லோகமாதேவியின் பதிவுகள்

Month: October 2022

செளசெள!

Image result for chayote

மனிதகுலம்  ஏறத்தாழ 6000 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்களை உணவுத்தேவைக்காக நம்பியுள்ளது, இவற்றில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுபவை 170 பயிர்கள் மட்டுமே. இவற்றிலும் 30  பயிர்கள் மட்டுமே அதிக அளவில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டு  பயன்படுத்தப்படுகின்றன   ஒப்பீட்டளவில் சிறிய கவனம் கூட அளிக்கப்படாத பல முக்கிய காய் கனி வகைகளை அளிக்கும்  ஏராளமான பயிர்கள் உலகின் கவனத்துக்கே வராமல் இருக்கின்றன..  

சத்துக்கள் நிறைந்த  இத்தகைய உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பயிர்கள் தேசிய அல்லது பிராந்திய அளவில் பிரதானமானவை. அவற்றில் ஒன்றுதான் செள செள காய்.

Image result for chayote

 பூசணிக்காய் குடும்பமான குக்கர்பிட்டேசியின் சுரைக்காய், புடலை, பீர்க்கன், தர்பூசணி, பாகல் போன்றவை அதிகம் புழக்கத்தில் இருப்பவை. அதே குடும்பத்தில் இருக்கும் செள செள எனப்படும் காய் தென் தமிழகத்தில் அரிதாகவே  உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. 

 ஆங்கிலத்தில் cho cho , choko, mirliton, chayote  என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Sechium edule.

இதய வடிவ இலைகளும், பற்றுக்கம்பிச்சுருள்களும், வேர்க்கிழங்குகளும் கொண்ட  செள செள  ஒரு ஏறுகொடித்தாவரம். ஆண் மலர்கள் கொத்தாகவும் பெண் மலர் ஒற்றையாகவும் தனித்தனியே ஒரே கொடியில் அமைந்திருக்கும். தண்டுகளில் நார் நிரம்பியிருக்கும்.

See the source image

உணவுக்காக சந்தைப்படுத்தப்படும் செள செள காய்கள் எனப்படுவது இதன் கனிகளே. இவை ஒழுங்கற்ற பேரிக்காய் வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக கனிகளில் முட்கள் காணப்படும். முட்களின்றியும், அடர்பச்சையிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும், அளவில் சிறிதாகவும் கூட காய்கள் இருக்கும்.  நீர் நிரம்பிய, சதைப்பற்றான காய்கள் இனிப்புச்சுவையுடைய பெரிய ஒற்றை விதை கொண்டிருக்கும்.

மெக்ஸிகோவை சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இதன் ஒரு கொடி வருடத்திற்கு 80லிருந்து 100 காய்களையும் 25 கிலோ வேர்க்கிழங்குகளையும்  கொடுக்கும். 

 உலகெங்கும் இதன் பல வழங்கு பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. chayote, christophene, vegetable pear, mirliton, merleton choko ( ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில்), starprecianté, citrayota, citrayote (எக்குவடோர்  மற்றும் கொலம்பியா), chuchu (பிரேசில்), machucha, caiota, pipinela (போர்ச்சுக்கல்), chow chow (இந்தியா), cho cho (ஜமைக்கா), Sayote (பிலிப்பைன்ஸ்), güisquil (குவாத்தமாலா), pear squash / iskus(நேபாள்). 

இவை சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய்/சொச்சக்காய்  என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன. Custard marrow என்னும் இதன் ஆங்கிலப்பெயர்களில் ஒன்றுதான் தமிழில் மேராக்காய் ஆகி இருக்கிறது 

Image result for chayote foods

இதன் அறிவியல் பெயரின் பேரினப்பெயரான  ’Sechium’ என்பது  வெள்ளரிக்காயை குறிக்கும் பண்டைய கிரேக்கச் சொல்லான ’síkyos’  என்பதிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப்பெயரான  ’edule’’  என்பது உண்ணத்தகுந்த என்று பொருள்படும்.

செள செள உற்பத்தியில் மெக்ஸிகோவும் பிரேசிலும் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில்  அவகேடோ, தக்காளி மற்றும் காபிக்கொட்டைகளுக்கு அடுத்த படியாக செளசெள அதிகம் விரும்பப்படும் நான்காவது உணவுப்பொருளாக இருக்கிறது.

இது அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும்கொண்ட சுவையான காய்களும்,“Quelites” எனப்படும் இதன் தளிரிலைகளும் “chayotextle” எனப்படும் வேர்க்கிழங்குகளும்  இங்கு விரும்பி உண்ணப்படுகிறது

இதன் இலைகளிலும், வேர்க்கிழங்குகளிலும், காயிலும் ஏராளமான கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் பல வைட்டமின்களும் உள்ளன.

Image result for Chayote Squash Mirlitons

இவை வேகவைத்தும், ஊறுகாய்களாகவும், அவித்தும், எண்ணையில் பொரித்தும் உண்ணப்படுகின்றன. காயின் அனைத்துப்பகுதிகளுமே உண்ணத்தகுந்தவை என்பதால் இதன் மெல்லிய தோலையும் விதையையும் நீக்க வேண்டியதில்லை. செள செளெவின் தோல் மற்றும் விதையையும்  சேர்த்து சமைத்தும், சமைக்காமல் பச்சையாகவும் உண்ணலாம்

இக்கொடியின்  காய் உள்ளிட்ட அனைத்துபாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை

Image result for Chayote Squash white

இவை சிறுநீர் பெருக்கும், சிறுநீரக கற்களுக்கும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்புரியும், இருதயத்தை பாதுகாக்கும், குருதிக்கொதிப்பை கட்டுப்படுத்தும் மற்றும் உடலை வலுப்படுத்தும்.

செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. தண்டின் வெட்டுத் துண்டுகளையும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்

See the source image

 பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருங்காலத்திற்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத இனங்களின் (Neglected and underutilized species-NUS)   பரவலான மீள் உபயோகங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.

See the source image

செள செள்  போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, அனைத்துக் காலநிலைகளிலும் வளரும் இயல்பு கொண்ட, நோய் எதிர்ப்புதிறன் மிக்க, லாபம்அளிக்கும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய  எளிதில் வளர்க்க முடியும் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதும், அவற்றின் நுண்சத்துக்கள் நிறைந்த காய்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதும் வருங்காலத்துக்கான உணவுசார்ந்த அணுகுமுறைகளில்  மிக முக்கியமானவை. 

Image result for Chayote Fruit

ரிஸ்ட்ரா!

ரிஸ்ட்ரா- Ristra

 மிளகாய்களை  உலகெங்கும் அறிமுகம் செய்த பெருமை கிரிஸ்டோஃபர் கொலம்பஸைத்தான் சேரும். அவரே மெக்ஸிகோவிலிருந்து அவற்றை பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார் என்கிறது வரலாறு.

மிளகாய்களின் பிறப்பிடம் மெக்ஸிகோ என்று சொல்லப்பட்டாலும்.  தாவரவியல் ஆய்வாளர்கள்  மிளகாய்கள் மெக்ஸிகோவிலிருந்து அல்ல பொலிவியாவிலிருந்தே தோன்றின என்றும் அங்கிருந்து அவை  பறவைகளின் மூலம் மெக்சிகோவிற்கு அறிமுகமாகியிருக்கும் என்றும் கருதுகிறார்கள். மிளகாயின் காரம் மனிதர்களைப் போல் பறவைகளுக்கு உரைப்பதில்லை என்பதும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.

தக்காளி உருளைக்கிழங்கின் குடும்பமான சொலனேசியை சேர்ந்த மிளகாய் ஆங்கிலத்தில் chillies, chiles அல்லது peppers என அழைக்கப்படுகின்றன

 கிரிஸ்டோஃபர்  வருமுன்னரே  பழங்குடிகளான அஸ்டெக்குகள் மற்றும் மாயன்களின்  கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாதபடி ஒன்றி இருந்தது மிளகாயும் அதன் காரமும்.

 மிளகாய்கள்  உணவுக்கான உபயோகங்களுக்கு மட்டுமல்லாது அவற்றின் மருத்துவ குணங்களுக்காகவும்,  பூச்சிகள் அண்டாமல் இருக்க வீடுகளுக்கு புகை போடவும்  மெக்ஸிகோவில் பெரிதும் உபயோகத்திலிருந்தன. மெக்ஸிகோவின் டெவாகனா பள்ளத்தாக்கில் (Tehuacán Valley)  மிளகாய்கள் கிமு  50000 வருடங்களுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்தற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

 மெக்ஸிகோவின் உணவுகளில் மிளகாய் பிராதான இடம்பெற்றிருக்கிறது உலர்ந்தவைகளும்  புத்தம் புதியவைகளுமாக பலநூறு மிளகாய் வகைகள் மெக்ஸிகோவில்  விளைந்து,பயன்பாட்டிலும் உள்ளன.  மெக்ஸிகோவின் வறண்ட, வெப்பம் மிகுந்த காலநிலை மிளகாய்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அவற்றின் பூச்சித்தாக்குதலுக்கு எதிராகவும் இருப்பதால் அங்கே மிளகாய்கள் அதிகம் விளைகின்றன

மெக்ஸிகோவில் மிளகாய்கள் அனைத்துவிதமான   உணவுகளிலும் சேர்க்கப்படும் சாக்கலேட்டுகளிலும், பானங்களிலும், இனிப்புகளிலும் மட்டுமல்லாது ஊறுகாய்களாகவும், பசையாகவும் பொடிகளாகவும் இவை கிடைக்கின்றன

 மெக்ஸிகொ பழங்குடிகள் மிளகாய்கள் உலர்ந்திருக்கையில் அவற்றை  சேமித்து வைக்கவும்  தொலைதூரங்ககளுக்கு எடுத்துச் செல்லவும் வசதியாக இருப்பதை கண்டறிந்திருந்தார்கள் அவ்வாறு உலர்ந்த மிளகாய்களை கட்டு கட்டாக சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அவ்வழக்கம் அவர்களின்  வளமையின் குறியீடாகவே காலப்போக்கில் மாறிப்போனது. 

இன்றளவிலும் மெக்ஸிகோ நகரின் பொது இடங்களில். அலங்கார வளைவுகளில்,  வணிக வளாகங்களில், வீடுகளின் முகப்புகளில் என்று பார்வையில் படும்படி உலர்மிளகாய்களின்  நீண்ட கொத்துக்களை கயிற்றில் அல்லது நாரில்  கட்டி அலங்காரமாக தொங்கவிடும் பழக்கம் தொடர்கிறது.

   

இதுபோன்று அலங்காரமாக தொங்கவிடப்பட்டிருக்கும் மிளகாய் கொத்துக்கள் ஆங்கிலத்தில் Ristras எனப்படுகின்றன. இவை வரவேற்புக்காகவும், வளமை மற்றும் செல்வத்தின் அறிகுறியாகவும் அதிர்ஷ்டம் தரும் என்னும் நம்பிக்கையின் பேரிலும் இப்படி பார்வைக்கு வைக்கப்படுகிறது. இவ்வாறு ரிஸ்ட்ராக்களாக்கப்பட்ட மிளகாய்கள் தீய  சக்திகளை விரட்டும் என்றும் அடுத்த வருட  விளைச்சலை பெருக்கும் எனவும் மெக்சிகோ மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது

 ரிஸ்ட்ரா என்றால் ஸ்பானிய மொழியில் ’ கோர்த்த மணி’ என்று பொருள்   தென்மேற்கு அமெரிக்காவின் அடையாளங்களாக  கருதப்படும்’ சகுரா கள்ளி, கெளபாய்  பூட்ஸ்’ இவற்றுடன் மிளகாய் ரிஸ்ட்ராக்களும் இருக்கின்றன.

 தரமான தேர்ந்தெடுத்த  மிளகாய்களை நன்கு வெயிலில் உலர வைத்து கயிறுகளில் இறுக்கமாக மாலை தொடுப்பதுபோல் கட்டி பல வடிவங்களில் வட்டமாகவும், நீளமாகவும், தனித்தனி கொத்துக்களாகவும்,  பலகொத்துக்களை ஒன்றிணைத்தும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படும். இவற்றை பல வருடங்களுக்கு  சேமித்து வைக்க முடியும்.

பல வீடுகளில் இவ்வாறு உலர செய்து ரிஸ்ட்ராக்களாக இருக்கும் மிளகாய்களை தேவைப்படும்போது  சமையலுக்கும் பயன்படுத்துவதுண்டு.

  உலகின் பல பகுதிகளிலும் இப்படி ரிஸ்ட்ராக்கள்  காய்,கனிகளை கொண்டு  உருவாக்கப்படுகின்றன. பூண்டு ரிஷ்ட்ராக்கள் தென்னிந்தியா உள்ளிட்ட  பல நாடுகளிலும் உள்ளன.  ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் முற்றிய மக்காச்சோளக்திர்களிலும், இலங்கையில் நிலக்கடலை மற்றும் பூண்டிலும் இந்தியாவில் கேரளாவில் முற்றிய நெற்கதிரிலும்  தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் நெற்றுத்தேங்காய்களிலும் ரிஸ்ட்ராக்கள் உருவாக்கப்படுகின்றன.

மெக்சிகோவிற்கு இனி செல்பவர்கள் மிளகாய் ரிஸ்ட்ராக்களை அவசியம் கவனித்து பார்க்கலாம்,

நாமனைவருமே  அந்தந்த பிரதேசத்தின் பிரபல காய்கறிகளை  உலர செய்து ரிஸ்ட்ராக்களை உருவாக்கலாம். இணைய வர்த்தகத்திலும் ரிஸ்ட்ராக்கள் விற்பனையாகின்றன.

ஆலை இல்லா ஊரில்!

’’ஆலை இல்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை’’ என்னும் முதுமொழியை இலுப்பை மரத்தின் இனிப்புச் சுவை கொண்ட மலர்களால் தான் புழக்கத்தில் வந்த்து ,

 இலுப்பை மரம், இருப்பை,  குலிகம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. சப்போட்டேசி  குடும்பத்தை சேர்ந்த இம்மரத்தின் ஆங்கில பொதுப்பெயர்; Butter  tree, mahwa,, தாவர அறிவியல் பெயர்; Madhuca longifolia, இணைப்பெயர்கள்;.Bassia longifolia, Madhuca indica

இதன் தாயகம்; இந்தியா( தமிழகம்). இம்மரங்களின் மலரும்  காலம் – மார்ச்- ஏப்ரல்

இந்தியா முழுவதும் இலையுதிர் காடுகளில் பரவலாக காணப்படும், இம்மரங்கள் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், வட மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும், மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் காணப்படுகிறது.

மிக உயராமாக நூறு அடிக்கு மேல் வளரும் இலுப்பைமரம் கோடை காலத்தில் இலைகளை உதிர்த்து விடும். அச்சமயத்தில் சாறு நிரம்பிய அழகிய  வெண்ணிற மலர்கள் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

இரும்பை மகாளேஸ்வரர் கோயில், இலுப்பைப்பட்டு நீலகண்டேஸ்வரர் கோயில், திருச்செங்கோட்டில் உள்ள திருக்கொடிமாட செங்குன்றூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு கோயில்களின் புனித மரமாக இலுப்பை மரம் உள்ளது. வள்ளுவர் மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் பிறந்தார் என்று நம்பப்படுகிறது, எனவே ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் சன்னதியின் கருவறை மரமாகவும் இந்த இலுப்பை மரமே உள்ளது.

மஹுவா மரத்தின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, பிரிட்டிஷ் இந்தியாவின்  வன நிர்வாகிகள்  அதை வெட்டுவதற்கு தடை விதிதிருந்தார்கள். ஆது இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இதன் விளைவாக, மஹுவா மரங்கள்  இந்திய வயல்களிலும் காடுகளிலும் மிக அதிக அளவில் இருக்கின்றன.  இந்திய வன மரங்களில் இவை மிகப் பழமையானவை மற்றும் மிகவும் பொதுவானவையும் கூட.

இவை குட்டையான அடித்தண்டை கொண்டிருக்கும். சொற சொறப்பான இலைகள் நீள் முட்டை வடிவில் கூர் நுனியுடன் இருக்கும். மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில்,  இந்த ​​மஹுவா மரம்  என்றூம் அழைக்கப்படும்  இலுப்பை சிறிய உருண்டையான . பச்சை-வெள்ளையில் மலர்களை உருவாக்கும். சிறிய அழகிய மணிகளை போல  நறுமணம் கொண்ட மலர்கள் கொத்துக்கொத்தாக  மலரும். முட்டை வடிவ சதைப்பற்றான கனிகள் 1 லிருந்து 4  தட்டையான எண்ணெய் நிரம்பிய பழுப்பு விதைகளை கொண்டிருக்கும்

விதைகளிலிருந்து எடுக்கப்படும் மருத்துவ உபயோகங்கள் கொண்ட .இலுப்பை எண்ணெய் அடுப்பு மற்றும் விளக்குகள் எரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது..இலுப்பை புண்ணாக்கு நல்ல உரமாகவும் பயனாகிறது. “மஹுவா எண்ணெய் தோல் நோய், வாத நோய் மற்றும் தலைவலி ஆகியவற்றின் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.   இலுப்பை எண்ணெய் பசு நெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது.  

டஸ்ஸர் பட்டை (tassar silk), உருவாக்கும் அந்துப்பூச்சிகளுக்கு (Antheraea paphia)  இலுப்பை இலைகள் தான் உணவாகின்றன இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் கால்நடை தீவனமாகவும் பயனாகின்றன  

மஞ்சள் நிற கனிகளும் உண்ணத்தவையே. .கனிகள்  சமையலிலும் உபயோகப்படுத்தப்ப்டும்.

மஹுவா இந்தியப் பழங்குடியினரிடையே புனிதமான மரமாக கருதப்படுகிறது. இது ‘வாழ்க்கை மரம்’ என்று அழைக்கப்படுகிறது. மலர்கள் மட்டும் அல்ல, மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுகிறது. பழத்தின் ஓடு கூட  சில பழங்குடி இனங்களில் இறுதிச் சடங்குகளின் போது பயன்படுத்தப்படுகிறது.

இனிப்புசாறு நிறைந்திருக்கும் இம்மலர்களுடன் வங்காளத்தில் மட்டும் விளையும் gobindo bhog  என்னும் அரிசிச்சோற்றை கலந்து சுவையான பாயசம்  பண்டிகைக்காலங்களில் செய்யப்படும்.

mahua butter

மலர்ச்சாற்றை பிற மூலிகைகளுடன் நொதிக்க வைத்து உண்டாக்கப்படும்  மஹுவா மது   பல  ஆந்திர மற்றும் தமிழக கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது .3 அல்லது 4 மணி நேரத்தில்  மஹுவா மலர் மது  கிரமவாசிகளாலும் பழங்குடியினரலும் எளிதாக  உருவாக்கப்படுகிறது.

India’s Adivasi Alcohol, Mahua, is Set to Hit Liquor Stores in Goa Next Week

மஹுவா மலர்கள் பழங்குடியினரால் பறிக்கப்படுவதில்லை இரவில் மரங்களுக்கடியில்   விரிக்கப்பட்டிருக்கும் துணிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் கூடைகளிலும் உதிரும் மலர்களை அதிகாலையில் சேகரித்துக்கொள்வார்கள்

கல்கத்தாவில் மஹுவா மலர்கள் அடைக்கப்பட்ட பூரிகளும் மஹுவா  மலர்களை உலர்த்திப்பொடித்த மாவில் செய்யப்படும் இனிப்புக்களும் பிரசித்தம். சில கிராமங்களில் மலர்களிலிருந்து ஜாமும் ஊறூகாயும் தயரிக்கப்படுகின்றன.

மருத்துவ ரீதியாகவும் இம்மரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. தொழுநோயைக் குணப்படுத்தவும், காயங்களைக் குணப்படுத்தவும் மரப்பட்டை பயன்படுகிறது, இருமல், பித்தம் மற்றும் இதயக் கோளாறுகளைப் போக்கமலர்கள்  உபயோகிக்கப்படுகின்றன.

உலர் மஹுவா மலர்கள் அமேஸான் உள்ளிட அனைத்து ஆன்லைன் வர்த்தகத்திலும் கிடைக்கின்றது.

கொண்டைக்கடலை

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மிக முக்கிய புரத உணவாக இருப்பது கொண்டைக்கடலை எனப்படும் chick pea . பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த  இதன் அறிவியல் பெயர் Cicer arietinum. சென்னா, கடலை, கொண்டைக்கடலை, சுண்டல் கடலை என்று தமிழில் அழைக்கப்படும் இதன் பிறமொழிப் பெயர்கள்   chole, gram,  Bengal gram, garbanzo, garbanzo bean , Egyptian pea, ceci, cece & channa.Kichererbsen

உலகின் மிகப்பழமையான பயறு வகை தாவரங்களிலொன்றான கொண்டைக்கடலையின் 7500 வருட பழமையான தொல்எச்சங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைத்திருக்கின்றன. 10000 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டைக்கடலை தாவரம் துருக்கியில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவை பயிராகிக்கொண்டிருக்கின்றன. மொத்த உலக உற்பத்தியில் 70 சதவிதத்தை அளிக்கும் இந்தியாவே கொண்டைக்கடலையின்  உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

 உலகின் மூன்றாவது முக்கிய பயறு வகையான இவற்றில் அளவில் சிறிய அடர் நிறம் கொண்டவை நாட்டு ரகங்கள் (Cicer arietinum desi varity). முதிராக்காய்களின் கடலைகள் அதிக சத்துக்களுடன் சிறியதாக பச்சை நிறத்திலும் கிடைக்கின்றன.

அளவில் பெரிய நாட்டு வகைகளைக்காட்டிலும் சற்று மென்மையான, வெளுத்த  ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்தவகை காபூலி வகை எனப்படும்.Cicer kabulium -( kabuli variety)

பல்லாண்டுகளாக இவை இரண்டுமட்டுமே புழக்கத்தில் இருந்தன . தற்போது தெற்கு இத்தாலியில் மட்டும் விளைவிக்கப்படும் Ceci neri என்னும் அறிவியல் பெயருடைய கருப்பு கொண்டைக்கடலைகளும் சந்தையில் உள்ளன.

Ceci neri

இவற்றை வேகவைத்தும், வறுத்தும்,  கடலைமாவாக பொடித்தும்  தாயாரிக்கப்படும்  கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  பல வகை உணவுகள் உலகெங்கும்   மக்களின் விருப்ப உணவுகளாக இருக்கின்றன..

இவற்றை தோல் நீக்கி  உலரவைத்து இரண்டாக உடைத்ததுதான் கடலைப்பருப்பு. வறுத்து உடைத்தவையே வறுகடலை அல்லது பொட்டுக்கடலை

வறுத்து அரைக்கப்படும் கொண்டைக்கடலை  காபியாகவும் அருந்தப்படுகிறது முதல் உலகப்போரின் போது உண்டான காபி தட்டுப்பாட்டினால் இவை காபிக்கொட்டையை போலவே வறுத்தரைக்கப்பட்டு காபி தயாரிக்கப்பட்டது. இந்த பானம் இன்றும் உலகின் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் இவை வறட்சியையும் தாங்கும் திறன் கொண்டவை. 20 லிருந்து 60 செமீ உயரம் வரை வளரும் இவை இறகுக்கூட்டிலைகளையும் வெள்ளை அல்லது சிவப்பு சிறு  மலர்களையும் கொண்டிருக்கும். சிறு படகு போன்ற பச்சைக்காய்களில்  ஒன்று அல்லது மூன்று விதைகள் எனப்படும் சிறு அலகு போன்ற நீட்சியை உடைய கொண்டைக்கடலைகள் காணப்படும். தாவரம் முழுக்க மென்மையான ரோமம் போன்ற வளரிகள் காணப்படும் .இப்பயிர் சுமார் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிறுத்தி நிலவளத்தையும் இவை பாதுகாக்கின்றன.

கொண்டைக்கடலையில்  இரும்பு மற்றும் செம்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் இக்கடலையில் மாங்கனீஸ், தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன.  கொண்டைக்கடலையில்  குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் மிக அதிக அளவில் நார்ச்சத்துக்களும், புரதமும் இருக்கின்றது.

 கொண்டைக்கடலையின் இளம் காய்களும், இலைகளும் பச்சையாக உண்ணப்படுகின்றன புரதச்சத்துக்காக இவை கால்நடைகளுக்கும் தீவனமாக அளிக்கப்படுகின்றன

hummus

தென்னிந்தியாவில் கடலைமாவில் செய்யப்படும் பஜ்ஜி, மைசூர்பாக்கை போலவே உலகளவில் வேகவைத்து மசித்த கொண்டைக்கடலையுடன்  ஆலிவ் எண்ணெயும், எலுமிச்சைச்சாறும்,அரைத்த எள்ளும் கலந்து செய்யப்படும் Hummus  வெகு பிரபலம்.

குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவைத்து மிருதுவாக்கப்பட்ட கொண்டைக்கடலையை வேகவைக்கையில் அதிலிருக்கும் ஒவ்வாமையை அளிக்கும் சில பொருட்கள் நீங்கிவிடுகின்றன.  இவை 2 லிருந்து 3 நாட்கள் வரை ஊறவைத்து ,முளைவிட்டதும் உணவில் சேர்க்கப்படுகையில் கூடுதலான சத்துக்கள் கிடைக்கின்றன. ஒருபோதும் கொண்டைக்கடலையை ஊற வைத்த, வேகவைத்த நீரை உணவில் சேர்க்கக்கூடாது. அந்த நீரில் கொண்டைக்கடலையின் ஒவ்வாமையை உருவாக்கும் (antinutritinal substances) கரைந்திருக்கும்.  வேகவைப்பதால் கொண்டைக்கடலையின் சத்துக்கள் அதிகமாகின்றன. இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த  நவராத்திரி விழாக்களின் கொலு பூஜைகளின் போது கொண்டைக்கடலை பிரசாதம்  கட்டாயம் இருக்கும்.

மேலதிகமாக இவற்றைக்குறிது அறிந்து கொள்ள;https://toriavey.com/the-history-science-and-uses-of-chickpeas/

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑