லோகமாதேவியின் பதிவுகள்

சந்துகளின் சரித்திரம்

தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் இன்றைய தமிழ் இந்துவில் சந்துகளின் சரித்திரம் பற்றி சுவையாக பதிவிட்டிருந்தார் அதை வாசித்ததும் எனக்கு இவையெல்லாம்  மீள நினைவிற்கு வந்தது. சந்துகளையெல்லாம் எங்கே நினைவிருக்கும் மனிதர்களுக்கு? எனக்கும் பல சந்துகளின் நினைவு வந்தது இதை வாசித்ததும்

சிறு பெண்ணாய் பள்ளிக்கு சென்று திரும்புகையில் என் சகோதரியிடம் என்புத்தகப்பையை கொடுத்துவிட்டு அந்த குக்கிராமத்தின் பல சந்துகளில் என் பல்லுயிரி ஆய்வினை மேற்கொண்டு என்னைத்தேடி வருமென் தாத்தா பாட்டியிடன் அடிவாங்கியதை முதலில் நினைத்துக்கொண்டேன். அந்த ஆய்வுகளின் போது சந்துகளில் கிடக்கும் பெரிய பெரிய கற்களையெல்லாம் புரட்டி அதனடியில் இருக்கும் ஜந்துக்களை ஆராய்வது என் பொழுதுபோக்கு, அப்படி ஒன்றினை அரும்பாடுபட்டு புரட்டி அதனடியில்  கோலி விளையாடி யாரோ சேர்த்து வைத்திருந்த குவியல்  குவியலாக பெருந்தோகையாக இருந்த காசுகளையெல்லாம் மகிழ்வுடன் அள்ளிக்கொண்டு வந்ததும் நினைவிற்கு வந்தது.

பதின்பருவத்தில் உடன் படிக்கும் துணிச்சல் தோழிகள் சந்துகளில் காதலனைச்சந்திப்பார்கள், காதலனே இன்றியும அந்த சந்துகள்  மற்ற எங்களுக்கு பெரும் கிளர்ச்சியளிக்கும் இடங்களாகவும் இருந்தன அப்போது

ஒரு மாலை நேரத்தில்  பொள்ளாச்சியில் அப்போதிருந்த சப்ஜெயிலொன்றிலிருந்து தப்பித்த ஒரு குற்றவாளி நாங்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் சந்து சந்தாக ஒடித்தப்பிக்க முன்றான் காவலர்கள் அவன் பின்னடியே துரத்தியதும் முதல் முதலாக துப்பாக்கி சத்தத்தைக்கேட்டதும் அப்பொழுதுதான்

கணிதம் சரியாகப்புரியாததால் ஒரு சந்தினுள் இருக்கும் டுடோரியல் கல்லூரிக்கு கூட்டமாய் சென்று  வந்து  பத்தாம் வகுப்பில் எப்படியோ தேர்ச்சி பெற்றது, படித்துமுடித்து வேலையில் சேர்ந்ததும்  கோவையில் பூரா மார்க்கெட்டில் சந்து சந்தாய் திரிந்து அச்சிலி பிச்சிலி சாமான்களெல்லாம் மகிழ்வுடன் சம்பளப்பணத்தில் வாங்கியது என்று பலவற்றை இன்று என் மகன்களுடன் இந்தப் பதிவினைப்பார்த்த பின்னர் பகிர்ந்துகொண்டேன்

1 Comment

  1. KANNAN.m

    Nice சந்துகளின் சரித்திரம் நிறைய பழைய ஞாபகங்களை கிளறி விட்டது. எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கும். ஆனால் நீ அதையும் அழகாக பதிவு செய்துள்ளாய்.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑