தென்னமெரிக்காவில் தோன்றியது என கருதப்படும் நிலக்கடலைப் பயிர் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் வழியில் ஐரோப்பிய இயற்கையாளர்களால் ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அடிமைகளை கொண்டு சென்ற கப்பல்கள் வழியே உலகின் பிற பாகங்களுக்கு கடலைப்பயிர் அறிமுகமானது.

1800களில் அமெரிக்காவின் முதன்மை பயிர்களில் ஒன்றாக நிலக்கடலை இருந்தது. அச்சமயத்தில்தான் கடலை மனிதரான கார்வர் லோவா விவசாய கல்லூரியில் முதுகலை தாவரவியல் படித்துக்கொண்டிருந்தார். 

கார்வர்   அடிமைகளாக விற்கபட்ட அவரது பெற்றோர்களுக்கு பிறந்து அவரை தத்தெடுத்த நல்ல மனம் கொண்ட உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டவர் கருப்பினத்தவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட அக்காலத்தில் பல சிரமங்களுக்கிடையே தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

1888ல் கார்வருக்கு அயோவா (Indianola, Iowa). சிம்ஸன் கல்லூரியில் கலை துறையில் அனுமதி கிடைத்து. அக்கல்லூரியின் முதல் கருப்பின மாணவர்  கார்வர்தான்

கார்வரின் ஆசிரியை எட்டா புட் அவரது அசாதாரணமான  அறிவை கண்டு, லாவா மாநில விவசாய கல்லூரியில் அவரை தாவரவியல் படிப்பை தொடர சொல்லி அறிவுறுத்தினார்.

.அயோவா விவசாயக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் கருப்பின  மாணவரும் இவரே.   பட்டப்பிடிப்பில் அவர் சமர்பித்த  ’’மனிதனால் மாற்றப்பட்ட தாவரங்கள்’’ என்னும் ஆய்வேடு அவருக்கு அங்கேயே 1894ல் பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்பளித்தது. கார்வரின் தாவரங்கள் குறித்த அறிவினால் அவர் அங்கு மிகவும் பிரபலமாக இருந்தார். அருகிலிருந்த வயல்களில் உருவாகும் தாவர நோய்களுக்கு சிகிச்சை அளித்து அவைகளை காப்பாற்றியதால் அனைவரும் கார்வரை தாவர டாக்டர் என்று அழைத்தார்கள்.

மேற்படிப்பின் போது லூயிஸ்  என்னும் கனிவான பேராசிரியரின் வழிகாட்டுதலில் கார்வெர் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியலில் பல ஆய்வுகளை செய்தார். 1896ல் முதுகலை பட்டம் வாங்கும் முன்பே கார்வெர் ஒரு சிறந்த தாவரவியலாளராக அங்கிருந்தோரால் அறியப்பட்டார்.அயோவா மாநில கல்லூரியின் முதல் கருப்பின பேராசிரியரும் ஆனார் கார்வர்.

1896, ல் டஸ்கெகீ  நிறுவனத்தில் இணைந்த கார்வெர் தன் இறுதிக்காலம் வரை அங்கேயே பணியாற்றினார். (இப்போது Tuskegee University),முதன்முறையாக  அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில்  பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி பருத்திக்கு மாற்றாக நிலக்கடலை பயிரிட கார்வரே கற்றுக்கொடுத்தார் பயிற்சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாற்றுப் பயிர்கள் குறிப்பாக பயறு வகைகளை பயிரிடுகையில் அவற்றின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் நிலத்தின் நைட்ரஜன் சத்துக்களை மேம்படுத்துவதால் நிலவளம் குறையாமலிருக்கும் என்பதை அங்கிருந்த விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களின் விவசாய முறையை மாற்றினார்.. 

கார்வர் பருத்திக்கு மாற்றாக நிலக்கடலையுடன் சோயாபீன்ஸ், தட்டைபயிறு சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றையும் பயிரிடும் முறையை அறிமுகம் செய்தார்.

பயிரிடுவதோடு மட்டுமல்லாது சத்தான பயிறு வகைகளை விவசாயிகள் உணவாக எடுத்துக் கொள்வதன் அவசியத்தையும் அவர் மக்களுக்கு புரிய வைத்தார்

வறுமையில் வாடிக் கொண்டிருந்த அப்பகுதி விவசாயிகளின்  சொந்த உணவுத்தேவைக்கும் வாழ்வாதாரத்திற்கும் கார்வர் காட்டிய பயிர் சுழற்சி வழி மிக உதவியாக இருந்தது அம்முறைகளை பின்பற்றி நல்ல மகசூல் கிடைத்து ஏராளமான நிலக்கடலையும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளும் கிடைத்தபோது அவற்றிலிருந்து பலநூறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் கார்வர் கண்டறிந்தார். அங்கிருந்த பல கருப்பின விவசாயிகளுக்க தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் செய்யும் வழியையும் அவர் காட்டினார்.

கடலைப்பால், கடலைப்பாலடைக்கட்டி,நி லக்கடலை உலர்  மாவு, நிலக்கடலை விழுது, முகச்சவர கிரீம்கள், காகிதங்கள்,  சாயங்கள், குளியல் சோப், சரும அழகுப் பசைகள், மை,ஆகியவை நிலக்கடலையில் இருந்து அவர் உருவாக்கிய 300 பொருட்களில் சில

 நிலக்கடலையிலிருந்து சில நோய்களுக்கு மருந்துகளையும் அவர் உருவாக்கினார். சர்க்கரை வள்ளிக்கிழங்குகளிலிருந்து கார்வர் 73 வகையான சாயங்கள், கயறு, காலை உணவுக்குருணைகள், ஷுக்களுக்கு கருப்பு பாலிஷ், பட்டை ஒத்த நூலிழை ஆகியவற்றையும் உருவாக்கினார்

பல இடங்களுக்கு பயணித்து பயிர் சுழற்சி முறை, இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிலக்கடலையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்வது ஆகியவை குறித்து கற்றுக் கொடுத்தார்.  ஒரு பெரிய வேனை நகரும்  வகுப்பறையாகவும் ஆய்வகமுமாக அவரே வடிவமைத்து  இந்த கற்பித்தலுக்கு  பயன்படுத்தினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதுடன் சூழல்பாதுகாப்பிலும் கார்வர் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இனவெறி உச்சத்திலிருந்த அந்தக்காலத்தில் கருப்பினத்தவர்களை கடந்தும் அவர் புகழ் பரவியது. அவரது சூழல் பங்களிப்புகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் வெள்ளையர்களால் பல விருதுகள் அளிக்கப்பட்டது.

1916ல் கார்வர் நிலக்கடலை சாகுபடி நுட்பங்கள் மற்றும் 105 கடலை உணவுகளுக்கான செய்முறை என்னும் செய்திமடலை பிரசுரித்தார்

அவரது ஆய்வு கூடத்தில் அவரும் அவரது மாணவர்களும் அலபாமாவின் களிமண்ணும், நிலக்கடலை எண்ணெயும் கலந்த இயற்கை சாயத்தை உபயோகித்து பல இயற்கை  காட்சிகளின்  ஓவியங்களும் வரைந்தார்கள். ஓவியங்கள் மட்டுமல்லாது கடலைத் தோலில் செய்யப்பட்ட கழுத்தணிகள், கோழியின் இறகில் செய்யபட்ட கலைப் பொருட்கள், இயற்கை நாரிழைகளில் பின்னப்பட்ட பொருட்கள், சாயமேற்றப்பட்ட விதைகள், சணல் பாயில் தையல் வேலைப்பாடுகள்  என அறிவியல் ஆய்வுகளுக்கு மத்தியிலும் அவர் இவற்றை செய்துகொண்டிருந்தார்.

அவரது ஓவியங்களுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்ததோடு உள்ளூர் விவசாயிகளின் எளிய வீடுகளை இயற்கை சாயங்களால் அழகுபடுத்தவும் கற்றுக்கொடுத்தார்.டஸ்கெகீ நிறுவனம் கருப்பினத்தவர்களின் விடிவுக்கான பொன் வாசல் என்றுமவர் கருதினார்.ஒரு தேவாலயம் முழுதாகவே களிமண்ணில் இருந்து அவர் உருவாக்கிய இயற்கை சாயத்தினால் வர்ணமடித்தார். 

மண் வள மேம்பாடு. இயற்கை உரத்தின் பயன்பாடு மற்றும் பயிர்சுழற்சி இம்மூன்றையும் அவர் மக்களிடம் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருந்தார் கருப்பின குழந்தைகளுக்கு ஓய்வு நேரங்களில் தாவரவியலும்,  விவசாயமும் இறையியலும் கற்றுக்கொடுத்தார், குப்பைகளை உரமாக்குவது,தாவர எரிபொருள் தயாரிப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தார்.  களைகள் என கருதப்பட்ட டேன்டேலியன் மலர்களை, பர்சிலேன் கீரைகளை சேகரிக்கவும், சமைக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளவும் பயிற்றுவித்தார், 

விவசாயிகளை அவர்களின் நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வரச்சொல்லி அவற்றிலிருந்த குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளையும் கால்நடைகளை முறையாக பராமரிக்கவும் கற்றுக்கொடுத்தார்.

   வேர்க்கடலை கண்டுபிடிப்புக்களையும் செய்முறைகளையும்  “பேராசிரியர் கார்வரின் ஆலோசனை” என்ற  செய்தித்தாள் பத்தியில் வெளியிட்டார். இத்தனை ஆய்வுகள், பயணங்கள் தேடல்களுக்கு மத்தியிலும் கார்வர் ஓவியங்கள் வரையவும் கம்பளி பின்னவும், அலங்கார தையல் கலையிலும் நேரம் செலவழித்தார். அவற்றை அவரது நண்பர்களுக்கு பரிசளித்தார். தன்னை சுற்றி இருந்த உலகை மிக பெருமையுடனும் அன்புடனும் கவனித்த கார்வருக்கு அன்பு செலுத்த பல்லாயிரம் காரணங்கள் இருந்தனவே ஒழிய புகார்களே இல்லை. கார்வர் திருமணம் செய்துகொள்ளவில்லை வாழ்நாள் முழுவதையுமே மண் வளத்தை காப்பாற்றவும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் தன்னிறைவுடன் வாழ உதவிசெய்யவுமே அர்ப்பணித்துக்கொண்டார். 

1920ல் கார்வர் அமெரிக்க நிலக்கடலை விவசாயிகள் சங்கத்தில் ஒரு உரை ஆற்றினார், பயிர் பாதுகாப்பு நிதி குறித்த அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு 1922ல் அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.அதன் பிறகு  அனைவராலும் அன்புடன் கடலை மனிதர் என்றே அழைக்கப்பட்ட கார்வர் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் பேச்சாளராகவும்  (Speaker for the United States Commission on Interracial Cooperation) தேர்ந்தெடுக்கப்பட்டு 1933வரை அப்பதவியிலிருந்தார். 

1935ல் அமெரிக்க விவசாய அமைச்சகத்தின் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியல் துறையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்வர் பூஞ்சை தொற்றுக்களில் பல முக்கிய ஆய்வுகள் செய்து, ஏராளமான பூஞ்சைகளை கண்டறிந்தார். இரண்டு பூஞ்சைகளுக்கு கார்வரின் பெயரிடப்பட்டிருக்கிறது.(Metasphaeria carveri  Cercospora carveriana) 

மிகப்பழைய  கோட்டும் ஒட்டு போடப்பட்டிருந்த ஏப்ரனுமாக எளிய தோற்றத்தில் இப்போதும் நினைவு கூறப்படும் கார்வர் அசாதாரணமான வாழ்க்கைப் பின்னணி கொண்டவர்.  (George Washington Carver- (1860s – January 5, 1943)  ஜனவரி 5, 1943 ல் இறந்த கார்வர் தனது வாழ்நாள் சேமிப்பான 60ஆயிரம் டாலர்களையும் அவரது அனைத்து சேமிப்புகளையும் டஸ்கெகீ பல்கலைகழகத்துக்கு விட்டுச் சென்றார்.

1943 ல் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஜார்ஜ் கார்வரை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த ஊரான   டயமண்ட் நகரில்  நினைவுச்சின்னம் எழுப்ப நிதி ஒதுக்கினார் அமெரிக்க அதிபர அல்லாதவர்களுக்கான சிலைகளில் இவருடையதே முதல் சிலை. கார்வரின் பெயரில் அமெரிக்க தேசிய பூங்கா தொடங்கப்பட்டது அதில்தான்  9 அடி உயர சிறுவனாக கார்வரின் உருவச்சிலை அங்கு அழகாக அமைந்திருக்கிறது. 

 கார்வெர் இயறகை மனிதர்களுக்கு பயன்படும் கருவியல்ல, மனிதன் இயற்கையின் பிரிக்கமுடியா அங்கம் என்று நம்பினார்.  மண் வளமே மக்கள் வளமென்றும் உறுதியாக நம்பினார் கார்வெர்     

 பரவலாக நம்மபடுவது போல பீ நட் பட்டர் எனப்படும் கடலை விழுது கார்வெரால் உருவாகப்படவில்லை இன்கா பழங்குடியினர் அதை கி மு 950லேயெ கண்டுபிடித்திருந்தனர்,அதன் மேம்பட்ட வடிவத்தை 1895ல் ஜான் ஹார்விகெல்லாக் (Dr. John Harvey Kellogg), கண்டறிந்திருந்தார்