கமலா  ஆரஞ்சு பழங்களை  நாம் சுவைத்திருப்போம், கமலா என்னும் பெயரில் நமக்கு தெரிந்தவர்களும் நிச்சயம் இருப்பார்கள்.   Mallotus philippensis என்னும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் தாவரச்சாயமான பிரகாசமான பொன்மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த  கமலா நிறத்தில் இருப்பதால் அந்த வகை ஆரஞ்சு கனிகளுக்கு அப்பெயர் வந்தது. நல்ல சிவப்பாக பிறக்கும் இந்திய பெண் குழந்தைகளுக்கு அப்படியே கமலாவென்று  முன்னர் பெயரிடப்பட்டது. 

காலப்போக்கில் கமலா என்பது ஒரு தாவரச்சாயம் என்பதே மறந்து போய் வழக்கமான பெண்பெயர்களில் ஒன்றாக கமலா ஆகிவிட்டிருந்தது கமலா ஆரஞ்சு என்பதன் பெயர்க்காரணம் தெரியாமலேயே பலநூறு ஆரஞ்சுப்பழங்கள்  சுவைக்கப்படுகின்றன.

கமலா மரமான இது நெல்லிக்காய் மரங்களின் குடும்பமான யுபோர்பியேசியை சேர்ந்தவை.  இவற்றின் சிவந்த கனிகளின் வெளிப்புறம் குங்குமம் பூசியது போல படிந்திருக்கும் மேல்பூச்சிலிருந்து எடுக்கப்படும் சாயமே கம்பளி, பட்டு, பருத்தி போன்ற நூலிழைகளை மஞ்சள் ஆரஞ்சு நிறமேற்றும் இயற்கை கமலாச்சாயம்

இம்மரம் கமலா, கபிலம் செந்தூரம், ரோஹிணி, செந்தூரி, கங்கை,  குங்குமமரம், குரங்கு மஞ்சநாறி, செங்காலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.  பிலிப்பைன்ஸில் இது (banato) பனடோ என அழைக்கப்படுகிறது. 

இந்த செம்பழங்களில் குரங்குகள் முகத்தை தேய்துக்கொள்ளுமென்பதால் இவற்றிற்கு குரங்கு முக மரம் என்று பெயர் வந்தது .இந்தியாவெங்கும் காணப்படும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும் சிவப்பு கமலா சாயப்பொடியுடன் இரும்பை சேர்த்து அழகிய பச்சை சாயமும் உருவாக்கப்படுகின்றது

பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்லாந்து, சீனா, இலங்கை ஆப்கானிஸ்தான், யேமன் உள்ளிட்ட பல நாடுகளில் மலைப்பாங்கான பகுதிகளிலும், பசுமை மாறா காடுகளின் ஓரங்களிலும்  காணப்படும் இவை ஒரு குறுமரமாகவோ அல்லது அடர்ந்த  புதர் போலவோ வளரும் இயல்பு கொண்டவை

.இவை 4 லிருந்து 10 மீ உயரமே வளரும். மரப்பட்டை சாம்பல் வண்ணத்தில் சொறசொறப்பாக காணப்படும். சிறு கிளைகளிலும், இளம் இலைகளிலும் ரோமங்கள் போன்ற வளரிகள் காணப்படும். பளபளப்பான பச்சையில் இருக்கும் முட்டைவடிவ இலைகள் கூர் நுனிகளுடன் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். .இலைவிளிம்பில் பற்கள் போன்ற அமைப்பும் இருக்கு

பிலிப்பைன்ஸில் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரையில்  மலரும் இவை பிற நாடுகளில் ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மலரும்.   ஒரே மரத்தில் ஆண் பெண் மலர்கள் தனித்தனியான கொத்துக்களாக மஞ்சள் பழுப்பு வண்ணங்களில் மலரும்.

கொத்தாக காய்த்திருக்கும் அடர் சிவப்பு நிற சிறு கனிகள்  5-7 மி மி அளவிலிருக்கும். கனியின் வெளிப்பகுதி  முழுவதும்  நுண்ணிய ஆரஞ்சு சிவப்பு குருணைகள்  பூசப்பட்டது போல் படிந்திருக்கும்.  இந்த அடர்சிவப்பு குருணைகளை ஆல்கஹாலில் கரைத்தெடுத்துத்தான் கமலாச்சாயம் தயாரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு  கனியிலும் மூன்று கருப்பு விதைகள் இருக்கும்.

இவற்றில் புரதம், பிசின், எண்ணெய்ச்சத்து,  நிறமிகள், ஆல்கலாய்டுகள் சப்போனின்கள், டேனின்கள், பீனால் ஆகியவை அடங்கி இருக்கின்றன. இவற்றில் இருக்கும் மலோடோயின் மற்றும் கமலின் ஆகியவை மிக முக்கியமான மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.  (mallotoin & kamalin).

கமலாவிலிருந்து  இயற்கைச்சாயம் மட்டுமல்லாது சமையல் எண்ணெயும், காகிதக்கூழும் மருந்துகளும், இயற்கை உரமும் கிடைக்கிறது.

கமலா மரத்தின் பாகங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை.  இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை குணமாக்கும். இதன்  வேர்கள் ரத்த புற்று நோய்க்கு மருந்தாகிறது. கட்டிகளை குணமாக்குவதில் கமலா மரம் மஞ்சளை காட்டிலும் அதிக வீரியத்துடன் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அரேபியர்கள் இம்மரத்தின் கமலாச்சாயத்தை தொழுநோயை குணமாக்க பயன்படுத்துகின்றனர். குடல் அழற்சி மற்றும் சீரணக்கோளாறுகளுக்கும் இம்மரத்தின் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மரப்பட்டைச் சாறு சரும நோய்களுக்கு எதிராக செயல்புரிகிறது. இந்த சிவப்பு சாயம் உணவுக்கு நிறமூட்டவும் பயனாகின்றது, குறிப்பாக பானங்களுக்கு நிறமூட்ட.

 இதிலிருந்து கிடைக்கும் ரோட்லரின் (Rottlerin) என்னும் மருந்துப்பொருள் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அருமருந்தாக கருதப்படுகின்றது.

முடக்கு வாதம், ஆஸ்துமா, கல்லீரல் வீக்கம், குடற்புழு, தோல் அழற்சி போன்றவைகளுக்கு இம்மரத்தின் பாகங்கள் சிகிச்சை அளிக்க பயனாகின்றன

 இனி கமலா என்னும் பெயரைக்கேட்டாலும், கமலாக்களை  பார்த்தாலும், கமலா ஆரஞ்சுகளை சுவைக்கையிலும்  இந்த குங்கும மரங்களை நினைத்துக் கொள்ளலாம்