில்லை. முறிந்துவீழ்ந்த மரம்போலிருந்தான். இறுதிப்பாடல்களின் போது  மழை பலமாகவேதொடங்கியது , ஆனால் கூட்டம் மழையை பொருட்படுத்தவே இல்லை.

நாங்கள் மூவரும் கூட்ட நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க 2 பாடல்களை தியாகம் செய்துவிட்டு புறப்பட்டோம்.

 பெரும் திருவிழா முடிந்தது போலசாலை முழுக்க நெரிசலாக இருந்தது

தமிழ் விக்கியில் விஜய் ஆண்டனியின் கொள்ளுத்தாத்தாவான மாயுரத்தில் பணிபுரிந்த வேதநாயகம் பிள்ளையின் பக்கத்தை இறுதிசெய்தபோது குற்ற விசாரணைகளை மொழியாக்கம் செய்யும் சுவாரஸ்யமான பணியில் பிள்ளை இருந்ததை அறிந்தேன். 4 பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் பிள்ளை.

https://tamil.wiki/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88

தமிழின் முதல் நாவலாகப் பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதியவர். தாது வருஷபஞ்சத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கஞ்சித் தொட்டிஅமைத்து  பசியாற்றி இருக்கிறார் பிள்ளை.   தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி இருக்கும் இவரைக்குறித்து ஒரு கீர்த்தனை பாடப்பட்டிருக்கிறது

 இரவெல்லாம் காதுகளில் விஜய் ஆண்டனியின் குரலும் பாடலும் இசையும் கேட்டுக்கொண்டே   இருந்தது.

அத்தனை ஆயிரம்பேரின்  கொந்தளிப்பிலும் கூக்குரலிலும் உற்சாகத்திலுமல்ல, அந்த இளைஞனின் துயரத்தை மிக அந்தரங்கமாகத் தொட்டதில்தான் விஜய்ஆண்டனியின் வெற்றி இருக்கிறது. இதை என்றைக்காவது விஜய் ஆண்டனியிடம் சொல்லவேண்டும். சரணும் அவரைநேரில்  பார்க்கக் காத்திருக்கிறான். 

2 Comments

  1. விஸ்வநாதன் வாழப்பாடி

    அந்த சில கணங்கள் உங்களுக்குள் ஊறிய தாய்மை ….அன்னைத்தன்மையின் விழுமியங்களை காத்துள்ளீர்கள்.நீங்கள் செல்லும் பாதையெல்லாம் பூச்சொறிய இயற்கையை வேண்டுகிறேன்.

  2. விஸ்வநாதன் வாழப்பாடி

    சில கணங்கள் உங்களுக்குள் ஊறிய தாய்மை….
    அன்னைக்கான விழுமியங்கள் யாவையும் பறைசற்றியது.
    நீங்கள் செல்லும் பாதையெல்லாம் பூச்சொறிய இயற்கையை வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑