நூல் : மரங்களின் மறைவாழ்வு ஆசிரியர் : பீட்டர் வோலிபென் மொழியாக்கம் : லோகமாதேவி பக்கம் : 318 விலை : ரூ. 390 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669,கே.பி.சாலை, நாகர்கோவில்.
ஒரு கைப்பிடிக் காட்டு மண்ணில் இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி காட்டு மண்ணில் பல மைல் நீளமுள்ள பூஞ்சை இழையங்கள் இருக்கின்றன. – பீட்டர் வோலிபென்
வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்குப் புதிதாக சில விஷயங்களைக் காட்டும் போது உணர்த்தும் போது நாம் வியப்படைவோம் ; சில சமயங்களில் ஆழமான அதிர்ச்சியும் அடைவோம். பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் வரை மரங்கள் குறித்து அறிந்திருந்தது எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதை இந்நூலின் வாசிப்பு எனக்குக் காட்டியது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன் மரங்களை நான் நோக்கிய விதத்துக்கும் இந்தப் புத்தகத்தை வாசித்த பின் மரங்களை நான் நோக்கும் விதத்துக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
ஒரு தனி மனிதனைப் போல மரத்தை தனி மரம் என்று அத்தனை தீர்க்கமாக வரையறுத்துக் கூற முடியாது. எந்த மரமும் தனி மரம் அல்ல. அதன் பூக்கள் காற்றில் பறந்து பரவுகின்றன. விதைகள் பறவைகள் மூலமும் பிராணிகள் மூலமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்கின்றன. புவியின் மேற்பரப்பில் சற்று இடைவெளியுடன் இருக்கும் மரங்கள் கூட புவிக்குக் கீழே வேர்வெளியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன. மரங்களின் வேர் முடிச்சுகளில் இருக்கும் பூஞ்சைகள் ஓர் வனத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மரங்களையும் இணைக்கின்றன.
மரங்கள் கூட்டு வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு மரம் இன்னொரு மரம் பலவீனமாக இருந்தால் அதற்கு உணவளித்து உதவுகிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையை மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சைகள் மூலம் பலவீனமாக இருக்கும் மரத்துக்கு அனுப்புகிறது. அதே பூஞ்சை வலைப் பின்னல் மூலம் காட்டில் வெட்டப்பட்டு துண்டாகக் கிடக்கும் மரங்களுக்கும் உணவளித்து அவை உயிருடன் இருக்க உதவுகிறது.
தண்ணீருக்காக மரங்களின் வேர்கள் ஒலியெழுப்புகின்றன. மரங்கள் தங்களுக்குள் மீயொலி மூலம் பேசிக் கொள்கின்றன. பட்டை உரிந்து வலியுடன் இருக்கும் மரங்களுக்கு மற்ற மரங்கள் ஆதரவளிக்கின்றன. தங்கள் நிழலில் வளரும் மரங்கள் நீண்ட காலம் உயிர்த்திருக்கவும் தேவை ஏற்பட்டால் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து தனது வளர்ச்சி பாணியை புதிதாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றன.
மாந்தரின் இனப் பெருக்கத்தில் லட்சக்கணக்கான அணுக்களில் ஒன்று மட்டும் கருவாக உருவாவதைப் போல ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான விதைகளில் ஒன்று மட்டுமே முளைத்து மரமாகும் வாய்ப்பைப் பெறுகிறது.
நூற்றுக்கணக்கான ஜீவராசிகள் தன்னைச் சார்ந்து வாழும் நிலையை அந்த உயிர்களுக்கு வழங்குகிறது வனத்தின் ஒவ்வொரு மரமும்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தோறும் நாம் இதுவரை மரங்கள் குறித்த அறியாமையையே இத்தனை நாள் கொண்டிருந்தோம் என்னும் உண்மையை உணர்வோம்.
நாம் ஒரு மரம் குறித்து முழுமையாக அறிந்தோம் என்றால் புவியின் சாரம் குறித்து ஒரு கைப்பிடியளவு அறிகிறோம் எனத் துணிந்து சொல்லலாம்.
ருஷ்ய மொழியில் ‘’ராதுகா’’ என்றால் வானவில் என்று பொருள். சோவியத் யூனியன் ’’ராதுகா பதிப்பகம்’’ என ஒரு பதிப்பகத்தை நடத்தியது. உலகின் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான நூல்களை அப்பதிப்பகம் வெளியிட்டது. ராதுகா பதிப்பகத்தின் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. கெட்டியான அட்டை, தடிமனான தாள்கள், அழுத்தமான அச்சமைப்பு ஆகியவை அந்நூல்களின் சிறப்பம்சங்கள். அந்நூல்களின் வடிவமைப்பே அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கத் தூண்டக்கூடியவை. ராதுகா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான ‘’Mathematics can be fun” என்ற நூலை வாசித்தது நினைவில் பசுமையாக இருக்கிறது. அந்நூலின் பல புதிர்கள் பல தகவல்கள் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிந்திப்பதற்கு இனிமையானவை .
அதில் ஒரு புதிர் வரும் : நம் முன் ஒரு சதுரங்கப் பலகை இருக்கிறது. அதில் 8 X 8 என்ற அளவில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் இரண்டு கோதுமை தானியம் வைக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்தில் நான்கு தானியம் வைக்கப்படுகிறது. இவ்விதம் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துக் கொண்டே சென்றால் 64 வது கட்டத்தில் எத்தனை தானியங்கள் இருக்கும் என்பது புதிர்.
அந்த புதிருக்கான விடைய அளித்திருப்பார்கள் . அதாவது ஆழி சூழ் உலகு முழுவதையும் மேலும் ஆழியின் பரப்பளவையும் கோதுமை வயலாக்குவதுடன் சந்திரனின் பரப்பு முழுவதையும் கோதுமை வயலாக்கினால் எவ்வளவு கோதுமை விளையுமோ அவ்வளவு கோதுமையை சதுரங்கப் பலகையின் கடைசி கட்டத்தில் வைக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருப்பார்கள். முதல் கட்டம் ஒரு கோதுமை தானியம் என்பது 2ன் அடுக்கு பூஜ்யம். 64 வது கட்டம் என்பது 2ன் அடுக்கு 64. அது அத்தனை அதிகமானது.
எனக்கு இந்த புதிர் அளித்த இனிமை என்பது அளப்பரியது.
அத்தகைய இனிமையை பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு தாவரவியல் நூல் ஒன்றை வாசித்து இன்று அடைந்தேன். அந்த நூலின் பெயர் ‘’கல்லெழும் விதை’’. அதன் ஆசிரியர் அறிஞர் லோகமாதேவி. உண்மையில் அவரது இந்த நூலை தாவரவியல் நூல் என்று மட்டும் குறிப்பிடுவது அந்நூலின் முழுமையான பெருமையை எடுத்துரைக்காது ; அந்நூல் அறிவியல் நூல். இருப்பினும் அதில் இலக்கியம், வரலாறு, மானுடவியல், புவியியல் ஆகியவையும் உள்ளன.
காஃபி குறித்த அத்தியாயமே நூலின் முதல் அத்தியாயம். காஃபி பயிர் குறித்து ஏகப்பட்ட சுவாரசியமான நுண்ணிய விவரணைகள் இதில் உள்ளன. இந்திய தேசத்துக்கு காஃபி பயிர் வந்தது குறித்து உலவும் கதை ஒன்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் மேற்கு கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிக்மகளூர் பகுதியைச் சேர்ந்த சூஃபி துறவியொருவர் மெக்காவுக்கு செல்கிறார். அங்கே அளிக்கப்படும் பானம் அவர் அதுவரை அருந்தியிராதது. அந்த பானத்தின் சுவையால் ஈர்க்கப்பட்டு அதனை தன்னுடன் இந்தியாவுக்குக் கொண்டு வர எண்ணுகிறார். ஆனால் அந்த பானம் எந்த தாவரத்தின் கொட்டையிலிருந்து தயாராகிறதோ அதனை அராபியர்கள் அதன் பச்சைத்தன்மையை நீக்கி வறுத்தே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த பானத்தின் கொட்டை தங்கள் வழியே வேறு எந்த நாட்டுக்கும் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். சூஃபி துறவி எப்படியோ அந்த தாவரத்தின் ஏழு பச்சைக் கொட்டைகளை தன்னுடைய நீண்ட அடர்த்தியான தாடியில் மறைத்து இந்தியாவின் மேற்குக் கரைக்கு சிக்மகளூருக்குக் கொண்டு வந்து விடுகிறார். அந்த 7 கொட்டைகள் முளைக்க வைக்கப்பட்டே இந்தியாவில் காஃபி உற்பத்தி துவங்கியது என்கிறார் நூலாசிரியர். கர்நாடகாவின் பிரபலமான காஃபித்தூள் நிறுவனங்களும் காஃபி கடைகளும் நீண்ட அடர்தாடி கொண்ட சூஃபி ஒருவரின் படத்தை தங்கள் சின்னமாக வைத்திருப்பதை சுட்டுகிறார் ஆசிரியர்.
மெக்காவில் ஹஜ் பயணம் வரும் யாத்ரிகர்களுக்கு காஃபி அளிக்கப்படுகிறது. திடீரென காஃபி ஒரு போதைப்பொருள் என ஒரு கருத்து பரவுகிறது. அரேபிய அரசாங்கம் காஃபியை நாடு முழுவதும் தடை செய்கிறது. காஃபி தடை செய்யப்பட்டதைக் கண்டித்து அரேபியா முழுவதும் மக்கள் பெரும் ரகளையில் ஈடுபடுகின்றனர். பின்னர் அரேபிய அரசாங்கம் காஃபி தடையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கிறது.
மேற்படி இரு சம்பவங்களும் பொது யுகம் 15ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கக் கூடும்!
நீலகிரி மலைப்பகுதியில் பழங்குடிகள் ‘’ஆரோக்கியப் பச்சை’’ என்னும் தாவரத்தை ஆற்றல் தரும் உணவாக உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மலையேற்றம் சென்ற குழு ஒன்று அந்த தாவரத்தின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது. ‘’ஜீவனி’’ என்ற பெயரில் அந்த தாவரத்தின் பொடி பல்வேறு சவால்களை சமாளித்து விற்பனைக்கு வருகிறது. இதைக் குறித்த கட்டுரை நூலின் இரண்டாம் அத்தியாயம்.
பாப்பரஸ் என்ற தாவரம் பதப்படுத்தப்பட்டு அதில் மனிதர்கள் மசி கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த விபரத்தை கிளியோபட்ரா வாழ்வில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு ஒன்றிலிருந்து தொடங்கி மூன்றாம் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
வினாடி வினாக்களில் அதிகம் கேட்கப்படும் கேள்வி ‘’ சாக்ரடீஸுக்கு அளிக்கப்பட்ட நஞ்சின் பெயர் என்ன?’’ என்பது. ஹெம்லாக் என்பது அந்த வினாவுக்கான விடை. ஹெம்லாக் தாவரம் குறித்த கட்டுரையில் ஒட்டு மொத்த சாக்ரடீஸின் வாழ்வை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதனை வாசிப்பவர்கள் சாக்ரடீஸையும் மறக்க மாட்டார்கள்; ஹெம்லாக்கையும் மறக்க மாட்டார்கள்.
சில ஜப்பானிய உணவு வகைகளைக் குறித்த அத்தியாயங்களை வாசிப்பவர்களை ஜப்பான் தேசத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களாகவும் தன் சொற்களின் மாயத்தால் ஆக்கி விடுகிறார் ஆசிரியர். இந்த நூலை வாசிப்பவர்களில் கணிசமானோர் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் இந்த உணவு வகைகளுக்காகவேனும் வாழ்வில் ஒரு முறையாவது ஜப்பான் செல்வார்கள் என்று துணிந்து சொல்லலாம் !
தர்ப்பை புல் குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் மிகச் சிறப்பானது.
லினன் துணி குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயம் இந்நூலின் உச்சம்.
குற்றப் புலனாய்வுத் துறையில் தாவரவியல் எவ்விதம் உதவியிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் அத்தியாயம் ஒரு வேகப்புனைவு நாவலை வாசிக்கும் அனுபவத்தைத் தந்தது.
அரிசி, கடுகு, அன்னாசி, சோற்றுக்கற்றாழை ஆகிய்வை குறித்தும் சிறப்பாக சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
இந்நூலை வாசித்த பின் எந்த வாசகனும் இதுவரை பார்த்த கவனித்த புரிந்து கொண்ட உள்வாங்கிக் கொண்ட எண்ணிக் கொள்ளும் தாவர உலகத்துக்கும் இனி அவன் காணப் போகும் கவனிக்க இருக்கும் புரிந்து கொள்ள இருக்கும் உள்வாங்க இருக்கும் எண்ணப் போகும் தாவர உலகுக்கும் பெரும் தூரம் இருக்கும்.
சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்துக்கும் 64ம் கட்டத்துக்கும் இருக்கும் தூரத்தைப் போல !
தனது தேவைக்கும் அதிகமானவற்றை எடுத்துக்கொண்டு, பதிலுக்கு தன்னிடமிருந்து எதையும் அளிக்காத உயிரினம், தான் வளரத் தேவையானவற்றை அழித்து, தன்னையும் அழித்துக் கொள்ளும்.
_ பீட்டர் வோலிபென் _
ஆலமரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்த விஷயம். அதற்குள் நுழைந்து சுற்றி வருவது, ஆற்றங்கரை ஓர ஆலம் எனில் விழுதுகளில் ஊஞ்சல் ஆடி நீருக்குள் விழுவது, ஆல மரங்கள் சூழ்ந்த தோப்புக்குள் இருக்கும் அய்யனார் கோயில்கள் காண்பது, சாலை நடுவே நிற்கும் ஆல மரத்தின் விழுதுகள் வாகனங்கள் போகும் வண்ணம் யாரும் வெட்டாமலேயே குறிப்பிட்ட உயரத்தில் நின்று கொள்வது, ஆரோவில் தியான கோளத்தின் முன்னே கனிந்த யோகி என அமர்ந்திருக்கும் ஆலம், ஓசூர் அருகே ஆயிரம் கால் மண்டபம் போல விழுதுகள் நிறைந்து நிழல் பெருக்கி நிற்கும் ஆலம் என காணக் காண கண் நிறைத்து அகம் குளிர வைக்கும் அனுபவம் அளிப்பது ஆலம்.
இந்தியகண்ட நிலப்பரப்பு தோன்றிய காலத்தில் தோன்றிய மரம். இந்தியாவை தாயகம் கொண்ட மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த மரம் என்றெல்லாம் சிறுவயது பாடத்தில் படித்திருக்கிறேன். அங்கே துவங்கி ஆலமரங்களை காணும்போதெல்லாம் பிரும்மாண்டமான ஒரு பூர்வீக கூட்டுக்குடும்ப வீட்டுக்குள் செல்வதை போல உணர்வு. ஆல மரங்கள் குறித்த என் அனுபவத்தை அடியோடு பெயர்த்து எறிந்தது சமீபத்தில் தமிழக கேரள எல்லையில் நான் சென்ற கானுலா ஒன்றில் காட்டுக்குள் வைத்து நான் கண்ட ஆலமரம்.
காட்டுக்குள் அதன் வாழிடத்தில் அது அத்தனை உயிர்ப்போடும் உக்கிரத்தோடும் இருந்தது. கண்ட கணமே அடி வயிற்றில் பீதி கிளர்த்தும் காட்டுத்தனம். ஆம் காட்டுத்தனம் என்றால் என்ன என்பதை முதன் முதலாக தூலமாக கண்முன்னால் கண்டேன். உயிர்த்திருப்பேன் எனும் காட்டுத்தனம். வளர்வேன் எனும் காட்டுத்தனம். இருப்பேன் எனும் காட்டுத்தனம். பெரு வாழ்வு எனும் காட்டுத்தனம். மீண்டு நெடு நாள் ஆகியும் காட்டில் நான் கண்ட அந்த ஆலத்தில் இருப்பது எது? மனிதர்களுடன் பழகிய எல்லைக்குள் வாழும் ஆலத்தில் இல்லாமல் போனது எது என்ற வினா என்னைத் தொடர்ந்தது.
பார்ப்பதற்கு அவை ஒன்றுபோலவே இருந்தாலும் ஊருக்குள்ளும் காட்டுக்குள்ளும் என இரண்டு நிலங்களிலும் அவை கொண்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாக எனக்கு கிடைத்த நூலே மரங்களின் காதலரும், ஜெர்மனியின் ஹிம்மெல் பகுதியில் உள்ள வணிக காடுகளின் பராமரிப்பாளருமான பீட்டர் வோலிபென் எழுதிய மரங்களின் மறைவாழ்வு எனும் நூல்.
வணிக பயன்பாட்டின் பொருட்டு காடுகளை வளர்த்து, மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் முன்னணி தேசம் ஜெர்மன். அதன் வணிக காடு ஒன்றின் பராமரிப்பாளர் பீட்டர். கசாப்பு கடைக்காரர் தான் வெட்டும் ஆட்டுடன் என்ன வகையான உணர்வு தொடர்ப்பு கொண்டிருப்பாரோ, அந்த வகையான தொடர்பு மட்டுமே தன்னை சூழ்ந்த மரங்களுடன் கொண்டிருந்தவர். மெல்ல மெல்ல அவர் கவனம் குவிகிறது. எங்கிருந்தோ இங்கே வந்து இந்த மரங்களை ஆவலுடன் பார்க்கும் வெளியாட்டுகளை அதிசயமாக பார்க்க துவங்கி, அவர்களின் கண்கள் வழியே தான் இருக்கும் காட்டை பார்க்க முயல்கிறார் பீட்டர். மெல்ல மெல்ல அவரது அறிதல் விரிதல் அடைகிறது. புதியதொரு வாழ்க்கைப்புலம் மனிதர்களுக்கு இணையான ஒன்று அவருக்கு காட்சி அளிக்கிறது. அந்த அறிதலைக் கொண்டு அவர் எழுதிய நூலே மரங்களின் மறைவாழ்வு நூல்.
நூல் முதன்மையாக, பழக்கி எடுத்த மரத்தொகுதி, காட்டில் இயல்பான வாழிடம் கொண்ட மரங்கள், இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை அந்த நிலத்துக்கு சொந்தமான பீச், பைன், ஓக், ஸ்ப்ரூக் மரங்களை வைத்துப் பேசினாலும், அடிப்படையில் இந்த நூல் உலகின் எந்த நிலபரப்புக்கும் அதன் காடுகள் குறித்த அறிதலுக்கும் பொதுவானது.
அங்கே வாழ்ந்து, அறிவியலின் துணை கொண்டு, கானகம் சார்ந்து தான் அறிந்தவற்றை பொது வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் பீட்டர் எழுதிய பாப்புலர் சயின்ஸ் வகைமை நூல் இது என்றாலும், இந்த நூலை வாசித்து முடிக்கையில் இந்த நூல் வழியே எழுந்த sub text வியக்க வைத்தது. பண்பாட்டு மானுடவியல் போலவே இந்த நூலை கொண்டு பண்பாட்டுத் தாவரவியல் என்ற புதிய துறையை தோற்றுவித்துவிடலாம் என்பதை போல ஒரு எண்ணம் எழுந்தது.
உதாரணமாக பண்பாட்டு மானுடவியல், உலகில் எத்தனை நூறு வேறுபட்ட கலாச்சாரம் இருந்தாலும், நாம் மானுடர்கள் என்ற வகையில் அத்தனை வேறுபட்ட கலாச்சாரத்திலும் ஒரு போதும் மாறாத ஏழு அடிப்படை அம்சங்கள் இருக்கும். அது பரிணாமவிதிக்கு உட்பட்டும் நமது மரபணுவின் இயல்போடும் இணைந்து இருக்கும். 1, வணங்குதல். 2, குடும்ப உறவு.3, சமூக உறவு. 4, வேலை பகிர்மாணம். 5, பேரிடர் மேலாண்மை (போர்கள் இத்தியாதி உட்பட பல இதில் வரும்) 6, சக்தி உறவுகள் வளங்கள் இவற்றின் பகிர்வு. 7, தன்னை பேணல். இவையே அவை என்று சொல்கிறது.
இந்த மரங்களின் மறைவாழ்வு நூலை வாசித்து முடிக்கும் போது மேற்கண்ட பண்பாட்டு மானுடவியல் பட்டியலில் உள்ள முதல் அம்சத்தை தவிர பிற ஆறு அம்சங்களும் கான்வாழ்வில் இருப்பதை அறியலாம். இந்த நூல் மனித ஆண் வீசி எறியும் பல லட்சம் விதை அணுக்களில் ஒன்று மட்டுமே பிறந்து வருவது போலத்தான், மரங்களும் விதைகளை வீச, அவை சரியான நிலத்தில் விழுந்து, பறவைகள் விலங்குகள் உண்டு பரவி, சரியான இடத்தில் விதைக்கப்பட்டு, சரியான மண், சரியான பருவ சூழல் என பலநூறு இயற்கையின் நிகழ்தகவு விளையாட்டுக்கு பிறகே (தன் மகரந்த சேர்க்கை இன்றி அயல் மகரந்த சேர்க்கை மட்டுமே நிகழும் ஆச்சர்யம் இன்னும் ஆய்வு புலத்தில்தான் இருக்கிறது) அவை தனது வாரிசை உயிர்பிக்கின்றது என்பதை விரிவாக சித்தரித்து காட்டுகிறது. (குழந்தைகளை போன்ற) கன்றுகளை பிற வளர்ந்த மரங்கள் (பெற்றோர்கள் போல) எவ்விதம் பேணி வளர்க்கிறது என்பதை பேசுகிறது. உதாரணமாக கன்று செடிகளின் தளிர் இலைகளுக்கு தான் எவ்வளவு சூரிய ஒளி உட்கொள்ள வேண்டும் என்று தெரியாது. பிற வளர்ந்த மரங்களே இந்த கன்றுகளுக்கு எவ்வளவு ஒளி தேவையோ அவ்வளவு மட்டும் அளித்து வளர்க்கிறது. இப்படி இன்னும் பலவற்றை இந்த நூல் விரிவாக பேசுகிறது.
மரங்கள் நிலத்துக்கு கீழே தனது வேர்கள் வழியே பூஞ்சைகளால் ஒரு பெரிய தொடர்பு வலைப்பின்னல் கொண்டு ஒரு சமூகமாக கொண்டும் கொடுத்தும் வாழ்வதை இந்த நூல் வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. உதாரணமாக மரங்களை பாதிக்கும் ரசாயனங்களை உண்டு பூஞ்சைகள் இந்த மரங்களை காப்பதும், நிலத்துக்கு கீழே வரும் பிற ஆபத்துக்களை தனது சக மரங்களுக்கு இந்த பூஞ்சைகள் வழியே தெரிவிப்பதும் உள்ளிட்ட பூஞ்சைகளுக்கும் மர வேர்களுக்குமான பல வகையான தொடர்பு பின்னல். நிலத்துக்கு மேலே குறிப்பிட்ட ரசாயனங்களை வெளியேற்றி சக மரங்களுடன் தொடர்பில் இருக்கிறது. ஆபத்துகளை தெரிவிப்பது, சூழ்ந்த காற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது உள்ளிட்ட பல காரியங்களை மரங்கள் ரசாயனங்கள் கொண்டு செய்கிறது. மனிதர்கள் சமூகமாக வாழ மொழி அளவுக்கே சங்கேதங்களுக்கும் இடம் உண்டு. மரங்கள் இந்த ரசாயனங்கள் வழியே சங்கேத மொழியில் பேசிக்கொள்கின்றன. மரங்கள் விலங்குகள் போல ஒலி எழுப்புவது உண்டா? ஆச்சர்யமாக ஆம் என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறது இந்த நூல். அந்த ஒலி தொடர்பு கொள்வதற்கான ஒலியா என்பதன் மீது ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்பதையும் அது என்ன என்பதையும் இந்த நூல் சொல்கிறது.
வேலை பகிர்மாணம் என்று வருகையில் பலவீனமரங்கள் பலமான மரத்தை சார்ந்து வாழ்வதை, எல்லா மரங்களுக்கும் தேவையான புற ஆற்றல்களை எல்லா மரங்களும் கூடி இணைந்து (பலம் வாய்ந்தவை குறைவாகவும் பலம் குறைந்தவை நிறைய எனவும்) சமமாக எடுத்துக்கொள்வது குறித்து, நோயுற்ற மரங்களை மீட்க பிற மரங்கள் செய்யும் யத்தனம் இப்படி பலவற்றை நூலின் சில அத்தியாயங்கள் பேசுகிறது.
கொடும் பனி, பாலை, தொடர் காற்று இப்படி பட்ட சூழலை தாங்கி மரங்கள் எவ்விதம் தங்கள் வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன, பருவ சுழற்சியை, சூழல் சீர்கேட்டை மரங்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பதை 14000 ஆண்டுகளாக பனி யுக முடிவில் இருந்து வாழும் மரம் ஒன்றை கொண்டு இந்த நூல் விளக்குகிறது. மின்னல்கள் காட்டுத்தீ இவற்றை மரங்கள் எவ்விதம் எதிர்கொண்டு மீள்கின்றன என்பதை வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. அதன் உச்சம் என்பது இந்த நூல் விவரிக்கும் பறவைகள் போலவே மரங்களும் வலசை போகும் என்ற அறிவியல்பூர்வமான நிலை. (அது எப்படி என்பதை வாசகர்கள் நூல் வாசித்து அறிந்து கொள்ளவும்).
ஒரே நிலத்தில் ஒரே மரங்கள் அருகருகே இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய தனித்தனி வளரியல்பை கொண்டிருக்கின்றன. மண் முதல் விண் வரை பல்வேறு ஆற்றல்களோடு தொடர்பு கொண்டு, கொண்டும் கொடுத்தும் வாழும் ஒரு பிரும்மாண்டமான உயிர்வலை பின்னலில் ஒரு பகுதியாக மனிதர்கள் போலவே பிறந்து, வாழ்ந்து, முதுமை எய்தி மடிகின்றன. மண்ணுக்கு உரமாகி இன்னும் பல நூறு உயிர்களை வாழ வைக்கின்றன. காடுகள் கடல்களை போலவே மேகங்களை உற்பத்தி செய்கின்றன, காடுகள் நதிகள் வழியே கடல் வளம்பெறும் பலவற்றை அளிக்கின்றன, எல்லா மரங்கள் இருக்கும் காடுகளும் புவி உஷ்ணத்துக்கு பதில் அளிக்காது, முதிய மரங்கள் நிறைந்த காடுகள் மட்டுமே சூடாகும் பூமியை காக்க வழி கொண்டவை, இவையெல்லாம் எவ்விதம் என்பதை விரிவாக பேசும் இந்த நூல் இவை அனைத்தையும் அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறது.
இந்த அறிவியல்பூர்வமான நூலின்படி மரங்களின் வேர்களும் இலைகளும் நினைவுகளை சேகரித்து வைத்துக் கொள்கின்றன. எனில் மரங்களின் மூளை முடிச்சு அல்லது நரம்பு அமைப்பு எது? கிட்டதட்ட மனிதர்கள் செய்யும் அனைத்தையும் மரங்களும் செய்கிறது என்று தெரியவரும்போது, மரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லை ஆகவே அவற்றுக்கு வலி தெரியாது என்ற மானுட மைய்ய கருத்தோட்டம் ஆட்டம் காண்கிறது. வேர்கள் நீரை உறிஞ்சுகின்றன, இலைகள் அவற்றை தக்கவைத்துக்கொள்கின்றன, மிக நீண்ட தண்டு பகுதியில் நடப்பது என்ன? நீர் கீழே இருந்து மேலே எவ்விதம் போகிறது. இன்று வரை அது குறித்து மனிதர்கள் வசமிருப்பது அறிவியல் நோக்குக்கு அருகே வரும் ஊக உண்மை மட்டுமே. நிகர் உண்மை என்ன என்பது இன்று வரை ஆய்வுக்கு உரியதே. இப்படித்தான் தாவரவியல் சார்ந்த பல மர்மங்கள் அறிவு விளக்கம் பெறாமல் இருக்கிறது. அப்படி இருக்கையில் மரங்கள் இவ்விதம்தான் என்று மனிதர்கள் இடும் தீர்ப்புகள் எத்தனை ஆதிக்கம் கொண்டது.
மரங்கள் சூழலால் கட்டுப்படுத்தபட்ட ஒன்றல்ல, அவற்றுக்கு தொடர்பு உண்டு, மொழி உண்டு, நினைவு உண்டு, காலம் உண்டு நேரம் உண்டு, புலன்கள் உண்டு, மகிழ்ச்சி உண்டு, சமூக வாழ்வு உண்டு, இளமை முதுமை நோய் உண்டு, இங்கே தங்கி வாழ, பெற்று பெறுக எல்லா விழைவும் உண்டு என்று நிறுவி உயிரியலுக்கும் தாவரவியலுக்கும் இடையே இருக்கும் கோட்டினை அறிவியல்பூர்வமாக அழிக்கும் இந்த நூல் மானுட வாழ்க்கை நாடகங்கள் அடங்கிய நாவல் ஒன்றை படிப்பது போல உணர்ச்சிகரமாகவும்,நாம் அறியாத ஒன்றை திரை விலக்கி காட்டும் போது அறிவுப்பூர்வமாகவும் துப்பறியும் நாவல் ஒன்றை வாசிப்பதை போல பரபரப்பாகவும், இருக்கிறது. மோலியா கேக்லியானோ, மோனிகா கேக்கர்ஸ்லியானா, மோரிஸ் டோக்ரின் போன்ற தாவரவியல் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் வெளிப்படுத்திய வியப்பூட்டும் கண்டடைதல்களை அடிப்படையாக கொண்டு 36 சுவாரசியமான அத்தியாயங்களாக கட்டமைக்கப்பட்ட இந்த நூலின் பின்னுரை சூசன் சிம்மர்ட். பூஞ்சைகள் வழியே மரங்கள் நிலத்தடியில் நிகழ்த்திய மர்ம வலைப்பின்னல் ரகசியங்களை முதன்முறையாக கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர். நூலின் துவக்கத்தில் அதன் அணிந்துரையில் இந்த நூலின் அறிதல்களை இந்திய வன சூழலுக்கு பொருத்திப்பார்க்கும் வகைமைகளை இந்திய சூழலியலாளர் பிரதீப் கிருஷன் பேசுகிறார்.
உபநிஷத் ரிஷி உத்தாலகர் தனது மகனை ஆலமர விதை ஒன்றை பிளந்து பார்க்க சொல்லி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கிறார். அவன் ஏதும் இல்லை என்று சொல்ல. “ஸ்வேத கேது… அறிக… அதுவே நீ” என்று அப்த வாக்கியம் உரைக்கிறார்.
காணும் காரியம் யாவிலும் பின்னால் இருப்பது கண்களால் அறிய இயலாத சூக்கும காரணம். அப்படி கண்களால் அறிய இயலாத ஒன்றை பீட்டர் வோலிபென் இந்த மரங்களின் மறைவாழ்வு நூல் கொண்டு திறந்து காட்டுவதன் வழியே மானுட ஞானம் மேலும் ஒரு அடி முன் நகரும் பரவசத்தை இந்த நூலின் வாசகர் ஒவ்வொருவரும் உணர முடியும். கம்பேஷன் என்பது ஆத்மீகமான ஒன்று மட்டுமே அல்ல,அறிவியல் பூர்வமாகவும் அதற்கு பாதை உண்டு என்பதை இந்த நூல் வழியே உணர முடியும். வாசிக்க இடர் இல்லாத சரளமான மொழியாக்கதை செய்திருக்கிறார் மொழிபெயர்பாளர் தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி. ஒரு வெளிநாட்டு புத்தகத்தை கையில் வைத்திருப்பதை போல உணர்வு எழும் வகையிலான அட்டைப்படம், நூல் கட்டமைப்பு இவற்றுடன் காலச்சுவடு பதிப்பகம் அழகிய முறையில் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். நல்ல நூல்கள் வாசிக்க நேரும்போதெல்லாம் அதை பகிர்ந்து நான் சொல்லும் அதே சொல்தான் இந்த நூலுக்கும் சொல்வேன். தமிழ் அறிந்தோர் ஒவ்வொருவரும் தவறாது வாசித்திருக்கவேண்டிய நூல் இந்த மரங்களின் மறைவாழ்வு.
சமீபத்தில் வெளியான தாரணா 18 மைல்கள் என்கிற, தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையில் இருக்கும் தூர அளவுகளைக் குறிக்கும் 16 நிமிடங்கள் ஓடும் பாடலைக்குறித்து அகரமுதல்வன் எழுதியிருக்கும் கட்டுரையின்
//புகையைப் போல் ஒழிந்த எங்கள் வாழ்வையும், நடுக்கடலில் மீன்களின் இரையாய் மிதந்த எங்களின் குழந்தைகளையும், ஒரு கொள்ளியைப் போல எரியுண்ட எங்களின் வாழும் ஆசைகளையும் தூக்கிச் சுமந்து வந்து நின்ற பாடல்//
//அது கடலில் தத்தளிக்கும் அகதிகளை மட்டுமல்ல, தரையில் அகப்பட்டு பத்துக்கு பத்து கூடாரங்களில் காலங்காலமாய் அவஸ்தைப்படும் துன்பகரமான ஒரு வரலாற்றுச் சாட்சியையும் முன்வைத்திருக்கிறது// என்னும் வரிகள் அளித்த துயர் மனதில் நிறைந்திருக்கையில் தான் கடலின் நீண்ட இதழை வாசிக்கத் துவங்கினேன்.
வாசிப்பின் முடிவில் போரின் குரூரங்களும், அகதி வாழ்வின் அவலங்களும், அகதிகள் சந்திக்கும் சவால்களுமாய் நிறைந்திருக்கும் இந்த நாவலின் வாசிப்பனுபவம், யாருக்கோ எங்கோ நடந்ததென்றில்லாமல் எனக்கே நிகழ்ந்ததுபோல் ஒரு அந்தரங்கமான துயரை உருவாக்கிவிட்டது.
ஸ்பெயின் உள்நாட்டுப்போரின் பால்புட்டி கட்டாய ராணுவச்சேர்ப்பில் சண்டையிட வந்த பதினைந்து வயதிருக்கும் ஒரு இளைஞன் மார்பில் காயம்பட்டு, திறந்த பெருங்காயத்தின் வழியே தெரியும் துடிக்கும் இதயத்துடன் சிகிச்சைக்கென வந்திருப்பதில் தொடங்குகிறது கதை.
காப்பாற்ற முடியாது எனக்கைவிடப்பட்ட அவனை மருத்துவர் விக்டர் தல்மாவ் காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இதயம் துடிப்பது நின்றுபோய், போரைக்குறித்த விக்டரின் நினைவுகளில் அழிக்கமுடியாத ஒன்றாகிறான் அவன்.
ஆனால் விக்டர் விரல்களால் அந்த இதயத்தை மெதுவாக அழுத்தி அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறார் அதன் பிறகு விக்டரின் வாழ்வை நிர்ணயிக்கப்போகும் மருத்துவப்பணியில் இணைகிறார்.
நம்மில் அதிகம் பேர் முழுவதுமாக அறிந்திராத ஸ்பெயின் உள்நாட்டுப்போர், சிலியில் நடந்த ராணுவப்புரட்சி ஆகியவற்றை தனிப்பட்ட மனிதர்களின் கதைகளையும், காதலையும், விசித்திரமான உறவுகளையும் ஒரு பரந்த வரலாற்றுப் பின்னணியில் சொல்லும் இந்நூல் ஒரு மலரைப்போலவே மெல்ல மெல்ல விரிந்து தலைப்பை நினைவுட்டுகிறது.
1930-களின் பிற்பகுதியில் ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, விக்டர் தல்மாவ் என்ற மருத்துவரின் வாழ்க்கையையும், அவனுக்கு மனைவியாக நடிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கும் ரோஸர் என்னும் பியானோ கலைஞரின் கதையையும் பிரதானமாகச் சித்தரிக்கிறது. இந்தப் போரினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மலைகள் வழியாகப் பயணிக்கின்றனர்.
தான் காதலித்த விக்டரின் சகோதரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்ப்பிணியான ரோஸர், விக்டரின் பொறுப்பில் வந்து சேர்கிறார். இவர்கள் பிரான்ஸ் வழியாகச் சிலிக்கு பயணம் செய்து, பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அகதி வாழ்க்கையின் சவால்கள், அரசியல் நிகழ்வுகளின் தாக்கம், காதல் மற்றும் உறவுகள், போரின் விளைவுகள் ஆகியவற்றை இந்த இருவரின் தனிப்பட்டக் கதையை மையமாகக் கொண்டு, நாவல் விரிவாகப்பேசுகிறது
சொந்தநாட்டை விட்டுச்செல்லவேண்டி வந்த அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க சிலியில் அடைக்கலம் தேடுகின்றனர். ஆனாள் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் ஒருமுறை தங்கள் வாழ்வை இழக்கும் அபாயத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்தக்கதையில் மிக முக்கியமான இரண்டு கதைமாந்தர்களாக விக்டரும் ரோஸரும் இருக்கிறார்கள்.
விக்டர் தல்மாவ்:
ரோஸரை, அவளின் பாதுகாப்பிற்காகத் திருமணம் செய்துகொள்கிறார். துவக்கத்தில் இந்தத் திருமணம் ஒரு தேவையின், ஒரு கடமையின் அடிப்படையில் அமைந்தது. சிலியில் குடியேறிய பின் தனது மருத்துவப் படிப்பை முடித்து, சிறந்த இருதயநோய் நிபுணராகிவிடும் விக்டர் ஒருபோதும் தனது கடந்தகாலத்தை மறக்கவில்லை. சிலியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அவரை மீண்டும் அகதியாகப் பயணிக்க வைக்கிறது. இறுதியில், வாழ்க்கையின் முடிவில், அவர் தான் மேற்கொண்ட பயணங்களையும், தான் கடந்து வந்த காதலையும் உறவுகளையும் திரும்பிப் பார்க்கிறார்.
ரோஸர்:
ரோஸர் ஒரு திறமையான பியானோ கலைஞர். மிகவும் உறுதியானவள், சுதந்திரமானவள். அவள் வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்கிறாள். போரும் அகதி வாழ்க்கையும் அவளை உடைக்கவில்லை, மாறாக இன்னும் வலிமையாக்குகின்றது. எதைக்கண்டும் அஞ்சியிராத ரோஸராகவே அவர் நாவல் முழுவதும் வருகிறார்.
நாவலின் துவக்கத்தில், அவள் விக்டரின் சகோதரனான கியூலியமை காதலிக்கிறாள். அவர் போரில் இறந்துவிட, அவள் கர்ப்பிணியாகவும் விதவையாகவும் தனித்து விடப்படுகிறாள். உயிர் வாழ்வதற்காகவும், தனது குழந்தையின் பாதுகாப்பிற்காகவும் விக்டரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறாள்.
சிலியில் அவள் ஒரு பியானோ ஆசிரியையாகவும், கலைஞராகவும் தனது திறமையை வளர்த்துக்கொள்கிறாள். விக்டருடன் ஏற்பட்ட வெறும் தேவையின் பொருட்டான அவளது உறவு மெதுவாக ஒரு ஆழமான அன்பும், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுமுள்ள உறவாக மாறுகிறது. தனது இறுதி நாட்கள்வரை அவள் விக்டருக்கு ஒரு துணைவியாக இருக்கிறாள்
விக்டர் மற்றும் ரோஸரின் கதை இரண்டு வெவ்வேறு மனநிலைகளைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, வாழ்க்கையின் கொந்தளிப்பான தருணங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைச்சொல்கிறது.
நாவலின் கதைக்களம் மூன்று முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஒன்று, ஸ்பெயின் நாட்டில் நடந்த உள்நாட்டுப் போர். மற்றொன்று, சிலி நாட்டில் நடந்த இராணுவப்புரட்சி, மூன்றாவது வின்னிபெக் கப்பல் பயணம்.
எஸ்.எஸ். வின்னிபெக் கப்பல் பயணம் ஒரு வரலாற்று உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. சிலி நாட்டின் பிரபல கவிஞர் பாப்லோ நெரூடோ, பிரான்ஸில் இருந்த ஸ்பானிய அகதிகளுக்காக இந்த கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்தார்.
பிரான்ஸில், விக்டர் மற்றும் ரோஸர் இருவரும் அகதி முகாம்களில் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். முகாம்கள் கூட்ட நெரிசல், பசி, மற்றும் நோய்களால் நிரம்பி வழிகின்றன. இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், விக்டர் நோயாளிகளுக்கு உதவுகிறார். அதே நேரத்தில் ரோஸருக்கு மகன் மார்சல் பிறக்கிறான். உயிர் பிழைக்க வேண்டும் என்ற அவர்களின் பொதுவான எண்ணம் அவர்களை ஒன்றிணைக்கிறது. இந்தத் துன்பங்களுக்கு மத்தியில், சிலிக்குக் குடிபெயரும் வாய்ப்பு பற்றி அவர்கள் கேள்விப்படுகிறார்கள். இது ஒரு புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையின் அடையாளமாக அவர்களுக்குத் தெரிகிறது.
பிரான்ஸ் அகதி முகாம்களில் அவதிப்பட்ட சுமார் 2,200 ஸ்பானிய அகதிகளைக் காப்பாற்ற பாப்லோ நெரூடோ ஒரு கப்பலை ஏற்பாடு செய்கிறார். இந்தக் கப்பல் பயணம், அகதிகள் சிலியில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான நம்பிக்கையை அளித்தது. நாவலில் விக்டரும், ரோஸரும் இந்தக் கப்பலில் பயணிக்கும் அகதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிலிக்கு செல்வதற்கான விக்டரின் கோரிக்கைப்பத்திரத்தில் முத்திரையைப் பதிக்கையில் ரோஸரின் இசைப்புலமையை கேள்விப்பட்டு , அத்தனை இக்கட்டிலும் பாப்லோ ’’எங்களுக்குப் பியானோ கலைஞர்கள் தேவை’’ என்று சொல்லுவது, நெருக்கடி மிகுந்த சாலையில் நடக்கையில் திடீரென நம் முன் விழும் ஒரு மலர் அளிக்கும் ஆசுவாசத்தை அளிக்கிறது.
போரின் பயங்கரங்களிலிருந்து அவர்களை விடுவித்து ஒரு நிச்சயமற்ற, ஆனால் நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் நம்பிக்கையின் சின்னமாகிறது அந்தக்கப்பல், போரின் அழிவுக்குப் பிறகு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் கவிஞர் பாப்லோ நெரூடாவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கப்பல் பயணம், வெறும் அகதிகளின் நகர்வு அல்ல, நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களையும் கனவுகளையும் சுமந்து செல்லும் ஒரு நம்பிக்கையாகவே இருக்கிறது.
வின்னிபெக் கப்பலில் அகதிகள் ஒன்றாகப் பயணிக்கும்போது, அவர்கள் ஒரு புதிய சமூகமாக உருவாகிறார்கள். இந்தச் சமூகத்தை உருவாக்குவதில் நெரூடாவின் பங்கு மறைமுகமானது. ஆனால், அவர் உருவாக்கிய இந்த வாய்ப்புதான் அகதிகள் தங்கள் கடந்த கால துயரங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, எதிர்காலத்திற்கான கனவுகளைப் பார்க்க உதவுகிறது
அந்தக்கப்பல் பயணத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கான பிரத்யேகப்பாடல், கப்பலில் கூட்டு இசை நிகழ்ச்சி நடப்பது, ரோஸரின் துணிகளை மற்றவர்கள் துவைத்துக்கொடுக்க முன்வருவது, சீட்டாட்டம் எனப் புலம்பெயர்தலின் துயரத்தை மறக்க ஏராளமான கேளிக்கைகள் நிறைந்திருக்கையில் பாப்லோ, சிலி ஒரு சொர்க்கபூமியல்ல என்பதை அறிவிக்கும் இடம் இடம் மிக முக்கியமானது.
கப்பல் பயணத்தில் நடக்கும் பல சம்பவங்களில் மிக உணர்வுபூர்வமான ஒன்று ஆக்னஸ் அமெரிக்கா வின்னிபெக் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை பிறப்பதுதான். மரணத்தை அனைத்து வித வடிவங்களிலும் பார்த்திருந்த விக்டருக்கு அந்தக் குழந்தைப்பிறப்பின்போது முதன்முதலாகக் காணும் உயிரின் தோற்றம் உண்டாக்கும் உணர்வெழுச்சி வாசிப்பவர்களுக்கும் உருவாகிவிடுகிறது.
விக்டரும் ரோஸரும், ரோஸரின் மகனுடன் சிலியில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பின்னர், அங்கு நடந்த இராணுவப் புரட்சி அவர்களின் வாழ்க்கையில் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புரட்சி, அந்தப் புதிய தாயகத்திலும் அகதிகளாக வாழ வேண்டிய அவலநிலையை விக்டருக்கும் ரோஸருக்கும் ஏற்படுத்தியது.
சிலியில் அவர்களின் வாழ்வு புதிய சூழலுக்கு ஏற்ப மாறுவது பற்றியதாகவே பெரும்பாலும் இருக்கிறது. விக்டர் மற்றும் ரோஸருக்கு புதிய வாழ்க்கையொன்று அமைந்துவிடுகையில், விக்டர் ஒஃபீலியாவுடன் காதலில் ஈடுபடுகிறார். தீவிரமான அவர்களின் காதல் விக்டர்-ரோஸர் திருமணத்தினால் சிக்கலாகிறது. இன்னொருவருடன் திருமணம் நிச்சயமான ஒஃபீலியா, தனது கடமைக்கும் விருப்பங்களுக்கும் இடையே முடிவெடுக்க முடியாமல் திண்டாடுகிறார். இவர்களின் ரகசிய சந்திப்புகள், விக்டர் மற்றும் ரோஸர் கஷ்டப்பட்டு உருவாக்கிய வாழ்க்கையை உடைத்துவிடும் அபாயத்தை உருவாக்குகின்றன.
விகடரின் காதலால் ஒஃபீலியா கர்ப்பமுற்று ஒரு பெண்ணைப் பெற்றெடுக்கிறாள். குழந்தை இறந்து விட்டது என்று ஒஃபீலியாவிடம் பொய்சொல்லப்படுகிறது.
விக்டர் மற்றும் ஒஃபீலியாவின் காதலில் பிறந்த மகள் இங்கிரிட் ஒரு பாதிரியாரின் தந்திரத்தால் தாயிடமிருந்து பிரிக்கப்படுகிறாள். தனது பிறப்பைப் பற்றி அறிந்ததும், இங்கிரிட் தனது தந்தையைக் கண்டறியும் பயணத்தைத் தொடங்குகிறாள். கண்டுபிடிகிறாள். இது அவருக்கும், விக்டருக்கும் இடையிள் பல ஆண்டுகளாக இருந்த இடைவெளியை நிரப்பி அவர்களின் உறவை வலுப்படுத்துகிறது,
இங்கிரிட் தனது கணவர் மற்றும் குழந்தைகளையும் விக்டருக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்கள் விக்டரை அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தப் புதிய தொடர்பு, இழப்பின் தனிமையை உணர்ந்த விக்டருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நாவலின் பேசுபொருள், போர்கள், அரசியல் மாற்றங்கள், மற்றும் புலம்பெயர்வு ஆகியவை தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கம்தான். கதைமாந்தர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும், குடியேறியவர்களாகவும், போரில் தப்பிப் பிழைத்தவர்களாகவும் வாழ நேரும் அனுபவங்கள் அவர்கள் பார்வைகளையும், மனித உறவுகளையும் எவ்வாறு மாற்றுகின்றன என்பதை நாவல் உணர்வுபூர்வமாகக் காட்டுகிறது.
இது ஒரு வரலாற்றுக் கதை மட்டுமல்ல; காதல், இழப்பு, தியாகம் இவற்றோடு உலகில் நடந்த பல அரசியல் கொந்தளிப்புகள், பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தனிப்பட்ட கதைகளையும் இந்த நாவல் விவரிக்கிறது.
கடலின் நீண்ட இதழ், போர், அகதி வாழ்க்கை, புலம்பெயர்தல் மற்றும் புதிய தாயகம் தேடுதல் போன்ற உலகளாவிய விஷயங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்தத் தலைப்புகள் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானவை. குறிப்பாக, இன்று உலகம் முழுவதும் அகதிகள் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், இந்த நாவலின் கதை வாசகர்களுக்கும் நெருக்கமான ஒரு கதையாக மாறுகிறது.
இந்த நாவலில் சொல்லப்படும் காதல் கதை, வழக்கமான காதல் கதைகளில் இருந்து வேறுபட்டது. இது போர்ச்சூழலில் அகதிவாழ்வில் பரஸ்பர ஆதரவின் அடிப்படையில் வளரும் ஒரு அன்பைக் காட்டுகிறது.
ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவனது சொந்த மண்ணுடன் எவ்வளவு தூரம் பிணைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது.
விக்டரும் ரோஸரும் தங்கள் ஸ்பானிய அடையாளத்தை ஒருபோதும் மறப்பதில்லை, அதே சமயம் சிலியின் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஸ்பானியர்களாகவே இருக்க விரும்புகிறார்களா, அல்லது சிலியின் குடிமக்களாக மாறுகிறார்களா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த உணர்வு, புலம்பெயர்ந்த பலருக்கு பொதுவாக ஏற்படும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழாமல், தங்கள் சொந்த உணர்வுகளையும், நினைவுகளையும் மட்டுமே தங்களின் “வீடாக” கருதும் ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்
அரசியல் நிகழ்வுகள் தனிமனித வாழ்க்கையை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கின்றன என்பதையும். இந்த நாவல் காட்டுகிறது.
அதைப்போலவே முறிந்த காதலின் வலியில் விக்டர் இருந்த ஒருநாளில் அவனுக்கு அன்பால் சிகிச்சையளிக்க ரோஸர் முடிவு செய்வதும், அதே நாளில் ஒரு கணவனின் இயல்புடன் அவளைத் தன் கைகளில் விக்டர் ஏந்திக்கொள்வதும் இந்த நாவலின் அற்புதமான தருணங்களில் ஒன்று. விக்டருக்கும் ரோஸருக்குமிடையில் புரிதலும் இயல்பான அன்பும் முகிழ்க்கும் 11-ம் அத்தியாயம் மற்றவற்றிலிருந்து வேறுபட்டும் வாசிப்பனுபவதில் மிகுந்த மனநிறவைத் தருமொன்றாகவும் இருக்கிறது
இடையிடையே வரும் பூவரசம் பூக்களும், பெயரிடப்படாத, தேதி குறிப்பிட்டிருக்காத கல்லறைச் சிலுவையில் வைக்கும் வெள்ளைப்பூக்களும், மழையில் நனைந்த பாப்லர் மரங்களும் கதையோட்டத்தின் கொந்தளிப்பைக் கொஞ்சம் தணிக்கின்றன
இந்தக் கதையில் கடிதங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன. கடிதங்கள் கதைமாந்தர்களின் தொடர்புகளுக்கும், அவர்கள் நம்பிக்கையையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், அவர்களின் துயர் நிரம்பிய வாழ்க்கையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கும், முக்கியமான திருப்பங்களுக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இடையிடையே பாப்லோ நெரூடோவின்
//நான் இப்போது வாழும் நாடு மிகவும் மென்மையானது இலையுதிர்கால திராட்சையின் தோல் போல//
போன்ற கவிதைகள் இனம்புரியாத பதற்றத்தை மனதில் உருவாக்குகின்றன.
கதையின் முடிவில், விக்டரும் ரோஸரும் மீண்டும் தங்கள் சொந்த நாடான ஸ்பெயினுக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, ஸ்பானிய சர்வாதிகாரி ஃபிராங்கோ இறந்துவிட்டதால், ஸ்பெயின் மீண்டும் ஜனநாயகம் ஆகிறது. தங்கள் வாழ்நாளில் இரண்டு கண்டங்களைக் கடந்து, இரண்டு பெரிய போர்களையும் அரசியல் மாற்றங்களையும் எதிர்கொண்டாலும், அவர்களின் அன்பு மற்றும் ஆதரவு அவர்களை வழிநடத்துகிறது.
மனைவி இறந்த பிறகு, விக்டர் தல்மாவ் சிலியில் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். தனது கடந்த காலத்தையும், ரோஸருடன் பகிர்ந்து கொண்ட காதலையும் நினைத்துப் பார்க்கிறார்.
கடலின் நீண்ட இதழ் (A Long Petal of the Sea) நாவலில், போரின் சோகத்தையும், அகதி வாழ்க்கையின் துன்பங்களையும் தாண்டி, மனித உணர்வுகளின் அழகிய தருணங்கள் பல கவித்துவமாகப் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாவலில் போர், வன்முறை, மரணம் போன்ற கடுமையான யதார்த்தங்கள் இருந்தாலும், அதன் அடிநாதமாகக் காதல், நம்பிக்கை, மற்றும் மனித மன உறுதி ஆகியவை உள்ளன.
நெரூடா, சிலியின் நீண்ட, குறுகிய புவியியல் வடிவத்தினால் அந்நாட்டை “நீண்ட கடலின் இதழ்” (A long petal of the sea) என ஒரு கவிதையில் வர்ணித்தார். இதுவே இந்நாவலின் மிகப்பொருத்தமான தலைப்பாகவும் அமைந்துவிட்டது. அதே வேளையில், போர், இடம்பெயர்வு, மற்றும் கடினமான வாழ்க்கைச் சூழல்களுக்குப் பிறகு புதியதாக மலரும் வாழ்வையும் தலைப்பு குறிப்புணர்த்துகிறது. கடலின் நீண்ட இதழ் என்னும் தலைப்பே நாவலின் ஆன்மாவாக மாறி, கதைக்கு ஆழமான பொருளை அளிக்கிறது.
மூலக்கதையான ‘’A long petal of the sea-யின் ஆசிரியர் இசபெல் அலேந்தேவின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவரது குடும்ப வரலாறு ஆகியவை இந்த நாவலின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன. குறிப்பாக, வின்னிபெக் கப்பலில் பணியாற்றிய அவரது வளர்ப்புத் தந்தையின் அனுபவங்கள் இந்தக் கதைக்களத்தை அலேந்தே உருவாக்க உத்வேகமளித்திருக்கக்கூடும். விக்டர் மற்றும் ரோஸரின் அகதி வாழ்க்கையை விவரிப்பதில் அவரது சொந்த அனுபவங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
அலேந்தேவின் எழுத்து எப்போதும் அவரது வாழ்க்கை அனுபவங்களில் வேரூன்றி உள்ளது. காதல், குடும்ப உறவுகள், மற்றும் பெண்களின் வலிமை ஆகியவை அவரது படைப்புகளில் மீண்டும் மீண்டும் தோன்றும் கருப்பொருள்கள். இந்த நாவலிலும், அவரது சொந்த அனுபவங்களான புலம்பெயர்வு, அரசியல் மாற்றங்கள், மற்றும் சிக்கலான மனித உறவுகள் ஆகியவை கதைக்களத்திற்கும் கதாபாத்திரங்களுக்கும் ஆழமான அடித்தளத்தை அளித்துள்ளன. இந்த நாவல் அவரது வாழ்க்கை வரலாற்றின் நேரடி விவரிப்பு இல்லையென்றாலும், அவரது அனுபவங்களால் உருவாக்கப்பட்ட ஓர் இலக்கியப் படைப்பாக விளங்குகிறது.
மூன்று பாகங்களையும் பதின்மூன்று அத்தியாயங்களையும் கொண்ட இந்த ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் வரலாற்றுக் களத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான மனித உறவுகளை வெளிப்படுத்தும் நீண்ட புனைகதையின் மொழிபெயர்ப்பு, மூலப் படைப்பின் உணர்ச்சி ஆழத்தையும் கலாச்சார நுணுக்கங்களையும் பாதுகாத்து தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்லவேண்டிய ஒரு சவாலையும் மொழிபெயர்ப்பாளருக்கு அளித்திருக்கிறது. அதில் சுபஸ்ரீ பீமன் வெற்றி கண்டுள்ளார்.
மூல நூலின் கவிதையின் சாயல் கொண்ட எழுத்துநடை, கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான இயல்புகள், ஆழமான உணர்வுப் பதிவுகள், மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் துல்லியமான விவரிப்புகள் ஆகிய அனைத்தும் மொழிபெயர்ப்பிலும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. சுபஸ்ரீக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
சமீபத்தில் கோவை நீலாம்பூரில் நஞ்சில்லா விவசாயம் செய்யும் மாதிரிப்பண்னையொன்றைப் பார்வையிட மாணவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அந்தப்பண்ணை அத்தனை ஆர்வமூட்டுவதாக தென்னையும், கரும்பும், ஊடுபயிர்களுமாக இருந்தது.
நீலாம்பூருக்குஅருகில் வசிக்கும் நண்பரொருவருக்கும் நிலபுலன்கள் இருப்பதால் அவரையும் அந்தப்பண்ணைக்கு வரும்படி அழைப்பு விடுத்தேன். அவர் அங்கே வந்தபின்னர்தான் தெரிந்தது அந்த நிலமும் அதற்கருகிலிருந்த நிலமெல்லாமும் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அவர்கள் முன்னோருக்கு சொந்தமானதாக இருந்தவை என்று.
அந்த நண்பர் என்னிடம் வேடிக்கையாக ‘’ எங்க நிலத்தைப் பார்க்க வரச்சொல்லி எங்களையே கூப்பிட்டிருக்கீங்க’’ என்றார்.
அப்படித்தான் இருந்தது சி ஆர் இளங்கோவனின் ‘’நதியின் பிழையன்று’’ நூலை வாசித்தபோது. கோவை மாவட்டத்துகாரியான எனக்கு கோவையைக்குறித்து விளக்கமாகச் சொல்லிய நூல் இது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளின் வரலாற்றையும், பன்முகங்களையும், அவை எப்படி மெல்ல மெல்ல சிதைக்கப்ட்டிருக்கிறது என்பதையும் மிக உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த நூல் அழைத்துச் செல்லும் இடங்கள் எல்லாமே எனக்குத்தெரிந்தவை, நான் சென்றிருப்பவை, வாழ்ந்து கொண்டிருப்பவைதான் என்றாலும் இளங்கோவன் காட்டும் கசக்கும் உண்மைகள் நானறியாதவை.
இந்த நூல் வாசித்தபிறகு 17-ம் நூற்றாண்டில் தனது ஓவியங்களால் சூழியல் துறையை தோற்றுவித்த மரியா சிபில்லாவை அறிந்துகொண்டிருந்த எனக்கு நான் பிறந்து வளர்ந்த மாவட்டத்தின் சூழல் சீர்கேடுகளைக் குறித்து முழுமையாகத் தெரியாமலிருப்பதன் குற்றவுணர்வு மனம் முழுக்க இப்போது உண்டாகியிருக்கிறது.
பிரமாதமான கதை கூறல் முறை. கசக்கும் பல உண்மைகளை புனைவு என்னும் தேன் கலந்து அளித்திருக்கிறார். ஆனாலும் கசக்கிறதுதான்.
கதை மாந்தர்களுக்குள் நடக்கும் உரையாடல்களாலும்,மிக விரிவான விளக்கங்களினாலும் நகரும் கதை இடையே அழைத்து வரப்படும் ஒரு பாட்டியினாலும், கதையில் இருக்கும் இரு பூதங்கள் தங்களுக்குள் உரையாடுகையிலும், ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் இரு பாறைகளின் மூலமும், ஜோடிப்பறவைகளின் உரையாடலிலும் மேலும் அணுக்கமாகிவிடுகிறது..
இந்தக்கதைகூறும் முறை என்னை மிகவும் கவர்ந்தது. இளங்கோவன் மொழியும் மிக எளிமையாக மாசடையாத காலத்து நொய்யலைப் போல தங்குதடையின்றி வழிந்தோடுகிறது.
ரோமானியரான மார்கஸ் நொய்யலைப்பற்றி ஆய்வு செய்யவருவதிலிருந்து கதை ஆம் நம் மாவட்டத்தின் கதைதான் தொடங்குகிறது. காலத்தில் முன்னும் பின்னும் சென்று திரும்பும் கதையில் நாமும் இளங்கோவனுடன் நதிக்கரைகளிலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோவில்களுக்கும், மச்சு வீடுகளுக்கும், ஜின்னிங் ஃபேக்டரிகளுக்கும் நடந்து செல்கிறோம்.
பல அத்தியாயங்களில் இளங்கோவன் நம் வீட்டு கூடத்தில் அமர்ந்து நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கும் உணர்வை வாசிப்பனுபவம் உண்டாக்குகிறது.
நானறிந்த, நான் சந்தித்திருக்கும் சூழல் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் பல முக்கிய ஆளுமைகள் பெயர் மாற்றப்பட்டு கதையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
அவர்களின் பணியும் சூழல் பங்களிப்பும் மகத்தானது. அவர்களை அவர்களாகவே குறிப்பிட்டிருக்கலாம். அதிமானுடக் கற்பனைக் கதாபத்திரங்களைக் கொண்டாடி வழிபடும் இந்தத்தலைமுறையினர் அவர்களைக் குறித்து அறிந்து கொண்டிருப்பார்கள். எனினும் புனைவு என்னும் வடிவத்தை முழுமையாக்க இப்படி செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
நூலில் என்னை பிரதானமாகக் கவர்ந்தது இளங்கோவனின் நேர்மறைத்தன்மை. நொய்யல் மாசுபடுவதைச் சொல்லிக்கொண்டே இருக்கும் இடங்களில் எங்கும் யாரையும் அவர் குறை சொல்லவில்லை. கரையோரம் வீடு கட்டிக் குடியிருந்து கழிவுநீரை நதியில் கலந்தவர்களைச் சொல்லும்போதும் அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்கிறார். அரசையும் குறை சொல்வதில்லை, அரசு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்த பின்னரும் கைமீறிப்போன விஷயத்தில் யாரைக் குறை சொல்வது என்னும் தொனிதான் பெரும்பாலும் இருக்கிறது.
சூழல் மாசு குறித்த நூலோ கட்டுரையோ ஏன் தகவலாக இருந்தால் கூட எதோ ஒரு தரப்பை குறைசொல்லாமல், சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. சூழல் மீது மட்டுமல்ல மனிதர்கள் மீதான இளங்கோவனின் இந்தக் கனிவும் என்னை மிகவும் ஆச்சர்யமூட்டியது.
சூழல் மாசுகுறித்த அவரது ஆழ்ந்த கவலையில் யார் மீதும் எந்தக்குறையும் அவர் காணவில்லை, எல்லாம் காலத்தின் கோலம் என்பதை அவர் ஆத்மார்த்தமாகச் சொல்கிறார். இடையிடையே அநேகமாக எல்லாப் பக்கங்களிலும் பிறவாப்புளி,எறவாப்பனை உள்ளிட்ட ஏராளமான மரம் செடிகொடிகளின் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலை இந்தப்பிரதேசத்தின் flora வின் ஆவணம் என்றும் கருதலாம்.
கல்வெட்டுச்செய்திகள், திருவிளையாடற்புராண வரிகள், ஆய்வறிக்கைகளின் முக்கியப்பகுதிகள், தமிழக ஆணையக்குறிப்புகள், நீதிமன்றத்தீர்ப்புகள் , தலபுராணத்தகவல்கள், சிலப்பதிகாரம், வெகுகாலத்துக்கு முந்தைய முக்கியக் கண்டுப்பிடிப்புகள் என்று ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்தில் கொடுத்திருப்பது இந்தப்படைப்பை மேலும் மேலும் செறிவானதும் முக்கியமானதுமாக்கி விடுகிறது.
நதியின் மூலத்தை மட்டுமல்ல நதி பாழானதின் மூலத்தையும் தேடிப்பிடித்து நமக்குத் தருகிறார் இளங்கோவன். திருப்பூரில் வண்ணத்துணிகள் உருவாகக் காரணமாயிருந்தவரை நான் இந்த நூலில்தான் அறிந்துகொண்டேன்.
சாயக்கழிவுகளால் உண்டாகியிருக்கும் நதிநீர் மாசுபட்டை ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வுடன் வாசித்தறிந்து கொள்ள முடிகிறது அத்தனைக்கு உண்மையாகவும் அப்பட்டமாகவும் சிக்கலை அணுகி இருக்கிறார் இளங்கோவன்.
பல வருடங்களுக்கு முன்னர் திருப்பூர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருக்கையில் தலைக்குகுளிக்கவென்று 20 பிளாஸ்டிக் குடங்களில் ‘’நல்ல தண்ணி’’ குடம் ஐந்து ரூபாய் என்று வாங்கி சேமித்துவைத்து விட்டு தான் துவங்கவிருக்கும் புதிய பனியன் தொழிற்சாலை குறித்து உற்சாகமாக நண்பர் பேசிக்கொண்டிருந்ததையும் அவர்கள் வீட்டு வாஷ்பேசினில் நான் குழாயை திறந்ததும் தேநீரின் நிறத்தில் வந்த ஆழ்குழாய் நீரையும் நினைவுகூர்ந்தேன்.
திருப்பூரின் ஒரு பெருமுதலாளியின் மூன்று குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே ஆஸ்துமா இருந்தது, திருப்பூரில் அவர்கள் இருந்தால் ஆரோக்கியக் கேடு மேலும் அதிகரிக்கும் என்பதால் அவர்கள்ஊட்டியில் ஒரு சர்வதேச உறைவிடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். திருப்பூரில் பின்னலாடை தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கானோரின் குடும்பத்துக் குழந்தைகளை எங்கு சென்று படிக்கவைத்து அவர்கள் நலனை பாதுகாப்பது?
யார் பிழை என்று சொல்வது இவற்றை?
சிங்காநல்லூரில் குளத்துக்குள் வரும் ரயில் ,அதன் வரலாறு, மீன்பிடிப்போரின் தெய்வமான தூண்டில் கருப்பசாமி, பிளேக் மாரியம்மன் பிளாக் மாரியம்மனானது,அந்தக்காலத்திலேயே பவோ பாப் மரம் கோவையில் ஒரு தோட்டத்தில் நடப்பட்டது, தன்னிச்சையாக இளைஞர்கள் இந்த மாசுபாட்டை சரிசெய்ய அமைந்த தருணங்கள் என மிகச்சுவாரஸ்யமாக நூலுடன் பயணிக்க முடிகிறது.
பலஇடங்களில் மிக கவித்துவமான விவரிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக மியாவாக்கி குறுங்காட்டைப்பற்றிய ஒரு விவரிப்பின் போது மூங்கில் இலைகள் பொன்னிற மலரிதழ்கள் போல தரையெங்கும் சிதறிக்கிடந்தன என்கிறார். மூங்கிலின் பழுத்த இலைகள் மலரிதழைப் போலவேதான் இருக்கும். தங்கமாக மின்னும் செண்பகப்பூ, காணி நிலம் வேண்டும் என்னும் பாரதியின் பாடலை நினைவில் கிளர்த்தும் இடமும் அப்படித்தான்.
நொய்யலில் மீன் பிடிப்பவர்களுக்கு சீவியர் என்னும் பெயரிருப்பதையும் அதன் காரணம் தெரியவில்லை என்பதையும் அறிந்து கொண்ட போது, மீன் முட்டைகளைக்குறிக்கும் Caviar என்னும் சொல்லுக்கும் இந்தப் பெயருக்கும் ஏதேனும் வேர்தொடர்பு இருக்குமோ எனத்தோன்றியது.
பிரச்சனைகளைச் சொல்லி இருக்கும் அதே அளவுக்கு பிரச்சனைகளைச் சீராக்க எடுக்கப்பட்டிருக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நதிநீர் மாசுபாட்டைச் சீரமைக்க நாமனைவரும் ஒன்று சேர்ந்து தீவிரமாகச் செயல்பட வேண்டி இருக்கும் அவசியத்தை நேரடியாகச் சொல்லாமல் சீர்கேட்டின் திவீரத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார்.
நூலின் உள்ளடக்கத்தை முன்-பின்னட்டை புகைப்படம் மிக வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறது. அதிலும் புரண்டோடும் நதி முன்னட்டையிலும். மாசடைந்த சாக்கடைக்கோலம் பின்னட்டையிலும் இருப்பது இளங்கோவனின் நேர்மறை அணுகுமுறையின் மற்றொரு சான்று.
கைக்கடக்கமான சிறிய 160 பக்கங்கள் கொண்ட நூல். சிறப்பான வடிவமைப்பு. மிகச்சில தட்டச்சுப்பிழைகள்தான்.
இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களையும் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் முக்கிய ஆளுமைகளைக்குறித்துப்பேசும், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நூல்கள் தான் கல்லூரியில் பாடத்திட்டத்திலோ அல்லது non detailed நூல்களாகவோ இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம் .
அயல்நாட்டினர் எழுதிய ஆங்கிலக்காவியங்களும் தேவைதான் என்றாலும் முதல் தேவை நம் சொந்த மண்ணை அறிந்து கொள்வது தான்.என் துறை மாணவர்களுக்கு 100 பிரதிகள் வேண்டும் இளங்கோவனிடம் கேட்டிருக்கிறேன்
திரு இளங்கோவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் அன்பும்!
’’என் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் மதிப்பிற்குரியவரே, உங்களுக்கு கிராமத்தில் நடப்பவை எல்லாம் தெரிந்திருக்கும் தானே? சொல்லுங்கள், நீங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாளில் என் வீட்டின் பனி படர்ந்த ஜன்னலின் எதிரே இருக்கும் அந்த ப்ளம் மரம் மலர்ந்திருந்ததா?’’
இந்த புகழ்பெற்ற கவிதை சீன ஓவியரும் கவிஞருமாகிய வாங் வெய் எழுதியது.
சீன அரசவையின் உயர் பொறுப்பில் இருந்த வாங் வெய் போர்க்கைதியாக கொண்டு செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டு இருக்கையில் எழுதிய கவிதைகளும் கடிதங்களும் உலக பிரசித்தி பெற்றவை. அவற்றிலொன்றுதான் ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? என்று கேட்கும் இந்த கவிதை.
வாங் வெய் தன்னிடமிருந்த அரசியல் ரகசியங்கள் எதுவும் போராளிகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக செவிடர் போல நடித்துக் கொண்டிருந்தார். வதைக்கு ஆளாகி எதையும் சொல்லாமலிருக்கும் பொருட்டு மருந்துகளை விழுங்கி தன் குரலை சேதப்படுத்திக் கொண்டார்.
பல்வேறு சித்ரவதைகளுக்கிடையிலும் தன்வீட்டின் எதிரே இருந்த ப்ளம் மரம் பூத்ததா என்று கேட்கும் இக்கவிதை சொந்த நிலத்தை பிரிந்து புதியதோர் இடத்தில் வாழும் பழைய நினவுகளின் இனிமையிலும் புதிய இடத்தில் தன்னை பொருந்திக் கொள்ள முடியாத துயருக்கும் இடையே அலைவுறும் ஆன்மாவின் விசும்பல்தான்.
இதைப்போலவே தன் ஈழத்து வீட்டின் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் நமக்கு இனி இல்லை கண்ணே’’ என்று துயர் கொள்ளும் புலம்பெயர் கவிதை ஒன்றுண்டு. போதமும் காணாத போதத்தில் இயக்கத்துக்கு சேரப் போகையிலும் தேமா மரத்தை பார்த்துக்கொள்ள சொல்லி கடிதம் எழுதும் தாயமும் வாங்வெய்யின் மற்றுமோர் வடிவம்தான்
புலம்பெயர் இலக்கியங்கள் அனைத்தும் ‘diasporic war literature’ எனப்படுகின்றன. பண்டைய கிரேக்க மொழியில் Diaspora என்பதற்கு ‘சிதறுண்ட’ என்று பொருள். சொந்த நிலத்தை விட்டு பல்வேறு காரணங்களால் வேறு புதிய பகுதிகளில் தனித்தனியே சிதறுண்டவர்களின் படைப்புக்களுக்கு இதைக்காட்டிலும் பொருத்தமான பெயர் வேறென்ன இருக்க முடியும்? புலம்பெயர் இலக்கியங்கள் உலகெங்குமே இருக்கின்றன என்றாலும் பெரிதும் அவை ஈழத்து புலம்பெயர் படைப்புக்களை குறிப்பதாகவே இருக்கின்றன.
அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலத்தை ஒரு மலைத் தங்குமிடத்தில் ஒரே நாளில் கண்ணீருடன் வாசித்து முடித்தேன். கடவுள் பிசாசு நிலத்திலிருந்து முளைத்த விதைதான் போதமும் காணாத போதம்
இரண்டிலுமே அகரமுதல்வனின் மொழிவன்மை திகைப்பூட்டுவது. இரண்டிலுமே வாழ்வும் தாழ்வும் சரிக்கு சரியான கலவையில் இருக்கும். துயரைச் சொல்லும் அதே மொழியின் வீச்சில் காதலும் சொல்லப்பட்டிருக்கும் படைப்புக்கள் இரண்டுமே
போரை செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் மட்டுமே அறிந்திருக்கும் என் போன்றோருக்கு போதமும் காணாத போதும் காட்டும் அசல் போர்ச்சூழலும் கொடுமையும், துயரமும், வதையும், உயிரிழப்பும் அதிர்ச்சியையும் குற்றவுணர்வையும் ஊட்டுபவை.
போர்ச்சூழல் படைப்புக்கள நாவல், கதை, கட்டுரை, கவிதை, திரைப்படம் என பல வகைகளில் இருக்கின்றன. அனைத்துமே போரின் அழிவை, போரினால் உண்டான இழப்புக்களை, வலியை, புலம்பெயர்தலின் அவலத்தை வலுவாக உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பவைதான் எனினும் போதமும் காணாத போதத்தில் அகரமுதல்வன் மற்றுமொன்றையும் சொல்லுகிறார்
சமீபத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிலிருக்கையில் இறந்தவரின் மனைவி அவர்களின் மகளின் பெயரைச்சொல்லி ‘எங்க சித்ரா பெரியவளான பின்னாடி என் விரலைக்கூட தொட்டதில்லியே எஞ்சாமீ’ என்று பெருங்குரலெடுத்து கதறினார். துக்க வீட்டின் பெண்கள் அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டனர்.அதை அவர் ஒரு புகாராகத்தான் சொன்னதாக எனக்குப் பட்டது.
கணவனை போரில் இழந்த பெண்களின் உடலின் சமரையும் போதமும் காணாத போதம் சொல்லுகிறது. உடலின் போரில் அமானுஷ்யமாக வெல்லுகிறார்கள் இதில் வரும் யசோவின் அம்மாவைபோன்ற பெண்கள்
ஒவ்வொரு ஞாயிறன்றும் போதமும் காணாத போதம் நள்ளிரவில் வலையேற்றப்படும். அதன் இணைப்பு வரும் வரை உறக்கமின்றி காத்திருந்து வாசித்திருக்கிறேன்.வெண்முரசு வாசித்த நாட்களுக்கு பிறகு போதமும் காணாத போதம் வாசிக்கத்தான் இரவுகளில் உறங்காமல் காத்திருந்தேன்.
வாசித்தபின் உறக்கம் முற்றிலும் நீங்கி பல இரவுகளை கண்ணீரில் கரைத்திருக்கிறேன். பல பத்திகளை தொடர்ந்து வாசிக்க முடியமால் நிறுத்தி நிறுத்தி உணர்வெழுச்சிகளை மட்டுப்படுத்தி பின்னர் வாசித்திருக்கிறேன்.
25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும் வாசிக்கவேயில்லை.
20 வருடங்களுக்கு முன்னர் கணவனை ஆர்மிக்காரர்களிடம் பறிகொடுத்து, பலநூறு இரவுகளை தனிமையில் கழித்த ஒருத்தி சாவிற்கு பின்னர் மகளாய் கலவியின் சுகம் காணும் அந்த உக்கிர இரவை சொல்லும் அத்தியாயம் பல இரவுகளின் உறக்கத்தை தின்றது.
காதலி நறுமுகையுடன் ஊரைவிட்டுசெல்லும் அப்பனிடம் கேட்கப்படும் ‘’சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே’’ என்னும் கேள்விக்கு ’’எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரம் வளர்ந்து விடுவோம் துவக்கேந்த வேண்டுமே” என்னும் அவன் பதிலில் முடியும் ஒரு அத்தியாயம் தொடர்ந்த பல இரவுகளையும் பல பகல்களையும் தின்று தீர்த்தது
’’தேவனே ஏன் என்னை கைவிட்டீர்’’ என்னும் விவிலிய வரிகளுடன் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் மிகபொருத்தமான அணிந்துரை அமைந்து விட்டிருக்கிறது. //போதமும் காணாத போதம் ஈழத்தின் ஆழத்துக்குள் சென்று துழாவும் பலமுள் தரித்த பாதாளக்கரண்டி// என்னும் கிருஷ்ணனின் வரிகளுக்கு மேலாக இந்நூலை குறித்து மேலதிகம் யாரும் சொல்லமுடியாது.
ஈரோடு கிருஷ்ணனின் அணிந்துரையை வாசிக்கையில் யூத வதை முகாமின் சுவற்றில் யாராலோ எழுதப்பட்டிருந்த ‘’ கடவுள் என ஒருவர் இருப்பாராயேனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்ச வேண்டும்’’ என்னும் வாசகம் நினைவுக்கு வந்தது.
என்ற ஆரூரனின் கேள்வியை இந்த வாசகத்துடன் இணை வைக்கலாம்.
’’உலகம் போற்றும் மனுஷத்துவம் முகம் குப்புற நந்திக்கடலில் வீழ்ந்துகிடந்தது’’ என்னும் அகரமுதல்வனின் ஒருவரியின் நீட்சிதான் மொத்த நூலும்.
போதமும் காணாத போதம் காட்டும் மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக தனித்துவமானவர்கள். போரென்பதை ஊடகங்களில் மட்டும் அறிந்திருக்கும் நமக்கெல்லாம் அவர்களில் ஒருவரைக்கூட சந்திக்க சாத்தியமில்லை.
அஞ்சு இன்ச் ஷெல் விழுந்ததில் தலையில் பள்ளமுண்டான ஒருவரை நாம் ஒருபோதும் பேருந்துப் பயணமொன்றில் சந்தித்திருக்க மாட்டோம்தானே? துயிலில்லத்தின் விதைகுழிகளை தயார் செய்ய ஊதியம் வேண்டாமென மறுக்குமொருவரை கற்பனையிலும் கண்டதில்லை நாம்
அது போலத்தான் நாலே நாளில் பங்கரை உருவாக்கியது சாதரணமாக உரையாடலில் பேசப்படுமொன்று என்பதயும் நாமறிந்திருக்கமாட்டோம். ஏனெனில் பங்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் இணைந்திருந்தவை.
வியட்நாம் பெரியப்பா, வீரன், செவிடன் ரத்தினம், கிபிர் அடிச்சு வீரச்சாவடையும் மேஜர் பகீரதன் , புன்னகையுடன் வன்கவர் படையினரிடம் ’’அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களுக்குத்தான் அளிக்க வேண்டும்’’ என்னும் புண்ணியன்,
இயக்கத்துக்கு தான் போகாமல் அக்காவை அனுப்பிவிட்டு குற்றவுணர்வில் கதறும் அமலன், சாக்குப்பையில் சடலமாக மூட்டை கட்டப்படும் செட்டித்தாத்தா, ஊத்தைமாமா, ‘’நான் பயப்படலே, அதிகபட்சம் சுடுவாங்கள் அதானே நடக்கும்’’ என்கிற சங்கிலி பெரியப்பா
கழுத்திலும் உள்ளிலும் நஞ்சு கொண்டிருக்கும் சந்தனன், சந்தனனின் தந்தையை சுட்ட சரித்திரன், கொக்குவில் மாமா, அம்மாவை வேசி என்று வைய்யும் தகப்பனை கன்னத்தில் அறையும் அப்பன் என்னும் பெயர்கொண்ட மகனொருவன்
கோவிலில் திருடிவிட்டு முருகனிடமே ’இத்தனை துன்பத்தை தந்த அரசாங்கத்தை தண்டிக்காத நீ என்னையும் தண்டிக்க மாட்டாய்’ என உரையாடும் சங்கன்
தீக்காயம் பட்ட கரியன், பச்சை தூஷணத்தில் மருத்துவனைக்காரர்களை வசைபாடும் கால்கள் நீக்கப்பட்ட ஒருவர், அடுத்த படுக்கையிலிருந்தபடி ’’மரணத்தினாலும் நான் மீதம் வைக்கப்படுவேன் நன்றி வணக்கம்’’ என்று பேருரையாற்றும் போராளி ஒருவர், என அகரமுதல்வன் காட்டும் மனிதர்கள் நமக்கும் உறவாகி விடுகிறார்கள். காந்தி மாமாவை கண்டதும் ’’அட, இவர் கடவுள் பிசாசு நிலத்தின் மாமா’’ என்று மனம் கூவியது
ஷெல்லடியும், கிபிர் தாக்குதலும் தோக்கு சத்தங்களும் நிறைந்து தாய்மண்ணும் முழங்காலிடும் போதும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் இருக்கின்றனர் இதில்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர், காந்தள் மலர் சூடிய கொட்டடிக்காளி, தேக்கங்காட்டு வீரபத்திரர், வறாப்பளி அம்மன்,முல்லைதீவு தேவாலயத்தின் இறைவன், கருங்காலி முனி, பொக்கணை நாக தம்பிரான் சண்டைக்கு செய்தியேதும் அனுப்பாத ஆதிசேஷன், களவவோடை அம்மன், தெல்லிப்பழை துர்க்கை என இடையிடையே அத்தனை துயரிலும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் வருகின்றனர்.காளியின் தலையிலும் ஷெல்லடிக் காயமிருக்கிறது.
’’கர்த்தாவே எதுவரைக்கும் நீங்கள் எங்களை உதாசீனபப்டுத்துவீர்? எனும் கேள்வியை புண்ணியனுடன் சேர்ந்து நாமும் ஒருகட்டத்தில் கேட்டுவிடுகிறோம்
இறந்த கணவனின் மூக்கிலும் வாயிலும் பெருகும் குருதியை தன் கர்ப்ப வயிற்றில் எடுத்தெடுத்து பூசிக்கொள்ளும் சுமதியக்கா, கொற்றவை என்னும் பெயர்கொண்ட அவளுக்கு பிறக்கும் பெண்குழந்தை
போர் வெளியேற்றிய பாஸ்பரஸினால் புற்றுநோய் உண்டாகியிருந்த, பங்கருக்குள் மயங்கிக்கிடந்தவனை எந்த பதற்றமும் இல்லாமல் காணும் திலகா
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ய்பட்டவர்களின் பத்துநாள் குழந்தை புலித்தேவனின் பசியழுகைக்கு வற்றிய முலைகளை அளித்து போக்கு காட்டுகிறாள் பேரன்னை ஒருத்தி
மீள் குடியமர்த்தப்பட்ட நிலத்தின் மண்ணை அள்ளி உடலெங்கும் பூசிக்கொண்டு, ‘’இந்த இடம் ராணுவத்துக்கு சொந்தமானது’’ என்னும் அறிவிப்பு பலகையை மிதித்தேறுகையில் கண்ணிவெடியில் உடல்சிதறி சாகும் சின்னாசி
சின்னாசியின் உடலைதிரட்டி எரிக்கையில் ’தீமூளும் தீமூளுமென’ பாடியபடி முலைதிருகி வான் பார்த்து எறிவதைபோல பாவிக்கும் பெண்கள்
கொல்லப்பட்ட அப்பாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு ’’துரோகமென்றால் என்னம்மா? என்று கேட்கும் மகனை அணைத்துக்கொண்டு ‘’மனுஷராய் பிறந்தது அதுவும் இந்த மண்ணில் பிறந்ததுதான் துரோகம்’’ என்று கதறுகிறாள் ஒர் அன்னை
வீரச்சாவடைந்து சகிக்கமுடியாத கெடுநாற்றத்துடன் பேழையில் கிடக்கிறாள் போராளி அனலி, கூந்தலை அவிழ்த்து விட்டு ஒற்றைக்காலில் நின்றபடிக்கு உணவுண்னும் மனம் பிறழ்ந்த அக்கா, ‘’இஞ்ச எல்லா பிள்ளயளும் பாரம்தான் சுமக்கினம் அது சிலுவையோ துவக்கோ கவலைப்பட ஏதுமில்லை’’ என்று சொல்லும் அம்மா,சமர்க்களத்தில் கருப்பை சிதைந்த ஈகை இவர்களுடன்’’அதியமான் உனக்கு துரோகியோ தியாகியோ அல்ல உன் தந்தை’’ என்று மகனிடம் சொல்லும் ஒரு அன்னையும் இருக்கிறாள்
’’இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிறக்கிறார்கள்’’ என்று சொல்லும், கூந்தலில் காட்டுப்பூச்சூடி காமக்களிறை உருவேற்றும் ’’ யுத்தம் ஒழிக ஒழிக ‘’ என்றபடி முயங்கும் யசோ என்று அகரமுதல்வன் இதில் காட்டும் பெண்கள் பிரத்யேகமும் விசேஷமுமானவர்கள்.
பங்கருக்குள் நேசத்துக்குரியவரின் ஆன்மாவை கண்டுகொள்ளும் மூன்று கால் வீமனும் ஒரு பாத்திரம்தான் இதில். இத்தனை துயரிலும் மாமரங்கள் பூக்கின்றன, குளத்து மீன் ருசிக்கின்றது .
தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்ட கொடுங்காலங்கள் நாம் ஒருபோதும் அறிந்திடாதவை.
அகரமுதல்வனின் மொழியில் காடுறை தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் எரியூட்டும் இரவுகளை, உக்கிரமான தாக்குதல்களின் போது காலடியில் இறைஞ்கும் சொற்களை மிதித்து நசுக்கிவிட்டு முன்னேறி ஓடுகின்ற சனங்களை, போர்க்களத்தில் பூ மாதிரி கிடக்கும் போராளி ஒருவனின் மூளையை, காற்றில் அசையும் கருங்காலி மரத்திலிருந்து உதிரும் ரத்தம் கண்டிய பெருவிரலொன்றை, ஆலமரத்தின் வேர் இடுக்கில் கிடக்கும் கால்துண்டொன்றை காணும் நெஞ்சுரமும் நமக்குண்டாகி விடுகின்றது
பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனவைகளை சொல்லிச்செல்லும் கதையோட்டத்தில் காதல் முகிழ்க்கிறது காமம் தகிக்கிறது. காதலின் வெம்மை பொங்கும் ஐந்து அத்தியாயங்களும் இருக்கின்றன இதில்.
ஃப்ளாண்டர்ஸ் பெருவெளியில் நடந்த போரில் பீரங்கி தாக்குதலில் உடல்சிதறி இறந்த உற்ற நண்பனின் உடலை திரட்டி இறப்புச் சடங்குகள் செய்த பின்னர் அங்கேயே ஒரு மருத்துவ ஊர்தியின் அருகில் அமர்ந்து லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே எழுதிய
“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்
சிலுவைகளுக்கிடையில்
காற்றில் ஆடுகின்றன பாப்பிச்செடிகள்,
என்று தொடங்கும் கவிதை மிகப்புகழ் பெற்றது, அக் கவிதைக்கு பின்னரே மாவீரர் நினைவு நாளில் செம்பட்டு பாப்பி மலர்களை அணிந்துகொள்ளும் வழக்கம் வந்தது. மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இந்த கவிதையை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கி்னறன.
அவளருளாலே அவள் தாள் வணங்கி, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் மலர்ந்திருக்கும் பிரதீபாவை புதைத்த மேட்டில் படுத்துக்கொள்ளும் காதலனை, காயங்களின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகி போகும் வரை முயங்கும் ஆதாவை, அங்கவீனமாய் போனபின்னும் புல்லாங்குழலின் கீதம் கேட்கும் நறுமுகையின் உடலை தகிக்கும் தீவெளியில் அணைத்துகொண்டு முத்தமிடும் காதலனை , உதிரும் மலரை மீண்டும் ஏந்தும் மலரினும் மெல்லிய காமத்தை, மஞ்ஞையின், யசோவின் காதலை சொல்லும் மொழியும் துயரை சொல்லிய அதே அகரமுதல்வனுடையதுதான் என்பதை வாசித்தாலே நம்ப முடியும்.
நெஞ்சுரத்தில் நிலம் விளைவிக்கும் அதிபத்தன் எனும் நண்பனுக்காக அணையாவிளக்கொன்றை ஏந்தும் அம்மாவை சொல்கிறான் ஒரு மகன். அச்சுடரை அணையாமல் பாதுகாக்கும் அவளின் உயிருருகிய வெளிச்சத்தில் வன்னியெங்கும் ஒளிபெருகுகிகிறது.
வித்துடல்கள் பொலிகின்றன என்பதை போர்ச்சூழலில் பிறந்த அகரமுதல்வன் சொல்லுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது
ஈழத்தமிழின் இனிமையையும் தாண்டி தெரியும் துயரம், துயரின் மத்தியிலும் பெருகித் தகிக்கும் காமம், இறப்பினாலும் பிரிக்க முடியாத காதல், சொந்த நிலத்தின் பேரில் போராளிகளுக்கிருக்கும் பிணைப்பு என இந்த படைப்பின் கலவை வேறெதிலும் கண்டதில்லை, அகரமுதல்வனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்!
துயரின் இருளிலும் போதமும் காணாத போதம் காட்டும் போர் முற்றும், தாய்நிலமும், வாழ்வும் மீளும் என்னும் நம்பிக்கையையும், ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு தோமா மலர்களையும் வைத்துக் கொண்டிருக்கிற ஒருவனையும் வாசிக்கையில்
தெற்குப்புறத்தில் கிளைகளெங்கும் அடர்ந்து பழுத்திருக்கும் செங்கனிகளை நம் காதலின் குறியீடாக கை நிறைய அள்ளிக்கொண்டு என் பொருட்டு வீட்டுக்கு போகிறாயா?
என்னும் வாங் வெய்யின் ஒற்றை இதயம் என்னும் தலைப்பிடப்பட்ட மற்றுமொரு கவிதை நினைவுக்கு வருகிறது.
இரண்டு வெவ்வேறு வகையான தாவரங்கள் இணைத்து உருவாக்கப்படும் கலப்புயிரி தாவரங்களுக்கான் வலிமை மிகுதியாகவே இருக்கும். அப்படித்தான் சொந்த நிலத்தின் நினைவுகளுடன் புதிய நிலத்தில் வாழும் அகரமுதல்வனின் வலிமையும், .
குமர குருபர சுவாமிகள் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பாவின் போதமும் காணாத போதம் எனும் வரி இப்படைப்பிற்கு வெகு பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது.
சொந்த நிலம் பாவித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன் என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன் செவியுள்ளோர் கேட்கட்டும் என்று சொல்லும் அகரமுதல்வன் ’’ஈழமண்ணில் தீ என உறையும் திசைகளின் ஒளிக்கதிர்களை தான் இப்படைப்பில் படர விட்டிருக்கிறேன், சனங்களின் சீவிதத்தில் ஒளி பெருகுக’’ என்கிறார்இறுதியில்.
வாசிப்பிற்குள் நான் மிக இளமையிலேயே நுழைந்துவிட்டேன் என்றாலும் அப்போது அவை திருட்டுத்தனமான வாசிப்பென்பதால் அத்தனை மகிழ்ந்து வாசித்திருக்கவில்லை அப்பாவுக்கு பெண்கள் கதைப்புத்தகம் வாசிப்பதில் பெரும் ஆட்சேபணை இருந்தது, வாரப்பத்திரிகைகளுடன் என்னையோ அக்காவையோ பார்த்துவிட்டால் வீடு இரண்டுபடும். அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரமாக படிப்பதுண்டு.
அப்போது பெரும்பாலும் காதல் கதைகள் தான் வந்துகொண்டிருந்தன என்பதும் காதல் திருமணத்தின் எல்லா பாதகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர் என்பதையும், இப்போது நினைக்கையில் அப்பாவின் அந்த மூர்க்கத்தை கொஞ்சமாகவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது
சுதந்திரமாக வாசிக்க தொடங்கியது நூலகம் சென்ற கல்லூரிக் காலங்களில் தான் அப்போதும் வீட்டுக்கு பின்னே இருந்த கல்லூரி என்பதால் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. கோவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகச் சென்று விடுதியில் தங்கியிருந்தபோது தான் ஏராளம் வாசித்தேன். என்னை முழுக்கவே வாசிப்பு அப்போது மூடிக் கொண்டிருந்தது.
பல்கலைக்கழகத்துக்கு எதிரே A-Z என்று ஒரு இரவல் புத்தக நிலையம் இருந்து. அங்கே பெண்கள் கூட்டம் அலைமோதும் ரமணிசந்திரன் அங்கேதான் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்தில் திருப்பி கொடுக்கையில் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் விலையில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பேருந்தில் பயணித்த அந்த சில வருடங்களில் எப்போதும் என்னுடன் எண்டமூரியோ, சுஜாதாவோ, பாலகுமாரனோ, லா சா ரா வோ , தி ஜாவோ உடனிருந்தார்கள். அப்போதுதான் அ முத்துலிங்கம் அவர்களையும் அறிந்து கொண்டிருந்தேன்
அ.முவின் கதைகளின் மாந்தர்கள், கதைக்கரு, நிலக்காட்சிகள் என்ற அத்தனை சுவாரஸ்யங்களைக் காட்டிலும் அவரது தூய இனிய மொழி என்னை கவர்ந்தது. இலங்கை தமிழின் மீது எனக்கு எப்போதும் தனித்த பிரியம் உண்டு. மொழியின்பத்துக்காகவேதான் நான் பிரதானமாக அவரது கதைகளை வாசித்தேன்
என் ஆய்வு நெறியாளருக்கு கோத்தகரி வனக்கல்லூரிக்கு மாற்றலானதும் இரண்டு வருடங்கள் பொள்ளாச்சி- கோவை- மேட்டுப்பாளையம்- கோத்தகிரி என்று கூடுதலாக பயணங்களும் கூடுதல் வாசிப்புமாக இருந்தேன். அட்டையிலிருந்து அட்டை வரை நிதானமாக வாசித்த அச்சமயத்தில் புத்தகங்களை யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் விசித்திரமானவைகளை குறித்து வைத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.
தனக்கு பிரியமான சிவப்பு மதுவுக்கு, மனப்பிறழ்வு நோய்க்கு தானெடுத்துக் கொள்ளும் மருந்துக்கு, இறந்த தன் மனைவிக்கு போன்ற சமர்ப்பணங்கள் இருந்தன. தனது, ஏராளமான, நெருக்கமான காதலிகளுடனான உறவைச் சொல்லிய நூலொன்று எழுதியவரின் மனைவிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது):. தன்னை முதன்முதலாக நூலகத்துக்கு அழைத்துச் சென்ற தனது அன்னைக்கு ஒரு நூல், தனக்கு பிரியமான முலாம்பழத்துக்கும் ஒருநூல் அர்ப்பணமாயிருந்தது.
2016 எனக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு முதன் முதலாக வீட்டைவிட்டு, மகன்களை பிரிந்து மற்றொரு இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்த கொந்தளிப்பான காலமது. ஒரு மாத கால துறை சார்ந்த பயிற்சியையும் அச்சமயத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக பேருந்தில் பயிற்சிக்கு செல்லுகையில் நட்பான பேராசிரியர் ஒருவர் எனக்கு அ. முவின் ‘’மகாராஜாவின் ரயில் வண்டி’’ தொகுப்பை வாசிக்கக் கொடுத்தார். நூலாகவோ அல்லது மின்னூல் வடிவிலோ அல்லாது நகலெடுத்த பக்கங்களை இணைத்து புத்தகமாக்கிய வடிவம் அது
நாள் முழுக்க நீண்ட பயிற்சியின் முடிவில் களைத்துப் போயிருந்த ஒரு நாள் இரவில் அதை பிரித்து வாசிக்கத் துவங்கினேன். மகாராஜாவின் ரயில் வண்டி என்னும் அந்த நூலை அ.மு சமர்ப்பித்திருந்தது, அவரால் உயிரிழந்த ஒரு பறவைக்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிக்கும். அவரே அது சமர்ப்பணமல்ல பிராயச்சித்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அந்த ஒரு பத்தி என்னை கசிந்துருகச் செய்துவிட்டது. இளமையின் வேகத்தில் நண்பனுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யப்போன ஒரு காரியம் விபரீதமாக முடிந்து ‘பாம்’மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பாவமும் செய்திராத அந்த கொழுத்த பறவை உயிரிழந்ததை சொல்லுகையில்:
//அந்தகாகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டில் இருந்த அத்தனை காடுகளில், அந்த காடுகளில் இருந்த அத்தனை மரங்களில், அந்த மரங்களிலிருந்த அத்தனை ஓலைகளில், அந்த வளைந்த ஓலையை தேர்வு செய்து அங்கே தன் பாட்டுக்கு உட்கார்ந்திருந்துதான். இந்த புத்தகம் ஒருபாவமும் அறியாத அந்த பறவைக்கு,பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு// என்று சொல்லி இருந்தார்.
எத்தனை வாஞ்சையும், பரிவும், கருணையும், அறியாத செயலுக்கான குற்ற உணர்வும் கலந்த ஒரு சமர்ப்பணம்? இந்தவரிகளில் காணமுடிந்த அந்த மனதின் ஈரம் என்னால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் அவ்விரவு முழுவதும் உறங்காமல், உறக்கம் வராமல் ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் வாசித்து முடித்தேன். அத்தொகுப்பின் 75 கதைகளின் ஒவ்வொரு வரியும் அ.முவின் அந்த கனிவில் தோய்ந்தவைகளாகவே இருந்தன.
அப்போது எனக்கிருந்த பல சிக்கல்களிலிருந்து நான் எளிதில் அந்த தூய அன்பின் கையைப்பிடித்துக் கொண்டு கடந்தும் வந்து விட்டிருந்தேன். இத்தனை நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருக்கையில் நான் அஞ்சவும் நம்பிக்கையிழக்கவும் தேவையில்லை என்று ப் மனமார நம்பினேன்
’’ஓர் அவமானத்தை ஓர் இளவெயில் போக்க முடியுமானால், ஓர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால், ஒரு நோயை பூவின் நறுமணத்தால் சமன் செய்து கொள்ள முடியுமானால், வாழ்க்கையில் அஞ்சக்கூடியதாக ஏதுமில்லை..!!என்று சொல்லி இருப்பார் ஜெயமோகன்
அப்படி என் முன்பாக ஒரு பெரிய மலையைப் போல நின்றிருந்து அச்சமூட்டிய ஒரு சிக்கலை அ. முவின் அந்த கனிவினால் திரைச்சீலையை தள்ளி விலக்குவதுபோல் எளிதில் கடந்து வந்துவிட்டேன். உலகம் அப்படியொன்றும் அன்பின்மையால் வரண்டு விடவில்லை என்று அந்த சமர்ப்பணம் எனக்கு சொல்லியது.
அவரின் பல படைப்புக்களை நான் வாசித்திருந்தும் இந்த குறிப்பிட்ட தொகுப்பு என் தனித்த பிரியத்துக்குரியதானது.
கோடைமழையில் அவரது சொந்த ஊரான கொக்குவில்லிலிருந்து புறப்படும் மஹாராஜாவின் ரயில் வண்டி ’எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலையில் நிற்கும்’ வரை நான் வண்டியை விட்டு இறங்கவேயில்லை.
அடிக்கடி இடையில் சுருட்டு, புகையிலை, சிகரெட் வாடை வந்து கொண்டிருந்தது, மழை பெய்தது, வெயிலடித்தது, புழுதி பறந்தது அதிக ரிக்டர் அளவிலான பூகம்பம் வந்தது, போர் தொடர்ந்தது, ஏதேதோ ஒழுங்கைகள் வழியாக பயணம் ஆப்பிரிக்காவிலும் கொக்குவில்லிலும் சோமாலியாவிலும், நைரோபியிலும் தொடர்ந்தது. இடையே யாழ்தேவி கணக்காய் நேரத்துக்கு கடந்து சென்றது. கச்சான் காற்றும் சோளக்காற்றுகளும் அடித்தன
இரண்டு பூ பூக்கும் ஒரே மரமென்னவென்னும் விடுகதையும் போடுகிறார் அ.மு.
நல்ல பசி நேரத்தில் மாங்காய் சம்பலும் ஆப்பிரிக்காவின் வ்வூவ்வூ களியும் மணமடித்து அவற்றை உண்ணவேண்டும் என்னும் ஆவலை உருவாக்கியது. ஆட்டுச்செவி பருவத்தில் இளசாக உடையாமல் இருந்த தேங்காயின் வழுக்காய் சச்சதுரமாக வெட்டிபோடப்பட்டு செய்த குழம்பும், கணவாயுடன் ஒரு சொட்டு மையும் முருங்கைப்பட்டையும் போட்டு வேகவைத்த மணத்தையெல்லம் கூட சமாளித்துவிடலாம், ஆனால் அந்த ஆட்டுக்கறி பிரட்டல் இருக்கிறதே! வாய்நீர் ஊறாமல் அதை கடந்து வந்திருக்கும் அசைவ உணவுக்காரர்கள் இருக்கவே முடியாது.
கோலாகலமான மஞ்சவனப்பதி தேர் திருவிழாவை மட்டுமல்ல, மக்களை மக்கள் அடித்துக் கொள்ளும் இனவெறியில் சிந்தும் கண்ணீர்த்துளைகளையும் ரத்தத்தையும் கூட காண நேர்ந்தது
இந்த ரயில் வண்டி பிரயாணத்தில் என்னை கவர்ந்தது அல்லது என்னை பேரலையென அடித்துக் கொண்டு சென்றது உடன் வந்த பெண்மைப் பெருக்குத்தான். எத்தனை எத்தனை வகையில் பெண்கள்! துணிச்சல்காரிகளும், துயரமே உருவானவர்களும், வடிவானவர்களும், அன்பான அக்காக்களும், பச்சிளம் குழந்தைகளும், சிறுமிகளும், சிறு மகள்களும், காதலிகளும் அன்னைகளும், மனைவிகளுமாக வரும் அவர்களுக்கெல்லாம்தான் எத்தனை வகையில் இடர்பாடுகள், சிக்கல்கள் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் போல அவர்களின் இயல்புகளின் வண்ணக்கோலம் கண்முன்னே விரிந்தது
மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு, இன்னொருவனை மணமுடித்த சாந்தினி, காதல் துயரை உவந்து ஏற்றுக்கொள்ளும் அனுலா, மனதிற்குள் ரகசியமாக ’கொண’ மாமாவை காதலிக்கும் ஒரு அக்கா, சோதிநாதன் மாஸ்ரரை தவிக்க வைக்கும், பல்லி வயிற்றில் முட்டை தெரிவது போல விரல்களில் ஓடும் ரத்தம் கூட தெரியும் நிறத்திலிருக்கும் இளமை பொங்கும் அலமேலு, தண்ணீருக்காக காதலை மறக்கும் சோமாலியாவின் மைமூன், திறமான நிச்சயத்துடன் வருவேனென்று சொன்னவனுக்காக காத்திருந்து மட்கும் ஹொன்ஸாகூல், என ஒவ்வொரு நிறுத்தத்திலும் காதல் கொண்ட, காதல் கொள்ள வைத்த பெண்கள் பயணத்தில் இணைகிறார்கள்
துயரமே உருவான பெண்கள் பலரையும் காணமுடிகின்றது பிள்ளைப்பாசத்தில் கட்டுண்ட பார்வதி, இனக்கலவரத்தில் உயிர்பிழைக்க ஓடிவருகையில் இறந்துபோய் புதைக்கவும் இல்லமால் எரிக்கவும் இல்லாமல் அப்படியே வீதியோரத்தில் விடப்பட்ட தங்தம், சிறு ஜாடையில் அவளைப்போலவே இருக்கும் அவள் மருமகள். பயணச்சீட்டுக்களாக மாறிவிட்ட வளையல்கள் இல்லாத மூளிக்கைகளை அசைத்து பிளேனில் போகும் மகனுக்கு விடைகொடுக்கும் ஒரு அன்னை,
எங்கோ நாதியற்று கிடக்கும் மகனுக்கு வயலட் கலர் பென்சிலை நாக்கில் தொட்டுத்தொட்டு ’’இப்போதெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய்கள் விழுவதில்லை, வானத்திலிருந்து மழை விழுவதில்லை ஆகாயத்திலிருந்து குண்டுகள் தான் விழுகின்றன’’ என்று கடிதம் எழுதும் அன்னையொருத்தியின் சித்திரமும், வீட்டை துடைத்துப் பெருக்கி, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல வாஞ்சையுடன் பாத்திரம் அலம்பி, துணிகளை துவைத்து அப்படியும் நேரம் எஞ்சி இருக்குமானால் அடுப்புக்கரி அணைந்த இடத்தில் படுத்துக்கொள்ளும் பதிமூன்றே வயதான வேலைக்கர சிறுமி பொன்னியையும், நினைத்தாலே கிலி பிடிக்கும்படியாக ஒரு பிறந்த நாள் பரிசைப்பெறும் பாரதிராஜா பார்த்தால் பொறாமைப்படும் படியாக ஒரு நீள வெள்ளைத் துகில் உடையை வைத்திருக்கும் பத்மாவதியும் மனதை கனக்க செய்து விடுகிறார்கள். ரயில் பெட்டியிலிருந்து நான் இறங்கி இத்தனை காலமாகியும். அந்த கனம் இன்னும் நெஞ்சில் தான் அழுத்திக் கொண்டிருக்கிறது
நகை சுற்றிவரும் மெல்லியதாள் போன்ற காகிதத்தில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அந்நிய தேசத்திலிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதும் ஒரு பாவப்பட்ட மனைவி, பாயை விரித்துப்போட்டு இரு பக்கத்திலும் இரண்டிரண்டாக படுத்திருக்கும் பிள்ளைகளுக்கு சரிசமமாக தன்னை பிரித்துக் கொடுத்து நடுவாக படுத்துக்கொள்ளுமொருத்தி, தனக்கு விதிக்கப்பட்ட வறுமையை ரகஸ்யமாக அனுபவிக்க விரும்பும் பாத்திமா, நாலு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு போகும் தொக்கையான ஒரு மனுஷி என இவர்களின் துயரத்தில் ரயில் வண்டி தளும்புகிறது.
குளிருக்கென அடைத்த வாத்துச்சிறகுகள் பிய்ந்து வெளியே வந்திருக்கும் மோசமான காலணிகளுடன் தினமும் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும் இரண்டு கிழமைகளுக்கு முன்னர் மோசம் போய் விட்ட பரமசோதியின் அக்கா மேல்கோடடை மறந்து வைத்துவிட்டுபோகிறாள்.
கஷ்டப்பாடுகள் கீழ்மையின் எல்லை வரைக்கும் துரத்தி வந்ததில் சொந்த மகளிடமே வட்டிக்கு காசுகொடுக்க துணியும் வெயிலில் உலர்த்தியது போலிருக்கும் சின்னாயிக்கிழவியும் ரயிலில் இருந்தாள்.
தனியாக எடுத்து வைத்த சாமி படையல் போல சிரிக்கிற இரண்டே இரண்டு பாவாடைகளும் அவையிரண்டுக்குமாக சேர்த்து ஒரே ஒரு நாடாவையும் வைத்திருக்கும், மேலுதட்டில் வெண்டைக்காய் மயிர்போல ரோமம் கொண்டிருக்கும் அம்மா ஒருத்தி கண்களை நிறைக்கிறாள் ,மூன்றாவது அம்மாவின் மகளான, மூக்குத்தியும் முகப்பருவும் போட்டிருந்த , ஒரே நாள் மூளைக்காய்ச்சலில் செத்துப்போன அழகு அக்காவை மறக்கமுடியுமா?
துயரமே உருவானவர்களுக்கிடையில் துணிச்சல்காரிகளும் புதுமைப் பெண்களும் கூட இருந்தார்கள் ஒரு காவாலியின் அசிங்கமான செய்கையை பார்த்து திகைத்து பயந்து போகாமல் கண்களை நேராகப் பார்த்து ’’அடுத்த ஷோ எப்போ வரும். என் தங்கையும் பார்க்கனும்’’ என்ற ஒரு துணிச்சல்காரி, .ஒப்பாரிப்பாட்டிலும் வம்புச்சண்டை வளர்க்கும் உறவுப் பெண்கள், வீட்டுவேலைக்கு வந்து எஜமானியாகிவிடும் ஆப்பிரிக்க கருப்பழகி அமீனாத்து, தமிழ் படங்களில் ’’ஏன் கேர்ல்ஸ் எல்லாம் குனிஞ்ச படியே போகினம்?’’என்று கேட்கும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி.
ஆங்கிலம், ரஸ்யன், பிரெஞ்சு எல்லாம் சரளமாக பேசும், பச்சை கண்கொண்ட மூச்சை நிறுத்தும் அழகில்லாவிட்டாலும் வசீகரமாயிருந்த, ஒரு பார்ட்டியின் முடிவில் இரு மார்புகளையும் கழட்டி வீசியெறியும் அனா என்கிற அன்னலட்சுமி, இவர்களுடன் நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், துணிவும் சாதுர்யமும் கொண்ட, கற்பெனும் புனிதப்போர்வயால் மூச்சுமுட்டும்படி போர்த்தப்படாத பல ஆப்பிரிக்க பெண்களும் இருக்கிறார்கள்.
ஸ்வென்காவின் 17 பெண் கருச்சிசுக்களில் ஒன்றாக காத்திருந்த காமாட்சி இனி வரப்போகும் காலங்களின் இனவிருத்தி எப்படி இருக்கும் என்று கோடு காட்டி அச்சமூட்டினாள்
பேரம் படியாத போது அலறும் ’யூ லவ் மீ’’ மீன்காரியும் அவள் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் கரிக்குருவிக் குழந்தையையும் இந்த பிரயாணத்திலல்லாது வேறெங்காவது காணக்கிடைக்குமா என்ன?
பலவிதமான மனைவிமார்களையும் பார்க்கமுடிந்தது இந்த ரயில் பிரயாணத்தில்.
வெளிநாட்டுக்கு போகும் கணவனுக்கென்று பார்த்துப் பார்த்து சூட்கேஸில் சாமான்கள் அடுக்கும் ’’வாங்கும் நோய்’’ கொண்டிருந்த பட்டியல் போடும் மனைவி, கொஸ்டோரிக்கன் போலவே இருந்த பிடிவாதக்காரியும் சீனனிடம் மார்பில் டிராகனை பச்சை குத்திக்கொண்டவளுமான தங்கராசாவின் மனைவி பத்மாவதி,
தனது மூன்று மாத குழந்தைக்கு முலைப்பாலை கறந்து போத்தல்களிலடைத்து டேகேரில் குழந்தையுடன் கொடுத்துவிட்டு வரும் ஜமைக்காவின் எஸ்தர், உள்ளத்தின் குரலை கேட்காமல், உடலின் கட்டளைகளை மட்டும் செவிமடுத்து மருகும் கமலி, பணிவிடை செய்யும் கணவன் மீதுள்ள பிரேமையை சந்தேகமாக மாற்றிக்கொண்ட கமலா, உருண்டை வீட்டில் பிரியமில்லாததால் கணவன் மீது மயிர் வளர்வது போல கண்ணுக்கு தெரியாத விரோதத்தை வளர்க்கும் மனைவி, இவர்களின் துக்கம் வாசிப்பிற்கு பின்னர் என் துக்கமாகிவிட்டிருந்தது.
ஆப்பிரிக்க யானைத்தந்தத்தின் மீது எத்தனைதான் ஆசையிருந்தும் பேருயிரொன்று அதன்பொருட்டு அழிந்ததை அறிந்ததும் அன்னை மனம் துடிக்க கிடைத்த தந்தத்தை ஏறெடுத்தும் பார்க்கமல் ஊர் திரும்பு இன்னொருத்தியும் இருந்தாள்
குடியுரிமைக்கு பிறகே தாய்மை என முடிவு செய்து பெண்மையையும் தாய்மையையும் தவறவிடும் சங்கீதா மனம் கனிய வயதும் காலமும் தடையில்லை என் உணர்கிறாள், அதற்கு சாட்சியாக அவளருகில் கிடக்கிறது பெண்குழந்தை அய்சாத்து
இத்தனை பேருடன் பச்சிளம் குழந்தைகளும் பருவப்பெண்களும் சிறுமிகளுமாக மகள்களும் நிறைய பேர் இருந்தனர். ரயிலில் 75 பெட்டிகளல்லவா?
தங்கைக்கு பிறகு தாமதமாக மலர்ந்த ராசாத்தி, தேநீர் போல கோபத்தில் சிவந்த , தூக்கி வைத்துக் கொள்ள யாருமில்லாமல் தானாகவே தூக்கி வைத்துக் கொள்ளும் 14 வயது பள்ளி மாணவியொருத்தி, ஒழுங்காய் சடை நுனியில் நீல ரிப்பன் கட்டிக்கொண்டு கிலுகிலுவென்று சிரித்துக்கொண்டு பள்ளி செல்லும் சிறுமிகள், பாய்பிரண்டின் பிறந்த நாளை மறந்த அப்பாவை கோபித்துக்கொள்ளும், அவருடனான தன் இளமைப்பருவத்தின் அபூர்வ தருணங்களையெல்லாம் மறந்தே மறந்து விட்ட மகளொருத்தி,
ராட்சத்தனமான கருப்பு புழு போல் நெளியும் மூன்று மாதமேயான தில்லைநாயகி, விருந்தாளிகளுக்கு ஆட்டுப்பால் கொடுத்து உபசரிக்கும் வீட்டைச்சேர்ந்த, கண் இமைகளில் வைரத்துண்டுகள் ஒட்டியிருக்குமோர் சிறுமி, ஐஸ்கிரீம் கடையை கண்டால் வெட்டுக்கிளியை கண்ட நாய் போல் அசைய மறுக்கும் ஒரு இளமகள், இவர்களுடன் வரும் நீளமான கண்கள், நீளமான விரல்கள் கொண்ட அம்மாவிற்கு பிரசவம் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண். முதலில் தெரிந்த கால்களை பிடித்து இழுத்ததால் நீளமான கால்களும் கொண்ட டோல்ரஸை சொல்லுகையில் ‘’தின்னவேண்டும் என்று பட்டது’’ என்கிரார் அ.மு. எனக்கும் அவளைப்பார்க்கையில் அப்படித்தான் இருந்தது.
பஞ்சலோகத்தில் செய்ததுபோல் ஒரு 4 வயது மகளும் இருக்கிறாள். அள்ளியெடுத்து மடியிலிருந்திக்கொள்ள மனம் விழைந்த நிமோனியாவால் மூச்சுவிட சிரமப்படும் லவங்கிக்குட்டி, ஏன் தனக்கு சூரிய கிரகணம் பிடிக்காது என்பதை சொல்லாமலே மறைந்த பஸ்மினா, இடுப்பில் குடத்திலேயே அடித்த அப்பனுக்கு சோறாக்கிப் போடும் பூரணி மற்றும் தன் பெரியப்பனை கொழுத்த ஆடாக்கி, கொள்ளியால் சுடும் விஜயாவின் மகளான குண்டுப்பெண் ஆகியோருமுண்டு.(பல சினிமாக்களில் போடுவார்களே இருதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் அதை பார்க்க வேண்டாமென்று, அப்படி ,மனைவி மக்களை பிரிந்து நினைவில் வாழும் பலவற்றுடன் போராடிக்கொண்டு பொருள் வயிற்றின் நீங்கியிருப்பவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாமென்று டிஸ்க்ளெய்மெர் போடவேணுமென்கிற அளவுக்கு மனதை கலைக்கும் கதையது)
மிக அழகான பெண்ணாக வருவதற்கு திட்டம் போட்டிருந்த டொன் தம்பதினரின் சிறு மகளுடன், சிறிய சிவப்பு உருண்டை வாயுடன் இருக்கும் ஒரு குட்டியும், பாஸ்மதி அரிசியைப்போல நாலே நாலு பற்களைக் கொண்டிருக்கும், திராட்சைகளை சுவைக்கும், ஜெயமோகனின் ’’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’’ புத்தகத்தை மட்டும் சரியாய் தூக்கிக்கொண்டு ஓடிப் போகும் 26 இன்ச் உசரமான வாசகி i think அப்சரா குட்டியும் வருகிறார்கள்.
நான் கண்னை விரித்துக்கொண்டு பார்த்த சுவாரஸ்யமான பல பெண்களும் பயணத்தில் உண்டு. பிரான்ஸிஸ் தேவசகாயத்தின் சவக்குழியை பிரான்ஸிஸ் தேவ சகாயத்திடமே சுட்டிக்காட்டும் செங்கூந்தலும் வெள்ளுடையுமாக கனவில் வருமொருத்தி. ரம்புட்டான் பழம் போல சிவந்த உதடுகளுடன் சரசக்கா, நட்ட நடு நிசியில் வாடிக்கையாளரிடம் இனிக்க இனிக்க பேசும் 17 வருடமும் ஒன்பது மாதமும் வயதான ஸேர்லி, ஸ்கர்ட் உடுத்திய பெண் படம் வரைந்த கதவு கொண்ட கழிப்பறைக்குள் தன் பணிச்சூழலின் அழுத்தமனைத்தும் மறந்து உற்சாகமாகிவிடும் மீனுக்குட்டி.
ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலியின் உராய்வுக்கும் பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லு வைத்த கட்டிலின் கரகர ஓசைக்கும் நடுவெ பொருத்தமில்லாத இனிமையுடன் ஒலிக்கும் குரலைக்கொண்ட யவனம் நிறைந்த, தேனிக் கூட்டம் போல சிவந்த கூந்தல் கொண்டிருக்கும் வெளிநாட்டு டாக்டர் பெண்ணொருத்தியும் உண்டு.
புன்னகையை ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டி வைத்திருக்கும் வரவேற்பாளினியும், கந்த சஷ்டி விரதத்திற்கு இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிடுகிற, அந்த பழம் ஒரு முழு பலாப்பழம் என்பதை மறைத்துவிடும் அன்னமக்காவும் புன்னகைக்க வைக்கிறார்கள்.
மலர்வதற்கு இரண்டு நாள் இருக்கும் மல்லிகை மொட்டுக்களை தலையில் சூடிக்கொள்ளும், தன் வனப்பை தொற்று வியாதி போல பரப்பிவிடும் மகேஸ்வரி, தலைமயிர் அவ்வளவு குவியலாக அவ்வளவு பொன்னிறமாக இருந்த ஸோரா , ட்ராஃபிக் சிக்னலைப்போல மஞ்சள் முகமும் ரத்தச் சிவப்பு உதடுகளும், பச்சைக்கீற்று கண்களுமாக ஒரு சீனப்பெண் என்று எத்தனை எத்தனை வகைப்பெண்கள்
’ம்வாங்கியை’ களவு செய்யத்தூண்டும் அழகுடன் இருந்த எமிலி, போறனையில் இருந்து இறக்கிய பாண் போல மொரமொரவென்று இளஞ்சூடும், மணமுமாக இருக்கும் துப்புரவுக்காரியொருத்தி, ஜெனிஃபர் என்ற பெயருள்ள நாயுடன் வரும் பெயரிடப்படாத ஒரு அழகி , பச்சைப்பாவாடையும் பட்டுரிப்பனுமாக, உப்பு என்று சொல்வதுபோல் உதடுகளை எப்போதும் குவித்து வைத்திருக்கும் விசாலமான கண்கள் கொண்ட விசாலாட்சி, தானாக கனிந்த அறுத்த, கொழும்பான் மாம்பழம் போலவும், அரிய வண்ணத்துப்பூச்சியை போலவும் இருப்பவளான, வேகமான யாமினி, கிட்டார் வாசிக்கிற பூனைக்குட்டிக்கு அரிஸ்டாட்டில் என பெயர் வைத்திருந்த ரோஸ்லின், மர அலங்காரியாக வேலை செய்யும் அமண்டா ஆகியோரும் ரயிலை அவர்களின் பேரழகாலும் ததும்பும் இளமையாலும் நிறைக்கிறார்கள்
ஒரே கரண்ட் கம்பியில் வேலை செய்யும் பல்புகள் போல மூன்று உடலும் ஓருயிருமாக இருக்கும் மூன்று ஸ்நேகிதிகள் அவர்களில் ஒருத்தி அமெரிக்காவின் நட்சத்திர உணவகத்தில் தட்டில் வைக்கபட்ட முட்டையை பார்த்துக்கொண்டிருக்கையில் காதலனால் முத்தமிடப்படும் மித் என்கிற மைதிலி,
மண்ணெண்ணெய் வாடை அடிக்கும், மூக்குத்தியில் அழுக்கு சேர்ந்திருக்கும் கருத்த மாமி, நாவல் பழம் பொறுக்குகையில் கதாநாயக சிறுவனுக்கு ராமு மாட்டுடன் அறிமுகமாகும் வத்ஸலா, உடும்புப்பிடி போல குணம் கொண்ட சரசக்கா ஆகியோருடன் வரலாற்றிலிருந்து எழுந்துவந்து இணைந்து கொள்கிறார்கள் பொத்தா தேவியும் குந்தியும். ரோட்டின் கீழே இருந்து வென்ற் வழியாக அடிக்கும் வெப்பக்காற்றில் மேலே எழும்பி பறக்கும் இடையாடையை இரண்டு கைகளால் அமத்திப் பிடிக்கும் மர்லின் மன்றோ கூட பிரயாணத்தில் இருக்கிறாள்
சிரிப்பால் வீட்டை நிறைக்கிற, அண்ணாந்து தண்ணீர் குடிக்கையில் சிந்தும் தண்ணீர் கழுத்துக்குழியில் தங்கிவிடும் அளவுக்கு ஒல்லியான, இன்னும் நிரப்பப்படாத பல அங்கங்களைக் கொண்ட, காதுவரை நீண்ட ஓயாது வேலை செய்யும் கண்களைக் கொண்ட கனகவல்லி, வெங்காய சருகு போல மெல்லிய சருமம் கொண்ட ஸ்வீடனின் மார்த்தா, மறைக்கப்படாத மார்பகங்களுடன் மீன்களும் துள்ள, கார்களை துரத்தி வரும் மீன்காரப்பெண்கள், பிறகு நினைத்துப் பார்க்கையில் ஒரு சொற்பொழிவு போல தோன்றும்படியாக இடுப்பை வெட்டி காண்பித்த ஆப்பிரிக்க அழகியென அநேகம்பேர் வருகிறார்கள்
கிராமத்து மனுஷியும் நான்கு ஆதார சுவைகளை கலந்து பத்தாயிரம் சுவைகளை கொண்ட உணவுகளையும், தோசையில் விழும் துளைகள் கூட எண்ணினால் ஒரே மாதிரியாக இருக்கும்படி சமைப்பவளுமான ஒரு அம்மாவும், அவரை சமையலறைக்குள்ளேயே நுழையவிடாத, சமையல் வகுப்புக்களுக்கு போய் கற்றுக்கொண்ட சமையலை செய்து பார்க்கும் அவரது மருமகளும் கூட உண்டு.
மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா பயணங்களிலும் நான் தவறவிடாமல் ரசித்துப் பார்க்கக்கூடிய விதம் விதமான மரங்களும் மலர்களும் கனிகளும் இந்தப் பயணத்திலும் காணக்கிடைத்தன. அனிச்சம்பூ ,ஓக், அகேஸியா, கிளுவை மரங்களுடன், சதி செய்யும் முசுட்டை மரங்கள், கணப்பு அடுப்பில் புகையின்றி சிறிது மணத்துடன் எரியும் விறகைத் தரும் பேர்ச் மரங்களை எல்லாம் ரயில் கடந்து சென்றது. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும் ’மொற’ மரமொன்றையும் கண்டேன்
பயணத்தில் எதிர்பாராமல் திடீரென தலை காட்டும் கவிதைகளைப் போல சின்னப்பெண்கள் தங்களை கடக்குமுன்பாக அனைத்துப் பூக்களையும் அவர்கள் முன் கொட்டும் மரங்களும், மஞ்சளாக வழவழப்பாக பார்க்க லட்சணமாக இருக்கும் தண்ணீர் பாங்கான இடங்களில் வளரும் ஃபீவர் மரமும், மரெண்டா கீரைகளும், நிலம் தெரியமல் பூக்களை சொரிந்திருக்கும் ஜகரண்டா மரங்களையும் காண முடிந்தது. கதிரைகள் செய்யப்படும் காஷ்மீரி வால்நட் மரமும், வானத்தில் பறந்து வந்த வாழையிலைகளும் ஆழ்குளிரிலிருந்து எழுப்பிய மாவிலைகளையும் கூட பார்த்தேன். தோறாஇலையும் குயினைன் மரப்பட்டைகளும் இருக்கின்றன. எங்கோ கமகமவென்று இலுப்பைப்பூ மணமுமடித்தது
பேயின் கைவிரல்களைப்போல் பரவி வளரும் ஐவி செடியும் வழியில் இருந்தது. இதுநாள் வரை மணிப்ளாண்ட் என்றே சொல்லியும் கேட்டும் வாசித்தும் பழக்கமாயிருந்த , முதன் முதலில் அ. மு வால் மணிச்செடி என்று அழைக்கபட்ட அந்த செடியை கண்டதும் அத்தனை பிரியம் உண்டாகி விட்டிருந்தது. பயணத்தில் இப்படி பல புதிய அழகிய சொற்கள் இடையிடையே வந்து எட்டி பார்த்து சந்தோஷப்படுத்தும்.
அடடா பட்சிகள் உச்சியில் அமர்ந்திருக்கும் மிமோசா விருட்சங்கள்.முதலில் இலைகளை கொட்டும் பேர்ச் மரமும் இலைகளை கொட்டவே கொட்டாத மேப்பிள் மரமும், தோட்டத்தின் சிவப்பு வத்தகப்பழமரம், அக்லனீமா செடிகளும், தோலுரித்து வைத்த தோடம்பழங்களுமாய் பசுமைப்பெருக்கும் பயணத்தில் கூடவே வந்தது
நம்மூர் தீக்கொன்றை மரத்தை அவர் தீச்சுவாலை மரம் என்கையில் அதற்கொரு ஆப்பிரிக்கத்தனம் வந்துவிட்டிருந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பரமசோதியின் சாமான்களுடன் நிற்கிறது ஒரு வாகைமரம்
இடிமுழக்க துண்டுகளை கட்டி இழுப்பது போல் சத்தம் போடும் ஒரு மோட்டர் சைக்கிளும், கோபத்துடன் உறுமி எழுந்த சிங்கம் போல ஒரு ஓஸ்டின் காரும் ரயிலை கடந்து சென்றன. வழியில் மகரந்த துள்களை பரப்பி வைத்ததுபோல பரவிக்கிடந்த மணலைப்பார்க்க முடிந்தது. பிரயாணத்தின் ஓரிரவில் குழைத்து வைத்ததுபோல் கலங்கலாக தெரிந்தான் சந்திரன். யாரோ ராட்சஷன் அடித்து வீழ்த்தியது போல சிவந்திருக்கும் ஆகாயத்தையும் அந்தியொன்றில் கடந்தது ரயில்.
பிரயாணத்தில் கந்தபுராணமும், சிவபுராணமும்,சிலப்பதிகாரமும், ராமாயணமும் மகாபாரதமும் கூட கேட்கிறது. துரியோதனன் மனதை கெடுக்கிறது ஒரு சடைக்கார சிறுக்கி நாய்
’’அம்மணத்துகு கோமணம் மேல்’’ போன்ற முதுமொழிகள் இடையிடையே வந்து விழுகின்றன. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கமாக வந்து அணில்கள் பொறுக்கிச் சாப்பிடுகின்றன. அந்த செகரட்டரி பறவை தான் என்ன வினோதம், அப்படியொன்றை கேள்விப்பட்டது கூட இல்லையே!
அதைப்போலவே சாளரம் 2000 என்பது முதலில் என்னவென்று மனசில் தைக்கவே இல்லை அத்துடன் சேர்ந்து நின்ற பில்கேட்ஸை பார்த்ததும்தான் அது விண்டோஸ் 2000 என்பது உரைத்தது . Veloy don என்கிற வேலாயுதமும் வருகிறார்.
சாளரம் உள்ள கடித உறையும் அப்படித்தான் வியப்பூட்டிய மற்றொன்று. அப்படியான கடித உறையை இதுவரை பலநூறு பயன்படுத்தி இருப்பேன் அதை கவனித்து இப்படி ஒரு பெயர் இருக்கலாமென்று ஒருபோதும் எண்ணியதில்லையே!
அ.முவுக்கே உரித்தான அங்கதங்களும் வேடிக்கையான மனிதர்களும் குறைவில்லாமல் உண்டு குறிப்பாக அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருப்பவைகள்.(கடைசி மூச்சில் இருந்த பேட்டரி) நாலு பியருக்கு மேல் நாப்பது வாட்டில் மூளை வேலை செய்கையில் மட்டும் அரசியல் பேசும் தம்பிராசா, சிவராத்திரி கந்த சஷ்டியையெல்லாம் தீவிரமாக சிந்திக்கும் மாரியோ இவர்களுடன் இடது கைப்பழக்கம் கொண்ட ஒரு கரப்பான் பூச்சியும் இருக்கிறது, ஆம் நிஜம்தான்.
கனடிய அரசுக்கு அனுப்பும் குரல் பதிவில் வசந்தம் வந்து, தோட்டத்தில் முதல் பூ பூத்ததையும், பெண்ணின் சடைபோல் பின்னப்பட்ட பிரெஞ்ச் ரொட்டியை பிய்த்து தின்றதையும், தட்டில் கிடந்தபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வதக்கபட்ட பெரிய மீனை உண்ணமால் விட்டதையும் சொல்லும் ஒருவர் எத்தனை சுவாரஸ்யமான மனிதராயிருப்பார்?
மைமலான மழைநாளில் காதலிக்கு முதல் முத்தம் பதிக்கும் காதலனும் ஸ்ட்ராபெரி ஜாம் வாசனையுடன் கொட்டாவி விடும் மனிதர்களையும் போல அ.மு அவர் வாழ்க்கையில் சந்தித்த, அறிந்துகொண்ட சுவாரஸ்யமானவர்களை உலகில் வேறு யாருமே சந்தித்திருக்க மாட்டார்கள்
ஒரு பிரயாணம் இப்படி ரசிக்கத்த விஷயங்களுடன் மட்டும் முடிந்து விடாதில்லையா?
தோலைச்சீவுகையில் பூரணமாக ஒத்துழைப்பு கொடுத்து இறைச்சி வெட்டப்படுகையிலும் கண்களை அசைத்துக்கொண்டே இருந்த உடும்பையும், அந்நியமான ஊருக்கு வந்து அடிபட்டு செத்துப் போகிற பறவையொன்றையும், நிலவறையில் விறைத்துக்கிடப்பவரையும் அ.மு சொல்லிக்கேட்கையில் என்னையறியாமல் கண் நிறைந்து வழிந்தது.
தில்லை அம்பல பிள்ளையார் கோவில் கதையை கேட்டு முடித்ததும். கல் மனசுக்காரர் என்று அ. முவை மனதில் மரியாதையுடன் கடிந்து கொண்டேன்.
இத்தனை சுவாரஸ்யமான பிரயாணமொன்றை இதுவரையிலும் நான் செய்ததில்லை இனிமேலும் செய்யப்போவதுமில்லை.. அ.மு இத்தொகுப்பில் உள்ளதை பெரிதாக்கவில்லை, இல்லாததை இட்டுக்கட்டவில்லை, ஏன் உள்ளது உள்ளபடிகூட சொல்லவில்லை நம்மை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் கதைகளின் நடுவில் நிறுத்தி விடுகிறார். எல்லாக்கதைகளும் நம்மைச்சுற்றித்தான் நடக்கிறது நாம் கதைகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கன்னத்து உப்பலில் கூர்பார்க்கப்படும் கல்லுப்பென்சிலும், பென்னம் பெரிய காரில் பொம்பளை பார்க்க வருபவர்களுமாக நிறைந்திருக்கும் கதைத்தொகுப்பை அ. முவல்லாது வேறு யாரால் அளிக்க முடியும்?
‘திரு அ முத்துலிங்கம் அவர்கள் இன்னுமோர் நூற்றாண்டு நல்ல தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கட்டும். அவருக்கு என் வணக்கங்கள்
அன்புடன்
லோகமாதேவி.
-விஜயா பதிப்பகம் 2022ல் அ மு அவர்களுக்காக கொண்டு வந்த சிறப்பி நூலில் வெளியான எனது கட்டுரை
அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.
நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த ஜெ அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றார். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம் கைப்பையை கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். ஜெ திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான். (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்
அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.
அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.
இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.
ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது. ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.
உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .
மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.
முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.
ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.
உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் என்னையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.
பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள். மறக்க முடியாத பயணம் எனக்கும்.
அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள் கண்ணீர் விடச் செய்தன.
குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை, காதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில் நிழலுருவாக தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி ஜெ தெரிந்தார்.
மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் அந்த சித்திரம்தான் கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.
மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.
கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி
இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.
அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.
நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த ஜெ அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றார். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம் கைப்பையை கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். ஜெ திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான். (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்
அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.
அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.
இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.
ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது. ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.
உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .
மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.
முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.
ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.
உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் என்னையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.
பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள். மறக்க முடியாத பயணம் எனக்கும்.
அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள் கண்ணீர் விடச் செய்தன.
குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை, காதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில் நிழலுருவாக தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி ஜெ தெரிந்தார்.
மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் அந்த சித்திரம்தான் கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.
மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.
கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி
இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.
2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான் முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு முன்பு அவரைச் சந்தித்ததில்லை. ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம் என்ற கறாரான திருத்தல்கள், பொருத்தமான இடங்களில் சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில் குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது. அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.
அவருக்கு என்னை கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தூரன் விருது விழாவிலேயே தெரிந்திருக்கிறது
முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை, பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.
பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.
கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில் அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.
சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின் விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது
அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்
முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.
போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும் அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும் பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும், மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது ஆதிரனின் கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்
ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி
போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.
ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.
பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை, வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்
வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.
போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும், கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.
பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன் எழுதியிருக்க முடியும். யுத்தத்தின் தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி
தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.
அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.
அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று
உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை
வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு, உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும், சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும், பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.
கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும், அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும், ஓவியனும், கபிலனும், ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும் இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.
நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.
ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது
அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது. யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும் இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.
கிபிர் தாக்குதலும், ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும், விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர் உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும் பொங்கிப்பெருகிறது.
யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.
அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும், பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.
அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.
நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.
இத்தனை உணர்வுபூர்வமாக புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின், இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.
விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.
அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை இத்தனை கனம் கொண்ட மொழியில் சொல்லும் அகரமுதல்வனாகத்தான் அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது
அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.