Aani Ek is the new artisanal feni to come out of Goa

அறிவியல் ஆய்வுகளின் முன்னோடி என்று கருதப்படும் வில்லியம் டேம்ப்பியர். (William Dampier) 17/18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இளம் வயதில் பெற்றொரை இழந்த இவர் 16  வயதிலிருந்தே  கடல் சாகச பயணங்களை மேற்கொண்டவர். அவகேடோ, பார்பிக்யூ, பிரெட் ஃப்ரூட் கட்டமரான், சாப்ஸ்டிக்ஸ் (Avocado, Barbecue, Breadfruit, Cashew, Catamaran, Chopsticks ) போன்ற பல நூறு சொற்களை உலகிற்கு தனது கடற்பயண நூல்களில் முதன் முதலில் எழுதி அறிமுகப்படுத்திய இவர் ஒரு கடற்படை தலைவர் மாலுமி, இயற்கையாளர் மற்றும் உலகை மூன்று முறை கடல் வழி சுற்றி வந்த முதல் மனிதர் என்னும் பெருமைக்குரியவரும் கூட. 1697 ல் வெளியான இவரது A New Voyage Round the World  மிகப்பிரபலமான கடற்பயண நூல்.

வில்லியம்  தனது பயணங்களில் பல இனக்குழுக்களை சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வின் இயங்கியலை அறிந்துகொள்வதிலும் இயற்கையின் அம்சங்களை கூர்ந்து அவதானிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். அவரது கடல்பயண அனுபவங்களை பல நூல்களாக எழுதியிருக்கிறார். அப்படி ஒரு நூலில் போர்ச்சுக்கீசியர்கள் ஒரு மரத்தின் பெயரை காஜு என்று பெயரிட்டிருப்பதை செவிவழி கேட்டு அதை கேஷூ என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார் என்கிறது வரலாறு அப்படி வில்லியம்ஸினால்  கேஷு என்று குறிப்பிடப்பட்டதுதான் நமது முந்திரி மரம்.

Anacardium occidentale  என்னும் அறிவியல் பெயருடைய பசுமை மாறா முந்திரி மரங்கள்  மத்திய மற்றும் வடகிழக்கு பிரேசிலை சேர்ந்தவை. ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு முன்பு அங்கிருந்த பழங்குடியினரால் இம்மரம் , மருந்து மற்றும் எரிபொருளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது

1558ல் ஃப்ரென்ச் இயற்கையாளர் திவெட்’டினால் (Thevet)  முந்திரியின் முதல் சித்திரம் வெளியானது 16ம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுக்கீசியர்கள் பிரேசிலிலிருந்து முந்திரி மரக்கன்றுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். 1703ல் வெளியான  வில்லியமின் ’’ஹாலந்துக்கான புதிய கடற்பயணம்’’ என்னும் நூலில்தான் முதன்முறையாக cashew என்று இம்மரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.1 பிரேசில் பழங்குடியினரின்  துபி (tupi) மொழியில்  முந்திரியை  கொட்டை என்னும் பொருள்படும் அகாஜு (acaju) என்று குறிப்பிடப்பட்டதை போர்ச்சுக்கீசியர்கள்  காஜு என்று அழைத்தார்கள்.

காட்டு முந்திரி மரங்கள்  பருமனான திருகிய  தண்டுடன் பத்து மீட்டருக்கும் மேலன உயரத்தில் வளர்பவை.  தற்போது முந்திரிக்கனிகள் அறுவடை செய்யப்படுவது தோட்டக்கலை துறையினரால் உருவாக்கப்பட்ட  குட்டையான ஒட்டுரகங்களிருந்தே!

இம்மரங்களின் நுண்ணிய நட்சத்திர வடிவத்திலிருக்கும், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும். இவை சார்ந்திருக்கும் அனகார்டியேசி குடும்பத்தின் மாமரத்திலும் இப்படித்தான் ஒரே பூங்கொத்தில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும் இதை தாவரஅறிவியல்  polygamous  என்கிறது. 

 இருபால் மலர்கள் கருவுற்றதும் சிறுநீரக வடிவிலான கொட்டை என்னும் கனி உருவாகும்.  மலர்களிலிருந்து கனி உருவாக சுமார் 55 லிருந்து 70 நாட்கள் தேவைப்படும். முந்திரிக்கொட்டை என்று அழைக்கப்படும் இவையே அம்மரத்தின் கனிகள். கொட்டை முழுவளர்ச்சி அடைந்த பின்னரே கனியெனப்படும் பகுதி முழுவளர்ச்சி அடையும். இக்கனியின் மேல்தோல் மிகமெல்லியதாக இருக்கும் நல்ல நறுமனத்தையும் கொண்டிருக்கும்

மலர்க்கொத்தின் காம்பானது  (peduncle) கனிக்கொட்டை உருவாகுகையில் விரிந்து சதைப்பற்றுடன் பிரகாசமான மஞ்சள் அரஞ்சு நிறத்தில் தலைகீழ் இதய வடிவில் வளரும். இதுவே பொதுவில் முந்திரிக்கனி அல்லது முந்திரிப்பழம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சதைப்பற்றான மலர்க்காம்பு பழமென்று அழைக்கப்பட்டாலும்  இது பொய்ப்பழம் . அசல் பழமென்பது முந்திரியின் கொட்டைதான்

இம்மரத்தின் அறிவியல் பெயரான அனகார்டியம் என்பது இந்த சதைப்பற்றான  பழத்தின் தலைகீழ் இதயவடிவை குறிக்கின்றது ’அன’ என்றால் தலைகீழ் கார்டியம் என்றால் இதய வடிவம்

ஆக்ஸிடெண்டாலிஸ் என்னும் சிற்றினப்பெயர் ’மேற்கிலிருந்து’ என்று பொருள்படுகிறது. ‘cashew apple’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தலைகீழ் இதயவடிவிலிருக்கும்  இந்த போலி முந்திரிப்பழம்தான்.

 உலகெங்கிலும் மிக அதிகம் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளிலொன்றாக இருக்கும் முந்திரிக்கொட்டையின் உலக உற்பத்தி  2018ல் மட்டும் 6மில்லியன் டன். இதில் 70 சதவீதம் வியட்நாம் மற்றும் இந்தியாவில் உற்பத்தியானது.  2018 ல்  முந்திரிக்கனியின் 1.7 டன் மொத்த  உற்பத்தியில் பிரேசில் மட்டுமே 90 சதவீதம் பங்களித்திருந்தது

முந்திரி தொழிற்சாலைகளில் கொட்டையோடுகளின் எண்ணெய் உபரித்தயரிப்பாக  இருக்கிறது இதில் அனகார்டிக் அமிலம் ,கார்டோல் மற்றும் கார்டனோல் ஆகியவை அடங்கி இருப்பதால் இந்த எண்ணெய் பலநூறாண்டுகளாகவே மருந்தாகவும் மரச்சாமான்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது 

 முந்திரி கொட்டையின் இரட்டை அடுக்கு உறையில் இருக்கும் பிசின் வகையை சேர்ந்த அனகார்டிக் அமிலம் சரும அழற்சியை உண்டாக்கும். முந்திரி கொட்டையின் ஒவ்வாமை என்பது பெரும்பாலும் இந்த உறையின் இந்தெ வேதிச்சேர்மானங்களால் உண்டாகும் ஒவ்வாமையே. ஒவ்வாமை உண்டாக்கும் கொட்டைஉறயின் அமிலம் cashew nut shell liquid, CNSL) எனகுறிப்பிடப்படுகின்றது 

 ஐரோப்பியர்களால் முந்திரி பிரேசிலில் 1558 ல் கண்டறியப்பட்டபோது இந்த ஒவ்வாமையினால் இக்கொட்டைகள் உண்ண தகுந்தவையல்ல என்றே கருதப்பட்டது. ஆனால்  துபி பழக்குடியினர் குரங்குகள் கற்களைக்கொண்டு கொட்டையின் மேற்தோலை உடைத்தும், பாறைகளில் கொட்டைகளை தேய்த்தும் ஓட்டை அகற்றி விட்டு உண்பதை கண்டபின்பு அவர்களும் அதே முறையை பயன்படுத்தி உண்ண துவங்கினர்.  பின்னர் கொட்டைகளை வறுத்து ஓட்டை நீக்கி எப்படி அதன் ஒவ்வாமையை நீக்குவது என்பதை கண்டறிந்து அம்முறையை ஐரோபியர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள் 

கொட்டைகளை வறுத்து சுவையாக உண்ன முடிந்ததை கண்டுகொண்டபின்னர் அச்சுவையே போர்ச்சுக்கீசியர்களை முந்திரி மரக்கன்றுகளை கோவாவுக்கு 1560ல் கொண்டு வரச் செய்தது.புதிய சூழலிலும் கன்றுகள் செழித்து வளர்ந்தன

போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாக பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன

. கி மு 200 – 300களில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில், பர்குட் கிராமத்தில் உள்ள பர்குட் (Bharhut) ஸ்தூபிகளில் இரு சீதாப்பழங்களும் இரு முந்திரிப்பழங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்புகட்டபட்ட  கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வேதங்களில் குறிப்பிட்டிருக்கும்    கஜுதக்கா மற்றும் வ்ருத அருஸ்கரா (Kazutaka & Vritta Aruskara),  என்பதும் முந்திரிகளையே குறிக்கின்றது எகின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தியர்கள் முந்திரியின் சுவையையும் மருத்துவ குணங்களையும் சேர்த்து கண்டுகொண்ட பின்னர்  16 ம் நூற்றாண்டின் பிற்பாதியில் முந்திரி இந்தியாவில்  வேகமாக பிரபலமாகியது.

கிழக்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதே சமயத்தில் முந்திரி அறிமுகமானது, வறுத்த முந்திரியின் மணம் பரவி பல கலாச்சாரங்களிலும் முந்திரி முக்கிய இடம் பிடிக்க துவங்கியது. கடற்கரை மணலரிப்பை தடுக்கும் பொருட்டு ஹவாய், மடகாஸ்கர் இலங்கை உள்ளிட்ட  மேலும் பல நாடுகளிலும் அச்சமயத்தில் முந்திரி அறிமுமானது.

அமெரிக்கவிற்கு முந்திரி 1905ல் அறிமுகமானதாக வரலாறு குறிப்பிடுகிறது 1920 வரையிலும்  அங்கு அத்தனை பிரபலமாகி இருக்காத முந்திரி 1941ற்கு பிறகே பெரும்பான்மையான புழக்கத்திற்கு வந்திருக்கிறது 1941 க்கு பிறகு இந்தியாவிலிருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு வருடத்திற்கு சுமார் 20,000 டன்  முந்திரிக்கொட்டைகள் கடல் வழி ஏற்றுமதியானது    

வறுத்த முந்திரிக் கொட்டையின் சுவையை மகிழ்ந்தனுபவித்த போர்த்துகீசியர்கள் கோவாவில் பயிரான மரங்களிலிருந்து கொட்டைகளின் அறுவடைக்கு பின்னர் வீணாகும் ஏராளமான பழங்களை உபயோகப்படுத்தும் விதமாக கனிச்சாற்றிலிருந்து மதுவை உருவாக்கி அருந்தினர் . அந்த மரபு இன்னும் அங்கு  நானூறாண்டுகளாகவே நீடிக்கிறது 

 முந்திரிப்பழத்தின் சதையை கூழாக்கி நொதிக்க செய்து  கோவாவில் மட்டும் தயாரிக்கப்படும் மதுபானம் ஃபெனி அல்லது ஃபென்னி எனப்படுகின்றது.

 இரட்டை வடித்தல் மூலம் கிடைக்கும் 45 சதவீத்திற்கும்  அதிகமான  ஆல்கஹாலை கொண்டிருக்கும் ஃபெனி கோவாவின் அடையாளங்களிலொன்றாகவே  கருதப்படுகிறது 

முந்திரி கனிகளில் பிரக்டோஸ், குளுக்கோஸ், கனிமத்தாது உப்புக்கள், பல முக்கிய அமினோ அமிலங்கள், மற்றும் அதிக அளவு அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உள்ளன

.ஃபெனியின் தோற்றம் குறித்த முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை 1740ல் போர்ச்சுக்கீசியர்கள் ஃபெனியிலிருந்து மதுபானம் உண்டாக்கும் முறையை கோவா நகர மக்களுக்கு கற்றுக்கொடுத்ததகவே பெரிதும் நம்பப்படுகிறது.

ஃபெனி உருவாக்கம்

கனியின் சதைப் பகுதி பாறை கற்களால் நசுக்கப்பட்டு கூழாக்கப்பட்டு சிறு மலைபோல குவிக்கப்படும். முன்பு கற்களால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நசுக்குதல் இப்போது அழுத்தும் கருவியான    பிங்ரி’யினால் செய்யப்படுகின்றன.{pingre (cage.} . கால்களால் நசுக்கப்படும் முறையும் பயன்பாட்டில் இருக்கிறது.

கைகளால் பிசையப்பட்டு நூடி என்னும் காட்டுக்கொடியால் கட்டப்படும் (vine- nudi,) சதைக்கூழ் குன்றுகள்  ஒரு கனமான பாறைக்கல்லினால் இரவு முழுவதும் அழுத்தப்படுகிறது.

கனிகளை கொட்டி நசுக்கும் கற்களால் ஆன இந்த தரைப்பகுதி கோல்மி (collmi)  எனப்படும்.  இக்கூழ் குன்றிலிருந்து வடியும் சாறு  நீரோ   (neero)

நீரோ முந்திரிக்கனிச்சாறு நிலத்தில் ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும் குடம் போன்ற மண் அல்லது செப்பு பாத்திரங்களுக்குள் செலுத்தப்பட்டு. பல  நாட்கள் இயற்கையாக நொதிக்க செய்யப்படுகிறது.  நொதித்த திரவம் 3 நாட்களுக்கு பிறகு பான்ஸ் எனப்படும் செம்புக் கொதிகலன்களில்  ‘(bhanns ) இவை காய்ச்சி வடித்தலுக்கு உள்ளாகின்றன.

எந்த நுண்ணுயிர்களும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படாத ஃபெனி வடித்தல் பாட்டி எனப்படுகிறது (‘bhatti).  

ஒற்றை வடித்தலுக்கு பிறகு கிடைக்கும் 15 சதவீத ஆல்கஹால் கொண்ட பானம்  அரக் (urrac) எனப்படுகிறது.  

உர்ரக் மீண்டும் நீரோவுடன் கலக்கபட்டு 40-42 சதவீத ஆல்கஹால் இருக்கும் திரவமான   காஜுலோ (cazulo) கிடைக்கின்றது. காஜுலோ மீண்டும் உர்ரக்குடன் கலக்கப்பட்டு வடித்தலுக்கு உள்ளாகையில் 45 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கொண்டிருக்கும் ஃபெனி ஆகிறது. ஃபெனி நெடியுடைய மது

ஃபெனி என்பது  நுரையை குறிக்கும் சமஸ்கிருத சொல்லான ‘phena’விலிருந்து உருவானது.  குசுக்கப்பட்ட பாட்டிலிலிருந்து கோப்பைகளில் ஊற்றப்படுகையில் நுரைத்துப் பொங்கும் இம்மதுவின் இயல்பால் இப்பெயர் வைக்கப்பட்டது

கோவாவில் முந்திரியிலிருந்தும் இளநீரிலிருந்தும் ஃபென்னி தயாரிக்கப்படுகிறது. இளநீர் ஃபெனி மாட்டல்ஃபெனி எனப்படுகிறது. (Maddel fenny ) 2009ல் ஃபெனி புவிசார் குறியீடு பெற்றிருகிறது.2 கோவா அரசு ஃபெனிக்கு கலாச்சார அந்தஸ்தும்  அளித்திருக்கிறது3 .இந்திய மது வகைகளில் புவிசார் குறியீடு பெற ஒரே மது வகை ஃபெனியே. ஃபெனி கோவாவில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது  

கோவாவில் மட்டும் சுமார் 4000 வடிசாலிகள் ஃபெனிக்கென்றே இயங்குகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் ஃபெனியில் சுமர் 70 சதவீதம் கோவா மக்களுக்கே செலவாகிறது மீதியே சுற்றுலாப்பயணிகளுக்கு சந்தைப் படுத்தப்படுகிறது. வடிசாலிகளில் மட்டுமல்லாது பல குடும்பங்களில் அவர்களின் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலேயே ஃபெனி உருவாக்கபடுகிறது. 

 கோவாவின் பிரத்யேக ஃபெனி அருந்தும் முறையென்பது ஃபெனியை தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி அருந்துவதுதான். ஃபெனி ஐஸ்கட்டிகள் கலந்தும், கலக்காமலும் அருந்தப்படுகிறது. அதனுடன் கடல் உணவுகள் பொருத்தமானதாக அமையும். ஒரு துண்டு எலுமிச்சை அல்லது உப்பு தூவப்பட்ட பச்சைமிள்காயுடனும் ஃபெனியை அருந்துபவர்களும் உண்டு 

கோவாவை சேர்ந்த நந்தன் குட்சத்கர்  ஃபெனி அருங்காட்சியகம்  ஒன்றை கோவாவின் அழகிய கடற்கரை கிராமமொன்றில் அமைந்திருக்கிறார். இங்கு ஃபெனியை குறித்த ஆயிரக்கணக்கான தகவல்களும் ஃபெனி சீசாக்களின் மாதிரிகளும் உள்ளன. நூற்றண்டுகள் பழமையான ஃபென்னியும் அங்குள்ளது

இந்தியாவின் முந்திரி தொழிற்சாலை துவக்கம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் அதிகம் இல்லை எனினும் 1920களில் இலங்கையிலுருந்து கொல்லம் வந்த ரோச் விக்டோரியா (Roch Victoria) என்பவர் வணிக ரீதியான பெரும் முந்திரி தொழிற்சாலையை அங்கு உருவாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன 

கொல்லத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டு, வறுத்து  நச்சு நீக்கபட்ட  தரமான முந்திரிகள் அமெரிக்கவிற்கு ஏற்றுமதியாகி இருக்கின்றன 

 டான்ஸானியாவில்  உலர்ந்த முந்திரிக்கனிகளிலிருந்து சாறெடுத்து வடித்தலுக்கு உள்ளாக்கி உண்டாக்கப்படும் மிகக் கடும் மது வகை  கோங்கோ (gongo.) எனப்படுகிறது.

முந்திரிப்பழங்களிருந்து நொதித்தலுக்கும் வடித்தலுக்கும் உட்படுத்தப்படாத ஆல்கஹால் சிறிதும் இல்லாத  பானம் காஜுனா (Cajuína). ஆல்கஹாலுக்கு எதிரான நடவடிக்கையாக பிரேசிலின் ஒரு மருந்தாளுநரால் உருவாக்கப்பட்ட இந்த பானம் இப்போது பிரேசிலில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது

முந்திரிக்கொட்டைகளை கனியிலிருந்து பிரித்து நச்சுநீக்கம் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு கொட்டையின் ஓட்டு எண்ணெயால் உடல் பாதிப்புகள் உருவாகின்றன மேலும் கனியிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுப்பது அதிக உடலுழைப்பை கோரும் பணி இதனாலேயே முந்திரி கொட்டைகள் விலை கூடியவைகளாக இருக்கின்றன

இந்தியாவின் முக்கிய முந்திரி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா.. மொத்த உலக உற்பத்தியில் இந்தியா 23 சதவீதத்தை பங்களிக்கிறது

1 A voyage to New Holland, &c. in the year (1703). 

2.Certificate of Geographical Indication Registration for Feni

3.  “Goa government readies to brand ‘Feni’ as ‘heritage brew'”. Mid-Day. 23 January 2016. 

4. ஃபெனி உருவாக்கம் குறித்த காணொளி :https://youtu.be/vR1rMG7DEKw