லோகமாதேவியின் பதிவுகள்

Month: January 2021 (Page 1 of 2)

கன்னிப்பார்வை,

நோய்த்தொற்று உச்சத்திலிருந்த, ஊரடங்கும் அமலில் இருந்த மார்ச் மாத நள்ளிரவொன்றில், வழியெங்கும் பூத்திருந்த மஞ்சள் மலர்களை நிறையவே நிறையாத கூடையில் பறித்துக்கொண்டே இருக்கும் நெடுங்கனவொன்றில் நானிருக்கையில் எங்கோ ஆழத்தில் குடுகுடுப்பைக்காரனின் குரலும் குடுகுடுப்பை ஒலியும் அஞ்சிய நாய்களின் குரைப்புமாக கேட்டுக்கொண்டிருந்தது. படுக்கயறையின் ஜன்னலுக்கு வெளியே நின்றபடி குறிசொல்லிக்கொண்டிருந்திருக்ககூடும்.

கனவிலேயே நாளை விடிந்ததும் எப்படியும் நேரில் குறிசொன்னதை விளக்கிச்சொல்லி பழம்புடவைகளையும் அரிசியோ பருப்போ எண்ணையோ தேவையைச்சொல்லி வாங்க வருவானில்லையா அப்போது பார்த்துக்கொள்ளலாமென்று ஆழ்மனமே ஆழ்மனத்திற்கு சொல்லி மீண்டும் கனவை தொடர்ந்து, தூங்கிவிட்டேன். வழக்கம் போல அதிகாலை விழித்து நாளைத் துவங்கினேன் ஆனால் கண் விழித்த நிமிஷத்திலிருந்தே  என்னவாக இருக்கும் அவன் சொன்னவிஷயம் என்றூ உள்ளுக்குள் நிமிண்டலாகவே இருந்தது.

உலகளாவிய அசாதரண நோய்தொற்றுக் காலமாதலால், நிச்சயமற்றுப்போயிருந்த எதிர்காலம், மகன்களின் படிப்பு, ஆரோக்கியம், என் வேலை என்று ஏராளம் கவலைகளில் உழன்று கொண்டிருந்த சமயமாதலால் குடுகுடுப்பைக்காரனின் வரவுக்கு 2 நல்ல புடவைகளையும் அரிசியும் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன்

6 மணி வாக்கில் வந்தான். இளைஞன், கரியவன் ஏராளமான வண்ணத்துணிகளை கைகளிலும் தோளிலும் போட்டுக்கொண்டிருந்தான். முறுக்கு மீசை, ரத்தச்சிவப்பில் பெரிய வட்டப்பொட்டு ,வெற்றிலையில் சிவந்த தடித்த உதடுகள். எதையோ வைத்திருந்த கனமான ஜோல்னா பைகளிரண்டு தோளிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது.

என்னைப்பார்த்ததும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே’’ இந்த வீட்டு மூத்த ராசாவுக்கு, மூத்த வாரிசுக்கு, குடும்பத்தை தாங்கப்போற காளைக்கு குறி சொல்லியிருக்கா ஜக்கம்மா’’ என்றதும் ஆர்வமும் கூடவே கவலையுமாக வெளியே போனேன். சரணுக்கு என்னத்தை சொல்லியிருக்காளோ ஜக்கம்மான்னு

 ’’தாயி, மகாலட்சுமி உன் களையான முகம் என்னிக்கும் வாடாது  வாடவிடமாட்டா ஜக்கம்மா’’ என்று பால்வார்த்தான் பின்னர் தடாலடியாக ’’தாயி,  நல்லா கேட்டுக்க இந்த வீட்டு மகராசன் மேல,  மூத்த ராசாமேல, கன்னி ஒருத்தி கண்ணைப் போட்டுட்டா, அவ பார்வையை நல்லா பதிச்சு போட்டா, கவனிச்சுக்கேளு நான் சொல்லபோறதை’’ என்றான். நான் பரவசமாகிவிட்டேன்

எனக்கு சில வருடங்களாகவே மனக்குறை இருந்த ஒரு விஷயம் இது

சரண் வழக்கமாக எல்லா பையன்களும் சொல்லும் ’’எனக்கு பெண்களைப் பிடிக்கா’’தென்பதை 8 ஆம் வகுப்பிலேயே சொல்லிவிட்டாலும் அதன்பிறகும் அதில் மாற்றங்கள் எதையும் காண்பிக்கவேயில்லை, சொன்னது சொன்னதுதான்னு பெண்கள் பக்கம் திரும்பவேயில்லை

இந்தியாவின் தரமான பள்ளிகளில்  இரண்டாவது பள்ளியான அவன் பள்ளிப்பெண்கள் அனைவருமே செல்வச்செழிப்பின் அழகும், இளமைப்பெருக்கின் அழகும், இயல்பான அழகுமாய் திளைப்பவர்கள். இவன் வகுப்பிலும் பேரழகிகள் தான் எல்லாருமே.

ஆனால் யாரிடமும் இவன் சிரித்துப்பேசியதையோ, அலைபேசியதையோ கூட நான் பார்த்ததில்ல. பள்ளி விழாவான ஆனந்த உத்ஸவ்’விற்காக 3 நாட்கள் அவனுடன் பள்ளியிலேயே தங்கவேண்டி வருகையில் என்னை முன்பே எச்சரித்தே கூட்டிப்போவான் ’’அம்மா என் வகுப்பு பொண்ணுங்க கிட்ட எல்லாம் ரொம்ப சிரிச்சி சிரிச்சு பேசாதே’’ என்று. நான் அந்த எச்சரிக்கைகளை கடுகளவும் பொருட்படுத்தியதும், கவனத்தில் கொண்டதும் இல்லையென்பது வேறு விஷயம்.

பள்ளியின் பசும்புல்தரையில் நானும் சரணுமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு குட்டைப்பாவாடை கத்தார் அழகி ’ஹாய் பொள்ச்சி’ என்று இவன் முதுகில் பளாரென ஒரு அறை வைத்துவிட்டுப்போனாள் ஒருமுறை. இவன் முகம் கடுகடுக்க அமர்ந்திருந்தான், ’’டேய் யாருடா?’ என்றதற்கு ’’ஜூனியர்மா, கொழுப்பு’’ என்றான். ’’அட சும்மா பேசலாமில்ல நீயும்,  அது அடிக்கற அளவுக்கு ஜாலியா இருக்கில்ல என்றதற்கு’’, அம்மா! நீ கொஞ்சம் பேசாம இருக்கியா? என்ற எதிர்வினை 2 லட்சமாவது தடவையாக அவனிடமிருந்து வந்தது.

இன்னும் ஒருத்தி அடுத்த நாள் வந்து ’’சா, உன்னிடம் இருக்கும் சாண்ட்விச் கூப்பனை எனக்கு தரமுடியுமா’’ வென்று கேட்டாள், எந்த பதிலும் பேசாமல் குறைந்த பட்சம் ஒரு புன்னைகை கூட இல்லாமல், பாண்ட் பாக்கட்டிலிருந்து கூப்பனை கொடுத்துவிட்டு தேமே என்று அமர்ந்திருந்த அவனை எரிச்சலுடன் பார்த்து’’ ஏன் இவ என்ன சீனியரா உனக்கு? என்றேன் ’’இல்ல கூடத்தான் படிக்கறா ’’ என்றான் கொஞ்சம் சிரிச்சாத்தான் என்னடா? என்றால் மீண்டும் அதே’’ நீ சும்மா இருக்கியா’’பாட்டையே பாடினான்

அந்த பெண் கொள்ளை அழகி. பொன்னிறகூந்தல் அலைஅலையாக இடுப்புவரை,  பூனைக்கண்கள், கூர்நாசி, உருவிவிட்டது போல் உடல், நல்ல உயரம் இந்தியச்சாயல் அவள் உடல்மொழியிலும் இல்லை. பிறமாணவர்களிடம் விசாரிக்கையில் விழுந்தடித்துக்கொண்டு அவளை, அந்த சங்கரியைக் குறித்து ஒரு லாங் சைஸ் நோட்டில் எழுதும் அளவுக்கு தகவல்களை கொட்டினார்கள்

அப்பா சென்னைவாசி, சென்னைக்கு சுற்றுலா வந்த பிரேசில் அழகியுடன் காதல் வயப்பட்டு கல்யாணம், காதலின் சாட்சியாக ஒரே மகள் சங்கரி  இவன் ஏன் இப்படி இருக்கிறானென்று அன்றைக்கும் ரொம்பவும் விசனப்பட்டேன்

பெருங்கவலையில் இருந்த எனக்கு ஜக்கம்மா குடுகுடுப்பைக்காரனிடம் சொல்லி அனுப்பிய தகவல் பெரிதும் மகிழ்ச்சி அளித்ததால் ’’அப்படியா’’, என்று வாய்விட்டே கேட்டேன்

என் உணர்வெழுச்சி நிரம்பிய அந்த வினாவை அவன் அதிர்ச்சியென்று தவறாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும், ’’ஆமாந்தாயி ஆனா உங்க மகன் தப்பெதுவும் செய்யலை, கன்னி அவளாத்தான் கண்ணை வச்சுட்டா, கொள்ளிக்கண்ண, கொலைக்கண்ண வச்சிட்டா’’ என்றான். கவிஞனாயிருப்பான் போலிருக்கேன்னு நினைச்சேன். என்ன மொழிவளம்!

 தப்பா நினக்க என்ன இருக்கு வயசுப்பசங்கன்னா பொண்ணுங்க கண்ணை, மனசை வைக்கறதெல்லாம்தானே நடக்கனும்னு மனசில் நினச்சு சந்தோஷப்படறதுக்குள், ‘’ஒண்ணும் கவலைப்படாதீங்க,  சின்ன பூசையொன்னப்பண்ணி கன்னியோட கண்ணை எடுத்துப் போடலாம், அவிச்சுப்போடலாம், விலக்கிப்போடலாமென்றதும் எரிச்சலானேன். இருந்திருந்து இப்பத்தான் ஒருத்தி கண்ணை வச்சுருக்கா, அதை எதுக்கு எடுக்கனும்?

‘’ அதெல்லாம் வேண்டாம்ப்பா, இருந்துட்டு போகட்டும்’’ என்றதும் அவன் குழம்பிவிட்டான். பொதுவில் இப்படி சொன்னதும், கவலையடையும் தாய்களைத்தான் பார்த்திருப்பானோ என்னமோ!

’’தாயீ,, நான் கன்னின்னு சொன்னதை யார்’னு நினச்சீங்க’’ன்னு அவன் துவங்குமுன்னே நான் யாரா இருந்ததாலும் சரி ஒண்ணும் பிரச்சனையில்லைப்பா’’ என்றேன் கறாராக. அவன் மேலும் குழம்பி என்னையும் குழப்பும் உத்தேசத்துடன் பெரிய பூசையெல்லாம் வேண்டாம்மா, 3000 ரூபாதான் ஆகும் நல்லெண்ணை மட்டும் 2 லிட்டர் கொடுத்தாபோதுமெ’’ன்றான்.

 ’’அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா,’’ என்று சொல்லி போய் புடவையை கொண்டு வரலாமென்று திரும்புவதற்குள், அவன் ‘’நாயக்கரம்மாக்கு இனி எல்லாம் நல்லாத்தான் நடக்கும்’’ என்றதும் மேலும் கடுப்பானேன். நாயக்கரம்மாவா!!!!!! .கொங்கு வட்டாரத்தின் நாயக்கர் பெண்களெல்லாம் ஓங்கு தாங்காக நல்ல உடற்கட்டுடன் பெருங்கூட்டுக்காரிகள் என்றே பெயரெடுத்திருப்பவர்கள்.

மறுபடியும் குண்டாகிட்டேனோ என்று கவலையாகவும் குடுகுடுப்பைக்காரன்  மீது எரிச்சலாவும் இருந்தது. சரி எடுத்துவைத்த புடவையை கொடுத்து இவனை அனுப்பிடலாமென்று நினைக்கையில் மீண்டும் அவன் ’’இந்த வீட்டுக்கு இனி எல்லாமே நல்லத்துதான் பூரா ஆம்பளை ராசாவேதான் பொறப்பங்க ,இனி பெண் வாரிசே இல்லை, எல்லமே ராசாக்கதான், ஆளும் வம்சம்தான்’’ என்று ஒரே ஆணாதிக்க க்குரலாக கொடுது என்னை  எரிச்சலடைய செய்தபடியே இருந்தான்.

 எப்போ இனி இந்த வீட்டில் இனி பெண் குழந்தைகள் பிறக்கும்னு காத்திட்டு இருக்கும் என்னிடம் இவன் இப்படி சொல்லிக்கொண்டிருந்ததில் ஏகத்துக்கும் எரிச்சலானேன்.  ’’சரிப்பா நில்லு வரேன்’’னு சொன்னதும் மறுபடியுமவன் ’’தாயீ கன்னியின் கண்ணு’? என்றான்

’’அது இருக்கட்டும் அப்படியே’’ என்று  காட்டமாக சொல்லிவிட்டு  புடவைகளையும் பொருட்களையும் கொடுத்தேன்.  ’’தாயீ 3000 வேண்டாம், சின்ன பூசையா, ஒரு ஆயிரத்திலயாவது செஞ்சுபோடலாம் கண்ணு நல்லதில்லை’’ என்றான் மறுபடி. மறுத்துச்சொல்லி அவனை அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..

ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கியிராத ஞாயிறென்பதால் சரண் தருண் இருவரும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். யாராயிருக்கும் அந்த கன்னி? என்று யோசனை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அந்த பின்வீட்டிலிருக்கும் ஒல்லிபிச்சிபெண்ணா? தலைமுடி கொத்தமல்லி கட்டாட்டம் சின்னதா இருக்குமே அந்த தோப்புக்காரர் பொண்ணாயிருக்குமோ?

அடுத்த தெருவில் இருக்கும் போலீஸ்காரர் பெண்ணா? அல்லது அய்யோ, அடிக்கடி சரண் மருமகனா வர கொடுத்து வச்சிருக்கனும்னு சொல்லிட்டே இருக்குமே ஒரு வாயாடி அம்மா, ரெண்டு தெரு தள்ளி அவ பொண்ணா இருந்துருமோ?

சரணை மருமகனாக்கும் விருப்பத்தை என்னிடமே வெளிப்படையாக அந்த அம்மாள் சொல்லிய ஒரு நாளில் நான் மைய்யமாக சிரித்து  அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன். எனக்கு சம்மந்திகூட  சரிக்குச்சரி சண்டை போடத் தெரியனுமே!

ஆனால் அன்று தருண் ’’அட பக்கத்திலேயே செட்டில் ஆயிட்டியே, வெரி குட், கைகொடு’’னு சொல்லிச்சொல்லி அண்ணனை வெறுப்பேற்றியதில் சரண் அரண்டு போய்  கூகிள்  மேப்பில் பாழுங்கிணற்றின் லொகேஷன் தேடிக்கொண்டிருந்தான்.

சரி யாரா இருந்தாலும் சரின்னு சமாதானமாக்கிக்கொண்டேன் என்னை.

ஆனால் முதலில் எழுந்து வந்த தருணிடம் ஆர்வமாக விஷயத்தை சொன்னதும் அண்ணன் மேல கன்னிப்பார்வையா? இருக்கட்டும் ’’எனக்கு என்ன சொன்னான்’’ என்றான் ஆர்வமாக. ’’ஒண்ணுமே சொல்லையே’’ என்றதும் ஒரே சண்டை ’’நீயெல்லாம் ஒரு தாயா? அண்ணனுக்கு ஒரு பார்வைன்னு சொன்னான்னா சின்னவனுக்கு என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா’’ என்று

 சரி குடுகுடுப்பைகாரனின் போன் நம்பர் இல்லாட்டி வாட்ஸ் அப் நம்பர் இருக்கா எடு எடு என்றால் எங்கே போய் எடுக்க? ஏண்டா அநியாயம் பண்ணறே குடுகுடுப்பைகாரன்களுக்கு ஏதுடா போனெல்லாம்?‘’ ’’ஏன் இருக்காதா, அன்னிக்கு பஸ்டாண்டில் ஒரு அம்மா பிச்சை எடுத்தாஙகளே அப்போ அவங்க இடுப்பில் போனை சொருகி வச்சிருந்து எடுத்து பேசினாங்களே அப்போ ஏன் இவங்ககிட்டே இருக்காது, நீதான் கேட்காம விட்டுட்டே! எனக்கு எதாச்சும் கன்னி பார்வை இருந்துன்னா பார்த்து மேல எதாச்சும் செஞ்சிருப்பேனே’’ என்று அவன் ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருந்தான்

சரண் எழுந்துவந்ததும் விஷயத்தை சொன்னோம் சிடு சிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு ’’நீ என்ன கன்னின்னா, கன்னிப்பொண்ணுன்னு நினச்சுட்டு இருக்கியா, அவன் சொன்னது எதாச்சும் கன்னி தெய்வமா இருக்கும்  எப்படியாச்சும் உன்கிட்ட ஒரு ஐயாயிரம் தேத்தலாம்னு பார்த்துருக்கான் நீ தப்பிச்சுட்டே, அவ்வளவுதான், போம்மா’’ என்றான்’

அட அவ்வளவுதானா? ஜக்கம்மா என்ன இப்படி பண்ணிட்டாளே? என்ன என்னமோ நினச்சு சந்தோஷப்பட்டாச்சு அதுக்குள்ள.

 இன்னுமே தருண் அதே குடுகுடுப்பைக்காரனை வீதிகளில் அவ்வபோது தேடுவான், அவனுக்கும் பார்வை எதாவது பட்டிருக்கா என்று தெரிந்துகொள்ள.

உண்மையில் தருணின் பார்வைகள் பட்டிருக்கும் ஏராளமான பெண்களின் வீட்டில் அவற்றை எடுக்க பூசை செய்யவேண்டி இருக்குமென்பதை குடுகுடுப்பைக்காரன் தெரிந்துகொண்டால் அவன் காட்டில் மழைதான்.

சமர்த், ராஜகோபால்,

ஒரு நீண்ட விடுப்பில்2019 ஆகஸ்டில் சென்னை  சென்றிருந்தேன். சென்னை விஷ்ணுபுரம் குழும நண்பர்கள்   சொல்லி , திரு ராஜகோபால் , (Samarth learning solutions) நடத்திய  இரண்டு நாட்களுக்கான ஆளுமை மேம்பாட்டு பயிற்சியில்  17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்துகொண்டேன்

உண்மையில் கலந்துகொள்வதற்கு முன்னர் ’ஆளுமை மேம்பாட்டிற்கு என்ன இரண்டு நாட்கள் பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது’ என்னும் அலட்சிய மனோபாவம் இருந்தது. மேலும் ”எனக்கென்ன இனி மேம்மடுத்திக்கொள வேண்டும், 12 வருடங்களாக நல்ல ஆசிரியையாகத்தானே இருக்கிறோம்? என்றும் ஒரு கேள்வி இருந்தது. எதற்கும் போகலாம் சென்னை குழும நண்பர்களை பரிச்சயம் செய்துகொண் டதுபோலிருக்கும் என்றே சென்றேன் உண்மையில்

 இதுபோன்ற நிறைய பயிற்சிகளை எங்களுக்கு கல்லூரியில் வருடா வருடம் அளித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.  அந்த பயிற்சிகள் என்பது, ஒருவர் மேடையில் ’’ எப்படி நாங்கள் இந்த உயரிய தொழிலை தெய்வமென நினைக்கவெண்டும், முன்னுதாரணமான ஆசிரியர்களின் வாழ்க்கை குறிப்பு’’ இப்படி சொற்பொழிவாற்றுவார், அல்லது எங்களுக்கு சில விளையாட்டுககள் நடத்துவார்கள் அன்றெல்லாம் மகிழ்ந்திருந்து வீடு திரும்புவோம் அவ்வளவுதான். பயிற்சி என்று சொல்லப்பட்ட அந்த நிகழ்வுகளிலிருந்து எங்களுக்கு  கற்றுக்கொள்ளவோ, மேம்படுத்திக்கொள்ளவோ  ஏதும் இருந்ததே இல்லை.

ஆனால் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நிறைவு செய்த பின்னரே இது எத்தனை அவசியமான ஒன்று என்பதையும் நான் மிகத்தாமதமாக இப்பயிற்சியினை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் உண்ர்ந்து வருந்துகிறேன். 15பேர் கலந்துகொண்டோம். பெரும்பாலும் தகவல்தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையை சேர்ந்தவர்களும் என்னைதவிர இன்னொரு ஆசிரியரும். அனைவரும் விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்தவர்களே!

 12 வருட ஆசிரியத்தொழிலில் நான் முக்கியமென கருதிவந்தது, பெரும்பாலும் அன்பாயிருப்பது, தேவைப்பட்டால் கடுமைகாட்டுவது, நேரம் தவறாமை, மாணவர்களுக்கு  சரியாக விஷயத்தை கொண்டு சேர்ப்பது, மாணவர்களின் அந்த அவய்துக்கேயான சிக்கல்களையும் அன்னையென இருந்து தீர்வுகாண்பது  இவைகளை மட்டுமே.

ஆனால் இந்த பயிற்சியின் பின்னரே இன்னும் எத்தனை முக்கியமான நான் அவசியம் பின்பற்றவேண்டிய, எனக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து பயனளிக்கக்கூடிய  நுட்பமானவிஷயங்கள் இருக்கின்றன என்றறிந்து கொண் டேன்

ஆசிரியத்துக்கு மட்டுமல்ல,  ஒரு உரையாடலை எப்படி சாமார்த்தியமாக கொண்டு போவது, வியாபாரப்பேச்சுக்களை எப்படி வெற்றிகரகமாக நடத்துவது இப்படி ஏராளமாக கற்றுக்கொண்டோம்

பங்கேற்பாளர்கள் பேசுவதை வீடியோவாக எடுத்து மீண்டும் எங்களுக்கே போட்டுக்காண்பிக்கையில் அதில் நாங்கள் செய்தவையும் செய்யக்கூடாதவைகளும்  எங்களுக்கே தெளிவாக  தெரிந்தது

இந்த பயிற்சியின் வாயிலாக அல்லாது வேறெப்படியும் நாங்கள் இதுபோன்ற தவறுகளை, தோற்றப்பிழைகளை சரிசெய்துகொண்டிருக்கவும் ஏன் அறிந்துகொண்டிருக்கவும் கூட வாய்ப்பில்லை,. இரண்டு நாட்களுமே கொட்டும் மழையில் முழுக்க நனைந்து கொண்டும் கூட பின்மாலை வரை நீண்ட பயிற்சியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டோம்

ராஜகோபாலும் அவர் நண்பர் அருணும் இப்பயிற்சியை நடத்தினார்கள். இருவரும் மிக்க தோழமையுடன் சிரித்த முகத்துடன் சோர்வின்றி , கட்டணமுமின்றி எங்களுக்கு முழுமனதுடன்  பயிற்சி அளித்தனர். பயிற்சியாளர்களுடன் பங்கேற்பாளர்கள் இருந்ததைபோலல்லாமல்  நெருங்சிய சினேகிதரோ அல்லது சொந்த சகோதரனோ வந்திருந்து வீட்டு முன்னறையில் காபி குடித்துக்கொண்டே இயல்பாக பேசிக்கொண்டிருந்தது போன்ற ஒரு சுவாதீனமும் செளகரியமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது.

.திரு ராஜகோபால் அவர்களை வெண்முரசு வாசகராக விஷ்ணுபுரம் விழாவில் இலக்கிய வாசகராகத்தான் அறிமுகம் ஆனால்  இப்படியான பயிற்சிகளை நடத்துபவர் என்றே இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்..

விடுப்பு முடிந்து இனி ஒரு ஆசிரியையாக  மாணவர்கள் முன்னால் நின்று முன்னைக்காட்டிலும் சரியாகவும் சிறப்பாகவும் என்னால் பாடங்களை நடத்த முடியும் என்று திடமான நம்பிக்கை வந்திருக்கிறது இப்போது

பங்கேற்பாளர்களில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.  அவர்களுடன் கலந்துரையாடியதும் நல்ல அனுபவமாயிருந்தது,. பயிற்சியளித்த ராஜகோபால் மற்றும் அருண் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் குழுமத்திற்கும் பயிற்சிக்கு  தன் வீட்டில் இடமளித்த திரு செளந்தருக்கும் நன்றி.

ஜா ஜா என்னும் ராஜகோபால்

இந்த பதிவு ஒரு கடிதமாக ஜெ வின் தளத்தில் வெளியானது, கடிதத்துக்கு சமர்த் குறித்த ஜெ வின் விரிவான பதில் இருக்கும் இணைப்பு;

சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்

பியர்- கசக்கும் உண்மை,

மனித மூதாதையர்கள் சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்தியிருப்பதற்கான  சாத்தியங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.குகை ஓவியங்கள், தகவல்கள் பொறிக்கப்பட்ட களிமண் கட்டிகள், அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டங்களின் மிச்சங்கள், பாப்பிரஸ் சுருள்களின் குறிப்புக்கள், கல்லறை சித்திரங்கள், எகிப்து பிரமிடுகளின் சீசாக்களும் மதுக்கோப்பைகளும் குடுவைகளும், என நமக்கு கிடத்திருக்கும் எல்லா ஆதாரங்களுமே மதுபானங்கள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றிருந்ததை சொல்கின்றன.

மதுவைக் குறித்துப் பேசாத உலக இலக்கியங்களே இல்லை. தண்ணீரை திராட்சை ரசமாக்கியதுதான் ஏசு நிகழ்த்திய முதல் அதிசயமே. நோவா, திராட்சை ரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகி சுயநினைவிழந்து படுத்திருந்தததை சொல்லுகின்றது விவிலியம். வளர்பிறையில் வளர்ந்து தேய்பிறையில் சிறுத்துக்கொண்டு போகும் சோமனுக்குரிய கொடியை பிழிந்து எடுக்கும் சோமபானம் நம்மை துயரிலிருந்தும் பிணியிலிருந்தும் விடுவிக்குமென அதர்வவேதம் குறிப்பிடுகின்றது. வேதகாலத்தில் வாழ்ந்த அசுரர்களும், கிராதர்களும் அரிசி, பார்லி மற்றும் தினை மாவுகளிருந்து தயாரிக்கப்பட்ட சுர’ பானம் அருந்தியதாக  வேதம் கூறுகிறது

 புராதன இந்தியாவில்  வாழ்ந்த ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளித்த சரக மகரிஷி (Charaka) சுரபானத்தை  வலிநீக்கியாகவும், மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தியதற்கும், அவருக்கும் முந்தைய காலத்தை சேர்ந்த சுஷ்ருதர் கருச்சிதைவான பெண்ணொருத்திக்கான சிகிச்சையின் போது அவளுக்கு வலிதெரியாமலிருக்க சுரபானத்தை அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன.

 ராமாயணத்தில் பல இடங்களில் மதுஅருந்துதல் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரத்திலும் யவனமது, தேறல் உள்ளிட்ட பலவகையான் மதுவை ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி அனைவரும்   அருந்தியிருப்பதை காணலாம்.  கடவுளின் கட்டளையின்படி சேகரித்த தாவங்களை கடலில் கரைத்து அமிர்தமெடுத்து பருகி வலிமைமிக்கவர்களாவதை  குறிப்பிடுகின்றது வால்மீகி ராமாயணம் .புத்தமத நூல்கள் கரும்பின் சாற்றுடன் பல தாவரங்களை சேர்த்து உண்டாக்கும் சுரா என்னும்  பானத்தையும், தேனை புளிக்க வைத்து உண்டாக்கும் மதுவையும் பற்றி சொல்லுகின்றது

  சங்க இலக்கியங்களில் தமிழர் பயன்படுத்திய மதுவகைகள் குறித்துப் பல செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன.  மனிதகுலத்தின் வரலாறோடு இணைந்தேதான் இருந்திருக்கிறது போதையூட்டும் பானங்களும் பிற வஸ்துக்களும்.

பழமரங்கள் தங்களின் விதை பரவுதலை பழங்களை உண்ணும் விலங்குகளின் மூலம் உறுதிப்படுத்த   முற்றிக்கனிந்த பழத்தின் வாசனையிலேயே அவற்றில் சர்க்கரை உள்ளதையும் அவை உண்ணத் தகுந்ததாயிருப்பதையும் விலங்குகளுக்கு தெரிவிக்கிறது.

உதிர்ந்து கேட்பாரற்றுக் கிடக்கும் அழுகிய பழங்களின் சர்க்கரைகளை இயற்கையாகவே காற்றிலும் மண்ணிலும்  இருக்கும் ஈஸ்ட்கள் உட்கொள்ளத் தொடங்கும் போது சர்க்கரை ஆல்கஹாலாக மாறுகிறது இவற்றை உண்ணும் குரங்குகள்  போதையை அறிந்து, பின்னர் தொடர்ந்து இத்தகைய கனிந்த, நொதித்த பழங்களையே உண்ணத்துவங்குகையில், விலங்குகளையும் பறவைகளையும் பின்தொடர்ந்தே, உண்ணக்கூடிய உணவையும் தேவையான மருந்தையும் கண்டறிந்த ஆதிமனிதர்களும் அதையே    உண்ணத்துவங்கி, பின்னர் தேவைக்கேற்ப பழங்களை நொதித்தலுக்கு உள்ளாக்கி  மதுவை உருவாக்க துவங்கியிருக்கலாமென்கிறது மதுபானங்களின் வரலாற்றை சொல்லும் பல அனுமானங்களில் மிகபிரபலமான ஒன்றான  drunken monkey hypotheis.

   ஆதிமனிதர்கள்  உணவைப் பாதுகாக்கவும், வேட்டையாடவும் விவசாயம் செய்யவும்  வழியற்ற குளிர்காலங்களுக்கான உணவை சேமிக்கவும், பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தினர், அதிலொன்றுதான் தானியங்களை உடைத்து மாவாக்கி கரைத்து கொதிக்கவைத்து நொதித்தலுக்குள்ளாக்குவது .

 பண்டைய மனிதகுலத்தின் குறிப்பிடத்தக்க  திருப்புமுனைகளில் ஒன்றாக  இயற்கைபொருட்களிலிருந்த  சர்க்கரையை புளிக்கவும் நொதிக்கவும் வைத்து  ஆல்கஹால்  உருவாகும் நுட்பத்தை அறிந்துகொண்டதும் சொல்லப்படுகின்றது. கற்கால மனிதர்கள் மட்டுமல்லாது பூச்சிகள், பறவைகள், யானைகள், பழ வெளவால்கள், குரங்குகள் என  அனைத்துமே மதுவின் நுகர்வுக்கு ஆட்பட்டிருந்தவைதான் மனிதனும் பிற விலங்குகளும் மதுபானங்கள், அதிகப்படியான உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து கிடைத்த நன்மைகளுக்கு ஏற்பத்தான் பரிணாமம் அடைந்திருக்கிறோம் .  

பலவகையான பானங்கள் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பினும்  திராட்சை ரசத்திலிருந்து  வைனும் தானியங்களிலிருந்து கிடைத்த பியரும் அவற்றுள் முக்கியமானது.  தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்தபடியாக உலகின் மிக அதிகமாக அருந்தப்படும் விருப்ப பானமாக பியரே இருக்கின்றது. பியரை உருவாக்கும் கலையும் அறிவியலும் ஜைத்தாலஜி (Zythology)  எனப்படுகின்றது..  பியர் பிரியர்களுக்கு Zythophiles என்று பெயர்.

 பியரின் வரலாறும் மிகச்சுவையானது, உண்மையில், மனித நாகரிகத்தின் வரலாறென்பதே பியரின் வரலாறுதான் என்கிறார்கள்  மானுடவியலாளர்கள்.  மனிதன் வேட்டை வாழ்விலிருந்து விலகி, தானியங்களை பயிரிடும், விவசாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு வாழ்க்கைக்கு மாறியபோதே பியர் தயாரிப்பும் தொடங்கியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. . தாவரப்பயன்பாட்டியலான Economic Botany’யும், பல்லாயிரம் வருடங்ளுக்கு முன்பு, தானிய வகைகள் சாகுபடி செய்யப்பட்டபோதே பியரும் உருவாகியிருக்கக்கூடும் என்கிறது.

 சுமேரியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள் மற்றும் பிரிட்டிஷ் உட்பட பல கலாச்சாரங்களிலும் நாகரிகங்களிலும் பியர் அழுத்தமான அடையாளத்தை பதித்திருக்கிறது.

அகழ்வாய்வில் 5000 வருடங்களுக்கு முன்பான சுமேரயாவின் களிமண் கட்டிகளில் ரொட்டியின் கடவுளான நின்காசி (Ninkasi) பியரின் தயாரிப்பை பலருக்கு கற்றுக்கொடுத்ததற்கான குறிப்புகள் இருந்தன.. பாபிலோனியர்கள் சுமேரியாவை வென்று சுமேரியர்களின் பியர் தயாரிக்கும் திறன்களைப் பின்பற்றினர். பாபிலோனிய மன்னர், ஹமுராபி, பியர் தயாரிப்பின் சட்டங்களை அறிவித்து பியரை 20 வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தியிருந்தார்

சுமேரியாவின் பியர் கலாச்சாரம் பின்னர் எகிப்துக்குள்ளும் நுழைந்து, எகிப்திய கலாச்சாரத்தின்  முக்கிய பகுதியாக மாறியது எகிப்தியர்கள் பார்லி மற்றும் பண்டைய கோதுமை வகையான எம்மர் உள்ளிட்ட பல தானியங்களிலிருந்தும் பியரை காய்ச்சினர். அவர்களிடம் அடர்ந்த நிற, இனிக்கும், கலங்கிய, நட்புக்கான, அழகுபடுத்தப்பட்ட, சத்தியத்தின் பியர்களும், மறு வாழ்விலும் நீடிக்கும் இறுதிச் சடங்குகளுக்கான தனித்த வகையும், கல்லறைகளுக்கு “புளிப்பில்லாதவையும்”  இறப்பற்ற நித்திய பியருமாக பல வகைகள் இருந்தன. பிரமிடுகளை கட்டியவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளிகளுக்கு நாளொன்றிற்கு 4 லிட்டர் பி்யரே சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது

பல நாகரிகங்களின் விருப்பமான மற்றும் பாதுகாப்பான பானங்களில் ஒன்றாக பியர் வேகமாக புகழ்பெற்றது.  கூடவே காய்ச்சும் முறைகளின், சேர்மானங்களின் மாற்றங்களுக்கு தகுந்தபடி பியரின் சுவையும், இயல்பும் மாறிக்கொண்டுமிருந்தது. பாபிலோனியர்கள் அடர்ந்த கலங்கலான தானியமிச்சங்கள் அப்படியே இருக்கும் பியரை  வைக்கோலால் உறிஞ்சிக் குடித்தார்கள். பல நாடுகளில் ஆலிவ் எண்ணெய், பாலாடைக்கட்டி, புல்வகைகள்,, கேரட் போன்றவற்றையும், கஞ்சா மற்றும் பாப்பி போன்ற மயக்கமூட்டிகளையும் கூட பியரில் கலந்து அருந்தினார்கள்

.அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே புழக்கத்தில் இருந்த உலகின் மிகப்பழமையான மதுபானம் பியரே. எனினும் கசப்பு சுவையுடன் இருக்கும் பியர் கி.பி 822 வரை உருவாகி இருக்கவில்லை.

பல சோதனை முயற்சிகள் பியரின் சுவையை மேம்படுத்தவும் முளைவிட்ட தானியங்களின் இனிப்புச்சுவையை மட்டுப்படுத்தவும் உலகின் பலபகுதிகளில் நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. இந்த சேர்மானங்கள் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு  இடம் மாறுபட்டிருந்தது. பிற வாசனைப்பொருட்கள் சேர்க்க்கபட்டவை க்ரூட்’பியர் (Gruit beer) என்னும் பொதுப்பெயரில் அழைக்கப்பட்டன.(“Gruit” என்பது ஜெர்மானிய மொழியில் மூலிகை என பொருள்படும்)

செம்பருத்தி, தேயிலை. உலர்ந்த ஆரஞ்சின் தோல், பலவகையான கிழங்குகள், லவங்கப்பட்டை, லாவண்டர் அரும்புகள், Achilea milefolium  எனப்படும் Yarrow, நல்ல நெடியுடைய  செடியான ஹிஸ்ஸாப் (Blue giant hyssop), ஜூனிபர் பழங்கள், இஞ்சி, கேரவே விதை, சோம்பு, ஜாதிக்காய், புதினா, கிராம்பு, குருமிளகு, சீரகம், வனிலா, கொத்துமல்லி நெல்லிக்கனிகள், பைன் மர ஊசியிலைகள், சில கடல்பாசிகள், கொக்கோ, மிளகாய்கள், கசகசாவிதைகள், மஞ்சள்   என பலதாவரப்பொருட்கள் பியரில் கலந்து சுவை மாறுபாடு சோதிக்கப்பட்டது

 நாம் கிணற்று நீர் இனிப்புச் சுவையாக மாற நெல்லிமரக்கட்டைகளை போடுவது போல்  குறிப்பிட்ட சில மரங்களின் சிறு சிறு கிளைகளை உடைத்து கொதிக்கும் பியரில் சேர்க்கும் வழக்கம் கூட இருந்திருக்கிறது. இனிப்பை அதிகமாக்கவும் ஆப்ரிகாட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆகியவற்றை சேர்த்திருக்கிறார்கள்.

ஹாப்ஸ் மஞ்சரி

பியர் வெகுநாட்களுக்கு கெட்டுப் போகாமலிருக்கவும் சுவையை மேம்படுத்தவும் அலமாரி வாழ்வை (Shef life) அதிகரிக்கவும் பியரில் பல்வேறு தாவரங்களும் தாவர பொருட்களும் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில்,   மடாலயங்கள் இப்படி சுவை மாறுபாட்டிற்காக சேர்க்கப்படும் மூலிகைகளுக்கு வரி விதித்ததால் அந்த வரிவிதிப்பு பட்டியலில் இல்லாத பிறவற்றை சோதித்து பார்க்கும் முயற்சியாகத்தான் அப்போது மருத்துவத்தாவரமாக பயன்பட்டுக்கொண்டிருந்த ஹாப்ஸ் என்கிற ஹுமுலஸ் லுபுலஸ் (Humulus lupulus) என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தச்செடி பியர் உலகிற்குள் கொண்டு வரப்பட்டது,  பின்னர் பியரின் கசப்புச்சுவை வரலாறானது.

ஹாப்ஸின் பயன்பாடு துவங்கிய பின்னர் சுவைக்காக சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்த பிற தாவர  உபயோகங்கள் மெல்ல மெல்ல குறைந்து பின்னர் இல்லாமலே ஆனது. 1516ல் ஹாப்ஸின் உபயோகம் குறித்து சட்டமே இயற்றும் அளவிற்கு ஹாப்ஸ் பியருக்கு அளித்த சுவையும் நன்மையும் இருந்தது

பியரின் தூய்மை விதி எனப்படும் 1487ல் பரிந்துரைக்கப்பட்டு பின்னர் 23 ஏப்ரல் 1516’ல் அமலாக்கப்பட்ட ஜெர்மனியின் “ரெய்ன்ஹீட்ஸ்ஜ்போட்” (Reinheitsgebot) பியர் தூய்மைச் சட்டம் நீர், ஹாப்ஸ் மற்றும் பார்லி தவிர பிற அனைத்தையும் பியரை காய்ச்சும் பொருட்களிலிருந்து நீக்கியது. ஜெர்மனியின்  இந்த பியர் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான கட்டுப்பாட்டு விதியே உலகின் முதல் உணவுசார்ந்த தரக்கட்டுப்பாட்டு விதியாகும். பின்னர் 300 ஆண்டுகளுக்கு பின்னரே நொதித்தலில் ஈஸ்ட்டின் பங்கு லூயிஸ் பாஸ்டரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவ்விதியில் ஈஸ்ட் நான்காவதாக  சேர்க்கப்பட்டது

தானியங்களுடனும் பழக்கூழ்களுடனும் ரொட்டித்துண்டுகளை சேர்த்து    நொதித்தலுக்கு உ்ள்ளாக்கி மதுபானங்களை உண்டாக்குவது நம் வரலாற்றில் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே இருந்தும், லூயிஸ் பாஸ்டருக்கு முன்பு ரொட்டித்துண்டுகளில்  ஈஸ்ட் இருப்பது தெரியாமலேயே உபயோகப்படுத்திக் கொண்டிருந்தது  ஒரு மர்மம்தான்.

 இன்றளவும் பியர் தயாரிப்பில் ஈஸ்ட்டின் இரண்டு வகைகளான, நொதித்தல் முடிந்தபின்னர் பியர் திரவத்தின் மேலே மிதக்கும் சக்காரோமைஸீஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae)  மற்றும் அடியில் வண்டலாக படிந்துவிடும் சக்காரோமைஸீஸ் கார்ல்பெர்ஜென்ஸிஸ் (Saccharomyces carlsbergensis).) ஆகியவையே உபயோகப்படுத்தப் படுகின்றன. முந்தையது top beer எனப்படும் Ale , பிந்தையது bottom beer எனபடும் Lager.

பியரில் சேர்க்கப்படுவதற்கு முன்பே ஹாப்ஸ் செடிகள் வேறு பயன்பாட்டிற்காக வளர்க்கப்பட்டிருக்கலாம்..  கிபி 7ஆம் நூற்றாண்டில்  பலவகையான தானியங்களை நீரில் கலந்து கொதிக்கவும் நொதிக்கவும் வைத்து, கசக்கும் மலர்களும் கலந்து செய்யப்படும் பலபெயர்களில் அழைக்கப்பட்டாலும் ஒரே சுவையுடன் இருந்த போதையூட்டும் பானெமென்று பியரை குறிப்பிட்டிருக்கிறார். இயற்கைஆர்வலரும் தீராப்பயணியுமான ப்ளைனி தனது இயற்கையின் வரலாறு ( Naturalis Historia) நூலில்.

ஹாப்ஸ் தோட்டங்கள்

 கி.பி 822 ல் வடக்கு பிரான்ஸின்  பிகார்டியில் பெனடிக்டைன் மடத்தின் மடாதிபதி அடால்ஹார்ட் எழுதிய மடத்திற்கான நெறிகளைக் குறித்தான நூலில் பியர் தயரிக்கும் பொருட்டு காடுகளிலிருந்து ஹாப்ஸ் மலர்க்கொத்துக்களை சேகரிப்பதும் குறிப்பிடப்பட்டிருந்ததே ஹாப்ஸின் பயன்பாடு குறித்த முதல் முக்கிய வரலாற்று ஆவணம். 1150,களில் ஜெர்மானிய மடாதிபதிகள் கசப்புச்சுவைக்கும், அதிக நாட்கள் பியர் கெட்டுப்போகாமல் இருக்கவுமாக   ஹாப்ஸின் பயன்பாட்டை அதிகமாக்கினர்.

பியர் தயரிப்பில்  சேர்க்கப்பட்ட இந்த மலர்க்கொத்து அத்தனை ஆயிரமாண்டு கால  பியர் சுவையை  மாற்றியமைத்தது. ’க்ரூட்’ தாவரங்களின் விற்பனையில்  வருமானம் பெற்றுக்கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபைகள் ஹாப்ஸின் பயன்பாட்டை, கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஹாப்ஸ் பியரின் வரலாற்றில்  ஆழமாக வேர்களை வளர்க்கத் தொடங்கியது.

கசப்பு, பிரத்யேக சுவை மற்றும் நறுமணத்திற்காக உலகெங்கிலும் பியரில் சேர்க்கபட்ட ஹாப்ஸ் , வணிக ரீதியாக பெருமளவில் பயிராக்கவும் பட்டது. மாசசூசெட்ஸ் நிறுவனம் 1629 ஆம் ஆண்டில் ஹாப்ஸை வட அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தியது, ஆனால் இது ஒரு முக்கியமான வணிகப் பயிர் ஆவதற்கு 1800 வரை ஆனது.  இன்று பெரும்பாலான ஹாப்ஸ் ஒரிகான், வாஷிங்டன், இடாஹோ மற்றும் கலிபோர்னியாவில் வளர்க்கப்படுகின்றன.  

மஞ்சள் நிறப்பிசினுடன் பெண்மஞ்சரிகள்

பார்லி அல்லது பிற தானியங்களை ஊறவைத்து பின்னர் அவற்றை முளைக்கச்செய்து, வறுத்து,உடைத்து, பொடித்து, நீர் கலந்து கொதிக்க வைத்த பின்  கிடைக்கும் இனிப்புச்சுவையுடன் இருக்கும் கலவையான வொர்ட் (wort) ல் குறிப்பிட்ட சமயத்தில் இந்த ஹாப்ஸ் செடியின் பெண்மலர்கொத்துக்களை (சிறு சிறு மலர்கள் நெருக்கமாக இணைந்திருக்கும் கனகாம்பர மலர்க் கொத்தைபோன்ற மலர்மஞ்சரிகளை) உருவிப்போடுவார்கள். பின்னர் நொதித்தலுக்காக ஈஸ்ட்  சேர்க்கப்பட்டு பியர் தயாரிக்கப்படும்

கசக்கும் பியருக்கான் விருப்பம் உலகெங்கிலும்  பரவி. ஹாப்ஸின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியபோதே இதன் கலப்பினங்களும்  உருவாக்கப்பட்டன. ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஆண்டு முழுவதும் பூத்துகாய்க்கும் வகையான, கஞ்சாச்செடியின் கன்னாபேசியே cannabaceae  குடும்பத்தைச் சேர்ந்தது இந்தத்தாவரம்.  இதன் பெண்மஞ்சரிகளை மட்டுமே பியர் தயாரிப்பில் பயன்படுத்துவதாலும் இம்மஞ்சரிகள் சரங்களாக தொங்கிக் கொண்டிருப்பதாலும் தமிழில் இவற்றை சரலதை என அழைப்பது பொருத்தமாக இருக்கும்.   

சரலதை (பெயரிட்ட சுபாவுக்கு நன்றி)

ஆண்டு முழுவதும் பூத்துக்காய்க்கும் பல்லாண்டுத்தாவரமான இது சுமார் 50 வருடங்கள் தொடர்ந்து பலன் தரும். ஆண் பெண் கொடிகள் தனித்தனியே காணப்படும். ஆண் பூக்கள் தளர்வான மஞ்சரிகளகவும் ,பெண் மஞ்சரி சரமாக, நெருக்கமாக, இலைச்செதில்களால் சூழப்பட்ட சிறிய மலர்களுடனும் காணப்படும். பொதுவாக உலகெங்கிலும் பயிரிடப்படுவது Humulus lupulus  ஜப்பானில் பயிரிடப்படுவது, Humulus japonicas, சீனாவில் பயிரப்படுவது Humulus yunnanensis  என்னும் வகைகளாகும்.;

இந்தியாவில் இமாச்சலபிரதேசத்தின் லஹால் (Lahaul ) பழங்குடியினரின் கிராமத்தில்தான் 1973ல் ஹாப்ஸ் சாகுபடி  துவங்கியது. அதற்கு முன்பு வரை இம்மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

ஹாப்ஸ் கொடிகள் வைன்ஸ் (Vines) என்றழைக்கப்படுவதற்கு மாறாக பைன்ஸ்’ (Bines) என்று அழைக்கப்படுகின்றன, ஏனென்றால்  அருகிலிருக்கும் ஆதரவை தனது வளைந்த கொடிபோன்ற தண்டுகளால் சுற்றி வளைத்துக்கொண்டு ஏறும் வைன்களை போலல்லாது இவை தண்டுகளிலிருக்கும் கடினமான முட்களைப் பயன்படுத்தி  ஆதரவை பற்றிக்கொண்டு, கடிகார வளைவில் சுற்றிக் கொண்டு ஏறுகின்றன.   

ஹாப்ஸ் கொடிகள்

இதயவடிவில்  பற்களுடன் கூடிய விளிம்புகளை கொண்டிருக்கும், எதிரடுக்கில் அமைந்திருக்கும் இலைகளுடன் இருக்கும் இக்கொடிகளின் பெண் மஞ்சரிகள்   மகரந்த சேர்க்கை நடைபெறும் முன்னர் அறுவடை செய்யப்பட்டுவிடும். விதைகளுக்காக மட்டும் 200 பெண் கொடிகளுக்கு ஒன்று  என்னும் விகிதத்தில் விட்டுவிட்டு மற்ற ஆண் கொடிகள் அகற்றப்பட்டுவிடும். .

ஆழமான ஆணிவேர்களையும் நீரை சேகரிக்கும் மேற்பரப்பு வேர்களையும் அடிக்கிழங்கையும் கொண்டிருக்கும் இவை, கிழங்குகள், நறுக்க்கபட்ட தண்டுகள் மற்றும் விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை விரைந்து வளரும் இயல்புடையவை, 30 அடிவரை வளரும் இவை 18 அடியில் நறுக்கபட்டு அடர்த்தியாக வளர்க்கப்படும். ஒரு ஏக்கரில் சுமார் 1000 கொடிகளை வளர்த்தலாம்..  

ஹாப்ஸ் மலர்கள் கசப்புச்சுவையை மட்டும் அளிக்கும் ஆல்ஃபா மலர்கள் மற்றும்  நறுமணம் அளிக்கும் அரோமா மலர்கள் என இருவகைப்படும். இரண்டு பண்புகளையும் கொண்ட மலர்களுக்கான கலப்பின முயற்சிகள் தாவரவியலாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பியரின் கசப்புச்சுவைக்கும் பிற இயல்புகளுக்கும் காரணமாயிருப்பது இம்மலர்களில் உள்ள ஆல்ஃபா அமிலங்களான ஹுமுலோன், பீட்டா அமிலங்கலான லுபுலோன் உள்ளிட்ட ஏராளமான வேதிச்சேர்மானங்கள் ( humulones , lupulones , leucine, valine, isoleucine, cohumulone colupulone, adhumulone, adlupulone),  இவை மலர்களின் எடையில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முளைவிட்ட பார்லியின் மிதமான இனிப்புச்சுவையை  ஈடுகட்ட ஹாப்ஸ் பெண்மலர்களிலிருக்கும் மஞ்சள் நிறப்பிசினின் கசப்புச்சுவை மிகபொருத்தமானது. ஹாப் மஞ்சரிகள் பழுத்து, பிசினின் அளவு மிக அதிகமாகவும் இருக்கும்போது அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் இவை  பிசின் உதிர்ந்துவிடமால் கவனமாக உலர்த்தப்படுகின்றன.

பொதுவாக ஹாப்ஸ் மலர்கள் புத்தம் புதியதாக கொதிக்கும் பியர் கலவையில் சேர்க்கப்படுகின்றன. மாறாக உலர்ந்த மலர்க்கொத்துக்களும், பிசினை உலர்த்தி பொடித்த பொன்மஞ்சள் பொடியும், மலர்கொத்துக்களை உலர்த்தி அரைத்து பிசைந்து செய்யபட்ட கட்டிகளும் கூட உபயோகப்படுத்தபடுகின்றன 

ஹாப்ஸ் உலர் கட்டிகள்

ஹாப்ஸ் மலர்கள் கொதிக்க வைக்கப்படும் நேர அளவு, அவற்றின் கசப்பின் அளவீடு (IBUs), மலர்களின் தரம் ஆகியவையே இறுதியில் பியரின் சுவை மணம் தரம் ஆகியவற்றை முடிவுசெய்கின்றது

ஹாப் பிசின்களின் பியர் நுரையை மேம்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன மற்றும்  வொர்ட் கலவையை தெளியவைத்து அதிலிருக்கும் நுண்ணியிரிகளை நீக்குகின்றன. கோப்பைகளில் பியர் ஊற்றப்படும் போது கோப்பையின் விளிம்பில்  பொங்கி நுரைத்து நிலைத்து நிற்கும் ’head’  என்னும் இயல்பையும் அதிகப்படுத்தும். பிரத்யேக வாசனையையும், விரும்பத்தக்க கசப்புச்சுவையையும் அளிக்கும் நெடுங்காலம் பியரை சேமித்துவைக்கவும், பியர்  கெட்டுப்போகாமலும்,  புளித்து விடாமலும் பாதுகாக்கும். இதிலேயே அதிக கசப்புடைய storng hoppy beers, மிதமான கசப்புடைய  weaker hoppy beer ஆகிய வேறுபடும் உள்ளது

உலகெங்கிலுமே சாகுபடி செய்யப்படும் இந்த ஹாப்ஸ் அவை வளரும் சூழலை, நிலப்பரப்பை பொருத்து வளரியல்புகளிலும் வேதிச்சேர்மாங்களிலும் நுண்ணிய மாற்றங்களை கொண்டிருக்கும்.

ஜெர்மனியின் Hallertau  பகுதியில்தான் உலகின் அதிகமான ஹாப்ஸ் கொடிகள் பல்லாண்டுகளாக பயிரிடப்பட்டு வந்தன.  இப்போது அதிகமாக,  அதாவது உலகின் மொத்த ஹாப்ஸ் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு  ஹாப்ஸ் சாகுபடி செய்யும் நாடு  அமெரிக்காதான்

பியரின் கசப்புச்சுவை சர்வதேச கசப்பு அலகில் IBU (international bittering units) அளவிடப்படும் வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச்சுவையை அளவிட்டு விளம்பரப்படுத்துகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு  0-1,000 ஆகும், ஆனால் மனித சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும். 20க்கும் குறைவான IBU உள்ளவைகள் மிக மிக குறைவான ஹாப்ஸ் சேர்ககப்பட்டவையென்றும், 20 லிருந்து 45 வரை IBU உள்ளவை சாதாரண கசப்பு சுவையுள்ளவையென்றும், 45க்கும் மேல் இருப்பவையே மிகத்தரமான  அதிகளவு ஹாப்ஸ் சேர்க்கப்பட்டவையென்றும் பியர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அரிதாக 70 கும் மேல் IBU அளவு இருக்கும் வகைகளும் தயாரிக்கப்படுகின்ற்ன

ஹாப்ஸ் பியருக்கென்றே உருவான தாவரமென்றே சொல்லலாம். பியரின் ஆன்மா என்றழைக்கப்படும் ஹாப்ஸ் மலர்களைக்குறித்த ஆய்வுகள் தொடர்ந்து பலவருடங்களாக நடந்தபடியே இருக்கின்றன. இம்மலர்களின் வேறு பல பயன்பாடுகளும் பரிசீலனையில் உள்ளன ஹாப்ஸ் ஆராய்ச்சியென்பது ஹாப்ஸின் இனப்பெருக்கம, வளர்ச்சி, அறுவடை மற்றும் உலர்த்தல், அவற்றின் வேதியியல் மற்றும் பியர் தரத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம்  என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில்  விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களால் விரிவான சர்வதேச ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.   

பியரின் சுவை மேம்பாட்டிற்கான  சோதனை முயற்சிகள் இன்னும் தீரவில்லை. இப்போதும் ஃபின்லாந்தின் ஒரு வகை பியரை ஜுனிபர் மரக்கிளைகளின் வழியே ஊற்றி வடியச்செய்து பின்னர் அருந்துகிறார்கள். நோக்னே (Nøgne) என்னும் நார்வீஜியாவின் புதிய வகை பியரில் ஒன்றுக்கு மூன்று வகையான ஈஸ்ட் உபயோகப்படுத்தப்பட்டு ஹாப்ஸும் தேனும் சேர்க்கப்படுகின்றது

கடந்த 100 ஆண்டுகளில் உலகளாவிய பீர் உற்பத்தி ஏழு மடங்கு அதிகரித்திருக்கின்றது. தானியங்களின் இனிப்பை மட்டுமல்லாது, வாழ்வின் கசப்பையும் பியரின் கசப்பு சமன்செய்கிறதோ என்னவோ, கடந்த நான்கு தசாப்தங்களில் (1970–2010) உலகளாவிய பியர் உற்பத்தி 630 மில்லியனிலிருந்து 1846 மில்லியன் ஹெக்டாலிட்டர்களுக்கு அதிகரித்திருக்கிறது.  உலகின் அதிகம் விரும்பி அருந்தப்படும் மதுபானங்களில் முதன்மையானதாக பியர் இருப்பதற்கு காரணமாயிருக்கும் ’ஹாப்ஸ்’ தாவர உலகம் நமக்களித்திருக்கும் எண்ணற்ற பயன்களில் மற்றுமொன்று.

பேஹம் ஜான்

ஊரடங்கு காலத்தில் அமேசான் பிரைமில் பேகம் ஜான் பார்த்து முடித்தேன். காலையில் துவங்கி இடையிடையேஆன்லைன் வகுப்புக்களும் மதியம் கல்லூரியில் நடந்த ஒரு ஜூம் கூடுகையுமாய் இடைவெளிவிட்டு பார்த்ததில் என்னவோ நிறைவில்லாமல், கதையோட்டத்துடன் உணர்வுபூர்வமாக என்னை பிணைத்துகொள்ளமுடியாமல் இருந்ததால் மீண்டும் மாலை எல்லா முக்கிய வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழுதாக இடையூறுகளும் இடைவெளிகளும் இன்றி பார்த்தேன். என் மனதின் ரணங்கள் காய்ந்து  கெட்டிப்பட்டுவிட்டதென்று நினைத்திருந்தேன் ஆனால்  இன்னும் ஈரமிருக்கின்றது போல. கசிந்து அழுதே விட்டேன் இரண்டு முறை என்னையறியாமல்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இப்படி பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பார்வையில் திரைப்படமாக எடுக்க முடியுமென்பதே எனக்கு பெரும் வியப்பளித்தது. வித்யாபாலன் நல்ல தேர்வு அவரில்லாவிட்டால் தபு செய்திருப்பார். வித்யாவும் தபுவும் ஒன்றேபோலானவர்கள் என்பதுதான் என் அபிப்பிராயம் எனினும் தபுவுக்கு உடல்மொழியிலும் தோற்றத்திலும் கூடுதல் முதிர்ச்சி. வித்யாவில் எங்கோ ஒரு நெகிழும் தன்மை அல்லது ஒரு மென்மை இருப்பதை நம்மால் உணர முடியும் குறிப்பாக அவரது  அகலக்கண்கள். ஆண் பிள்ளைச்சட்டைபோல உடைகள், கால்களை அகலமாக வைத்து உட்காருவது, ஹூக்கா பிடிப்பது, முதுகுபிடித்து விடச்சொல்லி கட்டிலில் படுத்துக்கொண்டே பேசுவது, அறைவது, என்று எத்தனை ஆண்பிள்ளைத்தனங்களை வித்யா செய்துகொண்டிருந்தாலும் அவரது அகலக்கண்களில் பெண்மை மிளிர்கிறது. அதன் பொருட்டே அவரை இதில் தெரிவு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

வலிமிகுந்த கதை

எனக்கு எப்போதுமே பாலியல் தொழில்செய்யும் பெண்களின் மீது கரிசனமும் பிரியமும் வாஞ்சையும் உண்டு. பாலுறவை ஒரு தொழிலாக செய்து உடலை, உயிரை, வயிற்றை, குடும்பத்தை  வளர்ப்பெதென்பது எத்தனை அவலம்?    எத்தனை வலி மிகுந்த வாழ்வு அவர்களுடையது இல்லையா?

நாஞ்சில் சார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேட்டார்,//உடலுறவு என்னும் சொல்லே அகராதியில் இல்லை மனம் பெரும் பங்காற்ற வேண்டிய ஒரு செயலை எப்படி வெறும் உடல்களின் உறவென்று சொல்ல முடியுமென்று///

இருளிலும் கண்களை மூடி சகித்துக்கொள்ளும் நிகழ்வாக இது நம்மைச்சுற்றியும் எத்தனையோ ஆயிரம் பெண்களுக்கு இருக்கிறதல்லவா?

இதிலும் உடலை ஒருவனுக்கு ஆளக்கொடுத்துவிட்டு விட்டத்தை வெறித்துக்கொண்டோ, விருப்பமானவனை நினைத்துக்கொண்டோ, ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டோ பெண்கள் படுத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.

வீட்டு உதவியாளனும் பாலியல்தொழிலுக்கு ஆள் பிடித்துவருபவனாகவும் வரும் அந்த ஆணின் காதல் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது அவனும் அவளும் ஒரு மொட்டைப்பாறையில் மனதை திறந்து பகிர்ந்துகொள்ளும் காட்சி சிறப்பாக இருந்தது. உண்மையில் முதல் பாதியின் தீவிரம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இந்த திரைப்படம் இன்னும் நல்ல சிறப்பான  இடத்திற்கு வந்திருக்கும். அந்தப்பெண் ///மார்பும் யோனியும் எல்லாம் வெறும் சதைத்திரள், என் ஆத்மாவில் இருக்கிறது உன்மேலான காதலென்று// சொல்லும் காட்சி அத்தனை நெகிழ்சி.

அந்த மாஸ்டரை ஏன் திடீரென வில்லனாக்கினார்களென்று தெரியவில்லை  அவர் குலாபோவை ஏமாற்றும் காட்சி எனக்கு மிகவும் வலித்தது. அவளை அந்த ஜட்காவோ ரிக்‌ஷாவோ, அதில் ஏற்றிவிட்டு ’விபச்சாரிகளுக்கு கணவர்களல்ல, வாடிக்கையாளர்கள் தான் கிடைப்பார்கள்’ என்று சொல்லும் காட்சியில் நான் அழுதேன் . அந்த காட்சியின் தீவிரத்தினால் மட்டுமல்ல, எத்தனை புத்திசாலிகளாகவும் அழகிகளாகவும் முதிர்ச்சியுடனும் இருந்தாலும் அன்பின் பேரால் பெண்கள் யுகம் யுகமாக  எத்தனை எளிதாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்களென்னும் உண்மை எனக்கு வலித்ததினாலும் அழுதேன்.

அந்த பெண்ணை அங்கேயே அனுபவிக்கத்துவங்கிய அந்த ஆணுடன் அந்த வண்டி நகருகையில் குலாபோவின் அழுகை கேட்டுக்கொண்டே இருக்கும்

சமீபத்தில் நான் இப்படி மனம் கலங்கியதில்லை .

அதுபோலவே ஒரு 10 வயதுபெண்ணின் தகப்பனான காவலதிகாரியின் முன்னால் அந்த சிறுமி தன் உடைகளை களைந்துவிட்டு நிற்கும் காட்சியும்

எங்கேயோ பார்த்து போலிருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டே இருந்து பின்னர் கண்டுபிடித்தேன் இலா அருணை. அந்த லுங்கியும் பனியனுமாக வரும் வில்லன் சஞ்சய் பாண்டே,  சஞ்சய்தத்தை போலவே தெரிந்தார் எனக்கு.

என் அபிமானத்துக்கு உரிய நஸ்ருதீன் ஷாவும் இருக்கிறார்.  படுக்கையில் சாய்ந்தவாறு நஸ்ருதீனும, அவரெதிரே வித்யாவும் இருக்கும் அந்த ஒரு காட்சியில் மங்கலான ஒளியில் மின்னும் ஆபரணங்களும் உடைகளும் உலோகப்பொருட்களுமாக அக்காட்சியின் பழமையை காட்டும்   ஒளியமைப்பு அத்தனை பிரமாதமாக இருந்தது.  வித்யாவுக்கு மட்டுமான கூடுதல் பிரகாசத்தில்   முகம் ஒளிர அவர் நயந்தும் சினந்தும் கெஞ்சியும் கொஞ்சியும் பேசுவது சிறப்பு

இரண்டாம் பாதியை மிக செயற்கையான நாடகத்தன்மையுடன்  எடுக்காமல் முன்பாதியைப்போலவே எடுத்திருக்கலாம் என்று ஆதங்கமாக இருந்தது. நல்லவேளையாக இது முழுவதும் உண்மைக்கதையல்லவென்பதும் ஆறுதலாக இருந்தது.

அவசியம் பார்க்கவேண்டிய படம்

இலங்கை நினைவுகள்

ஜெ தளத்தில் இன்று ”மீண்டும் சந்திக்கும் வரை” கட்டுரையை மீள வாசித்தேன். எனக்கு இலங்கை நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது. குறிப்பாய் கொஞ்சும் இலங்கை தமிழ்

அங்கு பேசப்படும் தமிழும், கடைத்தெருவிலும் ரயில் நிலையங்களிலும் ’’புகையிரத நிலையம்‘’ போன்ற  தூய தமிழிலான பெயர்ப்பலகைகளும், மக்களின் பெயர்களும் அத்தனை அழகாக இருக்கும்.  தென்னைமரங்களும், சிரட்டைகளில் அரைலிட்டர் பால் ஊற்றி வைக்கலாம் போல் அளவில் மிகப்பெரிதான தேங்காய்களும்,  நினைத்துக்கொண்டாற்போல மழையும் இளவெயிலுமாக மாறி மாறி வருவதும், எல்லா வீட்டிலும் இருக்கும் பச்சைப்பசேல் தோட்டங்களுமாக கொழும்பு எனக்கு பெரிது பண்ணப்பட்ட கேரளம் போலவே இருக்கும்.

நண்பர்களின் வீடுகளுக்கு போகையில் நின்னுட்டு போறதுதானே? என்பார்கள். ’’வெளிக்கிட்டு ‘’ பல வருடங்களுக்கு  முன்னர் கேட்டது மீண்டும் பின்னர் இப்போதுதான் இக்கட்டுரையில் வாசிக்கிறேன். அவர்கள் சொல்லும் ”வந்தனன்’’ அதனை நன்றாக இருக்கும் கேட்க. அப்படி ஒரு அழகுத்தமிழை வேறெங்கும் கேட்கவே முடியாது.

நடுவில் தாமரைக் குளமுடனிருந்த உதய தென்னக்கோனின் நாலுகட்டுவீடு, மசாலா மணக்கும் மரவள்ளிக்கிழங்கு கறி, சம்பலுடன் இடியாப்பம், அசங்க ராஜபக்ச’வின் வீட்டில் இருந்த பெரும் ரம்புத்தான் மரம் அதில் பறித்து நாளெல்லாம் சாப்பிட பழங்கள், அசங்க’வுடன் சென்ற மிகப்பழமையான புத்தரின் குகைக்கோவில்கள். அசைவ உணவகம் ஒன்றில் சைவம் மட்டும் சாப்பிடும் நான் தயி்ர் சோற்றை வெங்காயம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதை  ஒரு அம்மாள் எழுந்தே வந்து என்னருகில் நின்று  வேடிக்கை பார்த்தது, மினுங்கும் கருமையில் வாளிப்பான பெண்கள், குதிகால் வரை நீண்டிருக்கும் அவர்களின் அடர்ந்த கூந்தல், இந்தியாவின்  நைட்டியைப் போலவே பூப்பூவாக போட்டிருக்கும் பல நிற லுங்கியுடனேயே ஆண்கள் அலுவலகம் செல்வது, அங்கு கொடுக்கப்பட்டிருந்த வீட்டருகே இருந்த பெரும் ஏரி , அதன் அருகிருந்த மரக்கூட்டங்களில் எப்போதும் கேட்கும் பறவைகளின் கூச்சல்,   சந்தன நிற மலர்கள் செறிந்திருந்த ப்ளுமீரியா மரங்களின் அடியில் அமர்ந்து வாசித்த ஏராளமான புத்தகங்கள், இன்னும் மனதில்  சுவைத்துக்கொண்டிருக்கும் வட்டாலப்பமுமாக கட்டுரை இலங்கைக்கே என்னை மீண்டும் கொண்டுபோனது.

பல் வைக்கப்பட்டிருக்கும் கருவறை

கொழும்பு வீட்டின் வாசலில் மாலைநேரங்களில் சிறு மணியொலி எழுப்பியபடி ஒரு பேக்கரிபொருட்களை விற்கும் வண்டி வரும். சூடான கேக்குகளும் பன்களும் ரொட்டிகளும் வாசனையாக புத்தம் புதியதாக கிடைக்கும். ஆர்வமாக வாங்கி மூவருமாக சாப்பிடுவோம். காரை வழியெல்லாம் நிறுத்தி நிறுத்தி மக்கள் இனிப்புக்களை வழங்கிக்கொண்டேயிருந்த ஒரு புத்த பூர்ணிமா நாளும், வெண்தாமரைகளுடன் சென்றிருந்த கண்டியின்புத்தரின் பல் இருந்த ஒரு கோவிலும் அதன் அமைதியும் அவ்வப்போது நினைவுக்கு வரும்.

கண்டி புத்தரின் பல் கோவில்

இலங்கை மக்களின் பெயர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும. சரண் அப்பா  கொழும்பில் வேலைக்கு சேர்ந்த புதிதில் அடிக்கடி தொலைபேசியில் ”நானும் மஞ்சுளாவும் போனோம், வந்தோம், மஞ்சுளாவோடுதான் மதியம் சாப்பிட்டேன்” இப்படி. விகல்பமாய் நினைக்காமல் அங்கெல்லாம் அப்படித்தான் போல என்றெண்ணிக்கொள்வேன். குர்கானில் இவர் பணி புரிந்த நாட்களில் ஷேர் ஆட்டோவில் பெண்கள் இவர் மடியிலேயே உட்கார்ந்து வந்தெதெல்லாம் பார்த்திருக்கிறேனே! அப்படி நான் போகாத ஊர்களின் பழக்கங்களில் ஒன்றாக இருக்குமென நினைத்துக்கொள்வேன்

நீல அல்லி

எனினும் ஒருமுறை தானும் மஞ்சுளாவும் நீச்சல் குளத்தில் இருக்கறோம் என்ற போது கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போதும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த தேவியை  படித்த  தேவி கடிந்துகொண்டாள், ”ஏன் இப்படி பத்தாம் பசலித்தனமாக இருக்கிறாய்” என்று

பின்னர் முதல்முறையாக இ்லங்கை சென்று பண்டர நாயக சர்வதேச விமான நிலையத்தில்  மகன்களுடன் காத்திருக்கையில் எங்களை வரவேற்க அப்போதைய தேசிய மலரான நீலஅல்லி மலர்கொத்துக்களோடு காத்திருந்தார்  அவரின் நண்பர் “மஞ்சுள ரண துங்க ”. இப்போது இலங்கையின் தேசிய மலர் அல்லிதான், நீல அல்லி அல்ல.அவரின் மலையொன்றின் மீது அமைந்திருந்த அழகிய வீடும், வீட்டுவாசலில் செறிந்த கனிகளுடன் நின்ற எலுமிச்சைமரமும், காம்பஸ் வைத்து வரைந்தது போல வட்ட முகத்துடன் ஒரு சிறுமியைபோலிருந்த அவர் மனைவியையும் இப்போதுதான் சந்தித்ததுபோல நினவிலிருக்கின்றது.

அங்கிருந்த 6 வருடங்களில் யாழ்ப்பாணம், ஜாஃப்னா, நுவரேலியா எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன் எனினும் கண்டியை மறக்கவே முடியாது. ”தி்லங்க” என்னும் ஒரு மரவிடுதியில் அதிகாலை ஜன்னலை திறந்ததும் கண்ணில் பட்ட மலைமுகடுகளும் ஏரியும், விடுதியிலிருந்த மாபெரும் நாகலிங்க மரமும் , இரண்டு உள்ளங்கைகள் அளவிற்கு பூத்திருந்த மலர்களும், மனதை நிறைத்த அவற்றின் சுகந்தமுமாக, அங்கேயே அக்கணத்தின் நிறைவில் செத்துப்போய்விடலாம் என்றேயிருந்தது. தேவதைக்கதைகளில் வருவது போன்ற ஒரு நகரமது. இப்போதும் நாகலிங்கமலர்களின் நறுமணம்  என்னை கண்டிக்கு அழைத்துச்செல்லும்.

1500 ஏக்கரில் பரந்து விரிந்த பசும்புல்வெளிகளுடன் இருந்த நுவரேலியாவின் அம்பேவல மாபெரும் மாட்டுப்பண்ணையும், சீஸ்தொழிற்சாலையும் அங்கு அருந்திய மிகச்சுவையான குளிர்ந்த பாலும் அடிக்கடி நினைவில் வந்து ஏக்கமுண்டாக்கும்.

நான் செல்லவிரும்பும் நாடுகளின் பட்டியல் நீளமாக காத்திருக்கின்றது. ஆனால் இனி சென்றால் மீள வராமல் அங்கே இருந்துவிட நினைக்கும் நாடென்றால் அது இலங்கைதான்.

அம்பேவல பண்ணை

பேய்ச்சி

 “பொது விதிமுறை, ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்கள் அமைந்துள்ள’’தாகக்கூறி மலேசியா அரசின், 1984 ஆம் ஆண்டு அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் செக்‌ஷன் 7(1) கீழ், நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலுக்கு மலேசிய உள்துறை அமைச்சு தடை விதித்திருக்கிறது.நாவலில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லப்படுகிறது. பாலியல் சொற்களும், பாலியல் காட்சிகளும் நாவலில் உள்ளன. இவை வரும் தலைமுறையை சீர்குலைக்கும் என காரணங்கள் சொல்லப்படுகின்றது. இந்த நூலோடு சேர்த்து, ‘Gay is OK! A Christian Perspective’ என்னும் நாவலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது .

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைச்சொல்லும் பேய்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது. புதிய இலக்கிய சூழலை ஆரோக்கியமாக உருவாக்க முயல்வதற்காகக் கிடைத்த பரிசாகவே இந்தத் தடையைக் கருதுகிறேன்” என்கிறார் நவீன்.

சென்ற வருடம் ஏறக்குறைய இதே சமயத்திலான பேய்ச்சி குறித்தான அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் 45 நிமிடத்திற்கும் மேலான உரையை காணொளியில்  முழுவதுமாக கேட்டேன். அருமையாக இருந்தது. நாவலின் உள்ளடக்கம் முழுவதையும், நாற்றுப்பரப்பின் மீது அலைஅலையென தடவிச்செல்லும் காற்றைபோல மெல்ல  வருடிச்செல்கிறார். ஆனால்  முழுக்கக்கேட்டதும் இனி வாசிக்கவேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றாமல் அதை அவர் சுவைபடகூறும் விதத்தினாலேயே பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டுமென்று தோன்றிவிட்டது.

அருணா முழு உரையையும் நினைவிலிருந்தே பேசுவது ஜெ வின் இப்படியான உரைகளை நினைவூட்டியது. அவரும் ஒரு முறைகூட குறிப்பெழுதிய துண்டுக் காகிதங்களை  வைத்துக்கொண்டதும் பார்த்ததுமில்லை. இறுதி 5 நிமிடத்தில் ஒரே ஒருமுறை கண்ணாடியை போட்டுக்கொண்டு  குறிப்பை  பார்க்க எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை புறக்கணித்து மீண்டும் உளளத்திலிருந்தே சொல்லத்துவங்குகிறார்

பேய்ச்சியை அவர் விவரித்தவிதம் அழகோ அழகு. சின்னப்பிள்ளைகள் பள்ளியில் கதையையோ பாடலையோ சொல்லுவதுபோல அத்தனை அபிநயித்து லயித்து சொல்லிக்கொண்டிருந்தார்.

அரைமணிநேரத்திற்கு பின்னர் கொஞ்சம் களைப்படைந்து மூச்சுவாங்கினாலும் கதை உருவாக்கிய மகிழ்ச்சியும் உணர்வெழுச்சியும் செலுத்த தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறார்.

கதையை முழுதாக உள்வாங்கிக்கொண்டு  விரிவாக அவற்றைக்குறித்து பேசப்பட்ட பல உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் அருணா பேய்ச்சி கதைக்களத்துக்குள் நின்று, கதையுடன் இரண்டறக்கலந்து கதையை  சொல்லிக்கொண்டிருந்தார். அந்த போடியத்தையே பேய்ச்சி கதையின் களமாக்கி, அதற்குள்ளேயே அவரின் அழகிய கையசைவுகளால் காட்சிகளை விவரிக்கிறார். தூரம் என்பதற்கு தொலைவில் கையைக்காட்டி, கிணறு என்று சொல்லுகையில் விரல்களால் ஒரு சிறு வட்டம் வரைந்து அக்கிணற்றைக் காட்டி, அங்கிருந்து இங்கிருந்து கொண்டுவந்ததையெல்லாம் அப்படி அப்படியே கைகளைக்கொண்டு காட்டிக்காட்டி விவரிப்பது அழகு.

அங்கே ஓடை அங்கே மரங்கள் இங்கே கோவில் என்று அருணாவின் கைகள் சுட்டிக்காட்டிய இடங்களிலெல்லாம் என் மனம் ஓடிஓடிச்சென்றுகொண்டே இருந்தது. அவர் கதைக்குள்ளே சென்று சொல்வதல்லாமல் கேட்கும் என்னையும் கையைப்பிடித்து உள்ளே கூட்டிச்சென்று கதையை, அக்கதை மாந்தர்களை, நிகழ்வுகளை   சொல்லுகிறார்.

அபாரமான நினைவாற்றல் அருணாவுக்கு. ஏராளமான கதாபாத்திரங்களின் பெயர்களை, அவர்கள் எங்கிருந்து வந்தார்களென்பதை  அவர்களின் இயல்புகளை  வரிசையாக சொல்லிக்கொண்டே போகிறார், கதையை மூன்று முக்கிய சரடுகளாக பிரித்துச் சொல்லி பின் உப சரடுடகளுடன் அவை பின்னப்பட்டதை சொன்னது மிகவும் சிறப்பு, இனி  பேய்ச்சியை வாசிக்கையில் இவ்விளக்கம் பெரும் உதவியாக இருக்கும். எல்லா நாவல்களையும் சில முறை வாசிக்கும் வழமை உள்ளவள் நான். பேய்ச்சியை அப்படியல்லாது ஒருமுறை வாசித்தாலே போதுமென்னும் அளவுக்கு அருணா விவரிப்பில் கதைகுறித்தான தெளிவான ஒரு முன்கட்டமைப்பு மனதினுள் உருவாகிவிட்டிருக்கிறது.

அவ்வபோது அடுத்து என்ன சொல்வதென்று கொஞ்சமே கொஞ்சம் தயங்கி பின்னர் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புடவைகளில் ஒவ்வொன்றாய் தொட்டுத்தொட்டுப்பார்த்து  வேண்டியதை தெரிவு செய்து உருவி எடுப்பதைப்போல ஒவ்வொரு சம்பவமாய் நினைவின் அடுக்குகளிலிருந்து தேடிஎடுத்து முகம் மலர சொல்லுகையில் முகம் சாய்ந்து,  கருமணிகள் விழியின் ஓரத்திற்கு சென்று கழுவிய  புறாமுட்டைகள் போல அவரின் அகலக்கண்கள் இன்னும் பெரிதாக மலர்கிறது.

கவண்கல்லில் ஆங்ஸாவையே சிறுவன் அடித்ததை சொல்லுகையில் அதை அவரே செய்துவிட்டதுபோல  மெல்ல கிளுகிளுத்து சிரிக்கிறார். மஞ்சள் பறவை ரத்தம் சிந்தி மரணித்ததை சொல்லுகையில் குரல் இறங்கி முகம் மாறுபட்டு அச்சோகத்தை கேட்பவர்களுக்கும் கடத்துகிறார். அப்போய் குறித்தும் நாய்க்குட்டியை குறித்தும் சொல்லுகையில் அத்தனை குதுகாலம் அவரின் உடல்மொழியில். அப்போய் போன்ற சிறுவர்களின் கதாபாத்திரங்களை சொல்லுகையில் அருணாவின் வாசிப்பின், அறிவின் விசாலம் தெரிகின்றது பதேர் பாஞ்சாலியிலிருந்து நடாஷாவின் தம்பி வரை அடுத்தடுத்து சொல்லுகிறார்.

அதுபோலவே புதிய நிலத்தில் தங்களைபொருத்திக்கொள்ள முடியாமல், அப்பதற்றத்தில் குடிக்குள் மூழ்கும் ஆண்களை நீரில் வேரின்றி மிதக்கும் பாசிக்கும், ஆண்கள் அப்படியிருப்பதால், உளவிசை கூடிய பெண்கள் வேர்பிடித்த ஆல் போல அங்கு ஊன்றி வளரத்துவங்குகிறார்கள் என்று ஒப்பிட்டது வெகு சிறப்பு.

அருணாவின் உள்ளம் முழுக்க கதைக்களத்துக்குள் முழுமையாக ஒன்றியிருப்பதை கேட்பவர்கள் உணரமுடிகின்றது. ஈரமூக்கை கைகளில் வைக்கும் நாய்க்குட்டியை சிறுவன் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடிச்செல்லுவதை சொல்கையில் அருணா மேடையிலிருந்து ஓடிசெல்லாமலிருந்ததுதான்  வியப்பு. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் கதையை சொல்லுகிறார்

அருணா பேய்ச்சியை அடுக்கடுக்காக பிரித்து, அழகாய் கண் முன்னே காட்டுகையில் ஒரு மலரை அதன் பாகங்களை. ஆய்வுக்கூடத்தில் முதலில் புல்லிவட்ட இதழ்களை, பின்னர் அல்லிவட்ட இதழ்களை, பின்னர் சூலகம், மகரந்த காம்புகள் என ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து மாணவர்களுக்கு விளக்குவதுடன்  ஒப்பிட்டுக்கொண்டேன்

கதையை அதில் கூறப்பட்டிருக்கும் மக்களை நிலப்பரப்புக்களை மொழியை பின்னர் கதாபாத்திரங்களின் இயல்பை என ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றது மிக நன்றாக இருந்தது

 கோழிகள், விலங்குகள், யட்சி ராஜநாகம் தாவரங்கள், மூலிகைகள் என கலந்துவரும் பேய்ச்சியை உடன் வாசிக்கவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தை இந்த உரை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே வாங்கி வாசிக்கத் துவங்கிவிட்டிருக்கிறேன். எப்போதும் பொருத்தமாக பாந்தமாகவெ உடையணீயும் அருணா இந்த உரையின் போதும் அணிந்திருந்த ஆழ்நீலத்தில் இளம்பச்சை சரிகைக்கரையிட்ட புடவையும் அவரின் கண்ணியமான தோற்றத்தை இன்னும் கூட்டிக்காட்டியது.

 இப்படி வரிவரியாக ஆழ்ந்து வாசித்து உணர்வெழுச்சியுடன் மணிக்கணக்காக  ஒரு கதையை பேசமுடியுமென்னும் அளவிற்கு ஒருவர், ஒரே ஒருவர் வாசிப்பார்களேயானால் அதன் பொருட்டு உயிரைக்கொடுத்தாவது ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்று எனக்கே கூட தோன்றியது ):

உரையை கேட்க ; https://www.youtube.com/watch?v=5QttdXnHZ9w

வெண்முரசென்னும் உறவின் நிறைவு,

புஷ்கரவனத்தில் குடிலின் முன்பு நின்றிருந்த செண்பக மரத்தின் அடிமர நிழல்,  அந்தியில் ஏற்றி வைத்த மண் அகல் விளக்கொளியில் முற்றம் வரை விழுந்திருந்ததை கண்டுகொண்டிருந்த  ஆஸ்திகனுக்கு அன்னை மானசாதேவி அன்று சொல்லத்துவங்கிய கதை, மானசாதேவியின் நூற்றெட்டு நாகஸ்தலங்களில் ஒன்றில் வழிபடும் சீர்ஷனுடன் பயணித்து, மற்றுமொரு அன்னை, ஆயர்குடிப்பிறந்த அழகை, ஆழிப்பால் பெருக்கின் அலையை,, கரியோனை, அணிச்சங்கனை,தேவர்க்கிறைவனை,அலைமலர் கண்ணனைப் பாடும் இனிய தாலாட்டில் நிறைவுற்றிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் எங்களுடனேயே வெண்முரசும் வளர்ந்தது, திகழ்ந்தது, இனி எந்நாளும் எங்களுடனும் இனி வரும் தலைமுறையுடனும் என்றென்றுமென இருந்து கொண்டுமிருக்கும்

இம்மாபெரும் படைப்பின் நிறைவைக்குறித்து நான் உண்மையில் அஞ்சிக்கொண்டிருந்தேன். முதலாவிண்னை வாசிக்க வேண்டாமென்று கூட நினைத்திருந்தேன். வருடங்களாக  என்னுடன் மிக அணுக்கமாக இருந்த வெண்முரசின் நிறைவு எனக்குள் ஒரு வெறுமையை, மாளாத்துயரை, பொருளின்மையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அப்படி இல்லாமல் கமுகும், மஞ்சளும் செங்கீரையும், மூங்கிலும்,அசோகமும் ஆலும், அருகும், நிலவும் குளிரும், நீள்பீலியும், கானும், கடலும், வானும் வளியும், கரியோனின் நீலமலர்க்காலடி படிந்த பொன்பரப்பும், பால் உலர்ந்த கன்னங்களுக்கிடப்பட்ட ஓராயிரம் முத்தங்களுமாய், பூத்தெழுந்த பொன்மலரை பாடிப்புகழும் தாலாட்டுடன் இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஆம் நிறைவு என்று வாசிக்கையில் உணரும் உண்மையான் பொருளே வெண்முரசின் நிறைவுதானென்று எண்ணுகிறேன்.

வெண்முரசு துவங்கிய போதும் அழகு, எங்களுடனேயெ இத்தனை வருடங்கள் வளர்ந்தபோதும் அழகு, இளமழை   பொழிந்துகொண்டிருக்கும்  இருள்பிரியா இக்காலையில் நிறைவுற்ற போதோ இன்னும் பேரழகு.  அவ்வன்னையின் தாலாட்டு ஓய்ந்த பின்னரும் அது சென்றடைந்த இடத்திலேயே இருக்கும் சீர்ஷனைப்போல வெண்முரசு நிறைவடைந்த பின்னரும் அது என்னை அழைத்துச் சென்று  விட்டிருக்கும்  அவ்வுலகிலேயே நிறைவுடன் இருக்கிறேன்.

மகாபாரதக்கதையில் மிகஇளம் வயதிலேயே  பித்துக்கொண்டிருந்த,  ஒரே மகனுக்கும் சந்தனுபரீக்‌ஷித் என்றெ பெயரிட்டிருக்கும் என் சகோதரி சங்கமித்ரா எங்களின் இளம்வயதில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் எனக்கும் இன்னும் சில தோழிகளுக்குமாக ஈரமணலில் குச்சியொன்றினால் ஒரு மரம் வரைந்து அடித்தண்டை சந்தனுவென்றும், அதிலிருந்து கிளைவிரித்துச்சென்ற முழுமகாபாரதக்கதையையும் சுருக்கமாக விளக்கிய கணம்தான் மகாபாரதக்கதைகளுக்கான விதையொன்று மனதில் விழுந்த கணம். வெண்முரசு நிறைவுற்றிருக்கும் இக்கணம் வரையிலும் அம்மரம் வளர்ந்தபடியேதான் இருந்தது

வெண்முரசு போன்ற பெரும்படைப்பொன்று நிகழ்ந்த காலத்தில் நானும் இருப்பதும், அதை முழுமையாக,வாசித்ததும், அம்மொழி எனக்கு புரிந்ததுமே என் வாழ்வின் ஆகசிறந்த விஷயங்களாகியிருக்கின்றன. என் வாழ்வையே வெண்முரசுக்கு முன்னும் பின்னுமென இரண்டாக பகுத்துக்கொள்ளலாம் அத்தனைக்கு பெரும் அகமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் படைப்பு இது. துவங்கிய நாளிலிருந்தே தினமும் என் காலைகள் வெண்முரசினோடுதான் புலர்ந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் சிலநாட்களைத்தவிர வேறெப்போதும் வெண்முரசை வாசிக்காமல் இருந்ததேயில்லை

சொல்லப்போனால்  அஸ்தினாபுரியிலும் காசியிலும் மகதத்திலும் அங்கத்திலும் சொல்வளர்க்காட்டிலுமேதான் நான் வாழ்ந்துகொண்டிருந்தேன் அவ்வப்போது அவ்வுலகின் திரைவிலக்கி இவ்வாழ்வில் அன்னையும், ஆசிரியையுமாக இருந்தேனென்றே சொல்லலாம். வெண்முரசின் தாக்கமும் எனக்கு மிக அதிகம் இருந்தது. குறிப்பாக வெய்யோனும் மாமலரும். அப்போதெல்லாம் காலையில் வாசித்த அத்தியாயம் ஏற்படுத்திய உளஎழுச்சிகளிலிருந்து, அன்றைக்கு இரவு வரையிலுமே கூடவிடுபடமுடியாமலிருந்திருக்கிறேன்.

வகுப்பில் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் போதும் உள்ளத்தின் ஒருபகுதியில்  வெண்முரசின் எதோவொரு நிகழ்வொன்றின் பொருட்டான துயரோ, மகிழ்வோ பொருளின்மையோ, சீற்றமோ இருந்துகொண்டிருந்த நாட்கள் பற்பல. வாசிக்கையில் உடல்மெய்ப்புக்கொண்ட பலநூறுகணங்களை இப்போதென நினைவிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

எப்போதும் வெண்முரசின் அத்தியாயங்களை நேரிடையாக தளத்தில் சென்று வாசிக்காமல்,  நான் வெண்முரசை மின்னஞ்சல் வழி தொடர்ந்து கொண்டிருந்ததால் உள்பெட்டியில் சென்று, மின்மடலை திற்ந்தே வாசிப்பேன். மீள் வசிப்பே தளத்தில். அது இம்மாபெரும் படைப்பு எனக்கே எனக்கெனெ எழுதப்பட்டு மின்மடலாக அனுப்பப்பட்டிருக்கிறது என்னும் ஒரு மகிழ்வையும் அங்கீகாரத்தையும் எனக்களித்து வந்தது பலநாட்கள் கண்விழித்திருந்து 12.01 க்கு காத்திருந்து வாசித்திருக்கிறேன்.

காலையில் வாசித்துவிட்டு மகன்களுக்கு சொல்ல இன்னொருமுறையும் வாசித்துவிட்டு, பயணங்களிலும், கல்லுரியில் வகுப்புகளுக்கான இடைவேளையிலும் மீள மீள வாசித்திருக்கிறேன்

மாமலர் நிகழ்ந்து கொண்டிருக்கையில் டெங்கு காய்ச்சலால் கொத்துக்கொத்தாக பலர் எங்களூரிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் உயிரிழந்து கொண்டிருந்தார்கள். எனக்கும் அக்காய்ச்சல் தொற்றி, உள்ளூரில் ஒரு சிறிய மருத்துவமனையில் 1 வாரமிருந்த போதும் தினம் வெண்முரசை வாசித்துக்கொண்டிருந்தேன். என் ரத்த அணுக்களின் அளவு  3000த்திலிருந்து மிக வேகமாக குறைந்த ஒரு  அதிகாலையில் உடனே ஆம்புலன்ஸில் என்னை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டெங்கு சிறப்புப் பிரிவில் அனுமதிக்க வேண்டுமென்னும் ஒரு அவசரநிலையின் போது கண்ணீருடன் என் சகோதரி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யச்சென்ற இடைவெளியிலும் அன்றைய வெண்முரசின் அத்தியாயத்தை வாசித்தேன். கோவைக்கு சென்று கொண்டிருக்கையில், வண்டியின் விரைவும் அந்த  ஒலிப்பானின் சத்தமும் கடும்காய்ச்சல் கொடுத்த தலைவேதனையுமாக கனவும் நனவும் கலந்த ஒரு பயணத்தில் என்னுடன், உறவை முடித்துக்கொண்டு விடைபெற்ற கசனும், கண்ணீரும் சினமுமாக தேவயானியும் உடனிருந்தார்கள். நான் இறந்துவிடுவேனோ என்னும் அச்சமும், விடுதியில் இருந்த மகன்களின் நினைவும் எவ்வளவு இருந்ததோ அதற்கிணையாகவே , தேவயானியின் இறப்புக்கு நிகரான அந்த கைவிடப்பட்ட தருணமும் அது அளித்த துயரும் இருந்தது அப்போது.  இப்போதும் ஆம்புலன்ஸின் ஒலி கேட்கையில் எனக்கு கசனும் தேவயானியும்  // மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத்துயர்ப்பெருக்கு// என்னும் வரியும் நினைவுக்கு வரும்.

நானும் உடழலிந்து வெறும் உள்ளமென இருந்த நாட்கள் அவை. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அந்த 3 நாட்களில் எனக்கு அலைபேசி கொடுக்கப்படவில்லை அதன்பொருட்டான என் அதி தீவிர முயற்சிகளை கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் ஒருவர் கேலியாக என்னிடம் ’’இப்படி மகாபாரதம் படிச்சே ஆகனும்னு அடம்பிடிச்சீங்கன்னா அப்புறம் கருடபுராணம் வாசிக்கவேண்டி வந்துரும்’’ என்றார் சிரித்தபடி. அதற்கு நான் புன்னகைக்கக்கூட செய்யாததால்  ’’ஏம்மா, எப்பவோ நடந்த எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதானே மகாபாரதம், அதுக்கு ஏன் இப்படி மெனக்கெடறீங்க? என்றார்.  அவருக்குபுரியும்படி சொல்ல என்னிடம் பதிலில்லை ஆனால் எனக்கு அலைபேசியை  கொடுக்கும்படி  செவிலியரிடன் சொல்லி விட்டுச் சென்றார் அவர்

மானசாதேவியின் மடியில் படுத்து கதை கேட்ட ஆஸ்திகனைப்போலவே சிறுவர்களாக  என்னிடம் கதைகேட்டு வெண்முரசின் கூடவே வளர்ந்து இன்று தோளும், மார்பும், அகமும் விரிந்த இளைஞர்களாக  என் இரு மகன்களும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் காலை 8 மணிக்கு வரும் பள்ளி வாகனத்துக்கு 7.30க்கே தயாராகி தெருமுனையிலிருக்கும் அரசப்பெருமரமொன்றின் புடைத்த வேர்களில்  மூவருமாக அமர்ந்து வெண்முரசை வாசிப்போம் வாகனத்தின் மஞ்சள் நிறம் கண்ணுக்கு தென்படும் வரையில் கதை போய்க்கொண்டிருக்கும். முடியாத கதையின் நினைவுகள் கண்களில் நிறைந்திருக்க கனவிலென வண்டியேறிச்செல்லும்  பெரியவன் சரண் மாலை வீடுதிரும்பி என் கைகளைப்பிடித்தபடி சாலையைக் கடக்கும்போதே ’’அப்புறம் என்னாச்சு சொல்லு சொல்லு’’ என்றபடியே வருவான் அந்த முழுநாளும் அவன் மனதில் வெண்முரசேதான் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கும்

 9 ஆம் வகுப்பில் பூரிசிரவசின் மேல் பெரும் அபிமானமும் அணுக்கமும்  அவனுக்கு ஏற்பட்டிருந்த அந்தக்காலத்தில், விடுதியில் தங்கவேண்டி வரும்  எதிர் காலத்தின்  பயிற்சியாக   திங்கட்கிழமை பள்ளி விடுதியில் விட்டு வெள்ளியன்று வீடு திரும்பும் ஒரு ஏற்பாட்டை 3 மாதங்கள் செய்தேன். வீட்டிலிருந்து பள்ளி செல்லும் இளையவன் தருண் மதிய உணவு இடைவேளையில் அண்ணனை சந்திக்கும் போது கொடுக்க அன்றன்றைக்கான வெண்முரசின் நிகழ்வுகளை ஆங்கிலத்தில் சிறு சிறு குறிப்புகளாக ஒரு துண்டுப்பேப்பரில் எழுதி கொடுத்துவிடுவேன், 11, 12 வகுப்புக்களை இருவரும் கோவையில் ஒரு பள்ளி விடுதியில் இருவரும் தங்கிப்படிக்கையில், மாதமொருமுறை வெளியே அழைத்துச்செல்லலாமென்னும் ஞாயிறுகளிலும் சிறுவாணி அணைக்கு செல்லும் மரங்கள் சூழ்ந்த அந்தச்சாலையில், பள்ளிக்கு வெளியே சிறுபடிகளுடன் கூடிய  பீடத்துடன் ஒரு கொடிமரம் இருக்கும் அங்கு அமர்ந்து மணிக்கணக்காக, ஒருமாத வெண்முரசின் கதைகளை பேசுவோம். பிற மாணவர்கள் குடும்பமாக கோவையின் உணவு விடுதிகளுக்கும் மால்களுக்கும் திரைப்படங்களுக்குமாக சென்ற பல நாட்களில் நாங்கள் மூவரும் அஸ்தினபுரியிலும் இந்திரபிரஸ்தத்திலுமாக இருந்தோம். வெண்முரசால் நானும் மகன்களும் இன்னும் அணுக்கமானோம்.

மகன்களுக்கு மட்டுமல்லாது மிக நெருங்கிய நண்பர்களுக்கும் அலைபேசியில் பலமணிநேரம் வெண்முரசின் முக்கியப்பகுதிகளை சொல்லி இருக்கிறேன். ஒருமுறை ராமேஸ்வரத்திற்கு  பொள்ளாச்சியிலிருந்தே காரில் சென்று வந்த பயணம் முழுவதும் உடன்வந்த குடும்பத்தினருக்கும் சேர்த்து வெண்முரசை வழியெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது துருவனின் கதை நிகழ்ந்துகொண்டிருந்தது. உணவுக்காக சாலையோரம் நின்றிருந்த போது அந்த வாடகைக்காரின் ஓட்டுனர் என்னிடம் தான் வாழ்க்கையில் கதையே கேட்டதில்லை என்றும் இந்தகதையை தெய்வமே சொல்லிக்கொண்டு வந்ததுபோலிருப்பதாகவும் சொன்னார் இனி மீதிக்கதையை தான் எப்படி தொடர்ந்து வாசிப்பதென்றும் கேட்டார். உளமகிழ்ந்து உங்களின் தளத்திற்கு சென்று எப்படி வாசிப்பதென்பதை சொல்லிக்கொடுத்தேன் அவருக்கு

.அவருக்கு கதையில் வரும் ’’கத்தியை குத்தி, சுழற்றி பின்னர் உருவி வெளியே எடுப்பது’’ என்பது போல வரும் ஒரு   சொற்றொடரை குறித்து பெரும் பிரமிப்பு இருந்தது அதை சொல்லிக்கொண்டே இருந்தார்

எங்களது கோடைவிடுமுறைகள் எல்லாமே வெண்முரசுடன் தான் கழிந்தன. இளநாகனின் பயணமொன்றின் போது அவன் ஒரு மூதாட்டியின் இல்லத்தில் கம்பரிசிக்கூழ் அருந்துவதை வாசித்தபின்னர்,நினைத்துக்கொண்டதுபோல  புத்தகத்தையும் கையில் எடுத்துக்கொண்டு மெல்ல நடந்தே பக்கத்து ஊருக்கு சென்று அங்கு சாலையோரம் விற்கப்பட்ட கம்பங்கூழை வாங்கி அருந்தியபின்னர் கதை சொல்லியபடி, கேட்டபடியே வீடு வந்தோம்.

மழைப்பாடல் புத்தகமாக வந்த சமயத்தில் அதை எடுத்துக்கொண்டே மகாபலிபுரம் கடற்கரையொட்டிய ஒரு விடுதியில் தங்கசென்றிருந்தோம். அங்கு அலைகளின் அருகிலமர்ந்து 5 நாட்களில் மழைப்பாடலை முழுமையாக வாசித்தோம். ’’இத்தனை செலவு செய்து அங்கு வந்தும் இந்த புத்தகத்தை படிக்கறதுக்கு பொள்ளாச்சியிலேயே இருந்திருக்கலாமென்னும்’’ கணவரின் அங்கலாய்ப்புக்கும், கோபத்திற்கும்   அப்போது அஸ்தினபுரியிலும் மதுராவிலும் காசியிலும், காந்தாரத்திலும் இருந்த நாங்கள் எதிர்வினையாற்றவே இல்லை. இப்படி வெண்முரசுடன் கழிந்த இனியநாட்களின் பலநினைவுகள் ஏராளமாக  எங்களுடன் இருக்கின்றது

சென்ற மாதத்திலிருந்து முதற்கனலிலிருந்து மீள் வாசிப்பை துவங்கி இருக்கிறோம். வெண்முரசு நிறைவெனும் துயர் அதிகம் ஏற்பட்டிருக்காததற்கு இந்த மீள் வாசிப்பும் ஒரு காரணம். பூரிசிரவஸின் முறிந்த காதல்களுக்கு  கண்ணீர் விட்டழுத அன்றைய சரண், இப்போது எனக்கு கதையை சொல்லிக்கொண்டிருக்கிறான். மீண்டும் ஒரு முறை வாழக்கொடுத்து வைத்ததுபோலிருக்கிறது மகன் சொல்லச்சொல்ல வெண்முரசை நான் இப்போது கேட்கையில்.

வெண்முரசு ஏற்படுத்திய அதே பிரமிப்பும் மகிழ்வும் வெண்முரசின் வாசகர்களும் எனக்களித்தார்கள். வெண்முரசு ஒரே ஒருவரால் எழுதப்பட்ட பெரும்படைப்பென்பதை நம்பவே நம்பாத ஒரு தலைமுறைக்கு அது ஜெயமோகன் என்னும் ஒற்றை மனிதரால் மட்டுமே எழுதபட்டதென்று சொல்லும் சாட்சிகளாகவே வாசகர்களாகிய நாங்கள் இருப்பதாக நினைத்துக்கொள்வேன்.   

 

முதன்முதலாக வெண்முரசு கூடுகைக்கு விஜயசூரியனின் இல்லத்திற்கு சென்று அங்கு அத்தனை தோழமையும் அத்தனை புரிதலுமாக ஆணும்,பெண்ணும் வாசிப்பில் மகிழ்ந்திருக்க முடியுமென்பதை வாழ்வில் முதன்முதலாக கண்ட பிரமிப்பு எனக்கு இன்னும் இருக்கின்றது. அதுபோன்ற சந்தர்ப்பங்கள் என் குடும்பத்து பெண்களுக்கெல்லாம் கற்பனைக்கெட்டாதவை, எனக்கு எப்படியோ வெண்முரசால் அருளப்பட்டவை

.சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரின் சித்தர் கோவிலுக்கு ஒருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஜெயமோகனும் அருண்மொழியுமாய் ஒரு ஐரோப்பிய பயணத்திலிருந்த புகைப்படங்களை நண்பரொருவர்  அனுப்பியிருந்தார். மகன்களுடன் அவற்றைப் பார்த்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கையில் அருகில் அமர்ந்திருந்த ஒரு கிராமத்துப் பெண்மணி உங்களிருவரின் புகைப்படத்தை தொட்டுக்காட்டி’ யாரு கண்ணு உன்னோட அண்ணனும் நங்கையாளுமா?‘ என்றார்கள். மனம் சட்டென்று பூரித்து, நிரம்பி, மூச்சடைத்தது, சமாளித்துக்கொண்டு ’ஆம்’என்றேன்.

 முதல் சந்திப்பிலேயே சின்னப்பிள்ளைக்கு சொல்லித்தருவதைப்போல அன்புடனும் பொறுமையுடனும் எனக்கு தமிழ் தட்டடச்சு செய்ய கற்றுக்கொடுத்த மீனாம்பிகையிலிருந்து, சொந்த சகோதர சகோதரிகளைப்போல இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்க தயாராக  உலகெங்கிலும் இருக்கும் அத்தனை நண்பர்களுடன்  நானும் வெண்முரசு குடும்பத்தின் ஒர் அங்கம் என்பதைத்தவிர பெருமையான, சிறந்த  விஷயம் எனக்கு வேறோன்றுமே இல்லை

வெண்முரசை வீட்டிற்கு வெளியே மரங்களுக்கு அருகிலும், அடியிலும் அமர்ந்தேதான் பெரும்பாலும் வாசித்திருக்கிறோம். மகன்களுடன் மரங்களும்,செடிகொடிகளும் சேர்ந்து வெண்முரசை கேட்டுத்தான் வளர்ந்தன. அன்று சிறு கன்றுகளாக வைத்திருந்தவை இன்று வீட்டைவிட உயரமான பெருமரங்களாகி விட்டிருக்கின்றன. மாமலர் துவங்குகையில் பூக்கத்துவங்கிய புன்னைக்கு மாமலர்ப்புன்னை என்றே பெயர். சொல்வளர்க்காடு துவங்குகையில் நட்டுவைக்கப்பட்ட ஏழிலைப்பாலையும், இந்திரநீலத்தில் பாளைவிட்ட தென்னையொன்றும், காண்டீபத்தின் போது மலரத்துவங்கிய கொடிச்சம்பங்கியும், வெண்முகில் நகரின் மீது படர்ந்து மலர்ந்த ருத்ரமல்லியுமாய் என் மகன்களுக்கு நான் விட்டுசெல்லவிருப்பது கதைகேட்டுக்கேட்டு வளர்ந்து இவ்வீட்டை சூழ்ந்திருக்கும் பசுமையையும், வெண்முரசென்னும் உறவுகளையும் மட்டும்தான்

வாசிப்பென்பது இத்தனை பெரிய இயக்கமாக, ஒரு கொண்டாட்டமாக இருப்பதெல்லாம் வெண்முரசைப்போன்ற ஒரு பேரிலயக்கியத்திற்க்குத்தான் சாத்தியம். என்னைபோல் வீட்டுக்கும், வேலைசெய்யும் இடத்துக்கும் தவிர வேறெங்கும் செல்லும் சாத்தியங்களும், சுதந்திரமும் அற்ற பெண்ணுக்கு வெண்முரசு திறந்து விட்டிருக்கும் வாயில்கள் ஏராளம்.

 வெண்முரசின் சொற்களெல்லாம் எங்களின் மனதில் பல்லாயிரம் விதைகளாக, நிறைந்து முளைத்து வளர்ந்து கொண்டெ இருக்கின்றது. ஆலெனப்பெருகி அருகென தழைத்தபடியெ இருக்கும் வெண்முரசு வாழ்வில் கொண்டுவந்திருக்கும்  நன்மாற்றங்களுக்கும், நிறைவிற்கும், மகிழ்விற்கும் இனிமைக்கும், துயருக்கும், கனிவிற்கும் இன்னும் எல்லாவற்றிற்குமாய் மனம் நிறைந்த நன்றிகள்

  வெண்முரசின் கழிமுழையின் தாளம் என் இறுதிக்கணம்  வரையிலும் இதயத்துடிப்பிற்கு இணையாகவே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் ஒவ்வொரு வருடமும் இறுதிவருட படிப்பை முடித்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றுக்கொண்டு பிரியும் மாணவர்களை நினைத்துக்கொண்டு தனித்தமர்ந்திருக்கையில் உணரும் இனிய துயரே இன்று எனக்கிருக்கிறது,  ஒருவேளை எனக்கு பெண் பிறந்திருந்து அவளுக்கு விருப்பமானவருடன் அவளது திருமணம் முடிந்து அவள் சென்றிருந்தாலும் இப்படித்தான் உணர்ந்திருப்பேனாயிருக்கும்.  

// நிறைவின்மை என்னும் கூரலகு கொண்ட மரங்கொத்தி.

முடிவின்மையை ஏந்தி அமைதிகொண்டிருக்கிறது காடு//

உள்ளுறைவது,

சிறு அதட்டலில் பணிந்துவிடும்

பெரும்பாலும்,

அவ்வப்போது மிரட்ட வேண்டியிருக்கையில்,

 அஞ்சினாற்போல் எங்காவது போய் பதுங்கிக்கொள்ளும்,

 அப்படித்தான் எப்போதுமென்றும் சொல்லமுடியாது

பிரம்பெடுத்தாலே அடங்கும் சமயங்களும் உண்டு,

 வசைச்சொல்லும் வேண்டியிருக்கும்

வேளைகெட்ட வேளைகளில் விவஸ்தையின்றி நடந்துகொண்டால்,

அரிதாக அதற்கு ஆவேசம் வரும் நாட்களில் கழுத்தை திருகியும்,

 காலடியிலிட்டு நசுக்கியும் கொன்று புதைப்பதுண்டு,

அப்படியும் உயிர்த்தெழுந்து விடுகிறது

 உடன்கட்டையேறும் வரை உடனிருக்குமிந்த

 உள்ளுறை விலங்கு!

வாழ்தலும் பிழைத்தலும்!

ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். சரண்அப்பா துவங்கவிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப்பணிகள் அங்கு நடப்பதால்  அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன்.

இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!) திருமணமாகி. அபுதாபியில் பல வருடங்கள் இருந்தபோதும் அது அத்தனை உவப்பான வாழ்விடமாக எனக்கு தெரியவில்லைதான் எனினும் அன்னைமையிலும் மகன்களை வளர்த்துவதிலும் எப்படியோ அவ்வருடங்களை நான் கடந்துவிட்டிருந்தேன்.

ஆனால் இப்போது தனியே மகன்களின்றி, இங்கு இத்தனை நாள் இருந்தது பெரிய திகில் அனுபவமாகி விட்டது. புதிதாக கட்டப்பட்டிருக்கும்  20 தளங்களுடனான அடுக்ககம். பச்சையே எங்கும் இல்லை.  மரக்கன்றுகளை கொண்டு வந்து இப்போதுதான் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்

இவரை அனுப்பி காலை 8 மணிக்கு கதவைச் சாத்தினால் இரவு 8 மணி வரை கொடுந்தனிமை. காலி பங்களாவில் பேய் நடமாடுவதைப்போல அறையறையாக நடந்துகொண்டிருந்தேன். இரண்டுமூன்று நாட்கள் கழித்துத்தான், நானே என்னுடன்  பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை கண்டுபிடித்தேன்.

புறப்படுகையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சில, பால்கனி இருக்கும், எட்டாவது மாடியிலிருந்து வாசிக்க உகந்தவையல்ல என்று சில பக்கங்களிலேயே தெரிந்தது. சுகந்தி சுப்ரமணியனின் பதிவுகளை  வாசித்தேன் அவரின் எளிய கவிதைகளையும், நாட்குறிப்புக்களையும் சுகந்தி யாரென்று அறியாமல் வாசிப்பவர்களுக்கு பொருளற்றவையாக கூட தோன்றியிருக்கும்,  ஆனால் ஜெ’ தளத்தின் வாயிலாக நான் சுகந்தியை அறிந்துகொண்டவளென்பதால் அவரது பதிவுகள்  என்னை பெரிதும் தொந்தரவு செய்தன

வாசல் தெளிக்க கோலம்போட என்று எந்த வேலையும் இல்லை பெரிதாக. புறநகர் குடியிருப்பென்பதால் சென்னையின் விரைவும் பரபரப்பும் கூட இங்கில்லை.

எல்லாவற்றையும் விட அங்கு மனிதர்களை அதிகம் பார்க்கவோ பேசவோ முடியவில்லை கதவை திறந்தால்  இன்னும் இரண்டு வீடுகளின் கதவுகள், எப்போதாவது கீழே போனாலும், மின்தூக்கியில்  துக்கவீட்டைபோல இறுகின முகத்துடன் இருக்கும் யாரும் யாரையும் பார்த்து பேசுவதோ, புன்னைகைப்பதோ கூட இல்லை

அங்கேயே இருக்கும் சிறிய  பூங்காவில், சைக்கிள் ஓட்டிக்கொண்டு துரத்தி ஓடி  விளையாடும் குழந்தைகள். (கூண்டுப்பறவைகளின் காதலில் பிறந்த  குஞ்சுப்பறவைகளுக்கு எப்படி, எதற்கு,  சிறகு என்று வண்ணதாசன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார். அதை நினைத்துக்கொண்டேன்) ஒரு  சிறிய விநாயகர் கோவில், உள்ளேயே வந்து குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள், செல்போனில் மூழ்கி இருக்கும்  இளைஞர்கள். இங்கிருப்பவர்களுக்கு வெளி உலகமென்பது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் மால்களும் சினிமாவும் உணவகங்களும் மட்டும்தான் போல. பகலிலும் இரவிலுமாய் நாற்பது காவலாட்கள் உள்ளிருக்கும் எதையோ தீவிரமாக  காவற்காக்கின்றனர். பெரிய நூலகம், ஏராளமாய் ஆங்கிலப்புத்தகங்களும், தமிழில் ஒரே ஒரு வைரமுத்துவின் புத்தகமும்.

வாரமொருமுறை கறிகாய்கள் விற்கும் ஒரு அம்மாவுக்காக. பெண்கள்  கூட்டமாக காத்திருக்கிறார்கள் நான்கு முழம் மல்லிகைச்சரத்தை கொண்டு வந்து நறுக்கி, ஒரு இணுக்கு 20 ரூபாய் என்று அந்தம்மா விற்கிறார். வாங்கி அங்கேயே தலையில் வைத்துக்கொள்கிறார்கள். ”போன வாரமே  மாங்காய் கொண்டு வரேன்னு சொன்னீங்களே என்னாச்சு” என்று வயிறு மேடிட்டிருந்த இளம் பெண்ணொருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள்

சென்னையில் இருக்கும் உறவினர்களுடன் ஒரு சினிமா போனோம். 6 பேர் இருக்கும் ஒரு குடும்பம் சென்னையில் சினிமா  பார்க்க    ஆகும் செலவில் இங்கு ஒரு குடும்பம் தாராளமாக  ஒரு மாதத்தை மகிழ்ச்சியாக கழித்துவிடலாம் அத்தனை செலவுள்ள விஷயம் அது.

அதுவும் இடைவேளையில் விற்கும் சோளப்பொறியின் விலையை கேட்டு கிராமத்து மனுஷியான எனக்கு கண்ணைக்கட்டியது.  முன்னைப்போல முகமூடியுடனோ, ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் எண்ணையும் கரியுமாக பூசி, இருட்டில் பயந்தும் ஒளிந்துமோ கொள்ளையடிக்க வேண்டியதில்லை, உன்னத சீருடையணிந்து, குளிரூட்டப்பட்ட சென்னை மால்களில்  சோளப்பொறி விற்றால் போதும் போலிருக்கிறது

ஆட்டோவிலும் இருசக்கரவாகனத்திலும் குடங்களுடன் சனம் அலைகின்றது தண்ணீருக்காக.  வயதுக்கு மீறி கொழுந்த குழந்தைகள், எங்கெங்கும் துரித உணவுகள், ஒரு மழைக்கே நாறிப்போகும் தெருக்கள் என்று சென்னைப்பெருநகரின் முகத்தைப்பார்த்து மிரண்டு போனேன்.

உடல் ஓய்வெடுத்தாலும் உள்ளம் இது எனக்கான இடமல்ல என்று அலறிக்கொண்டெ இருந்தது. என்னால் அமைதியாக ஒரு மணி நேரம் கூட அங்கே இருக்கமுடியவில்லை.  பால்கனியை திறந்தால் பரந்து விரிந்து, முற்றிலும் வறண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் மனச்சோர்வையளித்தது..

அபோடுஹ் நிகழ்ந்துகொண்டிருந்த வெண்முரசின் தீயின் எடையும் தாங்க முடியவில்லை. குருதிபெருக்கெடுத்து ஓடியது குருஷேத்திரக்களத்தில், துரியோதனனின் பாவை தன்னந்தனியெ களத்தில் நின்றிருந்த அன்றும், பீமனை குரங்குகள் புறக்கணித்தபோதும் கடுமையான உளச்சோர்வுக்கு உள்ளானேன்.  பாதிஇரவுகளில் அலறிக்கொண்டு விழித்தெழத்துவங்கினேன் ஒரே வாரத்தில்

நல்லவேளையாக சென்னை  நண்பர் ஒருவர் பரிசளித்த புத்தகங்களை வாசித்தபின்னரே என்னுடன் தமிழ்நதியும் ,யூமா வாசுகியும், கசீ சிவகுமாரும் சில நாட்கள் உடனிருந்தனர்

நரம்புக்கோளாறு, இன்னும் இங்கிருந்தால் மூளைக்கோளாறாக மாறிவிடும் சாத்தியங்கள் தென்பட்டதால், விடுப்பு முடியும் முன்னரே ரயிலைப்பிடித்து, ஊர் வந்து சேர்ந்தேன். வெளிக்கதவை திறந்ததும் திடுக்கிட்டு தென்னையில் தாவி ஏறிய அணிற்பிள்ளைகளையும், புன்னம்பூக்களும் பவளமல்லியுமாய் நிறைந்துகிடந்த ஈர வாசலையும் குலைதள்ளி இருந்த வாழைகளையும் பார்த்தபின்பே பழைய மனுஷியானேன.

இந்த இரண்டு வாரத்தங்கலில் எதையாவது மீள நினைத்துக்கொள்வேன் என்றால் அங்கிருந்த துல்லிய நீலவானை பிரதிபலித்துக்கொண்டு, ஒளியலைகளுடனிருந்த மாபெரும் நீச்சல்குளத்தையும், மெட்ரோவில் பயணிக்கையில் என்னை நோக்கி சிரித்தபடி கையை நீட்டிய ஒரு குழந்தையையும் தான்.

பிழைப்புக்காக சென்னை போவது, என்பதை நெடுங்காலம் முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதான், சென்னையில் வாழ்தலே இல்லை வெறும் பிழைத்தல் தான்.

இதைக்குறித்து திரு ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதமும் அதற்கு அவரின் பதிலும்.

சென்னையில் வாழ்தல்

ஊட்டி காவிய முகாம்

ஊட்டி முகாமிலிருந்து  வீட்டிற்கு மாலை 6 மணிக்கெல்லாம் திரும்பி விட்டோம் நானும் சரணும். பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய்  மனம் நிறைந்திருக்கின்றது. வெள்ளியன்று நாங்கள் இருவரும் வருகையிலேயே முதல் அமர்வு துவங்கியிருந்தது, அப்போதிருந்து மூன்றாம் நாளின் நிறைவான அரங்குவரை, வழக்கம் போல  எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் உட்பட, பல அகவைகளில் வரும் இருபாலரும் பங்குகொள்ளும் கூடுகையில் ஒரு பிழையுமின்றி திட்டமிட்டபடியே எல்லாம் நடைபெறுவது மிக அரிதான ஒன்று, இம்முறையும் அப்படியே நடந்து முடி ந்தது

சென்ற வருடத்தைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தோம், பெண்களும் முன்பைவிட நிறையப்பேர் கலந்துகொண்டிருந்தோம்.

நாஞ்சில் நாடன்,P.A. கிருஷ்ணன், தேவ தேவன், லக்‌ஷ்மி மணிவண்ணன்,உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கதை, கவிதை கம்பராமாயண அரங்குகள் அனைத்துமே வெகு சிறப்பாக இருந்ததென்றாலும் , எனக்கென்னவோ இம்முறை கவிதை விவாத அரங்கு    மிக மிக நன்றாக அமைந்திருந்தது என்று தோன்றியது. அத்தனை விரிவாகவும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் வந்த கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கவிதை அரங்கு சிறப்பாக இருந்தது

கவிதைகளின் சிறப்பம்சங்களை சில  விவாதங்களில்  பேசினோம் என்றாலும் நாகப்பிரகாஷ் தெரிவு செய்திருந்த கவிதையைக்குறித்தான விவாதத்தில்,  எது நல்ல கவிதை என்பதற்கான விளக்கமும், எப்படி நல்ல கவிதையை இனம் காண்பதென்றும், எதை நாம் கவிதைவாசிக்கையில் கவனிக்கனுமென்றும் தெரிந்துகொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன்னரான என் கவிதை வாசிப்பிற்கும் இனிமேலான என் கவிதை வாசிப்பிற்கும், தெரிவிற்கும் நிச்சயம் நல்ல மாற்றமிருக்கும்.

திரு.மோகனரங்கன்

மோகனரங்கன் அவர்களின் ’முடிச்சு’ கவிதை விவாதம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் விரிந்துகொண்டே போனது. அந்தக்கவிதையை முகாமிற்கு வரும்முன்னர் நான் தனிமையில் வாசிக்கையில் அது எனக்களித்த  உணர்வையும் புரிதலையும் விட விவாதத்தின் போது  ஜெ’வும் பங்கேற்பளர்களும் பிற எழுத்தாளர்களுமாய் அதை பல கோணங்களிலிருந்து அர்த்தப்படுத்துகையில் அது ஒரு மிக அழகிய நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு வடிவிற்கு வந்து சேர்ந்தது. கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் கோணங்கள் மாறி உள்ளிருக்கும் கண்ணாடிச்சில்லுகள் வேறு வேறு வண்ணச்சித்திரங்களைக் காண்பிப்பது போல. ஒரு சிறு புள்ளியாக என் மனதில் இருந்த அந்தக்கவிதையின் பொருள் விரிந்து விரிந்து மிக அழகிய சித்திரமானது

கரமசோவ் சகோதரர்களிலிருந்து ஜன்னல் வரை  ஆரோக்யமான விவாதங்களும், விளக்கங்களுமாய் நிறைந்திருந்தது  கதை அரங்கு

நெற்றியில் விபூதிப்பட்டை துலங்க வெண்கலக்குரலுடன் திருக்குறள் உரையாற்றிய திருமூலனாதனின் தமிழறிவை வணங்குகிறேன்.   ’’ தூண்டில் பொன்’’ என்பதற்கு ஜெ சொல்லிய அந்த  பட்டு நூலை தூண்டிலில் கட்டுவது குறித்தான  விளக்கம் இனி எப்போதும் நினைவிலிருக்கும்.

சிங்கை சுபாவும், திருமூலநாதனும்

வேளாவேளைக்கு சூடான சுவையான உணவும் , இடைவேளைகளில் தேனீருமாய் எல்லாம் கச்சிதமாக எப்போதும் போல நடந்தது

அரங்கில் அனைவரும் வசதியாக குடும்ப நிகழ்வொன்றில் அமர்ந்திருப்பது போல சாய்ந்தும் சம்மணமிட்டும் சிலர் நாற்காலிமாய் அமர்ந்துகொண்டிருந்தோம் எனினும் அரங்கு ஒரு கட்டுக்குள் இருப்பதையும் உணர்ந்திருந்தோம்.

இரவு 10 மணிக்கு மேலும் அரங்கில், ஆர்வமுடன் அமைதியாக அனைவரும் கலந்துகொண்டதும். பெருமழை வரப்போகும் அறிகுறிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதையும்,வியப்புடன் நினைவு கூறுகிறேன்

14டிகிரி குளிரிலும் அனைவரும் அரங்கிற்கு சரியான நேரத்திற்கு வர அவசரமாய் குளித்து தயாராகி வந்தோம். எந்த குடும்ப நிகழ்விற்கும் இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நாங்கள் கலந்துகொண்டிருக்கவில்லை.

நாஞ்சில் நாடன் அவர்களின் யுத்தகாண்ட உரை அத்தனைஅருமை, இன்னும் 1வாரம் தொடர்ந்து கம்பராமாயணமே அவர் தொடர்ந்து உரையாற்றுவாரெனினும் அமர்ந்து ஆர்வமாக கவனித்திருப்போம்

அரங்கிற்கு வெளியேயும் உணவுண்ணும் போதும்  பேகிக்கொண்டிருந்ததில் மற்ற எழுத்தளர்களிடமிருந்தும், ஜெ;விடமிருந்தும், பங்கேற்பாளர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.

முகாமிற்கு வரும்பொழுது நான் சுத்தமாக துடைத்த வெற்றுக்கலமாகவே வந்தேன். ஊர் திரும்புகையில்  நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறேன்

3 நாட்களில் எத்தனை எத்தனை அறிதல்கள்?

இந்திய ஞானமரபில் தத்துவம்,  இந்தியச்சிற்பக்கலை குறித்தும் நிறைய அறிந்துகொண்டேன்

புதிதாக கலந்துகொண்ட இளம் வாசகர்கள் ஆர்வமிகுதியிலும் பதட்டத்திலும் கோர்வையாக பேசமுடியாமல் கேட்கநினைத்ததை துண்டு துண்டாக  கேட்கையில், ஜெ அதை சரியாக தொகுத்து அழகாக முன்வைக்கிறார். உண்மையில் அதை மறுகட்டமைப்புச்செய்து அவர் சொன்ன பிறகே எங்களுக்கு மட்டுமல்லாது கேள்வி கேட்டவருக்கே அவர் கேட்க நினைத்ததென்னவென்று  புரிந்தது

ஒரு நாளுக்கும் மற்றொன்றிற்கும், எந்த மாறறமுமில்லாத பணிச்சுமை எப்போதும் கூடி இருக்கும், மிகுந்த பரபரப்பான நாட்கள் நிறைந்த என் வாழ்வில் இந்த  3 நாட்களும் முழு ஓய்வு மட்டுமல்லாது, பற்பல புரிதல்களும், அறிதல்களும், தோழமையுமாய் நிறைந்திருந்தது

குருநித்யாவின் சமாதி இருக்கும் இடத்தில் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தை எனக்கு ஒரு தோழி பகிர்ந்திருந்தார். அதில் வாய்கொள்ளாச்சிரிப்புடன் இருக்கும் என்னை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். இப்படி நான் மனம் விட்டுச்சிரிக்கும் ஒரு புகைப்படமும் வீட்டில் இல்லை ,ஏனெனில் அத்தகு தருணங்கள் இதுவரை வாய்த்ததில்லை.  இந்த 3 நாட்களைக்குறித்தான இத்தனை நீளக்கடிதத்தில் எழுதிய  அனுபவங்கள் அனைத்தையும் அந்தப்புகைப்படத்திலிருக்கும்  என் சிரிப்பு சொல்லிவிடும்

இப்படி  முற்றிலும் மகிழ்வான நிறைவான நாட்கள் வேறெந்த வகையிலும் எனக்கு கிடைத்திருக்காது என்பதை நிச்சயமாகச்சொல்லமுடியும் என்னால். இம்மூன்று நாட்களின் இனிய நினைவுகள்,  இன்னும் சில வருடங்களுக்கு  உற்சாகமாக நான் வேலை செய்யவும் , தளரும் தருணங்களில் என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் உதவி செய்யும்.

திரு பி ஏ கிருஷ்ணன்

(மே 2018)

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑