ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

ஜெ தளத்தில்  தே குறித்த கடிதம் வந்த வாரத்திலேயே’ தே, ஒரு இலையின் வரலாறு’ வாங்கிவிட்டேன்.  இன்று June 12, 2021 அதிகாலை தொடங்கி ஒரே மூச்சில்  3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.

ஏழை விதவையின் மகனான  21 வயது , ராய் தேயிலை அல்லது புகையிலை  தோட்ட மேலாளராக தனக்கு வேலை  தேவை என்னும் விளம்பரத்தை  வெளியிட்டதில் தொடங்கும் நாவல்  மொத்தம்  250 பக்கங்களில்  தே’ இலையின் வரலாறு மற்றும் வளர்ச்சியை முழுக்க சொல்லுகின்றது. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பு சிறப்பு..தட்டச்சு பிழை திருத்தலில் மட்டும் இன்னும் சிறிது கவனமாக இருந்திருக்கலாம் .

கார் ஓட்ட தெரியும் என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு  தேயிலை வளர்ப்பு குறித்தும், நியூசிலாந்தை குறித்தும்  ஏதும் அறியாமல், அங்கு பேசப்படும் மொழியுமே தெரியாமல்  துணிச்சலாக புறப்படும்  ராயுடன்  விமான நிலையத்தில் குடியுரிமை சரி பார்த்ததிலிருந்து  பயணித்து தேயிலையின் வரலாற்றை, வளர்ச்சியை முழுக்க  அறிந்து கொண்டது   ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அளித்தது .

1747 ல் நடக்கும் ஒரு படகு கொள்ளையில் தொடங்கும் நாவல் அதன்பிறகு 1559’ல் எழுதப்பட்ட தேயிலை குறித்த  முதல்  குறிப்புகளிலிருந்து துவங்கி வரிசைக்கிரமமாக தேயிலையின் வரலாறு,  கண்டுபிடிப்பு,  தேநீர் தயாரிப்பு அதன் வகைகள், புதிய பிராண்டுகள், கலப்படங்கள், சட்டங்கள், அடிமைகள், கூலி தொழிலாளர்கள், பல்லாயிரக்கணக்கான  இறப்புக்கள் என்று  விரிகின்றது.

தேயிலையின் தாவரவியல் சார்ந்த  தகவல்களை தவிர, இதில் சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை குறித்து  எந்த அறிதலும் இன்றி கடைகளில் வாங்கி வந்த தேயிலைத்தூளை கொதிநீரில் இட்டு  ஒரு கோப்பை தேநீரை ரசித்து அருந்தி கொண்டிருந்திருக்கிறேன் என்பதுதான் பக்கத்துக்கு பக்கம் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. அந்த காலத்துக்கே மிகை என்னும் படிக்கு பல கொலைகள், மரண தண்டனைகளும் , பிற பல சுவாரஸ்யமான சம்பவங்களும்  இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

போர்ச்சுக்கல் அரசரொருவரின் மகளான காத்தரின் தனது வருகையை தெரிவிக்க எழுதப்பட்ட கடிதம் அவளது வருங்கால கணவருக்கு அனுப்படுகையில் அவர் நிறை கர்ப்பமாக இருக்கும் காதலியின் வீட்டில் இரவுணவு அருந்திக் கொண்டிருக்கிறார். இளவரசியின் வருகைக்கென அனைத்து வீட்டின் முன்பும் ஏற்றப்பட்டிருக்கும் கொண்டாட்ட நெருப்பு அந்த காதலியின் வீட்டு முன் ஏற்பட்டிருக்கவில்லை. காத்தரின் வரதட்சணை பொருட்களில் ஒரு பெட்டி தேயிலையும் இருக்கிறது.

சீனாவில் மிக சாதாரணமாக புழகத்தில் தேநீர் வந்து பல நூறு வருடங்கள் கழித்தே  ஐரோப்பாவிற்கு  வந்திருக்கிறது. 1652 களில் உருவான  முதல்  காபி ஹவுஸ்களில் பார்சல்  காப்பியும் தேநீரும்  வழங்கப்பட்டிருக்கிறது. உயர்குடியினர் பல தேநீர் கடைகளுக்கு அடுத்தடுத்து செல்லும் வழமையும், அவர்களை  தூக்கி செல்ல ’செடான்’ இருக்கைகளும் தூக்கு கூலிகளும் இருந்திருக்கிறார்கள். தேயிலைக்கான  ஏலம் கொளுத்தப்பட்ட மெழுகுதிரி ஓரங்குலம் எரிந்து முடியும் வரையிலும் ஏற்கபட்டிருக்கிறது, தேநீர், பானம் என்பதால் அதன் அளவுக்கேற்ப வரிவிதிக்க பட்டிருக்கிறது.

1757’ல்  ‘வீட்டில் கிடைக்கும் நல்ல  உணவில் திருப்தியில்லாமல் எங்கோ தொலை தூரத்தில் கிடைக்கும் சுவைக்காக மக்களின் கொடிய நாக்கு ஏங்கும் நிலை’  என்று  முதல் அத்தியாயத்தின் துவக்கத்தில்  ஜோனஸ்  சொல்லியிருப்பது நியாயம்தான் என்னும்படிக்கு  மக்களின் ஆதரவுடன் நடந்த தேயிலை கடத்தலும், அவ்வியாபரங்களில் நடந்த பல உள்ளடி வேலைகள்.சதிகள்  எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தேயிலையின் கலப்படத்தில்  ஸ்லோ, எல்டர் உள்ளிட்ட பல  மரங்களின் இலைகளும், இரசாயனங்களும், சாயங்களும், ஆட்டுச்சாணமும் கூட பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ’அடப்பாவிகளா, அப்போவே வா! ’ என்று அங்கலாய்க்க தோன்றியது.

தேநீர் அருந்துவதற்கு சார்பாகவும், எதிராகவும்  எழுதப்பட்ட கட்டுரைகள் வெகு சுவாரஸ்யமானவை. தேநீர் பூங்காக்களில் முதலில் உயர்குடியினர் சந்திப்புகள் நடந்திருக்கிறது,  பின்னர், மலிவு விலை புத்தகங்கள் தொடங்கி, சின்ன சின்ன வியாபாரங்களும். கொள்ளைக்கான  திட்டமிடல்களும் நடந்து,  பின்னர் கைதுகள் கூட அங்கேயே நடந்திருக்கிறது.

கல்கத்தாவில் 1819 ல் தொடங்கப்பட்ட  தேநீர் கேளிக்கையகத்தில் தேநீரை மேசை மீதோ அல்லது  அருகில் இருப்பவர் மீதோ கொட்டுபவர்களுக்கு இரண்டு அணா அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது மருந்துப் பொருளாக விற்கப்பட்டு கொண்டிருந்த தேநீர் பின்னர் பானமாகி மளிகைகடைக்காரகளும்  தேநீர் மற்றும் தேயிலை விற்பனையில் ஈடுபட்ட போது, தேயிலை முகவர்களுக்கான  அனுமதி சான்றிதழ்  கடைகளுக்கு முன்பு தொங்க விடப்படுவது கட்டாயமாக்க பட்டிருக்கிறது..

தேயிலை இறக்குமதி திடீரென  குறைந்தபோது  அமெரிக்கர்கள் ரோடோடென்ரான் செடிகளின் இலைகளில் இருந்து லாப்ரடார் தேயிலை தயாரித்திருக்கின்றனர். இன்றும்  அந்த தேயிலை பல நாடுகளில் புழக்கத்தில் தான் இருக்கிறது.

இடையிடையே  வரும் தேநீரையும் தேயிலையையும் குறித்த

‘’கொஞ்சம் தேயிலை கலந்தது கடலிலே

நூறாயிரம் பேர் ரத்த வெள்ளத்திலே’’

போன்ற  பாடல்களும் கவிதைகளும் அப்போது இந்த பானத்துக்கு இருந்த பிரபல்யத்தை சொல்லுகின்றன.

சீனாவில் தேயிலையின் தோற்றம் குறித்த பகுதிதான் இந்நூலில்  ஆகச் சிறந்தது என்று சொல்லலாம். காலத்து ட்டு தான் ச்சா வா என்பதில் தொடங்கி, ஹான் அரச வம்சம்,  டாங், மிங், அரச வம்சத்தினரின் ஆட்சிகளின் போது தேயிலையின் வரலாறு  பயன்பாடு, விற்பனை, வளர்ச்சி அனைத்தும் விரிவாக சொல்லப்படுகின்றது.

கண்டடைய முடியாத தேயிலைக்கான தேடல்கள், ”நீர் கொதிக்கையில் அது மீன்களின் கண்களை போன்று இருக்க வேண்டும் ”என்னும் தேநீருக்கான ரெசிப்பி, தேநீர் சடங்க்குகள்,.கொதிக்கும் நீரில் தேயிலையை வேகவைத்து தயாரிக்கப்பட்ட தேநீர் பின்னர் கொதிநீரை தேயிலைத்தூளில் ஊற்றி தயாரிக்கப்பட்டது, தேயிலை கொட்டப்படும்மேசையின்  ஜென்  நடுக்குழிவு, வித்தியாசமான நீள வரிசை ஜப்பானிய  தேயிலை தோட்டங்கள்,  அறுவடைக்கு முன்னர் போர்வைகள் கொண்டு மூடப்படும் தேயிலை செடிகள், மிங் ஆட்சியில் அறிமுகமான சீன களிமண்,கப்பலின் பலாஸ்டிங்க்கிற்காக  அவற்றை பயன்படுத்தி அப்படியே ஏற்றுமதியும் செய்தது, மன்னரொருவர்  தனது இறப்புக்கு பின்னர் தேயிலைகளை படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது, மிங்கு’கள்  தேயிலையுடன் மலரிதழ்களையும் கொதிக்க வைத்து தேநீர் தயாரிப்பது   என்று புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவுக்கு ஏராளமான விஷயங்கள் அடுத்தடுத்து வருகின்றன.

தேயிலை தோட்டங்களில்  இன்றைக்கு வரை  கடைப்பிடிக்கப்படும் அறுவடை செய்ய வேண்டிய ‘’ ஒரு இலை மொக்கு,இரண்டு தளிர்கள், அல்லது  ஓரு மொக்கு, ஒரு தளிர்  அல்லது ஒரு இலை மொக்கு மட்டும்  என்ற   ‘’flush , golden flush’’  வரையரறைகள்   அப்போதே தீர்மானிக்க பட்டிருக்கின்றன.

1628 ல் சீனாவில் ஓபியம் தேயிலையின்  இடத்தை ஆக்கிரமித்ததை சொல்லும் அத்தியாயத்தில்,   மால்வா என்றழைக்கப்டும் ராஜஸ்தான் ஓபியமும் குறிப்பிடப்படுகிறது.  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில ஆளுமைகள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். உறங்காமல் இருக்க உயரமான  மேசை மீது ஏறி நின்று கொண்டு இரவெல்லாம்  விழித்திருந்து  ஓபியம் கடத்தலை  தடுக்க பணியாற்றுகிறார். சண்டைக்காரரும் ராஜதந்திரிமான   பாமெர்ஸ்டன் பிரபு , 1880களில் நடந்த தேயிலை கப்பல்களின்  ஓட்டப் போட்டியில் மிக விரைவாக சென்று   பரிசு தொகையை வாங்கிய.  வில்லியம் கிளிப்டன் என்னும் மாலுமிக்கு பிறகு  விரைவாக சென்று தேயிலையை சேர்க்கும் கப்பல்கள் பின்னர்  கிளிப்பர்ஸ் என்றே  அழைக்க பட்டிருக்கின்றன.

தேயிலை தோட்டங்களின் ஒரு அங்கமாக இருந்த யானைகளில். 1300 யானைகளைக் கொன்ற  ஒரு ஆங்கிலேயர் 41 வயதில் மின்னல் தாக்கி இறந்து போகிறார்.  ராணுவத்தினரின் உபயோகப்படுத்தப்பட்ட கோட்டுகள் தோட்ட தொழிலாளர்களுக்கு குளிருக்கு பாதுகாப்பாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் கொல்கத்தா தாவரவியல் பூங்காவுக்கு  வரவழைக்கப்பட்ட தேயிலை விதைகள்  துளிர்த்து இந்தியாவில்  தேயிலை செடிகள் நுழைகின்றது. தேயிலை வளர்ப்பை பிறருக்கு சொல்லி விட கூடாதென்று கொல்லப்பட்ட 12 சீனர்களிலிருந்து ,  மரணங்கள்  கொலைகள், சவுக்கடிகள்,  உடல் உறுப்புக்கள் வெட்டப்படுவது, பெண்கள்  மானங்கப்டுத்தபடுவது,, பிரம்படிகள் என பல பக்கங்கள் வலியிலும், வேதனையிலும் கண்ணீரிலும் ரத்தத்திலும்  நிறைந்துள்ளது.

நூலை  ஆழ்ந்து வாசித்தவர்கள் பின்னர் ஒரு கோப்பை தேநீர் கூட குற்றவுணர்வின்றி அருந்தமுடியாது .  மேல் அஸ்ஸாமில் கண்டுபிடிக்கப்பட்ட கெமிலியா அஸ்ஸாமிகா   வகையும் பின்னர் நடைபெற்ற  இனக்கலப்பு களும் விரிவாகச்  சொல்லப்பட்டிருக்கிறது

தேயிலையின்வரலாற்றை சொல்லும் பல நூல்களில் இல்லாத,  இந்தியாவில் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் இண்டிகோ சாயத்தையும் இண்டிகோ தோட்டங்களை குறித்தும்   கொஞ்சம் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளை உணவுப் பயிர்களுக்கு பதிலாக இண்டிகோவை பயிராக்கச்சொல்லி கட்டாயப்படுத்திய கதைகளை எல்லாம் ஒரு நூலாகவே எழுதிவிடலாம். அத்தனை கொடுமைகள் நடந்தது இப்பயிரினால்.

நான்சிறுமியாக இருக்கையில் அவுரி எனப்படும் இந்த இண்டிகோ செடியை என் பாட்டி பறித்து வர சொல்லி அரைத்து,  சாணி மெழுகிய  தரையில்  ஓரத்தில் இந்த விழுதால் நீலச்சாய கரையிடுவார். பல நாட்களுக்கு சாணிக்கறை போன பின்னும் நீலக்கறை அழியாமல் இருக்கும்..இன்றைக்கு நம் வீட்டு வாசலிலும்  சாலை ஓரங்களிலும் படர்ந்து கிடக்கும் இவை,  உலர்த்தப்பட்டு, தலைமுடிச் சாயத்திற்கென அமேசானில் விற்கப்பட்டு  காசாகிறது.

சிறில் அலெக்ஸ்

உயிரை காப்பாற்றிய சிவப்பு வைன்,  குயினைன் கருப்பு தண்ணீர் காய்ச்சல் உண்டாக்குவது  போன்ற   அப்போது நம்பப்பட்ட பல மருத்துவ தகவல்களும் உண்டு தேயிலை தோட்டக் கூலிகள் அவர்களின் சம்பளம், அவர்களை கண்காணிக்க அமர்த்தப்பட்ட  கங்காணிகள், கூலிக்காரர்களை கொள்ளையடிப்பது, கொத்தடிமை முறை,  5 வயது குழந்தைகளும் தோட்ட வேலை செய்வது, கணக்கில்லாத மரணங்கள் என்று அசாமில் நடந்த கொடூரங்கள் மனதை கனமாக்குகிறது.இத்தனைக்கு பிறகும் சொல்லப்பட்ட கொடுமைகள் உண்மையில் நடந்ததில் சிறிதளவே என்று வாசிக்கையில் கண் நிறைந்துவிட்டது

மசாலாவுக்கு பிரபலமாயிருந்த சிலோனில்  தேயிலை  அறிமுகமாகின்றது.  மஞ்சள் பூஞ்சை நோயால் காபி பயிர்கள் அழிந்த பின்னர் தேயிலை  அந்த இடங்களை பிடிக்கிறது. ’’மடிந்த காபி செடிகளின் கிளைகளுடன் வெட்டப்பட்ட  மரத்தண்டுகள்   தேநீர் மேசைகளுக்கு கால்களாக வைக்கப்பட்டன’’ எனும் வரி ஒரு பெரிய வீழ்ச்சியையும் ஒரு புதிய அறிமுகத்தையும் எளிதாக சொல்லிவிடுகிறது.

கல்கத்தாவிலிருந்து அசாம் தேயிலை செடியின் விதைகள் கண்டிக்கு அருகிலிருக்கும் பேராதனை ராயல் தாவரவியல் பூங்காவுக்கு வரவழைக்கப்படுகிறது.ஆங்கிலேய ஆட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று இந்த  தாவரவியல் பூங்காக்கள். 1821 ல் ஆறு வளைந்து செல்லும் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தாவரவியல் பூங்காக்களுக்கு செல்வது குறித்த என் பல கனவுகளில் நிறைவேறிய  ஒரே ஒரு கனவு நான் இந்த பேராதனை தாவரவியல் பூங்காவுக்கு சென்றதுதான். நிச்சயம் பல நாட்கள் செலவழித்தாலே முழு பூங்காவையும் பார்க்க முடியும் என்றாலும் எனக்கு ஒரு முழு நாள் வாய்த்தது. நான் பார்த்து பிரமித்த, தாவரவியல் படிக்கும் மாணவர்கள்  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் பூங்காக்களில் இதுவும் ஒன்று. அத்தனை வசீகரமான, விஸ்தாரமான , பிரமாதமான பூங்கா அது.  அங்கிருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பான உலர் தாவர சேகரிப்பு மிக சிறப்பானதாக இருந்த்து.

இந்திய தேயிலை குழுமம் மற்றும்   இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி கழகம் உருவான பின்பு    தேயிலை வளர்ப்பில் உரங்களின் பயன்பாடு, விதைகளுக்காக   தாய் செடியை தெரிவு செய்து அதிலிருந்து  நல்ல விதைகளை சேகரிப்பது, நோய் கட்டுப்பாடு  ஆகியவற்றினால் விளைச்சலும் கூடுகிறது கேளிக்கை விருந்துகளும் கிரிக்கெட் புல்வெளிகளுமாக தேயிலைதோட்டங்கள் நவீனமடைகையில் மிக மெல்ல தொழிலாளர்களின் நிலையும் உயர துவங்குகிறது.

புரூக் பாண்ட், லிப்டன், டை-ஃபூ, கோஆப் தேயிலை பிராண்டுகள் ஒவ்வொன்றும் உருவானதின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.  பரிசு ஸ்டிக்கர் திட்டம் மட்டுமல்லாது விதவைகள் ஓய்வூதிய திட்ட மெல்லாம் கூட தேயிலை தூள் பாக்கட்டுகள் வழியே மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

டீ பேக் எனப்படும் தேயிலை பைகள்  தற்செயலாக, தவறுதலாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நியூயார்க் தேயிலை வியாபாரி தனது உயர்குடி வாடிக்கையாளர்களுக்கு பட்டுத்துணியில் பொதிந்த தேயிலை தூள் அனுப்பியபோது , அவர்கள் அதை துணியுடன் கொதிக்கும் நீரில் இடவேண்டுமென தவறாக புரிந்துகொண்டு விடுகிறார்கள்.  பின்னர் இன்னும் மெல்லிய துணியில் பொதிந்து கொடுத்தால் வசதியாக இருக்குமென்னும் அவர்களின் கோரிக்கையில் பிறந்திருக்கிறது இப்போது பல கவர்ச்சிகரமான வடிவங்களில் சந்தைப்படுத்தப்ட்டிருகும் தேயிலை துணிப்பொதிகள்

முதல் அத்தியாயத்தில்  நியூசிலாந்து தேயிலை  தோட்டங்களுக்குள் சென்று மறைந்துவிடும் ராய் பின்னர் இறுதி அத்தியாயத்தில் தான் புலப்படுகிறார். வேலையையும் மொழியையும் கற்றுக்கொள்கிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில் ஓட்டுநர் உரிமம் வாங்கி விடுகிறார். லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரி  ராய்க்கு வைக்கும் சோதனை மிக புதுமை . ஐரோப்பியர் குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்று நம்பும் ஆப்பிரிக்க தாய்மார்கள் ராயை கண்டதும் குழந்தைகளுடன் ஒளிந்து கொள்கிறார்கள். .

ராய் வீடு திரும்பும் ஓரிரவில் ரேபிஸ் வெறிபிடித்த நாயொன்று அவர் வீட்டு கூடத்தில் நிற்கிறது, மற்றொரு இரவில் ராயின் காரில் மாட்டிக்கொள்ளும் முயலை  சாலையோரம் இருந்து கால் நீட்டி தட்டி பறிக்கின்றது சிறுத்தை  ஒன்று. காசோலைகள் இளம் பன்றியின்  பின்பக்கத்தில் எழுதித்தரப்பட்டு, அதே பின்பக்கத்தில் ஸ்டாம்ப்பு, வைக்கப்பட்டு  பணம் கைமாறிய பின்னர் பன்றி வங்கி ஊழியர்களுக்கு உணவாகிறது. இப்படி ராயின் நியூசிலாந்து அனுபவங்கள் நமக்கு   பெரும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன

தேயிலையின் வரலாறை போலவே, பிற முக்கியமான வணிக பயிர்களுக்கும் பணப்பயிர் களுக்கு இருக்கும் வரலாறையும், தொடர்புள்ள   சுவாரஸ்யமான உண்மை கதைகளையும் இப்படி  சொல்லி கற்றுக் கொடுத்தால் அதிகம் பேர் தெரிவு செய்யாத,  விலக்கி வைக்கிற, தாவரவியல் துறைக்கு மாணவர்கள்  விரும்பி வந்து சேர்ந்து கற்றுக் கொள்வார்களாயிருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் சிவப்பு தேயிலை செடிகளில் இருந்து கிடைக்கும் Rooibos tea எனப்படும் செந்தேநீர் , கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலை செடிகளில் இருந்து  இப்போது கிடைக்கும் அந்தோசயனின் நிறமிகள் அடர்ந்திருக்கும் ஊதா தேயிலை, சின்ன சின்ன ஜவ்வரிசி பந்துகள் மிதக்கும் குமிழி தேநீர், வெள்ளை தேயிலை, பச்சை தேயிலை, என்று நமக்கு கிடைக்கும் இத்தனை தேநீருக்கும் தேயிலை வகைகளுக்கும் பின்னே  பல்லாயிரக்கணக்கான அப்பாவி தொழிலாளர்கள் கண்ணீரிலும் குருதியிலும் எழுதப்பட்ட  நெடிய வரலாறு இருக்கிறதென்பதை இனி ஒவ்வொரு கோப்பை தேநீரும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.

சிறில் அலெக்ஸ்’க்கு வாழ்த்துக்கள்