பாலித்தீவில் மக்களிடையே ஒரு சமயம் சார்ந்த தொன்மையான பழக்கம் இருக்கின்றது. திருமண விழாக்களில் உயிருடன் ஒரு வாத்து மற்றும் ஒரு கோழியை அவற்றின் சின்னஞ்சிறியகால்களில் கல்லைக்கட்டி விட்டு ஏகப்பட்ட மந்திர உச்சாடனங்கள் மற்றும் பூசைகளின் பின்னர் கூட்டமாக ஒரு நீர் நிலைக்குச்சென்று அந்த ஒரு பாவமும் அறியா பறவைகளை  நீரில் விடுகிறார்கள். தப்பிக்க வழியின்றி மூழ்கி இறந்து அங்கேயே அவை மட்கி விடுவது புதிதாய் திருமணம் செய்துகொள்பவர்களின் குடும்ப வாழ்விற்கு  நல்லது என்னும் நம்பிக்கையின் பேரில் இது செய்யப்படுகின்றதாம்.கடவுளின் பெயரால்  செய்யபடும் வன்முறைகளில் இது உச்சமென்றே நான் நினைக்கிறேன்

எத்தனை குரூரம்?. மஞ்சள் நீரில் உடல் சிலிர்க்கும் பலி விலங்கினை கழுத்தின் குருதிக்குழாயை ஒரே வெட்டில் அறுக்கும் நம் சடங்கு  இதற்கு ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

உண்மையில் பல திருமணங்களில்  தப்பிக்க வழியின்றி   கல்லை கால்களில் கட்டிக்கொண்டு  மூழ்கி இறந்து  மட்கும் வரை இல்லறத்தில் இருக்கும் தம்பதியினருக்கும் இது பொருந்தும் அல்லவா இதைத்தான்நாம் கால்கட்டு என்று கல்யாணத்தை சொல்லிக்கொண்டிருக்கிறோமோ?