குற்றத்திகில் வகையை சேர்ந்த  வலைத்தொடரான நவம்பர் ஸ்டோரி   தமிழ் , இந்தி,  தெலுங்கு மொழிகளில்  2021 மே 20  அன்று டிஸ்னி- ஹாட் ஸ்டாரில் வெளியானது. இயக்கம்  இந்திரா சுப்பிரமணியன், தயாரிப்பு விகடன் குழுமம்.

 தமன்னா மற்றும் பசுபதி முன்னணி பாத்திரத்தில். இவர்களுடன் GM குமார், விவேக் பிரசன்னா, நமிதா கிருஷ்ணமுர்த்தி, குழந்தை நட்சத்திரம்  ஜானி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். 

மொத்தம் ஏழு அத்தியாயங்கள். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபல குற்றக் கதை நாவலாசிரியர் அவருக்கு சொந்தமான, விற்பனைக்கிருக்கும் ஒரு பழைய வீட்டில், கொலையான ஒரு சடலத்துடன் இருக்கிறார். அவருக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. அவரது மகளான அனு என்னும் தமன்னா அப்பாவை காப்பாற்றவும், கொலையை துப்பு துலக்கவும் தடயங்களை மறைக்கவும் முயற்சிப்பது தான் கதை

தமன்னா ஒரு ஹேக்கர். காவல்துறையின் எல்லா ஆவணங்களையும் கணினி மயமாக்குதலில் அவரும் நண்பரும் ஈடுபட்டிருக்கிறார்கள். அல்ஸைமர்ஸ் பிரச்சனையால் அவதிப்படும் அப்பாவை குணமாக பணத்தேவையில் இருப்பதால் அப்பாவின் விருப்பமின்றி சொந்த வீட்டை விற்கும் முயற்சியில் இருக்கிறார்,ஒரு ஜான் முன்னே போனால் இரண்டு முழம் சறுக்குக்கிறார்

 அப்பாவை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல துணியும் மகளாக தமன்னா. பிற கதாபாத்திரங்களுடன் இணைந்து போக முடியாத நிறமும் உடல்வாகுமாக இருப்பது தமன்னாவுக்கு ப்ளஸா மைனஸா என்றூ பட்டிமன்றமே நடத்தலாம்,  இந்த 7 அத்தியாயங்களிலும் பெரிய வேறுபாடுகள் இல்லாமல்  ஒரே மாதிரி இறுக்கமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.

 கதாநாயகிக்கு பிரச்சனைகள் வரலாம்தான் அதற்காக இப்படியா? தமன்னாவை கதையில் எப்போதும், எல்லா திசைகளிலும் பிரச்சனைகள் சூழ்ந்துகொண்டு நெருக்குகிறது.  முழு தொடரையும் தமன்னாவை நம்பி, அவரை முதன்மைப்படுத்தியே கொண்டு போகும் உத்தேசம் இருந்தால் காதலன் ரோலும்  இல்லவே இல்லை.  தனித்தனி சரடுகளாக கதைகள் வந்து பின்னர் எல்லாம் இணைந்து கொள்கின்றன. 

-கருப்பு வெள்ளையில் கன்னியாஸ்த்ரீ வளர்க்கும் ஒரு தாயில்லா சிறுவன், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டுமென்னும் அவன் கனவு, அவனுக்கிருக்கும் உளவியல் மற்றும் சமுதாய சிக்கல்கள்,

-தமன்னாவின் பணச்சுமை, ஹேக்கிங் செய்வதில் உண்டாகும் பிரச்சனை, அப்பாவினால் உண்டாகும் குழப்பங்கள், வீடு விற்பதில் பிரச்சனை, கொலையில் அப்பாவை சம்பந்தப்படுத்தும் நிகழ்வுகள், காவல்துறையின் சந்தேகம்

-மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண், அவரை கடத்தும் 3 இளைஞர்கள், 

 -ஹேக்கிங்கில் வரும் பிரச்சனையும், கடத்தபட்ட இளம்பெண்ணும், காணாமல் போன ஹைதெராபாத் இளைஞர்களும், விற்காமலிருக்கும் தமன்னாவின் வீடும், துவக்கத்தில் நடக்கும் பேருந்து விபத்தும், அந்த பெயிண்ட் கொலையு்ம் சந்திக்கும் ஒருபுள்ளியில் கதை என்னவென்று நமக்கு ஒருவழியாக புரிந்து விடுகிறது

காட்சிகள் மிக மெதுவாக செல்வது, தமன்னாவின் உணர்ச்சிகள் அற்ற முகம், கடைசி அத்தியாயங்களை போட்டு குழப்பி அடித்திருப்பது, அத்தனை வேகமாக துப்புத் துலக்கும் அருள்ராஜ் கடைசியில் ஆளே எட்டிப்பார்க்காமலிருப்பது என பல ஓட்டைகள் இருக்கின்றன. தணிக்கை இல்லையென்பதால் பல காட்சிகள் ரத்தக்களறியாக இருக்கிறது குறிப்பாக போஸ்ட் மார்ட்டம் காட்சிகள் மிகவும் கஷ்டப்படுத்துகிறது. தமன்னாவின் அப்பா குமார்  கொஞ்சம் மிகை நடிப்பு, மைனா  நந்தினி அருமையான இயல்பான பாந்தமான நடிப்பு. காவலதிகாரியாக அருள் ராஜ்  பிரமாதமான தேர்வு, சிறப்பாக செய்திருக்கிரார்

ஏகப்பட்ட மர்மங்களை    ப்ளாஷ்பேக்கில் காட்டி பலவற்றை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.  தமன்னாவின் தங்கை குறித்தும், அம்மாவின் மரணம் குறித்தும் ஏன் அவருக்கு சொல்லப்படவில்லை என்று கதையில்  யாரும் மெனக்கெடவே இல்லை. எல்லா நிகழ்வுகளும் ஏன் நவம்பர்  16ல் நடக்கிறது என்பதற்கும் லாஜிக் இல்லை

ஆனா்லும் தமிழில் இப்படி ஒரு திகில் தொடரை ஒரளவுக்கு  சுவாரஸ்யமாக கொடுதிருப்பதற்கு  பாராட்டலாம். அருமையான வசனங்கள், இயல்பான காட்சியமைப்புகள்,  பசுபதியின் பிரமாதமான நடிப்பு, தமிழில் வரும் பிற தொடர்களை ஒப்பிடுகையில் காட்சியமைப்பு, இசை, ஒலி, காமிராக்கோணம், இயக்கம் எல்லாம் பிரமாதம். இவற்றிற்காகவே இந்த தொடரை பாரக்கலாம

பல முடிச்சுக்களை காட்டிவிட்டு கடைசியில்  பல மர்மங்களை சொல்லாமல் மர்மமாகவே நீடிக்க விட்டிருக்கிறார்கள். அத்தியாயங்களின் எண்ணிக்கையையும் தமன்னாவின் பிரச்சனைகளையும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் ஒரு தொடராக இருந்திருக்கும்.