லோகமாதேவியின் பதிவுகள்

Category: பொது (Page 1 of 2)

தெய்வமதி!

சாம்பவி சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு இளங்கலை பொறியியல், தொழில்நுட்ப மற்றும் கட்டிடக்கலை படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய அளவில் தரப்படுத்தப்பட்ட கணினி அடிப்படையிலான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மை (பயப்பட ஒன்றுமில்லை JEE (Main என்பதை தமிழில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான்)  எழுதியிருந்தாள். 

வீட்டில் சரணுக்கு பிறகு சாம்பவிதான் இதை எழுதினாள். தருண் இந்த வழிக்கே போகவில்லை அவனது இலக்கான காட்டியலுக்கான தேர்வை மட்டும் எழுதினான். சரணும் சாம்பவியும் இந்த நுழைவுத்தேர்வுக்கென ஒருபோதும் பிரத்யேகமாக தயாரித்துக் கொள்ளவில்லை இதற்கென இருக்கும் சிறப்பு கட்டண கல்வி வகுப்புகளில் சேரவும் இல்லை. 

சரண் 1 வார க்ரேஷ் வகுப்புகளில் சேர்ந்திருந்தான். முதல்நாளின் முதல் வகுப்பில் ஆசிரியர் தவறாக சொல்லிக் கொடுத்த ஒரு பாடத்தின் பகுதியை வகுப்பில் திருத்தினான் பின்னர் அவனும் வகுப்புகளுக்கு செல்லவில்லை. மிக நல்ல மதிப்பெண்களை பெற்றான்.

சாம்பவி சரண்  தருண் மூவருமே அடிப்படையில் புத்திசாலிகள். தரமற்ற பள்ளிக்கல்வியும், பொருந்தாத வகுப்பறைச்சூழலும் ஆசிரியப்பணிக்கான அர்ப்பணிப்பும் தகுதியுமில்லாத,  தரப்படுகின்ற  சொற்ப சம்பளத்தின் அதிருப்தியை மாணவர்கள் மீதான வெறுப்பாக வெளிப்படுத்தும் ஆசிரியர்களுமாக மொண்ணையாக்கியதன் பிறகும் தப்பித்து வந்தவர்கள் மூவரும். 

சரணும் தருணும் ஒரு நல்ல பள்ளியில் பள்ளி இறுதியை கற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள்.ஆனால் சாம்பவி அதை தவறவிட்டாள். வெண்முரசில் அம்பையை’’ நெய்யுண்ட வேள்விச்சுடர் போல்’’ என்று வர்ணிக்கும் ஒரு வரி வரும். அப்படி வீட்டின் கொற்றவையாக குலக்கொழுந்தாக இருக்கும் ஒற்றை மகளை வெளியே எங்கும் அனுப்ப முடியாத, அவள் முகம் காணமுடியாத மாலைகளில் வீடுதிரும்புவதை கற்பனையிலும் காணச் சகியாத விஜி என்னும் தகப்பனின் பலவீனத்தின் பலனை சாம்பவி இந்த இரு வருடங்கள் அனுபவித்தாள். 

 இந்த இருவருடங்களும் அவள் கல்வி கற்ற (அல்லது அவள் இருந்த ) அந்த இடம் அவளை ஏகத்துக்கும் சிதைத்தது. கல்வியை வியாபாரமாக்கிய பல நிறுவனங்களில் அப்பள்ளியும் ஒன்று.   இனி திரும்பக்கிடைக்கவே கிடைக்காத இளமைப்பருவத்தின் அரிய தருணங்களை அவளுக்கான ஓய்வை அவளுக்கான விருப்பங்களை இழந்தாள். தொடர்ந்த கடும் உழைப்பாலும் ஓய்வில்லாதாலும் கேசமிழப்பும் இருந்தது. அவளின் பத்திரத்தை உறுதி செய்யவும் அவள் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ளவும் விஜியும் இத்தனை ஆண்டுகள் பாடுபட்டதை காட்டிலும் இந்த இருவருடங்கள் கடுமையாக உழைத்தான். 

எளிதாக மகிழ்ச்சியாக பள்ளிக்கல்வியை நிறைவு செய்த காலங்கள் காணாமல் ஆகிவிட்டன. ஒரு விஷக்காய்ச்சல் போல அனைவரும் தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டு இந்த இறுதி வகுப்புக்களை கடினமாக்கிக்கொண்டு  குழந்தைகளையும் கொடுமைப்படுதிக்கொண்டு கல்விக்கூடங்களுகு வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

சாம்பவி மிக எளிதாக விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் இந்த தேர்வை எழுதினாள். இந்த குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை அவள் எந்த சிரமமும் இல்லாமல் பெற்றது எனக்கு மகிழ்ச்சி மேலும் இதுபோன்ற சிறப்பு வகுப்புக்களின் அவசியமின்மையையும் இந்த தேர்வு முடிவுகள் காட்டுகிறது. 

சாம்பவி  புறத்தில் மட்டுமல்லாது அகத்திலும் அத்தையின் சாயலை கொண்டிருப்பவள். அவள் ஈடுபட்டிருக்கும் அனைத்திலும் அத்தையை கொண்டுதானே இருப்பாள்? 

தெய்வமதி ஸ்ரீ சாம்பவிக்கு  அன்பும் ஆசிகளும்!

கோவை 6 வது மலர்கண்காட்சி பரிதாபங்கள்.

தாவரவியல் பூங்காக்கள் நடத்தும்  மலர் கண்காட்சிகள் மீது எனக்கு தனித்த பிரியமுண்டு. சிறுமியாய் இருக்கையில் எல்லா பள்ளி விடுமுறைகளும் ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த அத்தை மாமா வீட்டில்தான்  இருப்பேன், எனவே கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி பல வருடங்களாக பரிச்சயமாகி இருந்தது. பிரபல சினிமா நடிகர்கள், எஸ்பிபி, ஜானகிம்மா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் எஸ் வி சேகரின் நாடகம் என பல விஷயங்கள் எனக்கு  ஊட்டி மலர் கண்காட்சியில்தான் அறிமுகமானது.

அதிலெல்லாம் கொள்ளை அழகாய் கொட்டிக்கிடக்கும் மலர்களை கண்களை விரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த போதுதான் எனக்குள்  தாவரவியல் ஆர்வம் முளைவிட்டிருக்கக் கூடும். 

அதன்பிறகும் கல்லூரி சுற்றுலாக்களில்  ஊட்டி மலர் கண்காட்சி  அதன் தொடர்ச்சியாக தொட்டபெட்டா செல்வது என எப்போதும் என் மனதில் மலர் கண்காட்சிகளுக்கென தனித்த இடமிருந்தது.

 நான் பேராசிரியர் ஆன பின்னர் கொடைக்கானல் ஏற்காடு மூணாறு என எங்கே மலர்க்கண்காட்சி என்றாலும் உடனே மாணவர்களையும்  அழைத்து கொண்டு செல்வது வழக்கமானது

சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் விவசாய பல்கலைக்கழக மலர் கண்காட்சி ஏற்பாடாகியிருந்தது அப்போதும் முழுத்துறையுமே 3 பேருந்துகளில் சென்றிருந்தோம்.

 மிக இனிய நினைவு அது ஏராளம் அயல் மலர்களும் இயல் மலர்களுமாக நேர்த்தியாக ஒருகுறையுமில்லாமல் சிறப்பாக நடத்தினார்கள் அப்போது. ட்யூலிப்களும் க்ளேடியோலஸ்களும் டேலியாக்களும் ரோஜாக்களுமாக  மலர்ப்பெருங்கடல் அன்று பார்த்தது.

 மிக முக்கியமான ஸ்டால்களும் இருந்தன மகன்கள் அப்போது சிறுவர்கள் அவர்களும் உடன் வந்திருந்தனர்  அப்போது வாங்கிய ஒரு டூல் செட் இன்னும் சரண் வைத்திருக்கிறான்

இப்போதும் கோவை மலர் கண்காட்சி என அறிவிப்பு எனக்கு வந்து சேர்ந்தது.

 எனவே துறையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அனைத்து மாணவர்களையும் அழைத்துக்கொண்டு அனைத்து பேராசிரியர்களும் கண்காட்சி துவங்கும் வெள்ளி 23 /2/24 அன்று (இன்று)  செல்வது என முடிவெடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக  துறைக்கான AAA எனப்படும் அகடமிக் அட்மினிஸ்ட்ரேடிவ் தணிக்கை வெள்ளி என முடிவானதால் Dr Sarvalingam அதை பார்த்துக்கொள்ளட்டும் என முடிவு செய்து மீதமிருந்த அனைவருமாக புறப்பட்டோம்

அதற்கு முன்னால் இன்னும் மகள்களை வெளியூர் அனுப்ப யோசிக்கும் கொங்கு பெற்றோர்களிடம் தொண்டை வலிக்க தாவரவியலை வகுப்பறைக்கு வெளியே கற்கும் அவசியத்தை பேசி அனுமதிவாங்கி, பேருந்துக்கு ஏற்பாடு செய்து பணம் திரட்டி முதல்வரிடம் எழுத்துபூர்வ அனுமதி வாங்கி என பலகட்ட முன்னெடுப்புக்கள் நடந்தது

கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் 150 ரூபாய் என தகவல் வந்ததும் திடுக்கிட்டேன் ஊட்டியில் கூட அத்தனை இல்லை

பொள்ளாச்சி மாணவர்கள் எல்லாம் மிக எளிய பின்புலம் கொண்டவர்கள் அவர்களிடம் பேருந்து கட்டணமல்லாது மேலும் 150 ரூபாய் வாங்க முடியாது. எனவே கோவை ரோட்டரியின் பங்களிப்பு இந்த கண்காட்சியில் அதிகம் இருந்தது என்பதால் ரோட்டரி நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன்

அவர் விவசாய பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரின் எண் கொடுத்தார் அவரை அழைத்துப்பேசி மாணவர்களுக்கு மட்டும் 50 ரூபாய் அனுமதி வாங்கினேன்

ஆசிரியர்களுக்கு எந்த சலுகையும் இல்லை என்றார்கள் சரி என்று ஒத்துக்கொண்டேன்

ஆனால் 150 ரூபாய் என்றால் பொதுமக்கள் வரவும் குறையும், ஒரு சினிமாவை 120 ரூபாயில் பார்க்கிறோமே! 

மீண்டும் அந்த நண்பரிடம் பேசி அவரும் ஏற்பாட்டாளர்களிடம் பேசி அனைவருக்குமே கட்டணம் 100 என்றும் அனுமதிக்கடிதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு 50 என்றும் மீண்டும் முடிவானது

இன்று காலை புறப்படுகையில் இரண்டு பேருந்துகளுக்கு முன்பு அனைத்து மாணவ மாணவர்களையும் நிறுத்தி ஒரு நல்ல உரையாற்றினேன்.

 கல்லூரிக்காலத்தில் பயணம் எத்தனை முக்கியம் அதுவும் தாவரவியல் மாணவர்களுக்கு இப்படியான மலர்கண்காட்சிகளுக்கு செல்வது எத்தனை முக்கியம் என்பதையும் அங்கு காணப்போகும் எக்ஸோட்டிக் மலர்களை வேறெங்கும் காண வாய்ப்பில்லை என்பதையும் சொல்லி நான் முன்பு  ட்யூலிப் மேனியாவை குறித்து எழுதிய மலர்பித்து என்னும் கட்டுரையின் இணைப்பை அளித்து அதையும் வாசிக்கச் சொல்லி அந்த ட்யூலிப்மலர்களை இன்று அவர்கள் பார்க்க விருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னேன்

  அவர்களை ஒரு பேரனுபவத்திற்கு மனதளவில் தயராக்கி பின்னர்புறப்பட்டோம்

நல்ல வெயிலில் 9.45க்கு  வந்து சேர்ந்தோம்.தாவரவியல் பூங்கா இருக்கும் இடத்துக்கு பேருந்து செல்லமுடியாது நெரிசலாகும் என்று எதிரிலிருக்கும் விவசாய பல்கலைக்கழகத்துக்குள் பேருந்தை நிறுத்த சொல்லி அங்கிருந்து வெகுதூரம் நடந்து வந்து சாலையை கூட்டமாக கடக்க காவலர்கள் உதவி பின்னர் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு ஒருவழியாக வந்தோம்

 வாழ்க்கையை விட பல பல திருப்பங்கள்  கொண்டிருந்த மூங்கில் கழிகளால் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக வழியில் நடந்து நடந்து நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடம் வந்ததும் UPI அல்லது பணம் இரண்டில் எது என்னும் கேள்வி, தொகையாக செலுத்துகிறேன் என்றதும் அதற்கு மேலும் சில திருப்பங்கள் செல்ல வழி காட்டினார்கள்

சலிக்காமல் அங்கும் நடந்து முதல்வரின் கடிதம் வேண்டும் என கேட்டிருந்தார்கள் அதை கொண்டு வந்திருந்தோம் காட்டினோம் ஆனால் சலுகை இல்லை அனைவரும் 100 கட்ட வேண்டும் என்றார்கள். நான் தொடர்பு கொண்ட பேராசிரியரின் பெயரை சொல்லி அவர் போனில் அனுமதி அளித்திருக்கிறார் என்றேன்

பதிலுக்கு அவரிடம் போய் எழுதி வாங்கி வாருங்கள் என்றார்கள் எனக்கு பொறுமை குறைய தொடங்கியது. நாங்கள் வெளியூரிலிருந்து வந்து எங்கேயென்று இங்கிருக்கும் ஒரு பேராசிரியரை தேடிப்போவோம் 100க்கும் மேற்பட்ட இளம் மாணவ மாணவிகள் கடும் வெயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கோபித்துகொண்டதும் யாரோபோய் எங்கேயோ எழுதி வாங்கி வந்து ஒருவழியாக சலுகை கட்டணம் மாணவர்களுக்கு அளித்தார்கள்

கைகளில் அணிந்துகொள்ளும் காகித பேண்ட் ஒன்றை தீவிரமாக ஒரு பெண் எண்ணி எண்ணி எடுத்துக்கொடுத்தாள். 100 ரூபாய்க்கு பச்சை 50 க்கு இளம் சிவப்பு

வாங்கிகொண்டு வெளியே வந்து கைகளில் அணிந்துகொண்டிருக்கையில்தான் 25  எண்ணிக்கை குறைவாக பேண்ட் கொடுத்திருந்தார்கள் என்பது தெரிந்தது.

மீண்டும் அதே  இடத்துக்கு சென்று மீண்டும் எண்ணி வாங்கிகொண்டு வந்து ஏராளம் கெடுபிடிகளுக்கு மத்தியில் மலர் கண்காட்சி முகப்புக்கு வந்தோம்

Birds of paradise எனும் அரிய மலர்களை  கத்தரித்து நிலத்தில் நட்டு முகப்பில் அலங்கரித்திருந்தார்கள்’அதை அப்படியே தொட்டிகளில் வைத்திருக்கலாம் இன்றே அனைத்தும் வாடிவிடும் என்று ஆதங்கமாக இருந்தது

முகப்பில் கோவை மலர்கண்காட்சி என்பதையே மலர்களில் அமைத்திருந்தார்கள்.

 அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்

உள்ளே மேலும் கெடுபிடி இரண்டிரண்டு பேர்களாக வரவேண்டும் என்று. அப்படியே சென்றோம், ஒரு ஸ்கேனர் வழியாக செல்ல பணிக்கப்பட்டோம்.

எனக்கு ஆர்வம் அதிகமானது இத்தனை கனகச்சித ஏற்பாடுகள் இருப்பதால் முன்னைக் காட்டிலும் பிரமாதமான கண்காட்சியாக இருக்கும் என்று.

கோவை ரோட்டரி தொண்டாமுத்தூர் எல்லாம் எங்களை வரவேற்கும் அலங்கார தட்டிகள் ஆங்காங்கே நின்றன.

முகப்பில் ஒரு ரோட்டரி தட்டி ஒன்று தலைகுப்புற விழுந்து கிடந்தது அதை சரி செய்ய யாரையும் காணோம்.

ஒரு மரத்தடியில் ட்யூலிப் கள் தெரிந்ததும் ஆர்வமாக முதலில் அங்கே போனேன்

மஞ்சள் வெள்ளை சிவப்பு என எல்லா நிறங்களில் இருந்த ட்யூலிப்கள் புதுமண பெண்கள் போல் தலை குனிந்து நிலம் பார்த்திருந்தன

அருகில் சென்றால் அவை அனைத்தும் செடியில் இருக்கும் மலர்களல்ல வெட்டப்பட்ட மலர்த்தண்டுகளை பச்சை ஸ்பாஞ்சில் நட்டுவைத்திருந்தார்கள்.

முதல் நாள் காலையிலேயே அத்தனை வாடி தலைகவிழ்ந்திருக்கும் இவை இன்னும் இரண்டு நாட்களில் எப்படி இருக்கும் என நினைத்துக் கொண்டோம் அன்னப்பட்சிகள்  முயல் என் சில மலரலங்காரங்கள் நல்ல தகிக்கும் வெயிலில் வைக்கப்பட்டிருந்தன அவற்றில் செருகப்பட்டிருந்த மலர்கள் 1மணி நேரத்தில் வாடிவிடும் அளவுக்கு வெயில் அறைந்துகொண்டிருந்தது

 இதுபோன்ற மலரலங்காரங்கள் ஊட்டியின் சீதோஷ்ணத்துக்கு எந்த இடத்திலும் வைக்கலாம் கடுங்கோடை துவங்கி இருந்த கோவை பூங்காவில் நிழலான இடங்களில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும்

என்னதிது ஆரம்பமே இப்படி என உள்ளே என்னவோ எச்சரிக்கை மணி அடித்தது.

அவசர அவசரமாக வெட்டப்பட்ட தாவரங்களின் மிச்சம்மீதிகள் எல்லாம் அலங்காரங்களுக்கு அருகில் பெருக்கி சுத்தம் செய்யப்படாமல் அப்படியே குப்பையாக கிடந்தன.

வரிசையில் கையில் அடையாள பேண்ட் கட்டிக்கொண்டு ஸ்கேனர் வழியாக வந்த எங்களுக்கு முன்னால் எந்த ஸ்கேனரிலும் வந்திருக்க சாத்தியமில்லாத தெரு நாய்கள் குப்பைகளை கடித்துக்கொண்டு திரிந்தன. திகைப்பாக இருந்தது’, எதற்கு வாசலில் அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் உள்ளே நாய்கள் திரிகையில்?

குஞ்சு குளுவான்களாக கிண்டர்கார்டன் குழந்தைகள் எல்லாம் கூட்டமாக பேருந்துகளில் வந்திருந்தார்கள்.

கோடைக்காலமென்பது ரேபிஸ் காலமும்தான் அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கவேண்டாமா?

முகப்பிலிருந்து வழியெங்கும் செடிகளுக்கு நீர் ஊற்றப்படாமல் வறண்டு நிலம் இறுகிக்கிடந்தது இன்றிலிருந்து கண்காட்சி, ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதற்காக அல்ல கோடையில் செடிகளுக்கு நீர் விடவேண்டாமா?

நிலத்திலிருக்கும் செடிகளுக்கு மட்டுமல்ல தொட்டிச்செடிகளும் வாடி பாவமாக இருந்தன. தொட்டிகளின் மண்ணையும் தொட்டுப் பார்த்தேன் பாறைபோல் இறுக்கம்

ஆனால் வேடிக்கையாக செயற்கை நீரூற்றுக்களில் நீர் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது

என்ன அநீதி எத்தனை முரண்?

தாவரங்களை பார்க்கவென்று 60 கிமீ தொலைவில் இருந்து கட்டணம் செலுத்தி உள்ளே வந்திருக்கிறோம் செடிகளுக்கு நீர் இல்லாமல் வாடிகிடக்கையில் செயற்கை நீரூற்றில் நீர் ?

மேலும் மேலும் பெருந்துகளில் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும் வந்தபடியே இருந்தனர்.

எங்களுக்கு பிறகு வந்தவர்களுக்கு கைகளில் வண்ணப்பட்டைகள் இல்லை. உள்ளே ஏராளமான ஸ்டால்கள்.

வரும் சிவராத்திரிக்கு இலவச அமர்வுக்கு அணுகினார்கள் வருவதானால் விண்ணப்பிக்கிறேன் என்று சொல்லி விலகினேன்

கண்பார்வையை சோதித்துக்கொள்ளுங்கள் என்று ஒருவர் பின்னாலேயே வந்தார்.

பலமுறை மறுத்து என்னை விடுவித்துக்கொண்டேன்

அடுத்து  தைராய்டு செக் பண்ணிகொள்ளச் சொல்லி வற்புறுத்தல். மறுத்து அவசரமாக விலகினோம்.

வீட்டுக்கடன் தரும் நிறுவனம் நொச்சுப்பண்ணிக்கொண்டே இருந்தார்கள் கைகளில் ஏராளமாக் துண்டுச்சீட்டு களும் விளம்பரங்களும் நிறைத்தார்கள்.

எதற்கு வந்தோம் என்ன நடக்கிறது என்று யோசித்து கொண்டே நடந்தேன். அல்லிக்குளத்தில் காலி தண்ணீர் பாட்டில்கள் குப்புற கிடந்தன துணையாக காலி சிப்ஸ்பாக்கட்டுகளும் மிதந்தன.

ஸ்டால்களை தவிர எங்குமே குப்பைத்தொட்டிகள் இல்லை நோட்டீஸ்கள் எல்லாம் கசக்கி போடப்பட்டு பூங்காவெங்கும் இரைந்து கிடந்தன.

என்னிடம் இருந்தவற்றை போட குப்பை தொட்டி தேடி எங்கும் கிடைக்காமல் ஒருமரத்தடியில் வேறு வழியே இல்லாமல் போட்டேன்

டென்னிஸ் கோர்ட் போல் ஒரு மலரமைப்பு அங்கும் மலர்செடிகள் இல்லை வரிசையாக பச்சை ஸ்பாஞ் வைத்து அதில் வெண்ணிற மலர்கள் அமைத்திருந்தார்கள் அதுவும் நல்ல வெயிலில்.

கோழிகொண்டை பூச்செடிகள் வைத்திருந்த தொட்டிகள் எல்லாம் நீரின்றி பரிதாபமாயிருந்தன.

அலங்கார வாழைமரங்களில் பாதியை அப்போதுதான் கட்டிக்கொண்டு இருந்தார்கள். 11 30 மணிக்கு மேலும் பல பெட்டிகளில் மலர்கள் பிரிக்கப்பட்டிருக்கவில்லை

அழைப்பிதழில் 9 – 7 மணி என்றிருந்தது

ஆனால் முற்பகலாகியும் எதுவுமே துவங்கப்பட்டிருக்கவில்லை

அரசுப்பொருட் காட்சியை நினைவூட்டும் உணவுக்கடைகள் அலங்காரபொருட்கள் விற்கும் கடைகள் துவங்கி இருந்தன

வீடு துடைக்கும் மாப்  விவசாயபொருட்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஊறுகாய்கள் விற்கபட்டன

வழிகாட்டும் அறிவிப்புக்கள் இல்லை, எங்கு சென்று எதைபார்த்தபினன்ர் எதைப்பார்க்க வேண்டும் என்பதை  நாங்களாகவே  முடிவு செய்தோம்.

அழகிய ஊதா மலர்களுடன் படர்ந்திருந்த பெட்ரியாவின் மலர்களை ஒரு குடும்பமே இஷ்டத்துக்கு பறித்து தலையில் வைத்துக்கொண்டு போட்டோ எடுத்து கொண்டார்கள். தடுக்க யாரும் இல்லை. ’நான் அவர்களிடம்  உங்களுக்கு பின்னால் வருபவர்கள்  இந்த பூக்களை  பார்க்க வேண்டாமா? என்றேன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தார்கள்.

காபி குடிக்கலாம் என்றார்கள் உடன்வந்த பேராசிரியர்கள் வாங்கினோம் காபியாக இல்லாமல் பாயசத்தின் அக்காவாக தித்தித்தது. கீழே ஊற்றிவிட்டு நடந்தேன்

ஒரே மாதிரியாக அடீனியம் போன்ஸாய்கள்  அடுக்கி வைக்கப்பட்டிருந்தன

 பூங்காவின் கடைக்கோடியில்  நர்சரி இருந்தது அங்கிருந்து வாசல்வரைக்கும் செடிகளை வாங்கியவர்கள் சுமந்துகொண்டு செல்ல கஷ்டமாயிருக்கும். எப்போதும் கண்காட்சிகளில் இதுபோன்ற செடி விற்பனை எக்ஸிட்டுக்கு அருகில்தான் இருக்க வேண்டும்

பலர் இதற்கு சங்கடப் பட்டுக்கொண்டே வாங்காமல் சென்றார்கள் சிலர் புலம்பிக்கொண்டே வாங்கினார்கள்

நானும் கொடி ரோஜாச் செடிகள் வாங்கினேன்

வைத்துக்கொண்டு போகும் கவரொன்று 10 ரூபாய்க்கு கொள்ளை விலை சொன்னார்கள் சரியென்று வாங்கினேன் வேறு வழியில்லை வாசல் வரை சுமக்கனுமே?

ஆனால் வாங்கிய செடிக்கு பில் கேட்டால் இல்லை என்றார்கள்.’உண்மையிலேயே கடுப்பாக இருந்தது

3 கவர்களுக்கு 30 ரூபாய் கொடுத்தபின்னர் 2  கவர்தான் இருக்கிறதென்றார்கள்

 என் பொறுமை விளிம்புக்கு வந்து அதலபாதாளத்தை நோக்கி பாயத்துவங்கலாம் என்னும் எச்சரிக்கை அடைந்தேன். எனவே விரைந்து அங்கிருந்து நகர்ந்தேன்

கழிப்பறைக்கு சென்று விட்டு உணவருந்தலாம் என்று  தேடினோம். கழிப்பறை என்னும் அம்பு குறி அதிசயமாக எங்களுக்கு வழிகாட்டியது

கொடுமைகளில் மகா கொடுமையாக அத்தனை கூட்டத்துக்கு  3 தான் இருந்தது. மூன்றும் தற்காலிக கழிப்பறைகள்.  அவை மூன்றுமே உள்ளே பெண்கள் அமர்ந்து உபயோகிக்க முடியாதபடி கான்சன்ட்ரேஷன் கேம்ப் அறைகளைபோல மிக மிக குறுகலானவை. 

கழிப்பறைகளுக்கு முன்பாக பள்ளிப்பெண்களின் வரிசை நீண்டிருந்தது.  மூன்றிலிருந்தும் கழிவு நீர் வெள்ளமென வெளியெ வழியத்துவங்கியிருந்தது. உள்ளே பக்கட் மட்டும் இருக்கு மக் இல்லை என ஒரு சிறுமியின் கூச்சல் கேட்டது

அங்கே நிற்க முடியாமல் அடையாள அட்டை அணிந்திருந்த ஊழியர்களை விசாரித்து, செடிகளையும் சுமந்துகொண்டு நடந்து நடந்து நடந்து கண்டுபிடித்த  விளையாட்டு திடலுக்கருகே இருந்த கழிப்பறை மகா கோரமாக பலர் உபயோகித்து சேறும் சகதியும் நாற்றமுமாக இருந்தது

  வேறு வழியில்லாமல் அதையே  உபயோகிக்கச் சென்றால் அங்கு  கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை ஒருவர் உள்ளிருக்க ஒருவர் வெளியில் கதவை பிடித்துக் கொண்டு பயன்படுத்தினோம்

அருகில் பல பெண்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை குறிப்பாக ரோட்டரி அமைப்பை ஏகத்துக்கும் வசைபாடிக்கொண்டிருந்தார்கள்

நாங்களும் அதே!

பூங்கவெங்கும் உணவு மிச்சங்கள் காகிதங்கள் இறைந்து கிடந்தன

தெருநாய்கள் நடமாடினது போதாமல் நாய் கண்காட்சியும் இருந்தது.

பல கல் பெஞ்சுகளின் அருகில் அகற்றப்படாத குப்பைகள் குவிந்தும் பைகளில் கட்டப்பட்டும் கிடந்தன

 இப்படி பல பரிதாபங்களுக்கு இடையில் மாணவர்களுக்கு சிலவற்றை காண்பித்தேன்

 எனினும் விவசாய பல்கலையின் முக்கிய அங்கமான தாவரவியல் பூங்காவின் மரங்கள் கூட பெயரிடப்பட்டிருக்கப்படவில்லை என்பதை என்ன சொல்வது?

  முன்பு  இல்லாவிட்டாலும் கண்காட்சியின் பொருட்டாவது எழுதியிருக்கலாமே!

நீரில்லாத, பேரில்லாத செடிகளை காணவா கட்டணமும் கெடுபிடிகளும் சோதனைகளும் நீண்ட பயணமும்?

எத்தனையோ மறக்கமுடியாத மலர் கண்காட்சிகளின்  நினைவுகளுக்கு நடுவே முள்ளாய் உறுத்தும் இந்த கோவை 6 வது மலர் கண்காட்சி என்னும் பெயரில் நடந்த பரிதாப காட்சிகள்.

 குரு

பப்பா நியூ கினியின் ஒரு தனித்த கிராமமான வெய்சாவை சேர்ந்த 11 வயதான சிறுமி கிகியாவிற்கு திடீரென கால்கள்  ஊன்றி நிற்க முடியாமலாகியது. கைகால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டான போது, அவள் சத்தமாக கதறி அழுதுகொண்டும் இடையிடையே பயங்கரமாக சிரித்துக்கொண்டுமிருந்தாள். கிகியா அப்பகுதியின் ஃபோரே (Fore) தொல் குடியை சேர்ந்தவள்.

1930 வரை பப்பா நியூ கினியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே உலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டைக்காரர்கள் அங்கு சென்றபோதுதான் அங்கு லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வந்தது தெரிந்தது

1950களில் ஆராய்ச்சியாளர்களும்   மானுடவியலாளர்களும் காவலதிகாரிகளும் அரும்பாடுபட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு, அங்கு சென்றபோது   அங்கு கிராமங்களில்  ஆயிரக்கணக்கில் தொல்குடியினர்  இருந்ததும் அவர்களில் பலருக்கு குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்ததும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருந்ததையும் கண்டார்கள் 

அந்த நோய் அவர்கள் மொழியில் குரு என்றழைக்கப்பட்டது. அவ்வினத்தின் பெண்களும் குழந்தைகளும் மிக அதிக எண்ணிக்கையில்  கிகியாவைப்போலவே  நோய்வாய்பட்டு இருந்ததை அவர்கள்  கண்டறிந்தார்கள்

அவர்களில் பலருக்கு உடம்பு உதறி உதறிப் போடும் தீவிரமான வலிப்பு, பசியின்மை இருந்தது, உடல் அங்கங்கள் ஒத்திசைவு இன்றி நேராக நிற்கவோ நடக்கவோ முடியாமல் எலும்பும் தோலுமாக இருந்தனர். உடல் உதறிப்போடும் அறிகுறி வந்தவர்கள் அடுத்த  ஒரு வருடத்திற்குள் இறந்துபோனார்கள்.

ஃபோரே பழங்குடியினரின் மொழியில் குரியா என்னும் சொல் உடல் உதறுதல் என்னும் பொருள் கொண்டது. எனவே இந்நோய்க்கு குரு என்னும் பெயர் வந்தது.

இதற்கு  ’’நெகி நெகி’’ என்று அவர்கள் மொழியில் சிரிக்கும் நோய் என்னும் பெயரும் இருந்தது நரம்புகள் தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் வெடித்து சிரிப்பதும் அந்நோயின் அறிகுறி .

அப்பழங்குடியினர் இந்த நோயும், வலியும், இறப்பும் சூனியம் அல்லது இயற்கையை தாண்டிய ஒன்றின் தண்டனை அல்லது தீவினை என்று நம்பினர்.

வரலாறு

ஃபோரே மக்கள் துவக்கக்தில் குரு ஒரு சூனியநோய் என்றும் அதன் மந்திரசக்தி பிறருக்கும் பரவுகிறது என்றும் நம்பினர். பின்னர் தீய ஆவிகள் பிடித்துள்ளதாக நினைத்தனர். உடல் நடுக்கத்தை குணமாக்க சில காலம் சவுக்கு மரப்பட்டை சாற்றை அருந்த கொடுத்து வந்தனர் 

குரு குறித்த முதல் தகவல்கள் பப்பா நியூ கினியில்  (PNG) ரோந்து வந்த ஆஸ்திரேலிய காவலர்களால் 1950ல் பதிவு செய்யபட்டது. செவிவழிச்செய்திகள் 1910 லேயே குரு மரணங்கள் இருந்ததை தெரிவித்தாலும் அதிகாரபூர்வ ஆவணங்கள் 1950லிருந்துதான் கிடைத்திருக்கின்றன. 1953ல் ரோந்துக்காவலரான ஜான்,   (John McArthur),  தனது அறிக்கையில் குரு நோயின் அறிகுறிகளை பதிவு செய்திருந்தார். ஃபோரே இனத்தவர்களின் விசித்திரமான சடங்குகளால் உருவான குரு நோய் ஒருவகை மன நலக்கோளாறு என்று  அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

குரு கட்டுக்கடங்காமல் பெரிதாக பரவிய போதுதான் தொல்குடி இனமக்களே   பப்பா நியூ கினியில்  பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவ அதிகாரியான சார்லஸ் (Charles Pfarr) என்பவர் மூலம் ஆஸ்திரேலிய மருத்துவ அமைச்சகத்துக்கு    தகவலனுப்பினர்,

 1957ல்  அமெரிக்க மருத்துவர் கார்ல்டன் (Dr. Carlton Gajdusek) பப்பா நியூ கினியின் மருத்துவ ஆலோசகர் திரு வின்சென்ட் ஜிகாசினால் (Vincent Zigas) அழைத்து வரப்பட்ட போதுதான் அது என்ன நோயென்பது உலகிற்கு தெரியவந்தது

அந்நோய் குறித்த தனது முதல் மருத்துவ அறிக்கையை அவர் வெளியிட்டபோது, உலகிற்கு அதன் தீவிரம் புரியவில்லை.1957ல்  குரு குறித்த இவரது விரிவான ஆய்வுக்கட்டுரை,  Medical Journal of Australia வில் வெளியானது. அக்கட்டுரையில் அவர் குரு ஒரு மரபுவழி நோயாக இருக்கலாமென்றும் ஒரு வகை வைரஸினால் அது உருவாகிறது என்றும் தெரிவித்திருந்தார்

 1960 ல்  அடிலெய்ட் மருத்துவரான  மைக்கேல் அல்பெர் (Michael Alpers) இந்த மர்மமான நோயை குறித்து அறிய அந்த கிராமத்துக்கு வந்தார்,   Dr. கார்ல்டன் உடன் இணைந்து அந்நோயை ஆராய்ந்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் குரு நோயை குறித்த ஆய்வுக்காக அர்ப்பணித்தார்

வலிப்பு நோய் என்னும் பொருளில் அவர்களின் மொழியில் குரு என்றழைக்கப்பட்ட அந்நோயை இருவரும் மிக கவனமாக ஆராய்ந்தார்கள். ஏன் அந்நோய் அந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வருகிறது என்பதை துவக்க காலங்களில் இருவராலும் யூகிக்கவும் கண்டுபிடிக்கவும் முடியாமலிருந்தது

நோய் அறிகுறிகளை விரிவாக ஆராய்ந்தபோது இருவருக்கும்  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  ஆடுகளுக்கு இருந்து வந்த மூளை அழிவு நோயை குறித்த நினைவு வந்தது. அந்நோய் ஃப்ரான்ஸ் மக்களால்  trembling disease என்றும் ஆங்கிலத்தில் scrapie என்றும் அழைக்கப்பட்டது

குரு மற்றும் ஸ்க்ரேபிக்கு இடையே இருந்த ஒற்றுமைகளின் மூலம் குரு மூளையில் உண்டாகும் ஒரு நோய்  என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் மூளையை நுண்ணோக்கியில் பார்க்கையில் மூளை பஞ்சு போல மாறிவிட்டிருப்பதையும், மூளையில் ஏராளமான நுண் துளைகள் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் ஸ்க்ரேபியைபோலவே குருவும் ஒரு தொற்றுநோய் என்பதுவும் உறுதியானது

எனவே குருவின் தொற்றும் தன்மையை  இருவரும் உறுதி செய்ய நினைத்த சமயத்தில் தான் கிகியா குருவின் ஆரம்பகட்ட அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டிருந்தாள்

இந்த சோதனையை குரங்குகளில்  செய்ய  இருவரும் முடிவெடுக்கையில் படிப்படியாக நோய் முற்றி கிகியா  இறந்துபோனாள். கிகியாவின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவளது மூளையின் ஒரு சிறு பகுதி அமெரிக்காவின் ஆய்வமொன்றிற்கு அனுப்பப்பட்டது   

அங்கு டெய்ஸி மற்றும் சார்லெட்டி என்னும் இரு சிம்பன்ஸிகளின் மூளையில் கிகியாவின் மூளைக்கரைசல் ஊசியாக  செலுத்தபட்டபோது. இரு சிம்பன்ஸிகளுக்கும் விரைவில் குரு தொற்று உண்டானது. எனவே மூளையில் உண்டாகும் இந்நோய் அடுத்தவர்களுக்கும் பரவும் என்பது நிரூபணமானது.

 ஃபோரே தொல்குடியில்.பெரும்பாலும் பெண்களுக்கு அந்நோய் தொற்று உருவாகி பலர் இறந்திருந்ததால் சில கிராமங்களில் முற்றிலும் பெண்கள் இல்லாமல் இருந்ததை ஆய்வாளர்கள் கண்ட போதுதான் ஃபோரே இனமே அழியும் அபாயத்திலிருந்ததை உலகம் அறிந்துகொண்டது.

அதே சமயத்தில்   குரு நோயின்   தொற்று மற்றும் பரவலில் ஆய்வு செய்து கொண்டிருந்த  நியூயார்க்கின் மருத்துவ மானுடவியலாளர் ஷர்லி லிண்டென்பாம் (Shirley Lindenbaum), தனது ஆய்வின் முடிவில் புதிதாக ஒன்றை கண்டடைந்திருந்தார். 1960க்கு பிறகு பிறந்த யாருக்கும் குரு தொற்று இல்லை என்னும் அந்த முடிவு அக்காலத்துக்கு முன்பு வரை அத்தொல்குடியினரின் எதோ ஒரு வழக்கத்தின் மூலமே குரு உருவாகி தொற்று பரவி இருக்கும் என்பதை அறிவித்தது

ஃபோரே தொல்குடியினருடன் தங்கி இருந்து பல வருடங்கள் ஆய்வு செய்தவரான அவர் அவ்வினத்தவர்கள் அழிவின் விளிம்பில் இருந்ததால் எப்படியேனும் தங்கள் இனத்தை பாதுகாக்கத்தான் நினைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்

ஷர்லி 1961ல் ஒவ்வொரு கிராமமாக சென்று தரவுகளை சேகரித்தார். அவற்றின் அடிப்படையில் 1960க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குரு தொற்று உண்டாகவில்லை என்பதை கண்டறிந்தார்,

எனவே அவர்களோடு பல காலம் இருந்து ஆய்வு செய்த ஷர்லிக்கு அவர்களின் விசித்திரமான இறப்புச் சடங்கு தான் அதற்கு காரணமாயிருக்கலாம் என்னும் சந்தேகம் இருந்தது

ஃபோரே இனத்தில் ஒருவர் மரணமடைகையில் அவரது சடலத்தை குடியினர் அனைவரும் சமைத்து பகிர்ந்துண்ணும் வழக்கம் இருந்தது. அது அவர்களின் தொல்நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டு காலமாக நடந்து வந்தது 

நரமாமிசம் உண்பது குரு தொற்றிற்கு காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகம் குருவை ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களுக்கும் இருந்ததெனிலும் அதற்கான அடிப்படை அறிவியல்  ஆதாரமில்லாததாலும் முன்பெப்போதும் அத்தகைய நோயை கேள்விப்பட்டிருக்காததாலும் அதிகாரபூர்வமாக குருவிற்கு நரமாமிசம் உண்பதுதான் காரனம் என 1967 வரை யாருமே பதிவு செய்திருக்கவில்லை

1967ல்  கிளாஸெ, மோரெ, ( Glasse,   more)  மற்றும் 1968 ல் மேத்யூஸ் மற்றும் லிண்டன்பாம்  (Mathews & Lindenbaum) ஆகியோரே நரமாமிசம் உண்பதால் குரு உருவாவதை ஆதாரத்துடன் தெளிவாக நிறுவினார்கள்.

இவர்களைப்போலவே  E. J. Field என்னும்  பிரிட்டிஷ் நரம்பியல் மருத்துவர்   1960s- 1970 களில் பப்பா நியூ கினியில் தங்கி இருந்து இந்த நோயை ஆராய்ந்தார்

குருவை  scrapie மற்றும்  multiple sclerosis. நோய்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து எழுதப்பட்ட  இவரது குரு ஆய்வுக்கட்டுரைகளை வாசித்த பிரிட்டிஷ் மருத்துவ கழகம் இவரை  புதிய மூளை நோய்களை ஆராயும் குழுவின் இயக்குநராக நியமித்தது.

இவரின் ஆய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டுதான்  1970 BBC Horizon  நர மாமிசம் உண்பது தொடர்பான மிக முக்கியமான ஆவணப்படமாகிய New Guinea வை உருவாக்கி வெளியிட்டது

மானுடவியலாலர்களும் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் பப்பா நியூ கினிக்கு வரும் முன்னரே நரமாமிசம் உண்பது அங்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது, எனினும் இவர்களின் முயற்சியினால் உலகம்  , குரு என்னும் நரமாமிசம் உண்பதால் வரும் நோயை  முதன் முதலாக அறிந்து கொண்டது

  பிறகும் பல ஆராய்ச்சிகள் அதில் நடந்து ஒரு வைரஸ் இந்த குரு நோய்க்கு காரணமாக இருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

 ஆனால் அது வைரஸோ பாக்டீரியாவோ பூஞ்சையோ அல்ல வெறும் புரதம், நோய் உருவாக்கும் வீரியமுள்ள புரதம் என பிற்பாடு கண்டறியப்பட்டது, 

வைரஸ்கள் என்பவை மிக எளிய உடலமைப்பை கொண்டவை.ஒரு புரத அடுக்கு அதனுள்ளிருக்கும் நியூக்ளிக் அமிலம் அவ்வளவுதான் ஒரு வைரஸ், சில வைரஸ்கள் வெறும் நியூக்ளிக் அமிலம் மட்டுமே உடலாக கொண்டவை மேலும் சில வெறும் புரத அடுக்கு மட்டுமே வைரஸாக இருக்கும் அவையும் நோய்க்கிருமிகள்தான். அப்படியான ஒரு வெறும் புரத வைரஸ்தான் பிரையான் என்பது.  

குருவை உண்டாக்கும் அந்த புரதமும் தவறாக திருகிய அமைப்பை கொண்டிருந்த பிரையான்கள் தான்  (prions).  அவை மூளையின் செல்களை தாக்கி அழிக்க வல்லவை. அப்படி அழிந்துவரும் மூளையில் பல துளைகள் உருவாகிக்கொண்டிருக்கும்

இந்த தொற்று  ஃபோரே இனத்தின் Creutzfeldt-Jakob Disease, எனப்படும் நரம்பு அழிதல் நோயினால் இறந்த ஒருவரின் சடலத்தை பிறர் உண்டதால் உருவாகி இருக்கலாம் என்று யூகிக்கப் பட்டது 

ஃபோரே இனத்தவர்களில் இறப்பு நிகழுகையில் இறந்தவர்களின் உடலை சமைத்து உறவினர்கள் அனைவரும் உண்ணுவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கம் வெளி உலகிற்கு தெரியவரவே வெகு காலமாகியது பின்னர் 1959ல் அரசு தலையிட்டு இறந்த உடலை உண்ணுவதை சட்டப்படி தடை செய்து அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தது.

Endo cannibalism அல்லது ritual cannibalism என்னும் இவ்வகை நரமாமிசம் உண்ணுதலின் பின்னணியில்  ஃபோரே இனத்தவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் இருந்தன.

 ஃபோரே இனத்தின் பிரபஞ்சவியல்

ஃபோரே இனத்தவர்கள் தொல்மொழியில்   அவர்கள் வாழும் பூமியை உயிருள்ளது என்று பொருள்படும் பகினா (bagina) என்று அழைத்தனர்.

 நிலப்பரப்பை  முழுமையாக உருவாக்கி முடித்த பகினா, மக்களை உருவாக்கி, மக்கள் தொகை பெருகிய பின்னர்  இனத்தின் பாதுகாவலர்களான இ அமனி (e amani) யை உருவாக்குகிறது.

இ அமனி என்பவை மலைகள் ஏரிகள் பைன் மரங்கள் மற்றும் பனைக்காடுகள். இவற்றை கடந்த பின்னர் நீத்தோருக்கான் உலகம் என அழைக்கப்பட்ட குகைகள் நிரம்பிய   வெலனந்தமுண்டி என்னும் பிரதேசம் (kwelanandamundi) இறந்தவர்களின் ஆன்மா சென்று சேரும் இடமாக தனியே வகுக்கப்பட்டிருந்தது.

ஃபோரேக்களின் ஐந்து ஆன்மாக்கள்

ஃபோரேக்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஐந்து ஆன்மாக்கள் முறையே அவுமா, அமா, க்வெலா,அவோனா மற்றும் யெசெகி  ( auma, ama, kwela, aona&  yesegi ) என இருக்கின்றன. 

மரணத்தருவாயில் கடைசி மூச்சின் போது உடனடியாக உடலை விட்டு வெளியேறுவது அவுமா. அது உடனே உயிர்  நீத்தோருக்கென தனியே வகுக்கப்பட்டிருக்கும்  வெலனந்தமுண்டி  பிரதேசத்துக்கு சென்று விடுகிறது .இந்த ஆன்மா ஒரு மனிதனின்  புண்ணியங்களுக்கானது.அது தான் வாழ்ந்த பகினாவுக்கு விடை சொல்லிவிட்டு உடனடியாக உடலை நீங்கிச் சென்று விடும்.

அவுமா பாதுகாவலர்களான இ அமானியிடம் சென்று தான் இறந்த காரணத்தை தெரிவிக்கிறது. அதை கேட்ட பாதுகாவலர்கள் நீத்தோருக்கான் இடமாகிய வெலனந்தமுண்டிக்கு செல்ல ஆன்மாவிற்கு வழி காட்டுகிறார்கள்.

நீத்தோருக்கு உறவினர்கள் படையலிடும் உணவும் நீரும் செல்லும் வழியில் அவுமாவால் எடுத்துக்கொள்கிறது. 

நீத்தோருலகில் வாசலில் இருக்கும் சிவப்பு ஆற்றை அடையும் அவுமா அக்கரையில் காத்திருக்கும் முன்னோர்களின் ஆன்மாவினால் வரவேற்கப்படுகிறது, அங்கு காத்திருக்கும் அவுமா, அமா என்னும் எலும்புகளின் ஆன்மாவும், க்வெலா என்னும் தசைகளின் ஆன்மாவும் வந்துசேர காத்திருக்கிறது. அவை வந்து சேர்ந்த பின்னரே தன் மூத்தோர்களிலொருவராக அது மறுபிறப்பெடுக்கும். ( ama (bones) & kwela (flesh))  

அமா (Ama) என்னும் ஆன்மா ஏறக்குறைய அவுமாவை போலத்தான் ஆனால் அதை காட்டிலும் சக்தி வாய்ந்தது. அது சடலத்துக்கு சடங்குகள் முறைப்படி செய்யப்படுகின்றனவா என கண்காணித்தபடி பூமியிலேயே காத்திருக்கும். உறவினர்கள்  மரணச்சடங்குகளை முறையாக செய்ய வழிகாட்டி, ஒருவேளை இறப்பு எதிரிகளால் நிகழ்ந்திருந்தால் அவர்களை தண்டிப்பதாக  அமா வஞ்சினம் உரைக்க செய்யும்.

இறந்தவர்களின் உடலை உறவினர்கள் உண்ணும் போது அமா அவர்களை ஆசிர்வதிக்கிறது. சடலத்தை உண்பவர்களின் ஆன்மாவாகிய அவோனா அப்போது அதிகரிக்கிறது. உடல் முழுக்க மிச்சமின்றி உண்டு முடிக்கப்பட்டதும் அமா விடைபெற்றுக்கொண்டு நீத்தோருலகிற்கு செல்லும். அங்கிருந்து பூமியிலிருக்கும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை அமா செய்யும்

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

  க்வெலா  ஆன்மா காற்றில் பயணித்து  மறைந்து நின்று கவனித்து மரணச்சடங்குகளை சரியாக செய்யாதவர்களை தண்டிக்கிறது

உடல் அழுகி கொண்டிருக்கையில் உடலிலிருக்கும் க்வெலா மிக சக்தி வாய்ந்தது என்பதால் கிராமத்தில் வாழிடங்கள் இருக்கும்  இடங்களுக்கு மிகத் தள்ளி இருக்கும் இடங்களில் தான் உடல் கிடத்தப்படும்

உடல் புதைக்கப்படுகையில் க்வெலா சக்தி குறைந்து காணப்படும். உடல் உண்ணப்படுகையில் க்வெலா, உடலை உண்ட பெண்களின் கர்ப்பப் பையில் தங்கி விடுகிறது. அங்கு அதன் பெயர் அனக்ரா ( anagra)  

உடல் சமைக்கப்படுகையில் வெப்பம் அதிகமாகும் போதுதான் க்வெலா விலகி நீத்தோருலகிற்கு செல்லும்

யெசெகி  ஆன்மா இறந்தவரின் சருமத்தில் தங்கி இருந்து க்வெலா கருப்பைக்குள் செல்லும் வரை உடன் இருந்துவிட்டு பின்னரே விடைபெற்றுக்கொள்ளு.ம் யெசெகி ஆன்மாவானது   இறந்த மனிதர், பெரும் வேட்டைக்காரராகவும், சக்திவாய்ந்தவராகவும் வாழ காரணமாக இருப்பது.

இவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில்  முறையாக  செய்யப்படும் மரண சடங்குகள் மூலமாக  இறந்த மூத்தோர் மீண்டும் அவர்களுக்கே பிறந்து வாழ்க்கை சுழற்சி தொடர்ந்து நடக்கும் என ஃபோரே குடியினர் நம்புகிறார்கள்.

இறந்த உடலை கையாளும் முறை

(இந்த பகுதி சிலருக்கு வாசிக்க ஒவ்வாமையை உண்டாக்கலாம்) 

மரணத்தருவாயில் இருப்பவர் சில சமயம் தனது உடல் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதை சொல்லிச்செல்வது உண்டு. இல்லாவிட்டால் உடலை என்ன செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்

இறப்பு நிகழ்ந்த உடனே உடல் முழுக்க, பித்தப்பையை தவிர  பங்குபோட்டு சமைத்து உண்ணப்படும்  அல்லது சில நாட்கள் புதைத்து வைத்து மீண்டும் வெளியே எடுத்து உடலில் இருக்கும் புழுக்கள் தனியாகவும், உடல் தனியாகவும் சமைத்தும் உண்ணப்படும். 

சில சமயம் உடல் ஒரு மேடையில் கிடத்தப்பட்டு மாமிசத்தை   சிறு பூச்சிகள் (maggots) உண்ணும்படியும் வைக்கப்படும்.

ஃபோரே தொல்குடியினர்  அவர்களுடன் வாழ்ந்து மறைந்த  பிரியமானவர்களின் உடலை இப்படி புழுக்களும்,பூச்சிகளும் உண்பதை காட்டிலும் அவர்களுக்கு விருப்பமான குடும்ப உறவினர்கள் உண்ணுவதே சிறந்தது என்று நம்பினார்கள்.

இப்படி உண்ணப்படுகையில் மிகுந்த சக்திவாய்ந்த க்வெலாவின் ஆபத்துக்களிலிருந்து தப்பி அதை கர்ப்பத்தில் அடுத்த சந்ததியாக தக்கவைத்துக்கொள்வது பெண்களுக்கு மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

இறந்தவர்களின் மீதான அன்பை, அவர்கள் இழப்பை குறித்த துக்கத்தை உடலை உண்பதன் மூலம் காண்பிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள். எனவே பெரும்பான்மையான ஃபோரே உட்பிரிவினங்கள் உடலை சமைத்து உண்டார்கள்.

இறந்த உடல் ஒரு கூடையில் வைக்கப்பட்டு மூங்கில், கரும்பு அல்லது சவுக்கு காடுகளுக்குள் உறவினர்களால் எடுத்துச்செல்லப்படும்

காடுகளில், துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு நிழல் இருக்கும், இறந்த உடலின் ஆன்மாக்கள் காடுகளில்தான் மகிழ்ந்திருக்கும் என்பதால் உடல் காட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

உடலை வெட்டித் திறந்ததுமே, பூமி உள்ளிருக்கும் ஆன்மாக்களை வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு உயரமான மேடையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் கீரைகள் காய்கறிகள் கிழங்குகளின் மீது விரிக்கப்பட்டிருக்கும் வாழை இலையின் மீது உடல் கிடத்தப்படும் . 

இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டிருக்கும் காய்கறிகளின் மீது உடல் வெட்டப்படும்போது சிந்தும் திரவங்கள் வீணாகாது என்பதால் இப்படி செய்யப்படுகிறது. உடல் பாகங்களும் திரவங்களும் சிந்தி வீணானால் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கசப்பு நிறைந்த பித்தப்பையை தவிர ஒரு துளி உடல் பாகமும் வீணாகாமல் அச்சடங்கு நடத்தப்படும் 

முதலில் உடலை பெண் மற்றும் ஆண் உறவினர்களுக்கிடையே சரிசமமாக பங்கு போட்டுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

குழந்தைகளை அங்கிருந்து விலக்கி வைப்பார்கள் எனினும் சில குழந்தைகள் மரங்களின் மீதிருந்து சடங்கை வேடிக்கை பார்ப்பதுண்டு

 கைக்குழந்தைகள் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்பதால் அவர்கள் 4 கிமீ தள்ளி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பார்கள். 

உடல் மூங்கில் கத்தியால் வெட்டப்பட்டு, மீண்டும் சதை சிறுசிறு துணுக்குகளாக வெட்டப்பட்டு சிறு குவியல்களாக கறிப்பலா இலைகளில் குவித்து வைக்கப்படும்

உடலின் கீழ்ப்பகுதி வெட்டப்படுகையில்   பெண்களும் இளையவர்களும் இனப்பெருக்க உறுப்புக்களை பார்க்கக்கூடாது என்பதற்காக வயதான பெண்கள்  வட்டமாக நின்று மனிதத்திரை உண்டாக்குவார்கள்

உடலை வெட்டி முடித்ததும் கைகளை வாழை நார், மூங்கில் குருத்துக்கள் கொண்டு துடைத்து சுத்தம் செய்துகொண்டு  மாமிசம் வேகவிருக்கும் அடுப்பு நெருப்பில் துடைத்த நாரையும் குருத்துக்களையும் போடுவார்கள். கடைசியாக பெண்கள் கைகளை அவர்களது புல்லாடையில் துடைத்துக் கொள்வார்கள்

மூங்கில் குழாய்களில் அடைத்து நெருப்பில் வேக வைக்கப்பட்ட மாமிசம் வாழையிலைகளில் கொட்டப்படும்.

முதல் உணவு துக்கம் விசாரிக்க வந்திருக்கும் ’எனாமே’ எனப்படும் வெளியூர் உறவினர்களுக்கு குச்சிகளில் குத்தப்பட்டு வாயில் நேரடியாக அளிக்கப்படும்.

அவர்கள் உணவை கைகளால் தொடக் கூடாது என்பது நெறி. அவர்கள் ஊர் திரும்பி செல்கையில் வெஸா (wesa) என்னும் செடியின் இலைகளை மென்று நர மாமிசம் உண்ட வாயை சுத்தம் செய்து கொள்வார்கள் 

ஃபோரே குடியினரின் உட்பிரிவான அடிக்மா என்னும் அடிகமனா மொழிபேசும் உட்பிரிவில் இறந்த ஆணின் இனப்பெருக்க உறுப்புக்கள் விதவையான அவரின் மனைவிக்கு அளிக்கப்படும்.   (Atigina – atikamana),   ஆனால் தெற்குப் பகுதியின் பிரிவான பமுசாகினா (Pamusagina) குடியினரிடம் இவ்வாறான பழக்கம் இல்லை.

பிரையான்களால் அழுகி இருக்கும்   மூளை ஒரு கூரான மூங்கில் குச்சியால் நெம்பி எடுத்து வேகவைக்கப்பட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அளிக்கப்படும். ஒருபோதும் 6 வயதுக்கு மேலான ஆண் குழந்தைகளுக்கு இது அளிக்கப்படமாட்டாது, ஆனால் எல்லா வயதிலும் பெண்கள் இதை உண்ணலாம்

குடிசையை விட்டு வந்திருக்காத, துக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு நரமாமிச உணவு கொண்டு போய் கொடுக்கப்படும்.

எலும்புகளில் பெரியவையும் மண்டை ஓடும் சில பிரிவு மக்களால் இறந்தவரின் குடிசையின் முன்பாக சாக்குப் பைகளில்  கட்டி தொங்கவிடப் படுவதும் உண்டு.  

மறுநாள் காலையில் உடல் சமைக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் சில பெண்கள் மீதமிருக்கும் எலும்புகளைக் இகாகி எனும் காட்டுப்புல்லில் சுற்றி நெருப்பில் வாட்டி அவற்றை மேலும் கீழுமாக கறிப்பலா இலைகளால் மூடி கற்களால் பொடித்து மிச்சமின்றி உண்பார்கள். உடலின் எந்த பாகமும் வீணாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருப்பார்கள்.

மாமிசம் வேகவைக்கப்பட்ட கருகிய மூங்கில் குழாய்களின் சாம்பலும் பொடித்து காய்கறிகளில் கலந்து உண்ணப்படும்

பின்னர் சமைப்பதற்கும் உடலை வெட்டுவதற்கும் உபயோகப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நெருப்பிலிட்டு அழிப்பார்கள். விதிவிலக்காக தாடை மற்றும் கழுத்தெலும்புகள் மட்டும் சிறுமிகளின் கழுத்தில் தாயத்தாக அணிவிக்கப்படும்.  

உடல் முழுமையாக உண்ணப்பட்டதும் இறந்தவரின் குடிசையின் வெளியே இருந்து புகை இடப்பட்டு குடிசை தூய்மையாக்கப்படும் பின்னர் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படும்

பெண்கள் எலிகளையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடி பிடித்து வருவார்கள் அவற்றைக் கொன்று, ரோமத்தை விதவையின் வீட்டு நெருப்பில் பொசுக்கி விதவையின் உடலில் இருக்கும் க்வெலாவை அந்த நாற்றதினால் வெளியேற்றிவிட்டு பின்னர் இறந்த விலங்குகளின் மாமிசத்தை   சமைத்து பெண்கள் மட்டும் உண்ணும் சடங்கு நடைபெறும்

பின்னர் துக்கம் விசாரிக்க வரும் உறவினர்கள் கீரை, புல் போன்ற இலை உணவு மட்டுமே உண்ணும் கவுண்டா (kavunda), என்னும்  மரணச்சடங்கின் நீட்சியான உணவுச் சடங்கு  நடைபெறும். இந்த சைவ உணவுச்சடங்கு பொதுவாக  மனிதர்கள் உண்ணக்கூடாத நரமாமிசத்தை உண்டதன் பிழையீடாக நடக்கும்.  

பின்னர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டாக வேட்டைக்குச் என்று விலங்குகளை கொண்டுவந்து சமைத்து விருந்துண்ணுவார்கள்,  

இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொள்ளாவிட்டால் இறந்தவரின் க்வெலா அவளை பாதுகாத்துக்கொண்டு அருகில் இருக்கும். ஒருவேளை மறுமணம் செய்துகொண்டால் க்வெலாவிடம் அவள் விடைபெறும் சடங்கும் நடக்கும்.

இச்சடங்குளினால் தான் நடுக்கநோய் எனப்படும் குரு அவர்களுக்கு உண்டாகிறது என்று தெரிய வந்தபின்னர் அவர்கள் நரமாமிசம் உண்பதை நிறுத்திக்கொண்டனர். கிருஸ்துவ மிஷனரிகளும் நரமாமிசம் உண்ணக்கூடாது என்னும் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினர். 

நோய் அறிகுறிகள்

துவக்க அறிகுறிகளாக உடல் நடுக்கம் வலிப்பு, நிலையில்லாமை, உடல் பாகங்களின் ஒத்திசைவின்மை ஆகியவை தோன்றும். கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் அறிகுறியும் இருந்தது.

நோய் முற்றும் போது வலிப்பு அடிக்கடி தீவிரமாக வருவதும்,  தாங்க முடியாத உடல் வலி, நடக்க முடியாமல் சிரமப்படுதல், பேச்சு குளறல்,தலைவலி ஆகியவை உண்டாகும். கடைசி நேரங்களில் விழுங்க , பேச முடியாமல் கோமா, தொடர்ந்து மரணம் ஆகியவை நேரும் 

குரு நோய்க்கு சிகிச்சை என ஏதும் இல்லாததால், தொற்று உண்டாகி 6 லிருந்து 12 மாதங்களில் இறப்பு நிகழும்

குரு மிக அரிதான நோய், பிரையான்கள் எனப்படும் நோய் உண்டாக்கும் புரதங்களால் இவை உருவாகி மூளையை பாதித்து இறப்பை உண்டாக்கும். 3 லிருந்து 50 வருடங்கள் வரை இந்த கிருமியின் நோயரும்பும் (incubation) காலம் இருக்கும்

 குரு மருத்துவ அறிவியல்

ஃபோரே இனத்திலும் அவர்களுக்கு அருகாமையில் வசித்த சில தொல்குடி இனங்களிலும் 1900 த்தில் குரு பரவலாக இருந்தது, 1940-50 வரையில் ஆயிரத்தில் 35 பேர் என்னும் அளவில் இறப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக மூளையை உண்ணும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  தசைகளை உண்ணும் ஆண்களை விட அதிக தொற்று உருவாகி இருந்தது

குரு ஒரு Transmissible spongiform encephalopathies (TSEs),  வகையை சேர்ந்த நோய் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.பிரதானமாக இது சிறுமூளையை பாதிக்கிறது.

குரு தொற்றிற்கு சிகிச்சை மருந்து என எதுவும் இல்லை. மூளையில் இருக்கும் பிரையான்களை ஃபார்மால்டிஹைடில்  வருடக்கணக்காக சேமித்து வைத்திருக்கையிலும் நோய் உண்டாகும் வீரியத்தை அவை  இழக்காமலிருக்கிறது 

PrP என குறிப்பிடப்படும் பிரையான்களில் இரு வகைகள் உள்ளன  PrPc என்பது சரியான மடிப்புக்கள் கொண்ட புரதம்,  PrPsc, என்பது தவறாக திருகிய மடிப்புகள் கொண்ட குரு உருவாக்கும் வீரியமான புரதம் 

PrPsc காலப்போக்கில் PrPc புரதத்தின் மடிபுக்களை தவறாகக் திருகச்செய்து அவற்றையும் நோய்க்கிருமி ஆக்கி இருக்கலாம் என்னும்  சாத்தியத்தையும் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறர்கள்

ஜுலை 1996 லிருந்து ஜூன் 2004 வரை நடைபெற்ற தீவிரமான ஆய்வில் 11 குரு தொற்றுக்கள் மட்டுமே  கண்டறியப்பட்டன

2005க்கு பிறகு புதிய தொற்றுக்கள் ஏதும் இல்லை, 1957ல் 200 குரு மரணங்கள் நிகழ்ந்தன, ஆனால் 2010க்குபிறகு குரு மரணங்கள் முற்றிலும் இல்லை. எனினும் பிரையான்களின் வீரியமும் நோயரும்பும் காலமும் மிக அதிகம் என்பதால் மருத்துவத்துறை குரு குறித்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்கிறது. 

funerary cannibalism. அல்லது rithual cannibalism எனப்படும் இறப்பு சடங்கில் சடலத்தை உண்ணும் ஃபோரே மக்களின்  Endocannibalism  என்னும் வழக்கத்தினால் குரு உருவானது இவ்வாறுதான் பலரின் அர்ப்பணிப்புள்ள ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது

நரமாமிசம் உண்பது எல்லா சமூகத்திலும் பயங்கரமானதும் விலக்கப்பட்ட ஒன்றுமாகவே இருந்திருக்கிறது. பண்டைய ரோமில் கிருஸ்துவர்கள் பலருக்காக தியாகம் செய்த ஒருவரின் உடல் ரகசியமாக சமைத்துண்ணப்படுவதாக வதந்திகள் உலவின. 

நற்கருணை எனப்படும் கிருஸ்துவின் கடைசி இரவு உணவின்  குறியீடாக திராட்சை மதுவும் அப்பமும் கிருஸ்துவின் ரத்தமும் சதையுமாக கருதப்பட்டு உண்ணப்படுவதன் மிகைப்படுத்தப்பட்ட வதந்திதான் அது​

போராளி இனங்களான  Iroquois  மற்றும் Fijians எதிரிகளின் சக்தியும் தங்களுக்கு கிடைக்குமென எண்ணி    தாங்கள் வென்ற எதிரிகளை சமைத்து உண்டனர்.  தென்னமெரிக்க பழங்குடியினரான  வாரிகளும்(wari) இவ்வாறு எதிரிகளை உண்பது வழக்கத்திலிருந்து .இது Exo cannibalism எனப்படுகிறது.  

​1979ல் வெளியான ’’நரமாமிசம் உண்பது என்னும் கட்டுக்கதை’’ என்னும் நூலில்   (Man-Eating Myth)   W. Arens அப்படியான ஒன்று எந்த காலத்திலும், எந்தச் சமூகத்திலும் நிகழ்ந்திருக்காது என்கிறார். ஒருவேளை கடும் பஞ்சத்தில் அப்படி நிகழ்ந்திருக்கலாமே தவிர மனிதர்களை மனிதர்களை எப்போதும் உண்டதில்லை என்று சொல்லும் அவர் 6 விரிவான அத்தியாயங்களில் நர மாமிசம் தொடர்பான கதைகள் நாட்டுப்பாடல்கள்  தொன்மங்கள் ஆகியவற்றை விவரித்திருக்கிறார்

  1986 ல் Peggy Reeves Sanday  என்பவர்  ’’Divine Hunger: Cannibalism as a Cultural System’’ என்னும் தனது நூலை வெளியிட்டார் அதில் நரமாமிசம் உண்பதற்காக நடைபெற்ற கொலைகளையும், மனித மாமிசம் ஊட்டச்சத்துக்களுக்காக உண்ணப் பட்டதையும்,  சில பழங்குடியினர் இயல்பாக நரமாமிசம் உண்பதையும் குறிபிட்டு எழுதி இருந்தார். cannibalism  தொடர்பான நூல்களில் இது முக்கியமான தரவுகளை கொண்டதாக இன்றளவும் கருதப்படுகிறது

 Michael Alpers, என்னும் ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் குரு நோயைக் குறித்து பல ஆண்டுகள்  2012 வரையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து குருவினால் நிகழ்ந்த  கடைசி  இறப்பை தெரிவித்தார். மேலும்  குரு முற்றிலும் இல்லை என உலகிற்கு அறிவித்தார்.

குருவிற்கான நோபல் பரிசுகள்

  • 1976-அமெரிக்க மருத்துவர்  Daniel Carleton Gajdusek- குரு தொற்றை கண்டறிந்ததற்காக
  • 1977-அமெரிக்க நரம்பியல் மருத்துவரும்,  வேதியியலளருமான Stanley Ben Prusiner  – பிரையான்களின் ஆய்விற்காக
  • ஸ்விஸ் வேதியியலாளரும் உயிரி இயற்பியலாளருமான Kurt -பிரையான்களின் புரத அமைபை கண்டுபிடித்தற்காக.

 குரு நோயுற்றவர்களின் மூளையை உண்ட பிறருக்கு நோய் வருவதும், பைத்தியக்கார பசு நோய் (Mad Cow disease) நோயுற்ற பசுவை உண்பவர்களுக்கும் வருவதும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

 மேலும் பிரையான் நோய்கள் இனி உண்டாகுமா? மான் வேட்டையாடி அதன் இறைச்சியை உண்ணும் வேட்டைக்காரர்களுக்கும், பிற நோயுற்ற காட்டுவிலங்குகளை உண்பவர்களுக்கும் இனிமேல் பிரையான் நோய் வரும் சாத்தியம் இருக்கிறதா?

இதுகுறித்துத்தான் வட அமெரிக்காவில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்

சமீபத்தில் வட அமெரிக்காவில் மர்மமான முறையில் உணவுண்ன முடியாமல் பட்டினி கிடந்து இறக்கும் மான்களின், எல்க்குகளின் உடலில் மூளையில் பிரையான்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் அந்த பிரையான்கள் மூளையில் மட்டுமல்ல இறந்த விலங்குகளில் உடல் முழுக்க இருந்தது

 எனவே மான்களின் இறப்பு விகிதம் இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோய் தடுப்பு மையமான CDC இப்போது வேட்டைக்காரர்களுக்கு பிரையான் நோய் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது 

உலகெங்கும் நர மாமிசம் உண்ணுதல் (Cannibalism) என்பது மானுடவியல் மற்றும் இறையியல் ரீதியாக அணுகப்படும் ஒன்றாகவே இருக்கிறது. கடவுளின் ரத்தம் சதை என உருவகப்படுத்தி அப்பமும் மதுவும் உண்ணப்படுவதும் சடங்கு ரீதியான நரமாமிசம் உண்பதின்  (Ritual cannibalism) ஒரு வடிவம் தான்

Anthropophagy  என்பது மனிதன் மனிதனை உண்ணுவது, Theophagy என்பது கடவுளின் உடல் என்று நம்பி உருவகப்படுத்திக்கொண்ட  உணவை உண்பதன் மூலம் கடவுளின் சக்தியை அருளை ஆசியை பெறலாம் என்று நம்புவதும் உண்பதும்.

ஐரோப்பாவின் மருத்துவ நரமாமிச உண்ணுதல் medical cannibalism எனப்படுகிறது. பட்டினிக் காலங்களில் உயிர்பிழைக்கும் கடைசி வாய்ப்பாக இறந்தவர்களை  உண்ணுவது Starvation cannibalism, விமான ப்பயணம் அல்லது கடல்வழி பயணங்களில் விபத்துக்களில் சிக்கி உணவுப்பொருள் தீர்ந்த போது உயிர்பிழைக்க சடலங்களை உண்பது survival Cannibalism. இப்படி பலவகையான நரமாமிசம் உண்ணும் வழக்கங்கள் உலகெங்கிலும் இருந்தன, இருக்கின்றன.

ஐரோப்பாவில்  மனித உடல்பாகங்களை மருத்துவக் காரணங்களுக்காக  உண்டவர்களை பற்றிய  ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஸ்விஸ் மருத்துவர்  பாராசெல்சஸ் (Paracelsus-1493/4-1541)  மருத்துவ காரணங்களுக்காக மட்டுமல்லாது  அரசர்களும் புனித தந்தைகளும் கூட பல காரணங்களுக்காக நரமாமிசம் உண்டதை எழுதினார்.

எனினும் இன்னுமே பிடிவாதமாக உலகின் எந்த பகுதியிலும் நரமாமிசம் உண்ணுதல் என்பது நடக்கவே இல்லை என்று வாதிடும் மானுடவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள்  இருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நாவல்களில் திரைப்படங்களில், நாடகங்களில், வீடியோ விளையாட்டுக்களில்  நரமாமிசம் உண்பது, குரு நோய் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருக்கிறது, உதாரணமாக: 

குரு இப்போது முற்றிலும் இல்லை. ஆனால் நரமாமிசம் உண்பது   முற்றிலும் கட்டுக்கதை அல்ல. இறந்த உடல்களின் குவியல்களின் மீது அமர்ந்து தியானம் செய்தால் அசாதாரண சக்தி கிடைக்கும் என்று நம்பிய திபெத் புத்தபிட்சுக்களை, காசியில் எரியும் பிணங்களின் உடலை தின்னும் அகோரிகளை நாம் அறிந்திருக்கிறோம்.  கடந்த 2022ல் கேரளாவில் நரபலி கொடுத்து நரமாமிசம் உண்டால் புதையல் கிடைக்கும் என்பதற்காக கொல்லப்பட்டு உண்ணப்பட்ட இரு பெண்களை குறித்த செய்திகளையும் அறிந்திருக்கிறோம்.

இந்த விக்கிபீடியா இணைப்பில் (https://en.wikipedia.org/wiki/List_of_incidents_of_cannibalism#:~:text=Accounts%20of%20human%20cannibalism%20date,the%20practice%20to%20this%20day3.) நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நரமாமிசம் உண்ட நமது நியாண்டர்தால் மூதாதைகளிலிருந்து, கணவனை, மனைவியை குழந்தைகளை, அந்நியர்களை, காதலியை கொன்று சமைத்து உண்டவர்களை பற்றிய தகவல்கள் 2022ன் கேரளா சம்பவம்  வரை இருக்கிறது. 

சந்திராயன் நிலவுக்கு சென்று சேர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் இவை நடக்கிறது என்னும் போது 1900களில் வெளி உலகத் தொடர்பில்லாத ஃபோரே தொல்குடியினர் இறப்புச் சடங்கில் நரமாமிசம் உண்டதில் வியப்பொன்றும் இல்லை.  

 மேலதிக தகவல்களுக்கு:

https://anglicancompass.com/isnt-eating-and-drinking-the-body-and-blood-of-jesusgross/embed/#?secret=ZTCLO9SRWy#?secret=ro8P9JumDp

Alpers, Michael P. The epidemiology of kuru: monitoring the epidemic from its peak to its end. Philos Trans R Soc Lond B Biol Sci. 2008; 363(1510): 3707–3713.

Lindenbaum, Shirley “Kuru, Prions, and Human Affairs: Thinking About Epidemics”. Annual Review of Anthropology. 2001; 30 (1): 363–385

Shirley Lindenbaum (14 Apr 2015). “An annotated history of kuru”. Medicine Anthropology Theory.

Whitfield, Jerome T.; Pako, Wandagi H.; Collinge, John; Alpers, Michael P. “Mortuary rites of the South Fore and kuru”. Philos Trans Royal Society B Biol Sci. 2008: 363 (1510): 3721–3724.

“When People Ate People, A Strange Disease Emerged”. NPR.org. Retrieved 2018-04-08. 

தன் வாழ்வை முற்றிலுமாக குரு நோய் குறித்த ஆய்விற்கு அர்ப்பணித்த  Michael Alpers குறித்து வாசிக்க: https://cosmosmagazine.com/science/biology/the-man-who-linked-kuru-to-cannibalism/

மலமும் கலையும்!

’குருகு’வில்  ஜெயராமின் ’மலம் என்னும் ஊடகம்’  கட்டுரை வந்திருந்தது. சரண்  தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ’’ஜெயராம் அண்ணா ஊடகங்களை மலம்னெல்லாம் சொல்லி என்னவோ எழுதியிருக்காங்க’’ என்று  எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். மலம் என்னும் சொல்லையே அச்சில் கூட அவ்வளவாக பார்க்காததால் தலைப்பே புரிய சற்று நேரமாகிறது.

மிக சிறப்பான வித்தியாசமான கட்டுரை.  சரணிடம் மாலை கட்டுரை குறித்து விரிவாக பேசப் போகையில் ’அய்யே’ என்றான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு  படுகர் இனத்தவளான  என்  நெருங்கிய தோழி ராஜியின் வீட்டில் ஊட்டியில் இருக்கையில் அதிகாலையில் அவளது அப்பாவின்  உருளைக்கிழங்கு விளையும் வயலில் ஒரு லாரி முழுக்க மனிதக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதை பார்த்தபோது எனக்கும் அப்படித்தான்  இருந்தது. அதை என்னால் மறக்கவே முடியவில்லை இன்று வரை உருளைக்கிழங்கும் உண்பதில்லை. ஊட்டியில் கேரட் பீட்ரூட்டுக்கெல்லாம் கூட அதை போடுகிறார்கள் என்றாலும் நான் கண்ணில் பார்த்துவிட்டதால் உருளைகிழங்கு ஒவ்வாமை வந்துவிட்டிருக்கிறது.

பின்னர் இதுகுறித்து வாசித்தேன். இரவுகளில் குடியிருப்பு பகுதிகளில் செப்டிக் டேங்க்’களிலிருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளில் லாரி டேங்கின் மேற்புறம் மண்ணைக்கொட்டி மறைத்து இருள் விலகாதபோதே  வயல்களில் உரமாக போட்டுவிடுவதால் அந்த மனித கழிவு உரத்துக்கு  night soil என்றே பெயர்.

இப்போது கழிவுகளை சேகரித்து மட்க செய்து உரமாக்குகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அப்படியே untreated  மனிதகழிவுகளும் உரமாக உபயோகத்தில் தான் இருக்கிறது அவற்றில் இருக்கும் நோய்க்கிருமிகள் காய்கறிகளின் தோலில் மறைந்து தங்கியிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

மனிதக்கழிவுகளை பண்டைய பல நாகரீகங்களில் இப்படி உரமாக உபயோகித்திருக்கிறார்கள்.

ஏதென்ஸ் நகரில் மாபெரும் ஏரிபோன்று மனித கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை விவசாய நிலங்களுக்கு கால்வாய்களில் அனுப்பப்பட்டன.

அப்படியே சீனா ஹாங்காங் சிங்கப்பூரிலும் முன்பு இப்படி மனித கழிவுகளை மட்கச் செய்யாமல் பயிர் சாகுபடியில் உரமாக பயன்படுத்தப் பட்டது.

ஜப்பானில் மனித கழிவுகளை உலரச்செய்து மலையாக குவித்து வைத்துக்கூட உரமாக விற்பனை செய்யப்பட்டது.ஜப்பனிய அடுக்ககங்களின் உரிமையாளர்களுக்கு இந்த உர விற்பனை ஒரு கூடுதல் வருமானமாக இருந்தது.டோக்கியோவில் இதற்கு  humanure என்று பெயரிருந்தது.

அதிலும்  சத்தான உணவை சாப்பிடும் செல்வந்தர்கள் வாழும் அடுக்ககங்களின் கழிவுகள் விலை உயர்ந்தாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செயற்கை உரங்கள்  புழக்கத்தில் வந்த பிறகு தான் இந்த கழிவு உரங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்தது. உலகமெங்கிலும் இப்போது 1% மட்டுமே  மல உரம் பயன்பட்டில் இருக்கின்றன.

மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் இப்படி மனிதக்கழிவுகளை உரமாக்குவது பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்டெக் பழங்குடியினர் மணலையும் மனிதக்கழிவுகளையும் கொண்டு chinampas என்னும் செவ்வக மணல் மேடுகளை உருவாக்கி அவற்றில் பயிர்ச்சாகுபடி செய்து 7 முறை ஒரே பயிரில் அறுவடை செய்துவந்தார்கள்.

நவீன ஜப்பானில் இன்றும் மனிதகழிவுகளை சேகரித்து உரமாகும் வழக்கம் இருக்கிறது.

நான் சிறுமியாக இருக்கையில் என் தாத்தா வீட்டில் கழிப்பறை பக்கெட்டுகளை எடுத்துச்சென்று சுத்தம் செய்து மீண்டும் அதே இடத்தில் வைக்கவென்றே குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தமக்கள் இருந்தார்கள் அவர்களுடன், அவர்களின் குழந்தைகளுடன்  கலந்து பழக எங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது

அவர்களுக்கென்று தனித்த கொப்பரை காபியும் அந்நாட்களில் தயராகும். காலம் மாறி இப்போது மலக்கரைசலை  வயிற்றுக்குள் செலுத்திக்கொண்டு உயிர்பிழைக்கிறோம் சாதி மத பாகுபாடேதுமின்றி.

ஹவாயில் சோதனை விவசாய முயற்சியில் இப்போது மனிதக்கழிவுரங்களில் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. அப்படி மனிதகழிவுரங்கள் கொண்டு விளைவிக்கபட்ட குடைமிளகாய்கள் அங்கு விற்பனைக்கு வந்திருந்த புகைப்படம் இது

மல உம் போலவே மனிதர்களின் சிறுநீரும் அதன் நைட்ரஜன் காரணமாக வயல்களின் தெளிக்கப்படுவதும் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

ஜெர்மனியில் அப்படி இயந்திரம் மூலம் வயலில் சிறுநீர் பாய்ச்சப்படுகிறது

பிலிப்பைன்ஸின் ஸேவியர் பல்கழைக்கழகத்தில் மனிதச்சிறுநீர் கலந்த வயலில் செழிப்பாக கத்தரிக்காய்கள் உள்ளிட்ட பல காய்கறிகள் விளைவிக்கபட்டன. சிறிநீரை சேகரிக்கவென்றே நகரில் பிரத்யேகமாக  urine diversion  கழிப்பறைகள் உள்ளன.

1990களில் இருந்தே மனிதக்கழிவுரங்களை பயன்படுத்துவதற்கான விதிகள், தற்காப்பு நடவடிக்கைகள், எச்சரிக்கைகள் ஆகியவை பலநாடுகளில் அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டன.2006ல் உலகசுகாதார அமைப்பு மனிதக்கழிவுரங்களை பயனபடுத்துவதற்கான முறையான பரிந்துரைகளை, வழிமுறைகளை வெளியிட்டது.

மலம் இப்போது மருத்துவத்துறையிலும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது. நுண்ணுயிரியல் துறையில் Fecal microbiota transplantation (FMT) என்னும் ஒரு புதிய சிகிச்சை முறை இப்போது வெற்றிகரமாக பலரை குணமாக்கிக்கொண்டு இருக்கிறது

நம் அனைவரின் உடலிலும் உடலுக்குள்ளும் நுண்ணுயிரிகள் பல இருக்கின்றன. அவற்றில் குடற்பகுதியில் இருப்பவற்றில் பல நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நாம் எப்போதாவது ஆன்டிபயாடிக்குகள் எடுத்துக்கொள்ளுகையில் அவை பெனிசிலின் போல  உடலின் மொத்த நுண்ணுயிரிகளையும் அழிக்கும் அகலக்கற்றை நுண்ணுயிரெதிர்ப்பியானால் நமக்கு மீண்டும் குடல் பகுதியில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் குழாம் அமைய சிறிது நாட்கள் பிடிக்கும். அவை இருந்தால் மட்டுமே ஜீரணம் சரியாக நடக்கும்

இந்த FMT எனப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒருவரின் மலக் கரைசலை, நோயுற்ற குறிப்பாக செரிமானக் கோளாறு குடல் தொடர்பான தீவிர சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளின் குடலுக்குளேயே செலுத்தி அவரது குடலில் அந்த நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வளர்த்து நோயாளியை குணப்படுத்தும் ஒரு சிகிச்சைமுறை.

இந்த முறையில் உடல்பருமன், இரைப்பை மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட பல உடல்நிலைகள்  வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன.

4 ம் நூற்றாண்டில் சீன மருத்துவர் Ge Hong இந்த மலமாற்று சிகிச்சையை பல வயிற்றுக்கோளாறுகளுக்கு முயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

1958ல் சோதனைமுயற்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட இந்த மலமாற்ற சிகிச்சையான FMT கடந்த பத்தாண்டுகளில் உலகெங்குமே பல வகையான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.

மற்ற சிகிச்சைகள் பயனளிக்காத போது நோயாளிக்கு இந்த மல சிகிச்சை குறித்து விளக்கமாக எடுத்துச்சொல்லி அவர் சம்மதத்தின் பேரிலேயே இதை செய்யவேண்டும் என FDA அனுமதியளிதிருக்கிறது.

இந்த மலசிகிச்சையில் புற்றுநோய்க்கும் ஆட்டிஸத்துகும் கூட சிகிச்சையளிக்கும் பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன பல நாடுகளில் விந்து வங்கி ரத்த வங்கி இருப்பதைபோல் ஆரோக்கியமான மல டோனர்கள் மல வங்கி என்றழைக்கபப்டும் வங்கிகளில் பெயரை பதிவு செய்துகொண்டு காத்திருக்கிறார்கள் மல மாத்திரைகள் கூட சிகிச்சையில் பயன்பாட்டில் இருக்கிறது.

பன்னிரு படைக்களத்தில் ரம்ப கரம்பர்களின் நோயைகுறித்த அத்தியாயத்தில் சபரர் ’’நோய் என்பதே மருந்துக்கான கோரிக்கை மட்டும்தான். எங்கோ மருந்து உள்ளது.” என்பார் அப்படி நோய்களுக்கு தாவர, ஜங்கம, தாது. நுண்ணுயிரி மருந்துகள் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது மலத்திலிருக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது

மேலதிக தகவல்களுக்கு:

https://www.livescience.com/61044-poop-pills-effective-cdiff.html
https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/fecal-transplant

குரு-(Kuru)

  

பப்பா நியூ கினியின் ஒரு தனித்த கிராமமான வெய்சாவை சேர்ந்த 11 வயதான சிறுமி கிகியாவிற்கு திடீரென கால்கள்  ஊன்றி நிற்க முடியாமலாகியது. கைகால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி உண்டான போது, அவள் சத்தமாக கதறி அழுதுகொண்டும் இடையிடையே பயங்கரமாக சிரித்துக்கொண்டுமிருந்தாள். கிகியா அப்பகுதியின் ஃபோரே (Fore) தொல் குடியை சேர்ந்தவள்.

1930 வரை பப்பா நியூ கினியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே உலகிற்கு தெரியாமல் இருந்தது. ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டைக்காரர்கள் அங்கு சென்றபோதுதான் அங்கு லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வந்தது தெரிந்தது

1950களில் ஆராய்ச்சியாளர்களும்   மானுடவியலாளர்களும் காவலதிகாரிகளும் அரும்பாடுபட்டு அவர்களுடன் தொடர்புகொண்டு, அங்கு சென்றபோது   அங்கு கிராமங்களில்  ஆயிரக்கணக்கில் தொல்குடியினர்  இருந்ததும் அவர்களில் பலருக்கு குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்ததும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இறந்து கொண்டிருந்ததையும் கண்டார்கள்

அந்த நோய் அவர்கள் மொழியில் குரு என்றழைக்கப்பட்டது. அவ்வினத்தின் பெண்களும் குழந்தைகளும் மிக அதிக எண்ணிக்கையில்  கிகியாவைப்போலவே  நோய்வாய்பட்டு இருந்ததை அவர்கள்  கண்டறிந்தார்கள்

அவர்களில் பலருக்கு உடம்பு உதறி உதறிப் போடும் தீவிரமான வலிப்பு, பசியின்மை இருந்தது, உடல் அங்கங்கள் ஒத்திசைவு இன்றி நேராக நிற்கவோ நடக்கவோ முடியாமல் எலும்பும் தோலுமாக இருந்தனர். உடல் உதறிப்போடும் அறிகுறி வந்தவர்கள் அடுத்த  ஒரு வருடத்திற்குள் இறந்துபோனார்கள்.

ஃபோரே பழங்குடியினரின் மொழியில் குரியா என்னும் சொல் உடல் உதறுதல் என்னும் பொருள் கொண்டது. எனவே இந்நோய்க்கு குரு என்னும் பெயர் வந்தது.

இதற்கு  ’’நெகி நெகி’’ என்று அவர்கள் மொழியில் சிரிக்கும் நோய் என்னும் பெயரும் இருந்தது நரம்புகள் தனது கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் வெடித்து சிரிப்பதும் அந்நோயின் அறிகுறி .

அப்பழங்குடியினர் இந்த நோயும், வலியும், இறப்பும் சூனியம் அல்லது இயற்கையை தாண்டிய ஒன்றின் தண்டனை அல்லது தீவினை என்று நம்பினர்.

வரலாறு

ஃபோரே மக்கள் துவக்கக்தில் குரு ஒரு சூனியநோய் என்றும் அதன் மந்திரசக்தி பிறருக்கும் பரவுகிறது என்றும் நம்பினர். பின்னர் தீய ஆவிகள் பிடித்துள்ளதாக நினைத்தனர். உடல் நடுக்கத்தை குணமாக்க சில காலம் சவுக்கு மரப்பட்டை சாற்றை அருந்த கொடுத்து வந்தனர்

குரு குறித்த முதல் தகவல்கள் பப்பா நியூ கினியில்  (PNG) ரோந்து வந்த ஆஸ்திரேலிய காவலர்களால் 1950ல் பதிவு செய்யபட்டது. செவிவழிச்செய்திகள் 1910 லேயே குரு மரணங்கள் இருந்ததை தெரிவித்தாலும் அதிகாரபூர்வ ஆவணங்கள் 1950லிருந்துதான் கிடைத்திருக்கின்றன. 1953ல் ரோந்துக்காவலரான ஜான்,   (John McArthur),  தனது அறிக்கையில் குரு நோயின் அறிகுறிகளை பதிவு செய்திருந்தார். ஃபோரே இனத்தவர்களின் விசித்திரமான சடங்குகளால் உருவான குரு நோய் ஒருவகை மன நலக்கோளாறு என்று  அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 

குரு கட்டுக்கடங்காமல் பெரிதாக பரவிய போதுதான் தொல்குடி இனமக்களே   பப்பா நியூ கினியில்  பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவ அதிகாரியான சார்லஸ் (Charles Pfarr) என்பவர் மூலம் ஆஸ்திரேலிய மருத்துவ அமைச்சகத்துக்கு    தகவலனுப்பினர்,

 1957ல்  அமெரிக்க மருத்துவர் கார்ல்டன் (Dr. Carlton Gajdusek) பப்பா நியூ கினியின் மருத்துவ ஆலோசகர் திரு வின்சென்ட் ஜிகாசினால் (Vincent Zigas) அழைத்து வரப்பட்ட போதுதான் அது என்ன நோயென்பது உலகிற்கு தெரியவந்தது

அந்நோய் குறித்த தனது முதல் மருத்துவ அறிக்கையை அவர் வெளியிட்டபோது, உலகிற்கு அதன் தீவிரம் புரியவில்லை.1957ல்  குரு குறித்த இவரது விரிவான ஆய்வுக்கட்டுரை,  Medical Journal of Australia வில் வெளியானது. அக்கட்டுரையில் அவர் குரு ஒரு மரபுவழி நோயாக இருக்கலாமென்றும் ஒரு வகை வைரஸினால் அது உருவாகிறது என்றும் தெரிவித்திருந்தார்

 1960 ல்  அடிலெய்ட் மருத்துவரான  மைக்கேல் அல்பெர் (Michael Alpers) இந்த மர்மமான நோயை குறித்து அறிய அந்த கிராமத்துக்கு வந்தார்,   Dr. கார்ல்டன் உடன் இணைந்து அந்நோயை ஆராய்ந்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் குரு நோயை குறித்த ஆய்வுக்காக அர்ப்பணித்தார்

வலிப்பு நோய் என்னும் பொருளில் அவர்களின் மொழியில் குரு என்றழைக்கப்பட்ட அந்நோயை இருவரும் மிக கவனமாக ஆராய்ந்தார்கள். ஏன் அந்நோய் அந்த குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வருகிறது என்பதை துவக்க காலங்களில் இருவராலும் யூகிக்கவும் கண்டுபிடிக்கவும் முடியாமலிருந்தது

நோய் அறிகுறிகளை விரிவாக ஆராய்ந்தபோது இருவருக்கும்  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  ஆடுகளுக்கு இருந்து வந்த மூளை அழிவு நோயை குறித்த நினைவு வந்தது. அந்நோய் ஃப்ரான்ஸ் மக்களால்  trembling disease என்றும் ஆங்கிலத்தில் scrapie என்றும் அழைக்கப்பட்டது

குரு மற்றும் ஸ்க்ரேபிக்கு இடையே இருந்த ஒற்றுமைகளின் மூலம் குரு மூளையில் உண்டாகும் ஒரு நோய்  என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட இறந்தவர்களின் மூளையை நுண்ணோக்கியில் பார்க்கையில் மூளை பஞ்சு போல மாறிவிட்டிருப்பதையும், மூளையில் ஏராளமான நுண் துளைகள் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் ஸ்க்ரேபியைபோலவே குருவும் ஒரு தொற்றுநோய் என்பதுவும் உறுதியானது

எனவே குருவின் தொற்றும் தன்மையை  இருவரும் உறுதி செய்ய நினைத்த சமயத்தில் தான் கிகியா குருவின் ஆரம்பகட்ட அறிகுறிகளுடன் நோய்வாய்பட்டிருந்தாள்

இந்த சோதனையை குரங்குகளில்  செய்ய  இருவரும் முடிவெடுக்கையில் படிப்படியாக நோய் முற்றி கிகியா  இறந்துபோனாள். கிகியாவின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவளது மூளையின் ஒரு சிறு பகுதி அமெரிக்காவின் ஆய்வமொன்றிற்கு அனுப்பப்பட்டது   

அங்கு டெய்ஸி மற்றும் சார்லெட்டி என்னும் இரு சிம்பன்ஸிகளின் மூளையில் கிகியாவின் மூளைக்கரைசல் ஊசியாக  செலுத்தபட்டபோது. இரு சிம்பன்ஸிகளுக்கும் விரைவில் குரு தொற்று உண்டானது. எனவே மூளையில் உண்டாகும் இந்நோய் அடுத்தவர்களுக்கும் பரவும் என்பது நிரூபணமானது.

 ஃபோரே தொல்குடியில்.பெரும்பாலும் பெண்களுக்கு அந்நோய் தொற்று உருவாகி பலர் இறந்திருந்ததால் சில கிராமங்களில் முற்றிலும் பெண்கள் இல்லாமல் இருந்ததை ஆய்வாளர்கள் கண்ட போதுதான் ஃபோரே இனமே அழியும் அபாயத்திலிருந்ததை உலகம் அறிந்துகொண்டது.

அதே சமயத்தில்   குரு நோயின்   தொற்று மற்றும் பரவலில் ஆய்வு செய்து கொண்டிருந்த  நியூயார்க்கின் மருத்துவ மானுடவியலாளர் ஷர்லி லிண்டென்பாம் (Shirley Lindenbaum), தனது ஆய்வின் முடிவில் புதிதாக ஒன்றை கண்டடைந்திருந்தார். 1960க்கு பிறகு பிறந்த யாருக்கும் குரு தொற்று இல்லை என்னும் அந்த முடிவு அக்காலத்துக்கு முன்பு வரை அத்தொல்குடியினரின் எதோ ஒரு வழக்கத்தின் மூலமே குரு உருவாகி தொற்று பரவி இருக்கும் என்பதை அறிவித்தது

ஃபோரே தொல்குடியினருடன் தங்கி இருந்து பல வருடங்கள் ஆய்வு செய்தவரான அவர் அவ்வினத்தவர்கள் அழிவின் விளிம்பில் இருந்ததால் எப்படியேனும் தங்கள் இனத்தை பாதுகாக்கத்தான் நினைத்தார்கள் என்று குறிப்பிடுகிறார்

ஷர்லி 1961ல் ஒவ்வொரு கிராமமாக சென்று தரவுகளை சேகரித்தார். அவற்றின் அடிப்படையில் 1960க்கு பிறகு பிறந்தவர்களுக்கு குரு தொற்று உண்டாகவில்லை என்பதை கண்டறிந்தார்,

எனவே அவர்களோடு பல காலம் இருந்து ஆய்வு செய்த ஷர்லிக்கு அவர்களின் விசித்திரமான இறப்புச் சடங்கு தான் அதற்கு காரணமாயிருக்கலாம் என்னும் சந்தேகம் இருந்தது

ஃபோரே இனத்தில் ஒருவர் மரணமடைகையில் அவரது சடலத்தை குடியினர் அனைவரும் சமைத்து பகிர்ந்துண்ணும் வழக்கம் இருந்தது. அது அவர்களின் தொல்நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டு காலமாக நடந்து வந்தது 

நரமாமிசம் உண்பது குரு தொற்றிற்கு காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகம் குருவை ஆராய்ந்த அனைத்து வல்லுநர்களுக்கும் இருந்ததெனிலும் அதற்கான அடிப்படை அறிவியல்  ஆதாரமில்லாததாலும் முன்பெப்போதும் அத்தகைய நோயை கேள்விப்பட்டிருக்காததாலும் அதிகாரபூர்வமாக குருவிற்கு நரமாமிசம் உண்பதுதான் காரனம் என 1967 வரை யாருமே பதிவு செய்திருக்கவில்லை

1967ல்  கிளாஸெ, மோரெ, ( Glasse,   more)  மற்றும் 1968 ல் மேத்யூஸ் மற்றும் லிண்டன்பாம்  (Mathews & Lindenbaum) ஆகியோரே நரமாமிசம் உண்பதால் குரு உருவாவதை ஆதாரத்துடன் தெளிவாக நிறுவினார்கள்.

இவர்களைப்போலவே  E. J. Field என்னும்  பிரிட்டிஷ் நரம்பியல் மருத்துவர்   1960s- 1970 களில் பப்பா நியூ கினியில் தங்கி இருந்து இந்த நோயை ஆராய்ந்தார்

குருவை  scrapie மற்றும்  multiple sclerosis. நோய்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து எழுதப்பட்ட  இவரது குரு ஆய்வுக்கட்டுரைகளை வாசித்த பிரிட்டிஷ் மருத்துவ கழகம் இவரை  புதிய மூளை நோய்களை ஆராயும் குழுவின் இயக்குநராக நியமித்தது.

இவரின் ஆய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டுதான்  1970 BBC Horizon  நர மாமிசம் உண்பது தொடர்பான மிக முக்கியமான ஆவணப்படமாகிய New Guinea வை உருவாக்கி வெளியிட்டது

மானுடவியலாலர்களும் மருத்துவர்களும் ஆய்வாளர்களும் பப்பா நியூ கினிக்கு வரும் முன்னரே நரமாமிசம் உண்பது அங்கு சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது, எனினும் இவர்களின் முயற்சியினால் உலகம்  , குரு என்னும் நரமாமிசம் உண்பதால் வரும் நோயை  முதன் முதலாக அறிந்து கொண்டது

  பிறகும் பல ஆராய்ச்சிகள் அதில் நடந்து ஒரு வைரஸ் இந்த குரு நோய்க்கு காரணமாக இருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

 ஆனால் அது வைரஸோ பாக்டீரியாவோ பூஞ்சையோ அல்ல வெறும் புரதம், நோய் உருவாக்கும் வீரியமுள்ள புரதம் என பிற்பாடு கண்டறியப்பட்டது,

வைரஸ்கள் என்பவை மிக எளிய உடலமைப்பை கொண்டவை.ஒரு புரத அடுக்கு அதனுள்ளிருக்கும் நியூக்ளிக் அமிலம் அவ்வளவுதான் ஒரு வைரஸ், சில வைரஸ்கள் வெறும் நியூக்ளிக் அமிலம் மட்டுமே உடலாக கொண்டவை மேலும் சில வெறும் புரத அடுக்கு மட்டுமே வைரஸாக இருக்கும் அவையும் நோய்க்கிருமிகள்தான். அப்படியான ஒரு வெறும் புரத வைரஸ்தான் பிரையான் என்பது. 

குருவை உண்டாக்கும் அந்த புரதமும் தவறாக திருகிய அமைப்பை கொண்டிருந்த பிரையான்கள் தான்  (prions).  அவை மூளையின் செல்களை தாக்கி அழிக்க வல்லவை. அப்படி அழிந்துவரும் மூளையில் பல துளைகள் உருவாகிக்கொண்டிருக்கும்

இந்த தொற்று  ஃபோரே இனத்தின் Creutzfeldt-Jakob Disease, எனப்படும் நரம்பு அழிதல் நோயினால் இறந்த ஒருவரின் சடலத்தை பிறர் உண்டதால் உருவாகி இருக்கலாம் என்று யூகிக்கப் பட்டது 

ஃபோரே இனத்தவர்களில் இறப்பு நிகழுகையில் இறந்தவர்களின் உடலை சமைத்து உறவினர்கள் அனைவரும் உண்ணுவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கம் வெளி உலகிற்கு தெரியவரவே வெகு காலமாகியது பின்னர் 1959ல் அரசு தலையிட்டு இறந்த உடலை உண்ணுவதை சட்டப்படி தடை செய்து அவர்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வந்தது.

Endo cannibalism அல்லது ritual cannibalism என்னும் இவ்வகை நரமாமிசம் உண்ணுதலின் பின்னணியில்  ஃபோரே இனத்தவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்கள் இருந்தன.

 ஃபோரே இனத்தின் பிரபஞ்சவியல்

ஃபோரே இனத்தவர்கள் தொல்மொழியில்   அவர்கள் வாழும் பூமியை உயிருள்ளது என்று பொருள்படும் பகினா (bagina) என்று அழைத்தனர்.

 நிலப்பரப்பை  முழுமையாக உருவாக்கி முடித்த பகினா, மக்களை உருவாக்கி, மக்கள் தொகை பெருகிய பின்னர்  இனத்தின் பாதுகாவலர்களான இ அமனி (e amani) யை உருவாக்குகிறது.

இ அமனி என்பவை மலைகள் ஏரிகள் பைன் மரங்கள் மற்றும் பனைக்காடுகள். இவற்றை கடந்த பின்னர் நீத்தோருக்கான் உலகம் என அழைக்கப்பட்ட குகைகள் நிரம்பிய   வெலனந்தமுண்டி என்னும் பிரதேசம் (kwelanandamundi) இறந்தவர்களின் ஆன்மா சென்று சேரும் இடமாக தனியே வகுக்கப்பட்டிருந்தது

ஃபோரேக்களின் ஐந்து ஆன்மாக்கள்

ஃபோரேக்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு மனிதருக்கும் ஐந்து ஆன்மாக்கள் முறையே அவுமா, அமா, க்வெலா,அவோனா மற்றும் யெசெகி  ( auma, ama, kwela, aona&  yesegi ) என இருக்கின்றன. 

மரணத்தருவாயில் கடைசி மூச்சின் போது உடனடியாக உடலை விட்டு வெளியேறுவது அவுமா. அது உடனே உயிர்  நீத்தோருக்கென தனியே வகுக்கப்பட்டிருக்கும்  வெலனந்தமுண்டி  பிரதேசத்துக்கு சென்று விடுகிறது .இந்த ஆன்மா ஒரு மனிதனின்  புண்ணியங்களுக்கானது.அது தான் வாழ்ந்த பகினாவுக்கு விடை சொல்லிவிட்டு உடனடியாக உடலை நீங்கிச் சென்று விடும்.

அவுமா பாதுகாவலர்களான இ அமானியிடம் சென்று தான் இறந்த காரணத்தை தெரிவிக்கிறது. அதை கேட்ட பாதுகாவலர்கள் நீத்தோருக்கான் இடமாகிய வெலனந்தமுண்டிக்கு செல்ல ஆன்மாவிற்கு வழி காட்டுகிறார்கள்.

நீத்தோருக்கு உறவினர்கள் படையலிடும் உணவும் நீரும் செல்லும் வழியில் அவுமாவால் எடுத்துக்கொள்கிறது.

நீத்தோருலகில் வாசலில் இருக்கும் சிவப்பு ஆற்றை அடையும் அவுமா அக்கரையில் காத்திருக்கும் முன்னோர்களின் ஆன்மாவினால் வரவேற்கப்படுகிறது, அங்கு காத்திருக்கும் அவுமா, அமா என்னும் எலும்புகளின் ஆன்மாவும், க்வெலா என்னும் தசைகளின் ஆன்மாவும் வந்துசேர காத்திருக்கிறது. அவை வந்து சேர்ந்த பின்னரே தன் மூத்தோர்களிலொருவராக அது மறுபிறப்பெடுக்கும். ( ama (bones) & kwela (flesh))  

அமா (Ama) என்னும் ஆன்மா ஏறக்குறைய அவுமாவை போலத்தான் ஆனால் அதை காட்டிலும் சக்தி வாய்ந்தது. அது சடலத்துக்கு சடங்குகள் முறைப்படி செய்யப்படுகின்றனவா என கண்காணித்தபடி பூமியிலேயே காத்திருக்கும். உறவினர்கள்  மரணச்சடங்குகளை முறையாக செய்ய வழிகாட்டி, ஒருவேளை இறப்பு எதிரிகளால் நிகழ்ந்திருந்தால் அவர்களை தண்டிப்பதாக  அமா வஞ்சினம் உரைக்க செய்யும்.

இறந்தவர்களின் உடலை உறவினர்கள் உண்ணும் போது அமா அவர்களை ஆசிர்வதிக்கிறது. சடலத்தை உண்பவர்களின் ஆன்மாவாகிய அவோனா அப்போது அதிகரிக்கிறது. உடல் முழுக்க மிச்சமின்றி உண்டு முடிக்கப்பட்டதும் அமா விடைபெற்றுக்கொண்டு நீத்தோருலகிற்கு செல்லும். அங்கிருந்து பூமியிலிருக்கும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை அமா செய்யும்

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

  க்வெலா  ஆன்மா காற்றில் பயணித்து  மறைந்து நின்று கவனித்து மரணச்சடங்குகளை சரியாக செய்யாதவர்களை தண்டிக்கிறது

உடல் அழுகி கொண்டிருக்கையில் உடலிலிருக்கும் க்வெலா மிக சக்தி வாய்ந்தது என்பதால் கிராமத்தில் வாழிடங்கள் இருக்கும்  இடங்களுக்கு மிகத் தள்ளி இருக்கும் இடங்களில் தான் உடல் கிடத்தப்படும்

உடல் புதைக்கப்படுகையில் க்வெலா சக்தி குறைந்து காணப்படும். உடல் உண்ணப்படுகையில் க்வெலா, உடலை உண்ட பெண்களின் கர்ப்பப் பையில் தங்கி விடுகிறது. அங்கு அதன் பெயர் அனக்ரா ( anagra)  

உடல் சமைக்கப்படுகையில் வெப்பம் அதிகமாகும் போதுதான் க்வெலா விலகி நீத்தோருலகிற்கு செல்லும்

யெசெகி  ஆன்மா இறந்தவரின் சருமத்தில் தங்கி இருந்து க்வெலா கருப்பைக்குள் செல்லும் வரை உடன் இருந்துவிட்டு பின்னரே விடைபெற்றுக்கொள்ளு.ம் யெசெகி ஆன்மாவானது   இறந்த மனிதர், பெரும் வேட்டைக்காரராகவும், சக்திவாய்ந்தவராகவும் வாழ காரணமாக இருப்பது.

இவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில்  முறையாக  செய்யப்படும் மரண சடங்குகள் மூலமாக  இறந்த மூத்தோர் மீண்டும் அவர்களுக்கே பிறந்து வாழ்க்கை சுழற்சி தொடர்ந்து நடக்கும் என ஃபோரே குடியினர் நம்புகிறார்கள்.

இறந்த உடலை கையாளும் முறை

(இந்த பகுதி சிலருக்கு வாசிக்க ஒவ்வாமையை உண்டாக்கலாம்) 

மரணத்தருவாயில் இருப்பவர் சில சமயம் தனது உடல் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதை சொல்லிச்செல்வது உண்டு. இல்லாவிட்டால் உடலை என்ன செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்

இறப்பு நிகழ்ந்த உடனே உடல் முழுக்க, பித்தப்பையை தவிர  பங்குபோட்டு சமைத்து உண்ணப்படும்  அல்லது சில நாட்கள் புதைத்து வைத்து மீண்டும் வெளியே எடுத்து உடலில் இருக்கும் புழுக்கள் தனியாகவும், உடல் தனியாகவும் சமைத்தும் உண்ணப்படும். 

சில சமயம் உடல் ஒரு மேடையில் கிடத்தப்பட்டு மாமிசத்தை   சிறு பூச்சிகள் (maggots) உண்ணும்படியும் வைக்கப்படும்.

ஃபோரே தொல்குடியினர்  அவர்களுடன் வாழ்ந்து மறைந்த  பிரியமானவர்களின் உடலை இப்படி புழுக்களும்,பூச்சிகளும் உண்பதை காட்டிலும் அவர்களுக்கு விருப்பமான குடும்ப உறவினர்கள் உண்ணுவதே சிறந்தது என்று நம்பினார்கள்.

இப்படி உண்ணப்படுகையில் மிகுந்த சக்திவாய்ந்த க்வெலாவின் ஆபத்துக்களிலிருந்து தப்பி அதை கர்ப்பத்தில் அடுத்த சந்ததியாக தக்கவைத்துக்கொள்வது பெண்களுக்கு மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டது.

இறந்தவர்களின் மீதான அன்பை, அவர்கள் இழப்பை குறித்த துக்கத்தை உடலை உண்பதன் மூலம் காண்பிக்க முடியும் என அவர்கள் நம்பினார்கள். எனவே பெரும்பான்மையான ஃபோரே உட்பிரிவினங்கள் உடலை சமைத்து உண்டார்கள்.

இறந்த உடல் ஒரு கூடையில் வைக்கப்பட்டு மூங்கில், கரும்பு அல்லது சவுக்கு காடுகளுக்குள் உறவினர்களால் எடுத்துச்செல்லப்படும்

காடுகளில், துக்கம் அனுஷ்டிப்பவர்களுக்கு நிழல் இருக்கும், இறந்த உடலின் ஆன்மாக்கள் காடுகளில்தான் மகிழ்ந்திருக்கும் என்பதால் உடல் காட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

உடலை வெட்டித் திறந்ததுமே, பூமி உள்ளிருக்கும் ஆன்மாக்களை வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு உயரமான மேடையில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் கீரைகள் காய்கறிகள் கிழங்குகளின் மீது விரிக்கப்பட்டிருக்கும் வாழை இலையின் மீது உடல் கிடத்தப்படும் . 

இடைவெளியில்லாமல் நிரப்பப்பட்டிருக்கும் காய்கறிகளின் மீது உடல் வெட்டப்படும்போது சிந்தும் திரவங்கள் வீணாகாது என்பதால் இப்படி செய்யப்படுகிறது. உடல் பாகங்களும் திரவங்களும் சிந்தி வீணானால் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கசப்பு நிறைந்த பித்தப்பையை தவிர ஒரு துளி உடல் பாகமும் வீணாகாமல் அச்சடங்கு நடத்தப்படும் 

முதலில் உடலை பெண் மற்றும் ஆண் உறவினர்களுக்கிடையே சரிசமமாக பங்கு போட்டுக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

குழந்தைகளை அங்கிருந்து விலக்கி வைப்பார்கள் எனினும் சில குழந்தைகள் மரங்களின் மீதிருந்து சடங்கை வேடிக்கை பார்ப்பதுண்டு

 கைக்குழந்தைகள் க்வெலாவின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்பதால் அவர்கள் 4 கிமீ தள்ளி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பார்கள். 

உடல் மூங்கில் கத்தியால் வெட்டப்பட்டு, மீண்டும் சதை சிறுசிறு துணுக்குகளாக வெட்டப்பட்டு சிறு குவியல்களாக கறிப்பலா இலைகளில் குவித்து வைக்கப்படும்

உடலின் கீழ்ப்பகுதி வெட்டப்படுகையில்   பெண்களும் இளையவர்களும் இனப்பெருக்க உறுப்புக்களை பார்க்கக்கூடாது என்பதற்காக வயதான பெண்கள்  வட்டமாக நின்று மனிதத்திரை உண்டாக்குவார்கள்

உடலை வெட்டி முடித்ததும் கைகளை வாழை நார், மூங்கில் குருத்துக்கள் கொண்டு துடைத்து சுத்தம் செய்துகொண்டு  மாமிசம் வேகவிருக்கும் அடுப்பு நெருப்பில் துடைத்த நாரையும் குருத்துக்களையும் போடுவார்கள். கடைசியாக பெண்கள் கைகளை அவர்களது புல்லாடையில் துடைத்துக் கொள்வார்கள்

மூங்கில் குழாய்களில் அடைத்து நெருப்பில் வேக வைக்கப்பட்ட மாமிசம் வாழையிலைகளில் கொட்டப்படும்.

முதல் உணவு துக்கம் விசாரிக்க வந்திருக்கும் ’எனாமே’ எனப்படும் வெளியூர் உறவினர்களுக்கு குச்சிகளில் குத்தப்பட்டு வாயில் நேரடியாக அளிக்கப்படும்.

அவர்கள் உணவை கைகளால் தொடக் கூடாது என்பது நெறி. அவர்கள் ஊர் திரும்பி செல்கையில் வெஸா (wesa) என்னும் செடியின் இலைகளை மென்று நர மாமிசம் உண்ட வாயை சுத்தம் செய்து கொள்வார்கள் 

ஃபோரே குடியினரின் உட்பிரிவான அடிக்மா என்னும் அடிகமனா மொழிபேசும் உட்பிரிவில் இறந்த ஆணின் இனப்பெருக்க உறுப்புக்கள் விதவையான அவரின் மனைவிக்கு அளிக்கப்படும்.   (Atigina – atikamana),   ஆனால் தெற்குப் பகுதியின் பிரிவான பமுசாகினா (Pamusagina) குடியினரிடம் இவ்வாறான பழக்கம் இல்லை.

பிரையான்களால் அழுகி இருக்கும்   மூளை ஒரு கூரான மூங்கில் குச்சியால் நெம்பி எடுத்து வேகவைக்கப்பட்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அளிக்கப்படும். ஒருபோதும் 6 வயதுக்கு மேலான ஆண் குழந்தைகளுக்கு இது அளிக்கப்படமாட்டாது, ஆனால் எல்லா வயதிலும் பெண்கள் இதை உண்ணலாம்

குடிசையை விட்டு வந்திருக்காத, துக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு நரமாமிச உணவு கொண்டு போய் கொடுக்கப்படும்.

எலும்புகளில் பெரியவையும் மண்டை ஓடும் சில பிரிவு மக்களால் இறந்தவரின் குடிசையின் முன்பாக சாக்குப் பைகளில்  கட்டி தொங்கவிடப் படுவதும் உண்டு.  

மறுநாள் காலையில் உடல் சமைக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் சில பெண்கள் மீதமிருக்கும் எலும்புகளைக் இகாகி எனும் காட்டுப்புல்லில் சுற்றி நெருப்பில் வாட்டி அவற்றை மேலும் கீழுமாக கறிப்பலா இலைகளால் மூடி கற்களால் பொடித்து மிச்சமின்றி உண்பார்கள். உடலின் எந்த பாகமும் வீணாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருப்பார்கள்.

மாமிசம் வேகவைக்கப்பட்ட கருகிய மூங்கில் குழாய்களின் சாம்பலும் பொடித்து காய்கறிகளில் கலந்து உண்ணப்படும்

பின்னர் சமைப்பதற்கும் உடலை வெட்டுவதற்கும் உபயோகப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நெருப்பிலிட்டு அழிப்பார்கள். விதிவிலக்காக தாடை மற்றும் கழுத்தெலும்புகள் மட்டும் சிறுமிகளின் கழுத்தில் தாயத்தாக அணிவிக்கப்படும்.  

உடல் முழுமையாக உண்ணப்பட்டதும் இறந்தவரின் குடிசையின் வெளியே இருந்து புகை இடப்பட்டு குடிசை தூய்மையாக்கப்படும் பின்னர் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படும்

பெண்கள் எலிகளையும் சிறு விலங்குகளையும் வேட்டையாடி பிடித்து வருவார்கள் அவற்றைக் கொன்று, ரோமத்தை விதவையின் வீட்டு நெருப்பில் பொசுக்கி விதவையின் உடலில் இருக்கும் க்வெலாவை அந்த நாற்றதினால் வெளியேற்றிவிட்டு பின்னர் இறந்த விலங்குகளின் மாமிசத்தை   சமைத்து பெண்கள் மட்டும் உண்ணும் சடங்கு நடைபெறும்

பின்னர் துக்கம் விசாரிக்க வரும் உறவினர்கள் கீரை, புல் போன்ற இலை உணவு மட்டுமே உண்ணும் கவுண்டா (kavunda), என்னும்  மரணச்சடங்கின் நீட்சியான உணவுச் சடங்கு  நடைபெறும். இந்த சைவ உணவுச்சடங்கு பொதுவாக  மனிதர்கள் உண்ணக்கூடாத நரமாமிசத்தை உண்டதன் பிழையீடாக நடக்கும்.  

பின்னர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட்டாக வேட்டைக்குச் என்று விலங்குகளை கொண்டுவந்து சமைத்து விருந்துண்ணுவார்கள்,  

இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொள்ளாவிட்டால் இறந்தவரின் க்வெலா அவளை பாதுகாத்துக்கொண்டு அருகில் இருக்கும். ஒருவேளை மறுமணம் செய்துகொண்டால் க்வெலாவிடம் அவள் விடைபெறும் சடங்கும் நடக்கும்.

இச்சடங்குளினால் தான் நடுக்கநோய் எனப்படும் குரு அவர்களுக்கு உண்டாகிறது என்று தெரிய வந்தபின்னர் அவர்கள் நரமாமிசம் உண்பதை நிறுத்திக்கொண்டனர். கிருஸ்துவ மிஷனரிகளும் நரமாமிசம் உண்ணக்கூடாது என்னும் விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தினர். 

நோய் அறிகுறிகள்

துவக்க அறிகுறிகளாக உடல் நடுக்கம் வலிப்பு, நிலையில்லாமை, உடல் பாகங்களின் ஒத்திசைவின்மை ஆகியவை தோன்றும். கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் அறிகுறியும் இருந்தது.

நோய் முற்றும் போது வலிப்பு அடிக்கடி தீவிரமாக வருவதும்,  தாங்க முடியாத உடல் வலி, நடக்க முடியாமல் சிரமப்படுதல், பேச்சு குளறல்,தலைவலி ஆகியவை உண்டாகும். கடைசி நேரங்களில் விழுங்க , பேச முடியாமல் கோமா, தொடர்ந்து மரணம் ஆகியவை நேரும் 

குரு நோய்க்கு சிகிச்சை என ஏதும் இல்லாததால், தொற்று உண்டாகி 6 லிருந்து 12 மாதங்களில் இறப்பு நிகழும்

குரு மிக அரிதான நோய், பிரையான்கள் எனப்படும் நோய் உண்டாக்கும் புரதங்களால் இவை உருவாகி மூளையை பாதித்து இறப்பை உண்டாக்கும். 3 லிருந்து 50 வருடங்கள் வரை இந்த கிருமியின் நோயரும்பும் (incubation) காலம் இருக்கும்

 குரு மருத்துவ அறிவியல்

ஃபோரே இனத்திலும் அவர்களுக்கு அருகாமையில் வசித்த சில தொல்குடி இனங்களிலும் 1900 த்தில் குரு பரவலாக இருந்தது, 1940-50 வரையில் ஆயிரத்தில் 35 பேர் என்னும் அளவில் இறப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக மூளையை உண்ணும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  தசைகளை உண்ணும் ஆண்களை விட அதிக தொற்று உருவாகி இருந்தது

குரு ஒரு Transmissible spongiform encephalopathies (TSEs),  வகையை சேர்ந்த நோய் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.பிரதானமாக இது சிறுமூளையை பாதிக்கிறது.

குரு தொற்றிற்கு சிகிச்சை மருந்து என எதுவும் இல்லை. மூளையில் இருக்கும் பிரையான்களை ஃபார்மால்டிஹைடில்  வருடக்கணக்காக சேமித்து வைத்திருக்கையிலும் நோய் உண்டாகும் வீரியத்தை அவை  இழக்காமலிருக்கிறது 

PrP என குறிப்பிடப்படும் பிரையான்களில் இரு வகைகள் உள்ளன  PrPc என்பது சரியான மடிப்புக்கள் கொண்ட புரதம்,  PrPsc, என்பது தவறாக திருகிய மடிப்புகள் கொண்ட குரு உருவாக்கும் வீரியமான புரதம் 

PrPsc காலப்போக்கில் PrPc புரதத்தின் மடிபுக்களை தவறாகக் திருகச்செய்து அவற்றையும் நோய்க்கிருமி ஆக்கி இருக்கலாம் என்னும்  சாத்தியத்தையும் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறர்கள்

ஜுலை 1996 லிருந்து ஜூன் 2004 வரை நடைபெற்ற தீவிரமான ஆய்வில் 11 குரு தொற்றுக்கள் மட்டுமே  கண்டறியப்பட்டன

2005க்கு பிறகு புதிய தொற்றுக்கள் ஏதும் இல்லை, 1957ல் 200 குரு மரணங்கள் நிகழ்ந்தன, ஆனால் 2010க்குபிறகு குரு மரணங்கள் முற்றிலும் இல்லை. எனினும் பிரையான்களின் வீரியமும் நோயரும்பும் காலமும் மிக அதிகம் என்பதால் மருத்துவத்துறை குரு குறித்த எச்சரிக்கை உணர்வுடன் தான் இருக்கிறது. 

funerary cannibalism. அல்லது rithual cannibalism எனப்படும் இறப்பு சடங்கில் சடலத்தை உண்ணும் ஃபோரே மக்களின்  Endocannibalism  என்னும் வழக்கத்தினால் குரு உருவானது இவ்வாறுதான் பலரின் அர்ப்பணிப்புள்ள ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது

நரமாமிசம் உண்பது எல்லா சமூகத்திலும் பயங்கரமானதும் விலக்கப்பட்ட ஒன்றுமாகவே இருந்திருக்கிறது. பண்டைய ரோமில் கிருஸ்துவர்கள் பலருக்காக தியாகம் செய்த ஒருவரின் உடல் ரகசியமாக சமைத்துண்ணப்படுவதாக வதந்திகள் உலவின. 

நற்கருணை எனப்படும் கிருஸ்துவின் கடைசி இரவு உணவின்  குறியீடாக திராட்சை மதுவும் அப்பமும் கிருஸ்துவின் ரத்தமும் சதையுமாக கருதப்பட்டு உண்ணப்படுவதன் மிகைப்படுத்தப்பட்ட வதந்திதான் அது​

போராளி இனங்களான  Iroquois  மற்றும் Fijians எதிரிகளின் சக்தியும் தங்களுக்கு கிடைக்குமென எண்ணி    தாங்கள் வென்ற எதிரிகளை சமைத்து உண்டனர்.  தென்னமெரிக்க பழங்குடியினரான  வாரிகளும்(wari) இவ்வாறு எதிரிகளை உண்பது வழக்கத்திலிருந்து .இது Exo cannibalism எனப்படுகிறது.  

​1979ல் வெளியான ’’நரமாமிசம் உண்பது என்னும் கட்டுக்கதை’’ என்னும் நூலில்   (Man-Eating Myth)   W. Arens அப்படியான ஒன்று எந்த காலத்திலும், எந்தச் சமூகத்திலும் நிகழ்ந்திருக்காது என்கிறார். ஒருவேளை கடும் பஞ்சத்தில் அப்படி நிகழ்ந்திருக்கலாமே தவிர மனிதர்களை மனிதர்களை எப்போதும் உண்டதில்லை என்று சொல்லும் அவர் 6 விரிவான அத்தியாயங்களில் நர மாமிசம் தொடர்பான கதைகள் நாட்டுப்பாடல்கள்  தொன்மங்கள் ஆகியவற்றை விவரித்திருக்கிறார்

  1986 ல் Peggy Reeves Sanday  என்பவர்  ’’Divine Hunger: Cannibalism as a Cultural System’’ என்னும் தனது நூலை வெளியிட்டார் அதில் நரமாமிசம் உண்பதற்காக நடைபெற்ற கொலைகளையும், மனித மாமிசம் ஊட்டச்சத்துக்களுக்காக உண்ணப் பட்டதையும்,  சில பழங்குடியினர் இயல்பாக நரமாமிசம் உண்பதையும் குறிபிட்டு எழுதி இருந்தார். cannibalism  தொடர்பான நூல்களில் இது முக்கியமான தரவுகளை கொண்டதாக இன்றளவும் கருதப்படுகிறது

 Michael Alpers, என்னும் ஆஸ்திரேலியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் குரு நோயைக் குறித்து பல ஆண்டுகள்  2012 வரையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து குருவினால் நிகழ்ந்த  கடைசி  இறப்பை தெரிவித்தார். மேலும்  குரு முற்றிலும் இல்லை என உலகிற்கு அறிவித்தார்.

குருவிற்கான நோபல் பரிசுகள்

  • 1976-அமெரிக்க மருத்துவர்  Daniel Carleton Gajdusek- குரு தொற்றை கண்டறிந்ததற்காக
  • 1977-அமெரிக்க நரம்பியல் மருத்துவரும்,  வேதியியலளருமான Stanley Ben Prusiner  – பிரையான்களின் ஆய்விற்காக
  • ஸ்விஸ் வேதியியலாளரும் உயிரி இயற்பியலாளருமான Kurt -பிரையான்களின் புரத அமைபை கண்டுபிடித்தற்காக.

 குரு நோயுற்றவர்களின் மூளையை உண்ட பிறருக்கு நோய் வருவதும், பைத்தியக்கார பசு நோய் (Mad Cow disease) நோயுற்ற பசுவை உண்பவர்களுக்கும் வருவதும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 மேலும் பிரையான் நோய்கள் இனி உண்டாகுமா? மான் வேட்டையாடி அதன் இறைச்சியை உண்ணும் வேட்டைக்காரர்களுக்கும், பிற நோயுற்ற காட்டுவிலங்குகளை உண்பவர்களுக்கும் இனிமேல் பிரையான் நோய் வரும் சாத்தியம் இருக்கிறதா?

இதுகுறித்துத்தான் வட அமெரிக்காவில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்

சமீபத்தில் வட அமெரிக்காவில் மர்மமான முறையில் உணவுண்ன முடியாமல் பட்டினி கிடந்து இறக்கும் மான்களின், எல்க்குகளின் உடலில் மூளையில் பிரையான்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள் அந்த பிரையான்கள் மூளையில் மட்டுமல்ல இறந்த விலங்குகளில் உடல் முழுக்க இருந்தது

 எனவே மான்களின் இறப்பு விகிதம் இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நோய் தடுப்பு மையமான CDC இப்போது வேட்டைக்காரர்களுக்கு பிரையான் நோய் இருக்கிறதா என்று தீவிரமாக கண்காணிக்க தொடங்கி இருக்கிறது 

உலகெங்கும் நர மாமிசம் உண்ணுதல் (Cannibalism) என்பது மானுடவியல் மற்றும் இறையியல் ரீதியாக அணுகப்படும் ஒன்றாகவே இருக்கிறது. கடவுளின் ரத்தம் சதை என உருவகப்படுத்தி அப்பமும் மதுவும் உண்ணப்படுவதும் சடங்கு ரீதியான நரமாமிசம் உண்பதின்  (Ritual cannibalism) ஒரு வடிவம் தான்

Anthropophagy  என்பது மனிதன் மனிதனை உண்ணுவது, Theophagy என்பது கடவுளின் உடல் என்று நம்பி உருவகப்படுத்திக்கொண்ட  உணவை உண்பதன் மூலம் கடவுளின் சக்தியை அருளை ஆசியை பெறலாம் என்று நம்புவதும் உண்பதும்.

ஐரோப்பாவின் மருத்துவ நரமாமிச உண்ணுதல் medical cannibalism எனப்படுகிறது. பட்டினிக் காலங்களில் உயிர்பிழைக்கும் கடைசி வாய்ப்பாக இறந்தவர்களை  உண்ணுவது Starvation cannibalism, விமான ப்பயணம் அல்லது கடல்வழி பயணங்களில் விபத்துக்களில் சிக்கி உணவுப்பொருள் தீர்ந்த போது உயிர்பிழைக்க சடலங்களை உண்பது survival Cannibalism. இப்படி பலவகையான நரமாமிசம் உண்ணும் வழக்கங்கள் உலகெங்கிலும் இருந்தன, இருக்கின்றன.

ஐரோப்பாவில்  மனித உடல்பாகங்களை மருத்துவக் காரணங்களுக்காக  உண்டவர்களை பற்றிய  ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஸ்விஸ் மருத்துவர்  பாராசெல்சஸ் (Paracelsus-1493/4-1541)  மருத்துவ காரணங்களுக்காக மட்டுமல்லாது  அரசர்களும் புனித தந்தைகளும் கூட பல காரணங்களுக்காக நரமாமிசம் உண்டதை எழுதினார்.

எனினும் இன்னுமே பிடிவாதமாக உலகின் எந்த பகுதியிலும் நரமாமிசம் உண்ணுதல் என்பது நடக்கவே இல்லை என்று வாதிடும் மானுடவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள்  இருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நாவல்களில் திரைப்படங்களில், நாடகங்களில், வீடியோ விளையாட்டுக்களில்  நரமாமிசம் உண்பது, குரு நோய் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருக்கிறது, உதாரணமாக: 

குரு இப்போது முற்றிலும் இல்லை. ஆனால் நரமாமிசம் உண்பது   முற்றிலும் கட்டுக்கதை அல்ல. இறந்த உடல்களின் குவியல்களின் மீது அமர்ந்து தியானம் செய்தால் அசாதாரண சக்தி கிடைக்கும் என்று நம்பிய திபெத் புத்தபிட்சுக்களை, காசியில் எரியும் பிணங்களின் உடலை தின்னும் அகோரிகளை நாம் அறிந்திருக்கிறோம்.  கடந்த 2022ல் கேரளாவில் நரபலி கொடுத்து நரமாமிசம் உண்டால் புதையல் கிடைக்கும் என்பதற்காக கொல்லப்பட்டு உண்ணப்பட்ட இரு பெண்களை குறித்த செய்திகளையும் அறிந்திருக்கிறோம்.

இந்த விக்கிபீடியா இணைப்பில் (https://en.wikipedia.org/wiki/List_of_incidents_of_cannibalism#:~:text=Accounts%20of%20human%20cannibalism%20date,the%20practice%20to%20this%20day3.) நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நரமாமிசம் உண்ட நமது நியாண்டர்தால் மூதாதைகளிலிருந்து, கணவனை, மனைவியை குழந்தைகளை, அந்நியர்களை, காதலியை கொன்று சமைத்து உண்டவர்களை பற்றிய தகவல்கள் 2022ன் கேரளா சம்பவம்  வரை இருக்கிறது. 

சந்திராயன் நிலவுக்கு சென்று சேர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் இவை நடக்கிறது என்னும் போது 1900களில் வெளி உலகத் தொடர்பில்லாத ஃபோரே தொல்குடியினர் இறப்புச் சடங்கில் நரமாமிசம் உண்டதில் வியப்பொன்றும் இல்லை.  

 மேலதிக தகவல்களுக்கு:

Alpers, Michael P. The epidemiology of kuru: monitoring the epidemic from its peak to its end. Philos Trans R Soc Lond B Biol Sci. 2008; 363(1510): 3707–3713.

Lindenbaum, Shirley “Kuru, Prions, and Human Affairs: Thinking About Epidemics”. Annual Review of Anthropology. 2001; 30 (1): 363–385

Shirley Lindenbaum (14 Apr 2015). “An annotated history of kuru”. Medicine Anthropology Theory.

Whitfield, Jerome T.; Pako, Wandagi H.; Collinge, John; Alpers, Michael P. “Mortuary rites of the South Fore and kuru”. Philos Trans Royal Society B Biol Sci. 2008: 363 (1510): 3721–3724.

“When People Ate People, A Strange Disease Emerged”. NPR.org. Retrieved 2018-04-08. 

தன் வாழ்வை முற்றிலுமாக குரு நோய் குறித்த ஆய்விற்கு அர்ப்பணித்த  Michael Alpers குறித்து வாசிக்க: https://cosmosmagazine.com/science/biology/the-man-who-linked-kuru-to-cannibalism/

என் பெயர் லோகமாதேவியல்ல. சரண்-1

 இன்று சரணின் 23 ம் பிறந்த நாள் காலம் எத்தனை வேகமாக ஓடி விட்டது என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. அபுதாபியில்  உஷா என்னும்  அரபி பேசத்தெரிந்த அண்டை வீட்டுப் பெண்ணுடன் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று  கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு டாக்ஸியில் வீடு திரும்பிய நாள் நேற்று போல நினைவிலிருக்கிறது.

சரண் வயிற்றில் இருக்கையில் அவனுக்கு போஷாக்கான உணவுகள் என் வழியே அளிக்க முடிந்ததில்லை என்னும் மனக்குறை இன்றும் இருக்கிறது என்றும் இருக்கும். இளம் வயதில் அவனது உடல்நிலை சரியில்லாமல் போகும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த குற்ற உணர்ச்சி என்னை கொல்லும்.

தாம்பத்யத்தின் துவக்க கால சிடுக்குகளில் சிக்குண்டு இருந்த காலத்தில் சரண் உருவாகி இருந்தான். படிப்பு, வேலை ,கனவுகள், உற்றார் உறவுகள் என அனைத்தையும் விட்டுவிட்டு கண்காணாத பாலை நிலத்துக்கு வந்த அதிர்ச்சியே விலகாத நிலையில் கர்ப்பம் அதுசார்ந்த உடல் கோளாறுகள் அதீத பசி, சமைக்க முடியாமல் இருந்தது உதவிக்கு மட்டுமல்ல மனம் விட்டு பேசவும் யாரும் அருகில் இல்லாதது பொருளாதார சார்பு, இப்படி பல சிக்கல்கள் என்னை சூழ்ந்திருந்தன. வார இறுதிகளில் வீட்டில் இருப்பவர்களுடன் பேசுகையில் எனக்கு அவர்களிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இருந்ததில்லை. ஆனால் எந்தபூகாரும் இன்றி என்னை எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொடுthதுக்கொண்டு வாழத்துவங்கி இருந்தகாலமது

வயிற்றில் சரண் துடிப்பை உணர ஆரம்பித்த நாட்களில் நான் மெல்ல மெல்ல மாறினேன், எனக்குள் ஒரு உயிர் வளர்வது பெரும் நம்பிக்கையை பொறுப்பை பிடிப்பை வாழ்வின் மீதான விருப்பை மீண்டும் அளித்தது.

 எனக்கு என்னை நம்பி  என் வயிற்றில் ஓருயிர் என்பதுவும் என்னால் ஒரு உயிரை தரமுடியும் என்பதுவும் பெரும் உத்வேகத்தை அந்த சிக்கலான சமயத்தில் அளித்தது

சரணுக்கு நானும் அவன் எனக்கும் பரஸ்பரம் உயிர்கொடுத்துக்கொண்டோம் என்றும் சொல்லலாம்..

அச்சமயத்தில் எனக்கு மிகth தேவையாயிருந்த ஓய்வும்  பொருளாதார  காரணங்களுக்காக உடன் தங்க அனுமதித்திருந்த மற்றொரு  குடும்பத்தினால் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. கொடுங்கனவு போலான நாட்கள் அவை.

கிருஷி விஞ்ஞான் கேந்திரா வின் மூலம் கிடைத்திருந்த சணல் ஆய்வு மையத்தின் சயின்டிஸ்ட் பணியை குடும்பத்தினரால் இழந்து கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து , அதையும்  கல்யாணத்தின் பொருட்டு ராஜி வைத்துவிட்டு வந்த இழப்பின் வலி எப்போதும் இருந்த நாட்கள் அவை. கல்யணத்துக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த பிறகு  எழுதவும் துவங்கி இருந்தேன். ஆதித்தனார் நினைவு போட்டிக்கென சரக்கொன்றை என்னும் முழுநாவலை கைப்பட எழுதி முடித்து அதை தட்டச்ச காத்திருந்தேன். நான் இழந்த பலவற்றிலதுவும் ஒன்று.

கண்ணில் பசுமையே தட்டுப்படாமல் உள்ளும் புறமும் வெறிச்சோடியிருந்த பாலைவாழ்வு. மணற்புயல்  ஏஸி  அமைப்பின் வழியே வீடங்கும் அடிக்கடி மண்ணை நிறைத்துவிட்டு போகும் அதைச் சரிசெய்யக்கூட தோன்றாமல் மலைத்து போய் களைத்தமர்ந்திருப்பேன்.

குமட்டி வாயுமிழ்ந்துவிட்டு மீண்டும் சமைக்க வருவேன் இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கெல்லாமே உண்டாவதுதான் எனினும் எனக்கு அருகில் உதவிக்கென  யாருமற்ற நிராதரவான நிலையென்பதால் எல்லாமே அதீதமாக இருந்தது. அப்போது எனக்கு அன்புடன் உதவி செய்ததாக நான் நினைத்த ஒரு பெண் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் தெரிய வந்தபோது தருண் பிறந்திருந்தான். அவள் வீட்டில் நான் கர்ப்ப காலத்தில் ருசித்து உண்ட  உணவின் ஒவ்வொரு பருக்கையும் மனதில் செரிக்கவே இல்லை.பிரசவத்துக்கு இந்தியா வந்தேன்.

விமான பயண தகுதியையும் கடந்து 9 மாதங்கள் முடிந்த நிலையில் போலியாக ஒரு பயண தகுதி சான்றிதழ் வாங்கி ஒரு வழியாக இந்தியாவுக்கு வர விமானபயணம் உறுதியானது.  அங்கு சென்றதிலிருந்து வியர்வை சுரக்காமல் கர்ப்பகால பருமனும் சேர்ந்து எடை கூடி விட்டிருந்தது ஆளும் உருமாறியிருந்தேன். அந்த 9 மாதங்களில் எனக்கு நிகழ்ந்தது ஆளுமைச்சிதைவென்று இப்போது நிதானத்தில் இருக்கையில் அறிய முடிகின்றது. 

என்னையும்  வயிற்றில் இருக்கும் குழந்தையையும் யாரோ எதோ செய்துவிடுவார்கள் என்னும் அச்சம் ஒவ்வொரு நொடியும் பீடித்திருந்தது யாரும் சாப்பிட  எதாவது கொடுத்தனுப்பினால் அவற்றை ரகசியமாக சின்க்கில் கழுவி ஊற்றி விடுவேன்.

கடும் பசியும் சில குறிப்பிட்ட உணவுகளின் பேரிலான பெரு விருப்பமும் அவற்றை உண்ண முடியாத ஏக்கமுமாக கழிந்த அந்த கர்ப்பகால ஆதங்கம் இன்னும் இருக்கிறது.

எப்பாடு பட்டாவது குழந்தையை, துர்கா என்று நான் பேர்  வைத்திருந்த மகளை காப்பாற்ற  வேண்டும் என்று சதா நினைப்பிருக்கும். இந்தியாவுக்கு பயணிக்கையில் அபுதாபி வந்து ராகவன் அகல்யா வீட்டில் தங்கி இருந்தேன் ஒரிரவு. அவர்களது சிறுமகனின் விளையாட்டு கார் பொம்மைகள் இனம்புரியா கிளர்ச்சியை உண்டாக்கின அச்சமயத்தில்

காலை விமானத்தில் தன்னந்தனியே வயிற்று குழந்தையை தடவிக்கொண்டு அமந்திருந்தேன். அம்மா வீட்டுக்கு  வருவதிலும் பெரிய ஆர்வமும் விருப்பமும் இல்லாமல்  இருந்தது, இருந்தும் தாம்பத்தியத்தில் இருக்கவேண்டிய அன்பு பாசம் காதல் இவற்றைக்காட்டிலும் சம்பிரதாயங்கள் முதன்மையாக கருதப்பட்டதால் தாய்வீட்டுக்கு செல்லவேண்டி வந்தது. ஒருவகையில் அந்த பாலையிலிருந்தும் ஓயாத பணிகளிலிருந்தும்  தற்காலிகமாகவேனும் விடுபட்டு வந்தது ஆசுவாசமாயிருந்தது என்னவோ உண்மைதான்.ஆனால் வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதைதான் மீண்டும் நடந்தது

கோவை விமான நிலையத்தில் ஏதோ பழுது காரணமாக விமானம் ஒரு டன் செங்கல்லை போல்  டமாரென்று தரையிறங்கியதும் எனக்கு இடது பக்க முகம் முழுவதும் உணர்ச்சியற்று  மரத்துப்போனதுபோல ஆனது அச்சமயதில் அந்த பக்க பார்வையும் மங்கிவிட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தான் மீண்டும் பார்வையும் முகமும் சீரானது.

விமான நிலையத்தில் அக்கா அம்மா அப்பா விஜி காத்திருந்தனர். அனைவருக்கும் என் உடல் எடை கூடியிருந்தது பெரும் திகைப்பை உண்டாக்கி இருந்தது.  

எனக்கு  முகத்தில் இப்படி நேர்ந்ததை  சொன்னந்தும் நேராக ஆல்வா மருத்துவமனைக்கே செல்ல முடிவானது.

ஆல்வா முதன்முறையாக நீங்க போய் பாபுவை பாருங்க என்றார்

பாபு என்றது அவரது மகன் மருத்துவர் வசந்தை

நான் வசந்தை குறித்து முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன் எங்களை விட சற்று மூத்தவர் அவரது சகோதரி மித்ராவின் பள்ளித் தோழி.

ஆனால் அவரை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.அதன்பிறகு பல நூறு முறை சென்று குடும்பத்தில் பலரும் உயிருடன் இருக்கக் காரணமாயிருந்த அம்பராம்பாளையம் மருத்துவமனைக்கு அன்றிரவு தான் முதன் முதலில் சென்றேன்.

வசந்த சார் அறையில் காத்திருந்தார். ஒரு ஸ்கேன் எடுத்து விட்டு அங்கே புதிதாக வந்திருந்த பெண் மருத்துவர் பிரசித் மரியா என்று நினைவு அவரை சந்திக்க சொல்லி ஒரு சிறு குறிப்பை எழுதித்தந்தார்.எதிரில் அமைந்திருந்த அவரின் அறைக்கு நான் அந்த குறிப்புடன்  அறையை விட்டு வெளி வருவதற்குள் மீண்டுமழைத்து அதில் தான் எழுதியிருந்த please see logamadevi my friend என்றிருந்ததை அடித்து  our family friend என்று எழுதிக்கொடுத்தார்.

செலினா என்னும் தாயைபோல் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் என்னை கவனித்துக்கொண்ட செவிலியையும் அன்றதாதன் சந்தித்தேன். என்னை பரிசோதித்து விட்டு மருத்துவர் எல்லாம் நலமாக உள்ளது என்றும் ஸ்கேனில் ஒன்றும்  பிரச்சனை இல்லை என்று சொன்னதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னும் ஒருவாரத்தில் பிரசவம் ஆகிவிடும்  என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.

வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததால் பலர் என்னை வந்து பார்த்தார்கள். பலகாரங்கள் பூக்களால் நிறைந்திருந்தது வீடு

ஆசிரியர் ராஜ்குமார் சாரும் அவரது மனைவியும் எனக்கு பலகாரங்கள் வாங்கி வந்திருந்தனர் மாலை அப்பாவுடன் நடந்து போய் ஒரு இளநீரை நான் காசு கொடுத்து வாங்கி குடித்துவிட்டு வருவேன் சிலநாட்கள்

ஈரோடில் சிம்னி என்னும் ஹோட்டலில், வளைகாப்பு அதிலும் எனக்கு நினைவு வைத்துக்கொள்ளும்படியாக ஏதும் இல்லை. குடும்பத்து ஆண்களின் பெருமிதமும் அன்பும் காதலும் அறிவும் பண்பும் பல தலைமுறை தொடர்ச்சியாக வரவேண்டுமல்லவா எனவே எனக்கும்ஆண் குழந்தையாக பிறக்கட்டுமென்று  மடியில்  கொஞ்சம் வளர்ந்துவிட்டிருந்த இந்திரா அக்காவின் மகன் ப்ரதீப்பை அமரவைத்தார்கள்  இன்னும் மணமாகி இருக்காத பாப்பிக்காவை நேரிட்டு பார்க்க சங்கடப்பட்டேன் 

ருக்மணி அத்தை நீ படற பாட்டை பாத்தா இன்னும் ரெண்டு நாளில் பிரசவம் ஆயிரும் போலிருக்கே என்றார்கள்.

 மித்ரா  வழக்கம் போல பல பழைய விஷயங்களை மிகைப் படுத்திக்கொண்டு வழியெங்கும் கதறி அழுது  என்னையும் அழவைத்துக்கொண்டு வந்த அந்த இரவு கார் பயணம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஒரு சிக்னலில் கார் காத்திருக்கையில் ஒரு இளைஞன் என்னவோ விற்பனை செய்ய வந்தான், பட்டுப்புடவை , பூவும் நகைகளுமாய் இருந்துகொண்டு  கண்ணீருடன் இருந்த என்னை பார்த்து திகைத்து விலகிச் சென்றான். 

அம்மாஅப்பா  நிறைகர்ப்பிணியாயிருந்த  என்னை எப்படி கவனித்துக்கொண்டார்கள் என்பதை நான் எழுத்திலும் குறிப்பிட விரும்பவில்லை

ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது குனிந்து நிமிர்ந்து வீட்டை பெருக்கினால் சுகப்பிரசவம் ஆகும் சிசேரியனுக்கு செலவும் குறையும் என்னும் அம்மாவின் நிர்தாட்சண்யமான கருத்துப்படி கூட்டி பெருக்கிக்கொண்டிருக்கையில் அந்த ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து வாசித்தேன் அதில் குழந்தையின் மூளை ரத்த நாளங்களில் ஒன்று விரிவடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. என்னிடம் அதை காண்பிக்காமல் வைத்திருந்திருக்கிறார்கள்.

ஈரக்குலை நடுங்குவது என்றால் என்னவென்று  அன்று உணர்ந்தேன் கதறி அழுது வீட்டுக்கு அப்பா விஜி வந்ததும் உடனே வசந்த் டாக்டரை பார்க்கவேன்டும் என ஆர்ப்பாட்டம் செய்து புறப்பட்டேன்.அப்பாவிடம் அப்போது அம்பாஸடர் கார் இருந்தது.

வசந்த சார் பொறுமையாக அன்று விமானம் தரையிறங்கிய அந்த அதிர்வில் இப்படி டைலேட் ஆகியிருக்கும் ஆனாலும் அதுவே சரியாகி இருக்கும் வாய்ப்புமிருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று தைரியம் கூறினார் அன்றிலிருந்து சரண்  நலமுடன் பிறந்த 4 ம் தேதிவரை அச்சம் என்னைநிழல் போல பின்தொடர்ந்தது

.

பிரசவத்துக்கு குறிப்பிட்ட  நாளும் கடந்துவிட்டதால் வசந்த் மருத்துவமனைக்கு வந்து தங்கிவிட சொன்னார்

கருப்பை சுருங்கி விரியும் அறிகுறி இல்லாததால் அதற்கான ஆக்சிடாசின் ஜெல் தடவியும் வலிவரவில்லை. தனா அக்கா உடனிருந்தார்கள் அறுவை சிகிச்சை என முடிவானது அறுவை சிகிச்சையை குறித்தும் முதல் பிரசவம் குறித்தும் எனக்கு சிறிதும் பயமேயில்லை சிசேரியனுக்கு ஆகும் செலவை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மாவை பார்க்கத்தான் பயமாயிருந்தது.

தலை பாதங்களில் படும்படி  முதுகை வளைத்து உச்சகட்ட வலியை கொடுத்த அந்த ஊசியை முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தி என் கண்களை கட்டியபின் அவர்களுக்குள் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்தார்கள். சரணின் அழுகுரல் கேட்டது. செலினா சிஸ்டர் காதில் பையன் என்றார்கள்.

நான் அம்மா ஆகிவிட்டேன் என்று அந்த அழுகுரல் எனக்கு உணர்த்தியது. ஆனால் வேறு ஏதும் நினைக்குமுன்பே மயக்கமானேன்,  பிறகு வெகுநேரம்  கழித்து என்னை ஸ்ட்ரெச்சரில் அறைக்கு தள்ளிக் கொண்டு போகையில் தான் தனாக்கா எனக்களிக்கப்பட்டிருந்த  அறை என் 8 என்பதை  கவனித்து செவிலியரை கடிந்துகொண்டு  வேறு அறை அளிக்க உத்தரவிட்டார்கள்

மயக்கமா உறக்கமா என்று தெரியாமல் சிலமணி நேரம் கழிந்தபின்னரே சரணை காட்டினர்கள் பூப்போல இருந்தான் கைவிரல்களை இறுக்க மூடியிருந்தான் கண்களும் மூடி இருந்தது மிகச்சிறிய சின்னஞ்சிறிய ஓருயிர், பசி பொறுக்கமாட்டான். 

அச்சமயம் ஒரு  அன்னையாகி இருப்பது என்னவென்று பெண்களுக்கு மட்டுமே புரியுமென்று நினைக்கிறேன்.அந்த பொங்கிப்பெருகும் உணர்வை எழுத்தில் கொண்டுவரமுடியாது 

மித்ரா குழந்தையின் கைவிரல்கள், நகம் ஆகியவற்றில் குற்றம் கண்டுபிடித்தாள் எனக்கு அவளை நினைந்து ஆச்சர்யமாக இருந்தது ஆறுமுகம் சார் சொல்லுவாரே  எஜுகேட்டெட்இல்லிட்ட்டெரேட் என்று.  மறுநாளே கொசுக்கடி, வசதிகுறைவான அறையின் உறக்கம் இவற்றின் பொருட்டு மாமா அழைத்து திட்டுகிறாரென்னும் வழக்கமான பொய்யை சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றாள்

அம்மா கணக்குப்போட்டது  போலவும் நான் பயந்தது போலவும் இல்லாமல் 13 ஆயிரம் ரூபாய்களே வசந்த சார்  கட்டணமாக கேட்டிருந்தார். இத்தனைக்கும்நானிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறைக்கும் இடையில் ஒரு கதவு இருந்ததால் அந்த அறையும் எங்களுக்கே வசந்த் சார் அளித்திருந்தார் எனவே இரண்டு அறைகளிலும் வசதியாக தங்கிகொண்டிருந்தோம். வசந்த் என்னும் மருத்துவரை மாமனிதரை குறித்தறிந்து கொள்ள துவங்கிய நாட்கள் அவை.

வீட்டுக்கு வந்தும் ஓய்வின்றி உடனே அபுதாபி புறப்பட ஆயுத்தங்கள் நடந்தன என்னை யாரும் ஏன் பச்சை உடம்புடன், அறுவை சிகிச்சை செய்துகொண்ட உடம்புடன் உடனே போகிறாய்? இத்தனை சிறிய குழந்தையை எப்படி வளர்ப்பாய் என்று கேட்கவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இரண்டுமே வாழ்விடங்கள் அல்ல வசிப்பிடங்கள் என்பது தெரிந்திருந்தது.

உன் உடல் முற்றிலும் கட்டுக்குலைந்து மாறிவிட்டிருந்ததைக்கூட வேறொருவர் சொன்ன பின்னர் கவனித்தேன். அதைகுறித்து எனக்கு புகாரெல்லாம் இல்லை நான் அந்த 1 வருடத்தில் எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தேன் பலவற்றை இழந்திருந்தேன் குறிப்பாக என் சுயசார்பையும் தன்மதிப்பையும் எனவே உடல் மாற்றத்தை  ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை.

சரண் என்று பெயரிடுவதில் ஒரு சிக்கல் வந்தது ஆனால் நான் அந்த பெயர் வைக்க உறுதியாக இருந்தேன்,மருத்துவமனையிலேயெ பிறப்புசான்றிதழ் வாங்க வேண்டி வந்ததால் அப்பொழுதே பெயர் வைத்தாயிற்று.

அதே உடம்புடன் சரணை எடுத்துக்கொண்டு ஈரோடு செல்லும் சம்பிரதாயம் அங்கே தங்க வேண்டிய சம்பிரதாயம் அங்கிருப்பவர்களும் குழந்தையை பார்க்க வேண்டும் என்னும் சம்பிரதாயம்,

 பச்சை உடம்புக்காரிக்கும் பச்சிளம்சிசுவுக்கும் சில செளகரியங்கள் அடைப்படையான வசதிகள் தேவை பயணத்தை   என் உடல் தாங்குமா என்றெல்லாம் யோசிக்க யாருக்கும் நேரமும் மனமும் இல்லை.  காருக்கு எரிபொருள் போடுவதிலிருந்து மருத்துவ செலவு வரை அம்மா அப்பாவையோ சரண் அப்பாவையோ சார்ந்திருக்கும் புதிய  அவல நிலை என்னை கீழானவளாக உணரசெய்து கொண்டிருந்தது.

பத்திய சாப்பாடு, பால் ஊற சிறப்பு உணவு கருப்பை சுருங்க லேகியம் இவை எல்லாம் நான் இன்னும் கதைகளில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்காதவைகள்  நானிழந்தவைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அளிக்க சரண் வந்திருக்கிறான் என்னும் ஒரே எண்ணம் மட்டும் ஆழப்பதிந்திருந்தது.

 அதே உடம்புடன் பச்சிளம்  சரணை எடுத்துக்கொண்டு கோவைக்கு அலைந்து பாஸ்போர்ட் எடுத்து  அவனுக்கு 21 நாள் ஆகி இருக்கையில் அவனை சரியாக பிடித்துக்கொள்ளக்கூட தெரியாத நான் கோவை  விமான நிலையத்திலிருந்து அபுதாபி சென்றேன்.

விமானத்தில் ஒரு மூத்த பணிப்பெண் அவன் தலையை  சேர்த்து பாதுகாப்பாக எப்படி பிடித்து கொள்வது என கற்றுக்கொடுத்தார்

இருக்கையிண் முன்பாக ஒரு சிறு தொட்டில், கடைகளில் எடை பார்க்கும் சில்வர் ட்ரே போல இருக்கும் அதில் வெல்வெட் போர்த்தப்பட்டிருக்கும், அதை என் முன்னே கொண்டு வந்து  வைத்தார்கள் அதில் சரணை படுக்க வைத்தேன் எனினும் விமானபயணம் எனக்களிக்கும் அச்ச்சத்தில் ஒருவேளை விபத்தேற்பட்டால் சரணும் நானும் தனித்தனியே பிரிய நேரிடும் என்று தீவிரமாக யோசித்து அவனை  மடியில் வைத்துக்கொண்டேன்.அவன் பசியாற்றவும் விமான இருக்கையில் பெரும் சிரமம் இருந்ததுஒருவழியாக  அபுதாபி சென்று சேர்ந்தேன்.

அபுதாபி வாழ்வில் தொடர்ந்த இருளிலும் சிறு சுடராக சரணே ஒளியேற்றிக்கொண்டிருந்தான்.

நல்ல உருண்டை முகமும் சுருட்டை தலைமுடியுமாக வளர துவங்கினான். டுட்டூ என்று எதோ ஒரு கதையில் வாசித்த பெயர் எனக்கு பிடித்து அதையே அவன்செல்லப்பெயராக்கினேன், விஜி அவனை டிப்பு குமார் என்று அழைப்பான்

அவனுக்கு அப்போது  நல்ல உணவுகள் அளிக்க முடிந்தது. தாய் பகை குட்டி உறவென்னும் நம் மரபு வேடிக்கையானது.

ஆனால் ஒரு வயதிருக்கையில அவனுக்கு எதனாலோ ஒவ்வாமை வந்தது எப்போதும் வாயுமிழ்தலும் வயிற்றுப்போக்குமாக இருந்து மெலிந்துபோனான்

அந்த குளிருட்டப்பட்ட வீடா மணற்புயலால் வந்துசேரும் துகள்களா அல்லது உணவா எதுவென்று தெரியவில்லை எனினும் ஒவ்வொருநாளும் அவதிப்பட்டான். ஒவ்வொரு இரவும் நிச்சயம் வாயுமிழ்வான் எனவே அவனுக்கு மூச்சுதிணறிவிடும் என்று பயந்து கண்விழிதுப்பார்த்தபடிக்கே இருப்பேன் எப்போதுமவன் வாயுமிழ்வதை பிடிக்க ஒரு பாத்திரம் படுக்கைக்கு அருகில் இருக்கும்

ஓரிரவு கூட நான் முழுக்க உறங்கி இருக்கவில்லை

 கடற்கரைக்கு சென்று வந்த ஒரு நாள் ஏதோ விஷ பூச்சி கடித்து அவன் கால்களிரண்டும்  வீங்கி இறுகி விட்டது வலியில் துடிதுடித்தான், ஒரு இந்திய மருத்துவர்  உடனே அவனை ஸ்பெலிஷ்டிடம் காட்ட வேண்டும் என்றார். யாருக்கும் அஊ என்னவென்றும் எப்படி குணமாக்குவது என்றும் தெரியவே இல்லை

 இந்தியாவுக்கு எத்தனை முறை போன் முயன்றும் அன்று வசந்த உட்பட  யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, கருத்து நீலம் பாரித்த  கால்களுடன் வீறிட்டு அலறிகொண்டே இருந்த சரணுக்கு ஒரு இளஞ்சிவப்பு லோஷனை தடவியபடி எல்லா கடவுள்களையும் வேண்டிகொண்டு இரவெல்லாம் சுவரில் தலைசாய்த்து மடியில் அவனை போட்டுக்கொண்டு விழிந்திருந்தேன் சரண் அழுதழுது களைத்து உறங்கிப்போயிருந்தான் காலையில் அவன் கால் வீக்கம் வடிந்து தெய்வாதீனமாக முன்பு போல சரியாக இருந்தது,

அவனை கையில் வைத்துக்கொண்டு வீட்டுவேலைகள் துணி துவைப்பது உட்பட செய்து முடித்து குளிக்கப்போகையில் மட்டும் அவனைச் சுற்றி தலையணை  அமைத்துவிட்டு போவேன். எப்படியோ கண்டுபிடித்து கதற துவங்குவான்.

வீட்டுவேலைகளை  முடித்தபின்னர் அவனை மடியிலிருத்திக்கொண்டு கணினிதிரையில் சுட்டிவிகடனில் சித்திரக்கதைகளை காட்டிக்காட்டி கதை சொல்லுவேன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான்

.

ராய் அவனை உள்ளார்ந்த அன்புடன் சரண் சிங்கே என்றழைப்பார் சரணுக்கு இரண்டு வயதாகும் போது தருண் வயிற்றில்.  அந்த காலகட்டம் மற்றுமோர் கொடுங்கனவு. இந்தியாவுக்கும் அபுதாபிக்குமாக பந்தாடப் பட்டேன். 

கர்ப்பமாக சிறு மகனையும் தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு ஒருநாள்  மதிய வெயிலில் வந்தேன். செயலாளர் இப்போது ஏதும் வேலை தரும்படி இல்லை என்றார். மெல்ல மாடிப்படி ஏறி நான் அமர்ந்திருந்த அறை  லேப் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். லேபில் எனக்கு பதிலாக வந்த கண்ணன் என்பவர் என்னவோ சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்து குளியலறையில் கதறி அழுதேன்.

சரண் ஐந்து வயதாகும் வரை அங்கிருந்தான் அதற்குள் அவனது சிறு சைக்கிளை சைக்கிளுக்கென்றமைக்கப்பட்டிருக்கும் சிறுநடைபாதையில் அவனாக ஓட்டிக்கொண்டு செல்வது  வழக்கமாகி இருந்தது.

1வயது வரை அவன் பேச துவங்கவில்லை பின்னர் மெதுவே மாமா அம்மா அப்பா என துவங்கினான் எப்போதும் புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.

 வண்ணப்புகைப்படங்களை கண்கொட்டாமல் பார்ப்பான் விமான பயணத்தில் கொடுத்த  பஸில் விளையாட்டு அட்டைகளை அறை முழுவதும் பரப்பி வைத்து  அவற்றின் வடிவங்களை பொருத்தி விளையாடுவதும் ஒரு சிறு நடைவண்டியை அதன் பல விளக்குகள் மினுங்க ஓட்டிச்செல்வதும் பிடிக்கும் அவனுக்கு.

இட்லி தட்டில் எஞ்சியிருக்கும் துணுக்குகள்  அவனது விருப்ப உணவு.

தொடரும்

நீலச்சிலுவை – கில்பர்ட் கெய்த் செஸ்டர்டன்

வனம் இதழில் வெளியான மொழியாக்கம்

விடியலின் வெள்ளி மினுங்கலுக்கும் கடலின் பச்சை பளபளப்புக்கும் இடையே அந்த படகு ஹார்விச் துறைமுகத்தை அடைந்து கூட்டமாய் மக்களை விடுவித்தது. அந்த கூட்டத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் போல் இருந்தார்  நாம் தொடர வேண்டிய நபர்.  அவருடைய விடுமுறைக்கானவை போலிருந்த உடைகளுக்கும், தீவிரமான முகபாவத்திற்குமான வேறுபாட்டைத் தவிர அவரை குறிப்பிட்டு கவனிக்க  வேறு எதுவுமில்லை.  வெள்ளை மேலங்கியும் அதற்கு  மேல் வெளுத்த சாம்பல் வண்ண ஜாக்கெட்டும், சாம்பல் நீல ரிப்பனை கொண்டிருந்த  வெள்ளி நிற வைக்கோல் தொப்பியுமாக அவரது உடையும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத உத்தியோகபூர்வமான ,முகமுமாக இருந்தார்.

அவரது இருண்ட ஒடுங்கிய முகத்தில்  ஸ்பானியர் என கருத இடமளிக்கும்  கருப்பு தாடி இருந்தது. சோம்பேறிகளின் தீவிரத்துடன் அவர் சிகெரெட் புகைத்து கொண்டிருந்தார்.

அவரது சாம்பல் வண்ண ஜாக்கெட்டுக்குள் குண்டுகள் நிரப்பிய கைத்துப்பாக்கி இருப்பதும், அவரது  மேலங்கியில் காவல் துறையின் அடையாள அட்டை இருப்பதும், ஐரோப்பாவின் அதிபுத்திசாலித்தனத்தை அந்த வைக்கோல் தொப்பி மறைத்திருக்கிறது என்பதையும்  யாராலும் யூகித்திருக்க முடியாது.

ப்ருஸெல்ஸிலிருந்து லண்டனுக்கு அந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கைதொன்றை செய்யும் பொருட்டு பாரீஸ் காவல் துறையின் தலைவரும், உலகின் மிக பிரபலமான விசாரணை அதிகாரியுமான வேலெண்டீனே நேரில் வந்திருக்கிறார்.

மகா குற்றவாளி  ஃப்ளேம்போ இங்கிலாந்தில் இருந்தான்.  மூன்று நாடுகளின் காவல் துறைகளும்   அவனை கெண்ட்’லிருந்து புருஸ்ஸெல்ஸுக்கும், பின்னர் புருஸ்ஸெல்ஸிலிருந்து ஹாலந்தின் ஹூக் நகருக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருந்த நற்கருணை மாநாட்டின் கூட்டத்தையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவன் ஒரு கீழ்மட்ட உத்யோகஸ்தனை போலவோ அல்லது அந்த மாநாட்டுக்கு தொடர்புடைய செயலராகவோ  மாறு வேடத்தில் அங்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேலண்டீனுக்கு அவனை குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. உண்மையில் ஃப்ளேம்போவை    யாராலுமே கணிக்க முடியாது.

உலகை கொந்தளிக்க செய்துகொண்டிருந்த  அவனால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் குற்றங்கள்  ரோலண்டின் மரணத்திற்கு பிறகு திடீரென்று நின்று போனபோது உலகமே அமைதியாக இருந்தது.

ஆனால் அவன்  செல்வாக்கின் உச்சத்திலிருக்கையில் (அதாவது   மோசமான பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கையில்)  அவன் சர்வதேச அளவில் ஒரு பேரரசனை போல புகழுடன் இருந்தான். பெரும்பாலான காலைகளில், தினசரி நாளிதழ்களில் அவன் ஒரு அசாதாரணமான குற்றத்தின் விளைவுகளிலிருந்து தப்பிக்க   மற்றொரு குற்றத்தை செய்த செய்தி இடம் பெற்றிருக்கும்.

அவன்  பிரம்மாண்டமான அச்சமூட்டும் உடற்கட்டை கொண்டிருந்தான். அந்த உடற்கட்டுடன் அவன் ஒரு  நீதிபதியை  மன அமைதிக்கு வழிகாட்டுவதாக சொல்லி தலைகீழாக நிற்க வைத்தது, டிரெவோலி சாலையில் கைக்கொன்றாக இரு காவலர்களை தூக்கி கொண்டு ஓடியது போன்ற   செய்கைகள் பலதரப்பட்ட கதைகளாக நகரில் உலவியது.

ரத்தம் சிந்தவில்லை என்றாலும் இது போன்ற கண்ணியமற்ற செயல்களுக்கு அவனது அசாதாரண உடல்வலிமை காரணமாயிருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்படி  வேடிக்கை கதைகள் அவனைக்குறித்து உலவினாலும்  அவனது  பெருங்கொள்ளைகள்  உண்மையில் மிக புத்திசாலித்தனமான நடத்தப்பட்டவை.  அவனது ஒவ்வொரு திருட்டுக்கும் தனித்தனியே கதைகளும் உருவாகின.

அவனது அனைத்து செயல்பாடுகளிலும்  இருந்த எளிமை பிரத்தியேகமானது. உதாரணமாக, ஒரு நள்ளிரவில் தெருக்களின் அடையாள பலகைகளின் எண்களை மாற்றி எழுதி  ஒரு பயணியை அவன் திசை திருப்பி சிக்க வைத்தான்.

ஃப்ளேம்போ லண்டனின்  தைரோலியன் பால் நிறுவனத்தை மாடுகளோ வண்டிகளோ பாலோ எதுவுமே இல்லாமல் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன்  நடத்தி வந்தான்.

மிக எளிதாக வீட்டு வாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் பிற பால்  நிறுவனங்களின் பால் கேன்களை எடுத்து அவனது  வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது அத்தனை எளிதானதாயிருந்தது அவனுக்கு.

அவன் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த போதும் அவளின் அனைத்து கடித தொடர்புகளையும் துருவி துருவி ஆராய்ந்தும் ஃப்ளேம்போவை குறித்த ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் புகைப்படம் எடுத்து நுண்ணோக்கியால் மட்டுமே பார்த்து வாசிக்க முடியும் அளவுக்கு மிக நுண்ணிய அளவில்  அவனது  கடித எழுத்துக்கள் இருந்தன.

நகர்த்தக்கூடிய தபால் பெட்டிகளை உருவாக்கி  புறநகர் சாலை முனைகளில் அவற்றை வைத்து அதை உபயோகப்படுதுபவர்களின்  தபால்களை திருடும் வழியையும் அவனே கண்டுபிடித்தான்.

அவன் பிரம்மாண்ட உடற்கட்டை கொண்டிருந்தாலும்  ஒரு வெட்டுக்கிளியை போல தாவி மரக்கூட்டங்களுக்கிடையே அவன் மறைந்து விடுவதை அனைவரும் அறிந்திருந்தனர். திறமைசாலியான வேலண்டீனுக்கு  ஃப்ளேம்போவை  தேட துவங்கியபோதே தெரிந்திருந்தது அவனை  இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதோடு அவரது  வேலை முடிந்துவிடாதென்று.

ஆனால் அவனை எப்படி கண்டுபிடிப்பது?. வேலண்டீனின் இதுகுறித்த  யோசனைகள்  முடிவடையாமல் இருந்தன. ஃப்ளேம்போவை குறித்த   இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் எந்த மாறு வேடத்திலும் மறைக்க  முடியாத  அவனது  அதீத உயரம் தான்.

இந்த தேடலில்  வேலண்டீன் உயரமான ஒரு ஆப்பிள் விற்கும் பெண்ணையோ, ஒரு உயரமன படைவீரனையோ அல்லது சுமரான உயரம்கொண்ட  ஒரு சீமாட்டியை பார்த்திருந்தால் கூட அவர்களை கைது செய்திருப்பார்.  ஆனால் அந்த ரயில் பயணத்தில் அப்படி வழக்கத்துக்கு மாறான உயரத்தில் அப்பயணத்தில் யாரையும்  வேலண்டீன் கண்டிருக்கவில்லை. அந்த இடத்தில் இருக்கும் ஒருவரை ஃப்ளேம்போ என சந்தேகப்படுவது ஒரு பூனையை ஒட்டகச்சிவிங்கி என சொல்வதை போலத்தான்.

இந்த படகு பயணத்தில்  வேலண்டீனுடன் வெறும் 6 பிரயாணிகளே இருந்தார்கள். கடைசி நிறுத்தம் வரை பயணித்த குள்ளமான ஒரு ரயில் நிலைய ஊழியர்,  இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஏறிய  சுமாரான குள்ளமாயிருந்த மூன்று தோட்டக்காரர்கள், எஸ்ஸெக்ஸ் கிராமத்திலிருந்து  ஏறிய  மிக குள்ளமான ஒரு விதவைப் பெண்மணி மற்றும் மிக மிகக்குள்ளமான ஒரு  ரோமன் கத்தோலிக்க பாதிரியார்.

கடைசியாக ஏறிய  அந்த பாதிரியாரை பார்த்ததும்  வேலண்டீன் ஏறக்குறைய சிரித்து விட்டார். கிழக்கு பகுதிக்கே உரிய  மந்தமான முகமும்,  வடக்கு கடலை போன்ற வெறுமையான கண்களும்  கொண்டிருந்த அவன் தூக்கமுடியாமல்  பல பழுப்பு காகித பெட்டகங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.

அந்த நற்கருணை மாநாட்டிற்கு அந்த பாதிரியை போலவே மூடநம்பிக்கையுடன்  புற்றீசல்கள் போல பலரும் வந்து கொண்டிருந்தார்கள்.

கடவுள் நம்பிக்கை அற்றவரான வேலண்டீனுக்கு  பாதிரிகளை பிடிக்காது, சொல்லப்போனால் அவர்கள் மீது அவருக்கு கொஞ்சம் இரக்கம்  கூட  உண்டு.  இந்த குள்ளப்பாதிரியோ பார்ப்போர் அனைவரின் இரக்கத்திற்கும் உரியவனை போலிருந்தார்.

பயணச்சீட்டின்  எந்த முனையை பிடித்து கொள்வது என்று கூட  தெரிந்திருக்காத அவரிடம் அடிக்கடி கீழே விழுந்தபடி இருக்கும் மலிவான பெரிய  குடை ஒன்று இருந்தது

அவர் வெள்ளந்தியாக  பெட்டியிலிருந்த அனைவரிடமும் தன் கையில் உள்ள பழுப்பு  பெட்டகங்களொன்றில் இருக்கும்  அசல் வெள்ளியில் செய்யப்பட்டு, நீல அருமணிகள்  பதிக்கப்பட்டிருக்கும்  அரிய பொருளை தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொண்டே இருந்தார் .

எஸ்ஸெக்ஸின் அப்பாவித்தனமும் துறவிக்கான எளிமையுமாக  இருந்த அந்தக் கலவை  டோடென்ஹேமில் இறங்கிச் சென்று, மீண்டும் திரும்பிவந்து , மறந்துவிட்ட குடையை எடுத்துக்கொண்டு திரும்பிச்செல்லும்  வரை வேலண்டீனுக்கு வேடிக்கையாகவே இருந்தது

அவர் அப்படி குடையை எடுக்க திரும்பி போது வேலண்டீனே   அந்த அரிய பொருளை குறித்து  அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க  தேவையில்லை என்று அவரை எச்சரித்தார்.

பயணத்தின் போது வேலண்டீன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்று 6 அடிக்கு  மேல் இருப்பவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார். ஏனெனில் ஃப்ளேம்போ அதற்கும்  4 இன்சுகள் அதிகமான உயரம் கொண்டவன்.

ரயிலிலிருந்து இறங்கி  லிவர் பூல் தெருவில் நடந்து கொண்டிருந்த அவர் குற்றவாளியை தான் இன்னும் நழுவ விடவில்லை என்று தானே தன் மனச்சாட்சியிடம்  சொல்லிக்கொண்டார். பின்னர் ஸ்காட்லாந்து யார்டுக்கு சென்று தனக்கு தேவைப்படும் போது அங்கிருந்து உதவிகள் கிடைப்பதை உறுதி செய்துகொண்டார் மீண்டுமொரு சிகரெட் புகைத்தபடி லண்டன் தெருக்களில் உலாவிக் கொண்டிருந்தார்.

விக்டோரியாவின் தெருக்களிலும் சதுக்கத்திலும் நடந்துகொண்டிருந்த அவர் திடீரென்று நின்றார். லண்டனுக்கே உரித்தான பழமையான அமைதியான அந்த சதுக்கம் அப்போது  தற்செயலாக அசைவற்று இருந்தது. அங்கிருந்த  உயரமான வீடுகள் ஒரே சமயத்தில் செல்வச் செழிப்புடனும் யாருமற்றும் இருப்பது போல் தோன்றின.

சதுக்கத்தின் மத்தியிலிருந்த புதர்ச் செடிகள் கைவிடப்பட்ட தீவைப்போல் காட்சியளித்தன. அவற்றின் நான்கு பக்கங்களில் ஒன்று பிறவற்றை காட்டிலும் சற்று உயரமாக மேடை போலிருந்தது. அங்கு அவ்விடத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதது போல   லண்டனின்  வியக்கத்தக்க  உணவகம்  ஒன்று சொஹோவிலிருந்து தவறுதலாக அங்கு வந்தது போல அமைந்திருந்தது.

குட்டையான செடிகளும் நீளநீளமான, மஞ்சள் மற்றும் வெள்ளை பட்டைகளுடன் அமைந்திருந்த  திரைமறைப்புக்களுடன் காரணம் சொல்ல முடியாத வசீகரத்துடன் இருந்தது அந்த உணவகம்.

லண்டனின் வழக்கமான சமமான கட்டிட அமைப்புகளுக்கு மாறாக  அது தெருவுக்கு மேலே விசேஷமாக உயர்ந்து நின்றது,  அதன் வாசற்படி,  முதல் மாடி ஜன்னல் வரை செல்லும் ஒரு  தீபாதுகாப்பு வழியை போல செங்குத்தாக அமைந்திருந்தது.. வேலண்டீன்  அந்த  மஞ்சள் வெள்ளை திரைமறைப்புக்களுக்கு  முன்பு நின்று சிகரெட் புகைத்தபடி அவற்றின் அதிக நீளத்தை அவதானித்தார்.

அற்புதங்களின்  வியக்கத்தக்க  விஷயம் என்பது அவை நிகழ்வதுதானே.  மேகங்கள் ஒன்றிணைந்து மனிதனின் கண்களை போல  வடிவு கொள்ளக்கூடும். ஒரு தேடல் பயணத்தின் போது வழியில் காணும் மரமொன்று கேள்விக்குறியை போல தோற்றமளிக்க கூடும்.

இவை இரண்டையுமே  நான் இந்த கடைசி இரு நாட்களில் கண்ணுற்றேன். நெப்போலியனுடன் நடந்த  போரில் வெற்றி பெற்ற, வெற்றி என்று பெயரிடப்பட்ட கப்பலில் இருந்த கடற்படை அதிகரியான நெல்சன்  வெற்றிக்கனியை சுவைப்பதற்குள் இறந்தார். வில்லியம்ஸ் என்னும் பெயருடைய ஒருவர் வில்லியம்சன் என்னும் ஒருவரை தற்செயலாக கொலை செய்ததும் அப்படித்தான் சிசுக்கொலையை போல தோன்றுகிறது.

சுருக்கமாக சொல்லப்போனால்  இப்படியான ஊழின் விளையாட்டுக்களை  வாழ்வை எந்த மாற்றமும் இன்றி எதிர்கொள்ளும் சாமான்யர்கள் எப்போதும்  கவனிக்க தவறுகிறார்கள் ஆனால் ’போ’  விதியின் முரண்பாட்டின் படி வாழ்வின் எதிர்பாராமையை எதிர்பார்ப்பதே அறிவு  .

அரிஸ்டடே வேலண்டீன் முழுக்க முழுக்க பிரெஞ்சுக்காரர். பிரெஞ்சு புத்திசாலித்தனம் என்பது மிகச் சிறப்பானதும் தனித்துவமானதும் கூட. அவர் வெறும் சிந்திக்கும் இயந்திரமல்ல. சிந்திக்கும்  இயந்திரம் என்பதே   நவீன ஊழ்வினைக் கொள்கையும், பொருள்வாதமும் இணைந்து  உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான சொற்றொடர்.

சிந்திக்க முடியாதென்பதனால்தான் ஒரு இயந்திரம் வெறும் இயந்திரமாக இருக்கிறது. ஆனால் இவர் ஒரு சிந்திக்கும் மனிதர். மிக எளிமையானவரும்  கூட.

அவருடைய பெரும் வெற்றிகள் அனைத்தும் மந்திர வித்தையால் அடையப்பட்டவை போல தோன்றினாலும் உண்மையில் அவை தர்க்கபூர்வமாக அடையப்பட்டவையும்  துல்லியமான சமயோஜித   சிந்தனையால் பெறப்பட்டவையும்தான்.

வெறும் முரண்பாட்டை குறித்த விவாதங்களை துவங்கியல்ல, மெய்யியலை சரியாக கையாண்டே பிரெஞ்சுகாரர்கள் உலகை பிரமிக்க வைக்கிறார்கள் .சொல்லப்போனால் பிரெஞ்சுக்காரர்கள் மெய்யியலை  அளவு கடந்தும் எடுத்துச்சொல்வார்கள், ஃப்ரெஞ்ச் புரட்சியில் நடந்தது போல.

ஆனால் வேலண்டீன் தர்க்கத்தை மட்டுமல்ல அதன் எல்லைகளையும்  உணர்ந்திருந்தார்.  மோட்டார்களை குறித்து எதுவுமே தெரியாத ஒருவனே பெட்ரோலை தவிர்த்துவிட்டு மோட்டாரை குறித்து பேசுவான்

தர்க்கங்களை பற்றி எதுவும் தெரியாத ஒரு மனிதன் மட்டுமே  தர்க்கங்களின் அடித்தளமாக இருக்கும் வலுவான, மறுக்க முடியாத அனுமானங்களை தவிர்த்துவிட்டு  தர்க்கத்தை குறித்து பேசுவான்.

ஆனால் வேலண்டீனுக்கு இங்கு வலுவான அனுமானங்கள் ஏதும் இல்லை. ஃப்ளேம்போ ஹார்விச்சில் காணாமலாகியிருந்தான். அப்படியே அவன் லண்டனில் இருந்திருந்தாலும்  அவன்  விம்பிள்டன் காமனின் உயரமான ஒரு நாடோடியில் இருந்து  ஹோட்டல் மெட்ரோபோலின் உயரமான அறிவிப்பாளர்  வரை  யாராகவும்  இருந்திருக்கும்  சாத்தியங்கள் இருக்கிறது.

இத்தகைய வெளிப்படையான அறிவின்மையை எதிர்கொள்ள வேலண்டீனுக்கு அவருக்கேயான பிரத்யேக  பார்வையும் வழிமுறையும் இருந்தது.

இத்தகைய  தர்க்கரீதியான   பாதையை பின்பற்ற முடியாத சந்தர்ப்பங்களில் ,அவர் எதிர்பாராததை  கணக்கிட்டு,  சாத்தியம் குறைவான பாதையை  கவனமாகவும் துணிச்சலாகவும்  தேர்ந்தெடுப்பார்.    வழக்கமாக காவலர்கள் தேடிச்செல்லும் இடங்களான வங்கிகள், காவல் நிலையங்கள் மற்றும்  சந்திப்புக்களுக்கான பிரத்யேக இடங்களை தவிர்த்து, அவற்றிற்கு மாறான இடங்களிலேயே தேடிச்செல்வார், ஒவ்வொரு காலியான வீட்டுக்கதவையும் தட்டுவார் முட்டுச்சந்துக்குள் திரும்புவார், குப்பை கூளங்கள் நிறைந்திருக்கும் சந்துகளுக்குள் தேடிப்போவார். நேரான பாதைகளை தவிர்த்து விட்டு சுற்று வழிகளில் பயணிப்பார்.

ஏனெனில் தேடப்படுபவனின்  கண்களுக்குப் படும் வாய்ப்புகளும் விசித்திரங்களும்  தேடுபவனின் கண்களிலும் தென்படலாமல்லவா?  ஒரே ஒரு சிறு துப்பு இருந்தால் கூட  இதுபோன்ற வழக்கத்துக்கு விரோதமான வழிகள்  மோசமானவைகள் என்று சொல்லி விடலாம், ஆனால் எந்த துப்பும் இல்லாத போது அதுவே சிறந்த வழியாகிவிடும் என்று. இந்த பைத்தியக்காரத்தனத்தை அவர் தர்க்கபூர்வமாகவும்  விளக்குவார்.

எங்காவது ஒரு மனிதன் தொடங்க வேண்டும், அந்த இடம்  மற்றொருவர் தனது தேடலை நிறுத்திய இடமாக இருப்பது இன்னும் சிறப்பு .

விநோதமாக மேலேறும் அந்த உணவகத்தின் படிகளிலோ, அல்லது  அந்த உணவகத்தின் அமைதியிலும் வசீகரத்திலுமோ ஏதோ ஒன்று  அந்த துப்பறிவாளரின் உள்ளுணர்வை தூண்டியது. தோராயமாக ஒரு முயற்சி செய்ய எண்ணி படிகளில் ஏறி மேலே சென்றவர், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ஒரு கருப்புக் காப்பிக்கு சொன்னார்.

ஏறக்குறைய முற்பகலாகி விட்டிருந்தது.  அவர் காலையுணவும் உண்டிருக்கவில்லை மேசைகளில் சிதறிக்கிடந்த உணவின் மிச்சங்கள் அவருக்கு பசியை நினைவூட்டியதால் காப்பியுடன் பொறித்த முட்டையும் சொன்னார்.

காப்பியில் சர்க்கரையை இட்டு கலக்கியபடியே ஃப்ளேம்போ இதுவரை தப்பித்த விதங்களை   குறித்து எண்ணிக் கொண்டிருந்தார். வெறும் நகவெட்டிகளைக்கொண்டே தப்பித்திருந்தான் ஒருமுறை. இன்னொரு முறை வீட்டை தீயிட்டு கொளுத்தி தப்பித்தான்

முத்திரை வைக்கப்பட்டிருக்காத  தபால்தலைக்கு பணம் கொடுப்பதாக ஒருமுறையும்,  உலகை அழிக்க வரும் வால் நட்சத்திரம்  ஒன்றை மக்கள் தொலைநோக்கியில்  ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த போது  இன்னொரு முறையும் தப்பித்திருந்தான்.

அவர் தனது துப்பறியும் மூளை குற்றவாளியின் மூளைக்கு இணையானது என்று நம்பினார். அது உண்மையும் கூட. அப்படி ஒப்பிடுவதலிருக்கும்  பிழையையும் அவர்   அறிந்திருந்தார். குற்றவாளி ஒரு கலைஞன், துப்பறிவாளனோ வெறும் ஒரு விமர்சகன், இதை எண்ணிக்கொண்டே காப்பிப்கோப்பையை உதட்டுக்கு கொண்டுவந்து ஒரு வாய் பருகியவர் கோப்பையை வேகமாக  கீழிறக்கினார். சர்க்கரைக்கு பதில் அவர் உப்பை கலந்து விட்டார்

அந்த வெள்ளை நிற பொடி வைக்கப்பட்டிருந்த சீசாவை அவர்  பார்த்தார். உறுதியாக அது சர்க்கரைக்கானதுதான். எப்படி ஷேம்பெயின் பாட்டிலில் ஷாம்பெயின்தான் இருக்குமோ அப்படி சர்க்கரையை கொண்டிருக்க வேண்டிய சர்க்கரை சீசாதான் அது. அதில்  ஏன் உப்பை வைத்தார்கள்  என அவர் வியந்தார்.

வேறு ஏதேனும்   சீசாக்கள்  இருக்கிறதா என அவர் ஆராய்ந்தார். இருந்தன இரு உப்பு புட்டிகள் நிறைந்து காணப்பட்டன. அதில் எதேனும் விசேஷமாக இருக்கலாம் என்று அவர் அவற்றை சுவைத்து பார்த்தார்,  இனித்தது ஆம் அது உப்பல்ல,  சர்க்கரை

உப்பையும் சர்க்கரையையும் மாற்றி வைத்த  அந்த வித்தியாசமான ரசனைக்கான வேறு தடயங்களும் அங்கு  இருக்கிறதா என வேலண்டீன் அந்த உணவகத்தை புதிய ஆர்வத்துடன்  சுற்றி பார்த்தார்.

வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்த சுவரில்  வீசியெறியப்பட்ட ஏதோ ஒரு திரவத்தின் கறையை தவிர அந்த இடம் மிக சுத்தமாகவும் சாதாரணமாகவும் தான் இருந்தது. சிப்பந்தியை  வரவழைக்க அவர் மேசையிலிருந்த மணியை அடித்தார்

அந்த காலை வேலையில் தூக்க  கலக்கக்துடன், கலைந்த தலையுடன் வந்த  சிப்பந்தியிடம் அந்த சர்க்கரையை சுவத்துப் பாரத்து அந்த உணவகத்தின் தரத்துக்கு அது  ஏற்புடையதுதானா? என்று சொல்ல சொன்னார் அதைப்போன்ற எளிய நகைச்சுவைகளை விரும்பும் அந்த துப்பறிவாளர்.

ஒரு துளி வாயிலிட்டு சுவைத்த  அந்த சிப்பந்தி தூக்கம் விலகி அவசரமாக ஒரு கொட்டாவியை வெளியேற்றி சுதாரித்துக்கொண்டான்

’’இப்படித்தான் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு நாள் காலையிலும் வேடிக்கை செய்கிறீர்களா? என்று கேட்டார் வேலண்டீன்

சர்க்கரையையும் உப்பையும் மாற்றி வைப்பது உங்களுக்கு அலுக்கவில்லையா? என்று அவர் கேட்டதும் சிப்பந்தி விஷயத்தின் தீவிரத்தை புரிந்தவராக தடுமாறி அப்படியான எண்ணம் ஏதும அந்த உணவகத்துக்கு இல்லையென்றும் எப்படியோ இந்த தவறு நிகழ்ந்து விட்டிருக்கிறதென்றும் பணிவுடன் கூறினார்

சர்க்கரை சீசாவையும் உப்பு சீசாவையும் எடுத்து உற்றுப் பார்த்த சிப்பந்தியின் முகம் மேலும் மேலும் குழப்பமடைந்தது. ‘’மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னபடி விரைந்து அங்கிருந்து விலகிய அவர் சில நொடிகளில் உணவகத்தின் உரிமையாளருடன் திரும்பி வந்தார். சர்க்கரை உப்பு சீசாக்களை ஆராய்ந்த உரிமையாளர் முகமும் குழம்பியது

அவவசரமாக  பலவற்றை சொல்ல முயன்ற  சிப்பந்தி  ’’நான்  நினைக்கிறேன் நான் நினைக்கிறேன் அந்த இரு பாதிரியார்கள்தான்’’ என்று திணறினார்.

’’என்ன அந்த இரு பாதிரிகள்?’’ என்றார் வேலண்டீன்.

’’அவர்கள்தான், அந்த பாதிரிகள்தான்  சூப்பை சுவரில் வீசி எறிந்தார்கள்’’ என்றார் சிப்பந்தி

’’சூப்பை சுவற்றில் எறிந்தார்களா?’’ என்ற வேலண்டீன் இது  வேறு ஏதாவதொன்றிற்கான இத்தாலிய படிமமாக இருக்குமோ என்று யோசித்தார்.

’ஆம்! ஆம்! ’’ என்று உணர்வு மேலிட சொல்லிய  அந்த சிப்பந்தி சுவற்றின் கறையை சுட்டிக்காட்டி ’’அங்கேதான்! அங்கேதான்! சூப்பை வீசினார்கள்.’’ என்றார்

வேலண்டீன் இப்போது உரிமையாளரை கேள்வியுடன் பார்த்தார். அவரும் ’’ஆம் உண்மைதான்  ஆனால் அதற்கும் சர்க்கரையும் உப்பும் இடம்மாறியதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.’’

’’இன்று அதிகாலையில் கடையை திறந்தவுடன் இரு பாதிரியார்கள் வந்து சூப் அருந்தினார்கள் இருவரும் மிக அமைதியாக மிக கெளரவமானவர்களாக தோன்றினார்கள்’’.

’’இருவரில் ஒருவர் பணத்தை செலுத்தி விட்டு வெளியேறினார் கொஞ்சம் நிதானமாக புறப்பட்ட மற்றொருவர் சில நொடிகள் தாமதமாக தனது பொருட்களை சேகரிக்க துவங்கினார். கடையை விட்டு வெளியேறும் முன்பு வேண்டுமென்றே அவர் பாதி அருந்தி வைத்திருந்த சூப் கப்பை எடுத்து சுவற்றில் வீசி எறிந்தார்’’.

’’நான்  பின்னாலிருக்கும் என் அறையில் இருந்தேன் இந்த சிப்பந்தியும் அங்கு தான் இருந்தார்.  சத்தம் கேட்டு ஓடி வந்த போது இங்கு யாருமே இல்லை!’’ பெரிய சேதமொன்றும் இல்லைதான் எனினும் அவர்களின் இந்த செய்கை குழப்பமேற்படுதியது.

’’அவர்களை பிடிக்க  ஓடிச்சென்று தெருவில் தேடினேன் ஆனால் அவர்கள் வெகு தூரம் சென்று விட்டிருந்தார்கள், அடுத்த தெருவில் திரும்பி அவர்கள் கார்ஸ்டேர்ஸ் தெருவை நோக்கி செல்வதை மட்டும் பார்க்க முடிந்தது’’ என்றார் உரிமையாளர்.

அவர் பேசி முடிக்கையில் வேலண்டீன்  கைகளில் தடியுடன் புறப்பட்டு விட்டிருந்தார்,   ஊழ் முதலில் சுட்டிக்காட்டும்  விநோதமான  வழியில் செல்வது என அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.. இந்த வழி போதுமான அளவுக்கு விநோதமாகத்தான் இருந்தது. அவசரமாக பணத்தை செலுத்திவிட்டு  கண்ணாடிக்கதவை  தனக்கு பின்னால் அறைந்து சாத்திவிட்டு விரைவில் அடுத்த தெருவுக்கு வந்தார்

இத்தனை பரபரப்பிலும் அவரது கண்பார்வை அதிர்ஷ்டவசமாக  துல்லியமாகவும் நிதானமாகவும் இருந்தது.. ஒரு கடையை தாண்டுகையில் அவரது கண்களில் மின்னல் போல எதோ ஒன்று பளீரிட்டது.  அவர் திரும்பி  அதை பார்க்க அங்கு வந்தார்

அது ஒரு பிரபல பச்சை காய்கறிகளும் பழங்களும் விற்கும் கடை. ஏராளமான பொருட்கள்  பெயரும் விலைப்பட்டியலும் வைக்கபட்ட அட்டைகளுடன் வெளியே விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஆரஞ்சுகளும் முந்திரிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு வரிசையில் முந்திரிக்கொட்டைகளின் குவியல் மீது இரண்டு ஆரஞ்சுகள் ஒரு பென்னி என்று தெளிவாக நீல சாக்கட்டியால்  எழுதப்பட்ட அட்டை சொருகி இருந்தது.

தரமான பிரேஸில்  முந்திரி கொட்டைகள்  ஒரு பவுண்ட்  4 டைம் என்னும் அட்டை ஆரஞ்சுகளின் மீது வைக்கப்பட்டிருந்தது. வேலண்டீனுக்கு இதே போன்ற நுட்பமான  வேடிக்கையை  முன்பே, மிக சமீபத்தில்  பார்த்திருப்பது  நினைவுக்கு வந்தது.

தெருவை அளப்பது போல மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த சிவந்த முகம் கொண்ட பழக்கடைக்கரரை  அணுகிய வேலண்டீன்  அதை சுட்டிக்காட்டினார். பழக்கடைக்காரர் ஒன்றுமே சொல்லாமல் அட்டைகளை மட்டும் இடம் மாற்றி சரியாக வைத்தார்

ஒயிலாக கைத்தடியை ஊன்றி அதன் மீது சாய்ந்தபடி  கடையை நோட்டமிட்ட வேலண்டீன் கடைக்கரரிடம். ’’தொடர்பில்லாமல்  கேட்பேனாகில் மன்னியுங்கள் எனக்கு உளவியல்  ரீதியாக உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது“ என்றார்

எரிச்சலுடன்  பார்த்த, சிவந்த முகம் கொண்ட  கடைக்காரரிடம்  கைத்தடியை சுழற்றியபடியே ’’ஏன்? ஏன்? பாதிரிமார்கள் லண்டனுக்கு சுற்றுலா வந்ததுபோல பொருத்தமில்லாமல் விலை அட்டைகள் இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தன?’’, என்று கேட்டார்

’’ஒருவேளை நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லை எனில் தெளிவாகவே கேட்கிறேன்  முந்திரிகளென குறிககப்பட்டிருக்கும் ஆரஞ்சுகளுக்கும் நெட்டையாகவும்,   குட்டையாகவும் இருந்த இரு பாதிரிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டார்

நத்தையை போல  கண்கள் வெளியே தெறிக்கும் படி வெறித்துப் பார்த்த,     வேலண்டீன் மீது  பாயப் போவது போல் தோற்றமளித்த அந்த கடைக்காரர் கோபமாக  ’’இதில் உங்களுக்கு என்ன தொடர்பு என தெரியவில்லை, ஆனால் அவர்கள் உங்கள் நண்பர்கள் எனில் மீண்டும் என் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுத்தினால் பாதிரிகள் என்று கூட பார்க்காமல்  அவர்களை உதைத்து விடுவேன் என்று சொல்லுங்கள்’’ என்றார்

’’அப்படியா?’’  என்ற வேலண்டீன் ’’உங்கள் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுதினார்களா?’’ என்றார் அனுதாபத்துடன்.

கோபம் தணிந்திருக்காத கடைக்காரர் ’’ஆம் ஆம் அவர்களில் ஒருவன் ஆப்பிள்களை  கொட்டி தெருவில் ஓடவிட்டான்  ஆப்பிள்களை பொறுக்க வேண்டி இருந்ததால்,அவர்களை பிடிக்காமல் விட்டுவிட்டேன்’’ என்றார்

’’அவர்கள் எந்த வழியே போனார்கள்?’’’ என்று கேட்டார் வேலண்டீன். வலது பக்கமாக இருக்கும் அந்த  இரண்டாவது தெருவில் மேலேஏறி பின்னர் அந்த சதுக்கத்தை கடந்து போனார்கள்’’ என்றார் கடைக்காரர்.

‘’நன்றி’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமானார் வேலண்டீன், இரண்டாம் சதுக்கத்தில் நின்றிருந்த காவலரிடம் ’’இது மிக அவசரம்,  நீங்கள் தொப்பியுடன் இருந்த இரு பாதிரிகளை பார்த்தீர்களா?’’ என்று கேட்டார்.

”அந்த காவலர் அவசரமாக தலையாட்டியபடி ’’ஆம்! பார்த்தேன் அவர்களில் ஒருவன் குடித்திருந்தான், போதையில் சாலையின் நடுவில் நின்று அவன்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வேலண்டீன் விரைந்து குறுக்கிட்டு  ’’எந்த வழியாக போனார்கள்? ‘’ என்று கேட்டார்.

’’அவர்கள் ஹேம்ஸ்டீடு போகும் மஞ்சள் நிற பேருந்தில் சென்றார்கள்’’ என்றார் காவலர்.

வேலண்டீன் தனது அடையாள அட்டையை அவரிடம் காட்டி ’’உடனே இரு காவலர்களை என்னுடன் தேடலுக்கு வர சொல்லுங்கள்’’ என்றபடியே அந்த காவலர் பணிந்து வணங்கியதை கூட கவனிக்காமல் சாலையை கடந்து மறுபக்கம் விரைந்தார்.

ஒன்றரை  நிமிடங்களில்   எதிர்ச்சாலையின்  நடைபாதையில் வேலண்டீனுடன் ஒரு இன்ஸ்பெக்டரும் சாதாரண உடையில் இருந்த மற்றொரு காவலரும்  இணைந்து கொண்டார்கள்

அந்த இன்ஸ்பெக்டர் உரையாடலை துவக்கும் பொருட்டு ’’இப்போது என்ன?’’ என்று சொல்ல முற்படுவதற்குள் தன் கையில் இருந்த கைத்தடியினால் தூரத்தில் இருந்த பேருந்தை சுட்டிக்காட்டி ’’எல்லாவற்றையும் அந்த பேருந்தில் வைத்து சொல்கிறேன்’’ என்றார் வேலண்டீன்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி ஒரு வழியாக மூவரும் அந்த பேருந்தில் மேல்பக்க இருக்கைகளில் அமர்ந்ததும்,’’ இதைக்காட்டிலும் நான்கு மடங்கு வேகமாக நாம் டாக்ஸியில் சென்றிருக்கலாமே’’என்றார் இன்ஸ்பெக்டர்.

‘’ஆம்! ஆனால் அது நாம் போகுமிடம் தெரிந்திருந்தால்தானே’’ என்றார் வேலண்டீன்

’’நாம் இப்போது எங்குதான் செல்லவிருக்கிறோம்?’’ என்றார் அந்த இரண்டாமவர்.  அமைதியாக  இரண்டு நொடிகளுக்கு சிகெரெட் புகைத்த வேலண்டீன் சிகெரெட்டை அகற்றிவிட்டு  ’’ஒருவன் என்ன செய்கிறான் என்று பார்க்க அவனுக்கு முன்னால் செல்ல வேண்டும், ஆனால் ஒருவன் என்ன செய்வான் என்று யூகிக்க அவ்னை கவனமாக பின்தொடர வேண்டும்’’ என்றார்

’’அவன் விலகினால் நாமும் விலகி, அவன் நின்றால் நாமும்  நின்று, அவன் வேகத்துக்கு இணையாக நாம் செல்லவேண்டும்’’. ’’அப்போதுதான் அவன் காண்பவற்றை நாமும் கண்டு அவன் செய்பவற்றை நாமும் செய்யமுடியும்’’ இப்போது நாம் செய்யக்கூடியதெல்லாம் விந்தைகளை காணும் பொருட்டு நம் கண்களை திறந்து வைத்திருப்பதுதான்’’ என்றார் அவர்

’’எப்படியான விந்தைகளை?’’என்றார் இன்ஸ்பெக்டர் ’’எப்படிப் பட்டவைகளாக இருந்தாலும்’’ என்ற வேலெண்டீன் மீண்டும் அமைதியில் மூழ்கினார்

முடிவற்று சென்று கொண்டிருப்பது போல அந்த மஞ்சள் பேருந்து வடக்கு சாலையை நோக்கி மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. மேற்கொண்டு அந்த துப்பறிவாளர் விளக்கமேதும் அளிக்காததால்  உதவியாளர் இருவருக்கும் அவரின் நோக்கத்தின் மீதும் அந்த பயணத்தின் மீதும் ஐயம் எழுந்தது

கூடவே மதிய உணவிற்கான வேளையும் கடந்து விட்டதால் அவர்களுக்கு கடும் பசியும் உண்டாகி இருந்தது. வடக்கு லண்டன் சாலைகளில் பிரபஞ்சத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்வது போல் நீண்டு கொண்டிருந்த  அந்தப்பயணம், டஃப் நெல்  பூங்காவின் துவக்கத்திற்கு தான் வந்திருந்தது

லண்டன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னால்  மறைந்துபோய், கைவிடப்பட்ட கட்டிடங்களும், அழுக்கான சத்திரங்களும் தென்பட்டு லண்டன் முடிந்து விட்டதென்றும், பளபளக்கும் விஸ்தாரமான  சாலைகளும், பிரம்மாண்டமான விடுதிகளும் இடைப்பட்டு பேருந்து இன்னும் லண்டனில் தான் இருக்கிறது என்பதையும்  நினைவூட்டிக்கொண்டிருந்தன..

பேருந்துப்பயணம்  ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் 13 ஒழுங்கற்ற நகரங்களை கடந்து செல்வது போலிருந்தது. குளிர்காலத்தின் அந்தி நெருங்கிக்கொண்டிருந்த வீதிகளின் முகப்புக்கள் இருபுறமும் விரிந்து மறைவதை பார்த்தபடி பாரீஸ்காரரான அந்த துப்பறிவாளர் சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தார்..

திடீரென வாலண்டீன் துள்ளி எழுந்து அவர்களின் தோள் மீது கையை ஊன்றிய்போது காவலர்கள் திடுக்கிட்டனர். ஓட்டுநரை நோக்கி வண்டியை நிறுத்தும்படி கத்தினார் அவர்.  கேம்டென் நகரத்தை தாண்டியபோது ஏறக்குறைய தூங்கியே விட்டிருந்த. காவலர்கள், படிகளில் அவருடன் அவசரமாக இறங்கி, எதற்காக இறங்கினோமென்று  அறியாமல் சுற்றும் முற்றும் குழப்பமாக பார்த்த போது வேலண்டீன் சாலையின் வலது புறம் இருந்த கட்டிடமொன்றின்  ஜன்னலை  வெற்றிகரமாக சுட்டிக்காட்டுவதை  கண்டார்கள்

அங்கிருந்த  உயர்குடியினருக்கான ஒரு உணவகத்தின் ஒரு பகுதியில் இருந்த,  மற்ற ஜன்னல்களை போலவே சித்திர வேலைப்பாடுகளை கொண்டிருந்த ஒரு ஜன்னல் கண்ணாடி பனிப்பாளத்தில் நட்சத்திரம் போல நடுவில்  பெரிதாக  உடைந்திருந்தது

கைத்தடியை வீசியபடி’’ உடைந்த ஜன்னலுடன் ஒரு கட்டிடம்,  ’’நாம் தேடி வந்தது கிடைத்து விட்டது’’ என்று கூவினர் வேலண்டீன்.

’’என்ன ஜன்னல்? என்ன கிடைத்துவிட்டது’’ என்றார் முதல் உதவியாளர். ‘’எந்த ஆதாரம்  அங்கு இருக்கிறது?  அவர்களுக்கும் இதற்கும் என்ன  தொடர்பு ?

பிரம்பு கைப்பிடியை உடைத்துவிடும் அளவுக்கு ஆவேசமானார் வேலண்டீன்.

’’ஆதாரமா!’’ அவர் அலறினார் ’’கடவுளே, கடவுளே இந்த மனிதன் ஆதாரத்தை தேடுகிறான். ஆம் கிடைத்திருப்பது ஆதாரமாக இருப்பதற்கான சாத்தியம்,  20ல் ஒன்றுதான். ஆனால்  நம்மால் வேறென்ன செய்ய முடியும்? இப்போது நம் முன்னே இருப்பது கிடைத்திருக்கும் இந்த  யூகத்தைதொடர்ந்து செல்வது அல்லது வீட்டுக்கு திரும்பி சென்று படுக்கையில் உறங்குவது என்னும் இரண்டே சாத்தியங்கள் தானே?  என்று சொல்லிக்கொண்டே வேலண்டீன் அதிரடியாக அந்த உணவகத்துக்குள் உதவியாளர்கள் தொடர நுழைந்தார்

உணவு மேசைகளில், சென்று அவர்கள் விரைவாக அமர்ந்து ஜன்னல் கண்ணாடி உடைந்து நட்சத்திரம் போல் விரிசலிட்டிருப்பதை உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதும் அந்த கண்ணாடியின் உடைசலிலிருந்து இவர்களுக்கு புதிதாக எதும் கிடைப்பதுபோல் தெரியவில்லை

’’உங்களது ஜன்னலொன்று உடைந்திருக்கிறதே!’’  என்றார் வேலண்டீன் உணவக சிப்பந்தியிடம் பில் தொகையை கொடுத்தவாறே.

தொகையை குனிந்து எண்ணிக்கொண்டிருந்த சிப்பந்தி, வேலண்டீன் கொடுத்த  தாராளமான சன்மானத்தின் பொருட்டு மெல்ல முதுகை நிமிர்த்தி  ’’ ஆமாம், மிக விசித்திரம் தான் சார்’’ என்றான்.

’’அப்படியா? அதுகுறித்து சொல்லுங்களேன்’’ என்று அதை கேட்பதில் பெரிதாக ஆர்வமில்லாதது போல கேட்டார்  வேலண்டீன்

’’மாநாட்டுக்காக ஊரெங்கும் வந்திருக்கும் கருப்பு உடை அணிந்திருக்கும் பாதிரிகளில்  இருவர் இங்கு   வந்திருந்தார்கள். இருவரும் எளிய உணவை  உண்டபின் ஒருவர் பில் தொகையை செலுத்திவிட்டு வெளியேறினார். மற்றொருவரும் சிறிது தாமதமாக வெளியேறும் முன்புதான் எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையை  காட்டிலும் மூன்று மடங்கு கொடுத்திருப்பதை பார்த்தேன்’’

’’இதோ பாருங்கள்! எனக்கு மூன்று மடங்கு அதிகமாக கொடுத்துவிட்டீர்கள்! ,என்று நான் உரக்க சொன்னதும்,  திரும்பி ’’அப்படியா? என்ற அவரிடம் நான் பில்  தொகையை காண்பிக்க முயன்றபோதுதான் குழப்பம் துவங்கியது’’ என்றான்

’’என்ன சொல்கிறீர்கள்?’’ என்றார்  வேலண்டீன்.

’’ஏழு பைபிள்களில் வேண்டுமானலும் நான் சத்தியம் செய்து சொல்வேன். நான் பில்லில் எழுதியது 4 ஸ்டெர்லிங்தான் ஆனால் அப்போது பில்லில் அச்சடித்தது போல 14 ஸ்டெர்லிங்குகள் என்று இருந்தது’’ என்றான் அவன்..

’’அப்படியா!’’ என்று கூவிய வேலண்டீன் ’’பிறகு’’ என்றார் ஆவலுடன்.’’கதவருகில் நின்ற அந்த பாதிரி என்னிடம் ’’ பில் தொகையில் குழப்பமேற்படுத்தியதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்,, அந்த கூடுதல் தொகையை, இந்த ஜன்னலுக்காக எடுத்துக் கொள்ளுங்கள் ‘’ என்றான்

’’எந்த ஜன்னல்?’’ என்று நான் கேட்டபோது  ’’இதோ நான் இப்போது  உடைக்க போவது தான்’’ என்று சொல்லியபடியே கையிலிருந்த குடையால் ஜன்னலை ஓங்கி அடித்து கண்ணாடியை  உடைத்துவிட்டான்’’ என்றான்

கேட்டுக்கொண்டிருந்த மூவரும் வியப்பொலி எழுப்பினார்கள். அந்த காவலர் மூச்சொலியில் ’’நாம் பைத்தியக்காரர்களையா தேடி சென்று கொண்டிருக்கிறோம் ‘’ என்றார்.

உணர்வு மேலிட்டு அந்த சிப்பந்தி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான்.’’ஒரு நொடி எனக்கு எதுவும் புரியவில்லை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வெளியேறி அந்த மூலையில் காத்திருந்த தன் நண்பனுடன்  சேர்ந்துகொண்டான்., நான் கம்பிகளை தாண்டி ஓடியும் அவர்களை  பிடிக்க முடியவில்லை.  இருவரும்  புல்லக் தெருவுக்குள் சென்றனர்’’ என்றான்

’’புல்லக் தெரு’’ என்று சொன்ன வேலண்டீன்,  பாதிரிகள் சென்ற அதே வேகத்தில் அந்த தெருவுக்கு சென்றார். கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு கட்டப்பட்டிருந்த நடைபாதைகளிலும், சுட்ட செங்கற்களாலான  குகைப்பாதைகளிலும்,  ஒரு சில விளக்குகளே இருந்த, ஜன்னல்களற்ற இருட்டு சாலைகளிலும் அவர்கள் பயணித்தார்கள்.

இருட்டிக்கொண்டே வந்ததால் லண்டனின் காவலர்களாகிய அவர்களுக்கே சென்று கொண்டிருக்கும் திசை சரியாக புலப்படவில்லை. அந்த இன்ஸ்பெக்டருக்கு  அந்த பாதை ஹேம்ப்ஸ்டட் ஹீத்தின் ஏதோ ஒரு இடத்தில் முடியும் என்று மட்டும் தெரிந்தது

ஒரு  பிரகாசமான சிறிய  மிட்டாய்க்கடையின் விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்த ஜன்னலொன்று சாலையின் இருட்டை துண்டித்தது வேலண்டீன் அந்த கடை முன்னால் நின்றார்

ஒரு கண தயக்கத்துக்கு பிறகு கடைக்குள் நுழைந்த வேலண்டீன் அங்கிருந்த வண்ணமயமான மிட்டாய்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு பதிமூன்று சாக்லேட் சுருட்டுக்களை வாங்கிக்கொண்டு, விசாரணையை எப்படி தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்

ஆனால் அதற்கு அவசியமேற்படவில்லை..

எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் முகத்துடன் இருந்த அந்த கடைக்காரப் பெண், அதிகார தோற்றத்தில் இருக்கும் இவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே  கதவுக்கு பின்னால் சீருடையில் இருந்த  காவலரை பார்த்துவிட்டால். சுதாரித்துக் கொண்டு அவளாகவே ’’ஓ! அந்த பெட்டகத்துக்காக  வந்திருக்கிறீர்களா?’’ நான் அதை முன்பே அனுப்பிவிட்டேனே’’ என்றாள்

’’பெட்டகமா?’’ என்றார் வேலெண்டீன். இப்போது வியப்படைவது அவர் முறையாகிவிட்டது

’’அதுதான் அந்த பாதிரிகள் விட்டு சென்ற பெட்டகம்’’ என்றாள் அவள்

’கடவுளே ’தயவு செய்து என்ன நடந்ததென சொல்லுங்கள்’’ என்றார் வேலண்டீன் முதன் முறையாக  ஆவலை வெளிக்காட்டும் குரலில்

’’இரு பாதிரிகள் கடைக்கு  அரைமணி நேரத்துக்கு முன்பு வந்து பெப்பர்மிண்டுகள் வாங்கிவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..  பிறகு ஹீத்தைநோக்கி அவர்கள் போன சில நொடிகளில் அவர்களில் ஒருவர் மட்டும் கடைக்கு வேகமாக திரும்பி வந்து ’’எதாவது பெட்டகத்தை நான் கடையில் விட்டுவிட்டு சென்றேனா?’’ என்று கேட்டார்

நான் எல்லா பக்கமும் பார்த்தபின்பு ’’அப்படி எதுவும் இல்லை’’யென சொன்னேன். ’’பரவாயில்லை, ஒருவேளை பெட்டகமேதும் உங்கள் கண்ணில் பட்டால், அதை இந்த முகவரிக்கு அனுப்பி விடுங்கள்’’ என்று சொல்லி முகவரியையும், அந்த  சிரமத்திற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்’’.

’’நன்றாக பார்த்து விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் அவர் ஒரு பழுப்பு காகித பெட்டகமொன்றை விட்டுச்சென்றிருந்ததை பிறகுதான் பார்த்தேன் அதை அவர் கொடுத்திருந்த முகவரிக்கு அனுப்பி விட்டேன்.’’

’’அந்த விலாசம் எனக்கு இப்போது சரியாக நினைவிலில்லை ஆனால்  அது எங்கோ வெஸ்ட்மிஸ்டரில் இருக்கும் இடம்.  ஒருவேளை அது  முக்கியமான பொருளாக இருந்து அதன்பொருட்டுதான் காவலர்களாகிய நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்’’ என்றாள்

’’ ஆம், அதன்பொருட்டு தான்’’ என்ற வேலண்டீன் ’’இங்கிருந்து ஹேம்ப் ஸ்டட் ஹீத் எத்தனை தொலைவு?’’ என்று கேட்டார். ’’நேராக சென்றால் பதினைந்து நிமிடங்களில் போய் விடலாம்’’ என்றாள்.. கடையிலிருந்து பாய்ந்து வெளியே ஓடிய அவரை விருப்பமின்றி பெருநடையில் தொடர்ந்தார்கள் உதவியாளர்களும்

இருண்டிருந்த அந்த குறுகிய சாலையிருந்து வெளியே வந்து  பரந்த வானின் கீழ் நிற்கையில்தான் இன்னும் அத்தனை பொழுதாகிவிடவில்லை நல்ல வெளிச்சம் இன்னும் இருக்கிறதென்பது தெரிந்தது

தொலைவில் அடர்ந்திருந்த மரக்கூட்டங்களின் இருட்டில் மயில்பச்சைநிற வானத்தை அந்திச்சூரியன் சிவப்பக்கிக்கொண்டிருந்தது. ஒளிர்ந்த அந்திவானத்தில் ஒன்றிரண்டு நட்சத்திர பொட்டுக்களும் தென்பட்டன. பகற்பொழுதின் .சந்தடிகள் மெல்ல அடங்கி  அன்றைய தினத்தின் மிச்சம் ஹேம்ஸ்டெனின் பிரபல   வேல் ஆஃப் ஹெல்த் பூங்காவில்  அந்தியின் பொன்னிற ஒளியில் குளித்துக் கொண்டு  இருந்தது.  .

விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இன்னும் அங்கும் இங்குமாக பூங்காவில் இருந்தார்கள்.. சில ஜோடிகள் அங்கிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். தொலைவில் ஒரு சிறுமி ஊஞ்சலில் உற்சாக கூச்சலுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

ஒரு சரிவில் நின்று கொண்டு பள்ளத்தாக்கின் குறுக்கே பார்த்துக்கொண்டிருந்த வேலண்டின் தான் தேடிக்கொண்டிருந்ததை கண்டார். தொலைவில்   கருப்பு உடைகளில் கலைந்து சென்று கொண்டிருந்தவர்களில்  அந்த இருட்டிலும் மிகத்தனித்து நெட்டையும் குட்டையுமாக இருந்த இரு கருப்பு உருவங்கள்  அவர் கண்களுக்கு தென்பட்டன.

அங்கிருந்து பார்க்கையில் அவர்கள் சிறு பூச்சிகளை போலத்தான் தெரிந்தார்கள் எனினும் வேலண்டீனுக்கு அதில் ஒருவன் மற்றவனை விட மிக சிறிதாக இருப்பது தெளிவாக தெரிந்தது

மற்றொருவன் அடையாளம் தெரியாமலிருக்கும் பொருட்டு  லேசாக குனிந்து கொண்டிருந்தாலும்  வேலண்டீனுக்கு அவன்  ஆறடிக்கு மேலும் உயரமாயிருந்ததை  பார்க்க முடிந்தது.

பொறுமையிழந்து கைத்தடியை சுழற்றியபடியே பல்லைக்கடித்தபடி அவர் முன்னோக்கி சென்றார். அவர்களுக்கிடையிலிருந்த தொலைவு குறைந்து அவ்விருவரின் உருவங்களும் உருப்பெருக்கியில் தெரிவதுபோல கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி தெரிய ஆரம்பித்த போது அவருக்கு மற்றுமொரு புதிய விஷயமும் தெரியவந்தது. திடுக்கிட செய்த அந்த உண்மையை  எப்படியோ அவர் எதிர்பார்த்துமிருந்தார்.

அந்த உயரமான பாதிரி யாரென்று தெரியாவிட்டாலும்,  சந்தேகமில்லாமல் அந்த குள்ளமானவரை அடையாளம் தெரிந்தது. அவன் அன்று  அவருடன் ஹார்விச் ரயில் பயணத்தில் அவருடன் பயணித்த, அவரால் பழுப்பு நிற காகித பெட்டகங்கள் குறிதது எச்சரிககபட்ட அதே எஸ்ஸெக்ஸ்  குளளப்பாதிரிதான்

இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்னால் எல்லாமே எல்லாவற்றுடனும் பொருந்தி சரியாக வந்தது

இன்று காலையில்  பாதிரியார் பிரெளன் எஸ்ஸெக்ஸிலிருந்து விலைமதிப்பற்ற   நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் ஒரு வெள்ளிச்சிலுவையை மாநாட்டிற்கு வந்திருக்கும் வெளிநாட்டு இறைப் பணியாளர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு கொண்டு வந்திருப்பதை அவர் தனது விசாரணையில் அறிந்திருந்தார்.

சந்தேகமில்லாமல் அது வெள்ளியில் நீலக்கற்கள் பதித்திருக்கும் சிலுவைதான். பாதிரியார் பிரெளனும் சந்தேகமில்லாமல்  ரயிலில் உடன்பயணித்த குள்ளமானவரேதான்

வேலண்டீன் கண்டுபிடித்ததை ஃப்ளேம்போவும் கண்டுபிடித்திருப்பதில் எந்தஆச்சரயமும் இல்லை. இப்போது ஃப்ளேம்போ எல்லாவற்றையும் அறிந்துவிட்டான். நீலச்சிலுவையை குறித்து  அறிந்துகொண்ட ஃப்ளேம்போ அதை திருடிச்செல்ல முயற்சித்ததிலும் ஏதும் ஆச்சரயமில்லை. வரலாற்றில் இயற்கையாக  இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது

ஃப்ளேம்போ அந்த குடையையும் காகித பெட்டகங்களையும் கொண்டிருந்த அப்பாவி பாதிரியை அப்படி தனியே திருட்டுக்கான நோக்கத்துடன் அழைத்து சென்றிருப்பதிலும் ஏதும் ஆச்சர்யமில்லை தான். அந்த பாதிரியை அப்படி  யாரும் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்ல முடியும்தான்

ஃப்ளேம்போவை போல தேர்ந்த நடிகனொருவன் பாதிரியின் வேஷத்தில் பாதிரியார் பிரெளனை ஹேம்ஸ்டெட் ஹீத் வரையிலும் அழைத்து வந்திருப்பதிலும் எந்த ஆச்சர்யமுமில்லை.. இதுவரையிலும் குற்றம் தெளிவாகவே தெரிந்தது.

அந்த  அப்பாவி  பாதிரி பிரெளனின் மீது அவருக்கு கனிவு உண்டானாலும் அப்படியான எளிய ஒருவனை ஏமாற்ற துணிந்த ஃப்ளேம்போவின் நாயகத்தன்மை  மீது அவருக்கிருந்த அபிப்பிராயம்   வெகுவாக குறைந்து விட்டிருந்தது.

எனினும் ஏறக்குறைய வெற்றிக்கனியை பறிக்கவிருந்த இந்த சமயத்தில் வேலண்டீனுக்கு  சமீபத்தில் நடந்த சில விஷயங்களை கிடைத்தவற்றுடன் பொருத்திப் பார்க்க முடியாமல் இருந்தது

எஸ்ஸெக்ஸ் பாதிரியிடமிருந்து நீலச்சிலுவையை திருடுவதற்கும், சூப்பை சுவற்றில் வீசி எறிவதற்கும்  என்ன  தொடர்பு? எதன் பொருட்டு ஆரஞ்சுகள் முந்திரிகளென மாற்றி அழைக்கப்பட வேண்டும்? ஏன் முன்கூட்டியே பணம் கொடுத்துவிட்டு  ஜன்னல் கண்ணாடியை உடைக்க வேண்டும்

அவுர் தேடலின் முடிவுக்கு வந்துவிட்டார் ஆனால் அவரின் தேடல் கதையின் நடுவில் சில பக்கங்கள்தான்  காணாமல் போயிருந்தன.அரிதாக அவர் தோற்றிருந்த நேரங்களிலும் குற்றவாளியை தப்ப விட்டிருந்தாலும்  தடயங்களை  கண்டுபிடித்து இருப்பார். ஆனால் இந்த முறை            அவர் குற்றவாளியை நெருங்கியும் தடயங்களை  கண்டுபிடிக்க முடியவில்லை

அங்கிருந்த குன்றின் பசும் மடிப்புக்களின் குறுக்காக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அவ்விருவரும் கருப்பு பூச்சிகளைப் போல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார்கள்

உரையாடலில் மூழ்கியிருந்த அவர்களிருவரும் சென்று கொண்டிருக்கும் திசையைகூட கவனிக்கவில்லை. ஆனால் உறுதியாக அவர்கள் ஹீத்தின் அடர்ந்த  அமைதியான இடங்களை  நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்களை நெருங்க,  மான் வேட்டையாடுபவர்களைப்போல புல்தரையில் தவழ்வதும்,  மரக்கூட்டங்களுக்கிடையில் ஒளிந்து கொள்வது போன்ற கண்ணியக்குறைவான செயல்களிலும் இவரகள் ஈடுபட வேண்டி இருந்தது.

இத்தனை ரகசிய நடவடிக்கைகளுடன் மெதுவாக அவர்களை நெருங்கிய போது அவர்களின் உரையாடல் கூட லேசாக கெட்டது. முழுக்க  தெளிவாக இல்லையென்றாலும் தர்க்கம் எனும் சொல் அடிக்கடி  கீச்சுக் குரலில் உச்சரிக்கப்பட்டது   கேட்டது

அடர்ந்த மரக் கூட்டங்கள்  இடைப்பட்ட ஒரு பகுதியில் அவர்களை காவலர்கள் பார்வையிலிருந்து தவற விட்டனர்.பதட்டமான பத்து நிமிடங்களுக்கு அவர்கள் இருக்கும் சுவடே தெரியவில்லை பின்னர் அந்த அடர்ந்த பகுதியை தாண்டியதும்   கதிரணைந்து கொண்டிருந்த  சரிவில்  ஒரு அழகிய தனிமையான இடத்தில்   ஒரு மரத்தடியிலிருந்த   சேதமான பெஞ்சில் அவர்களிருவரும் அமர்ந்திருந்தது தெரிந்தது. இன்னும் தீவிரமான உரையாடலில் தான் அவர்களிருவரும்  இருந்தார்கள்.

இருட்டிக்கொண்டிருந்த தொடுவானில் பசுமஞ்சள் நிறம் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது ஆனால் தலைக்கு மேலிருந்த  மயில்பச்சை கார்நீலமாகி விட்டிருந்தது. தனித்து துலங்கிய நட்சத்திரங்கள் ஆபரணங்களை போல் பிரகாசித்தன.

உதவியாளர்களுக்கு சைகை காண்பித்துவிட்டு ஓசையற்று அந்த  பெருங்கிளைகள் கொண்ட மரத்தின் பின்னால் மறைந்து நின்றிருந்த வேலண்டீனுக்கு அந்த இரு புதிரான பாதிரிகளும் பேசிக்கொண்டிருந்தது முதல் முறையாக துல்லியமாக கேட்டது

ஒன்றரை நிமிடங்களுக்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டவருக்கு தான் ஹீத்தின் இருளுக்குள்  இரு காவலர்களை கூட்டிக்கொண்டு இவ்வளவு தூரம்  வந்த சிரமம் எல்லாம்  விழலுக்கு நீர் இறைத்தது போல வீணான வேலையோ என்று  பயங்கரமான   சந்தேகமே வந்துவிட்டது

ஏனெனில் அந்த ஒரு பாதிரிகளும் அசல் பாதிரிகளை போலவே பொறுமையாக இறையியலின்  நுண்மையான சாராம்சத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்

பாதிரி பிரெளன் தனது வட்ட முகத்தை, துலங்கிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை  நோக்கி வைத்துக்கொண்டு  பேசிக்கொண்டிருந்தான். மற்றவனோ தான் நட்சத்திரங்களை  பார்க்கவும் தகுதியற்றவன் என்பது போல  தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தான்

கருப்பினத்தவர்களுக்கான ஸ்பானிய தேவாலயங்களிலோ அல்லது வெள்ளையர்களுக்கான இத்தாலியின் தேவாலயங்களிலோ கூட அத்தனை இறைமை ததும்பும் உரையை கேட்க முடியாது

முதலில் அவர் கேட்டது ’’இதுதான் மாசுபடுத்த முடியாத  சொர்க்கமென்று   இடைக்காலத்தில் அவர்கள்  சொன்னதெல்லாம்’’ என்று எஸ்ஸெக்ஸின்பாதிரி  பேசி முடித்த  வாக்கியத்தின் கடைசி பகுதியைத்தான். பின்னர் அவர்களின் உரையாடல்  தொடர்ந்தது

உயரமான பாதிரி தலையை ஆமோதிப்பது போல் அசைத்து ’’ஆம்  நவீன காப்பிரிகள் தர்க்க பூர்வமாக அனைத்தையும் அணுகுகிறார்கள்.எனினும் இத்தனை கோடி நட்சத்திரங்களையும் கோடானு கோடி உலகங்களையும் கொண்டிருக்கும் இந்த அற்புதமான பிரபஞ்சத்தில் எங்கேனும் எல்லா தர்க்கங்களும் பொருளற்றும் போகுமல்லவா’’ என்றான்

’’இல்லை ’’என்றார் பாதிரி பிரெளன்  ’’தர்க்கம் என்றைக்குமே, ,கடைசி தீர்ப்பு நாளன்று கூட  பொருளற்று போகாது’’ ’’எனக்கும் தெரியும் தேவாலயங்கள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவைகள் என மக்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது. ஆனால் இப்பூமியில் தேவாலயங்கள் மட்டும்தான் தர்க்கங்களை அவற்றிற்கு உரிய உயரிய இடத்தில் வைத்திருக்கின்றன. இதே தேவாலயங்கள் தான் இறைவனும் தர்க்கங்களால் கட்டுண்டவர் என்பதை உறுதிபட கூறுகின்றன’’என்றார்.

மற்றவன் நிமிர்ந்து  நட்சத்திரங்கள் தூவப்பட்டிருந்த வானை நோக்கி ’’யாரால் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடியும் இந்த முடிவற்ற பிரபஞ்சத்தில்’’ என்றான்

’’பருவடிவில்  எல்லையற்றது தான் எனினும் சத்திய விதிகளில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு எல்லையற்றதல்ல  இப்பிரபஞ்சம்’’ என்றார் பிரெளன்.

மரத்துக்கு பின்னிருந்து தன் விரல் நகங்களை வேலண்டீன் கடித்து துப்பிக்கொண்டிருதார். மிகப் பிரமாதமான யூகத்தின் பேரில் தான் அழைத்து வந்த இரு காவல் உதவியாளர்களும் இந்த பாதிரிகள் நிதானமாக விரிவாக  விவாதித்துக்கொண்டிருக்கும் மெய்யியல் ரகசியங்களை கேட்டு, தன்னை ஏளனம் செய்யப்போவதை மனக்கண்களால் அவரால் காணவே  முடிந்தது.

பொறுமையிழந்து இவற்றை சிந்தித்து கொண்டிருந்ததில் உயரமானவன் சொன்ன அதே அளவுக்கான   விரிவான பதிலை கேட்க தவறிவிட்டிருந்த வேலண்டீன் இப்போது மீண்டும் பாதிரி பிரௌன் பேசுவதை கேட்டார்.

’’தர்க்கமும் நீதியும் எப்போதும் மிக மிக தொலைவிலும் தனிமையிலும் இருக்கும் நட்சத்திரங்களைக்கூட அணுகி விடுகின்றன. அந்த நட்சத்திரங்களை பாருங்கள் அவை ஒற்றை வைரங்களாகவும், நீலமணிகளாகவும் தெரியவில்லையா?’’

’’உதாரணமாக  தாவரவியல் அல்லது புவியியலை கூட கற்பனை செய்து கொள்ளலாம். பெரும் காடொன்றின் மரங்களின் பசும் இலைகளனைத்தும் மரகதங்களென்று எண்ணலாம்.. இந்த நிலவை கூட  நீலநிலவென்று எண்ணிப்பாருங்கள், ஒரு மாபெரும் நீலக்கல். இது போன்ற எந்த கற்பனாவாத மாற்றங்களாக இருப்பினும் அந்தந்த இடங்களுக்கான தர்க்கமும் நியாமமும் மாறா உண்மையென அங்கேயிருக்கும்.’’.

’’முத்து முகடுகள் கொண்ட அமுதக் கற்களினாலான  சமவெளியில்  கூட  திருடாதீர்கள் என்ற எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருக்கும்’’.

இவற்றை கேட்டுக்கொண்டிருந்த வேலண்டீன், தன் வாழ்வின் ஆகப்பெரிய தவறை நினைத்து வருந்தியபடி மெல்ல தான் மறைந்திருக்கும்  இடத்திலிருந்து அகன்று செல்ல முடிவெடுத்தார் .ஆனால் உயரமானவனின்  திடீர் அமைதியால்  அதைச் செய்யாமல் அவன் பேசும் வரை அங்கேயே காத்திருந்தார்

ஒருவழியாக அவன் பேசினான் தலை குனிந்தபடி கைகளை முழங்கால்களில் வைத்துக்கொண்டு ’’ஆனால் நான்  இன்னும் நம்புகிறேன். பிற உலகங்கள் நம் தக்ர்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம். பரமண்டலத்தின் மர்மங்களை,நம்மால் புரிந்து கொள்ள முடியாது  வணங்க மட்டுமே முடியும்’’ என்றவன்., தலையை குனிந்தவாறே தனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இன்றி ’’உன்னிடம் இருக்கும் நீலச்சிலுவையை என்னிடம் கொடுத்துவிடு. நாம் இங்கே  தன்னந்தனிமையில் இருக்கிறோம் நீ மறுத்தால் உன்னை துண்டு துண்டாக்கி விடுவேன்’’ என்றான்

குரலிலும் பாவனையிலும் எந்த மாற்றமுமின்றி சொல்லப்பட்டதால் அந்த  சொற்கள்  மிக பயங்கரமாக இருந்தன.

ஆனால் எந்த திகைப்பும் ஆச்சர்யமுமின்றி, அந்த சிலுவை பாதுகாப்பாளன் மெல்ல முகத்தை திருப்பினார்.  நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்த அந்த முகத்தில் இன்னும் கூட அதே முட்டாள்தனம் தான் நிறைந்திருந்தது

ஒருவேளை என்ன நடக்கிறது என அவருக்கு புரியவில்லையா அல்லது   என்ன நடக்கிறது என்று தெரிந்து  அச்சத்தினால் அப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரா?

’’ஆம்’’ என்றான் அந்த உயரமான பாதிரி அதே மெல்லிய குரலில், ’’ஆம் நான் தான் ஃப்ளேம்போ. கொடுக்கிறாயா அந்த நீலச்சிலுவையை என்னிடம்’’ என்றான்

’’இல்லை’’  என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் பாதிரி பிரெளன்

சட்டென்று தனது பாசாங்குகளை எல்லாம் தூக்கி எறிந்த  ஃப்ளேம்போ இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டு மெல்ல  சிரித்தான். ’’என்னது முடியாதா? என்னிடம் கொடுக்க மாட்டாயா அதை? இறுமாப்பு கொண்ட மதகுருவே, எளியவனே! ’’நீ ஏன் கொடுக்கமாட்டாய்  என்று நான் சொல்லட்டுமா?  அதைத்தான் நான் ஏற்கனவே என் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கிறேனே’’ என்றான்

எஸ்ஸெக்ஸின்  பாதிரி அந்த இருளில்  பிரமித்தது போல் தெரிந்த முகத்துடன் ஆர்வமுடன்  கோழைத்தனமும் நாடகத்தனமுமான குரலில்  ’’என்னது உன்னிடம் இருக்கிறதா? உண்மையாகவா?’’ என்றார்

மகிழ்ச்சியில்  கூச்சலிட்ட ஃப்ளேம்போ  ’’ அடடா , நீ   நாடகத்தில் நடிக்கலாம். ’’ஆமாண்டா கூமுட்டை, நிச்சயமாக தான் சொல்கிறேன்  நான் உன்னிடமிருந்து நீல சிலுவையை எடுத்துக்கொண்டு போலி சிலுவை இருந்த பெட்டகத்தை மாற்றி வைத்து விட்டேன் நீ வைத்திருப்பது போலி, அசல் நீலச்சிலுவை என்னிடம் இருக்கிறது. அரதப்பழசான  திருட்டு வேலையடா இது’’ என்றான்

தலைமுடியை கைகளால் கோதிகொண்டே பாதிரியார் பிரெளன் புதிரான குரலில் ’’ஆம்  பழசுதான்,    நான் இதை முன்பே கேட்டிருக்கிறேன்’’ என்றார்.

திருட்டுவேலைகளில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலியான ஃப்ளேம்போ திடீர் ஆர்வத்துடன்  ஏறக்குறைய பாதிரியார் பிரெளன்   மீது சாய்ந்துகொண்டு ’’கேட்டிருக்கிறாயா?, எப்போது கேட்டாய்’’? என்றான்

’’அவன் பெயரை உன்னிடம் சொல்லமுடியாது. அவன்  என்னிடம் பாவமன்னிப்பு  கேட்க வந்தவன்.  இதே வித்தையை, காகித பழுப்பு பெட்டகங்களை இடம் மாற்றிவைக்கும் இதே வித்தையை செய்து 20 வருடங்கள் மிக செழிப்பாக வாழ்ந்தவன். உன் மீது சந்தேகம் வந்தவுடனேயே  அந்த பாவபப்ட்டவனைபோலவே நீயும்  செய்யப்போகிறாயே’’  என்றுதான்  நினைத்தேன்

’’என்னது என்னை சந்தேகித்தாயா?  என்றான் அந்த சட்ட விரோதி. ‘’ஹீத்தின் இந்த தனிமையான  இடத்திற்கு உன்னை அழைத்து வந்திருப்பதால் என்னை சந்தேகப் படும் அளவுக்கு அத்தனை கூர்மதி  கொண்டவனா நீ “

மறுத்து தலை ஆட்டியபடி ‘’ இல்லை இல்லை நாம் முதல்முதலாக பார்த்த போதே சந்தேகித்தேன்’’ ’’உன்னைப்போன்ற ஆட்கள்  கைகளில் மாட்டியிருக்கும் முட்கள் கொண்ட காப்பினால் வீங்கி இருக்கும் சட்டைக்கையே உங்களை காட்டிக்கொடுக்குமே’’ என்றார்

’’அடப்பாவிப்பயலே! உனக்கெப்படி முள்காப்பை பற்றியெல்லாம் தெரியும்’’? என்றான் ஃப்ளேம்போ

புருவத்தை உயர்த்தியபடி  ’’எல்லாம் சகவாச தோஷம்தான்’’ என்றார் பாதிரியார் பிரெளன் ’’ஹார்டில்பூலில் நான் உபகுருவாக பணிபுரிகையில் அங்கிருந்த மூன்று நபர்கள் இதுபோன்ற முள்காப்பை கைகளில் அணிந்திருந்தனர். எனவே உன்னை பார்த்ததுமே சந்தேகம் கொண்டு நீலச்சிலுவையின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டேன்’’

’’உன்னை கண்காணித்துக்கொண்டே இருந்தேன். நீ பெட்டகத்தை   மாற்றிய பின்னர்,  நீ பார்க்காத போது மீண்டும் அவற்றை இடம் மாற்றினேன் அசல் நீலச்சிலுவை இருக்கும் பெட்டகத்தை  அந்த மிட்டாய் கடையில் விட்டுவிட்டு வந்தேன்’’ என்றார்

’’என்னது விட்டுவிட்டு வந்தாயா’’? என்று அலறினான் ஃப்ளேம்போ. முதல்முறையாக அவன் குரலில் வெற்றியல்லாத ஒரு தொனி கலந்திருந்தது

அதே மாறுபடில்லாத குரலில் தொடர்ந்தார் பாதிரியார் பிரெளன்   ’’நான அந்த மிட்டாய்க்கடைக்கு முதலில் திரும்பசென்ற போது ஏதேனும்  பொட்டலமொன்றை  விட்டுவிட்டேனா?’’ என்று கேட்டு அப்படியேதும்  கிடைத்தால் அனுப்பிவைக்கும்படி ஒரு முகவரியை கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் அப்போது அங்கு எதையும் விட்டுவிட்டு வரவில்லை என்று எனக்கு தெரியும்’’

’ மீண்டும்  அங்கு சென்று அசல் நீலச்சிலுவை இருந்த பெட்டகத்தை  அங்கே வைத்து விட்டு வந்தேன். அதன்பிறகு அவர்கள் என் பின்னால் தேடிக்கொண்டு வராமல் நான் கொடுத்திருந்த வெஸ்ட்மின்ஸ்டர் முகவரியில் இருக்கும் என் நண்பருக்கு அதை அனுப்புவார்கள்  என்று அறிந்திருந்தேன்.’’ என்றவர்

சற்றே சோகமாக ’’நான் இதையும் ஹார்டில் பூலின் திருடனிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவன் ரயில்நிலையங்களில் திருடும் கைப்பைகளை இப்படித்தான் தபாலில் அனுப்புவான். இப்போது அவன் ஒரு மடாலயத்தில் இருக்கிறான்.  ஒரு பாதிரியாக  இருப்பதால் என்னிடம் இதுபோன்ற விஷயங்களை பாவ மன்னிப்பின் போது மக்கள் தெரியப்படுத்தி விடுகிறார்கள்’’   என்றார்

ஃப்ளேம்போ  சட்டைக்குள்ளிருந்து ஒரு பழுப்பு காகித பெட்டகத்தை  எடுத்து அதை அவசரமாக கிழித்தான். அதற்குள்ளே வெறும்  ஈயக்குச்சிகளே இருந்தன.

அவன் எழுந்துநின்று உரக்க கத்தினான். ’’நான் நம்பமாட்டேன் உன்னைப்போல ஒரு அடிமுட்டாள் இத்தனை சாமர்த்தியமாக இதைசெய்திருக்கவே முடியாது’’

’’அந்த நீலச்சிலுவையை  நீதான் வைத்திருக்கிறாய். ஒழுங்காக கொடுத்துவிடு, உன்னை என்னிடமிருந்து காப்பாற்ற இங்கு யாருமில்லை. நாமிருவரும் இங்கு தனியாக இருக்கிறோம். என்னால் உன்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியும்’’ என்றான்.

’’முடியாது’’   என்றார் பாதிரியார் பிரெளன்  எழுந்து நின்றபடி ’’ உன்னால் என்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் என்னிடம் அது இல்லை’’

இரண்டாவது ’’நாம் இங்கு தனியாகவும் இல்லை’’ என்றார்

அவரை  நோக்கி நகர எத்தனித்த ஃப்ளேம்போ இதைக்கேட்டதும் அப்படியே திகைத்து நின்று விட்டான்

’’மரங்களுக்கு பின்னால்’’ என்று சுட்டிக்காட்டிய அவர் சொன்னார் ’’அங்கே இரண்டு பலசாலிகளான  காவலர்களும், உலகின் மிகச்சிறந்த துப்பறிவாளர் ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு எப்படி வந்தார்கள் என நீ கேட்கலாம், நான் தான் அவர்களை அழைத்து வந்தேன்  நான் எப்படி இதை செய்தேன் என  தெரிந்து கொள்ள  நீ விரும்பினால் அதை சொல்கிறேன். ஏனெனில் குற்றவாளிகளிடம் புழங்குகையில் இதுபோல பலவற்றை நாம் அறிந்துகொண்டிருக்க வேண்டும்’’

’’நீ ஒரு திருடன் தானா, என்று எனக்கு அத்தனை உறுதியாக தெரிந்திருக்கவில்லை.   ஒரு பாதிரியாகிய  என்னால் மற்றொரு பாதிரியை அப்படி திடீர் என்று குற்றம்சாட்டி விடமுடியாது. எனவே நீயாக உன்னை வெளிப்படுத்தும் தருணங்களை  உருவாக்கினேன்’’

’’பொதுவாக  உணவகங்களில் காப்பியில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு கலந்திருந்தால் அதை பெரிய பிரச்சனையாக்குவார்கள்,   ஆனால் அப்படி பிரச்சனை ஏதும் பண்ணாமல் அமைதியாக இருக்கவேண்டுமானால் அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கும். சர்க்கரையையும் உப்பையும்  நான்தான் மாற்றி வைத்தேன் ஆனால் நீ உப்பை சுவைத்த பின்னரும்  அமைதியாகவே இருந்தாய்’’

‘’பில் கட்டணம் அதிகமாக இருந்தால் யாராக இருந்தாலும் அதை ஆட்சேபிப்பார்கள். அப்படி ஆட்சேபிக்காமல் அந்த அதிக தொகையையும் ஒருவன் தருவானானால், அவன் தன்னை யாரும் கவனிக்க கூடாது என்று எண்ணுபவனாகத்தான் இருப்பான். உன்  பில் கட்டணத்தை  மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் படி  நான் தான் மாற்றினேன் அதையும் நீ  செலுத்தினாய்’’ .

அனைவருமே ஃப்ளேம்போ ஒரு புலியைப்போல தாவிக்குதித்து தப்பியோடி விடுவானென்றே எதிர்பார்த்தனர், ஆனால் அவன் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அப்படியே அமர்ந்திருந்தான். அவன் உண்மையில் இப்போது நடந்தவற்றை குறித்து அறிந்து கொள்ள பெரும் ஆர்வம் கொண்டிருந்தான்.

மீண்டும் தெளிவான குரலில் தொடர்ந்த பாதிரியார் பிரெளன்,  ’’சரி  தேடிக்கொண்டிருக்கும்  காவலர்களுக்கு  நீ எந்த தடயங்களையும் விட்டுவிட்டு வரவிடாவிட்டாலும் யாராவது ஒருவர் தடயங்களை உண்டாக்க வேண்டுமல்லவா? என்று கேட்டார்

நாமிருவரும்  சென்ற எல்லா இடங்களிலும், நாம் அங்கிருந்து சென்ற பின்னர் முழு நாளும் நம்மை பற்றியே அவர்கள் பேச வேண்டும் என்பது போல எதோ ஒரு காரியத்தை செய்துவிட்டு வந்தேன். ஆனால் அவை எல்லாம் பெரிய குற்றங்களொன்றுமில்லை,  ஒரு சுவற்றை பாழ்படுத்தினேன், ஆப்பிள்களை கொட்டினேன்,   ஜன்னல் கண்ணாடியை உடைத்தேன் ஆனால் நீலச்சிலுவயை காப்பாற்றிவிட்டேன் ஏனெனில் சிலுவை எப்போதும்  காப்பாற்றபப்டும்.

’’இப்போது நீலச்சிலுவை வெஸ்ட்மின்ஸ்டரில் பாதுகாப்பாக இருக்கும். நல்லவேளை,  நீ .கழுதை விசிலை உபயோகித்து  என்னை தடுத்துவிடுவாயோ என்று  கூட நான் நினைத்தேன்’’

’’எதைக் கொண்டு?’’ என்றான் ஃப்ளேம்போ

முகத்தை சுருக்கியபடி ’’நல்லவேளையாக நீ அவற்றை கேள்விப்பட்டிருக்க வில்லை’’ என்ற  பாதிரியார் பிரெளன்   அது ஒரு மோசமான விஷயம்  நீ அந்த விசிலடிப்பவனை காட்டிலும்  நல்லவன் என்று நான் அறிவேன்’’ என்றார்

’’ஒருவேளை உனக்கு அது தெரிந்திருந்தால்,  நான்  புள்ளி வித்தை வழிமுறையை உபயோகித்துக் கூட உன்னை பிடித்திருக்க  முடியாது ஏனெனில் .என் கால்களில் அத்தனை வலுவில்லை’’

’’புள்ளி வித்தை வழிமுறையா? எதைப்பற்றி சொல்லிகொண்டிருக்கிறீர்கள்?’’ என்றான் மற்றவன்

’’அட! புள்ளி வித்தை வழிமுறையாவது உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்’’  என்று ஆச்சரியப்பட்ட பாதிரியார் பிரெளன் .  நீ இன்னும் அத்தனை மோசமாக ஆகியிருக்கவில்லை போலிருக்கிறது என்றார்.

’’நீ எப்படி இந்த மோசமான வழிமுறைகளையெல்லாம் அறிந்து கொண்டாய்?’’  என்று கூச்சலிட்டான் ஃப்ளேம்போ

அவரது வட்டமான எளிய முகத்தில்  புன்னகையில் சாயல்  வந்து போனது ’’ஒரு எளிய பாதிரியாக  இருந்து தான் இவற்றை கற்றுக்கொணடிருந்திருப்பேனாக இருக்கும். ஆனால் உனக்கு தெரியவில்லையா? அன்றாடம்  மனிதர்களின்  பாவங்களை  கேட்பதை தவிர வேறேதும் செய்யாமல் இருப்பவனுக்கு மனிதர்களின் தீமையை குறித்து அனைத்தும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று?’’

’’மேலும் எனது இறைப்பணியின் மற்றொரு அனுபவத்தினாலும் நான் உன்னை சந்தேகித்தேன்’’

’’ அது என்னது ? ‘’ என்றான் அந்த திருடன் அதிர்ந்துபோய்

புன்னகையுடன் ’’நீ தர்க்கத்தை  சாடினாய், அது  முறையான இறையியலல்ல!’’ என்றார் பாதிரியார் பிரெளன்

பாதிரின் பிரெளன் தனது உடைமைகளை எடுக்க திரும்புகையில் மரங்களின் இருட்டிலிருந்து மூன்று காவலர்களும் வெளியே வந்தார்கள். நல்ல கலைஞனும் விளையாட்டு வீரனுமான ஃப்ளேம்போ இரண்டெட்டு பின் வைத்து தலை குனிந்து வேலண்டீனுக்கு  வணக்கம்  தெரிவித்தான்

துல்லியமான குரலில்.   ’’என்னை வணங்காதே,  நண்பா!’’  நாமிருவரும் நமது ஆசானாகிய இவரை வணங்குவோம்’’ என்ற வேலண்டின் பாதிரியார் பிரெளனை கைகாட்டினார்

இருவரும் தங்களது தொப்பிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டு குனிந்து வணக்கம் சொல்லியபோது பாதிரியார் பிரெளன்  தனது குடையை  தேடிக்கொண்டிருந்தார்.

***

குறிப்பு :-

நீலச்சிலுவை லண்டனை சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தின் ஆங்கில எழுத்தாளர். இலக்கிய விமர்சகர், சிந்தனையாளர், நாடகாசிரியர் , பேச்சாளர், இதழியலாளர், மற்றும் இறையியலாளரான கில்பர்ட் கெய்த் செஸ்டர்டன் (Gilbert Keith Chesterton- May 29, 1874 – June 14, 1936) எழுதிய சிறுகதைகளில் ஒன்று. இது செப்டம்பர் 1910’ல் “The Storyteller”. என்ற இதழில் வெளியானது

 இந்த சிறு கதையில்தான் அவரது நெருங்கிய நண்பரான ஒரு பாதிரியின் சாயலில், துப்பறியும் பாதிரியாரான பிரெளன் என்னும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை முதன் முதலில் உருவாக்கி இருந்தார்.. இக்கதைக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து இதே துப்பறியும் பாதிரியார் இடம்பெறும்  மேலும் பன்னிரண்டு கதைகளின் முதல் தொகுப்பான  ’’தி இன்னோசன்ஸ் ஆஃப் ஃபாதர் பிரவுன்” 1911’ல் வெளியிடப்பட்டது இந்த பாதிரியார் பாத்திரம் தொலைக்காட்சி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானது

இவர் துப்பறியும் கதைகளை மட்டுமல்லாது குற்றப்புலனாய்வை அடிப்படையாக கொண்ட கதைகளை எப்படி எழுதுவது என்று பல கட்டுரைகளும்  எழுதியிருக்கிறார்.

அவரின் செயலாளராக இருந்த எழுத்தாளரும் பாடலாசிரியருமான  ஃப்ரான்சிஸ்  ஆலிஸையே அவர் மணந்து கொண்டார். பிரான்ஸிசின் ’’பெத்லஹேம் இன்னும் எத்தனை தொலைவு’’ என்னும்  கவிதை மிக புகழ்பெற்றது

 செஸ்டர்டன் நல்ல கம்பீரமான ஆகிருதி கொண்டவர். 6 அடிக்கு மேல் உயரமும் நல்ல பருமனும், அதற்கேற்ற உடல் எடையும் கொண்டவர்.  உன்னத ஆடைகளின் பிரியரும் கூட.  எப்போதும் பெரிய தொப்பி அணிந்து,  வாயில் புகையும் சுருட்டுடன் காணப்படுவார்

 இவர் 80 நூல்கள் 2000 கவிதைகள் 200 சிறுகதைகள், 4000 கட்டுரைகள் மற்றும் ஏராளமான நாடகங்களை எழுதியிருக்கிறார். 1932 ல் இருந்து தனது இறுதிக்காலம் வரையிலும் சுமார் 40 பிரபல உரைகளை  BBC வானொலிக்கு அளித்திருந்தார்.

. இறை நம்பிக்கை இல்லாத குடும்பத்தை சேர்ந்த இவர் தனது 48 ஆவது வயதில் கத்தோலிக்க மதத்தை தழுவினார்.   ’’கத்தோலிக்க தேவாலாயங்களும்  மத மாற்றமும்’’ என்னும் இவரது நூல் மிக பிரபலமானது.

பிரெளன் பாதிரியின் புத்திகூர்மையை வாசகர்கள் மெச்சவேண்டும் என்ற கூடுதல் கவனத்தில், கதை சொல்லலில் சில நுண்மையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மறந்துவிட்டார்,  பல அவிழ்க்கப்படாத முடிச்சுகளையும், நிரப்பபடாத இடைவெளிகளையும் கொண்டிருக்கிறது என்னும் விமர்சனமும் நீலச்சிலுவையின் மீது உண்டு.

தமிழில் :- லோகமாதேவி

அந்த தற்கொலை செய்தி

ஒரு தற்கொலை செய்தி அல்லது ஒரு வன்கொடுமை செய்தியை கேள்விப்பட்டு அதற்கு எதிர்வினையாற்றி கொண்டிருக்கையிலேயே மற்றுமொன்று நிகழ்ந்துவிடும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு கொரோனா  ஊரடங்கால் கொஞ்சம் அடங்கி இருந்தவர்கள் மீண்டும் எழுந்து விட்டார்கள்.

இத்தகைய பெருந்தொற்றும், கண்முன்னே உற்றோரும் உறவுமாக கொத்துக்கொத்தாக மரணமடைந்து, இறப்பென்பது எங்கோ செய்திதாளில் வாசித்ததென்பது போக, அது நம்வீட்டுகதவை தட்டி நடுக்கூடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த காலத்துக்கு பிறகும் தப்பி பிழைத்து புத்தி வராமல்,,  அடுத்தவர்களின்  பெண்களிடம் அத்துமீறுவதும், அழிப்பதுமாக இருக்கும்,இவர்களே தொற்றுக்கிருமியை காட்டிலும் அபாயகரமானவர்கள்

இந்த குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை  கிடைப்பதில்லை அல்லது, குற்றத்தின் தீவிரத்துகேற்றபடி தண்டனை கொடுக்கப்படுவதில்லை. விஷயம் வெளி உலகிற்கு தெரிய வந்த சில மாதங்கள் ஊடகங்கள் அதை சுறு சுறுப்பாக கவனத்தில்  எடுத்துக்கொண்டு பின்னர் அடுத்த விஷயத்துக்கு போய்விடுகிறார்கள்

பல ஓட்டைகள் வழியாக அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து வெளிவருகிறார்கள்’. சட்டத்தின் பிடி என்று ஒன்று உண்டா என்பதும் கேள்விக்குரியதே.

 பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் இருந்து அழைத்து வரும் வழியில், அவர்கள் வாங்கிக்கொடுத்த பிரியாணிக்காக சட்டத்துக்கு புறம்பான காரியங்களுக்கு அனுமதித்த  காவலர்களுக்கும் இருக்குமல்லவா பெண் குழந்தைகள்?

அவர்களின் பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவளித்த  ஒருவனிடம் பிரியாணி வாங்கி சாப்பிட முடியுமா அவர்களால்? அடுத்தவர் பெண்ணும், தனது பெண்ணும் வேறு வேறென்று நினைக்கும் இவர்களுக்கும்,மாணவியிடன் அத்துமீறும் ஆசிரியர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை 

உயர்கல்வித்துறையில் கடந்த 20 வருடங்களாக ஆசிரியபணியிலிருப்பவள்  என்னும் வகையில் இப்படியான அத்துமீறல்களில் அச்சுறுத்தல்களில் பாதிக்கப்படும் மாணவிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல்கலைக்கழகங்களில் நிலைமை கொஞ்சம் பரவயில்லை பிரச்சனையை குறித்து சக மாணவர்களிடம் பேசவும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் மறுக்கவும் துணிகிறார்கள் இப்போது. ஆனாலும் எல்லையை தாண்டிய அச்சுறுத்தல்களும் அவமரியதைகளும் வருகையில் மனமுடைந்து வேறு முடிவை தேடிக்கொள்கிறார்கள்

பள்ளிக்குழந்தைகளின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. இது போன்ற பிரச்சனைகள் எப்போதும் இருக்கிறது எனினும் அவற்றை குறித்து  பேசவும் வீட்டில் தெரிவிக்கவுமான சூழல் வீடுகளில் இல்லை என்பதுதான் இன்னும் பரிதாபத்துக்குரியது 

ஒரு ஆசிரியையாக, அன்னையாக இந்த பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வாக இப்போது சுடச்சுட பல கல்வி நிறுவனங்களில் செய்து வரும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவது, கவுன்சிலிங் அளிப்பது மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரைகள் ஏற்பாடு செய்வது போன்றவை எனக்கு பொருளற்றவையாக தெரிகிறது.  பதிலாக முதலில் வீட்டில் பெற்றோர்களிடம், வீட்டு பெரியவர்களிடம் பேசுவதுதான் அவசியம்.

பெண்  குழந்தைகளுக்கு பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் ,அலுவலகத்தில், பேருந்தில், ரயிலில், விமானத்தில், கழிப்பறையில் திரையரங்குகளில், ஷாப்பிங் மால்களில், எங்கு  வழக்கத்திற்கு மாறான, அவர்களுக்கு பிடிக்காத, அவர்களுக்கு தொந்தரவு தரும் விஷயங்கள் நடந்தாலும் முதலில் வீட்டில் பெற்றோர்களிடமும் சகோதர, சகோதரிகளிடமும் அதை வெளிப்படையாக சொல்லலாம் என்னும் நம்பிக்கையை, புரிதலை முதலில் குடும்பம் என்னும் அமைப்பு அளிக்க வேண்டும்

அங்குதான் பிரச்சனை தொடங்குகிறது. விதி விலக்குகள் இருக்கும் ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தேர்வு முடிவுகளில் வரும் எண்களுக்கு கொடுக்கும் மரியாதையை குழந்தைகளின் உடல், மன நலனுக்கும் அவர்களின் எதிர்காலத்துக்கும் கொடுப்பதில்லை

குழந்தைகளின் உலகில் பெற்றோர்கள் இருப்பது அவசியம் தொடக்கக்கல்வியில் இருந்தே பல சிறப்பு வகுப்புகள், அபாகஸ், நீச்சல், ஓவியம் ஸ்லோகம் உள்ளிடட பயிற்சிகள், பின்னர் சலங்கை பூஜை போன்ற அறிவித்தல் விழாக்கள் என குழந்தைகள் நாள் முழுவதும் எதிலாவது ஈடுபட்டுக்கொண்டும், படித்துக்கொண்டும், பரீட்சை எழுதிக்கொண்டும் இருப்பதில் பல பெற்றோர்கள் வெகு கவனமாக இருக்கிறார்கள் 

 அந்த வயதுக்கென தேவைப்படும் விளையாட்டுக்கள், தோழமைகள், ஓய்வு, குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் இவை எதுவுமே கிடைக்கப்பெறாமல் ஒரு கேள்விக்கான பதிலை நூற்றுக்கணக்கான முறை பதில் எழுதி எழுதி  மனனம் செய்துகொண்டு எந்த புரிதலும் அரவணைப்பும் இல்லாத, மதிப்பெண்களையும் அதன்பேரில் செலவிட்டிருக்கும் பெருந்தொகையையும் சொல்லி சொல்லி காட்டி மேலும் அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்களையும் கொண்ட குழந்தைகள் எப்படி இதுபோன்ற தலையாய பிரச்சனைகளை  வீட்டில் சொல்ல துணிவார்கள்?

. குழந்தைகளின் உலகின் தானும் இருந்தபடி, அவர்களின் தேவைகளை, சிக்கல்களை புரிந்து கொண்டு, எதுவானாலும் நான் இருக்கிறேன் உன்னுடன் என்னும் நம்பிக்கயளிக்கத்தவறும் பெற்றொர்கள் தான் முதல் குற்றவாளிகள்

பாடப்புத்தகங்களை தவிர பிற வாசிப்புக்கு அனுமதிக்காத , பயணங்களில் ஈடுபடுத்தாத,  ஒருநாளின் ஒருவேளை உணவையாவது குழந்தைகளுடன் குடும்பமாக அமர்ந்து சாப்பிடாத, ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும்  பாரபட்சமாக பாவிக்கிற, சில மணி நேரங்களைக்கூட அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத, அதே பருவத்தை கடந்து வந்தவர்கள் நாம் என்பதை மறந்து விட்ட,வெறும்  மதிப்பெண்களால் மட்டும்  கிடைக்கவிருக்கும் ஒரு மாயப் பொன்னுலகை குறித்த  பகற்கனவை கொண்டிருக்கும், அக்கனவின் பேரில்  குழந்தைகளை சித்திரவதை செய்கிற பெற்றோர்களும் குற்றவாளிகள் தான்

 மகளை இழந்தவர்களின் கண்ணீர்க்கதைகளையும் பெண்களிடம் அத்து மீறுவோரை குறித்து ஆவேசமாக எதிர்வினையாற்று பவர்களையும், போராட்டத்தில் ஈடுபடுவோரையும் நீதி கேட்போரையும் ஊடகங்களில்  பார்க்கிறேன்,

அவர்களில் எத்தனை பேருக்கு மகன் அல்லது மகளின் உடல் மொழியில், உணவுண்பதில், உறங்குவதில், பேசுவதில், இருக்கும் நுண்மையான மாறுபாடுகளை கவனிக்கத் தெரியும்? எத்தனை பேர் அவர்களின் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்க  தயாராக இருந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தன் அலுவலக வேலைகளை, அன்றைய நாளை,குடும்ப விஷயங்களை, தான் வாசித்தவற்றை, பார்த்தவற்றை, குழந்தைகளுடன் பகிர்ந்து, அதே பகிர்தலை அவர்களும் எதிர்பார்கிறார்கள் என்பதையெல்லாம் புரிய வைத்திருக்கிறார்கள்?

சில நாட்கள் முன்பு பெட்ரோல் நிலையமொன்றில் வரிசையில் பெட்ரோல் போட காத்திருக்கையில் முன்னால் இருந்த காரில் பள்ளி சீருடையுடன் ஒரு சிறுவன் வெளியே ஏதோ ஒன்றை கவனித்து முகம் கொள்ளா சிரிப்புடன் அருகிலமர்ந்திருக்கும் அம்மாவை பலமுறை தொட்டு தொட்டு அழைக்கிறான், மும்முரமாக செல்போன் திரையில் ஆழ்ந்திருந்த அவர்,அழைக்கும் மகனின் சிறு கையை தட்டிவிடுகிறார். அந்த சிறுவன் பள்ளியில் நடக்கும் ஒரு அவமதிப்பை, ஒரு சிக்கலை எப்படி அம்மாவிடம் சொல்லுவான்.

ஆன்லைன் வகுப்புக்களை சரிவர கவனிக்காமல் விளையாடியதற்கே நெஞ்சுக்கூடு உடையும் படி முதுகில் பலமாக தொடர்ச்சியாக அறையும் ,அச்சமூட்டும் ஆளுமையாக இருக்கும் பெற்றோர்களிடம் சிறு மகனோ மகளோ நாளை என்ன அந்தரங்க பிரச்சனையைத் தைரியமாக சொல்ல முன்வருவார்கள்?

வேரில் நோய் தாக்குதல் இருக்கையில் இலைகளுக்கும் கிளைகளுக்கும் மருந்தடிப்ப்துபோலத்தான் இப்போது கல்வி நிறுவனங்களை குறைசொல்லிக்கொண்டிருப்பதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதுமெல்லாம்.,

கல்விநிலையங்களில் மட்டுமல்ல, எங்கும் இருக்கும் இப்படியான சிக்கல்களும் ஆபத்துக்களும். வீடு என்னும் அமைப்பு அதற்கான முன்தயாரிப்பை நம்பிக்கையை, பாதுகாப்பை அளிக்கும் இடமாக இருக்கிறதா என்பதுதான் முதன்மையான பிரச்சனை இப்போது.  வயது வந்த பிள்ளைகள் முன்பாக  சண்டையிடும் பெற்றோரிடம் எந்த குழந்தையும் தன் சிக்கல்களை சொல்லாது.

வீட்டில் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் பொழுதுகளை கவனமாக உருவாக்கி மகிழ்ச்சியான சூழலை தக்க வைத்திருக்க வேண்டும். அடிக்கடி தொட்டும், கைகளை பிணைத்துக்கொண்டும், தட்டிக்கொடுத்தும்  பெற்றோர்கள் தங்கள் அண்மையை, நெருக்கத்தை அந்த தொடுகையில் தெரிவிக்கவேண்டும். குழந்தைகளை  பெற்றோர்கள் தொடுவதே இப்போது அபூர்வமாகி விட்டிருக்கிறது

 இவற்றில் எதுவுமே செய்யாத பெற்றோர்கள்   எவர்  மீதும் கல்லெறியும் அருகதை அற்றவர்கள்,  குற்றத்தின் கூட்டுப்பங்காளிகளும் கூட.

இறுதியாக மற்றுமொன்று. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதிலிருந்தே கல்லூரியிலும், ஊரிலும், பல நாடுகலிலிருக்கும்நண்பர்களிடமிருந்தும் மகன்கள் இருவரும் படித்த சின்மயாபள்ளிதானே இது ? என்ன இப்படியான பள்ளியிலா மகன்களை சேர்த்தீர்கள்? எங்களுக்கும் பரிந்துரைத்தீர்கள் ? என கேள்விமேல் கேள்விகள்.

இல்லை அது சின்மயா சர்வதேச உறைவிட ப்பள்ளி. இந்த அசம்பாவிதம் நடந்தது சின்மயாவித்யாலயா. இந்த பெயரில் இந்தியாவில் கோவையில் பல பள்ளிகள் இருக்கின்றன.ஆனால் மகன்கள் படித்த இன்னும் தொடர்பில் இருக்கிற இனியும் என்றென்றைக்கும் தொடர்பில் இருக்கபோகிற பள்ளியான CIRS -Chinmaya international residential school இந்தியாவிலேயே ஒன்றுதான் இருக்கிறது. அங்கு மகன்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன், எந்த மன அழுத்தமும், சிக்கலும், அச்சுறுத்தலும் இல்லாமல் படித்தார்கள் படிக்கிறார்கள் ,இனியும் படிப்பார்கள்

கொடிவழியும் குருதிக்கலப்பும்

”என்னடா எந்நேரமும் அந்த ——-ஷா   கூடவே பேசிட்டு இருக்கியே, இதாவது சீரியஸா போகுதா?’

(ஷாவில் முடியும் எந்த பெயரானாலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளுங்கள். த்ரிஷா, ஹர்ஷா, வர்ஷா, மனிஷா, விதுஷா இப்படி!)

” சீரியஸ்னுதான் நினைக்கறேன் மீ, ஆனா கொஞ்சம் க்ளைமேக்ஸ் கஷ்டமாத்தான் இருக்கும் போல”

”கஷ்டமா? எதை சொல்லறே?”

”அவங்க வீட்டில் ஒத்துக்குவாங்களான்னு தெரியலை அனேகமா மாட்டாங்கன்னுதான் நினைக்கறேன்”

”ஏன் பெரிய லாடு வீட்டு லட்டா அவ? சொல்லப்போனா எனக்கு உண்மையில் அவளை அத்தனை பிடிக்கலை கேட்டுக்கோ, ஏன்னா நான் முன்னாடியே உங்க ரெண்டு பேருகிட்டயுமே சொல்லிருக்கேன் பொண்ணு பார்க்க முன்னப்பின்ன இருந்தாலும் தலைமுடி மயில் தோகை போல் இருக்கனும்னு. இவளுக்கு கொத்தமல்லி கட்டுமாதிரியில்ல இருக்கு? நானே ஒண்ணும் சொல்லாதப்போ இவங்களுக்கு என்னடா, பெரிய இதாட்டம் சும்மா இருக்கச் சொல்லிரு ஆமா!

”அய்யோ நீ வேற ஏம்மீ, அவ ஷார்ட்டா வெட்டிக்கிட்டா இல்லாட்டி நீ சொல்லுவியே அப்படி யக்‌ஷி மாதிரிதான் இருக்கும் அவ தலைமுடி”

”என்னமோ போ! நீயாச்சு அவளாச்சு.  எனக்கென்ன, ”அவங்க வீட்டில் எதுக்குடா வேண்டாம்பாங்க?  ஏன்? உன்னவிட நல்ல பையனா பார்த்துருவாங்களா? கிடச்சுருமா? இல்ல கேட்கறேன்! ”கிடைக்கவே கிடைக்காதுன்னு சொல்லி வை,  வேற கிரகத்தில் கூட உன்னைபோல ஒருத்தன் இருக்கமாட்டான்”

”மீ!! வேற கிரகத்தில என்னப்போல மட்டுமல்ல யாரப்போலவும் இருக்கவே மாட்டாங்க, மனுஷங்களே இல்ல அங்கே,  ரொம்ப பண்ணாதே நீயி”

”சரிடா விஷயத்துக்கு வா ,ஏன் ஒத்துக்க மாட்டாங்களாம், கொத்தமல்லி வீட்டில் சரி சரி முறைக்காதே, யக்‌ஷி வீட்டில்?

”அவங்கல்லாம் மலையாளிக மி!”

”அட என்னடா நாமளும் மலையாளிதானே? நாந்தான் நல்லா மலையாளம் பேசறேனே? இதை சொல்லிப்பார்க்கலாம் இல்லைனா நம்ம வீடு கூட பாலக்காட்டுக்கு பக்கத்தில்தான் இருக்குன்னு வேண்ணா சொல்லிப்பார்க்கலாமா?”

”அய்யோ மீ,   எதாவது உருப்படியா சொல்லேன் ப்ளீஸ்!’”

”மலையாளிகளில் நிறைய பிரிவு இருக்குமே அதில் இவ யாராம்?”

”போ, மீ அதெல்லாம் கேட்டுக்கிட்டா இருப்போம்?

”அட கேட்டு வைடா. நம்பூதிரியா இருக்க வாய்ப்பில்லை நம்பூதிரி பொண்ணுங்கெல்லாம் நல்ல வெள்ளையா, தலைமுடி கணுக்காலுக்கு இருக்கும், இவளுக்குத்தான்,,  ஓகே ஓகே விடு!

ஒருவேளை நாயர்னா பிரச்சனையே இல்லடா, நாமளும் நாயர்தானே, பேசி முடிச்சுக்கலாம்”

”என்னது  நாம நாயரா? கவுண்டர்னுதானே இத்தனை நாளா சொல்லிட்டு இருந்தே?”

”அதெல்லாம் ஜெ வை வாசிக்கறதுக்கு முன்னாடிடா, விவரமில்லாதவனா இருக்கியே, இப்போ ஜெ யாரு?”

”எழுத்தாளர்”

”டேய்!”

”சரி,  பெரிய எழுத்தாளர்”

”அட, அதில்லை அவரு நாயருடா!”

”அவரு நாயர்னா நாம எப்படி மீ நாயராவோம்?”

”என்னடா இப்படி இருக்கே? நாம எங்கே இருக்கோம்,  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில்தானே?”

”நாம இல்லை நீ இருக்கே”

”நான் இருந்தா அது நாம எல்லாரும் இருக்கறதுன்னுதான் அர்த்தம். ஜெ சொல்லிருக்காரே //அன்னையரை, அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துத்தான் மதிப்பிடனும்னுட்டு//

”ஆனாலும் நீ ஜெ எழுதறதெல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு பண்ணற அட்டகாசமிருக்கே ! சரி சொல்லு”

”விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் யாரோடது ஜெவோடது,ஜெ  யாரு ? நாயர், குல நாயர்.  விஷ்ணுபுரம் வட்டம்ங்கறது ஒரு அமைப்பில்லடா குடும்பம் நாம ஜெ எல்லாம் ஒரே குடும்பம்னா நாமளும் நாயர்தானே! இதைச் சொல்லி பொண்ணு கேட்றலாம் கவலைப்படாதே!”

”போ மீ நீ, நான் என்னவோ நீ நிஜமா சொல்லறீயோன்னு நினச்சேன்”

”அட நிஜம்தாண்டா!  உங்கண்ணன் ஒரு பிராமின் பொண்ணோட அடிக்கடி பேசிட்டு இருக்கானே அது  ஒருவேளை செட் ஆச்சுன்னா ஒரு பிரச்சனையும் இல்லாம கல்யாணம் முடிஞ்சுரும். நீதான் நாயர் கீயர்னு குழப்பியடிக்கறே!”

”ஏன், நாமளும்  பிராமின்ஸ்னு சொல்லப்போறீயா?

”சொல்லறதென்ன நாம பிராமின்ஸ் தாண்டா!’

”மீ ,ரொம்ப ஒவரா பண்ணறே!’

”அட! நிஜமாத்தண்டா ” ”நீயே சொல்லு, இப்போ நம்ம  கணேஷ் மாமா யாரு?”

”எந்த கணேஷ் மாமா? ஜெனிவா மாமாவா?” தெரிலை நீயே சொல்லிரு

”ஆமா அவரேதான் யாரு ?அசல் பிராமணர்!”

’”ஓகே அதுக்கு நாம எப்படிம்மா பிராமின்ஸ் ஆவோம்?”

”இருடா ,வரேன்,  கணேஷ் மாமா யாரு?

”என்ன மீ , இப்போதானே சொன்னே, அசல் பிராமின்ன்னுட்டு? திரும்பத்திரும்ப பேசறே நீ ஆமா”

இல்லடா அது ஜெனிவா கணேஷ் மாமா, இப்போ கேட்கறது சிங்கை கணேஷ் மாமா மாதங்கி அத்தை, சுபா அத்தை, அந்த சிங்கை மாமா!

ஓ பாட்டு மாமாவா ? அவரு யாரு?

என்னடா நீ அவரும் அசல் பிராமணர்”

”ஓகே மீ அவங்கஎல்லாம் மாமாதான்னாலும் நம்ம ரத்த  சொந்தமில்லையே எப்படி நாம் பிரமின்ஸ்னு சொல்லறே?”

”வரென் வரேன், இரு . உங்க விஜி மாமனிருக்கானே அவன் யாருங்கறே?

”மீ , வேண்டாம் சொல்லிட்டேன் விஜி மாமா உன் கூட பிறந்த தம்பி அவரையும்  பிராமின்னு சொல்லிறாதே!”

”அவன் என் தம்பியா இருந்ததெல்லாம் உங்க லக்‌ஷ்மி அத்தையை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முந்தின நாள் வரைக்கும்தாண்டா,

”எப்போ பிராமணப்பொண்ணான அவளைக் கல்யாணம் பண்ணி முழுநேரமும் அவளுக்கு புருஷனாவும் ஒழிஞ்ச நேரத்தில் கம்பெனியை பார்க்கறதுன்னு ஆயிட்டானோ.  அப்போ அவனும் பாதி ப்ராமின் தானே? வர ஆவணி அவிட்டதுக்கு உங்க மாமன் பூணூல் போட்டுக்கப்போறானே, தெரியுமா தெரியாதா உனக்கு?.

இன்னும் கேளு!”நம்ம மாதவன் மாமா யாருங்கறே?”

பெல்ஜியம் மாமாவா?

”அவரேதான் ப்ரியா அத்தையை கல்யாணம் பண்ணி இருக்கறதால அவரும் பாதி பிரமின் தாண்டா! உண்மையை சொல்லப்போனா நம்மளை சுத்தி எல்லா வேண்டியவங்களும் பிராமின்ஸ்தான் இனி உங்க ரெண்டு பேருக்கும் கவுண்டர் வீட்டில் பொண்ணு கேட்டா தரமாட்டாங்க பிராமின்ஸ்கெல்லாம் நாங்க தரமாட்டோம்னு சொல்லிருவாங்க பாரேன்.”

”நீவேணா, இந்த  – ஷா செட் ஆகலைனா பிராமின் யாராவதை பாரேன், தலை முடி கொஞ்சம் நீளமா இருக்கறாப்பல”

”மீ என்ன மீ ,என்னமோ இந்த கடை இல்லைனா, வேற கடைங்கறா மாதிரி ஈஸியா சொல்லிட்டு இருக்கே காதல் மீ, காதல்!

”சரி சரி விடு நாயருக்கே வரலாம், என்ன பண்ணறாங்க அந்த லாடு வீட்டில்?”

”அப்பா காலேஜ் ப்ரொஃபஸர், அம்மா எழுத்தாளர்

”பார்ரா! இனி என்ன எல்லாமே முடிஞ்சுருச்சுன்னு நினச்சுக்கோ, நானும் எழுத்தாளர், அதாவது கட்டுரையாளர்னா எழுத்தாளர்னும் சொல்லிக்கலாம்னு ஜெ  சொல்லிருக்காரு, நானும் ப்ரொஃபஸர், ஒரே குடும்பம் வாத்தியர் குடும்பம் அவ்வளவுதான். இனி என்ன சொல்லு”

”போமீ, உருப்படியா எதாச்சும் சொல்லு, ப்ளீஸ்’”

’”சரிடா, அவங்களை வெண்முரசு வாசிக்க சொன்னீன்னா, நாம எல்லாரும் ஜெ ஸ்கூலில் ஒண்ணா படிக்கறவங்க ஆயிடுவோம், அப்புறம் ஜாதியாவது இனமாவது குலமாவதுன்னு ஒண்ணு மண்ணா கலந்து சொந்தக்காரங்களாயிருவோமே! சொந்தத்தில் கட்டிக்க பிரச்சனையே இல்லையே!

”இல்லைன்னா அரங்கா மாமா, விஜயசூரியன் மாமாவவிட்டு நாம வெண்முரசு கொடி வழியில் வந்தவங்கன்னு அந்த நாயர்ட்ட  சொல்லச்சொல்லிட்டா அவங்களும் என்னமோ ஏதோ பெரிய கொடி வழிபோலன்னு நினச்சுக்கிட்டு பொண்ண தந்துருவாங்க,

அட எதுவுமே வேலைக்காகலைன்னு வச்சுக்கோ, இருக்கவே இருக்கு பிரம்மாஸ்திரம் அதை எடுத்துரலாம்”

”என்ன மீ அது?”

நான் நேரா ஜெ வீட்டுக்கே போய், சார், இப்படி இப்படி விஷயம் நீங்க பார்க்க வளர்ந்த பையன், அவனும் பிடிச்ச பொண்ணை கல்யாணம பண்ணி உங்களையும அருண்மொழியையும் போல கல்யாணதுக்கப்புறமும் தொடரும் பேரன்போட இருக்க வேண்டாமா? நம்மைச்சுற்றிலும் அறிவார்ந்த ஒரு உலகம் இயங்கிட்டு இருக்குன்னே தெரியாத ஆளுங்க இருக்காங்கன்னு சொல்லுவீங்களே, அப்படியாப்பட்ட வீட்டில் லவ் பண்ணிட்டான், அதனால நீங்க ஒருவார்த்தை பொண்ணு வீட்டில் பேசுங்கன்னு, வேண்டிக்கேட்டுகிட்டா நிச்சயமா சார் போனிலாவது பேசுவார்,

அவர் பொண்ணோட அம்மா அப்பாட்டெ ’’இங்க பாருங்க உண்மையில் குருதி கலப்பில்லா குலம்னு எதாச்சும், இருக்கா? இப்போ உலகளாவிய பெருந்தொற்றுக்கப்புறம் பிழச்சுகிடக்கற நாமெல்லாம் ஊழை உச்ச விசையுடன் எதிர்த்து நின்று, குலம் இனம் மொழியையெல்லாம் மறந்து  கல்யாணம் பண்ணி சந்ததியை பெருக்கினாதானே உலகம் உய்யும், பாசிமணிகளுக்குள் பட்டுச்சரடு போல வாழ்க்கைக்குள் விதி ஊடுருவியிருக்குங்கறத மறந்துட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னே வாழ்ந்துட்டு இருக்கீங்களே’’ன்னெல்லாம் பேசினா,  கதறிட்டு உனக்கு மட்டுமல்ல ,இன்னொரு பொண்ணிருந்தா உங்க அண்ணனுக்கும் சேர்த்து கொடுத்துருவாங்களே!

”நான் பார்த்துக்கறேன் கவலையில்லாம இரு, ஆனா அந்த கொத்தமல்லியை மட்டும் கொஞ்சம் கீரைக்கட்டாட்டமாவது வளர்க்க சொல்லு போ போ!”

கன்னிப்பார்வை,

நோய்த்தொற்று உச்சத்திலிருந்த, ஊரடங்கும் அமலில் இருந்த மார்ச் மாத நள்ளிரவொன்றில், வழியெங்கும் பூத்திருந்த மஞ்சள் மலர்களை நிறையவே நிறையாத கூடையில் பறித்துக்கொண்டே இருக்கும் நெடுங்கனவொன்றில் நானிருக்கையில் எங்கோ ஆழத்தில் குடுகுடுப்பைக்காரனின் குரலும் குடுகுடுப்பை ஒலியும் அஞ்சிய நாய்களின் குரைப்புமாக கேட்டுக்கொண்டிருந்தது. படுக்கயறையின் ஜன்னலுக்கு வெளியே நின்றபடி குறிசொல்லிக்கொண்டிருந்திருக்ககூடும்.

கனவிலேயே நாளை விடிந்ததும் எப்படியும் நேரில் குறிசொன்னதை விளக்கிச்சொல்லி பழம்புடவைகளையும் அரிசியோ பருப்போ எண்ணையோ தேவையைச்சொல்லி வாங்க வருவானில்லையா அப்போது பார்த்துக்கொள்ளலாமென்று ஆழ்மனமே ஆழ்மனத்திற்கு சொல்லி மீண்டும் கனவை தொடர்ந்து, தூங்கிவிட்டேன். வழக்கம் போல அதிகாலை விழித்து நாளைத் துவங்கினேன் ஆனால் கண் விழித்த நிமிஷத்திலிருந்தே  என்னவாக இருக்கும் அவன் சொன்னவிஷயம் என்றூ உள்ளுக்குள் நிமிண்டலாகவே இருந்தது.

உலகளாவிய அசாதரண நோய்தொற்றுக் காலமாதலால், நிச்சயமற்றுப்போயிருந்த எதிர்காலம், மகன்களின் படிப்பு, ஆரோக்கியம், என் வேலை என்று ஏராளம் கவலைகளில் உழன்று கொண்டிருந்த சமயமாதலால் குடுகுடுப்பைக்காரனின் வரவுக்கு 2 நல்ல புடவைகளையும் அரிசியும் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன்

6 மணி வாக்கில் வந்தான். இளைஞன், கரியவன் ஏராளமான வண்ணத்துணிகளை கைகளிலும் தோளிலும் போட்டுக்கொண்டிருந்தான். முறுக்கு மீசை, ரத்தச்சிவப்பில் பெரிய வட்டப்பொட்டு ,வெற்றிலையில் சிவந்த தடித்த உதடுகள். எதையோ வைத்திருந்த கனமான ஜோல்னா பைகளிரண்டு தோளிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது.

என்னைப்பார்த்ததும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே’’ இந்த வீட்டு மூத்த ராசாவுக்கு, மூத்த வாரிசுக்கு, குடும்பத்தை தாங்கப்போற காளைக்கு குறி சொல்லியிருக்கா ஜக்கம்மா’’ என்றதும் ஆர்வமும் கூடவே கவலையுமாக வெளியே போனேன். சரணுக்கு என்னத்தை சொல்லியிருக்காளோ ஜக்கம்மான்னு

 ’’தாயி, மகாலட்சுமி உன் களையான முகம் என்னிக்கும் வாடாது  வாடவிடமாட்டா ஜக்கம்மா’’ என்று பால்வார்த்தான் பின்னர் தடாலடியாக ’’தாயி,  நல்லா கேட்டுக்க இந்த வீட்டு மகராசன் மேல,  மூத்த ராசாமேல, கன்னி ஒருத்தி கண்ணைப் போட்டுட்டா, அவ பார்வையை நல்லா பதிச்சு போட்டா, கவனிச்சுக்கேளு நான் சொல்லபோறதை’’ என்றான். நான் பரவசமாகிவிட்டேன்

எனக்கு சில வருடங்களாகவே மனக்குறை இருந்த ஒரு விஷயம் இது

சரண் வழக்கமாக எல்லா பையன்களும் சொல்லும் ’’எனக்கு பெண்களைப் பிடிக்கா’’தென்பதை 8 ஆம் வகுப்பிலேயே சொல்லிவிட்டாலும் அதன்பிறகும் அதில் மாற்றங்கள் எதையும் காண்பிக்கவேயில்லை, சொன்னது சொன்னதுதான்னு பெண்கள் பக்கம் திரும்பவேயில்லை

இந்தியாவின் தரமான பள்ளிகளில்  இரண்டாவது பள்ளியான அவன் பள்ளிப்பெண்கள் அனைவருமே செல்வச்செழிப்பின் அழகும், இளமைப்பெருக்கின் அழகும், இயல்பான அழகுமாய் திளைப்பவர்கள். இவன் வகுப்பிலும் பேரழகிகள் தான் எல்லாருமே.

ஆனால் யாரிடமும் இவன் சிரித்துப்பேசியதையோ, அலைபேசியதையோ கூட நான் பார்த்ததில்ல. பள்ளி விழாவான ஆனந்த உத்ஸவ்’விற்காக 3 நாட்கள் அவனுடன் பள்ளியிலேயே தங்கவேண்டி வருகையில் என்னை முன்பே எச்சரித்தே கூட்டிப்போவான் ’’அம்மா என் வகுப்பு பொண்ணுங்க கிட்ட எல்லாம் ரொம்ப சிரிச்சி சிரிச்சு பேசாதே’’ என்று. நான் அந்த எச்சரிக்கைகளை கடுகளவும் பொருட்படுத்தியதும், கவனத்தில் கொண்டதும் இல்லையென்பது வேறு விஷயம்.

பள்ளியின் பசும்புல்தரையில் நானும் சரணுமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு குட்டைப்பாவாடை கத்தார் அழகி ’ஹாய் பொள்ச்சி’ என்று இவன் முதுகில் பளாரென ஒரு அறை வைத்துவிட்டுப்போனாள் ஒருமுறை. இவன் முகம் கடுகடுக்க அமர்ந்திருந்தான், ’’டேய் யாருடா?’ என்றதற்கு ’’ஜூனியர்மா, கொழுப்பு’’ என்றான். ’’அட சும்மா பேசலாமில்ல நீயும்,  அது அடிக்கற அளவுக்கு ஜாலியா இருக்கில்ல என்றதற்கு’’, அம்மா! நீ கொஞ்சம் பேசாம இருக்கியா? என்ற எதிர்வினை 2 லட்சமாவது தடவையாக அவனிடமிருந்து வந்தது.

இன்னும் ஒருத்தி அடுத்த நாள் வந்து ’’சா, உன்னிடம் இருக்கும் சாண்ட்விச் கூப்பனை எனக்கு தரமுடியுமா’’ வென்று கேட்டாள், எந்த பதிலும் பேசாமல் குறைந்த பட்சம் ஒரு புன்னைகை கூட இல்லாமல், பாண்ட் பாக்கட்டிலிருந்து கூப்பனை கொடுத்துவிட்டு தேமே என்று அமர்ந்திருந்த அவனை எரிச்சலுடன் பார்த்து’’ ஏன் இவ என்ன சீனியரா உனக்கு? என்றேன் ’’இல்ல கூடத்தான் படிக்கறா ’’ என்றான் கொஞ்சம் சிரிச்சாத்தான் என்னடா? என்றால் மீண்டும் அதே’’ நீ சும்மா இருக்கியா’’பாட்டையே பாடினான்

அந்த பெண் கொள்ளை அழகி. பொன்னிறகூந்தல் அலைஅலையாக இடுப்புவரை,  பூனைக்கண்கள், கூர்நாசி, உருவிவிட்டது போல் உடல், நல்ல உயரம் இந்தியச்சாயல் அவள் உடல்மொழியிலும் இல்லை. பிறமாணவர்களிடம் விசாரிக்கையில் விழுந்தடித்துக்கொண்டு அவளை, அந்த சங்கரியைக் குறித்து ஒரு லாங் சைஸ் நோட்டில் எழுதும் அளவுக்கு தகவல்களை கொட்டினார்கள்

அப்பா சென்னைவாசி, சென்னைக்கு சுற்றுலா வந்த பிரேசில் அழகியுடன் காதல் வயப்பட்டு கல்யாணம், காதலின் சாட்சியாக ஒரே மகள் சங்கரி  இவன் ஏன் இப்படி இருக்கிறானென்று அன்றைக்கும் ரொம்பவும் விசனப்பட்டேன்

பெருங்கவலையில் இருந்த எனக்கு ஜக்கம்மா குடுகுடுப்பைக்காரனிடம் சொல்லி அனுப்பிய தகவல் பெரிதும் மகிழ்ச்சி அளித்ததால் ’’அப்படியா’’, என்று வாய்விட்டே கேட்டேன்

என் உணர்வெழுச்சி நிரம்பிய அந்த வினாவை அவன் அதிர்ச்சியென்று தவறாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும், ’’ஆமாந்தாயி ஆனா உங்க மகன் தப்பெதுவும் செய்யலை, கன்னி அவளாத்தான் கண்ணை வச்சுட்டா, கொள்ளிக்கண்ண, கொலைக்கண்ண வச்சிட்டா’’ என்றான். கவிஞனாயிருப்பான் போலிருக்கேன்னு நினைச்சேன். என்ன மொழிவளம்!

 தப்பா நினக்க என்ன இருக்கு வயசுப்பசங்கன்னா பொண்ணுங்க கண்ணை, மனசை வைக்கறதெல்லாம்தானே நடக்கனும்னு மனசில் நினச்சு சந்தோஷப்படறதுக்குள், ‘’ஒண்ணும் கவலைப்படாதீங்க,  சின்ன பூசையொன்னப்பண்ணி கன்னியோட கண்ணை எடுத்துப் போடலாம், அவிச்சுப்போடலாம், விலக்கிப்போடலாமென்றதும் எரிச்சலானேன். இருந்திருந்து இப்பத்தான் ஒருத்தி கண்ணை வச்சுருக்கா, அதை எதுக்கு எடுக்கனும்?

‘’ அதெல்லாம் வேண்டாம்ப்பா, இருந்துட்டு போகட்டும்’’ என்றதும் அவன் குழம்பிவிட்டான். பொதுவில் இப்படி சொன்னதும், கவலையடையும் தாய்களைத்தான் பார்த்திருப்பானோ என்னமோ!

’’தாயீ,, நான் கன்னின்னு சொன்னதை யார்’னு நினச்சீங்க’’ன்னு அவன் துவங்குமுன்னே நான் யாரா இருந்ததாலும் சரி ஒண்ணும் பிரச்சனையில்லைப்பா’’ என்றேன் கறாராக. அவன் மேலும் குழம்பி என்னையும் குழப்பும் உத்தேசத்துடன் பெரிய பூசையெல்லாம் வேண்டாம்மா, 3000 ரூபாதான் ஆகும் நல்லெண்ணை மட்டும் 2 லிட்டர் கொடுத்தாபோதுமெ’’ன்றான்.

 ’’அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா,’’ என்று சொல்லி போய் புடவையை கொண்டு வரலாமென்று திரும்புவதற்குள், அவன் ‘’நாயக்கரம்மாக்கு இனி எல்லாம் நல்லாத்தான் நடக்கும்’’ என்றதும் மேலும் கடுப்பானேன். நாயக்கரம்மாவா!!!!!! .கொங்கு வட்டாரத்தின் நாயக்கர் பெண்களெல்லாம் ஓங்கு தாங்காக நல்ல உடற்கட்டுடன் பெருங்கூட்டுக்காரிகள் என்றே பெயரெடுத்திருப்பவர்கள்.

மறுபடியும் குண்டாகிட்டேனோ என்று கவலையாகவும் குடுகுடுப்பைக்காரன்  மீது எரிச்சலாவும் இருந்தது. சரி எடுத்துவைத்த புடவையை கொடுத்து இவனை அனுப்பிடலாமென்று நினைக்கையில் மீண்டும் அவன் ’’இந்த வீட்டுக்கு இனி எல்லாமே நல்லத்துதான் பூரா ஆம்பளை ராசாவேதான் பொறப்பங்க ,இனி பெண் வாரிசே இல்லை, எல்லமே ராசாக்கதான், ஆளும் வம்சம்தான்’’ என்று ஒரே ஆணாதிக்க க்குரலாக கொடுது என்னை  எரிச்சலடைய செய்தபடியே இருந்தான்.

 எப்போ இனி இந்த வீட்டில் இனி பெண் குழந்தைகள் பிறக்கும்னு காத்திட்டு இருக்கும் என்னிடம் இவன் இப்படி சொல்லிக்கொண்டிருந்ததில் ஏகத்துக்கும் எரிச்சலானேன்.  ’’சரிப்பா நில்லு வரேன்’’னு சொன்னதும் மறுபடியுமவன் ’’தாயீ கன்னியின் கண்ணு’? என்றான்

’’அது இருக்கட்டும் அப்படியே’’ என்று  காட்டமாக சொல்லிவிட்டு  புடவைகளையும் பொருட்களையும் கொடுத்தேன்.  ’’தாயீ 3000 வேண்டாம், சின்ன பூசையா, ஒரு ஆயிரத்திலயாவது செஞ்சுபோடலாம் கண்ணு நல்லதில்லை’’ என்றான் மறுபடி. மறுத்துச்சொல்லி அவனை அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..

ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கியிராத ஞாயிறென்பதால் சரண் தருண் இருவரும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். யாராயிருக்கும் அந்த கன்னி? என்று யோசனை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அந்த பின்வீட்டிலிருக்கும் ஒல்லிபிச்சிபெண்ணா? தலைமுடி கொத்தமல்லி கட்டாட்டம் சின்னதா இருக்குமே அந்த தோப்புக்காரர் பொண்ணாயிருக்குமோ?

அடுத்த தெருவில் இருக்கும் போலீஸ்காரர் பெண்ணா? அல்லது அய்யோ, அடிக்கடி சரண் மருமகனா வர கொடுத்து வச்சிருக்கனும்னு சொல்லிட்டே இருக்குமே ஒரு வாயாடி அம்மா, ரெண்டு தெரு தள்ளி அவ பொண்ணா இருந்துருமோ?

சரணை மருமகனாக்கும் விருப்பத்தை என்னிடமே வெளிப்படையாக அந்த அம்மாள் சொல்லிய ஒரு நாளில் நான் மைய்யமாக சிரித்து  அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன். எனக்கு சம்மந்திகூட  சரிக்குச்சரி சண்டை போடத் தெரியனுமே!

ஆனால் அன்று தருண் ’’அட பக்கத்திலேயே செட்டில் ஆயிட்டியே, வெரி குட், கைகொடு’’னு சொல்லிச்சொல்லி அண்ணனை வெறுப்பேற்றியதில் சரண் அரண்டு போய்  கூகிள்  மேப்பில் பாழுங்கிணற்றின் லொகேஷன் தேடிக்கொண்டிருந்தான்.

சரி யாரா இருந்தாலும் சரின்னு சமாதானமாக்கிக்கொண்டேன் என்னை.

ஆனால் முதலில் எழுந்து வந்த தருணிடம் ஆர்வமாக விஷயத்தை சொன்னதும் அண்ணன் மேல கன்னிப்பார்வையா? இருக்கட்டும் ’’எனக்கு என்ன சொன்னான்’’ என்றான் ஆர்வமாக. ’’ஒண்ணுமே சொல்லையே’’ என்றதும் ஒரே சண்டை ’’நீயெல்லாம் ஒரு தாயா? அண்ணனுக்கு ஒரு பார்வைன்னு சொன்னான்னா சின்னவனுக்கு என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா’’ என்று

 சரி குடுகுடுப்பைகாரனின் போன் நம்பர் இல்லாட்டி வாட்ஸ் அப் நம்பர் இருக்கா எடு எடு என்றால் எங்கே போய் எடுக்க? ஏண்டா அநியாயம் பண்ணறே குடுகுடுப்பைகாரன்களுக்கு ஏதுடா போனெல்லாம்?‘’ ’’ஏன் இருக்காதா, அன்னிக்கு பஸ்டாண்டில் ஒரு அம்மா பிச்சை எடுத்தாஙகளே அப்போ அவங்க இடுப்பில் போனை சொருகி வச்சிருந்து எடுத்து பேசினாங்களே அப்போ ஏன் இவங்ககிட்டே இருக்காது, நீதான் கேட்காம விட்டுட்டே! எனக்கு எதாச்சும் கன்னி பார்வை இருந்துன்னா பார்த்து மேல எதாச்சும் செஞ்சிருப்பேனே’’ என்று அவன் ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருந்தான்

சரண் எழுந்துவந்ததும் விஷயத்தை சொன்னோம் சிடு சிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு ’’நீ என்ன கன்னின்னா, கன்னிப்பொண்ணுன்னு நினச்சுட்டு இருக்கியா, அவன் சொன்னது எதாச்சும் கன்னி தெய்வமா இருக்கும்  எப்படியாச்சும் உன்கிட்ட ஒரு ஐயாயிரம் தேத்தலாம்னு பார்த்துருக்கான் நீ தப்பிச்சுட்டே, அவ்வளவுதான், போம்மா’’ என்றான்’

அட அவ்வளவுதானா? ஜக்கம்மா என்ன இப்படி பண்ணிட்டாளே? என்ன என்னமோ நினச்சு சந்தோஷப்பட்டாச்சு அதுக்குள்ள.

 இன்னுமே தருண் அதே குடுகுடுப்பைக்காரனை வீதிகளில் அவ்வபோது தேடுவான், அவனுக்கும் பார்வை எதாவது பட்டிருக்கா என்று தெரிந்துகொள்ள.

உண்மையில் தருணின் பார்வைகள் பட்டிருக்கும் ஏராளமான பெண்களின் வீட்டில் அவற்றை எடுக்க பூசை செய்யவேண்டி இருக்குமென்பதை குடுகுடுப்பைக்காரன் தெரிந்துகொண்டால் அவன் காட்டில் மழைதான்.

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑