பெருங்காயம்

மசாலாக்களின் உபயோகத்தில் மிகப்பிரபலமான இந்தியச் சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்றான  பெருங்காயம் ’ஃபெருலா’ -Ferula என்னும் தாவர பேரினத்தின் பல சிற்றினங்களிலிருந்து பெறப்படுகின்றது. Ferula assafoetida, F. foetida ,  F. narthex. ஆகிய மூன்று மரங்களிலிருந்தே உலகின் பெருமளவு பெருங்காயம் தயரிக்கப்படுகின்றது.  ஈரானில் Ferula suaveolens , Ferula persica  மற்றும் மத்திய ஆசியாவில்  Ferula galbaniflua ஆகியவையும் வளர்ந்து பயன் தருகின்றன.

இதன் ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida), Ferula asafoetida என்னும் இதன் தாவரப்பெயருக்கு கிரேக்க மொழியில் ’’நாற்றமடிக்கும் பசையை கொண்டிருக்கும் ’’ எனப்பொருள்.

இந்திய மொழிகளில் பெருங்காயத்தின் பெயர்கள்;

Hindi : Hing Bengali : Hing Gujarati : Hing Kannada : Hinger,Ingu Kashmiri : Yang, Sap Malayalam : Kayam Marathi : Hing Oriya : Hengu Punjabi : Hing Sanskrit : Badhika, Agudagandhu, Telugu : Inguva, Ingumo Urdu : Hing

 அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம், காயம் ஆகியவையும் பெருங்காயத்தின் பெயர்களே.

English : Devil’s dung, Persian : Angustha-Gandha, French : Ferule Asafoetida,  German : Stinkendes steckenkraut, Arabic : Tyib, Haltheeth, Sinhalese : Perumkayam

 இம்மரம் கேரட்டின், கொத்துமல்லியின், சோம்பின் குடும்பமான ‘ஏபியேசியே’வை சேர்ந்தது (Apiaceae). சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods) எனவும் இதற்கு பல்வேறு ஆங்கிலப் பெயர்கள் உள்ளன.

பெருங்காய மரங்கள்

பெருங்காயச் செடியின் தாயகம் ‘பெர்சியா’ (ஈரான்). 2 – 7 மீட்டர் உயரம் வரை செடியாகவும், குட்டை மரமாகவும் வளரும் இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம்.
இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சளிலும். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாகவும் இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு நிறச்சாறு இருக்கும். வேர்கள் கிழங்கை போல கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பற்றுடனும் இருக்கும். தாவரத்தின் எல்லா பாகங்களும் நலல் நெடியுடன் இருக்கும்.

செடி வளர்ந்த 4 ஆண்டுகளுப்பிறகே  வேரில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக,மார்ச்- ஏப்ரல் மாதங்களில், தண்டின் அடிப்பகுதியுடன் சேர்ந்த வேர்ப்பகுதியை நறுக்கி, அதை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போல கெட்டியாக  வடிந்திருக்கும் பெருங்காயப் பிசினைச் சுரண்டி எடுத்துவிட்டு,மீண்டும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள பிசினை சுரண்டி எடுப்பார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசினை முழுவதுமாக  தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் ஒரு செடியின் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசை கிடைக்கும்..
  6 ம் நூறாண்டிலேயெ கிழக்காசியாவிலிருந்து, இன்றைய லிபியாவுக்கு பெருங்காயம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பண்டைய ரோமானியர்கள் பெருங்காயத்தை மருந்துப்பொருளாக உபயோகித்திருக்கின்றனர்.

 Dr KT Achaya’ வின் ’’இந்திய உணவுகளின் வரலாறு’’ என்னும் நூல் மகாபாரதத்தில் ஊனுணவில் பெருங்காயம் கலக்கப்பட்டதை  குறிப்பிடுகிறது. மாவீரர் அலெக்ஸாண்டர் அவரது வெற்றிப் பயணப்பாதைகளில் பெருங்காயத்தை பல இடங்களுக்கு கொண்டு சென்றார் என்கிறது வரலாறு.

பெருங்காய மலர்கள்

வேதியியலில் oleo gum resin  எனப்படும் பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. இவற்றுடன் வெங்காயம், பூண்டில் இருக்கும் சல்ஃபரும் மிக அதிக அளவில் இருக்கின்றது. (Resin (40–64%), gum (25%) and essential oil (10–17%)


ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது.  காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும். செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல், மாதவிலக்கு உண்டாக்குதல் போன்ற பல மருத்துவ குணங்களை உடையது. சமைக்காத பொழுது அதிக நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் நல்ல மணத்தையும், சுவையையும் உருவாக்குகிறது. வெங்கயமும் பூண்டும் உணவில் சேர்த்துக்கொள்ளாத இந்தியாவின் பிராமணர்கள், ஜைனர்கள் போன்ற சமயத்தினரும் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்கின்றனர்

இந்தியாவில் பெருங்காயம் விளைவதில்லை. எனவே . ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது

தில்லியின் தாவர மரபணு வளங்களின் தேசிய பணியகத்தின் ( National Bureau of Plant Genetic Resources-NBPGR), முன்னெடுப்பில்  1963 லிருந்து 1989 வரையிலான காலத்தில் இந்தியாவில்  இறக்குமதி செய்யபட்ட பெருங்காய விதைகளிலிருந்து பெருங்காயம் பயிரிடும் முயற்சி துவங்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது

மீண்டும் 2017லிருந்து இமாலயப் பகுதிகளில் பெருங்காயத்தைப் பயிரிடும் முயற்சியில் சிஎஸ்ஐஆர் மற்றும்  இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஐஹெச்பிடி (CSIR &Institute of Himalayan Bioresource,  IHBT), NBPGR உடன் இணைந்து  ஈடுபட்டுள்ளது.

ஈரானிலிருந்து தருவிக்கபட்ட 6 வகைகளிலான  பெருங்காய விதைகளை  நோய் தொற்று, வளர்ச்சி, உள்ளிட்ட பலவித சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி கட்டுப்படுத்தப்ப்பட்ட சூழலில் அவற்றை முளைக்க வைத்து, இப்போது  800 பெருங்காய நாற்றுக்கள் இமாச்சலபிரதேசத்தின் லாஹெளல் –ஸ்பிடி பள்ளத்தாக்கில்   நடப்பட்டிருக்கின்றன.

கின்னாவுரில் பெருங்கய சாகுபடிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலம்

 கடல் மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் குலு, மணாலி மற்றும் கின்னாவுர் மாவட்டங்களிலும்  நாற்றுக்கள் சோதனை முயற்சியாக நடப்பட்டிருக்கின்றன. இவை வெற்றிகரமாக வளர்ந்தால், இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியாவில் பெருங்காய வளர்ப்பை பல்லாயிரம் ஏக்கர்களில் விரிவாக்கும் திட்டமும்  ICAR க்கு இருக்கிறது  

பெருங்காய விதைகள்

  பெருங்கயத்தின் விதை உறக்ககாலம் மிக நீளமென்பதாலும், 100ல் இரண்டு விதைகளே முளைக்கும் திறன் கொண்டிருப்பதாலும் இந்திய நிலங்களில் பெருங்காயத்தின் விரிவான சாகுபடி சவாலானதுதான் என்றாலும் இதில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இதை செய்யமுடியுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லடாக் மற்றும் உத்ரகாண்டிலும் சாகுபடியை சோதிக்கும் முயற்சிகளும் தற்போது துவங்கியுள்ளது. லாகூர் சமவெளியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பெருங்காயத்தைப் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது.  .

 பெருங்காயத்தின் இரண்டு வகைகள் சந்தையில் கிடைக்கின்றது.பால் பெருங்காயம் எனப்படும் (Kabuli Sufaid- Milky white asafoetida) மற்றும் சிவப்பு பெருங்காயம்.(Lal Asafoetida).

பால் பெருங்காயம்

காந்தாரி பெருங்காயம் என அழைக்கப்படும் ஆஃப்கனிலிருந்து கிடைக்கும் பெருங்காயமே உலகின் மிக தரமான பெருங்காயமென கருதப்படுகின்றது

பொடித்த தூளாகவும், குருணைகளாகவும், வில்லைகளாகவும், கட்டியாகவும்  பெருங்காயம் சந்தையில் கிடைக்கின்றது. பெருங்காயப் பசையை நீராவியில் காய்ச்சி வடிகட்டி பெருங்காய எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

 ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்.  அறுவடையான பெருங்காயப்பிசினை அப்படியே நாம் உணவில் சேர்க்க முடியாத அளவிற்கு அதன் காரமும் நெடியும் மிக அதிகமாக இருக்கும். எனவே கட்டியாக இருக்கும் பெருங்காயத்தை பொடித்து கருவேலம் பிசின், கோதுமைமாவு அல்லது அரிசி மாவு சேர்க்கப்பட்டு கூட்டுப் பெருங்காயம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது

ஆஃப்கான் பெருங்காயம்

 
 Ferula வின் galbaniflua என்னும் சிற்றினத்தின் பசை ஊதுவர்த்திக்கள் செய்ய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. உணவுபொருட்களில் மிக அதிகமாக கலப்படம் செய்யப்படுவது பெருங்காயப்பிசினில்தான். கோதுமைக்குப் பதிலாக  மைதாவையும்.  பெருங்காயத்தின் கழிவுகள், களிமண், செம்மண், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றையும் கருவேலம்பிசினுடன் கலந்து வாசனைக்காக பெருங்காய எஸென்ஸ் மட்டும் சிறிது சேர்க்கப்பட்ட,   5 சதவீதம் கூட அசல் பெருங்காயம் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் போலிப்பெருங்காயம் கிராமப்புறங்களில் அதிகம் விற்பனையாகின்றது.  

நாம் உபயோகிக்கும் காயம் அசலா, போலியா என  எளிதாக வீட்டிலேயே கண்டு பிடிக்கலாம். தரமான கலப்படமில்லா பெருங்காயமானது, கசடுகள் இல்லாமல் நீரில் மூழுவதுமாக கரைந்து நீரை பால்நிறமாக்கிவிடும். சிறு துண்டு பெருங்காய கட்டியை நெருப்பில் காட்டி அது முழுவதும் எரிந்தால் அதுவும் தரமானதே.