லோகமாதேவியின் பதிவுகள்

மலையாளமும் தமிழும்

மொழி சார்ந்த பல சிரமங்களுக்கு  திருமணமாகி கொங்கு நாட்டிலிருந்து அபுதாபிக்கு சென்றதும் நான் அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பதைப்போல தமிழ் ஆட்கள் இல்லை சுற்றிலும் மலையாளிகளே .எனக்கு பேசவும் யாரும் இன்றி  அவர்கள் பேசுவதும் புரியாமல்   நிலவரம்  ஒரே    கலவரமாக இருந்தது முதல் 6 மாதங்கள்

’’எந்தா சேச்சி கண்ணடை இட்டிருக்குனு?  காழ்ச்சி கொறவுண்டா? , பாங்கு விளிக்குன்ன சப்தம் கேட்டோ?’’ என்றெல்லாம் வேக வேகமாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பேய் முழி  முழித்துக்கொண்டிருந்தேன்  வெயிலடிக்கும் பொழுதுகளில் ’’நல்ல பனி குட்டிக்கு’’ என்பதைக்கேட்டு குழம்பி இருக்கிறேன். பனிபிடிப்பது என்றால் காய்ச்சலென்று தெரிய வெகு நாட்களாகியது

’’இன்னலே’’ என்றால் நான் இன்றைக்கு என்று பலநாட்கள் நினைத்துக்கொண்டிருக்கையில் அதற்கு ‘’நேற்று’’ என்று அர்த்தம என்பதே பல மாதங்கள்  கழித்துத்தான் தெரியவந்தது.

சரண் வயிற்றிலிருந்த போது எனக்கு இனிப்புகள் தர வந்த ஒரு மலையாளி பெண்மணி  ’’ தேவி நல்ல வண்ணம் வச்சுட்டுண்டு’’ என்றதும் நான் நல்ல நிறமாகிவிட்டேன் என்று நினத்து பூரித்துப்போய், பின்னர்  சரண் அப்பா   வண்ணம் வைப்பது என்றால் குண்டாவது  என்று விளக்கமளித்தபின்னர் ஏகத்துக்கும் கவலைப்பட்டேன்

புதியதாய் வாங்கிய இட்லிச்சட்டியில் ’’இன்னும் கொறைச்சு வெள்ளம் வைக்கணும்’’ என்று என்னிடம் சொல்லப்பட்டதை நான் இன்னும்  குறைவாக என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு மிகக்குறைவாக தண்ணீர்  வைத்து பாத்திரம் கரிப்பிடித்த கதையெல்லாம் நடந்த பின்னர் சுதாரித்துக்கொண்டேன்

காரியமாக தினம் ஏசியானெட்டும் கைரளியுமாகப் பார்த்து பேப்பரும் பேனாவுமாய் களம் இறங்கி  3 வருடங்களில் சரளமாக மலையாளம் பேசவும், மனசிலாக்கவும் முடிந்தது, ஆசான் சுரேஷ் கோபியின் கற்பித்தலில் பல மலையாளக்கெட்டவாரத்தைகளும்  கூட கற்றுக்கொண்டேன்!!!

இப்போது இங்கு கல்லூரியில் கேரளாவிலிருந்து மாணவர்கள் சேர்க்கை என்றால் கூப்பிடு லோகமாதேவியை என்னுமளவிற்கு மலையாளம் அத்துப்படி. கேரளவிலிருந்து வருபவரகளிடம் ‘’ஒண்ணு வேகம் போய் ஃபிஸ் அடைக்கணும்  கேட்டோ, நமக்கு  கோர்ஸினைக்குறிச்சு பின்ன  சம்சாரிக்காம் ‘’ என்பேன் அவர்களும் உடன் பணம் கட்டிவிடுவார்கள்.

ஆனால்  மலையாளம்  அத்தனை இனிமையான மொழி. அந்த பாஷையின் இனிமையிலிருந்து வெளியெற மனசின்றி இன்னும் இன்னுமென பேசிப்பேசி அதிகம் நான் இப்போழுது பேசுவதும் விரும்புவதும் தமிழை விடமலையாளத்திலேயே !

1 Comment

  1. PNS pandiane

    எண்ட சீப் மினிஸ்டர் பிரனாயி விஜயன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑