லோகமாதேவியின் பதிவுகள்

Category: கவிதை (Page 1 of 2)

மீண்டும் பிதாவே!

எல்லாம் உங்களால் தான் பிதாவே,

எல்லா பாவிகளையும் எப்போதும் மன்னித்துக்கொண்டே இருந்தால் பிறகெப்படி இருக்கும்?

பிதாவே!

ஆண்டவரே!

எனக்கு எதிர் தரப்பென்று ஒன்றிருப்பதில் புகாரேதும் இல்லை,

அவர்கள் வலுவற்றவர்களாய் இருப்பதிலும் ஆட்சேபணை இல்லை

இருந்தாலும் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படியாகவாவது இருக்ககூடாதா?

கொஞ்சம் பார்த்துப்பண்ணுங்கள் பிதாவே!

காத்திருத்தல்.

மறுபிறவியென்னும் சாத்தியமிருப்பின்

நான் ஒரு ஜகரண்டா மரமாகவே

நிச்சயம் பிறப்பேன்,

காலத்தை கடந்துநிற்கும்

மலைமுகடுகளை பார்த்தபடிக்கு

அப்போதும் ஒற்றையாய் ஓங்கியுயர்ந்து,

ஈரமற்று தகிக்கும் பாறைகள் மீது

அடர் ஊதா மலர்களை சொரித்தபடியிருப்பேன்,

அன்புக்குரியவர்கள் என்னை கடக்கையில்

அவர்களின்திசைநோக்கி

கூடுதலாய் மலர்களை பொழிவேன்.

அவர்களின் காலடியில்

மிதிபடும் மலர்களை மெளனமாய் பார்த்தபடி

காத்திருப்பேன்

மீண்டுமோர் கடும் கோடையொன்றில்

மேலும் மேலுமென மலர்களை பொழிய!

உள்ளுறைவது,

சிறு அதட்டலில் பணிந்துவிடும்

பெரும்பாலும்,

அவ்வப்போது மிரட்ட வேண்டியிருக்கையில்,

 அஞ்சினாற்போல் எங்காவது போய் பதுங்கிக்கொள்ளும்,

 அப்படித்தான் எப்போதுமென்றும் சொல்லமுடியாது

பிரம்பெடுத்தாலே அடங்கும் சமயங்களும் உண்டு,

 வசைச்சொல்லும் வேண்டியிருக்கும்

வேளைகெட்ட வேளைகளில் விவஸ்தையின்றி நடந்துகொண்டால்,

அரிதாக அதற்கு ஆவேசம் வரும் நாட்களில் கழுத்தை திருகியும்,

 காலடியிலிட்டு நசுக்கியும் கொன்று புதைப்பதுண்டு,

அப்படியும் உயிர்த்தெழுந்து விடுகிறது

 உடன்கட்டையேறும் வரை உடனிருக்குமிந்த

 உள்ளுறை விலங்கு!

பெருமரம்

அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
அதிகம் நனைந்து விட வேண்டாம் உன்காதலில் என்று,
கட்டுப்படுத்திக்கொண்டுமிருக்கிறாய்
பேரன்பின் பிரியத்தில் நிலைமறக்க வேண்டியதில்லை என
மட்டுறுத்திகொண்டுமிருக்கிறாய்,
அன்பில் அலைக்கழிந்து  போக வேண்டமென்று
கட்டளைகூட இட்டிருக்கிறாய்
காத்திருப்பின் தவிப்பில் கரைந்து போக வேண்டியதில்லையென
நீ உணரவேயில்லை
நீ சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
ஈரமண்ணிற்குள்  விதைகளை மறைத்து வைப்பதற்கான
முயற்சிகள் என்பதை
முளைத்து, தழைத்து, இலையும் கிளையுமாய்
தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் பெருமரமொன்றை
நீ எண்ணிகொண்டிருக்கிறாய் சின்னஞ்சிறு விதையென!

நீயின்றியும்…

யுத்தத்தில் மரணம் போல்,வெயிலில் தாகம் போல்

தவிர்க்க இயலாததுதான் நீ என்னை மறுத்ததும்

தேவதைகள் கிடைப்பது அரிதென்று தெரிந்து கொண்டேன்

முதலிலும் ,முடியவே முடியாதெனும் உன் முடிவிலும்

எனினும் இன்னுமிருக்கிறதோர் வேண்டுகோள்,

இத்தனைக்கும் பிறகும்.,,

உன் இதழோரம் என்றுமிருக்குமே ஓர் இளநகை,

அதை மட்டுமாவது எனக்களியேன்?

எனக்கான அக் குறுஞ்சிரியின் நினைவுகளிலேயே

வாழ்ந்து முடித்து விடுகிறேன் மீதி நாட்களை

நீயின்றியும்……

நேசமெனும் நஞ்சு

இலைதழைப்புகளுக்குள்
பார்த்துக்கொண்டிருக்கையிலெயே நுழைந்துவிடும் நாகம் போல
கண் எதிரிலேயே எனக்குள் நழுவிச்சென்று மறைகிறாய்
தேவன் தேர்ந்தெடுத்ததோர் கண்மொன்றில்
மெல்லப்பதித்தாய் உன் நேசமெனும் பற்களை
சலங்கை மணிகள் கொஞ்சும் என் மென்பாதமொன்றில்
நரம்புகளின் நுனி பற்றியபடி மெல்ல மேலேறி
இதயத்தை எட்டிப்பிடிக்கும்  அக்காதலெனும் நஞ்சினை
உவகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எங்கெங்கிலுமாய் நீ என்னுள் நிரம்பித்ததும்பி வழியும்  நாளொன்றில்
இதழோரம் பொங்கி வழியும் வெண் நுரையின்
சின்னஞ்சிறு குமிழிகள் ஒவ்வொன்றிலும் தெரிவோம் நாமிருவருமே!

தாமதமாகவாவது,

தொலைதூர இரவுப்பயணமொன்றில்  பேருந்தில் நீயும்

தனித்திருக்கும் மற்றுமோர் இரவில் நானுமாய் நேற்றிருந்தோம்

உன்னுடனேதான் நானும் பயணித்துக்கொண்டிருந்தேன்

உன் ஜன்னலுக்கு வெளியே பொழிந்த மழையில்

நனைந்து குளிர்ந்து தோள் சாய்ந்தபடி
நேற்றென்னவோ
காதலில் தோய்ந்தபடி என்னிடமிருந்து  உன்னை வந்தடைந்த
என் வார்த்தைகள அனைத்தையும்
குத்து வாட்களாய் எதிர்கொண்டது உன் மறுமொழிகள்
திகைத்துப்பார்த்துக்கொண்டிருந்த என் இதயத்தையும்
சில  கூ ர்நுனிகள் மெல்ல கிழித்து குருதிச்சுச்வை பார்த்தன
 உறக்கமின்றி உணர்ந்துகொண்டே இருக்க முடிந்ததென்னால்
நகரும் பேருந்தில் சாய்ந்து உறங்கிவிட்ட உன்னை
இறப்பைக்குறித்து பேசிக்கொண்டே இருக்கிறாய்
வாழ்வெனும் நதியில்  மூழ்க விரும்பும் என்னை முடிபற்றிச்சுழற்றி
மரணமென்னும் கரையில் வீசி எறிந்தபடி
சென்றடைந்து விட்டாயா எனும் என் குறுந்தகவலொன்றிற்கு
இன்னும் வரவில்லை உன்னிடமிருந்து பதிலொன்று
இரு நீலக்கோடுகளுக்காய் காத்துக்கொண்டிருக்கிறதென் காலை
ஒருவேளை உன் கோப்பையில் உற்சாகமாய்
பொங்கி வழியும் பானமொன்றின் குமிழிகளில்
 எனைக்காணும் பொழுதினில்  பதிலொன்று
அளிப்பாயல்லவா

தாமதமாகவேனும்?

சம்மதம்

உனக்கே உனக்கானதோர் என் காதலை
உணர்ந்திருக்கிறாயா உள்ளபடி நீ?
உனக்கு வேண்டுமானால்
ஒருவேளை அவை
  ஒரு கோப்பை பானத்தின் ஒற்றைத் துளியாகவோ
நீ காலடியில் தேய்த்தழிக்கும்
கடைசித்துண்டு  சிகரெட்டாகவோ
 தவறாக எழுதி சுருட்டி எறியும் காகிதமாகவோ
அன்றி
 வெகு நாட்களாய்  வாசிக்க மறந்த ஒரு புத்தகமாக்கூட இருக்கலாம்
ஆனால் அன்பே
 கதகதப்பாய் எனை மூடிக்கொண்டிருக்கிறது
கனத்ததோர் கம்பளியாய் உன் மீதான என் காதல்,
 உறங்கிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும்
அதனுள் என்னை முற்றிலுமாய் பொதிந்து கொண்டு
மூச்சுத்திணறி  அப்படியே மரணிப்பதற்கும் சம்மதமாய்!

சில கணங்கள்

கண்முன்னே நழுவிச்செல்கிறது காலம்

அதிலிருந்து தெறித்து வெளிவரும்

கணங்களில்

கைக்கு கிடைத்த

சிலவற்றை அள்ளி சேகரித்து

மடியில் இறுக்கக்கட்டிக்கொள்கிறேன்

உன்னுடன் வாழ

எனக்கும் வேண்டுமல்லவா

சில கணங்கள்!

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑