லோகமாதேவியின் பதிவுகள்

Month: September 2019 (Page 2 of 2)

ஊட்டி காவியமுகாம் 2018

முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அதைக்குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தேன். முதலில் சரணுடன் செல்வதாக இருந்து பின்னர் அவனுக்கு  மே 6 அன்று நுழைவுத்தேர்வு இருப்பதால் அவன் வரமுடியாதென்று நினைத்து, பின்னர் அதை ஆன்லைனில் எழுதலாமென்று முடிவுசெய்து மீண்டும் அவனும் பங்கேற்க அனுமதி வாங்கி ஒருவழியாக இரண்டு பேரும் செல்வதாக தீர்மானமாயிற்று

வீட்டிலிருக்கும் செடிகளுக்கு இக்கடும்கோடையில் எப்படி 3 நாட்கள் தண்ணிர் விடாமல் இருப்பதென்னும் அடுத்த கட்ட பிரச்சனைக்கு இயற்கையே தீர்வாகி பெருமழை பொழியத்துவங்கியது  2 ஆம் தேதியிலிருந்தே.

4அம் தேதி அதிகாலை எழுந்து தயாராகி, வெளிக்கதவைச்சாத்திவிட்டு காரில் ஏறுவதற்குள் தொப்பலாக நனையும் அளவிற்கு கொட்டும் மழையில் புறப்பட்டோம்.  கரிய நீண்டநனைந்திருந்த தார்ச்சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லாமலிருந்த அதிகாலையில் ஜென்சியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு மலைப்பயணம் துவங்கினோம்.

மேட்டுப்பாளையத்தில் காலை உணவு

குன்னூரிலிருந்தே வாகன நெரிசலில் சிக்கி வால்பிடித்துக்கொண்டே ஊர்ந்துகொண்டிருந்தோம். மலைச்சரிவெங்கும் மே மாதத்திற்கே உரிய ஜகரண்டாவும், தீக்கொன்றையும் பூக்கத்துவங்கி, அடர் ஊதாவும் ஆரஞ்சுமாக வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. மழையில்லை ஊட்டியில்.

நான் குருகுலத்திற்கு வந்துசேர்கையில் காளிபிரசாத் ’காரணம் ’  கதையினரங்கை துவங்கிவிட்டிருந்தார்.  சாலக்கிராமக்கல் காணாமற்போவதும் ஒரு முதியபெண்ணின் வாழ்வின் மாற்றங்களுக்கு அது காரணமாயிருப்பதையும் குறித்த விவாதம்.. ஜெ அவர்கள் அருண்மொழி மற்றும் சைதன்யாவுடன் வந்திருந்தார். நானும் சரணும் அங்கு விரித்திருந்த கம்பளத்தில் அமர்ந்துகொண்டோம். நல்ல கூட்டமிருந்தது ஏராளம் புதுமுகங்கள் இளைஞர்கள், அதிகம் பெண்கள். கம்பளியைத்தாண்டி பனிக்கட்டிபோல குளிர்ந்திருந்த தரையின் சில்லிப்பை உணர முடிந்தது.

ஆசையாக வாங்கிவந்த கருப்பு ஸ்வெட்டரை அணிந்துகொண்டேன். முதலரங்கு முடியுமுன்னரே சரணுக்கு  மலைப்பயணம் ஒத்துக்கொள்ளாமல் வாயுமிழ்ந்துகொண்டிருந்தான். அவன் பின்னர் இரு அரங்குகளுக்கு வராமல் அறையில் ஓய்வெடுத்தான்

முதலரங்கு முடியும் தருவாயில் நாஞ்சில் அவர்கள் வந்து சேர்ந்தார்.தேனீர் இடைவேளையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டேன். குவிஸ் செந்திலிடம் எனக்கும் சரணுக்கும் அறை ஒதுக்கித்தரும்படி கேட்டுக்கொண்டேன்

மதியமே இரண்டுபேருக்குமாய் ஒரு அறை ஏற்பாடு செய்துதந்தார். நாஞ்சில் சாரின் கம்பராமாயண அரங்கு, யுத்தகாண்டம், ஆஹா என்ன அழகு விவரணை எத்தனை சரளம் எத்தனை இனிமை. அவர் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டே இருக்கலாமென்றிருந்தது

புகழ்பெற்ற ’நின்னொடும் ஐவரானோம்’ முதற்கொண்டு பல பாடல்களை பொருளுடன் விளக்கினார் ஆங்காங்கே அவருக்கே உரித்தான அங்கதங்களுக்கும் குறைவில்லை, மயில் என்று சீதாவைகுறிப்பிடும் இடமொன்றில் மயில் என்பது சீதையை குறிக்கின்றது ஸ்ரீதேவியை அல்ல, என்பதும், இலங்கையின் கிணறுகளில் குருதி ஊறிக்கொண்டிருக்கின்றது என்னும் குறிப்பினைச்சொல்லும்போது திருப்பூரில் எப்படி எங்கு தோண்டினாலும் பச்சையும் சிவப்புமாக நிலத்தடிநீர்  வருகின்றதோ  அப்படி என்பதுவுமாய் ,  எல்லாப்பாடல்களுக்கும் ஒரு கேலிக்குறிப்பிருந்தது அவரிடம், ரசிக்கும்படியுமிருந்தது அவரின் இந்த  இடைச்செருகல்கள்.

கம்பராமாயணத்தை முதல்முறையாகக்கேட்கும் சரண் ஆழ்ந்து போயிருந்தான், அரங்கு முடிந்த பின்னர் நாஞ்சில் சாரிடன்  சரண் தன்னை    அறிமுகம் செய்துகொண்டு. ’ ஏன் குகன் சுக்ரீவன் விபீஷணன் இவர்களை எல்லாம் சகோதரனாகப்பாவித்த ராமன் அனுமனை அப்படிச்சொல்லவில்லை’ என்று கேட்டான், அனுமனுக்கு சகோதரனைக்காட்டிலும் மேலாக தனக்கு இணையனாகவே ஓரிடத்தை  ராமன் வைத்திருந்தார் என்றும் , அனுமன் சாலிஸாவில் ராமனின் சகோதரன் அனுமன் என்னும் ஒருவரி வருகின்றதென்று சரண் மீண்டும் கேட்க அது பிற்பாடு துளசிதாஸ் எழுதியதென்றும்  சொன்னார். இன்னும் 1வாரம் தொடர்ந்து கம்பராமாயணமே அவர் தொடர்ந்து உரையாற்றுவாரெனினும் அமர்ந்து ஆர்வமாக கவனித்திருப்போம்

முதல் அமர்வு துவங்கியதிலிருந்து  நிறைவான அரங்குவரை, வழக்கம் போல  எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் உட்பட, பல அகவைகளில் வரும் இருபாலரும் பங்குகொள்ளும் கூடுகையில் ஒரு பிழையுமின்றி திட்டமிட்டபடியே எல்லாம் நடைபெறுவது மிக அரிதான ஒன்று, இம்முறையும் அப்படியே நடந்து முடி ந்தது

. நாஞ்சில் நாடன், P.A. கிருஷ்ணன், தேவ தேவன், லக்‌ஷ்மி மணிவண்ணன், அசோக், விஷால் ராஜா, சுனீல் உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கதை, கவிதை கம்பராமாயண அரங்குகள் அனைத்துமே வெகு சிறப்பாக இருந்ததென்றாலும் , எனக்கென்னவோ இம்முறை கவிதை விவாத அரங்கு    மிக மிக நன்றாக அமைந்திருந்தது என்று தோன்றியது. அத்தனை விரிவாகவும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் வந்த கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கவிதை அரங்கு சிறப்பாக இருந்தது

கவிதைகளின் சிறப்பம்சங்களை சில  விவாதங்களில்  பேசினோம் என்றாலும் நாகப்பிரகாஷ் தெரிவு செய்திருந்த கவிதையைக்குறித்தான விவாதத்தில்,  எது நல்ல கவிதை என்பதற்கான விளக்கமும், எப்படி நல்ல கவிதையை இனம் காண்பதென்றும், எதை நாம் கவிதைவாசிக்கையில்  கவனிக்கனுமென்றும் தெரிந்துகொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன்னரான என் கவிதை வாசிப்பிற்கும் இனிமேலான என் கவிதை வாசிப்பிற்கும், தெரிவிற்கும் நிச்சயம் நல்ல மாற்றமிருக்கும்

மோகனரங்கன் அவர்களின் ’முடிச்சு’ கவிதை விவாதம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் விரிந்துகொண்டே போனது. எனக்கு அது மிகப்பிடித்த கவிதைகளிலொன்று அந்தக்கவிதையை முகாமிற்கு வரும்முன்னர் நான் தனிமையில் வாசிக்கையில் அது எனக்களித்த  உணர்வையும் புரிதலையும் விட விவாதத்தின் போது  ஜெ வும் பங்கேற்பளர்களும் பிற எழுத்தாளர்களுமாய் அதை பல கோணங்களிலிருந்து அர்த்தப்படுத்துகையில் அது ஒரு மிக அழகிய நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு வடிவிற்கு வந்து சேர்ந்தது. கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் கோணங்கள் மாறி உள்ளிருக்கும் கண்ணாடிச்சில்லுகள் வேறு வேறு வண்ணச்சித்திரங்களைக் காண்பிப்பது போல. ஒரு சிறு புள்ளியாக என் மனதில் இருந்த அந்தக்கவிதையின் பொருள் விரிந்து விரிந்து மிக அழகிய சித்திரமானது

கரமசோவ் சகோதரர்களிலிருந்து ஜன்னல் வரை  ஆரோக்யமான விவாதங்களும், விளக்கங்களுமாய் நிறைந்திருந்தது   சிறுகதைஅரங்கு

நெற்றியில் விபூதிப்பட்டை துலங்க வெண்கலக்குரலுடன் திருக்குறள் உரையாற்றிய  திருமூலநாதன் என்னும் இளைஞரின் தமிழறிவை வணங்குகிறேன்.  என்ன தமிழறிவு, இலக்கணம் எல்லாம் அத்தனை அழகாக நாஞ்சில் சாருக்கே கூட தெளிவாக சொல்லித்தந்தார்

ஆடல்கோட்பாட்டில் ஜடாயு அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வு முடித்திருக்கிறாராம். நல்ல குரல்வளம். முதல் நாளிலேயே தூரத்தில் அமர்ந்திருந்தவரை ஜெ அழைத்து, ’’வா பக்கத்தில்’’ என்றதும் ஓடோடி வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் காலடியில் அமர்ந்துகொண்டார் அவர். ஜெ வின் அன்பிற்குரியவரென்று அப்போதே கண்டுகொண்டேன்

அவர் உரை முடிந்ததும் நான் ஜெ விடம் , திருமூலநாதனை கல்லூரிக்கு அழைத்துச்சென்று அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க சொல்லணும் என்றதும் ஜெ ’அவ்வளவுதான் 6 மாசத்தில் இவன் முழுக்க மழுங்கி எந்தப்பக்கமும் கிரிப் இல்லாம ஆயிருவானே’ என்றார். அரங்கு மொத்தமும் சிரித்தாலும் இது உண்மையென்பதை நானுமறிவேன். இன்றும் ஒவ்வொரு மாணவனாக எழுந்து ஒவ்வொரு பத்தியாக வாசிக்க அந்த பாடத்தை ‘’நடாத்தி’’ முடிக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் தமிழாசிரியர்களை நானறிவேன்.

சூதில் வென்றாலும் அது தூண்டில்பொன் விழுங்கிய மீன் போல என்னும் குறளில் வரும்   ’’ தூண்டில் பொன்’’ என்பதற்கு ஜெ  சொல்லிய அந்த  பட்டு நூல் துண்டினை தூண்டிலில் கட்டுவது குறித்தான  விளக்கம் இனி எப்போதும் நினைவிலிருக்கும்.

சு ரா அவர்கள் ஒருமுறை ஜெ விடம் ’’என்னமோ இந்த கடற்கரைபயலுங்களுக்கு தங்கநிறச்சட்டைமீது அப்படி ஒரு மோகம் இன்னிக்கும் அந்த துணிதான் 15 மீட்டர் போயிருக்கு என்றிருக்கிறார், ஜெ அப்படி கடற்கரையில் தங்கநிறச்சட்டையணிந்தவரகளை அதிகம் பார்த்திருக்காத, தால் விசாரித்திருக்கிறார்

குமரி மாவட்ட மீனவர்கள், தங்கநிறத்துணிகளை வாங்கிச்சென்றுஇழை இழையாக அதை பிரித்து, தூண்டிலில் ஒற்றைநூலாக அதை கட்டிவிடுவதையும், நெளியும் பொன்புழுப்போலத்தெரியும் அதைநோக்கி மீன்கள் வந்து தூண்டிலில் மாட்டுவதையும் சொன்னார். இடைச்செருகலாக ‘’ ஆகவே வள்ளுவனும் குமரி மாவட்டம்தான் என்றார் நாஞ்சில், ஜெ மீண்டும் ’’வேற எங்க சார் இருப்பானுங்க எழுத்தாளரெல்லாம் நாகர்கோயிலைத்தவிர’’ என்றார்

வேளாவேளைக்கு சூடான சுவையான உணவும் , இடைவேளைகளில் தேனீருமாய் எல்லாம் கச்சிதமாக எப்போதும் போல நடந்தது

அரங்கில் அனைவரும் வசதியாக குடும்ப நிகழ்வொன்றில் அமர்ந்திருப்பது போல சாய்ந்தும் சம்மணமிட்டும் கம்பளியால் போர்த்திக்கொண்டும் சிலர் நாற்காலிமாய் அமர்ந்துகொண்டிருந்தோம் எனினும் அரங்கு ஒரு கட்டுக்குள் இருப்பதையும் உணர்ந்திருந்தோம்.  அருண் மொழியும் சைதன்யாவும் பல விவாதங்களில் கலந்துகொண்டார்கள். ’’நீர்க்கோல வாழ்வினைநச்சி’’  என்னும் பாடலை பள்ளியில் மனப்பாடமாக கற்றிருப்பதாக அருண்மொழி சொல்லவும்  ‘’ எங்கே சொல்லு பார்போம் ’’ என்றார் ஜெ அழகாக பிழையின்றி சொன்னார் அருண்மொழி

அவர்களின் அன்னியோன்யம் நான் எப்போதும் ரசிக்குமொன்று, ’’என்னமோ சொல்ல வந்தியே சொல்லு’’ என அவர் மனைவியை ஊக்கப்படுத்துவதும் காலடியில் அமர்ந்திருக்கும் சைதன்யாவின் கன்னங்களை வாஞ்சையுட்ன அவ்வப்போது வருடிகொண்டிருப்பதுமாய் அழகிய குடும்பம் அவர்களுடையது. முன்னொருமுறை என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அருண்மொழியை ஜெ முதுகில் கொஞ்சம் பலமாகவே அடித்து ‘’ எழுந்து வா அரங்கு துவங்கபோகின்றது’’ என்றதும் பாய்ந்து எழுந்த அருண்மொழி அவரைத்துரத்திப்போய் பதிலுக்கு முதுகில் பளாரென ஒன்று வைத்தார்,’’ எதுக்கு ஜெயன் அப்படி அடிச்சே’’ என்றதும் அவர் அருண்மொழியின் முகவாயினைபிடித்துக்கொண்டு ’’இல்லை நேரமாசுன்னுதான் கூப்பிடேன்’’ என்றார், எங்கிருந்தானோ அஜிதன் இரண்டுபேருக்கும் இடையில் உடன் வந்து நின்றான்

இதை நான் அடிக்கடி நினைவுகொள்ளுவேன்

திருமணத்திற்குப்பின்னும் தொடரும் பேரன்புக்கு எனக்கு தெரிந்து  ஜெ உட்பட வெகுசிலரே இருக்கிறார்கள் சுட்டிக்காட்ட, இதை உள்ளார்ந்த மகிழ்ச்சியுடந்தான் ஒவ்வொருமுறையும் நினைவு கூறுகிறேன்

இரவு 10 மணிக்கு மேலும் அரங்கில், ஆர்வமுடன் அமைதியாக அனைவரும் கலந்துகொண்டதும். பெருமழை வரப்போகும் அறிகுறிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதையும்,வியப்புடன் நினைவு கூறுகிறேன்.

மறுநாள் காலை வழக்கம் போல அதிகாலை எழுந்து குளித்து இளவெயிலில் காய்ந்துகொண்டே அன்றைய வெண்முரசு  அத்தியாயம் வாசித்துக்கொண்டிருந்தேன்

ஜெ வுடன் பலர் நடைக்கு சென்றிருந்தார்கள், அன்றாடம் கதவு திறக்க, மேல்தொட்டி நீர் நிறைக்க, சமைக்க பால் வாங்க மதிய உணவு பேக் செய்ய மகன்களுக்கு உணவளிக்க வீடு பூட்டி கல்லூரிக்கு கிளம்ப என்று நான் மிகபரபரப்பாக ஆயிரம் கைகளுடன் இயங்கும் அதிகாலைபொழுதொன்றில் எந்த வேலையும் இல்லாமல் குளிர்காய்ந்துகொண்டிருப்பதில் என் உள்ளம் திடுக்கிட்டுப்போனது. அலைமோதியது என் மனம் என்ன செய்யலாம் ஏன் இப்படி ஓய்வாக இருக்கிறேன் என்று!!

சமையலறையில் ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கான உணவு தயாராகிக்கொண்டிருந்தது எனவே அங்கு சென்று உதவ வழியில்லை.  Enforced rest  அதை என் உடலும் மனமும் ஏற்றுக்கொள்ள திண்டாடியது. மெல்ல குருகுலத்தைச்சுற்றி வந்தேன்

கவிஞர் தேவதேவன் வசமாகசிக்கினார், இது என்ன பூ வித்தியாசமாக இருக்கே என்று ஊழ் உறுத்துவந்து ஊட்ட என்னிடம் கேட்டே கேட்டுவிட்டார்,

அவரும் நானுமாக அங்கிருக்கும் அனைத்து மலர்களையும் ஆராய்ந்தும் பெயர் தெரிந்தவற்றிற்கு பெயர் சொல்லியும் தெரியாதவற்றிற்கு  நாங்களாகவே பெயரிட்டும் மலர்களைக்குறித்து அவர் எழுதிய கவிதைகளைக்குறித்து சிலாகித்துக்கொண்டுமிருந்தோம் அங்கிருந்த   dancing doll  மலரை அவருக்கு மிகப்பிடித்துப்போனது அதிலொன்றைப்பறித்துக்கொண்டார் அதைப்பற்றி ஒரு கவிதை எழுதி எனக்கு அனுப்புவதாகச்சொன்னார். என் பெயரும் மிக அழகென்றார்,  ஒரு சிறுவனைபோல கண்கள் விரிய பூக்களைப்பார்ப்பதும் அவசரமாக காகிதம் எடுத்து அதில் பெயரெழுதித்தரும்படி கேட்டுக்கொள்வதுமாய் அவரின் உற்சாகமென்னையும் தொற்றிக்கொண்டது, தேவதேவனின் இந்த அதீதமும் இயற்கை மீதான பெருவிருப்பும் அவரிடமிருக்கும் அந்த   madness ம் தான் அவரைக் கவிஞராக்கியிருக்கிறது

ஒரு சிறு குழுவுடன் அங்கிருக்கும் தாவரங்களை இனம்கண்டுகொண்டிருந்ததில் எப்படியோ அரங்குஇலாத சமயங்களில் என் நேரம் செலவானது திருப்திகரமாக

பொள்ளாசியிலிருந்து கொண்டுபோயிருந்த கரகரப்பான கடலை மிட்டாய்களும் சுதாமாமி  எப்போதும்போல செய்துகொண்டுவந்திருந்த வாயிலிட்டால் கரையும் இனிப்புகளுமாக எதோ கல்யாணவீடு போல இருந்தது முகாமின் மூன்று நாட்களுமே

14டிகிரி குளிரிலும்  குளியலறைக்கு வரிசையில் காத்திருந்து அனைவரும் அரங்கிற்கு சரியான நேரத்திற்கு வர அவசரமாய்  தயாராகி வந்தோம். எந்த குடும்ப நிகழ்விற்கும் இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நாங்கள் கலந்துகொண்டிருக்க மாட்டோம் இதுவரை

அரங்கிற்கு வெளியேயும் உணவுண்ணும் போதும்  பேகிக்கொண்டிருந்ததில் மற்ற எழுத்தளர்களிடமிருந்தும், ஜெவிடமிருந்தும், பங்கேற்பாளர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். ஜெயந்தி என்னும்   வாசகி ஜெவின் வெண்முரசின் பெண்கள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு துவங்க இருப்பதாசொன்னதும் சரண் அவரிடம்  winds of asthinapur  என்னும் நூலில் மகாபாரதத்தில்  வரும் எல்லாப்பெண்களையும் பற்றி எழுதியிருகிறதென்று சொல்லி என்னையும் அவரையும் ஒருசேர வியப்பிலாழ்த்தினான். அந்த புத்தகத்தைக்குறித்து ஜெயந்தி சரணிடம் கேட்டு எழுதிக்கொண்டார்

இரண்டாம் நாள் மாலையில் ஒரு சிறிய குழுவாக அங்கிருந்த  ஷாமியானாபந்தலில் நாங்கள் அமர்ந்து பலதையும் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென நல்ல கட்டஞ்சாயா குடிக்கணுமென்று ஒரு நண்பர் விரும்பினார்,  உடன் அத்தனைபேருக்கும் அந்த ஆவல் எழுந்தது. முகாமிற்கென சமையல் ஒப்பந்ததாரரிருக்கிறார் அம்ஜத்கானைப்போலவே இருப்பார், நானும் சுதா மாமியுமாய் அவரிடம் கட்டஞ்சாயா ஒரு 15பேருக்கு வேண்டுமென்றோம், அத்தனை சிறிய குழுவிற்கு சமைக்க ஏதுவான பாத்திரங்கள்  இல்லையென்று மறுத்துவிட்டார், அருகிலிருக்கும் சமையலறை அங்கிருக்கும் துறவிகளுக்கானது, ஒரு பெண் துறவி உள்ளிருந்தார் சுதா மாமியும் நானும் தயங்கியபடி விஷயத்தைசொல்ல அவர் அகமகிழ்ந்து தாராளமாய் போடுக்கொள்லாச்சொல்லிவிட்டார்,

2நாட்களாக சமைகாமல் ஏங்கிக்கொண்டிருந்த  நான் நண்வர் பெல்ஜியம் மாதவனின் செய்முறையின் பேரில் நல்ல அரபிசுலைமானி தயாரிக்க சென்றேன்

தேவையானவற்றை எடுத்துகொடுத்த அவரிடம்  நான் மாதவனைப்பற்றியும் அவரின் செய்முறைபப்டி மசாலாப்பொருட்கள் தேவைஎன்றும் சொல்ல உடன் தேடித்தேடி அவற்றையும் கொணர்ந்தார். கழுத்தில் காதில் கைகளில் ஏதும் அணிந்திராத அந்த இளம் துறவி சிரிக்கையில் இன்னும் பேரழகியாகத்தெரிந்தார், வெளிறிய மெல்லிய உதடுகளவருக்கு ஆனால் புன்னைகைக்கையில் முழுமுகமும் புன்னைகைக்கிறது. அத்தூய புன்னகையில் தான் அவர் இன்னும் அழகாகிறார் என்று தோன்றியது.

நான் தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கையில் இன்னொரு அமெரிக்கர் வந்தார்,  நல்ல பாலாடைக்கட்டியின் நிறத்திலிருந்தார், அழகாக புன்னகைத்தார், புன்னைகைக்கையில் அவரும் இன்னும் வசீகரமாக இருந்தார், பெரிய கெளபாய் தொப்பி அணிந்துகொண்டிருந்தார் அவரும் குருகுலத்தில் தங்கி இருக்கிறார், என்னையும் கஞ்சி சாப்பிடும்படி சொன்னார் நன்றி சொல்லி நான் மறுத்தேன்

ஒரு சின்னக்கிண்ணத்தில் பயறுசேர்த்து தயாரித்த கஞ்சியை சரித்து கரண்டியிலெடுத்து மெல்ல சுவைத்து எந்த தொடுகறியும் இல்லாமல் அமைதியாகச்சாப்பிட்டார், அவருடன் அந்த பெண் துறவியும் உணவருந்தினார். நேற்று அவர்கள் வாசித்த பிரபஞ்ச ரகசியம் குறித்த ஒரு புத்தகத்தைகுறித்து மெல்லிய குரலில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள் உன்னத ஆங்கிலத்தில், அத்தனை சாத்வீகமான உண்வைஅந்த குளிரில் சாப்பிடுவது உண்மையில் துறவுதானெறெண்னிக்கொண்டேன்

சாப்பிட்டதும் அவர் அந்த கிண்ணத்தை கழுவி ஒரு உலர்ந்த துணியில் துடைத்து, எடுத்த இடத்தில் மீண்டும் வைத்தார். என்னிடம் என் ஊரைக்குறித்தும் என் வேலைகுறித்தும் விசாரித்தார், தென்னைமரங்கள் நிரம்பிய இடமென்றஊம் ஒருமுறை வருவதாகச்சொன்னார். 50 சதவீத மரங்கள் கருகி மொண்ணையாக நிற்பதையும் பல தோப்புக்கள் அடுக்குமாடிக்கட்டிடங்களானதையும் சொல்லவில்லை நான். அவர் மனதில் எங்கோ இருக்கும் ஒரு தென்னைகள் நிறைந்த அழகிய கிராமமொன்று பசுமையாக இருகட்டுமே அவர் ஒருவேளை வருவாரேயெனில் அதுவரைக்கும்

இன்னொன்றையும் என் அகம் மீள மீள நினைத்துக்கொண்டே இருந்தது, இப்படி  அழகாக புன்னகைக்கும், உணவை தானே எடுத்துப்பொட்டுக்கொண்டு சாப்பிடும், சாப்பிட்ட பத்திரத்தைந்துலக்கி துடைத்தும் வைக்கும் இவரெல்லாம் அழகாக கல்யாணம் பண்ணிக்கொண்டு மகிழ்ந்து இல்லறத்தில் ஈடுபடாமல் பயறுகஞ்சி சாப்பிட்டுக்கொண்டு பிரபஞ்சரகஸ்யம்பற்றி விவாதித்துக்கொண்ட்ருப்பதும் வாழ்வின் நகைமுரண்களில் ஒன்று அல்லவா ?

எலுமிச்சைச்சாறுஇல்லையென்பதைத்தவிரவேறு குறையிலாது அந்தக்குளிரில் அனைவருமாக சுலைமானியை மாதவனின் பேர்சொல்லி அருந்தினோம்

முகாமிற்கு வரும்பொழுது நான் சுத்தமாக துடைத்த வெற்றுக்கலமாகவே வந்தேன். இப்போது நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறேன்3 நாட்களில் எத்தனை எத்தனை அறிதல்கள்?

இந்திய ஞானமரபில் தத்துவம் குறித்து சந்திரசேகரென்னும் இளைஞர் பேசினது எனக்கு மேலோட்டமாகவே புரிந்தது எனினும் அதற்கே அரங்கு முடிந்த போதுஎடை கூடினதுபோல பிரமையேற்பட்டது.  That was too much for me ,  இந்தியச்சிற்பக்கலை குறித்தும் சந்துரு  மாஸ்டர் உரையிலிருந்து நிறைய அறிந்துகொண்டேன், ஒருஅடிச்சிற்பமொன்றில் இருக்கும் நுணுக்கங்களைக்குறித்து 1 மணிநேரம் அழகிய உரையாற்றினார். பல வருடங்களுக்குப்பிறகு அத்தனை எளிய உடையில் ஒருவரைப்பார்க்கிறேன்.

சுவிஸ்ட்சர்லாந்திலிருந்து சுசித்ராவும் சிங்கையிலிருந்து சுபாவும் இதற்கெனவே வந்திருந்தார்கள்.  இறுதி நிகழ்வாக சுபா வைக்கம் முகமது ப்ஷீரின்  கதையினை விவரித்தார். ஒரு இளைஞன் சுபாவிடம், அவர் ஜெவினை அறிந்தபின்னரே இதுபோல பேசுகிறாரா அல்லது அவரது சுய சிந்தனையா இந்த உரை என்று கேட்டதற்கு சுபாவின்  defence  அபாரமாயிருந்தது, என் அறிதல் ஜெ விடமிருந்துதான் ஆனால் அந்த அறிதலென்னும் பீடத்திலிருந்துகொண்டு பேசுவதெல்லாம் நான் அறிந்தவற்றையே என்றார். மனமாரப்பாராட்டினேன் சுபாவை

My husaband and other animals  புத்தகம்குறித்து நிலாமுற்றத்தில் நான் சிலமாதங்களுக்கு முன்னர் உரையாற்றியதின் காணொளியைபார்க்கையில் நானும் திடுக்கிட்டுத்தான் போனேன் பாதி உரை ஜெ அவர்களிடமிறுந்து நான் கற்றுக்கொண்டதையே பேசியிருந்தேன். சுபா சொல்வது போல எனக்கான  source  உறுதியாக ஜெ அவர்கள் தான் எனினும் என் அறிதலென்பது அதன் பின்னர் என்னிடமிருந்துவருவது,

மேலும் ஜெவின் பாதிப்பில்லாது அவரின் வாசகர்கள் பேசவும் எழுதவும் இயலாதென்பதும் சத்தியமல்லவா?

குருகுலத்தைசுற்றியும் பச்சைபச்சேலென்று காரட் பயிரிட்டிருந்தார்கள் நிறையபுகைப்படமெடுத்துக்கொண்டோம் நானும் சரணும். புதிதாக கலந்துகொண்ட இளம் வாசகர்கள் ஆர்வமிகுதியிலும் பதட்டத்திலும் கோர்வையாக பேசமுடியாமல் கேட்கநினைத்ததை துண்டு துண்டாக  கேட்கையில், ஜெ அதை சரியாக தொகுத்து அழகாக முன்வைக்கிறார். உண்மையில் அதை மறுகட்டமைப்புச்செய்து ஜெ சொன்ன பிறகே எங்களுக்கு மட்டுமல்லாது கேள்வி கேட்டவருக்கே அவர் கேட்க நினைத்ததென்னவென்று  புரிந்தது

இன்னொரு விவாதத்தில் படைப்பாளி தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல வேண்டும் தேவையற்றவற்றைச் சேர்த்து குழப்பக்கூடாது என்பதற்கு ஜெ spontaneous  ஆக சொன்ன உதாரணம், ஒரு  fruit salad  தயாரிக்கையில் அதனுடன் சர்க்கரை சேர்த்தால் பழங்களின் சுவை எப்படி தெரியும் ? என்பது. அழகான உதாரணம்

அவரைக்குறித்து இரவு நானும் சரணுமாய் பேசிக்கொள்கையில் எனக்கு ஜெ ஒரு சூப்பர் ஹுயூமன் என்றும் அவர் ஒரு gene level mutant  என்றும் சொன்னேன், சரண் திடுக்கிட்டான். ஆம் நான் அப்படித்தான் நினைக்கிறேன்

ஒரு நாளுக்கும் மற்றொன்றிற்கும், எந்த மாறறமுமில்லாத பணிச்சுமை எப்போதும் கூடி இருக்கும், மிகுந்த பரபரப்பான நாட்கள் நிறைந்த என் வாழ்வில் இந்த  3 நாட்களும் முழு ஓய்வு மட்டுமல்லாது, பற்பல புரிதல்களும், அறிதல்களும், தோழமையுமாய் நிறைந்திருந்த து

குருநித்யாவின் சமாதி இருக்கும் இடத்தில் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தை எனக்கு ஒரு தோழி பகிர்ந்திருந்தார். அதில் வாய்கொள்ளாச்சிரிப்புடன் இருக்கும் என்னை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். இப்படி நான் மனம் விட்டுச்சிரிக்கும் ஒரு புகைப்படமும் வீட்டில் இல்லை ,ஏனெனில் அத்தகு தருணங்கள் இதுவரை வாய்த்ததில்லை.  இந்த 3 நாட்களைக்குறித்தான  இத்தனை நீளப்பதிவில் எழுதிய  அனுபவங்கள் அனைத்தையும்  அந்தப்புகைப்படத்திலிருக்கும்  என் சிரிப்பு சொல்லிவிடும்

அனைவரிடமும் விடைபெற்று ஊர் திரும்புகையில் மனம் கனத்திருந்தது. நிர்மால்யாவிடன் அனுமதி வாங்கி  குருகுலத்திலிருந்து நான் கொண்டுவந்து கூடத்தில் ஒரு கண்ணாடிக்குவளை நீரில்  வைத்திருக்கும் ஹைட்ராஞ்சியாவின்  இளநீலமும் வெள்ளையுமாய் மலர்கள் செறிந்திருக்கும் மிகப்பெரிய  ஒற்றை மலர்க்கொத்தொன்று , குருகுலத்தினின்றும் ஒரு சிறு பகுதியையே நான் என்னுடன்  கூடவே வீட்டிற்கு எடுத்துக்கொண்டுவந்ததுபோல  ஆறுதலை அளிக்கின்றது

இப்படி  முற்றிலும் மகிழ்வான நிறைவான நாட்கள் வேறெந்த வகையிலும் எனக்கு கிடைத்திருக்காது என்பதை நிச்சயமாகச்சொல்லமுடியும் என்னால். இம்மூன்று நாட்களின் இனிய நினைவுகள்,  இன்னும் சில வருடங்களுக்கு  உற்சாகமாக நான் வேலை செய்யவும் , தளரும் தருணங்களில் என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் உதவி செய்யும்.

பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய்  மனம் நிறைந்திருக்கின்றது மிக நிறைவான இந்த முகாமிற்கும் ஏராளமாக நான் கற்றுக்கொண்டவைகளுக்குமாய்  ஜெவிற்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்

 

 

பான்ஸாய்

ச. துரையின் ‘’தண்ணீர்தொட்டிக்கடல்’’ கவிதையும் ஜெயமோகன் அவர்களின் பான்ஸாய்  மரங்கள் குறித்த பதிவையும்  வாசிக்கும் வரையிலும் பான்ஸாய் வளர்ப்பு குறித்தும் அம்மரங்களைக்குறித்தும் எனக்கும் ஒவ்வாமை இருந்தது.  பான்ஸாய் குறித்த வகுப்புக்களிலும் பயிலரங்குகளிலும் அம்மரங்களை வளர்க்கும் நுட்பங்களை சொல்லத்துவங்கும் முன்பே, ஒரு தாவரவியலாளராக இம்முறையில் எனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் இயற்கைக்குக்கு மாறானது இவ்வளர்ப்பு முறை என்றும் சொல்லிவிடுவேன். இலைகளை பரப்பி, கிளை விரித்து மேலுயர்ந்து வரவேண்டிய மரமொன்றை, வேர்களையும் தண்டுகளையும் வளர்நுனிகளையும் தொடர்ந்து கத்தரித்து, மிகக்குறைவாக உணவும் நீரும் அளித்து, ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்த நிமிஷக்கணக்கில் மட்டும் சூரிய ஒளியில் வைத்து, கிளைகளில் கம்பிகட்டி, முறுக்கி, இழுத்து, பிணைத்து என்று இயற்கையான வளர்ச்சியை பலவிதங்களில் கட்டுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அழகாக மேசைமீது வைத்துக்கொள்கிறோம் என்னும் அபிப்பிராயம் மட்டுமே இருந்தது. ஜப்பானியர்கள் குள்ளமென்பதால் அவர்களுன் மரங்களும் குள்ளமாக வளர்க்க விரும்புகிறார்கள் என்றும் நினைத்திருக்கிறேன்,

பற்பல வடிவங்களில், பலநூறாண்டுகள் வளர்ந்த , பழங்கள் செறிந்து பான்ஸாய் மரங்கள், கொள்ளை அழகாக இருப்பினும், எனெக்கென்னவோ அவற்றை பார்த்தால் மகிழ்ச்சியே ஏற்பட்டதில்லை எப்போதும்.

எல்லா விதமான தாவரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்தாலும் பான்ஸாயை இதுவரை நான் கல்லூரியைத்தவிர வேறெங்கும் வளார்க்க முயற்சித்ததில்லை.

// குறுகும்போது கூர்கொள்வது ஞானம் //

//எவ்வளவு வளரலாம் என அந்த மரத்துக்கு தெரிவிக்கவேண்டும். ஒவ்வொருநாளும். மெல்லமெல்ல மரம் அதைப்புரிந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறு வான்வெளிக்குள் , வான் எனும் குமிழிக்குள் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது//

// நோக்குகையில் நாம் சிறிதாகி அதுபெரிதாகத் தொடங்குகிறது.  எத்தனைச் சிறிய இடத்தில் நிகழ்ந்தாலும் அரசமரம் அரசமரமேதான். இப்புவியே பிரம்மம் அல்லது மகாதம்மம் தன்னை நிகழ்த்திக்கொண்ட மிகச்சிறிய வெளி அல்லவா? துளிகளெங்கும் விரிவது கடலே//

என்று ஜெ சொல்லியிருப்பதை வாசித்தபின்னர் பான்ஸாய் வளர்ப்பை  இப்படி ஒரு அழகான கோணத்திலும் பார்க்கலாமென்று அறிந்துகொண்டேன். ஆம் நோக்க நோக்க அந்த மீச்சசிறு வடிவில் மரத்தின் வயதும் வயதுக்கேற்ற பிரம்மாண்டமும்  தெரிகின்றது.  மிகச்சிறிய பாட்டில் மூடி அளவிலான தட்டுக்களிலும் கூட வளர்க்கப்படும் இவற்றை மீச்சிறு மரங்கள் என்று சொல்வதும் மிகபொருத்தமாக இருக்கின்றது

Once a teacher ,always a learner  என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இன்று ஜெ விடமி

ருந்து ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

இனி பான்ஸாய் மரங்களூம் வீட்டில் வளரும்

.

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑