கடந்த ஜூலையில் பாரதியார் பல்கலையில் என் பதவி உயர்வின் பொருட்டான  பயிற்சியின் ஒரு பகுதியாக  கல்லாறு தோட்டகக்லைத்துறை பழப்பண்ணைக்கும் திரும்பி வரும் வழியில் பிரசித்தி பெற்ற  மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அங்கு செல்வது எனக்கு முதல் முறை.  கோவிலையொட்டிய சரிவில் அதிசயமாய், கறகள் ஒன்று போல நிறைந்திருக்குமாற்றில் தண்ணீர் கணிசமான அளவில் இருந்து ஒடிக்கொண்டுமிருந்தது.

சிறிய கோவில்தான் ஆனால் வெளியில் ஏகத்துக்கும் இடம், நல்ல கூட்டமும் கூட
சமீபத்தில் குண்டம் இறங்கி இருந்திருக்கிறார்கள் , அந்த சாம்பலை நிறைய அள்ளி நெற்றிக்கு இட்டுக்கொண்டும்,வீட்டிற்கு எடுத்துக்கொண்டும்  செல்பவர்களை பார்த்தேன்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது பிரகாரத்தில் நடு வயதில் ஒரு பெண் நன்கு உடுத்திக்கொண்டு பின்னலில் கொஞ்சமாய் பூவெல்லாம் வைத்துக்கொண்டு கையில் ஒரு மஞ்சள் பையை பிடித்தபடி, அம்மன் இருக்கும்  திசை  நோக்கி  உட்கார்ந்து கொண்டு ‘’ கட்டையில் போறவளே என்று துவங்கி, நாசமாய் போயிருவே, நல்லா இருந்துருவியா ‘ என்று ஏகதுக்கும்  வசை பாடிக்கொண்டிருந்தார்கள், அனைவரும் திரும்பி பார்க்கும் படிக்கு உரக்க வேறு சண்டை.
சில சமயம் தொண்டை காய்ந்ததோ என்னவோ தலைகுனித்துகொண்டு கொஞ்ச நேரம் அமைதி, பின் மீண்டும் வரவழைத்துக்கொண்ட ஆங்காரத்துடன் அதே வசை

சந்தனக்காப்பில் அருளிக்கொண்டிருந்த அம்மனுக்கு உள்ளேயும் அர்ச்சனை நடந்தது.

இது போலவே முன்பொருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி ஒரு கோவிலின் வாசலில் மண்ணைவாறி தூற்றிக்கொண்டிருந்தார்கள்
அவர்களும் என்னவோ கண்ணிருடன் வசைபாடிக்கொண்டிருந்தது இன்னும்நினைவில் இருக்கிறது

குலதெய்வக்கோவிலில்  பல சமயம் ஆடு பலியிட்டு முடிந்தபின்னர்   அந்த குருதி சிந்தியிருக்கும் இடத்தில்  சில  பெண்களுக்கு சாமி வந்து கூந்தல் சுழற்றி புடவையை இழுத்துச்செருகியபடி ‘’டேய் ‘’ என்று கணவர் உள்பட அனைவரையும் கூவி அழைத்தபடி, முழு எழுமிச்சையை வாயிலிட்டு  கடித்து துப்பியும், நாக்கில் கற்பூரம் ஏற்றிக்கொண்டும் அருள் வாக்கு சொல்வதை பலமுறை கண்டிருக்கிறேன்

எல்லா ஆண்களும் பவ்யமாக துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ’’சொல்லு ஆத்தா உனக்கென்ன குறை’’ என் று நிற்பார்கள்
அது வேறு வகையிலான out let   என் று எனக்கு தோன்றும்

 உனக்கு என்ன வேணும் என்ரு ஒரு முறை கூட கேட்டிருக்காத ஆண்களுக்கான ஒட்டுமொத்த அதிர்ச்சி வைத்தியத்தை ஏதோ ஒரு பெண் குடும்ப விழாக்களில்  வலிந்து செய்து, அடுத்த வருட  குலதெய்வ விழா வரையிலும்  பெண்களுக்கு நடக்கவிருக்கும் அநீதிகளுக்கெல்லாம் கொஞ்சமாய்  ஏற்பாடு செய்து கொள்ளும் பிழையீடு   அது என்றெண்ணுவேன், கூடவெ மிக்க மகிழ்ச்சியுடன் அவள் சீக்கிறம் மலையேறிவிடக்கூடதென்று விரும்பியபடி வேடிக்கை பார்ப்பேன்

ஆனால் இப்படிகடவுளைஇப்படி பகிரங்கமாய் வசைபாடுவது?

இது என்ன மாதிரி மனநிலை ?

பைத்தியம்  என்று உறுதியாக சொல்ல முடியாதபடிக்கு சுயநினைவுடன் நல்ல தெளிவாகத்தான் பேசுகிறார்கள்

ஒரு வேளை கடவுள் இருப்பாரே ஆனால் வரிசையில் நின்று வேண்டிக்கொள்ளும் எங்களை விட, கடவுளை சொந்தமாய் நினைத்து, சண்டையிட்டு வசைபாடும் அளவிற்கு நம்பும் இவர்களுக்காவது எதாவ்து செய்யலாம்