லோகமாதேவியின் பதிவுகள்

Month: December 2020 (Page 1 of 2)

இந்தியப்பயணம்- ஜெயமோகன்

இந்த விடுமுறையில் எந்த பிரயாணமும் இல்லாமல் புத்தகங்களாகப் படித்துக்கொண்டே இருந்தேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள்  எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு புத்தகமும் கையுமாக தென்னை மரத்தடியில் அமர்ந்து நாள் முழுதும் வாசிக்கும் அருமையை, சுகத்தை எந்த இடையூறுமின்றி இப்போதுதான் அனுபவிக்கிறேன்

இந்தியா என்னும் கனவிற்குள் ஒருதவம் போல ஜெ பிரயாணம் செய்த ’’இந்தியப்பயணத்தை’’ நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வழக்கமாக ஜெ’வின் பயண அனுபவங்கள்  எனக்கு ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி இம்முறை இல்லாமல், என்னவோ நானே நீண்ட பயணமொன்றை போய் வந்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது.    பழகிப்போன செளகரியங்களிலிருந்து வெளியே வந்தால் எனக்கும் பயணம் சாத்தியம்தான்   என்றும் தோன்றியது. இதுவரை போகலைன்னாலும் இனி போகலாமென்னும் நம்பிக்கையும் வந்திருக்கின்றது

’’இந்தியா இன்னும் தீர்ந்துபோகவில்லை, எஞ்சி இருக்கின்றது’’, எனறு ஜெ சொல்லியிருப்பதை எனக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன்

எப்படி அவருக்கு இப்பயணம் மறக்கமுடியாத ஒன்றோ அப்படியே இந்த பயண அனுபவத்தின் வாசிப்பு, எனக்கும் மறக்கமுடியாத ஒன்று. அன்றன்றைக்கான  நிகழ்வுகளை இரவு உறங்கப்போகும் முன்னர் சுடச்சுட எழுதியிருக்கிறாரென்பதால் உடன் நானும் பயணிக்கும் உணர்வுடனே வாசித்தேன்.  .

இருள் பிரியா நேரத்தில்  கவித்துவமாக துவங்கிய இந்த பிரயாணம் அத்தனை அழகாக  உடன் வந்த அனைவரின் பார்வையிலும் இந்தியா என்னும் கனவினை வாசிப்பவர்களுக்கும் விரித்து விரித்து காட்டிக்கொண்டே செல்கிறது.

சென்ற இடங்களையும் ஊர்களையும் மட்டும் சொல்லிச்செல்லாமல் அந்த நிலக்காட்சிகளை, அரசியலால் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை, உடைகளும் உணவும் மாறிக்கொண்டே வருவதை, விவசாயத்தை, தேநீர் கூட  அரைப்பங்கு கால்பங்காகி, அவுன்ஸ் கணக்கில் குறைந்ததை, தங்குமிட செளகரியங்கள் அசெளகரியங்களை, அறை வாடகைகள் உணவுக்கான செலவு, அங்கங்கு இருக்கும் சாதி அமைப்புக்களை,  நதிகளை, கால்நடைகளை, அவற்றின் வகைகளை, அவ்வப்போது வரலாற்றை,  பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி பல இந்தியப்புராதன சின்னங்களை நாம் இழந்துகொண்டிருப்பதன் பொருட்டான அவரின் ஆதங்கத்தை, எல்லாம்   தொடர்ச்சியாக சுவாரஸ்யமாகவும் மனவருத்தத்துடனும், சொல்லிக்கொண்டேயிருப்பதால் ஒரு அழகிய நெடுங்கதையொன்றினை வாசிப்பதுபோல தொடர்ந்து வாசிக்க முடிந்தது.

திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது போல நிலப்பரப்பும் மக்களும், தட்பவெப்பமும் சம்பவங்களுமாய் மாறிக்கொண்டே வருகின்றது ஜெயமோகனின் விவரிப்பில்

சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் போன்ற மிக நுட்பமான விஷயங்களுடன், சாப்பிடுகையில் ‘ஆ’ கேட்ட குட்டிப்பெண்னை, ஆங்கிலம் தெரிந்த ஒரே ஒருத்தரை, 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே கோவிலில் பூஜை செய்யும் சிறுவனை, கடந்து  சென்ற பேரழகிகளை, எரியும் சவங்களை, இப்படி ஏராளம் தகவல்களுடன்  பயணத்தை சொல்லுகிறார்.

தீயாக கொட்டிய  வெயிலில்  வாடியும், பொழிந்த நிலவின் புலத்தில் நனைந்தும், நதிநீரில் திளைத்தும், தூசியிலும், பசியிலும்  களைத்தும், பல்லாயிரம் முகங்களைக்கண்டபடி எத்தனை எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன அவருக்கு   இந்த ஒரே பயணத்தில்?

அழுகல் பழங்களையே திரும்ப திரும்ப  தலையில் கட்டியவர்களை, அறைவாடகையை உயர்த்தி ஏமாற்றியவர்களை,   உணவிற்கான தொகையை கூடுதலாக வாங்கியவர்களை என்று இவர்களைப்பற்றி சொல்லும் போதும் புகாராகவோ குற்றசாட்டாகவோ இல்லாமல் ,  வாழ்வின் இயங்கியலில்  அவர்களுக்கு ஏமாற்றுதல் ஒரு அங்கமாகிப் போயிருப்பதை ஆதங்கத்துடன்தான் சொல்லுகிறார்.

ஆணும் பெண்ணுமாய் பேசிக்கொண்டே  கூட்டம் கூட்டமாய் வெட்டவெளியில் மலம் கழிப்பது, மின்சாரமே இல்லாமல் இருளிலேயே இயல்பாக வாழ்க்கையை நடத்துவது, சேறு மிதிபடும் தரையுள்ள வீடுகள்  இவையெல்லாம்  இன்றைக்குமிருக்கும்  இதே இந்தியாவில்,  நானும், கதவைபூட்டிவிட்டு, இரவுடையை அணிந்துகொண்டு , குளியலறை இணைந்த படுக்கையறையில் கொசுவலைக்குள் பாதுகாப்பாக உறங்குவதும் , அனைத்து வசதிகளுடனான வாழ்வை வாழ்வதும் குற்ற உணர்வைத்தருகின்றது

ஜெயமோகன் சென்றிருந்த இத்தனை ஊர்களில் நாக்பூருக்கும் காசிக்கும் மட்டுமே நான் சென்றிருக்கிறேன்

ஆராய்சி மாணவியாக இருந்த போது, நாக்பூருக்கு ஒரு கருத்தரங்கின் பொருட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தது போல குளிர்ந்த ரயில் பெட்டியில் நடுங்கிக்கொண்டே சென்று, ஸ்ரீகுந்த் எனப்படும் அங்கு மட்டுமே கிடைக்கும் எனச்சொல்லப்பட்ட ஒரு இனிப்பையும்,  ஆரஞ்சுகளையும் சுவைத்திருக்கிறேன். அங்கு விளையும் ஒரு குட்டி ஆரஞ்சுப்பழத்தின் சாகுபடி நுட்பங்களை அங்கேயெ சிலகாலம் தங்கியிருந்து தெரிந்துகொண்டு வந்த என் உறவினர் ஒருவர் அதை இங்கு அவர்   தோட்டத்தில்  வெற்றிகரமாக விளைவித்தார்

7ஆம் வகுப்பிலோ 8ஆம் வகுப்பிலோ படித்துக்கொண்டிருக்கும் போது  தலைமை ஆசிரியராக இருந்த அம்மா பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கையில் குடும்பத்தினர் இலவசமாக உடன்  பயணிக்கலாமென்னும் வசதியினால் நானும் அக்காவும் அவர்களுடன் காசிக்கு சென்றிருந்தோம். ஜெ விவரித்திருந்த எதுவுமே எனக்கு பார்த்ததாக நினைவிலில்லை எல்லா இடங்களையும் போலவே அங்கும்  சந்தடியும் நெரிசலுமாயிருந்தது. மறக்க முடியாத ஒன்றென்றால் எங்கோ, ஒரு அகல அகலமான படிக்கட்டில் வரிசையாக  உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு , ஒரு பச்சைப்புடவையை வித்தியாசமாக கட்டிக்கொண்டிருந்த, நெற்றியில் பெரியவட்டமாக குங்குமம் வைத்திருந்த, வெள்ளை வெளேரென்ற ஒரு அம்மாள் தங்கம் போல பளபளத்த ஒரு தூக்குச்சட்டியில் பிசைந்த தயிர்சாப்பாட்டையும் அவருக்கு பின்னால் ஒரு மாமா  எவர்சில்வர் பாத்திரத்தில் ஜிலேபியுமாக  கொடுத்துக்கொண்டே வந்தார்கள். என்னால நம்பமுடியாதபடிக்கு அதில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள், எட்டி பாத்திரத்தில்  என்ன இருக்கிறதென்று பார்த்துவிட்டு  வேண்டாமென்று  மறுத்துவிட்டார்கள்’

அப்போது  நாங்கள் மிக வறுமையிலிருந்தோம். வயிறு நிறைய சாப்பிட்ட நினைவே இல்லாத காலமது .  அந்த தயிர்சோற்றையும் இனிப்பையும் அவர்கள் மறுத்தது எனக்கு பெரும் துக்கமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இப்போதும் அது ஏனென்று எனக்கு புரியவில்லை. அதற்கு முந்தைய கணம் வரைபுதிய இடம் அளித்த அச்சத்தினால், கூட்டத்தில் தொலைந்துவிடுவேன்னும் பயத்தில் யாராவது ஒருத்தரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டே வந்த நான், அதற்கப்புறம் தொலைந்து போகவேண்டுமென்று விரும்பினேன். என்னை கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரும் திரும்பிப்போன பின்னால், அங்கே பிச்சைக்காரியாக இருந்து சோற்றை வேண்டாமெனச்சொல்லாமல் அள்ளி அள்ளி உண்பதை கற்பனை செய்துகொண்டேயிருந்தேன். ஆனால் பத்திரமாக அதே பழைய வாழ்க்கைக்கு என்னை திரும்பக்கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

காசி என்றால் இது மட்டுமே இன்னும் நினைவிலிருக்கிறது.

நிச்சயம் இந்த  எல்லா ஊர்களுக்கும் இதே வரிசைப்படி மகன்களுடன் கூடிய விரைவில் செல்லப்போகிறேன் இப்படி இதை  முன்கூட்டியே சொல்லிக்கொள்வது ஒருவிததில் புறப்பட   உந்துசக்தியாகவும் இருக்கும்

ஜெ மிகச்சமீபத்தில் சொல்லியிருப்பது போல ‘’பயணம் ஒரு தெய்வம், அதை உபாசிப்பவர்களுக்கே அது அமையும்’’ நானும் உபாசித்துக்கொண்டுதானிருக்கிறென். அருளப்பட காத்திருக்கிறேன்

பாவக்கதைகள்

வைரஸ் தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இணையவெளியில் படங்கள் நேரடியாக ஒளிபரப்பாகும் இக்காலத்தில், இப்போது  அனைத்து இந்திய மொழிகளிலும் மிகப்பிரபலமாயிருக்கிற தொகுப்புக் கதைகள் அல்லது குறும்படங்களின் திரட்டு (anthology  movie)   என்னும் வகையில் இன்னொரு புதுவரவு நான்கு குறும்படங்களின் தொகுப்பான பாவக்கதைகள் சுதா கோங்குரா, கெளதம் வாசுதேவ மேனன், வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் இயக்கத்தில்  உறவுகளின் சிக்கலை அடிப்படையாகக்கொண்ட நான்கு கதைகளை சொல்லும் இப்படம் 2020 , டிசமப்ர் 18ல்  நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியானது

காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ், அஞ்சலி, சிம்ரன், கெளதம் வாசுதேவ மேனன், கல்கி கோச்லின், ஜாஃபர் ஷாதிக், ப்ரகாஷ்ராஜ் ,சாய் பல்லவி மற்றும் சிலர் முக்கிய கதாபத்திரங்களில் .

 முதல் படமான ’’தங்கம்’’ சுதாவின் இயக்கத்தில், சாந்தனுவும் காளிதாஸூம் முக்கிய பாத்திரமேற்றிருக்கின்றனர்

இரண்டாவது ’லவ் பண்ணா வுட்ரனும்’ அஞ்சலி இரட்டைவேடத்தில், கமலாகோச்லினுடன், இயக்கம் விக்னேஷ் சிவன்

மூன்றாவது கெளதம் மேனனின் ‘வான் மகள்’ சிம்ரனுடன் கெளதம் மேனனும் முக்கிய பாத்திரத்தில் வருகிறார்

நான்காவது வெற்றிமாறனின் ‘ஓரிரவு’” சாய்பல்லவி, பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரங்களில்

மூன்று படங்களில் கெளரவக்கொலை நடக்கின்றது வான் மகளில் மட்டும் கெளரவக்கொலையைக்குறித்து கற்பனை மட்டும் செய்கிறார்கள் நல்லவேளையாக, நிச்சயமாக நான்கு கதைகளுமே பார்வையளர்களை தொந்தரவு செய்கின்றன. அதிலும் மிக மிக மனக்கலக்கம் உண்டுபண்ணுகிறது’’ ஓர் இரவு’’ இது  உண்மைக்கதையும் கூட

கல்கிகோச்லின் இதில் தமிழில் சொந்தக்குரலில் பேசுகிறார் அதுவும் மிகமோசமான பாலியல்தொடர்பான வசவுகளை சரளமாக பேசுகிறார்.

சத்தாரும் சரவணன் என்னும் தங்கமும் சத்தாரின் தங்கையும்

’’தங்கம்’’ 80’களில் நடக்கும் ஒரு முக்கோண காதலைச்சொல்லுகிறது.  ஆண்-பெண் முக்கோணக்காதலுக்கு மாறாக இதில் ஆண்-ஆணிலி-பெண் என்னும் புதிய முக்கோணம். சத்தாரென்னும் இடைப்பாலினத்தவராக மிகச் சிறப்பாக காளிதாஸ். அவர் விரும்பும் தங்கமாக சாந்தனு, சாந்தனு சத்தாரின் தங்கையை விரும்புகிறார். சத்தார் ஆணுமல்ல பெண்ணுமல்ல தோற்றத்தில் ஆனால் மனதில் தன்னை பெண்ணாகவே பாவிக்கிறார் எனவே தங்கத்தை, (சாந்தனுவை) விரும்புகிறார். ஆனால் தங்கமோ சத்தாரின் தங்கையை காதலிக்கிறார். உண்மை தெரிந்து காதலர்களை சேர்த்துவைத்துவிட்டு சத்தார் உயிரைவிடுகிறார்.

சத்தார் தன்னை   சிலர் துரத்துகையில் வீடு வீடாக சென்று கதவைத்தட்டி கெஞ்சிக்கதறுவதெல்லாம்  ஆந்திர நெடி அடிக்கும் காட்சிகள்.  பொதுவாகவே தெலுங்குத்திரைப்படங்களில் லாஜிக் என ஏதும் இருந்தால் அதை சல்லடையிட்டு தேடி க் கண்டுபிடித்து அதன் மென்னியை திருகி கொன்று குழிதோண்டி புதைத்து விட்டே கிளைமேக்ஸ் காட்சிகளை அமைப்பார்கள். இதிலும் அப்படியே! எப்பவோ செத்துப்போன சத்தாரின் கைப்பையும் அதனுள்ளிருக்கும் சாந்தனு கொடுத்த பரிசான உதட்டுச்சாயமும் அப்போது ஊருக்கு வரும் சாந்தனுவின் கண்ணில்படவேண்டி ஆற்றில் காத்திருக்கிறது.

காளிதாஸ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். சாந்தனுவும் இதில் பாத்திரத்துக்கு பொருந்தி நடித்திருக்கிறார். இதில்தான் பழைய பாக்கியராஜின் சாயல் அங்கங்கே தென்படுகின்றது சாந்தனுவின் உடல்மொழியில் . இரண்டு வாரிசுகளை ஒன்றாக திரையில் பார்ப்பது அதுவும்  நன்றாக நடிப்பதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது கதை 80களில் நடப்பதாக காட்டுகிறார்கள் 80களில் வெளிவந்திருக்கவேண்டிய கதையும் கூட.

கல்கி கோச்லினும் அஞ்சலியும்

’’லவ் பண்ணா வுட்ரனும்’’, அஞ்சலி இரட்டைவேடங்களில் முதல்காட்சியிலேயே மிகச்சிக்கன உடையில் தாராளமாக ஏராளமாக வருகிறார். ஆதிலட்சுமிஅஞ்சலி வீட்டு கார் ஓட்டுநரைக் காதலித்து கெளரவக்கொலை செய்யப்படுகின்றார். அக்கா உயிரழந்த அதே நாளில் தங்கை ஜோதிலட்சுமிஅஞ்சலியும் தன் காதலைச்சொல்ல வீட்டுக்கு வருகிறார் கல்கி கோச்லின் அஞ்சலியின் தோழி. இவர்களிருவருக்கும் ஒருபால் உறவு இருப்பதுபோல துவக்கத்திலிருந்து கதையை கொண்டுபோய் இறுதியில் உண்மை என்னவென்று போட்டு உடைக்கிறர்களாம். இன்னும் கொஞ்சம் கவனமாக துவக்க காட்சியின் வசனங்களை கட்டமைத்திருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கும்  அப்படியேதான் கதையை காட்டுகிறார்கள் துவக்கத்தில். நரிக்குட்டியாக ஜாஃபர் ஷாதிக் பிரமாதமான, இயல்பான நடிப்பு அதிலும் அவரது கார்வையான குரல் மிகச்சிறப்பு. இனி கவனிக்கப்படுவார், கவனிக்கப்படவேண்டும்.  காதலனான கார் ஓட்டுநரின் குரலும் அப்படியே, கம்பீரம்

ஜாதி அடிப்படையில் நடக்கும் கெளரவக்கொலையை சொல்லும் படம்தான் இதுவும். இடையிடையே கதாபாத்திரங்கள் அத்தனை முக்கிய நிகழ்வுகள்,  வன்முறைகள் சுற்றிலும் நடக்கையில் சிரித்துக் கொண்டிருப்பது எரிச்சலூட்டுகிறது. அப்பா பாத்திரத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர் அந்த பாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை. ’’தங்கத்தி’’ல் பெண்களின் அறையில் உறங்கியதற்காக் ஆவேசமாக மகன் சத்தாரை எட்டிஎட்டி உதைக்கும் அந்த அப்பாவின் ஆக்ரோஷம் இவருக்குமல்லவா இருப்பதாக காட்டியிருக்கனும்?

இறுதிக்காட்சியில் சொந்தச்சகோதரியை ஈவிரக்கமின்றி கொலைசெய்த அப்பாவிடம், அஞ்சலி எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் பள்ளிக்குழந்தைகள் மனப்பாடச்செய்யுளை ஒப்புவிப்பதுபோல பேசும் மொக்கை வசனங்களும் அப்படியேதான், கதையின் மையஒட்டத்துடன்  பொருந்தாமல் இருக்கிறது

வான்மகளில் பருவம் வந்திராத சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்படும் பாவத்தை சொல்லுகின்றார்கள் .சிம்ரன் இத்தனை தளர்ந்துவிட்டரா?

கெளதம் வாசுதேவ மேனன் சிம்ரனின் கணவராக இரு பெண்குழந்தைகளுக்கு தகப்பனாக வருகிறார். மனைவியுடன் காதல்மொழி பேசுகையிலும், மகள்களுடன் பாசமொழி பேசுகையிலும் ஒருபெரும் பிரச்சனைக்குப் பின்னர் மனமுடைந்து துயரமொழி பேசுகையிலும் சரி ஒரே மாதிரியான  கூர்ந்த முகபாவத்துடன் ’’ ஹார்பர்லருந்து இன்னிக்கு பொருளை எப்படியும் தூக்கிறனும்’’  என்று கள்ளக்கடத்தல் கும்பலின் தலைவன் பேசுவதைப்போலவோ அல்லது கையும் களவுமாக பிடிபட்ட குற்றவாளியை அணுகும் காவலதிகாரியை போலவோதான்  படம்முழுக்க வருகிறார், பார்க்கிறார் பேசுகிறார்.

நல்ல கதை நல்ல காட்சியமைப்புக்கள்,  நல்ல கதைக்களம். அந்த கற்பனைக் கொலைக்காட்சியை தவிர்த்திருக்கலாம். தலைப்பில் பாவம் இருப்பதால் வலிய சேர்த்திருக்கிறார்களோ என்னவோ! இதை நேர்மறையான ஒரு கதையாகவே கொண்டு போயிருக்கலாம்

வெற்றிமாறனின் ’’ஒரிரவை’’மனதை கல்லாக்கிக்கொண்டுதான் பார்க்கவேண்டும் கொலைவெறியுடன் எடுத்திருக்கிறார். திரையில் பார்க்கையிலேயே இப்படியென்றால் இது உண்மையில் நடந்திருப்பதை நினைக்கையில் துக்கம் தாளமுடியவில்லை தணிக்கைசெய்தே வெளியிட்டிருக்கவேண்டும் என்று நினைக்கவைத்த பெரும் மானசீக அவஸ்தையை கொடுக்கும் காட்சிகள் பல.

அந்த இரவில்!

சாய்பல்லவி அழகு நன்றாக நடித்திருக்கிறார் உண்மையிலேயே கர்ப்பிணியை போல் ஒப்பனைவேறு

கதையை மிகவும் இளகின மனசுள்ளவர்கள் பார்க்காமலிருப்பதே உத்தமம். வாழ்நாளில் மறக்கமுடியாத திரைக்கதை. இப்படி ஜாதிவெறி பிடித்தவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு மோசமான முன்னுதாரணமாக  ஆகிவிடக்கூடாதே என்னும் பதைபதைப்பும் சேர்ந்துகொண்டது பார்க்கையிலேயே

பிரகாஷ்ராஜ் வழக்கம்போல மிரட்டுகிறார் நடிப்பில். இந்த பாத்திரமெல்லாம் அவருக்கு தண்ணீர்பட்ட பாடு

வெளியுலகின் குரூரங்களிலிருந்து தப்பி பாதுகாப்பாக குடும்பமென்னும் சிறகினுள் வந்து அடைந்துகொள்ளுதல் என்னும் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் கதைகள் இவை. தற்போதைய இந்தியாவின் இன்னொரு முகத்தை அப்பட்டமாக காட்டும் கதைகளும் கூட.

வெனிலா (Vanilla)

வெனிலா (Vanilla) என்பது மெக்ஸிகோவை பிறப்பிடமாகக் கொண்ட வெனிலா ஆர்க்கிட்களிடமிருந்து பெறப்படும்  வாசனைப்பொருள். வெனிலா என்றவார்த்தை ஸ்பானிஷ் வார்த்தையான, சிறுநெற்று (small pod)  என்பதிலிருந்து பெறப்பட்டது 

உலகளவில் வெனிலா பிளானிஃபோலியா;  (Vanilla  planifolia). வெனிலா டாஹிடென்ஸிஸ் , (Vanilla tahitensis, )  மற்றும் வெனிலா பம்போனா (Vanilla pompona,), ஆகிய மூன்று முக்கியமான இனங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் வெனிலா பிளானிஃபோலியா அதிகம்பயிரிடப்படுகின்றது .இச்செடி1808.ல் அறிவியல் பெயரிடப்பட்டது.

கொடியாக வளரும் வெனிலா, ஏதேனும் ஒருமரம், அல்லது பிற ஆதாரங்களில் சதைப்பற்றுள்ள வேர்களால் பற்றிக்கொண்டு மாற்றடுக்கில் அமைந்திருக்கும் தடிமனான அடர்பச்சைஇலைகளுடன் 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.ஒற்றை மலர்க்கொத்தில் 100 வரை பெரிய அழகிய வெள்ளை மற்றும் பச்சை கலந்த நிறத்தில் மலர்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

நீண்ட சதைப்பற்றுள்ள 10-20 செமீநீளமுள்ள, நறுமணம் உள்ள காய்கள் சிறிய விதைகளைக்கொண்டிருக்கும். பூக்கள் ஆண் (மகரந்தப்பை) மற்றும்பெண் (மலர்சூலகம்) ஆகிய இரண்டு இனப்பெருக்கஉறுப்புகளையுமே கொண்டிருக்கின்றன; இருப்பினும் சுய-மகரந்த சேர்க்கையைத் தவிர்க்க ஒருசவ்வு இந்த இரண்டு உறுப்புகளையும் பிரித்து வைக்கிறது. வெனிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத்தொடங்கும். மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் காய்கள் உருவாகி அவைபச்சை நிறத்திலிருந்து இளமஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில்அறுவடைசெய்யப்படும்.

வெனிலாபயிர்களில் மெலிபோன் தேனியால் நடைபெறுவதை தவிர சுயமகரந்த சேர்க்கை நடைபெற 1% வாய்ப்பே உள்ளதால் 1836 ஆம்ஆண்டு, தாவரவியலாளரான சார்லஸ்பிரான்கஸ் மோரன் கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்வதை பரிசோதிக்கத்தொடங்கினார்.   1841 ஆம் ஆண்டு, கையால் மகரந்தச்சேர்க்கை செய்யும் எளிய முறைஒன்று  12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்ற அடிமையால் உருவாக்கப்பட்டது.

ஒரு ஆரோக்கியமான கொடி வருடத்திற்கு 50 முதல் 100 காய்கள் வரை உற்பத்திசெய்கிறது; அறுவடைக்கு பிறகு கொடி மீண்டும் 12 முதல் 14 ஆண்டுகளுக்கு  உற்பத்தித்திறன்  உள்ளதாக இருக்கிறது.

இதனுடைய வர்த்தகமதிப்பு காய்களின் நீளத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றது.  15 செமீ நீளத்திற்கும் அதிகமாக இருந்தால் இது முதல்தரவகையிலும். 10 முதல் 15 செமீ நீளமாக இருந்தால்   இரண்டாவது  தரமாகவும் 10 செமீக்கும் குறைவானவை மூன்றாவது தரத்தின் கீழும் வருகின்றன.

சாகுபடி செய்யப்பட்ட பச்சைக்காய்கள் அப்படியே  விற்கப்படலாம் அல்லது சிறந்த சந்தைவிலையை பெறுவதற்கு   உலரவைக்கப்படலாம். வெனிலா பச்சைக்காய்களின் விலை கிலோ ரூ 3500. இதுவே பதப்படுத்தப்பட்டால், கிலோ ரூ 22,500.

வெனிலாவை உலரவைப்பதற்கு சந்தையில் நான்கு அடிப்படை நிலைகள் இருக்கின்றன: அழித்தல், வியர்ப்பூட்டுதல், மெதுவாக-உலரவைத்தல் மற்றும்  தகுந்தமுறையில் பாதுகாத்தல். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கள் சேமிக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்டு, பாரஃபின் உறையில் கட்டாக  சுற்றி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உலரவைக்கப்பட்ட வெனிலாகாய்கள் சராசரியாக 2.5%  வென்னிலினைக் கொண்டிருக்கிறது.

வெனிலாக்காய்கள்..பிரத்யேகவாசனையுள்ள மூலப்பொருள்கள் நிறைந்தது. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் (4-ஹைட்ராக்ஸி-3-மெத்தாக்ஸிபென்ஸல்டெஹைட்) இதன் வாசனைப்பண்பு மற்றும் நறுமணத்திற்கு காரணமாகிறது. வென்னிலின் முதல்முறையாக 1858 ஆம் ஆண்டு கோப்லே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. 

மற்றொரு சிறிய துணைப்பொருளான பைபரானல் (ஹெலியோடிராபின்).உள்ளிட்ட   பலஉட்பொருட்கள் வெனிலாவின் வாசனைக்கு காரணமாகின்றன.

உலகச்சந்தையில் குங்குமப்பூவிற்கு அடுத்த இடத்திலிருக்கும் வெனிலா, உணவுவகைகளிலும், அழகுசாதன தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெனிலாவின் உலகளாவிய உற்பத்தியில் பாதியளவிற்கு. மடகாஸ்கரிலிருந்தே வருகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.  

வெனிலாவின் அத்தியாவசிய எண்ணைகள் மற்றும் வென்னிலின் ஆகியவை தற்போது நறுமணசிகிச்சையிலும் (Aroma therapy) பயன்படுத்தப்படுகின்றன.

நள்ளிருள் நாறி

நள்ளிருள் நாறி / பிரம்ம கமலம் Epiphyllum oxypetalum

பிரம்மகமலம் நள்ளிருள் நாறி, இரவு ராணி, நிஷாகந்தி, குலேபகாவலி மலர், நள்ளிருள் ஒளிரி, அனந்த சயன மலர் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அரிய அழகு மலர்ச்செடி கள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தது. (Cactaceae)

இதற்கு Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman’s Pipe. King of the Himalayan Flowers,  Queen of the Night,  Orchid cactus,  என்னும் ஆங்கிலப் பொதுபெயர்களும் உள்ளன.  இதன் அறிவியல் பெயரான Epiphyllum oxypetalum  என்பதில்  epi, phylum என்றால் இலையில் மேற்பரப்பிலிருந்து என்றும்  oxus என்றால் கூரிய,  petalum என்றால் இதழ்கள் என்றும் பொருள், இலைகளின் மேற்பரப்பிலிருந்து உண்டாகும் கூரிய நுனிகளையுடைய  இதழ்களுடனான மலர்களைக் கொடுக்கும் தாவரம் என்று பொருள்

உண்மையில் இவை இலைகளிலிருந்து மலர்களை தோற்றுவிப்பதில்லை. கள்ளி இனமாதலால் தண்டுகளே தட்டையாக இலைகளைப்போல இருக்கும். இந்த இலைத்தண்டிலிருந்தே மலர்கள் உருவாகும். வழவழப்பான, கொடியைப்போல இருக்கும் இவற்றை தாங்கும் இளம் காம்புகள் சிவப்புநிற செதில் போன்ற அமைப்புக்களால் சூழப்பட்டிருக்கும் எனவே பார்ப்பதற்கு தொப்புள் கொடியைப் போலவே இருக்கும். எனவேதான் இது பிரம்மகமலம் என்று இந்தியாவின் பல மொழிகளில் அழைக்கப்படுகின்றது, பிற பூக்களைப்போல, பகலில் பூத்து, இரவில் உதிர்ந்து விடாமல். பிரம்ம கமலம், இரவில் பூத்து, பகலில் உதிரும். 

வெண்ணிறத்தில் மயக்கும் நறுமணத்துடன் பெருமலர்கள் பின்னிரவில் மலரும்.  ஒரே செடியில் ஒரே சமயத்தில்  40 -100’ க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களைப்போலல்லாது, இவற்றின்   இலைகளைப் போலிருக்கும் தண்டுகளை நறுக்கி நட்டு வைத்தாலே புதியசெடி முளைத்துவிடும்.  இந்த மலர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இவை  இரவில் மலர்வதனால் நிலவொளியில் இவற்றை   வௌவால்களும், Humming bird moth எனப் பெயர் கொண்ட பெரும் அந்திப்பூச்சிகளும்  (moths) தான் மகரந்தச்சேர்க்கை செய்யும். இரவின் நிலவு, நட்சத்திரம் ஆகியவற்றின் மிகக்குறைந்த ஒளியிலும் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு உயிரினங்களுக்கு இவற்றின் இருப்பு தெரியவேண்டுமென்றே இவை வெண்ணிறத்திலும். நல்ல வாசனையுடனும் இருக்கின்றன.  இப்படி இரவில் மலர்ந்து இரவாடிகள் எனப்படும் (nocturnals ) இரவில் மட்டும் செயலாற்றும் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை செய்யpபடும் மலர்கள் அனைத்திற்கும் பொதுவாக நிலவு மலர்களென்று பெயர்.( moon light flowers ) இந்தப் பூவின் நறுமணத்திற்கு காரணம் இதிலிருக்கும் , Benzyl Salicylate என்னும் வேதிப் பொருள்.

2லிருந்து 3 மீட்டர் உயரம் வரையே இவை வளரும் அதிகம் வளர்கையில் இலைத்தண்டுகளை வெட்டி எடுத்து வேறு புதிய இடங்களில் நட்டு வளர்க்கலாம்.. இச்செடி வளர்ந்து 3 வருடங்களில் 12லிருந்து 17 செமீ அளவிலிருக்கும், மெழுகுபோன்ற வழவழப்பான இதழ்கள் கொண்ட மலர்களை அளிக்கத்துவங்கும்

 சமூக ஊடகங்களில் சொல்லப்படும்  //இது  இமய மலைகளில் மட்டும் வளரும். பத்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வளரும் என்பதெல்லாம் கட்டுக்கதைகள்// இமயத்தில் மட்டுமல்ல , எங்கும் வளரும் இயல்புடையது இச்செடி ,

  தென் அமெரிக்காவின் மெக்ஸிகோ காடுகளைக் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், அங்கிருந்து உலகமெங்கும் பரவியுள்ளது. நல்ல வளமான மண்ணில் அதிகம் சூரியஒளி படாதவாறு அருகில் இவை பற்றிப்படர கொழுகொம்போ அல்லது மரமோ இருக்குமிடங்களில் வளர்க்கலாம் மரங்களினடியில் வளருகையில்  விரைவாக அவற்றைப் பற்றிக்கொண்டு ஏறி வளரும். மிக அதிகமாக நீர் விடத் தேவையில்லை

இரவின் மலர் என பொருள்படும் இந்த நிஷாகந்தி மலையாள இலக்கியங்களில் சிறப்பான இடம்பெற்றிருக்கின்றது. கேரளத்தில், ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு    ‘நிஷாகந்தி விழா’ என்றே பெயர்.

பின்னிரவில் மலர்ந்து நல்ல மணம் வீசும் இம்மலர் பழந்தமிழ்ப் பாடல்களில் நள்ளிருள் நாறி என்று அழகிய பெயரில் குறிப்பிடபட்டுள்ளது.  இருவாட்சி மற்றும் முல்லையும் இதே பெயரில் சில இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனினும் இவையிரண்டும் பகலில் மலர்ந்து மாலை மணம் வீசுபவை. பிரம்மகமலமே இரவில் மலர்ந்து மணம்பரப்பும் எனவே இதற்குத்தான் இப்பெயர் மிகபொருத்தமாந்தாக இருக்கும்.


 Epiphyllum  பேரினத்தில் 15 சிற்றினங்கள் இருப்பினும் oxypetalum என்னும் சிற்றினமே உலகெங்கிலும் அதிகம் வளர்ககப்படுகின்றது. இலங்கையில் இதன் இரண்டு சிற்றினங்கள் வளர்கின்றன பிரமம்கமலத்தை விட மெல்லிய மலரிதழ்களை கொண்டிருக்கும்  Epiphyllum hookeri யும் இங்கு அதிகம் காணப்படுகின்றது

பிரம்மகமல மலர்கள் சில உடல் நோய்களுக்கு சிகிச்சைக்காக  உண்ணப்படுகின்றன. ஆனால் வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள மலராதலால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இவற்றை உண்ணுதல் கூடாது

 வியட்நாமில் இம்மலரிதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு மருந்தை பாலுணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலும் இம்மலர் பெண் மலட்டுத்தன்மையை நீக்க பழங்குடியினரால் உண்ணப்படுகின்றது. இதயநோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ரத்தக் கொழுப்பை குறைக்கவும் இம்மலர் பயன்படுகின்றது

  மிக மிக அரிதாகவே இச்செடியில் சிறு விதைகளுடனிருக்கும் இளஞ்சிவப்பு கனிகள் உருவாகும். கலப்பின செடிகளில் நிஷாகந்தி மலர்கள் வெள்ளயல்லாத ஆரஞ்சு மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு  நிறங்களிலும்   இருக்கின்றன.

பல கலாச்சாரங்களில் இம்மலரை காண்பது நல்ல சகுனமென்றும், மலரைக் காண்கையில் நினைத்தது நடக்குமென்றும், இந்தச்செடி மலர்வது,  நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் கருதப்படுகின்றது சில தென்தமிழக கிராமங்களில் இச்செடியில் மலர் விரியும் இரவில் அதற்கென பூசைகள் கூட செய்யப்படுவதுண்டு.  சிலர் தங்கள் வீடுகளில் இம்மலர் பின்னிரவில் மலருகையில் நண்பர்களுக்கு விருந்துவைத்து மகிழ்வதும் உண்டு.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏசு பிறந்தபோது அவரைக்காண வந்த மூன்று அரசர்களுக்கு வழிகாட்டிய நட்சத்திரங்களின் குறியீடாக  இம்மலரை கருதி இதை பெத்லகேமின் நட்சத்திரம் என்று அழைக்கின்றனர்.

இலங்கை இந்தியா சீனா ஜப்பான் ஆகிய பலநாடுகளின் தொன்மங்களில் இம்மலர் பலவிதங்களில் இறைத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இலங்கையில் புத்தருக்கு அஞ்சலி செலுத்த விண்ணுலகினர் மண்ணுலகுக்கு வரும் மலரின் வடிவமாக கருதப்படும் இது சொர்க்க மலர் என்று அழைக்கப்படுகிறது.   

சீனாவில் இம்மலர்களை பற்றிய குறிப்புக்கள் 1645ல் எழுதப்பட்ட நூல்களில் உள்ளது. சீனாவில் இது தோன்றியதும் மறைந்துவிடும் புகழின் நிலையாமைக்கு குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. ஜப்பானில் இம்மலரை  கெக்கா பிஜின் அதாவது நிலவில் காணும் அழகு என்று அழைக்கிறார்கள்.  (Gekka Bijin)

 பொதுவாக இதை தாய் மகளுக்கும், நண்பர்கள் பிற  நண்பர்களுக்கும் பரிசாக அளித்து வளர்ப்பதென்றும் ஒரு வழக்கம் இருக்கிறது இச்செடிகளை விலைகொடுத்து வாங்கக்கூடாது யாரிடமேனும் பரிசாக வாங்கவேண்டும் என்னும் நம்பிக்கையும் உலகின் பலநாடுகளில் பொதுவாக இருக்கிறது.

உலகின் மிக விலையுயர்ந்த மலர்களில் இதுவும் ஒன்று சந்தைகளில் விற்கப்படாத மலரும் கூட.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் ஏன், எதற்கு, எப்படி நடத்தப்படுகின்றது என்பதையும் கும்பாபிஷேகத்தின் பின்னிருக்கும் அறிவியல் காரணங்களையும் இக்கட்டுரையில் காணலாம்.

வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயங்களில் யந்திரஸ்தாபனத்தில் தெய்வத் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட  பின்னர் ஆலயங்களுக்கு     குடமுழுக்கு தேவையாகின்றது. குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னரே அந்த ஆலயம் வழிபாட்டுத் தலமாகின்றது.  குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகத்திற்கான விதிகளை  வாமதேவர் என்னும் வடமொழி நூலாசிரியர்  தானெழுதிய வாமதேவ பத்தாதி’யில் சிவன் முருகனுக்கு சொன்னதாக விவரித்திருக்கிறார்

குடமுழுக்கு செய்ய நான்கு வகைகள் உள்ளன. அவை;

’ஆவர்த்தம்’ – புதிய கோவிலில் இறைவனின் திருவுருவத்தை அமைப்பது.

‘அனாவர்த்தம்’ – இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த கோவில்களை புதுப்பித்து, மறு பிரதிஷ்டை செய்வது.

‘புனராவர்த்தம்’ – காலத்தால் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து புனர் நிர்மாணம் செய்வது.

 ‘அந்தரிதம்’ – மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியைச் செய்வது.

குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், தெய்வத் திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வதுதான் கும்பங்களுக்கு புனித தீர்த்தங்களினால் முழுக்காட்டப்படும் குடமுழுக்கு அல்லது கும்பங்களுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம்.

ஆகம விதிப்படியும் சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும் கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்து ஊக்கப்படுத்த நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம்.  இதனை சைவர்கள் ‘மகா கும்பாபிஷேகம்’ என்றும் வைணவர்கள் ‘மகா சம்ப்ரோக்ஷணம்’ என்றும் அழைக்கிறார்கள்.

சிதிலம் அடைந்திருந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு கும்பாபி ஷேகம் செய்யப்பட்டால் அதை புனருத்தாரணம் என்பார்கள்!

கல்லினாலும், மண்ணினாலும், சுதையினாலும்,  மரத்தினாலும் உலோகங்களாலும் உருவாக்கப்பட்டவை தெய்வவிக்ரகங்களாகும். பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ விக்ரகங்களுக்கு ஆறு வகையான வாசங்கள், அதாவது இருப்புக்கள் மேற்கொள்ளப்படுதாக ஐதீகம். இவற்றில் நீரிலும் தான்யங்களிலும் மூழ்கவைக்கும் , ஜலவாசம், தானிய வாசம் என்பவை முதல் இரு நிலைகள். நவரத்தினங்கள் பயன்படுத்தப்படும் ரத்தின வாசம்  மூன்றாவது நிலை. பொற்காசுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தன வாசம் நான்காவதாகும். பலவகையான பட்டாடைகள் சிலைக்கு அணிவிக்கப்படும் வஸ்திர வாசம் ஐந்தாவதாகும். கடைசியாக, ஹம்சதூளிகா மஞ்சம் என்ற அன்னத்தின் சிறகுகளால் உருவான படுக்கை மேல் மான் தோல் அல்லது புலித்தோல் விரிக்கப்பட்டு, அதன் மீது  விக்ரகம் வைக்கப்படுவது ஆறாவதான சயன வாசமாகும்.

மேற்கண்ட ஆறு வாசமும் 48 நாட்கள் வைக்கப்படும் என்ற நிலையில், விக்ரகம் மொத்தம் 288 நாட்கள் பல நிலைகளை கடந்து பிரதிஷ்டைக்கு தயாராக இருக்கும். ஜல வாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குறைகள் தெரிந்து விடும். ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெறுகின்றன என்பது ஐதீகம்.

ஒரு சில இடங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு வாரம் அல்லது 12 நாட்கள் வரையில் புஷ்பாதி வாசம், அதாவது, பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை மூழ்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிலைக்கு வாசனை ஏற்படுத்துவதும் உண்டு. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு, கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக  சயனாதி வாசம் மூலம் விக்ரகத்தின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படும். அதன் பின்னர்,  கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைகளுக்குப் பிறகு தலைமை ஸ்தபதி தங்க ஊசி மூலம் சிலையின் கண்ணில் மெல்லிய கீறல் வரைவார். அதன் மூலம் கருவிழி திறக்கப்பட்டு, விக்ரகத்துக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷேகம் நடக்கும் ஆறுகாலம் அல்லது எட்டு காலம் யாகசாலையில் மந்திர உச்சாரணம் செய்யப்பட்டு, அதை ஈர்த்துக்கொண்ட புனித கலச நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்கள் மூலம் விக்ரகத்துக்கு தெய்வீகத்தன்மை அளிக்கப்படுகிறது.

ஸ்பரிசவாதி என்னும்  கடைசி வாசத்தில், கருவறையில் இருக்கும் பிரதான ஆச்சாரியார் மூலம் ஐதீக முறைப்படி விக்ரகத்தின் ஒன்பது துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு, ஆன்மிக சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அளிக்கப்பட்ட பின்னர், தொடர்ந்த இவ்வகையான் ஆன்மீக வழிகளில், விகரகம் முழுமையான கடவுளாக மாறுகிறது.  

இறைவன் தனது அகண்டாகாரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்ய அடியவர்களுக்கு இவ்வாறு முறையான ஆன்மீக வழிகளைக்காட்டியதால்தான், பிரபஞ்சமெங்கிலும் பரந்து விரிந்திருக்கிற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச் வைத்துக்கொள்ளும்  மூலஸ்தான  மூர்த்தியை வடிவமைப்பது எளிய மக்களான நமக்கு கைகூடிய காரியமாயிருக்கிறது.

மூல விக்ரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வார்கள். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வவிக்ரகங்களை பிரதிஷ்டை செய்யப்படும்.  பீடத்தின் மீது வைத்து, அந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற எட்டு விதமான பொருட்கள் கலந்த மருந்தின் சாந்து சாற்றப்படும்.

விக்ரஹ பிரதிஷ்டைக்கு முன்பு அஷ்டபந்தன சாந்தை பீடத்தில் சாற்றூதல்

 அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, ‘கொம்பரக்கு’, ‘சுக்கான் தூள்’, ‘குங்கிலியம்’, ‘கற்காவி’, ‘செம்பஞ்சு’, ‘சாதிலிங்கம்’, ‘தேன்மெழுகு’, ‘எருமை வெண்ணெய்’ ஆகிய எட்டுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த எட்டுப் பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு தக்கபடி இடித்து, குறிப்பிட்ட பதம் கொண்டதாக தயாரிக்கப்படும்.  இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.

அஷ்டபந்தன சாந்து இடித்தல்

இதன் பின்னர் முக்கியப் பீடத்தையும் துணைப் பீடத்தையும் இணைக்க திரிபந்தனம் என்னும் சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன்பழம் ஆகியவற்றை கலந்த சாந்தைச் சேர்ப்பார்கள்.  .இந்த அஷ்டபந்தன சாந்து  12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும், எனவே அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.


பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.

மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தில், கும்பம் – கடவுளின் உடலையும்,, கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் – 72,000 நாடி, நரம்புகளையும்,, கும்பத்தில் ஊற்றப்படும் நீர் – ரத்தத்தையும், அதனுள் போடப்படும் தங்கம் – ஜீவனையும், மேல் வைக்கப்படும் தேங்காய், தலையையும், பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.

இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன

கும்பாபிஷேக வழிமுறைகளும் கிரியைகளும்;

ஆவாஹனம்;  ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

கும்பம்; யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

பாலாலயம்; கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.

கிரியைகள்

கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல்  பின்வரும் முக்கியமான கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து  இபோது கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

  • ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்யும்,. அனுக்ஞை .
  • இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைக்கும் சங்கல்பம் .
  • பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்யும் பாத்திர பூஜை .
  • கணபதியை வழிபடும் கணபதி பூஜை .
  • வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடும் வருண பூஜை.
  • பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியையான பஞ்ச கவ்யம் .
  • தேவர்களை வழிபடும் வாஸ்து சாந்தி 
  • திக்பாலர்களை வணங்கும் பிரவேச பலி 
  • ஆலயம் நிர்மாணம் செய்கையில் கஷ்டப்படுத்திய பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடும் மிருத்சங்கிரஹணம் ..
  • எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்து , அதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களையும் ,சந்திரனையும் வழிபடும் அங்குரார்ப்பணம் 
  • ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டும் ரக்ஷாபந்தனம் .
  • கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்யும் கும்ப அலங்காரம்.
  • விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைக்கும் கலா கர்ஷ்ணம் .
  • கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வரும் யாகசாலை பிரவேசம் ..
  • யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடும் சூர்ய, சோம பூஜை .
  • யாகசாலையை பூஜை செய்யும் மண்டப பூஜை .
  • விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்யும் பிம்ப சுத்தி .
  • மிக முக்கியமானதான இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நாடி சந்தானம் .
  • 36 தத்துவத் தேவதைகளுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்யும் விசேஷ சந்தி 
  • பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைக்கும் பூத சுத்தி 
  • 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஸ்பர்ஷாஹுதி 
  • எட்டு பொருள்களால் மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்க்கும் அஷ்டபந்தனம்.
  • யாகத்தைப் பூர்த்தி செய்யும் பூர்ணாஹுதி .
  • யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம் .
  • கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்யும் மஹாபிஷேகம் 
  • இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்யும் மண்டலாபிஷேகம் .

இவற்றோடு யாக குண்டங்களை அமைக்கவும் நெறிகள் உள்ளன.

 ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.

 பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.

 நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.

உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

 யாக குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படும். கிடைக்காத பட்சத்தில் கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது  வெள்ளி, தங்க கிண்ணங்களையோ, தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னைகளையோ பயன்படுத்தலாம் .

யாகத்தில் ஆஹுதியை இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். யாக மரக்கரண்டியும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்களில் செய்யபட்டிருக்கவேண்டும் . யாகத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை யாக புகை  நீர் வடிவில் வெளியேற்றுகின்றது

யாக குண்டங்களும் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை;

விநாயகர் – பஞ்சகோணம்

முருகர் – ஷட்கோணம்

சிவன் – விருத்தம்

அம்மன் – யோணி

பரிவாரம் – சதுரம்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன முறை செய்ய வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை (ஒரு மாமாங்கம் = 12 வருடங்கள்) கும்பாபிஷேகம் செய்வது என்பதே மிகவும் விசேஷமானது.. அஷ்டபந்தனங்களின் சக்தியை மீண்டும் பெறுவதற்காக மட்டுமன்றி இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வதற்கான வேறு சில அறிவியல் ரீதியான காரணங்களையும் பார்க்கலாம்.

 பழங்காலக் கோயில்களில் இடிதாங்கிகள் என்று தனியாக ஒன்றும் கிடையாது.  இடிதாங்கியை பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 18 ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தார்.

இடி மின்னல்கள் கோபுரத்தைத் தாக்கும் போது கோபுரங்கள் இடிந்து விழ வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் நம் கோயில் கோபுரங்கள் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன. ஏனெனில்,  இடி மின்னல்களில் இருந்து கோபுரத்தையும் கோயிலையும் காக்க, கும்பங்களில் காற்றுப்புகாதபடி  நவதானியங்களை நிரப்பி வைத்து விடுவார்களாம். அப்படி வைக்கப்படும் கும்பமும் அதில் உள்ள தானியங்களும் இடி தாங்கியாக செயல்பட்டு இடி மின்னலை நீர்த்துப் போக வைத்து விடும் தன்மையை  பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே கொண்டிருக்கும்.. மீண்டும் கோயில் புனரமைப்பின் போது கும்பமும் உள்ளிக்கும் தானியங்களும் புதிதாக மாற்றப்படுவதால் இடி தாங்கியாக மீண்டும் அது செயல்பட ஆரம்பித்து விடும்.

உறைபனியினடியில் உலகின் மிக முக்கிய தாவரங்களின் விதைகளை சேமித்து வைத்திருக்கும் விதைவங்கிகள் உலகின் முக்கியமான இடங்களில் இருக்கின்றன. பேரழிவு எற்பட்டு உலகத்தின் மொத்த தாவரங்களும் அழிந்து போனாலும் மீண்டும் அனைத்தையும் பயிரிட்டு உருவாக்கிக் கொள்வதற்காகத்தான் இப்படி விதைகள் சேமித்து வைக்கப்படுகின்ற்ன. பழங்காலத்தில் இத்தைய விதை சேமிப்பு வங்கிகளாக இந்த கலச கும்பங்களே இருந்திருக்கின்றன. கும்பங்களின் உள்ளிருக்கும் (மூன்று முதல் ஐந்து கிலோ அளவுள்ள நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் அல்லது சில பகுதிகளில் ராகி,கம்பு,சோளம்,நெல், சாமை, திணை, தட்டைப்பயிறு, பாசிபயறு, துவரை)  தானிய விதைகள், 12 வருடங்களுக்கு முளைக்கும் திறனுடன் இருக்கும் பின்னர் அவை மீண்டும் புதிதாக மாற்றப்படும். இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு கோவில் இருக்கும்  இடத்தின் தாவரங்கள் அனைத்தும் அழிந்தாலும், அந்ந்ததக் கோவில்கள்  இருக்குமிடங்களில் மீண்டும் அவற்றை சாகுபடி செய்து மனித குலத்தை காக்கும் இறைவழியிலான ஏற்பாடே இந்த கும்பங்களில் தானியங்களை சேர்த்துவைக்கும் வழக்கமென்கிறது மற்றுமொரு  அறிவியல் காரணம்.

இப்படி ஆன்மிகக் காரணங்களோடு பல அறிவியல் காரணமும் கும்பாபிஷேகத்தின் பின்னணியில் உண்டு

 கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும்..  கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டும் அதே நன்மைகளைப் பெறலாம்.. ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது என்கிறது ஐதீகம்

வடதுருவத்திலிருக்கும் விதைப்பெட்டகம்

பெருமாள் முருகனின் கூளமாதாரி

கூளையன் என்னும் மாதாரிச்சிறுவன் பண்ணையக்காரரிடம் வருடக்கூலிக்கு விடப்படுகிறான். ஆடுகளை மேய்ப்பதும் சில்லறைவேலைகளை செய்வதும் பழையதை உண்பதும் வசவுகளை வாங்கிக்கொள்வதுமாக செல்லும் அவலவாழ்வுதான் எனினும் அவனுக்கும் அவனையொத்த அடிமைகளுடன் நட்பும் உறவுமாக ஒரு உலகிருக்கிறது. அவ்வுலகில் அவன் மகிழ்ந்திருக்கிறான். ஆடுகளுக்கு பெயரிட்டு அவைகளுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு அவைகளுடன் தாய்மொழியில் எப்போதும் பேசிக்கொண்டும் அதட்டிகொண்டும் இருக்கும் எளியவன் கூளையன்

அதிகாலையில் சாணம் அள்ளி, வாசல் பெருக்கி கைபடாமல் துணிசுற்றி மேல்சாதியினருக்கு பால் போசியை கொண்டு சென்று,  பட்டி நீக்கி ஆடுகளை மேய்க்கக்கொண்டு போவது தேங்காய்சிரட்டையில் காபிகுடிப்பது, வசவுகளையும் அடிகளையும் சராமாரியாக வாங்கிக்கொள்வதுமாய்  இருக்கும் கூளையன் என்னும் அறியாச்சிறுவனே கதைநாயகன்

சட்டியில்  கிழவனின் மலமும் மூத்திரமும் அள்ளும் நெடும்பன், சீக்குபண்ணயக்காரியின் கைக்குழந்தையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு  ஆடுமேய்க்க வரும் செவுடி,அவளின் நோயில் வெளுத்திருக்கும் தங்கை பொட்டி,  எருமைகளையும் மேய்க்கும் வவுறி, கள் தரும் மணி, பூச்சி  நாய், வெயில் மழை இரவு நிலவு மண்ணில் குழிபறித்து விளையாடும் பாண்டி, கிணற்று நீச்சல் பனம்பழம் புளியங்காய் பாறைச்சூட்டில் வறுத்த காடை முட்டைகள், இவர்களாலும் இவைகளாலும் ஆனது கூளையனின் உலகு

நாவல் முழுக்க பரந்துவிரிந்திருக்கும் மேட்டாங்காடும் பண்ணயக்காரர்களின் அழிச்சாட்டியமும்   மாதாரிகளின் அவலவாழ்வும்  விரிவாக அக்களத்திற்கேயான வாழ்வுமுறைகளின் விவரிப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது

மாட்டுக்கறி உண்னும்பொருட்டு  கூளையனுக்கு கிடைக்கும் ஒரு ராத்திரி விடுதலையை இன்னுமொரு நாள் அவனாக நீட்டிப்பது, கிழங்குப்பணத்தை அவனையே வைத்துக்கொள்ள பண்ணயக்காரர் சொல்லுவது இந்த இரண்டு இடங்களே  நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருவதாக இருக்கின்றது முழு நாவலிலும்

பண்ணையக்காரரின் அத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேளாதவன் போலவே இருக்கும் கூளையன் தேங்காய் திருடி எதிர்பாரா பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் கிணற்றில் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்படும் கூளையன் இறுதியில்  பன்ணையக்காரரின் மகன் செல்வத்தை கிணற்று நீரில் முக்கி கொல்வதில் முடிகின்றது கதை

விவசாயம் கூலிவாழ்க்கை, கிராமத்டு வாழ்வு, சாதி வேறூபாடுகள், ஆடுமாடு வளர்ப்பிலெல்லாம் பரிச்சயமுள்ளவர்களால் எளிதில் தொடரமுடியும் கதைஇது

அத்தைய வாழ்வில் அறிமுகம்கூட இல்லாதவர்களால் இந்நாவல் விரிக்கும் களத்தையும் விவரிக்கும் கதையையும் கற்பனையில் சித்தரித்துக்கொள்வது கடினமென்றே எனக்கு தோன்றுகிறது

 மைனாக்களை வேடிக்கை பார்ப்பது, மாட்டுக்கறி இரவிற்கு பிறகு தங்கைதம்பியை பிரிய மனமின்றி  தவிப்பது, பீடி குடித்துப்பழகுவது  ஆமரத்துக்கள் இறக்க கோவணத்தை அவிழ்த்துவிட்டு மரம்ஏறி அங்கிருந்து தெரியும் காட்டைப்பார்ப்பது  பனம்பழங்களை பொறுக்கி கிழங்குபோடுவது புளியம்பழம் உலுக்குவது இரவில் திருட்டுத்தனமாக பார்க்கும் தலைவர் படம் பட்டி ஆடு காணமால் போவது தேங்காய் திருடிமாட்டிக்கொள்வது என ஒரு மாதாரிச்சிறுவனின் வாழ்வை அப்படியே நம்மால் காணமுடியும்

கதையோட்டம் தொடர்ந்து சீராக இருப்பதில்லை சில சமயம் தேங்கி நிற்கிறது, சில சமயம் பீறீட்டு பாய்கிறது சில சமயம் வறண்டும் போகிறது

வளர்த்த வீரனின் கறியை திங்கமறுக்கும் கூளையன் நண்பனாகவும் இருந்து முள்ளுக்குத்தாமல் பழம் பொறுக்க செருப்பை தந்த, பட்டிக்காவலில் அப்பனுக்கு தெரியாமல் மச்சுக்குள் வந்து படுத்துக்கொள்ளச் சொன்ன,  கள்ளிறக்குகையில் துணை இருந்த, பள்ளிக்கூட கஷ்டத்தை கன்ணீருடன் பகிர்ந்துகொண்ட செல்வத்தை கிணற்று நீரில் அறியாமலும் தவிர்க்கமுடியாமலும் முக்கிக்கொல்வதுடன் முடியும் இக்கதை, வாசிக்கையில் பல இடங்களில்  காய்ந்த வயிற்றில் மிளகாய்கள் நீச்சம் போட்டு மிதக்கும் கம்மஞ்சோற்றுக்கரைசல்  இறங்குவது போல் குளுகுளுவென்றும் ஆங்கரமாய் அடிக்கும்வெயிலைப்போல கடுகடுவென்றும்  மாறி  மாறி கூளையனின் வாழ்வை சொல்கிறது, ஆசிரியரே சொல்லியிருப்பதுபோல் சொல்லாத பல கதைகளும் உள்ளது சொல்லப்பட்ட இக்கதையினுள்ளே

அற்றைத்திங்கள்

அற்றைத்திங்களில்  பெளர்ணமி கடந்து இரண்டு நாட்களான அந்நிலவு முதல் அத்தியாயத்திலிருந்து இறுதியான  23 ஆம் அத்தியாயம் வரைக்குமே  தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது., நாம் பயணிக்கையில் நம்மைத்தொடரும் நிலவு அவ்வப்போது கட்டிடங்களிலும் மரங்களிலும் மறைவது போல இங்கும் சில அத்தியாயங்களில் அது மறைந்தாலும் இறுதியில் மீண்டும்  குட்டைகளுக்குள் நீர்ப்பிம்பமாக வெளிவந்து விடுகின்றது.  காடுகள் அடர்ந்திருந்ததிற்கும்,அதனுள் பூர்வகுடியினர் மகிழ்ந்திருந்ததற்கும், நாகரீகம் என்னும் பெயரில் அத்தனைக்கும் ஆசைபட்டவர்களால் மெள்ள மெள்ள அவையெல்லாம் அழிந்துகொண்டிருப்பதற்கும், அனைத்திற்கும்  யுகங்களைக்கடந்த  மவுனசாட்சியாய் அந்நிலவு இருக்கிறது .  அட்டைப்படத்திலுமிருக்கிறது ஓர் பாலெனப்பொழியும் நிலவு கனிமங்கள் சுரண்டப்படுவதை மேலிருந்து பார்த்தபடி.  நினைத்திருக்குமாயிருக்கும் நல்ல வேளையாய்  தன்மேல் கால்பதித்த மனிதன் இன்னும் கரைத்தழிக்க வரவில்லையென்று     

நல்ல கதை , கதையென்று தட்டச்ச தயக்கமாயிருக்கிறது ஏனெனில் இதில் புனைவெதுவுமே இல்லை பெயர்களும் சில இடங்களும் வேண்டுமானால் புனையப்பட்டவையாயிருக்கலாம் மற்றவையெல்லாமே கசக்கும் உண்மையல்லவா? குடியிருக்கும் வீட்டின் கூரையை ஓட்டையிடும் நம் முட்டாள்தனத்தைப்பதிவுசெய்திருக்கும் புத்தகம் இது.

அழகாக கட்டமைக்கபட்டிருக்கிறது நாவல், புதிய யுகத்தைச்சேர்ந்த கொதிக்கும் குருதியுள்ள ஒரு இளைஞன் , ஒரு யுவதி, மிக மெல்லிய கோடாக சொல்லப்பட்டிருக்கும் அவர்களுக்கிடையேயான காதல், இணைந்து பணியாற்றும் சூழலில், அசாதாரண நிகழ்வுகளில்  அவர்களின் நெருக்கம் கூடுவது, பூர்வகுடியினரின் இயற்கையோடு இணைந்த வாழ்வும், அவ்வாழ்விற்கு  மெல்ல,மெல்ல ஆனால் மிக வலுவாக வந்துகொண்டிருக்கும் ஆபத்தும்,  அதிகாரதுஷ்பிரயோகமும், பிரபலங்களின் ஆதிக்கமும் வெளிநாட்டுச்சக்திகளின் பேராசையும், காடுகளும், பூர்வகுடியினரின் வாழ்வும் அழிவதற்கு காரணமாவதும், மனச்சாட்சியுள்ள சிலரின் கையாலாகாத எதிர்ப்புமாக கதை சொல்லப்படுகிறது.

 விளிம்பு நிலை மக்களின் தேவைகளை ஆதிக்கச்சக்தியினர்  வேலைவாய்ப்பாகவும் வெள்ளித்தட்டாகவும்  நிறைவேற்றி பதிலுக்கு வாழ்வாதாரங்களை விலைபேசுவதையும் புரியவைக்கும் கதையோட்டம். நேர்க்கோட்டில் கதையைச்சொல்லிச்செல்லாமல், குடும்பத்தை, அங்கிருப்பவர்களின் உணர்வுகளை ஆசாபாசங்களை, அக்கறையை,   அன்னியசக்திகளின் திட்டங்களை, மின்னஞ்சலும் கடிதங்களும் இன்றைய செய்திகளுமாய் இடையிடையே காட்டுவது , இப்படி  சொல்லவந்ததை தெளிவாக முன்கூட்டியே கட்டமைத்து பின்னர் அதற்கேற்ப  கதையைக்கொண்டுசென்றிருப்பது நல்ல உத்தி

பரணியின் அம்மா ஒரு typical  அம்மா மற்றும் மாமியார். அவரது பாத்திரம் மிக உயிர்ப்புடன் சித்தரிக்கபப்ட்டிருக்கிறது. கணவன் என்ற ஒற்றைப்பிம்மத்திற்குள் வாழ்வை அடக்கவேண்டியிருப்பது, அம்புலி என்னும் விளி தேய்ந்து தற்போது  பேச்சுக்கள் மொட்டையாக எழும்பி அடங்குவது, மிக, மரநிழலில் வாகனத்தை நிறுத்துவது, இருவரின் சம்பாஷணை போய்க்கொண்டே இருக்கையில் எழுத்தின் வடிவத்தை கொஞ்சம் போல மாற்றிக்கொடுத்ததிலேயே அது தொழிலாளர்களின் போராட்டமுழக்கமென்றும், தொழிலாளர்கள் சார்பாக பேசும் ஒருவரின் மனக்குமுறலென்றும் வாசிப்பவர்களுக்கு புரியும்படி எழுதி இருப்பது, அழகாக அத்தியாயங்களை முடிப்பது இப்படி பல நுண்ணிய,  அழகியவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்

மரங்களைக்கட்டித்தழுவிக்கொண்டு அவற்றை காப்பாற்றிய சிப்கோ இயக்கத்தையும், மணலில் புதையும் போராட்டத்தையும் கூட தொட்டுச்சென்றிருக்கிறது நாவல். BUFFER ZONE,  MONOCULTURE, காப்புக்காடுகள், புலிகளின் அழிவு, யானைகளின் வழித்தடம் இப்படி என் துறை தொடர்பான பலவறையும் வாசித்ததில் நான் அற்றைத்திங்களுக்கு இன்னும் நெருக்கமானேன். (நானும் பரணி நட்சத்திரமென்பதாலும் சிறுமியாயிருக்கையில் வந்த பிரைமரிகாம்ப்ளெக்ஸுமாய், என்னையும் கதையின் நாயகியாய் பாவித்துக்கொண்டதில்  இன்னும் கூடுதல் அணுக்கமும்  கிடைத்தது.) ):

தேனடைகளை கொஞ்சம் மிச்சம் வைக்கும் பூர்வகுடியினரின்  sustainbale harvesting  முறைகளை நானும் அவர்களுடன் இருக்கையில் கவனித்திருக்கிறேன். கிழங்குகளை அகழ்ந்தெடுக்கையில் 3ல் ஒரு பங்கு மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். கிழங்குகளிலிருந்தே இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற. டாப்ஸ்லிப்பின் 35 tribal settiment  களில்  பலவற்றில் நான் பல காலம் செலவழித்திருக்கிறேன்.

பெண்ணியம் தொடர்பான சில செய்திகளும் இதில் சொல்லி இருப்பது போலவே நடைமுறையில் இருப்பவைதான்.  மான்களின் கர்ப்ப காலத்தில் அவற்றை வேட்டையாட மறுக்கும் அவர்களின் இயற்கை சார்ந்த அறத்திற்கும் மதக்கலவரங்களின் போது மாற்று இனத்தைச்சேர்ந்த கர்ப்பிணியின் கருக்குழந்தையை கைவிட்டு எடுத்து வெளியே வீசிய  மனிதர்களின் வெறித்தனத்திற்கும் என்ன பிழையீடிருக்கிறது நம்மிடம்? காட்டுமிராண்டி என்னும்  சொல்லை வசையாக பயன்படுத்த தகுதியற்றவர்கள் நாம்

கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கில் ஒரு பயிற்சியின் பொருட்டு அடர்ந்த வனப்பகுதியிலிருந்த நாட்களில், அப்போது  காடு முழுவதும் பூத்திருந்த மூங்கில் பூக்களை, அது ஒரு அபூர்வ நிகழ்வென்பதால் என் மாணவர்களுக்கு காட்ட கொஞ்சம் எடுத்துச்செல்ல அனுமதி கேட்ட போது அங்கிருந்த பூர்வகுடியினைச்சேர்ந்த ஒரு இளைஞன் திட்டவட்டமாக மறுத்ததும், கீழே உதிர்ந்துகிடந்த சில மலர்க்கொத்துக்களை பெருமுயற்சியின் பேரில்  அங்கிருந்த என் ஆசிரியர் வாங்கித்தந்ததும் நினைவிற்கு வந்தது. அத்தனைக்கு அவர்கள் காடுகளை சொந்தமென்று நினைத்து வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இளைஞனின்  சின்னஞ்சிறிய 30/40 வீடுகளே இருக்கும் ஊரின் பெயர் கருவறை. எத்தனை பொருத்தமிது இல்லையா?

 இயற்கை அன்னையின் கருவறையிலேயே இன்னும் இருக்கும் படி அருளப்பட்டவர்களை விரட்டிவிட்டு கனிம வளக்கொள்ளையிலிறங்கியிருக்கும் பேராசைக்காரர்களின் கதையென்பதால் உணர்வுபூர்வமாகவே 2 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன் இதை.

ஒரு பகுதியில் குறிப்பிடிருந்ததைபோலவே பூர்வகுடியினர் என்றால் இலையாடைகளுடனிருப்பார்கள் என்று முதன் முதலாக என் ஆய்வினைத்துவங்கிய போது நினைத்துக்கொண்டு சோலையாறு வனப்பகுதிக்கு சில ஜெர்மானிய நண்பர்களுடன் காட்டில் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி புடவை கிழிந்து சோர்ந்து நாங்கள் அவர்களின் குடியிருப்பிற்குள் செல்கையில் அன்றைய தினம் அவர்களின் பண்டிகை என்பதால் மிக நேர்த்தியாக உடுத்திக்கொண்டு handbag  போட்டுக்கொண்டு நகச்சாயம் கூட பூசிக்கொண்டிருந்த அவர்கள் எங்களை பூர்வகுடியினரைப்போல வேடிக்கை பார்த்த கதையையும் நினைத்துக்கொண்டேன்Ecotourism போல இப்போது துவங்கப்பட்டு நல்ல லாபம் தந்துகொண்டிருக்கும் religious tourism  பற்றியும் ஆசிரியர் கலைச்செல்வி ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

வனத்துறை அதிகாரிகளே வனத்தை அழிக்க உடந்தையாயிருப்பதையும் பூர்வகுடியினரின் மொழியிலேயே சொல்லி இருப்பது சிறப்பு.வனத்துறையில் அதிகாரியாயிருக்கும் என் மாணவன் சொல்லுவான் காட்டுத்தீ பெரும்பாலும் அதிகாரிகள் ஏற்படுத்துவது என்று, மிக முக்கியமான விலைஉயர்ந்த மரங்களை வெட்டி கடத்திவிட்டு அந்த இடத்திற்கு தீ வைத்துவிட்டு சாம்பலாகிபோனதென்று கணக்கு காட்டப்படுவதை  எந்தக்கோடையிலும் சாதாரணமாகக்காணலாம்

            இறுதியில் பெற்றோரின் பாசத்தை இயற்கையுடன் ஒப்பிட்டது அழகு. பிணந்தின்னிக்கழுகுகளும் உடும்பைப்பிடித்த நரியும் படிமங்களாக எனக்குப்பட்டது. குணாவிடம் கதறி அழுத பரணியைபோல வாசித்து முடித்தபின்னர் மனம் கையலாகாத்தனத்தில் கதறியது. வேறேதும் செய்ய இயலாததால்.

சமூக அக்கறையுடன் சொல்லபட்டிருக்கும் ஒரு மிக அழகிய கதை அற்றைத்திங்கள் முழுக்கதைக்கும் சாரமாய் இருக்கிறது ‘’பெருங்காட்டின் ஒற்றைத்துளி’’ எனும் பசுமூங்கிலில்  முடையப்பட்ட முறத்தினை சொல்கையில். .

ஒரு சில தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன, மாக்கல்லுபந்தம் உக்கடத்தீ இவையெல்லாம் என்னவென்று எனக்குப்புரியவில்லை,  அப்படி பலருக்கும் புரியாமல் போயிருக்கும் வாய்ப்பிருப்பதால், அவற்றிற்கெல்லாம்  கதையிலேயே விளக்கம் சொல்லி இருந்திருக்கலாம். மரவள்ளிகிழங்கென்றே இதுவரை வாசித்திருக்கிறேன் ’’மரவல்லி’’ யென்றல்ல, ஒருவேளை அப்படியும் ஒரு வழங்கல் இருக்குமோ என்னமோ, பின்னர் ஒரு இடத்தில் புலி வேட்டைக்கு வரும் ஆங்கிலேயெ அதிகாரிகளைக்குறித்தான ஒரு பத்தியில் துரைசாணி என்று ஒரு ஆண் அதிகாரியை குறிப்பிடபட்டிருக்கிறது  பொதுவில் துரையின் மனைவியே துரைசாணி

நினைவுதிர்காலம் -யுவன்

டிசம்பர் 2019 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஊர்சுற்றி கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தேன். கானல் நதியை பொள்ளாச்சியிலிருந்து கும்பகோணம் வரையிலான ஒரு பயணத்தில்  தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். ஊர்சுற்றியை எனக்கு முன்பே வாசித்திருந்த  நண்பர்களுடன் அதைக்குறித்து அவ்வப்போது பேசிக்கொண்டும் கதையைக்குறித்து சிலவற்றை  விவாதித்துக்கொண்டும்   ஒரு வார இறுதியில்வாசித்தேன். கடந்த திங்கட்கிழமை நினைவுதிர்காலத்தை துவங்கினேன். நேற்று வாசித்து முடித்தேன்.

யாரிடமும் வாசிப்புக்குறித்து பகிர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை . அப்படி ஒரு நிறைவு எனக்குள்.

எந்த புத்தகம் வாசித்தாலும் கதையும் மொழிநடையும் சில வர்ணனைகளும் வாசிக்கையில் நானே கட்டமைத்துக்கொண்டசில காட்சிகளும் உள்ளே மீள மீள நிகழ்ந்துகொண்டிருக்கும். பின்னர் கதையைக்குறித்து எழுதுவேன் அல்லது யாரிடமாவது பேசுவேன்

நினைவுதிர்காலம் அப்படியல்லாது வேறுபட்ட உணர்வுநிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்கே எதை நம்ப முடியவில்லை என்றால் இந்தக்கதை எனக்கு புரிந்துவிட்டதுதான். இசைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது . கொங்குபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என் வாழ்வு முழுக்க இசை போன்ற நுண்கலைக்கான exposure எள்ளளவும் இன்றி காடும் தோட்டமும் வீடும் வேலையுமாய் இருந்தது.  தப்பிப்பிழைத்து எப்படியோ கல்லூரியும் பல்கலையும் போய் படித்தேன் என்றாலும் அடிப்படிஅயில் அதே கிராமத்து உழைக்கும் வர்க்கத்து மனுஷிதான் நான்.

இசைக்கும் எனக்குமான தொடர்பென்றால் எப்போதாவது திரையிசைப்பாடல்களை கேட்பதும் ’நல்லாருக்கே’ என்றோ ’சகிக்கலை இந்தப்பாட்டு’ என்றோ சொல்லுவதோடு முடிந்துவிடும். மற்றபடி இசைக்கு என்னையும் எனக்கு இசையையும் துளியும் பரிச்சயமில்லை

இந்தக்கதை முழுக்க, (இதைக்கதை என்று சொல்லலாமாவென்றும் தெரியவில்லை) இசையை , ஒரு இசைமேதையை அவரது உறவுகளை அதன் சிக்கலான பல அடுக்குகளை அவரது வாழ்வு முழுமையை இசையின் பற்பல நுட்பங்களை பல வகையான இசையை இசையாளுமைகளை சொல்லியது.  வாழ்நாளில் பள்ளிப்பருவத்தில் கணேஷ் குமரேஷின் துவக்ககால கச்சேரியொன்றைத்தவிர வேறு இசைதொடர்பான கச்சேரிகளுக்கு கூட போயிறாத என்னை இக்கதை முழுவதுமாக கட்டிப்போடுவிட்டது.

இக்கதை முழுவதையும் என்னால் அனுபவித்து ரசித்து ஆழ்ந்து வாசிக்க முடிந்ததில் எனக்கே ஆச்ச்சர்யம்தான்

ஏறத்தாழ  250 பக்கங்கள் கொண்ட முழுக்கதையையும் நேர்காணல் உரையாடல் வடிவிலேயே கொண்டு வந்திருப்பதும் எந்த இடத்திலும் சிறிதும் தொய்வின்றி கொண்டு போயிருப்பதும் சிறப்பு.

வறட்சியான ஜீவனற்ற கேள்வி பதில்களாக இல்லாமல் சாமார்த்தியமான பொருத்தமான சரியான சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்கு சற்றும் குறைவில்லாத பதில்களுமாய் துவக்கத்திலிருந்தே கதையுடன் ஒட்டுதல் வந்திவிட்டிருந்தது. மேலும் ஆஷாவையோ திரு ஹரிஷங்கரையோ குறித்து தோற்றம் எப்படியிருக்குமென்று எந்த அபிப்பிராயமும் இல்லாததால் அவர்களைக்குறித்து எனக்குள் ஒரு கற்பனைச்சித்திரம் உருவாகிவிட்டிருந்தது. அவரை  பல இடங்களில் நுட்பமாக வர்ணித்துமிருந்ததால் அவரின் ஆளுமைக்கு எனக்குள் சரியான வடிவமொன்று அமைந்துவிட்டிருந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறை அந்த வீடு  அவரின் செல்லப்பிராணிகள் சமையலுக்கு உதவும் பெரியவர் சமையலில் என்ன பதார்த்தங்கள் அதில் அவர் விரும்பி உண்ட இனிப்பு ஒரு விளக்கைபோடுவது அதை  அணைத்து மஞ்சள் விளக்கை போடுவது  பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தி மாயம் போல வந்து கவிழ்ந்துவிடுவது,இடையிடையே அவர் ஓய்வறைக்கு செல்வது, ஆஷாவின்  கார் கோளாறாவது, அவ்வப்போது இடையிடும் சில விருந்தினர்கள் அங்கிருக்கும் அலமாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என்று விலாவாரியான விவரிப்புக்கள் இருந்ததால் நானும் அந்த அறையில் அமர்ந்திருந்தேன் என்றே சொல்லலாம். எப்பேர்ப்பட்ட ஆளூமை அவர் என்னும் பிரமிப்பு இன்னும் அகலவில்லை

மூத்த சகோதரரின் மீது மனக்குறை இருப்பினும்  மரியாதைக்குறைச்சலோ மலினமான அபிப்பிராயமோ துளியும் அற்றவர். அவரது ஆளுமை எனக்கு அவர் மீது பெரிதும் மரியாதை கொள்ள வைத்தது.

தில்லி சுல்தானின் அரசவையில் ஆஸ்தான பாடகராக இருந்த அவரது முத்தாத்தாவின் கதை மெய்ப்புக் கொள்ள வைத்துவிட்டது. அக்கதையை வாசிக்கையில் வாசிப்பதுபோலவே இல்லை எனக்கு  ஒரு புராதன கருப்பு வெள்ளைத்திரைப்படத்தில் நானும் ஒரு பாத்திரமேற்று அங்கே அக்கச்சேரியில் இசையைக்கேட்டபடிக்கு அமர்ந்திருந்தேன்.

கிராமத்தில் அழியில் எதிர்ப்பட்டவருக்கென ருத்ரவீணை வாசித்த அவரது முன்னோர், கோளாறாகி ரயில் நின்று விட அப்போது புழுதியில் அமர்ந்து அந்த கிழவனாருடன் சேர்ந்து கச்சேரி செய்த அண்ணா, விசிலிலேயே இசைத்த நண்பர், காரணமறியா அவரது தற்கொலை, காணாமலே போன இன்னொரு தோழன் என்று ஒரு புனைவுக்கதையின் எல்லா சுவாரஸ்யங்களும் இருந்தது இதில்.  பல முக்கியமான வேலைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கச்சொன்னது கதை என்னை

தெய்வீகமான முப்பாட்டன்கள்,  நேர்மையையே முக்கியமாக கொண்டிருந்த, தகப்பனார் மாபெரும் இசைமேதையான அண்ணா அவரது சில சறுக்கல்கள், அவர் மீது  இவருகிருக்கும் ஒரு மாற்றுக்கூடகுறையாத மரியாதையும் பக்தியும் ஆஷாவின் அந்தரங்க வாழ்வைக்குறித்துத் தெரிந்துகொண்ட சில விஷயங்களுமாக நினைவுதிர்காலம் என்றென்றைக்குமாய் மனதில் வரி வரியாக நினைவிலிருக்கும் கதைகளொலொன்றாகிவிட்டது

பல பக்கங்களில்  அற்புதமான கவிதைகளை பத்திகளாக கொடுத்திருந்தது போலிருந்தது. பத்திகளின் வரிகளை மடக்கி கவிதைகளாக்குவதைத்தான்  வாசித்திருக்கிறேன் இது முற்றாக எதிராயிருந்தது. உதாரணமாக  கச்சேரி நாளன்று அவரது மனநிலையைப்பற்றி சொல்லும் பத்தியை சொல்லுவேன்

// கச்சேரி நாளில் செவிகளில் ஒருவிதக்கூர்மை அதிகரிப்பது, அதிகாலைப்பொழுதின் நிர்மலமான அமைதியின் பரப்பில் ஒவ்வொரு ஒலியாக சொட்டி குமிழிகளையும் வளையங்களையும் உருவாக்குவது, புத்தம் புதிய காகம், முதன்முறையாக காதில் விழும் சைக்கிள் ஒலி, அந்தக்கணம் தான் பிறந்து உயர்ந்தது போன்ற ஜன்னலோர மரக்கிளை//

அபாரம்

இப்படி பல பக்கங்களில் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசித்தென்

சத்தியத்தில் அடிக்கோடிட்டு வாசிக்கும்படியான புத்தகங்களை அரிதாகவே கிடைக்கப்பெறுகிறேன்

ஸ்ரீஹரிஷங்கர் அவரது மனைவி ஊர்மிளாவைப்பற்றிச்சொல்லியவற்றை வாசிக்கையில் மட்டும் அங்கெயே மனம் நின்று விட்டது. அவ்வரிகளை மீள மீள வாசிப்பேன். பின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேறு ஏதேனும் வழக்கமான இல்பேணுதலுக்கு சென்று விடுவேன் மனம் மட்டும் கடுமதுரம் ஒன்றை சாப்பிட்ட தித்திப்பில் நிறைந்திருக்கும் எப்படியாகப்பட்ட பேரன்பு அது என்று சிலாகித்துக்கொண்டேயிருக்கும் மனம்

இருவருமாக கருப்புக்கார் ஒன்றைத்துரத்திச்செல்லும் அந்த கனவிற்கு பின்னர் உங்கள் மனைவியிடன் உங்களுக்கும் அதே போன்ற கனவே வந்ததென்று சொன்னீர்களா என்னும் கேள்விக்கு // பளிங்கு பொன்ற மனம் அது வீணாக கலக்குவானேன் . அவளை பிரியமாக அணைத்துக்கொண்டேன்//  என்கிறார் அறியமால் கண் நிறைந்தது எனக்கு வாசித்ததும்

/ மாயப்பிரசன்னத்தின் வசம் சொந்தக் கவலைகளை ஒப்படைத்துவிட்டு அடைக்கலமாகிவிடும் மார்க்கம் எவ்வளவு இதமாயிருக்கிறது//

 இவ்வரிகளிலும் மனம் சிக்கிக்கொண்டது கொஞ்ச நேரத்திற்கு

ஹிந்துஸ்தானி இசையுலகம் எனக்கு முற்றிலும் பரிச்சய்மற்றது என்பதை விடவும் அந்நியமானது என்றே சொல்லுவேன்.என்னால் இந்தக்கதையுடன் இத்தனை ஆழ்ந்துபோக முடிந்ததின் ஆச்சரயம் இன்னும் நீடிக்கிறது . ஸாரங்கியும் வயலினும் குரலிசையும் மொஹர்சிங்கும் மேண்டலினும் ஜுகல்பந்திகளும்  ராகங்களும் அதில் புகுத்தப்ட்ட புதுமைகளும் மேல் கீழ்ஸ்தாயிகளும் தாளமும் ஸ்வரமுமாக எனக்கு அறிமுகமற்ற ஆனால் மிகவும் வசீகரமான ஒரு உலகிலிருந்தேன் வாசிக்கையிலும் இதோ இப்போதும்

எதேச்சையாக கானல் நதிக்கு பின்னரே நான் இதை வாசிக்கும்படி அமைந்துவிட்டது

கானல்நதி தஞ்செய் முகர்ஜி என்னும் ஆளுமையைபற்றியது. அதில் என்னால் பெரிதாக இறங்க முடியவைல்லை

இப்படி கதையைக்குறித்து எழுதிக்கொண்டேபோனால் கதை வந்திருக்கும் 286 பக்கங்களையும் விட அதிகமக எழுதுவேன் போலிருக்கின்றது. அத்தனைக்கு இக்கதையைக்குறித்துச் சொல்ல எனக்குள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.. இசையை கொஞ்சமும் அறிந்திராத ஒரு வாசகிக்கு இந்த கதை இத்தனை பரவசமளிக்குமென்றால் அதன் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

மண்ணும் மனிதரும்

’மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரபீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் ‘ என்ற தலைப்பில்  தி.ப. சித்தலிங்கையாவால்    மொழி பெயர்க்கபட்ட நாவலில்  மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களை வாழ்நாளெல்லாம் ஊர்விட்டு ஊர் அலைக்கழித்த சூழலையும் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

1840 தொடங்கி 1940 வரை வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் அக்குடும்பத்தின் உறவுகளை சுற்றத்தை நட்பை தொடரும் இருதலைமுறைகளை சொல்லுகிறது ’மீண்டும் மண்ணுக்கே’ என்னும் பொருள்படும் தலைப்பில் கன்னடத்தில் எழுதப்பட்ட இந்நாவல்

மிக விரிவான தளத்தில் எழுதபட்டிருக்கும் இந்நாவலின் கதை புரோகிதம் செய்துவாழும் அந்தணரான ஐதாளரின் குடும்பத்தை மையமாக கொண்டிருக்கிறது.  ஐதாளரின் தந்தை சிக்கனம் கருதி நல்ல பெருமழை பெய்யும் காலத்தில் ஐதாளருக்கு  செய்து வைக்கும் கல்யாணத்தில் நாவல் துவங்கி ஐதாளரின் பேரன் ராமனின் கல்யாணத்தில் முடிகின்றது

கழிமுகத்தில் ஒரு சிறு வீட்டைத்தவிர வேறெந்த சொத்துக்களும் இல்லாத புரோகிதம் செய்யப்போகும் இடத்திலேயே அன்றைய உணவை முடித்துக்கொள்ளும்  ஐதாளரும்  கடும் உழைப்பாளியான குழந்தைகள் இல்லா அவரது மனைவி பார்வதியும் சிறுவயதிலேயே கணவரை இழந்து குறைபட்டுபோன ஐதாளரின் சகோதரி சரஸ்வதியுமே  முதல் தலைமுறை மாந்தர்களாக  துவக்கத்தில் வருகின்றனர்.

ஐதாளர் குழந்தையின்பொருட்டு செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் அதில் பிறந்து செல்லம் கொடுக்கப்பட்டு திசைமாறிப்போன லச்சன் அவன் மனைவி நாகவேணி ஆகியோர் இரண்டாம் தலைமுறை

கழிமுக வீட்டை விட்டு பெருநகரத்துக்கு  கல்வியின் பொருட்டு இடம்பெயரும் அவர்களின் மகன் ராமன்   மூன்றாம் தலைமுறை  என நீளும் கதையில் 18   மற்றும் 19  ஆம் நூற்றாண்டின் காலச்சூழலை மிக நன்றாக அவதானிக்க முடிகின்றது.

பல்வேறுபட்ட குணச்சித்திரங்கள் உள்ள பாத்திரங்களின் வாயிலாக அன்றைய மாந்தர்களுக்கு மண்ணின் மீதான பெருவிருப்பு இருந்ததையும் பெண்களின் அயராத உழைப்பால் குடும்பங்கள் தலை நிமிர்வதையும் தெளிவாக காணமுடிகின்றது

ஐதாளரின் திருமணத்திற்கு வர துணியாலான குடைபிடிப்பவர்களே ஊரின் பெருந்தனக்காரர்களென்னும் வரியிலிருந்தே அக்காலத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஏழை அந்தணர் வீடுகளில் உணவுப்பழக்கம் எப்படியென்பதையும் மிக சாதரணமாக சொல்லிச்செல்கிறார் கதாசிரியர் கணவர் புரோகிதம் பண்ணப்போகும் வீட்டில் சாப்பிடுவதால் பெண்களிருவரும் அவடக்கீரை தாளித்தோ அல்லது உருளைகிழங்கோ வெள்ளரிக்காய்களோ இருக்கும் மிக எளிய உணவை ஒரு பொழுது உண்டுவிட்டு இரவில் பிடி அவலை நனைத்து சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர்.   கடும் உழைப்புக்கு சற்றும் பொருந்தாத ஏழ்மை.  மாவடு தேடி நல்ல வெய்யிலில் பலகிலோமீட்டர் தூரம் நடந்து கிடைத்த மாங்காய்களை  ஊறுகாய் போடுவதும் சித்தரிக்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சூரனே சொல்லுவதுபோல ’பிராமணர்களுக்கு எதற்கு குறைவென்றாலும் நாக்குக்கு மட்டும் அப்படி  வேண்டியிருக்கிறது’

பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளை நினைக்கவும் முடியாது இக்காலத்துப்பெண்களால் வீட்டைப்பெருக்குவது பற்றுப்பாத்திரங்களை தேய்ப்பது கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் வைப்பது வயலில் வேலை செய்வது வண்டல் மண்ணை அரித்து சட்டி சட்டியாக கொண்டு வந்து சேர்ப்பது நீர்பாய்ச்ச ஏற்றமும்  கபிலையும்  இறைப்பது தினப்படி  வீட்டை மெழுகுவது தோட்டத்தில் விதைப்பது நாற்று நடுவது அறுப்பது புன்னைக்காய்களை சேகரித்து எண்ணை எடுப்பது பால் கறப்பது கடல் நீரைகாய்ச்சி வீட்டு சமையலுக்கு தேவையான  உப்பெடுப்பது வெள்ளத்தில் அடித்து வரும் மரக்கட்டைகளை உயிரைப் பணயம் வைத்து விறகுக்கென சேர்ப்பதென்று முடிவில்லாமல் நீள்கிறது இவர்களின் உழைப்பின் பட்டியல். அசாத்தியமான உடல்வலிமையுடன் மனவலிமையும் உள்ளவர்களாயிருந்திருக்கிறார்கள் அப்போதைய பெண்கள். வெயிலும் மழையும் வெள்ளமுமாய் ஓயாமல் வாழ்வை அலைக்கழித்தாலும் பெண்கள் யாவரும் மூன்று தலைமுறைகளிலுமே புரிதலும் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் விசாலமனதும் உளளவர்களாகவே இருக்கிறார்கள்

கணவர் எந்நேரம் வீடுதிரும்பினாலும் எந்த கேள்வியும் கேட்காமலிருப்பது புத்திரபாக்கியத்துக்கென மறுதிருமணம் செய்யும் போதும் எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது அத்திருமணத்திற்கென்று அப்பளம் இடத்துவங்குவதென்று பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனைகளையும் அவர்களுக்கு நடந்துகொண்டிருந்த அநீதிகளையும் அப்போதைய வாழ்வின் இயங்குமுறைககளாகவே சொல்லிச்செல்கிறது இந்நாவல்

அப்போது வழக்கத்திலிருந்த குறுநிலங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த  பெரிய முதலீடுகள்  இல்லாத விவசாய முறைகளையும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த முடி மணங்கு சேர் கோர்ஜி என்னும் அளவை முறைகளும் கதையில் பல இடங்களில் சொல்லப்படுகின்றன.

எத்தனை ஏழ்மையிலிருப்பினும் அந்தணர்களான அவர்களுக்கு கீழிருக்கும் தாழ்த்தபட்டவர்களோடு இணைந்தே விவசாயம் நடந்திருக்கிறதென்பதும் ஐதாளரின் குடும்பத்திற்கு சூரனும் பச்சியும் செய்யும்  பிரதிபலன் எதிர்பாராத தொடர் உதவிகளிலிருந்து புலனாகின்றது,

இறந்த மாட்டின் சவத்தை பறையர்கள் வந்து எடுத்துச்செல்லும் வழக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

கழிமுகத்தில் அமைந்திருக்கும் ’’கோடி’’ கிராமமே கதைக்களமென்பதால் அப்பொழுது படகுகளுக்கு மஞ்சி என்னும் பெயரிருந்ததும் பாய்மரப்படகில் ஒரு வகை பத்தொமாரி என்பதும் கோடா என்பது மிகபெரிய பாய்மரப்படகென்பதும் ஐதாளரின் பார்வையில் துறைமுகப்பகுதியை விவரிக்கையில்  குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து  இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்காத பெயர்களையும் விஷயங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்

பிள்ளை இல்லாதவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொள்வது அப்போதும் நடைமுறையிலிருந்திருப்பதை சரஸ்வதியும் பார்வதியுமாய் ஐதாளரிடம் அதுகுறித்து பேசுவதிலிருந்து தெரிகிறது. எதிர்பாரா விதமாக ஐதாளர் சுவீகாரத்திற்கு முனையாமல் சத்தியபாமையை இரண்டாம் திருமணமே செய்துகொள்வது அந்தப்பெண்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

 இரண்டாவதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப்போகும் போதும் பார்வதி அவள் கன்னடபிராமணர்களில்   ’கோட’ அல்லது ’சிவள்ளி’ இவற்றில் எந்தப்பிரிவை சேர்ந்தவளென்பதில் கவலை கொள்வதிலிருந்து அப்போது சாதிவேற்றுமைகள் மட்டுமன்றி  குடும்பங்களுக்குள் நுண்ணிய சாதீய அடுக்கின் சிக்கல்களும்  இருந்திருக்கிறதென்பதை அறியலாம்.

திருமண ஊர்வலத்தில் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு பந்தங்களை கொடுத்து கூட்டம் அதிகமானதுபோல் காட்டுவது பாட்டியன்னம் என்னும் பாட்டிமை அன்று மணமகளுக்கு நடக்கும் சடங்கு  தாசிகள் பொன் பெற்றுக்கொண்டு சலாமிடுவது பெரும் அந்தஸ்தாக கருதப்படுவது  போன்ற விவரணைகளிலிருந்து அப்போதிய திருமணங்களின் போது   நடக்கும் பலவகையான முறைமைகள் வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

 லச்சன் பிறந்த பிறகு அவனை பள்ளிக்கூடம் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனை சேர்ப்பதென்பது இழிவு என்று பெரியவர்கள் யாவரும் ஒன்றே போல அபிப்பபிராயப்படுவதிலிருந்து தீண்டாமை 18 ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயிலும் மிகத்தீவிரமாக நிலவி வந்திருப்பதை உணரலாம்.

மெல்ல மெல்ல வட்டிக்கு பணம் கொடுக்கும் வழக்கம் வருவதை, ஆடம்பரத்துக்கு விருப்பப்படும் குடும்பங்கள் பெருகுவதையெல்லாம் சீனப்பன், சீனப்பய்யராக மாறுவதுபோன்ற நுட்பமான கதாபாத்திர மாற்றங்களின் மூலம் சொல்லத் துவங்குகிறார் கதாசிரியர்.

 காட்சிகள் மாறிக்கொண்டே வந்து லச்சன் தட்டுக்கெட்டு திசைமாறி தீய வழக்கங்களுக்கு அடிமையாகி, அவனால் அவன் மனைவியின் உடல்நிலையும் பாழாவதை பார்க்கிறோம், 500 ரூபாய் பணம் கொடுத்தால் மணியக்காரர் பதவி கிடைக்கும் என்னும் வரிகளில்  லஞ்சம் கொடுக்கும் சூழல் 19 ஆம் நூறாண்டில் மெல்ல துவங்கியிருப்பதை உணரலாம்

பீட்ஸா இந்தியக்குக்கிராமங்களிலும் புழக்த்திலிருக்கும் இக்காலகட்டத்தில் நாவலில் காப்பி என்னும் பானம் மெல்ல கலாச்சாரத்துக்குள் நுழைவதையும் பல ஆச்சாரமான குடும்பங்கள் அதை வீட்டுக்குள்ளே  அனுமதிக்காமலிருந்ததையும் வியப்புடன்  வாசிக்க முடிகின்றது.

காலங்கள் மாறி  வருகையில் லச்சனின் மனைவியான நாகவேணி சரஸ்வதியை, பார்வதியை போலல்லாமல் தன்னந்தனியே கணவனின்றியும் வாழ்த்துணிகையில் பெண்களின் மனோநிலையும் மாறிக்கொண்டு வருவதை நாம் அறியலாம்.

 சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் ராமன் அப்போதைய சுதந்திர உணர்வெழுச்சி மிக்க இளைஞர்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்

எத்தனையோ க‌ஷ்டகாலங்கள் மாறி மாறி வந்தாலும் மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைப்பெண்களும் அந்த ஓட்டு வீட்டுக்கே திரும்புகிறார்கள் அம்மண்ணே அவர்களை  பிணைக்கிறது வாழ்வுடன் ’’மீண்டும் மண்ணிற்கே’’ என்னும் கன்னட தலைப்பும் ’’மண்ணும் மனிதரும்’’ என்னும் தமிழாக்க தலைப்பும் மிகபொருத்தமாக கதையின் மூன்று தலைமுறை மாந்தர்களையும் நமக்கு காட்டித்தருகின்றது

வேளாண்மையும் தொற்றுநோயின் இறப்புக்களும் ஏழ்மையுமாக முதல் தலைமுறை ஆங்கிலக்கல்வியும் புதிய கலாச்சாரமும் கிடைக்கப்பெறும் இரண்டாம் தலைமுறை  பெருநகரங்களுக்கு கல்வியின் பெயரால் இடம்பெயரும் அங்கு வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாம் தலைமுறை என மாறிவரும் தலைமுறைகளின் மூலம் மாறி வந்திருக்கும் இந்திய சமூக வாழ்வினையும்   சொல்லும் இந்நாவல் இறுதியில்  ராமன் சரஸ்வதி என்னும் அவனின்  பாட்டியின் பெயருடன் துடைப்பமும் கையுமாக வீட்டுப்பொறுப்பை நிர்வகிக்க வல்லவள் என்னும் சித்திரத்தைக் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்வதுடன் நிறைவடைகிறது.   

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைக்காக ஐதாளர் மறுதிருமணம் செய்துகொள்ளுவதும் பின்னர்  சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறைக்காரனான நவீன சிந்தனையுளவனான ராமனும் பிற காரணங்களை விட வீட்டுபொறுப்பில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக காட்டியிருப்பதும்  காலங்கள் எத்தனை மாறினாலும் பெண்களின் இடமென்று ஆண்கள் நிர்ணயம் செய்துவைத்திருப்பது சமையலறையும் படுக்கையறையும் தானென்பதையும் அன்றும் இன்றும் என்றும் இது ஆண்களின் உலகே என்பதை இந்நாவலும் காட்டும் இடமென்பதாகவும் கொள்ளலாம்

இந்நாவல் நமக்கு அக்காலத்திலிருந்த  சாதீய அடுக்குகள் தீண்டாமை தொற்று நோய்கள் பெண்களின் வாழ்வு முறை ஆண்களின் அதிகாரம் புதுக்கலாச்சாரங்கள் மெல்ல மெல்ல சமுகத்தில் நுழைவது என பலவற்றைச் சொல்கிறது.

சிவரம காரந்தின் பாட்டி தனது தள்ளாத வயதில் விருப்பு வெறுப்புகளின்றி இக்கதையை  அவருக்கு சொல்லியதால் கதையிலும் எந்த பாரபட்சமும் சார்பும் இன்றி கதை மாந்தர்கள்  அனைவரும் நடுநிலையுடன்  சித்தரிக்கபட்டிருக்கின்றனர்

மண்ணும் மழையும் பெண்களும் ஏழ்மையும் இசையும் இயற்கையுமாக அழகிய நாவல் இது. ராமனும்  அவன் தாயும் ஓர் இரவில் பொழியும் நிலவின் புலத்தில் நனைந்தபடி  கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருகாட்சி  சம்சாரம் ஒரு நரகமென்றாலும் அதிலும் ரசிக்கத்தக்க விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் இருக்கும் என நமக்கு இக்கதை உணர்த்தும் ஒரு அழகுச்சாட்சி. அக்காட்சி  ஒரு கவிதையையைப்போல  கதையில் தீட்டப்பட்டிருக்கும்.

ஞானபீட விருது சாகித்ய அகாடமி விருது என பலவற்றைப் பெற்ற அறிஞரான சிவராம காரந்தின் கன்னட மொழிவளத்திற்கு சற்றும் குறையாமல் தமிழில் மிகசிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு தி ப சித்தலிங்கையாவிற்கு வாசிக்கும் அனைவரின் நன்றிகளும் கட்டாயம்  உரித்தாகும்

நிலத்தில் படகுகள்

விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய ஜேனிஸ் பரியத்தின் ‘ நிலத்தில் படகுகள் ‘’ கதைத்தொகுப்பை இன்று  2 மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் கவர்ந்த கதைகள்னு இதிலிருக்கும் எல்லாவற்றையுமே சொல்லலாம். வழக்கத்தைக்காட்டிலும் மெதுவாக வாசித்தேன்.

கதைக்களமும், கதாபாத்திரங்களின் பெயர்களும், உணவு வகைகளும், பானங்களும், கலாச்சாரமும், மொழியும், நம்பிக்கைகளும், அவர்களின் இடர்களும், துயர்களும், வாழ்வுமுறையும் மிக வேறுபட்டது நான் இதுவரையிலும் வாசித்தவற்றிலிருந்தும் என் வாழ்வுமுறையினின்றும். அதுவே மிகவும் வசீகரித்தது.  ஜேனிஸ் மண்மகள்தான்.  வாழ்ந்த இடத்தின் ஆன்மாவை இப்படி எழுத்தில் உள்ளபடியே கொண்டுவருவது அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. திரு விஜயராகவன் துவங்கி  திரு.சிறில் அலெக்ஸ் வரையில் மொழிபெயர்த்தவர்கள் கதைகளின் ஆன்மாவை கொஞ்சமும் சிதைக்காமல் மெருகேற்றியிருப்பதும் வியப்பளித்தது.

நீர்த்துளிகளைக்கொண்டிருக்கும் கூரிய ஊசியிலைகளுடனிருந்த  பைன் மரஙக்களுக்கிடையிலும், ரோடோடென்ரான் மலர்க்கொத்துக்களை பார்த்தபடிக்கும், வாசற்படிக்கு இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட்களை கடந்தும், மலைச்சரிவெங்கும் அடுக்கடுக்காக  தெரியும் வயல்வெளிகளிலும்,  வெடிக்க காத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டா  மரங்களை தாண்டியும்,  ஷில்லாங்கிலும்,  போம்ரெங் குக்கிராமத்திலும், லிக்குமீரிலும், சந்த்பாரியின்  விஸ்தாரமான தேயிலைத்தோட்டங்களிலும் நடந்துகொண்டும், விடுதிகளில் நூடுல்ஸும், பன்றி இறைச்சியும், கிரீம் பன்களும் சாப்பிட்டுகொண்டும் கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் அல்லது நானும் அக்கதைகளுக்குள்ளேயே, கனவுகளில் வரும் எண்களிலிருந்து சூதாட்டத்தில் வெற்றிபெறுவதை கணிக்கும் தையல்காரர் சுலைமானாகவும், தங்க மாஸிர் மீன்களை பிடித்துக்கொண்டிருக்கும்  மாமா கின்னாகவும் குளிர்காயும் கரி அடுப்பின் கங்குகள் அணையும் வரை மகனுக்கு பழங்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவாகவும், பயணப்பைக்குள் சிவப்பு சம்பா அரிசியை மறைத்து வைக்கும் பாரிஷாவாகவும், கிராம்பும் சிகரெட்டும் மணக்கும் தோழியாகவும் இன்னும் பலராகவும் இருந்தேன்

முதல்பக்கத்திலிருந்தே கதைகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிவிட முடிந்தது. மந்திரங்கள், நீர்த்தேவதைகள், விசித்திரமான  நம்பிக்கைகள், குதிரைகள் பாய்ந்துவிழுந்து இறக்கும் ஏரிகள், மணக்கும் தேவதாரு மரங்கள் என பக்கத்துக்குப்பக்கம் மிகப்புதிய நான் இதுவரையிலும் வாசித்து அறிந்திராத பிரதேசங்களில் நடக்கும் கதைகளென்பதால் புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை

நேரில் விழாவில் சந்தித்து பேசியிருந்ததாலென்று நினைக்கிறேன், பல இடங்களில் ஜேனிஸையும் அவரது பால்யம் மற்றும் பதின்மவயது நினைவுகளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது

இஸ்ரேலுக்கு கணவன் விட்டுச்சென்ற இரவில் பள்ளிப்பருவத்து காதலனைதேடிச்செல்பவள் , விடுமுறைக்கு செல்கையில் தனது காதலனை வேறு யாரும் அபகரித்துக்கொள்ளாலிருக்கனும் என்று விசனப்படும்  சிறுமி, புதிய லினன் துணியைபோல மணக்கும் பள்ளித்தோழி, காதலனை சடுதியில் மாற்றிக்கொள்ளும் இன்னொருத்தி, ஒரேயொரு மதியநேர பைக்பயணத்தில் விடுதலையை அறிந்துகொள்ளும் மற்றுமோர் சிறுமி, சாரா கிரேஸ், மெல்வின் என்று ஜேனிஸ்  அறிமுகபடுத்தும் பெண்கள் மிக வசீகரமானவர்கள், இனி என்றும் மறக்கமுடியாதவரகளும் கூட

மந்திரங்களும், நம்பிக்கைகளும், நோயும், கலவரமும், மலைத்தொடர்ச்சிகளும், செழிப்பான மண்ணும், தாவரங்களும், துயரங்களும், காதலும், பிரிவும், மர்மங்களும், முத்தங்களும், இறப்பும் இக்தைகளெங்கும்  தூவியிருப்பது போலிருந்ததுது. இப்படி nativityயுடன் கதைகளை படித்து வெகுகாலமாகிவிடது

எல்லாக் கதைகளுமே மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன என்றாலும் ஆகச்சிறந்ததென்று விஷால்ராஜாவின் கதையைச்சொல்லுவேன்

கதைகளுக்குள் ஆழ்ந்துவிட்டதால் வாசித்து முடிந்து சமையலறைக்கு இரவுணவு தயாரிக்கச் செல்கையில் என் வீடே எனக்கு மிகப்புதிதாக தெரிந்தது கதைக்களங்களிலிருந்து  என் மனம் இன்னும் விலகவேயில்லை சமைக்கபிடித்திருந்த  கரண்டி வழவழப்பான செதில்களை உடைய கா பாவாக தோன்றியது,  விளக்கு வெளிச்சத்தில்  ஜன்னல் வழியே கூரிய நுனிகள் கொண்ட பைன் மரமாக  இருந்தது என் பிரியத்துக்குரிய புன்னை

  இக்கதைகளில் வரும், பிடித்துவிட்டால் பிறகு ஒருபோதும் விடவே விடாத நீர்த்தேவதையைப்போல என்னை இந்த கதைகளும்  ஒரேயடியாக பிடித்துக்கொண்டு விட்டன

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑