லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2017 (Page 1 of 3)

நேசமெனும் நஞ்சு

இலைதழைப்புகளுக்குள்
பார்த்துக்கொண்டிருக்கையிலெயே நுழைந்துவிடும் நாகம் போல
கண் எதிரிலேயே எனக்குள் நழுவிச்சென்று மறைகிறாய்
தேவன் தேர்ந்தெடுத்ததோர் கண்மொன்றில்
மெல்லப்பதித்தாய் உன் நேசமெனும் பற்களை
சலங்கை மணிகள் கொஞ்சும் என் மென்பாதமொன்றில்
நரம்புகளின் நுனி பற்றியபடி மெல்ல மேலேறி
இதயத்தை எட்டிப்பிடிக்கும்  அக்காதலெனும் நஞ்சினை
உவகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எங்கெங்கிலுமாய் நீ என்னுள் நிரம்பித்ததும்பி வழியும்  நாளொன்றில்
இதழோரம் பொங்கி வழியும் வெண் நுரையின்
சின்னஞ்சிறு குமிழிகள் ஒவ்வொன்றிலும் தெரிவோம் நாமிருவருமே!

கால் கட்டும், கல்யாணமும்

பாலித்தீவில் மக்களிடையே ஒரு சமயம் சார்ந்த தொன்மையான பழக்கம் இருக்கின்றது. திருமண விழாக்களில் உயிருடன் ஒரு வாத்து மற்றும் ஒரு கோழியை அவற்றின் சின்னஞ்சிறியகால்களில் கல்லைக்கட்டி விட்டு ஏகப்பட்ட மந்திர உச்சாடனங்கள் மற்றும் பூசைகளின் பின்னர் கூட்டமாக ஒரு நீர் நிலைக்குச்சென்று அந்த ஒரு பாவமும் அறியா பறவைகளை  நீரில் விடுகிறார்கள். தப்பிக்க வழியின்றி மூழ்கி இறந்து அங்கேயே அவை மட்கி விடுவது புதிதாய் திருமணம் செய்துகொள்பவர்களின் குடும்ப வாழ்விற்கு  நல்லது என்னும் நம்பிக்கையின் பேரில் இது செய்யப்படுகின்றதாம்.கடவுளின் பெயரால்  செய்யபடும் வன்முறைகளில் இது உச்சமென்றே நான் நினைக்கிறேன்

எத்தனை குரூரம்?. மஞ்சள் நீரில் உடல் சிலிர்க்கும் பலி விலங்கினை கழுத்தின் குருதிக்குழாயை ஒரே வெட்டில் அறுக்கும் நம் சடங்கு  இதற்கு ஒப்பிடுகையில் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

உண்மையில் பல திருமணங்களில்  தப்பிக்க வழியின்றி   கல்லை கால்களில் கட்டிக்கொண்டு  மூழ்கி இறந்து  மட்கும் வரை இல்லறத்தில் இருக்கும் தம்பதியினருக்கும் இது பொருந்தும் அல்லவா இதைத்தான்நாம் கால்கட்டு என்று கல்யாணத்தை சொல்லிக்கொண்டிருக்கிறோமோ?

 

தாமதமாகவாவது,

தொலைதூர இரவுப்பயணமொன்றில்  பேருந்தில் நீயும்

தனித்திருக்கும் மற்றுமோர் இரவில் நானுமாய் நேற்றிருந்தோம்

உன்னுடனேதான் நானும் பயணித்துக்கொண்டிருந்தேன்

உன் ஜன்னலுக்கு வெளியே பொழிந்த மழையில்

நனைந்து குளிர்ந்து தோள் சாய்ந்தபடி
நேற்றென்னவோ
காதலில் தோய்ந்தபடி என்னிடமிருந்து  உன்னை வந்தடைந்த
என் வார்த்தைகள அனைத்தையும்
குத்து வாட்களாய் எதிர்கொண்டது உன் மறுமொழிகள்
திகைத்துப்பார்த்துக்கொண்டிருந்த என் இதயத்தையும்
சில  கூ ர்நுனிகள் மெல்ல கிழித்து குருதிச்சுச்வை பார்த்தன
 உறக்கமின்றி உணர்ந்துகொண்டே இருக்க முடிந்ததென்னால்
நகரும் பேருந்தில் சாய்ந்து உறங்கிவிட்ட உன்னை
இறப்பைக்குறித்து பேசிக்கொண்டே இருக்கிறாய்
வாழ்வெனும் நதியில்  மூழ்க விரும்பும் என்னை முடிபற்றிச்சுழற்றி
மரணமென்னும் கரையில் வீசி எறிந்தபடி
சென்றடைந்து விட்டாயா எனும் என் குறுந்தகவலொன்றிற்கு
இன்னும் வரவில்லை உன்னிடமிருந்து பதிலொன்று
இரு நீலக்கோடுகளுக்காய் காத்துக்கொண்டிருக்கிறதென் காலை
ஒருவேளை உன் கோப்பையில் உற்சாகமாய்
பொங்கி வழியும் பானமொன்றின் குமிழிகளில்
 எனைக்காணும் பொழுதினில்  பதிலொன்று
அளிப்பாயல்லவா

தாமதமாகவேனும்?

கடவுளுடன் சண்டை

கடந்த ஜூலையில் பாரதியார் பல்கலையில் என் பதவி உயர்வின் பொருட்டான  பயிற்சியின் ஒரு பகுதியாக  கல்லாறு தோட்டகக்லைத்துறை பழப்பண்ணைக்கும் திரும்பி வரும் வழியில் பிரசித்தி பெற்ற  மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் சென்றிருந்தோம். அங்கு செல்வது எனக்கு முதல் முறை.  கோவிலையொட்டிய சரிவில் அதிசயமாய், கறகள் ஒன்று போல நிறைந்திருக்குமாற்றில் தண்ணீர் கணிசமான அளவில் இருந்து ஒடிக்கொண்டுமிருந்தது.

சிறிய கோவில்தான் ஆனால் வெளியில் ஏகத்துக்கும் இடம், நல்ல கூட்டமும் கூட
சமீபத்தில் குண்டம் இறங்கி இருந்திருக்கிறார்கள் , அந்த சாம்பலை நிறைய அள்ளி நெற்றிக்கு இட்டுக்கொண்டும்,வீட்டிற்கு எடுத்துக்கொண்டும்  செல்பவர்களை பார்த்தேன்.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது பிரகாரத்தில் நடு வயதில் ஒரு பெண் நன்கு உடுத்திக்கொண்டு பின்னலில் கொஞ்சமாய் பூவெல்லாம் வைத்துக்கொண்டு கையில் ஒரு மஞ்சள் பையை பிடித்தபடி, அம்மன் இருக்கும்  திசை  நோக்கி  உட்கார்ந்து கொண்டு ‘’ கட்டையில் போறவளே என்று துவங்கி, நாசமாய் போயிருவே, நல்லா இருந்துருவியா ‘ என்று ஏகதுக்கும்  வசை பாடிக்கொண்டிருந்தார்கள், அனைவரும் திரும்பி பார்க்கும் படிக்கு உரக்க வேறு சண்டை.
சில சமயம் தொண்டை காய்ந்ததோ என்னவோ தலைகுனித்துகொண்டு கொஞ்ச நேரம் அமைதி, பின் மீண்டும் வரவழைத்துக்கொண்ட ஆங்காரத்துடன் அதே வசை

சந்தனக்காப்பில் அருளிக்கொண்டிருந்த அம்மனுக்கு உள்ளேயும் அர்ச்சனை நடந்தது.

இது போலவே முன்பொருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி ஒரு கோவிலின் வாசலில் மண்ணைவாறி தூற்றிக்கொண்டிருந்தார்கள்
அவர்களும் என்னவோ கண்ணிருடன் வசைபாடிக்கொண்டிருந்தது இன்னும்நினைவில் இருக்கிறது

குலதெய்வக்கோவிலில்  பல சமயம் ஆடு பலியிட்டு முடிந்தபின்னர்   அந்த குருதி சிந்தியிருக்கும் இடத்தில்  சில  பெண்களுக்கு சாமி வந்து கூந்தல் சுழற்றி புடவையை இழுத்துச்செருகியபடி ‘’டேய் ‘’ என்று கணவர் உள்பட அனைவரையும் கூவி அழைத்தபடி, முழு எழுமிச்சையை வாயிலிட்டு  கடித்து துப்பியும், நாக்கில் கற்பூரம் ஏற்றிக்கொண்டும் அருள் வாக்கு சொல்வதை பலமுறை கண்டிருக்கிறேன்

எல்லா ஆண்களும் பவ்யமாக துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு ’’சொல்லு ஆத்தா உனக்கென்ன குறை’’ என் று நிற்பார்கள்
அது வேறு வகையிலான out let   என் று எனக்கு தோன்றும்

 உனக்கு என்ன வேணும் என்ரு ஒரு முறை கூட கேட்டிருக்காத ஆண்களுக்கான ஒட்டுமொத்த அதிர்ச்சி வைத்தியத்தை ஏதோ ஒரு பெண் குடும்ப விழாக்களில்  வலிந்து செய்து, அடுத்த வருட  குலதெய்வ விழா வரையிலும்  பெண்களுக்கு நடக்கவிருக்கும் அநீதிகளுக்கெல்லாம் கொஞ்சமாய்  ஏற்பாடு செய்து கொள்ளும் பிழையீடு   அது என்றெண்ணுவேன், கூடவெ மிக்க மகிழ்ச்சியுடன் அவள் சீக்கிறம் மலையேறிவிடக்கூடதென்று விரும்பியபடி வேடிக்கை பார்ப்பேன்

ஆனால் இப்படிகடவுளைஇப்படி பகிரங்கமாய் வசைபாடுவது?

இது என்ன மாதிரி மனநிலை ?

பைத்தியம்  என்று உறுதியாக சொல்ல முடியாதபடிக்கு சுயநினைவுடன் நல்ல தெளிவாகத்தான் பேசுகிறார்கள்

ஒரு வேளை கடவுள் இருப்பாரே ஆனால் வரிசையில் நின்று வேண்டிக்கொள்ளும் எங்களை விட, கடவுளை சொந்தமாய் நினைத்து, சண்டையிட்டு வசைபாடும் அளவிற்கு நம்பும் இவர்களுக்காவது எதாவ்து செய்யலாம்

சம்மதம்

உனக்கே உனக்கானதோர் என் காதலை
உணர்ந்திருக்கிறாயா உள்ளபடி நீ?
உனக்கு வேண்டுமானால்
ஒருவேளை அவை
  ஒரு கோப்பை பானத்தின் ஒற்றைத் துளியாகவோ
நீ காலடியில் தேய்த்தழிக்கும்
கடைசித்துண்டு  சிகரெட்டாகவோ
 தவறாக எழுதி சுருட்டி எறியும் காகிதமாகவோ
அன்றி
 வெகு நாட்களாய்  வாசிக்க மறந்த ஒரு புத்தகமாக்கூட இருக்கலாம்
ஆனால் அன்பே
 கதகதப்பாய் எனை மூடிக்கொண்டிருக்கிறது
கனத்ததோர் கம்பளியாய் உன் மீதான என் காதல்,
 உறங்கிக்கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நாளும்
அதனுள் என்னை முற்றிலுமாய் பொதிந்து கொண்டு
மூச்சுத்திணறி  அப்படியே மரணிப்பதற்கும் சம்மதமாய்!

சில கணங்கள்

கண்முன்னே நழுவிச்செல்கிறது காலம்

அதிலிருந்து தெறித்து வெளிவரும்

கணங்களில்

கைக்கு கிடைத்த

சிலவற்றை அள்ளி சேகரித்து

மடியில் இறுக்கக்கட்டிக்கொள்கிறேன்

உன்னுடன் வாழ

எனக்கும் வேண்டுமல்லவா

சில கணங்கள்!

பெயர்கள்

 ஜெ அவர்களின்  தளத்தில் வெளியான ‘ பெயர்கள் ‘ பதிவை  சில மாதங்களுக்கு முன்பு வாசித்தேன்.  நவீனப்பெயர்களான ரினீஷ், துமேஷ், ஜிலீஷ் ரமேஷ் குமெஷில்  வாய் விட்டுச்சிரித்து, செட்டியார்கள் வருமானம் என்று பெயரிடுவதில் சிரிப்பை அடக்க சிரமப்பட்டென், இடுப்பில் தாயத்து மட்டுமணிந்த குஷ்பூவை வாசிக்கையில் குபீரென் சிரித்து  ஓட்டுனரே திடுக்கிட்டுத்திரும்பிப் பார்த்தார்.

’பெரும்பன்னி’  என்பது உயர் சாதியினர் விளிம்பு நிலை மக்களுக்கு  இட்ட பெயராயிருக்கலாமென்பதையும்  ’கும்பிடெறேன் சாமி’ என்று  தலித் ஒருவர் உயர் சாதியினர் கூப்பிட சங்கடப்படட்டும் என்று வைத்துக்கொண்ட பெயரும் நிறைய யோசிக்க வைத்தது.
நான் முனைவர் பட்ட ஆய்விலிருக்கையில் அந்த பல்கலையின்

துணைவேந்தரின் பெயரிலிருந்த ஒரு அலுவலகப்பணியாளரை பெயர் மாற்றி பேபி என்றழைத்ததையும், மெஸ்ஸில் இரவு எங்களு/க்கு ஒரு தம்ளர் பால் தருவதன் பொருட்டு வாசலில் காத்திருக்கும் அக்காவை, வேண்டுமென்றெ ’’பாலக்கா ’’என அழைத்ததையும்,கொழும்புவில் இருந்த சில வருடங்களில்
கேட்ட மிக அழகிய தமிழ் பெயர்களையும் நினைவு கூர்ந்தேன்
 தருண் பிறந்த போது சரணுக்கு ரைமிங்காக தருண் என பெயரிட நான் பெரிதும் விரும்பினேன் ஆனால் சரண் அப்பாவோ ராகுல் என்றே பெயரிட முடிவு செய்தார். பின்னர் இரண்டுபேருக்கும் பொதுவாக ராகுல் தருண் என்றே வைத்தோம். நான் எப்போதாவது அவனை முழுப்பெயரிட்டு ‘’ ராகுல் தருண் ‘’ என்றழைத்தால்அரண்டு போய்’’ ஏம்மா கோபமா இருக்கியா ?என்று கேட்பான். ஆம் கோபமயிருக்கையில் கூப்பிட ராகுல் , பிரியத்திற்குரிய பெயர் தருண்!!!
எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் சுத்தம் செய்ய உதவும் பெண்ணின் பெயர் ஓவியா,  நல்ல கருப்பாய் அழகிய கருங்கல் சிற்பம் போல இருப்பாள், தெரிந்தே வைத்திருப்பார்கள் போல.
என்னுடன் பணி புரியும் ஒரு பேராசிரியர்  மகனுக்கு ’பியாரி மக்ரே’ என்று பெயரிட்டிருக்கிறார்.கேட்டதற்கு ரஷ்ய புரட்சியாளர் பெயரென்றார் அடுத்து பிறந்த மகனுக்கும் என்னவோ பெயர் சொன்னார் என் சிற்றறிவிற்கு அதை  நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை
எங்கள் கல்லுரி முதல்வர் தமிழ்த்துறையை சார்ந்தவர், அவர் மனைவி ஆங்கிலத்துறை ,ஒரெ மகள் ’மொழி
ஒவ்வொரு வருடமும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அழகிய வித்தியாசமான பெயர்கள் இருக்கும் சரியாக உச்சரிக்க கண்ணாடியை துடைத்துப்போட்டுக்கொண்டுதான் வகுப்பிற்கு செல்வேன்
சென்ற விடுமுறையில்  சரணை  விடுதியிலிருந்து அழைத்து  வந்தேன்.
வழக்கம் போல இந்த பெயர்களைபற்றிய  பதிவைச் சொல்லிக்கொண்டிருந்தேன்
அவன் பள்ளியில் அவனுடன்  படிக்கும் ’’ தண்ணீர்மலை, தீர்த் , அனுபவ் அகர்வால், துளிர்’’  பற்றியெல்லாம்  அவன் சொன்னதும் வியப்பாக இருந்தது. ஐஷ்வர்யா முல்லாமாரீ’  எனும் பெண்ணுக்கு ஏன் தமிழ் பசங்க எல்லாம் தன் அப்பா பெயரைச்சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள் என்று   தெரியாவிட்டாலும்    இவன்களை எங்கு பார்த்தாலும் ஒரே ஒட்டமாய் ஓடிவிடுவாளென்றும்  சொல்லிக்கொண்டிருந்தான்
தவமாய் தவமிருந்து  இரண்டு பெண்களுக்கு பிறகு  ஒரு   மகனை பெற்றெடுத்த என் பெற்றோர் எனக்கும் அக்காவிற்கும் லோகமாதேவி , சங்கமித்ரா என்று சுருக்கமாக பெயரிட்டு விட்டு அவனுக்கு மட்டும்
 ’விஜயரகுனாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமணிய சுந்தர வடிவேல்  எனப்பெயரிட்டு அவன் மீதான் பிரியத்தை காட்டி  இருக்கிறார்கள் அவன்  திருமண் அழைப்பிதழிலும்  கூட இப்படியேதான் அச்சிட்டோம்
  பாரதியார் பல்கலையில் மொழியியலில், நீலகிரி தோடர்கள்,  படுகர்கள்  பெயர்களில் ஆய்வு செய்த என் தோழியுடன் 97ல் கள ஆய்விற்கு  நானும் சென்றிருந்த  போது ஒரு வீட்டில்  3 பெண்குழந்தைகளுக்கு  வயலெட், ஆரன்ஞ், மற்றும் ரோஸ் என்று பெயரிட்டிருந்தார்கள்,  அங்கிருந்த அக்குழந்தைகளின் பாட்டன் என்  பெயரைக்கேட்டு விட்டு லோகமாதேவி என்பது  மிக புராதானமாயிருக்கிறது என்று  அபிப்ராயபட்டார், வயலட்டிற்கு இது புராதானம்தான்.
வெண்முரசில் சமீபத்தில் வாசித்த மென்மொழி என்னும் பெயர் என்னவோ மிக பிடித்து விட்டது. என் பெயரையே அப்படி மாற்றிக்கொள்ளலாமா என்று கூட நிறைய யோசித்தேன் பின்னர் இந்த வலைப்பூவிற்கு  பெயராக  வைத்துக்கொண்டேன்
பின்னும் ஆசை அடங்காமல் சரண் தருணிடம் அவர்களூக்கு பிறக்கும் பெண்களுக்கு மென்மொழி என்று பெயரிட வேண்டும் என சத்தியம் வாங்கிக்கொண்டிருக்கிறேன்.கல்லூரியில் ஒரு பேரசிரியையின் மகளின்இரட்டைக்குழந்தைகளுக்கு ஹாசினி ,பாஷினி என்ப்பெயரிட்டேன்.
இப்படி என்பிரியத்திற்கு உகந்த பல பெயர்கள் உண்டு ஹைமாவதி, தாம்ரா, அதிதி, ஸ்துதி,…………………
 நிறைய சிந்திக்க வைத்த பதிவு இது

நேசம்

நீ பேசிக்கொண்டிருக்கையில்

செவிகளே உடலாகி

குரலாக மாறிவிட்ட உன்னை கேட்டுக்கொண்டிருக்கிறேன்

 

நான் கேட்க விரும்புவதைத்தவிர

வேறு என்ன என்னவோ பேசுகிறாய் எப்போழுதும்

 

எப்போதாவதுதான் தெரியாமல் கைபட்டு

இனிப்பை தொட்டுக்கொண்டது போல

என் மீதான் உனதன்பை கோடிட்டு காட்டுகிறாய்,

 

நீ பேசி முடித்த பின்னர்

கைப்பேசியின் உள்ளிருந்து உருவி எடுத்து

உன் வாக்கியஙகளை சொல் சொல்லாக பிரித்தெடுத்து

வேறு வேறாக அடுக்கி கட்டமைத்துப்பார்க்கிறேன்

 

ஒளிந்திருக்குமோ என்மீதான உன் காதல்

இவற்றுக்குள் எங்கேனுமென்று!!

எழுதாக்கவிதை

கவிதை மொழியிலேயே பேசுகிறாய் என்னுடன் எப்பொழுதும்,

உன் கவிதையைப்பிடித்தபடிதான்

உன் உலகிற்குள் நுழைந்திருக்கிறேன்.

ஆயினும், ஒன்றே போலிருப்பதில்லை உனது கவிதைகள் யாவும்.

 

ஒரு சில  திரிசூலமும், மழுவும், உடுக்கையுமாய்

மூன்றாம் கண்ணுடன் முப்புரம் எரிக்கையில்

திகைத்து தள்ளி நின்று கொள்கிறேன்.

 

இன்னும் சில ஆயிரம் தடக்கைகளில்

ஆயுத்தத்துடன் ஆங்காரமாய் வ்ருகையில்

அடைக்கலம் கோருகிறேன்.

 

முள்கிரீடம் அணிந்து , சிலுவையில் அறைபட்டு

குருதி கசிகிறது சிலவற்றில்

அவற்றை, பதறி எடுத்து மடியிலிட்டு முந்தானையால் துடைக்கிறேன்.

 

குப்பைத்தொட்டியில் போடப்பட்ட

பச்சிளம் சிசுவாய் பரிதவித்து வீரிடும்

கவிதைகளை

அள்ளிஎடுத்து என் முலைகொடுக்கிறேன்.

 

ஒரு சிலவே மென் திரையாக இருப்பதால்

மெல்ல விலக்கி கடந்து செல்கிறேன்.

 

  வெகு சிலவே    சிற்றகலின் ஒற்றைச்சுடரின்

ஒளியில்  தெரியும்  கடவுள்களைப்போல

சொந்தமென்னும் உணர்வையும் நம்பிகையும் அளிக்கின்றன.

 

கனத்த சில கவிதைகள்

குளிரும் இரவுகளில் என்னை முழுவதும் மூடியிருக்கும்

கதகதப்பான மகிழம்பூ மணக்கும் கம்பளியாகின்றன.

 

இன்னும்   ஒன்றே ஒன்றுதான்

உன்னால் எழுதாக்கவிதையாய் இருக்கிறது

என் கழுத்தின் குருதிக்குழாயை

வலியின்றி வெட்டும் நஞ்சு தோய்ந்த

உன் கூர் வாள் கவிதையொன்றினையும் எழுதி விடேன்.

 

உன் கவிதைகளோடு வாழ்வதைப் போலவே இனிதானது

குருதி கொப்பளிக்க அவற்றாலேயே சாவதும்!

ஆமென் ஆமென்

பேருந்தின் படிக்கட்டுகளில்

ஒற்றைக்கையால் பற்றிக்கொண்டு

ஊசலாடும் பயணமொன்றில்

அறுந்து விட்டதென் செருப்பின் நீல வாரொன்று,

அவசரமாய் உதறினேன் இரண்டையுமே

காலடியில்

விரைந்து கொண்டிருந்த  கரிய தார்ச்சாலையில்,

 

பலநாட்களாய் உயிருக்கு போராடிய

அவற்றினின்றும் விடுதலை பெற்ற

என் பாதங்களின்புத்துணர்வை
சொல்லிப்புரிய வைக்க முடியாதென்னால்!
கீழ்மை நிறைந்த காத்திருப்புகளுக்கும்
கடந்து வந்த கடினப்பாதைகளுக்கும்
இயலாமையும் நிராசையும் நிறைந்த
என்னை இதுவரை சுமந்து தேய்ந்ததற்கும்
மெளன சாட்சியான  அவை அங்கெயே கிடக்கட்டும்
என் இறையே, அருள்வீராக
அதன் மீதாவது ஏதேனும் ஒரு பெரு வண்டியின் சக்கரங்கள் ஏறிச்செல்லும்படி,
ஆமென், ஆமென்
« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑