எந்திரன் 2.0 வெளியாகி ஒரு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு ரஜினி படம். ஜனவரி 10, 2019 தைப்பொங்கல் அன்று வெளியான ,கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட (Petta) ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அனிருத்ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு திரு, படத்தொகுப்பாளர் விவேக் அர்சன்.
சீனியர் மாணவர்கள் அட்டகாசமும் வில்லத்தனமும் அதிகமிருக்கும் ஒரு கல்லூரி விடுதிக்கு காப்பாளராக ரஜினி வருகிறார். அங்கிருக்கும் பிரச்சனைகளை துரிதமாக சரிப்படுத்தி மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வரும் ரஜினி மாணவர்களில் ஒருவனை கொல்லச் செய்யப்படும் முயற்சிகளை முறியடிகிறார். அதன்பொருட்டே அங்கு அவர் வந்திருகிறார் என்பதும், அவருக்கும் அந்த மாணவனுக்குமான உறவென்ன என்னும் புதிருமே கதைக்கரு.
கண்ணைக்குளிர்விக்கும் டார்ஜிலிங்கில் துவங்கி மதுரைக்கு வந்து உத்தரப்பிரதேசத்தில் முடிகின்றது கதை. அறிமுகக்காட்சியில் ரஜினி சோளக்கதிர்களை சுடும் நெருப்பின் பொறி பறக்கும் பிண்ணனியில் திரையில் தோன்றுகையில் பல்லாண்டுகளாக திரையரங்கில் எழும் அதே ஆர்ப்பரிப்பும் ஆட்டமும் பாட்டமும் விசிலுமாக அரங்கு அமளிப்பட்டது. ரஜினி வரும் காட்சிகளில் தேவதூதன் சிலை ஒரு குறியீட்டைபோல காண்பிக்கப்படுகிறது. முதன்முதலாக திரைத்துரைக்குள் நுழைந்ததைப்போலவே மூடியிருக்கும் கதவுகளை தள்ளித்திறந்தபடியே பல காட்சிகளில் வருகிறார் ரஜினி.
கபாலியில் வயதான ரஜினி ரசிகர்களை ஏமற்றி கொஞ்சம் விலகிச்சென்றார் இதில் அப்படியல்ல 80/90ல் பார்த்த அதே ஸ்டைல் மன்னன். ஒப்பனை மிகப்பொருத்தமாக இருப்பதுடன் ரஜினியின் ஃபிட்னஸ் வியப்பூட்டுகின்றது. நடனக்காட்சிகளில் அதே 80 களின் ரஜினி தெரிகின்றார்.
20 வருடங்களுக்கு முன்னதான மதுரை ப்ளேஷ் பேக்கும் கல்லூரி அடிதடியுமாக விரைவாக நகரும் கதை, கொஞ்சம் தள்ளாடி உத்தர பிரதேசத்தில் நுழைந்ததும் ஏராளமாய் துப்பக்கி சுடுதல். ரஜினி இரண்டு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, இயக்குனர் மகேந்திரன், சிம்ரன், த்ரிஷா நவாஸுதீன், சசிகுமார், ஆடுகளம் நரேன் என நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும் கதை ரஜினியை நம்பியே நகருகின்றது. மாலிக் ஆக சசிகுமார் வருகையில் பாட்ஷாவை நினைப்பதை தவிர்க்கவே முடியவைல்லை.
சில காட்சிகளில் வரும் சிம்ரன் அழகு, நன்றாக மெலிந்து சிலிம்ரன் ஆகவும் இருக்கிறார். ஆடுகிறார் பாடுகிறார், ரஜினியை காலம்கடந்து காதலிக்கவும் செய்கிறார் எனினும் உயிரோட்டமின்றி சாவி கொடுக்கபட்ட பொம்மையைப்போல நடிக்கிறார். அவரது தோற்றத்திற்கும் மங்களம் என்னும் பெயருக்கும் பொருத்தமுமில்லை. த்ரிஷா சிம்ரனை விட மிகக்குறைந்த காட்சிகளில் வருகிறார். படத்தில் அவரும் இருக்கிறார். அவ்வளவே. கதாநாயகிகள் இருவருக்குமே எந்த முக்கியத்துவமும் இல்லை.
ராட்சச நடிகரென்று பாலிவுட்டில் பெயரெடுத்திருக்கும் நவாஸுதீன் சித்திக் என்னும் அற்புதமான கலைஞனை இங்கு அவ்வளவாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. மதுரைக்காரராக அவரது வடஇந்திய முகம் ஒட்டவில்லை மேலும் தமிழிலான வசன உச்சரிப்பும் அவருக்கு பொருந்தவில்லை. ரஜினி என்னும் ஆலமரத்தின் கீழ் எந்தச்செடியும் செழித்து வளரமுடியாதுதான். இயக்குனர் மகேந்திரனும் இருக்கிறார் தளர்ந்திருக்கிறார்.
பீட்ஸாவிலும் ஜிகிர்தண்டவிலும் இருந்த கார்த்திக் சுப்புராஜை இதில் காணமுடியவில்லை முழுக்க முழுக்க ரஜினி படம் இது. சனந்த் ரெட்டி மேகா ஆகாஷ் காதல் ஜோடி பரவாயில்லை. அவருக்கே உரித்தான கரகர குரலுடன் ராம்ஸும் இருக்கிறார்
பாடல்களை விவேக், கு.கார்த்திக் மற்றும் தனுஷ் எழுதியிருக்கின்றார்கள். மரணமாஸ் துவக்கபாடலை s.p பாலசுப்ரமனியமும் அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அனிருத் பாடல்களிலும் பிண்ணனியிலும் கொட்டிமுழக்கி இருக்கிறார் மாமனுக்காக. இளமை துள்ளுதே பாடலை மருமகன் தனுஷ் எழுதியிருகிறார். உல்லாலா பாடல் சுராங்கனியையும் பம்பரக்கண்ணாலேவையும் நினைவூட்டினாலும் இனிமை.
ஒரு காட்சியில் சிகரட் பிடிப்பது கெடுதலென்றும் அதை அனுபவத்தில் உணர்ந்தே சொல்லுவதாகவும் ரஜினி சொல்கிறார். 165 ஆவது படத்தில், 60 வயதைத்தாண்டி அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினி சொல்வதை, அவரைப்போலவே ஸ்டைலாக புகைபிடிக்கத்துவங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காதில் போட்டுக்கொள்வார்களா என்று தெரியவில்லை
திரு ஒளிப்பதிவு அபாரம். டார்ஜீலிங்கில் Eastern Forest Rangers கல்லூரி வளாகம் அத்தனை அழகு. சர்ச்சில் மெழுகுவர்த்தி ஒளியுடனான காட்சிகளும் டார்ஜிலிங்கின் மலைப்பாதையும், பனிப்பொழிவும் கண்ணில் நிறைகின்றது சண்டை இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஹேன்ஸ் அடித்து நொறுக்கியிருக்கிறார். மார்க்கெட் மர்றும் சர்ச் சண்டைகளை மிக உற்சாகமாக இயக்கியிருக்கிறார்.
புதுசா வந்தா விரட்டுவீங்களாடா இது உங்க கோட்டை இல்லை என் பேட்டை, சம்பவம் காத்திருக்கு, ஸ்வீட் சாப்பிடப்போறோம் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசியல் பன்ச்சுகளும் உண்டு
விஜய் சேதுபதி அப்படியே உத்தரபிரதேச வெறியராக வருகிறார். கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். பொருந்தி நடித்திருக்கிறார் எனினும் கொஞ்சம் ஃபிட்னஸ் குறித்தும் யோசிக்கனும். கிளைமாக்ஸுக்கு பின்னரும் இன்னொரு ட்விஸ்ட் காத்திருக்கு ரசிகர்களுக்கு.
ரஜினி ஸ்டைலாக துப்பாக்கி சுடும் காட்சியொன்றில் ஒரு கேரளா நண்பர் ரஜினியிடம் சொல்லுவார் ‘’சாரே , கொலை மாஸானு’’ என்று அதுதான் படத்திற்கான ஒற்றை வரி விமர்சனமும்.

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.info/register?ref=IHJUI7TF