peranbu-new-300x168
தேனப்பன் அவர்களின் தயாரிப்பில் ராம் எழுதி இயக்கி மலையாளத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா மற்றும் அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்றிருக்கிறார்கள். இசை யுவன் ஷங்கர் ராஜா. தேனி ஈஷ்வர் ஒளி இயக்குனர்
ரோட்டர்டாமிலும் ஷாங்காயிலும் நடைபெற்ற பன்னாட்டு திரைவிழாக்களில் முன்திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றபின்னர் பிப்ரவரி 1, 2019 அன்று திரையிடப்பட்ட பேரன்பு, நல்ல படம் , மிக மோசம், கலைப்படம், தேவையில்லாத பேசுபொருள் கொண்டது, மிக அழகிய பேசுபொருளைக்கொண்டது, over sentiment movie, பெரும்மன அழுத்தம் தரும் ஒன்று, வாழ்வின் இயங்கியலில் நடைபெற சாத்தியமே அற்ற ஒன்றை புனைந்து சொல்லுவது என பல்வேறு வகையிலான கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது,

மனைவியைப்பிரிந்து , மூளை வளர்ச்சியற்ற பதின்மவயது மகளுடன் வாழும் அமுதவன் என்னும் தந்தை, மகளின் எல்லாத்தேவைகளையுமே பேரன்புடன் நிறைவேற்ற முயற்சிப்பதை சொல்லும் இக்கதையை இயற்கை என்னும் தலைப்பில் பல அத்தியாயங்களாக பிரித்து பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.

குளிர்பிரதேசமொன்றின் ஏரியில் மகளுடன் பரிசலில் பயணிக்கும் தந்தையுடன் துவங்குகிறது இப்படம்
பச்சை போர்த்திய மலைகளும், செறிந்த பைன் மரக்கூட்டங்களுமான பிண்னனியில் அந்த சிற்றாற்றின் கரையில் அமைந்திருக்கும் மரவீடு மிக அழகு .
இது வழக்கமான திரைப்படம் இல்லை என்பதை பாப்பா மூளை வளர்ச்சியற்றவர்களுக்கே உரிய அசாதாரண முகமும் உடலுமாய் தோன்றுகையிலேயே உணரத்துவங்குகிறோம். அவளை பெண் துணையின்றி மம்மூட்டி கவனிக்கப் படும் சிரமங்களை பெற்றோர்களாகிய பார்வையாளார்கள் பதற்றத்துடனேதான் கவனிக்கமுடியும் அதுவும் ‘பாப்பா’’ பருவமடைந்தபின்னர் மனப்பதற்றம் கூடுகின்றது

பாப்பா பெரும்பாலும் தலையசைப்பிலும் சின்ன சின்ன சப்தங்களிலும், அழுகை மற்றும் அலறல் வழியேவும்தான் பிறரை தொடர்பு கொள்கிறாள். எனவே பலரை தன் அத்தைய இருப்பின் மூலம் சங்கடப்படுத்துகிறாள். பாட்டி வடிவுக்கரசிக்கு வசனங்களே தேவையில்லை உடல்மொழியிலேயே வெறுப்பை அப்பட்டமாக காட்டக்கூடிய நடிகை அவர். பாட்டியான அவரும் தம்பி மனைவியும் அக்கம்பக்கத்தினரும் பாப்பாவின் இருப்பை அத்தனை பகிரங்கமாக தீவிரமாக ஆட்சேபிப்பது நம்பும்படியாக இல்லை. மானுடம் இன்னும் அத்தனை கீழ்மையடைந்திருக்கவில்லை என்று ஆழ்மனம் நம்புகிறதோ என்னவோ! மம்மூட்டி அந்த மிகத்தனிமையிலான வீட்டுக்கு மகளுடன் வருவதை நியாயப்படுத்த அந்தனை தீவிர ஆட்சேபணை இருப்பதாக காட்டியிருக்கலாம்
ஆனால் அத்தனை கஷ்டபட்டு வந்த அவ்வீட்டில் வேலைகளுக்கும் பாப்பாவுக்குமான துணைக்குமாக பெண்களே கிடைப்பதில்லை என்பதுவும், ஒரே நாள் வேலைக்கு வந்த பெண் மம்முட்டி அழகனாக இருப்பதால் புருஷன் சந்தேகப்படுவதால் இனி வரலைன்னு சொல்வதும் சம்பளத்தைக் கூட கைகளில் வாங்காமல் தரையில் வைக்கச்சொல்லி எடுத்துக்கொள்வதும் மிகைக்கற்பனை . நன்றாகவும் இல்லை, நம்பும்படியும் இல்லை

அஞ்சலியின் பாத்திரமும் அப்படியே ஒரு சிறப்புக்குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பவர் அப்படி ஊர் பேர் தெரியாத பெண்னை உதவிக்கு வைத்துக்கொள்வதே நம்பமுடியாத போது சில நாட்களிலேயே அவரை திருமணமும் செய்துகொள்வதென்பது கொஞ்சமும் நம்பமுடியாதவை. படத்தின் பேசுபொருள் பாப்பாவிற்கான துணையா அன்றி மம்மூட்டிக்கான துணையா என கேள்வி வருகின்றது
பின்னர் அஞ்சலியை வெளியேற்றுவதற்கான காரணமும் வலுவற்றது. அக்காட்சிகள் மிகுந்த நாடகத்தன்மையுடன் இருந்தன. அந்த வீட்டை விலைக்கு கேட்கும் கும்பலும் அவர்களின் அச்சுறுத்தலும் கூட வலிந்து திணிக்கப்பட்டது என்பதை உணரமுடிகின்றது
மம்முட்டி அந்த வீட்டுக்கு வர காரணமாக பிறரின் வெறுப்பை சொன்னதுபோலவே அவர் அந்த மரவீட்டை விட்டுவிட்டு போகவும் வலுவற்ற காரணங்களே சொல்லபடுகின்றது.

மூன்றாந்தர விடுதியில் மகளுடன் அவர் தங்குவதும் அங்கு ஆணும் பெண்ணும் நெருக்கமாய் இருப்பதை பாப்பா பார்த்ததால் அந்த இரவு நேரத்தில் விடுதியை காலிசெய்துவிட்டு மகளுடன் அவர் தெருவில் அமர்ந்திருப்பதுமெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அபத்தங்கள். அதற்கு பதிலாக அவர் கதவடைத்துக்கொண்டு பத்திரமாக மகளுடன் அங்கிருந்து விட்டு காலை வெளியேறியிருக்கலாமே!
பின்னர் வருபவை அவற்றையெல்லாம் விட அபத்தங்கள். மகளின் பாலுறவுத்தேவையை அப்பா உணர்துகொள்வதும், அதை தீர்க்க ஒரு துணைக்காக முயற்சிப்பதெல்லாமே அபத்தங்களின் உச்சம். மகளுக்கு திருமணம் செய்துவைப்பதும், ஒரு ஆண் பாலியல் தொழிலாளியை தேடுவதும் ஒன்றென அவர் பேசுவதும் அப்படியே! வாழ்வின் எல்லா சிக்கலகளூக்கும் தீர்வு காண்பதென்பதே ஒருவகையில் அபத்தம் தான்.

பாப்பாவை விடுதியில் அப்படி அடிப்பதற்கான காரணமும், அதன்பிறகு அவளை மம்முட்டி பார்க்கவிடாமலிருப்பதும், தொலைக்காட்சியில் தெரியும் ஆணை பாப்பா முத்தமிடுவதுமெல்லாமே மிகு கற்பனைகள் .

சில காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. அஞ்சலையின் தாய்மாமா கட்டிலிலும் மம்மூட்டி தரையிலும் படுத்துக்கொண்டிருக்கையில் அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது.. மம்முடியின் பின்னே எரியும் தழலின் நிழல் தாய்மாமவின் முகத்தில் தெரிவதும் அவரின் உணர்ச்சிகளை துல்லியமாக கட்டும் முகமும் அப்போது மம்முட்டி மிக இயல்பாக பேசும் வசனங்களும் அருமை.

அஞ்சலி மிக எளிய உடைகளில், குறைந்த ஒப்பனையில் அழகு மிளிர வருகிறார். கண்களும் உதடுகளும் பேசுகின்றன அவருக்கு. நள்ளிரவில் தேனீர் தயாரித்துக்கொடுக்கும் அந்த காட்சியில் தளர்ந்திருக்கும் மம்மூட்டியை அணைத்துக்கொண்டு ஆற்றுப்படுத்தவேண்டும் என்று அரங்கிலிருக்கும் அனைவருமே விரும்பியிருப்போம். அவரும் அதையே செய்கிறார்

பாப்பா பாப்பா என்று பதறுவதும் , தாயன்புடன் ஆடிப்பாடி கதை சொல்லி கவனித்துக்கொள்வதும், சேனிடரி நேப்கின்களைக்கூட மாற்ற உதவுதுமாக மம்முட்டி சிறப்பு குழந்தையொன்றின் அப்பாவாகவே மாறிப்போகிறார். அவரின் வயதை கொஞ்சமும் காட்டாத உடற்கட்டு உண்மையிலேயெ வியப்படைய வைக்கிறது. very much fit and smart for this age. பனிபொழியும் கதைக்களம், மூளை வளர்சியில்லாத பெண், மரவீடு என்று இப்படம் மூன்றாம் பிறையை அதிகம் நினவுக்கு கொண்டு வந்துகொண்டே இருக்கின்றது.

மகள் தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே இரவு காரில் காத்திருந்து அங்கிருந்து கொண்டே மகளின் கதறலை, வீறிடலை கேட்டுக்கொண்டு கலங்குமிடத்திலும் மம்மூட்டி அசத்துக்கிறார்.

இறுதியில் வரும் அந்த மாற்றுப்பாலினத்தவரான மீரா பாத்திரமும் மிக நன்று. மிக அருமையான நடிப்பு அவருடையது. ஆனால் அப்பாத்திரம் இக்கதையின் மையப்பேசுபொருளின் தீர்வாக காட்டப்படுவதே கதையின் இறுதி அபத்தம்.

திரைப்படத் தொகுப்பு மிகச்சரியாகவே இருப்பினும் கதையில் நிறைய குழப்பங்கள். மம்முட்டி மகளை கவனித்துக்கொள்ள துணை தேடுகிறார். ஆனால அவர் அஞ்சலியை மணம் புரிந்துகொள்கிறார். அஞ்சலிக்குப்பிறது வீட்டையும் விட்டுவிட்டு நகரத்துக்கு வந்து மகளுடன் சீரழிகிறார் பாலுணர்வுதூண்டல் உட்படஅவளின் எல்லாத்தேவைகளையும் தீர்க்க மெனக்கெடுகிறார். மகளை வெறுக்கும் மனிதர்களிடமிருந்து விலகி நீரில் இருவருமாக மூழ்கி உயிரைவிடவும் எடுக்கவும் துணிகிறார். பின்னர் ஒரு மாற்றுப்பாலினத்தவரை அவர் திருமணம் செய்துகொள்வதுடன் படம் நிறைவடைகின்றது.
மூளை வளர்ச்சியற்ற மகளின் பாலுணர்வுத்தேவைக்கு அப்பாவின் மாற்றுப்பாலினத்தவருடனான மறு திருமணம் எப்படி தீர்வாகும்?
மிக அழகாகத்துவங்கி , சுமாராக கொண்டுசெல்லப்பட்டு மிக மோசமாக முடிந்த படம் இது

சாதனாவின் நடிப்பு பிரமாதம் அப்படி தொடர்ந்து உதடுகளை கோணிக்கொண்டு நாக்கை வளைத்து துருத்தியபடி, கை விரல்களயும் மடக்கிக்கொண்டு பாதங்களையும் வளைத்தபடிக்கே அவர் படம் முழுக்க வரும் அத்தோற்றம் மனதைபிசைகிறது
ஒரு சிறப்பு பெண்குழந்தையை வளர்க்க மனைவி இல்லாத ஆணொருவன் எப்படி கஷ்டபடுகிறான், என்பதை இன்னும் நுட்பமாக அழகாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி இருக்கலாம். ஏன் பாலுணர்வு தேவையை மிக அடிப்படையாக தீர்க்க வேண்டிய ஒன்றென காட்டியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை

இயற்கையின் பன்முகங்களையும் பாரபட்சமுடன் அது உயிர்களை படைப்பதையும் குறித்து கோனார் நோட்ஸ் போடாத குறையாக அத்தியாயங்களாக பிரித்து விளக்காமல் பார்வையாளர்களே அதை புரிந்துகொள்ளும் படி கொண்டுபோயிருக்கலாம்
படம் முடியும் போது நாம் எத்தனை அருளப்பட்ட வாழ்விலிருக்கிறோம் என்னும் மகிழ்வைவிட கருணையின்றி படைக்கப்பட்டிருக்கும் உயிர்களின் மீதான பச்சாதாபமே மனதில் மேலோங்கி இருக்கும் என்பது இப்படத்தின் வெற்றியெனக்கொள்ளலாம்

லாலிபாப்பால் உதடுகளின் மேல் பாப்பா வருடிக்கொள்வது பனியை நம் மீதும் படரவிடும் துல்லியமான அழகிய ஒளிப்பதிவு. மாற்றுப்பாலினத்தவராகிய அஞ்சலி அமீரின் சிறப்பான நடிப்பு, மலையாளத் திரைஉலகின் நட்சத்திர அந்தஸ்தையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக நடித்திருக்கும் மம்முட்டி, நட்சத்திரங்களை எண்ணும் காட்சி, சிறப்பான ஒளிப்பதிவு என பாராட்டவும் பல அம்சங்கள் இருக்கின்றன இதில்.

எனினும் மூளை முடக்குவாதத்துடனிருக்கும் மகளை, மனைவியும் சகமனிதர்களின் பரிவும் புரிதலுமின்றியும் அன்புடன் கவனித்து வளர்க்கும் அப்பாவின் கதையாக இல்லாமல் அவளின் பாலுணர்வுதேவைகளுக்குமாக மெனக்கெடும் பேரன்புடனிருக்கும் அதிசய அப்பாவாக கதையைக்கொண்டு போனதுதான் பிழையாகிவிட்டது