இன்று காலை முதல்வரிடமிருந்து சிறப்பு பேச்சாளரின் உரையொன்று இருப்பதாக தகவல் வந்தது, இன்று மாணவர்களுக்கு கல்லூரியில் கடைசி நாள் எனவே முக்கியமாக ஏதேனும் பேசும்படியான ஒருவரே வந்திருப்பாரென்றெண்ணினேன். பெயரை தெரிந்துகொண்டதும் ஆச்சர்யமாயிருந்தது. அவரை பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன். வாரமலரில் எல்லாம் மொக்கை கவிதைகளா எழுதுவாரு சரி எழுத்துதான் அப்படி பேச்சு பேச்சாயிருக்குமோ என்னமோ,  என்னதான் பேசறாருன்னு பார்ப்போம்னு போனேன்.

நல்ல கூட்டம் அரங்கில்  MOC யில் அவரைபத்தி ஆஹா ஓஹொன்னு அறிமுகப்படுத்த துவங்கினப்போ அவர் கையை அமர்த்தலா காட்டி நிறுத்தும்படியும் சுருக்கமா சொல்லலைன்னா  அவரின் சாதனைகளின் பட்டியல் தான் பேசவே நேரமின்றி  நீண்டுகொண்டே போயிரும்னு சொன்னாரு ஆச்சர்யமா இருந்துது எனக்கு சபையில் இப்படி ஒருத்தர்  அப்பட்டமான தற்புகழ்ச்சியுடன் நடந்துக்க முடியுங்கறதை பார்த்துட்டு

நல்ல கருப்பாக்கப்பட்ட தலைமுடி, உன்னத உடை, அடுக்கடுக்கான ஒப்பனையுடன் (குழாயடியில் உட்கார்த்திவச்சு தேச்சு கழுவிறலாமான்னு ஆத்திரமா இருந்துது)  மேடைக்கு வந்தார், பல பேச்சாளர்கள் போடியத்திற்கு வந்ததும்  அவங்க உயரத்துக்கேற்றபடி மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுவாங்க பார்த்திருப்போம். இவர் கொஞ்சம் கூடுதலா  இரண்டு கைகளாலும் போடியத்தையே தூக்கி நகர்த்தி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டாரு அதாவது மேடையெல்லாம் தனக்கு தண்ணி பட்ட பாடுன்னு சொல்லறாரு போல . ஆரம்பமே எனக்கு பீதியாக இருந்துது

ஒரு மேடையில் இளைஞர்களுக்கு என்னவெல்லாம் சொல்லவேண்டியதில்லையோ அதையெல்லாம்  உற்சாகமா சொல்லிட்டு இருந்தாரு. பல கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்களுக்கு மேல் இவர் சந்தித்து உரையாடியிருக்காருன்னும் இன்னிக்கு நாங்கள்ளாம் அதிர்ஷ்டம் செய்திருப்பதால் அவரை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடச்சிருக்குனு வேற அவரே சொல்லிக்கிட்டாரு. இத்தனை வெட்கம் கெட்டவரை சமீபத்தில் நான் சந்தித்திருக்கவில்லை

கிராமப்புறத்தைச் சேர்ந்த வெளியுலகம் அவ்வளவாக தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் குறைந்த மாணவர்களிடையே, கல்லூரியின் கடைசி நாள் அன்று எப்படி அழகா அருமையா பேசலாம். இவரானா துவங்கினதுமே ’’உப்பில்லாம கூட சாப்பிட்டுரலாம் ஆனா நட்பில்லாம வாழமுடியாது’’ன்னாரு. ’’கண்ணீரை துடைப்பவனல்ல நண்பன் கண்ணிரே வராமல் பார்த்துக்கொள்பவனே நண்பன் ’’ இப்படி ஒரே நட்பு மழையா இருந்துது

ஒரே கைதட்டல், அதில்  குஷியாகிட்டாரு மீண்டும் நட்பு குறித்து தான் எழுதின மொண்ணைக்கவிதைகளா எடுத்து விட்டுகிட்டே இருந்தாரு

இடையிடையே வாட்ஸ் அப்பில் வந்த சில  நான்காம் தர ஜோக்குகள் வேறு

’ அவர் பேச வந்த தலைப்பு ’’தன்னம்பிக்கையே வெற்றி ‘’

தான் எழுதிய அரியர்ஸ் இல்லா மனிதன் அரை மனிதன் என்னும் பழஞ்சொல்லை அத்தனை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கிட்டாரு

பசங்களும் ஓயாம கைதட்டிகிட்டே இருக்காங்க

தானும் அரியர் வாங்கினவன்தானென்றும் பின்னர் தமிழின் மேல் உளள காதலினால்  அதை படித்துப்படித்து இப்படி உயரத்துக்கு வந்துட்டதாவும் சொன்னார். அவர் மேடையிலிருப்பதை உயரம்னு வேன்னா சொல்லிடலாம் மத்தபடி  அவர் உயரத்துக்கு வந்ததுன்னு சொல்லறதெல்லாம் மிகு புனைவு.  எல்லா பேரசிரியர்களும் சிரிச்சுட்டு கையடிச்சுகிட்டு இருக்காங்க எனக்கானா வயத்தை பிசையுது

என் தீயூழ் நான் முன்னாடி வேற உட்கார்ந்துட்டேன். கொடுமையிலும் கூடுதல் கொடுமையா அப்பப்போ என்னையும் பார்த்து ’’என்ன மிஸ் நான் சொல்லறது சரிதானே’’ங்கறார். சும்மாவே என்னை மிஸ் னு சொன்னா எனக்கு பத்திட்டு வரும் இதில் இவர் வேறெ

அப்பொவெல்லாம் என்னால அமைதியா புன்னகைக்க முடிஞ்சதுங்கறதைத்தான் நான் இன்னமும் வியந்து நினச்சுக்கறேன். எனக்கும் முதிர்ச்சி வந்துருச்சு . முதிர்ச்சி மட்டுமல்ல ஏறக்குறைய இன்னிக்கு அந்த முன்வரிசையில் எந்த உணர்வையும் வெளிக்காட்டிக்காம விண்  விண் னுன்னு தெறிக்கற தலைவேதனையை தாங்கிகிட்டு அவ்வப்பொது அவர் என்னை பார்த்து எதாச்சும் சொல்ல நான் அழகா மென்மையா புன்னகைச்சுட்டும் இருந்தேன். ஒரு மாதிரி ஊழ்க நிலை அது

என் வாழ்வில் இந்த 2 மணி நேரமே என்னால் தாங்க முடியாது என்னும் எல்லையையும் தாண்டி நான் தாங்கிட்டும் சகிச்சுட்டும் இருந்த காலம்

உயரமென்றால் எவெரெஸ்ட் நீ உயரனும்னா நெவர் ரெஸ்ட் இல்லைனா யு வில் ரஸ்ட் அண்ட் பிகம்  ஏ  டஸ்ட் என்னும் பழமொழியை

இறக்கை இருக்கும் வரையிலும் பட்டாம்பூச்சிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்னும் தான் எழுதிய பிரபல கவிதையை

சாகும் போதும் கைதட்டல் வாங்கிட்டு சாகும் கொசுவைப்போல் இருக்கனும்னு அறிவுரைகளை

தான் எழுதியிருக்கும் சிகரங்களை தொட்டுவிடு என்னும் (தலைப்பையே மாற்றி மாற்றி வைத்து வெளியிட்டிருக்கும் ) 67 புத்தகங்களை

அவற்றை வாங்கி மாணவர்கள் படிச்சு உலக வாழ்வில் உய்ய வேண்டியதன் அவசியத்தை

கலாமுடன் தனக்கிருந்த நெருக்கத்தை ,சில பல அவருக்கு மனப்படமாகி இருந்த திருக்குறள்களை

இப்படி தாளிச்சுக்கொட்டிட்டு இருந்தார்

பேசும்போது கைகளை பலமாக  ஆட்டுக்கல்லில் மாவாட்டி தோண்டி எடுப்பது போலவும், பெரிய கிரைண்டரின் குளவிக்கல்லை தூக்க முடியாமல் தூக்குவது போலவும் கரகரவென்று எதையோ  கையில்  வைத்து சுற்றுவது போலவும், கம்பிகளில் சிக்கிக்கொண்ட மாஞ்சா கயிற்றை விடுவித்து பட்டத்தை எடுப்பது போலவும் செய்கைகளும் அல்லது சேஷ்டைகளும் செய்துகொண்டிருந்தார்

குரலையும் அவ்வபொது MR ராதா போல திடீரென்று உயர்த்தி உச்சஸ்தாயியிலும், பின்னர் கிசுகிசுப்பாக காதலனிடமோ காதலியிடமோ ரகசியமாய் பேசும் குழைவான கொஞ்சும் குரலிலும் திடீரென்று முழங்கியும் மாடுலேஷனில் வித்தியாசம் வேறு காட்டிக்கொண்டிருந்தார்

 இவையனைத்துக்கும் மேல் அவ்வபோது முஷ்டியை மடக்கி போடியத்தை படார் படாரென பலமாக் குத்திக்கொண்டும் ஆவேசமாகவும் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் எனக்கு வயிற்றில் உப்பு புளி காரம் எல்லாம் சேர்த்து கலக்கினாற்போலிருந்தது

இறுதியாக என்பதையே பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாரே ஒழிய அந்த இறுதியே  பேச்சில் வரக்காணோம். இந்த லட்சணத்தில் மேஜர் சுந்தரராஜனை போல தமிழில் சொன்னதையே ஆங்கிலத்திலும் அடுத்தடுத்து சொல்லி ரெண்டிற்கும் கைதட்டல் வேறு வாங்கிக்கொண்டிருத்னார்

’’செத்த மீனைத்தான் ஆற்றுத்தண்ணீர் இழுத்துக்கொண்டு போகும் உயிருள்ள மீன்தான் நீரை எதிர்த்துச்செல்லும் எனவே’’  எனற போது அவர் முடிச்சுட்டாரென்றெ நான் உளம் மகிழ்ந்தேன்

ஆனால் அதான் இல்லை ’’எனவே, எப்படி எதிர்த்து வாழ்வதென்று’’ கற்பிக்க துவங்கிவிட்டார்

பின்னர் போன ஜென்மத்து குரு சிஷ்ய ஜோக்குகளை எடுத்து விட்டார்

கேள்விகளை வேறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுஇருந்தார் இடைக்கிடைக்கு

’’ஒரு வரிதான் வாசிக்க முடியும்னா ஆத்திசூடி  படி

இரண்டென்றால் குறள்  படி

மூன்றென்றால் விவேகானந்தரின் பொன்மொழிகள்   படி

நான்கு வரிகளே வாசிக்க முடியும்னா நாலடியார்  படி

எதுவுமே வாசிக்க முடியலைனா செத்து மடி’’

இதை அவரெழுதியதாகச்சொன்னதில் எனக்கு விரோதமெல்லாமில்லை என்ன என்னவோ யார் யாரோவெல்லாம் எழுதறாங்களே இப்போல்லாம் ஆனா இதை அவர் எழுதின கவிதைங்கறாரே? அதைத்தான் தாங்கவே முடியாம கண்ணில் ஜலம் வச்சுக்கிட்டேன். செய் அல்லது செத்து மடிங்கறதை மகாத்மாவுக்கு அடுத்து தானே சொல்லியிருப்பதாகவும் உபரித்தகவலை சொன்னார்

இதை மட்டும் 3 முறை திரும்ப திரும்ப சொல்லிவிட்டு நான்காவது முறையாக  முதல் பாதி இவரும் மறுபாதி மாணவர்களுமா சொல்லச்சொல்லி fill in the blanks  விளையாட்டு வேற நடத்தினார்

நான் கைதட்டவேயில்லை எனபதை அவவ்போது ஓரக்கண்ணால் கவனித்தார் எனினும் என் முகத்திலிருந்த மந்தகாச புன்னகையில் அவரை நான் மதிக்கிறேன் அல்லது ரசிக்கிறேன் என்றே அவர் யூகித்துக்கொண்டிருந்தார்

இந்தம்மா நம்ம பேச்சை ரொம்ப கவனமா ஆழ்ந்து கவனிக்கறாங்க என்றும் புளகாங்கிதமடைந்திருக்கக்கூடும்

ஒருவழியாக அவரின் பலத்த கைதட்டல்களுக்கிடையேயான பேச்சு முடிந்ததும் நான் முதல் ஆளாக வெளியெ வந்து லேபில் இருந்த முதலுதவி பெட்டியிலிருந்து பஞ்சு எடுத்து காதில் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்துகொண்டேன்

21 அன்று நடக்கும் ஜெ வின் கட்டணக்கூட்டதிற்கு எப்படியும் இடம் கிடைக்கனும் என்றும் கிடைத்தால் இன்றைய பேச்சாளரின் பேச்சை  ரசித்துக்கொண்டிருந்த பேராசிரியர்களில் யாருக்காவது மொட்டை போடுவதாகவும் குலசாமிக்கு வேண்டிக்கொண்டேன்

ஜெ வின் பேச்சைக்கேட்பதுதன் இன்னிக்கு நடந்த அநீதிக்கான  ஆகச்சிறந்த பிழையீடு அல்லது பிராயசித்தமாக இருக்கும்

அலுவலக்தில் பேச்சாளருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கவரினுள்ளே எத்தனை  சன்மானமிருந்ததுன்னு கேட்கலமான்னு நினச்சுட்டு உடன் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். தெரிஞ்சுகிட்டேன்னா ரொம்ப காலத்துக்கு  தூக்கம் வராது எனக்கு

ஜெ சொல்லுவாரில்லியா தீயூழ்னு அடிக்கடி. இன்னிக்கு அந்த தீயுழை மிக அருகில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்துகிட்டு இருந்தேன்.

பி கு

 இந்த பேச்சாளரின், எழுத்தாளரின் நூல்களில் பன்முகத்தன்மைன்னு ஒரு முனைவர் பட்ட ஆய்வும் நடந்திருக்காம்

கலி முத்திடுச்சுன்னு கேட்டுருக்கோம் இப்போதான் நிதர்சனமா தெரியுது இதெல்லாம் எழுதினப்புறம் தான் நெஞ்சில் என்னவோ கல்லாட்டம் ஒண்ணு அடைச்சுகிட்டு இருந்தது அதை இறக்கி வச்சாப்பல இருக்கு