லோகமாதேவியின் பதிவுகள்

Month: January 2021 (Page 2 of 2)

ஈரோடு வெண்முரசு சந்திப்பு

ஈரோடு, காஞ்சிகோவில் பண்ணை வீட்டில் வெண்முரசின் சிறப்புக்கூடுகையில் கலந்துகொண்ட பின்னர் இப்போதுதான் ஊர் திரும்பினேன். இதற்கு முன்னர் விஷ்ணுபுரம் விழாக்களிலும், ஊட்டி காவியமுகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன் எனினும் இந்தக்கூடுகை மிகச்சிறப்பானதொன்றாக இருந்தது. திரு ஜெயமோகனின் எழுத்துக்களில் அனைத்தையுமே நான் வாசிப்பவள் அதுவும் மீள் மீள வாசிப்பவள் எனினும் ’வெண்முரசு’ என்னும் மாபெரும் படைப்பினைக்குறித்த பிரமிப்பே எனக்குள் முழுமையாக நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் மீள் வாசிப்பில் எனக்கு பல புதிய விஷயங்கள்  தெரிய வந்துகொண்டே இருக்கின்றது.. எனவே இந்த வெண்முரசுக்கான சிறப்புக்கூடுகையில் நான மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.

முதல் நாள் ஜெ இல்லாவிடினும் வழக்கம் போலவே சரியான நேரத்தில் ஏற்கனவே கலந்துகொள்பவர்களுக்கு தெரிவித்திருந்தபடி முதல் அமர்வு துவங்கியது. திரு. மது ,வெண்முரசின் தரிசனங்களும் படிமங்களும் குறித்துப்பேசினார்.  ’’தண்நிலவும் கங்கையும், வழுக்கும் குளிர் நாகங்களும் சந்தனக்காப்புமாய் குளிர்ந்திருக்கும் சிவனை அனலோன் என்கிறோம்’’ என்னும் அவர் தமிழாக்கம்செய்த அந்த அழகிய சமஸ்கிருதப்பாடலுடன் துவங்கினார் குந்தி பீஷ்மர் சந்திப்பு சுப்ரியையின் எஞ்சும் நஞ்சு, முதற்கனலில் விதைத்தவை இன்று முளைத்து கிளைபரப்பி வளர்ந்திருப்பது என்று அழகாகப் போனது அவர் உரை..  குறிப்பாக சுழற்சி தரிசனம் குறித்து வெகு அருமையாக சொன்னார்.

அனைத்து அமர்வுகளிலுமே திரு கிருஷ்ணன்  வலுவான ஆதாரபூர்வமான தகவல்கள் நிறைய  அளித்தார். அவரை இதற்கு முன்னரே பல ஆண்டுகளாக, நிகழ்வுகளை கச்சிதமாக ஒருங்கிணைப்பவராக, மட்டுறுத்துனராக, உரைகளில் ஆழ்ந்து மட்டுறுத்துவதையே மறந்தவராக, உங்களின் மிக நெருங்கிய அன்பு நண்பராக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்தக்கூடுகையில் அவரின்  legal expertise என்னவென்பதை உணர முடிந்தது.

Biological  தந்தை யாரென்பதற்கான  DNA   சோதனைகளுக்கான சட்டம், பிறழ் உறவில் பெண்னை குற்றவாளியாக இணைக்கக்கூடாது எனும் சட்டம், கர்ணனை least crime committed  என்று சொல்லலாம் இப்படி ஒவ்வொருஅமர்விலும் வெண் முரசு தொடர்பான பல சட்ட நுணுக்கங்களை விளக்கமாக கூறினார்

அடுத்த அமர்வில் பாரி, வெண்முரசின்  உச்சதருணங்கள் குறித்துப்பேசினார். அரிஷ்டநேமி இளையயாதவர் குசேலர்,புஷ்கரன் என்று மிக முக்கிய கதாபாத்திரங்களின் உச்ச தருணங்களை விளக்கினார். பல வருடங்கள் ஊழ்கத்திலிருந்த இளைய யாதவரின் பீலிவிழி  அவருக்குப்பதிலாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்ததை,  இளைய யாதவருக்கும் குசேலருகும் இருந்த உறவை, புஷ்கரன்  என்னும் ஆளூமையைக்குறித்தெல்லாம் பேசினார்.

அந்த அமர்விலும் நிறைய கலந்துரையாடினோம். கர்ணனுக்கும் சுப்ரியைக்குமான கசப்பு அவள் சேடி இறந்தபோது அவளின் வஞ்சமும் இறந்துவிடுவது இப்படி கலந்துரையாடலிலும் அதிகம் புதிய கோணங்களும் புதுப்புது அர்த்தங்களும் கிடைத்தன பலரிடமிருந்து

அடுத்ததாக ராகவ் சொற்களின் எண்ணிக்கை குறித்து மிக விரிவான ஒரு ஆய்வு செய்திருந்தார். அது மலைப்பாக இருந்தது மொத்த வார்த்தைகள் இதுவரை வெண் முரசிலெத்தனை, குறிப்பிட்ட சில வார்த்தைகள் எத்தனை முறை உபயோகத்திலிருக்கிறது, எப்படி ஒரு குறிப்பிட்ட வார்த்தையை சுலபமாக தேடி எடுக்கலாம் என்றெல்லாம் விளக்கினார்.

பின்னர் ராஜமாணிக்கம் அவரகளின் ‘  வெண்முரசில் தந்தைமை’’ அமர்வு துவங்கியது. அது தீப்பிடித்தது போல பலராலும் பலவிதங்களில்  அனல் பறக்க விவாதிக்கப்பட்டு கூட்டுஉரையாக இருந்தது. குறிப்பாக பாரி, ’திருதிராஷ்டிரர் பெரும் தந்தையா அல்லது வெறும் தந்தையா’ என்று எடுத்துக்கொடுத்தது  வெகு ஆர்வமாக மிகஆவேசமாகக்கூட விவாதிக்கப்பட்டது. திருதிராஷ்டிரர், தீர்கதமஸ், துரோணர்,ஜாததேவன் சாத்யகி விதுரர், யயாதி என்று தந்தையரின் பட்டியலும் விவாதமும் மிக சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே போனது.

பிறகு மறுநாளின் அமர்வில் ஜெ’வும் இருந்தார். அந்தியூர் மணி அவர்களின் ‘’ பிற இலக்கியஙகளிலிருந்து வெண்முரசில் எடுத்தாளப்பட்டவை’’ என்னும் உரையும், பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனின்  மாமழை குறித்த அருமையான் உரையும், வேணுவின்  ‘’ நீலம் மலர்ந்த நாட்களும்,  மதிய உணவிற்குபின்னர் ஜெ’வின் உரையுமாய் அன்றைக்கும் மிக அருமையான ஒரு நாளாகவே இருந்தது.

இந்த இரண்டு நாட்களுக்குப்பின்னர் இப்போது நினைக்கிறேன் நான் வெண்முரசை மிக நேரடியாக வாசித்திருக்கிறேன் என்று. வெண்முரசென்னும் ஒரு மாபெரும் அரண்மனையின் கதவுகளைத்திறந்து நேராக உள்ளே விடுவிடுவென்று சென்று கொண்டிருந்திருக்கிறென் அந்த மகத்தான படைப்பின் பலதளங்களையும் அடுக்கைகளையும் மறை பொருட்களையும் நான் அறிந்திருக்கவே இல்லை

வெண்முரசு வாசிப்பில் இத்தனை இத்தனை சாத்தியங்கள் இருக்கின்றது, பிரம்மாண்டமான் இப்படைப்பை இத்தனைஇத்தனை  கோணங்களில் வாசிக்க முடியுமென்பதைத் தெரிந்துகொண்டேன்  ஒவ்வொரு கூடுகையிலும் புதியவர்கள் இளைஞர்கள்,   மற்றும் பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் மகிழ்ச்சியாக இருந்தது.

விஷ்ணுபுரம் விழா எப்படி வருடந்தோறும் நடைபெறுகின்றதோ, அப்படி வெண்முரசுக்கும்  அவசியம் நடத்தினால் இன்னும்  பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஒரு வேண்டுகோளாகக் கேட்டுகொள்கிறேன்.

என்னைபொருத்தவரை மிக plain ஆக இருந்த  வெண்முரசு வாசிப்பு இன்று மிகப்பெரிய சித்திரமாகிவிட்டிருக்கிறது.

உறிஞ்சுதாளில் சொட்டிய மைத்துளி  ஊறி, விரிந்து பரவிச்செல்வதுபோல பல கோணங்களிலும் வாசிப்பின் சாத்தியங்கள் விரிந்து வருவதை பலரும் ஆச்சரயத்துடன் இந்த இரண்டு நாட்களும் உணர்ந்தோம்.   வழக்கம் போல சரியான நேரத்திற்கு உணவும் தேனீரும்சிற்றூண்டிகளும்   வழங்கப்பட்டது, வாழையும் கரும்பும் சேனையும் மஞ்சளுமாக அருமையான சூழலில் இருக்கும் பண்ணை வீட்டில் இக்கூடுகை நடந்தது இன்னும் சிறப்பாக இருந்தது

இவற்றை எற்பாடு செய்தவர்களுக்கும் பலவேலைகளை விருப்பத்துடன் செய்தவர்களுக்கும் அமர்வுகளில் உரையாற்றியவர்களுக்கும், திருஜெயமோகனுக்கும் நன்றியை தவிர சொல்லிக்கொள்ள வேறென்ன இருக்கிறது?

பாண்டவதூத பெருமாள்- காஞ்சீபுரம்

இன்று மகன்களுடன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசித்தோம். ஜெயமோகன் அவர்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திங்கட்கிழமை மீண்டும் திறப்பதால், இப்போது வராவிட்டால் இனி அடுத்தது நவம்பரில் தான் முடியும் எனவே சரண் அப்பாவை ராணிப்பேட்டைக்கு டிக்கட் போடச்சொல்லி நேற்று புறப்பட்டு வந்தோம். இத்தனை வருடத்தில் அவரின் உருக்காலை இருக்குமிடத்திற்கு நானாக வருவதாகச்சொன்னது இதுவே முதல் முறை என்பதால், ஏதோ காரணமிருக்குமென்று யூகித்திருந்தாலும் மனமகிழ்ந்து ரயிலடிக்கே எங்களை அழைத்துச்செல்ல வந்திருந்தார்.

வந்ததும் வராததுமாக பெருமாள் கோவிலுக்கு நாளை காஞ்சிபுரம் போகனும்னு சொன்னதும், எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் ஜெயமோகன் எழுதியிருந்தாரே அந்த கோவிலுக்கா? என்றார். ஆமென்றேன் . ஜெ’வின் தளத்தில் அந்தகோவிலைப்பற்றி அவர் வாசித்திருக்க வாய்ப்பில்லை என் முகத்திலிருந்து வாசித்திருப்பார்.

ரோகிணி நட்சத்திரத்துக்குரிய நாள் இன்று , (13/6) என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். ரோகிணி நட்சத்திரத்துக்காரர்களும் அவர்களின் குடும்பமுமாக நெரிசலாக இருந்தது. அடிப்பிரதட்சணமும் அங்கப்பிரதட்சணமும் நிறையபேர் செய்துகொண்டிருந்தார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து, பொறுமையாக தரிசித்தோம். அந்தக்கரியதிருமேனியின் அழகைச்சொல்ல வார்த்தையில்லை. திவ்யதேசங்களில் ஒன்றான, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகப்புராதானமான, மகாபாரதத்துடன் தொடர்புள்ள இக்கோவிலுக்கு, செந்நாவேங்கை வாசித்துக்கொண்டிருக்கும் போது வந்தது எனக்கு பெரும் மகிழ்வளித்தது. இதற்கு முன்னரும் காஞ்சி வந்திருந்தாலும் இக்கோவிலைப்பற்றி, ஜெயமோகன் அவர்கள் எழுதியதற்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை.

பலர் பெருமாளுக்கு பலவகைப்பாயசம் படைத்து வழிபட்டார்கள். வரிசையில் எனக்கு முன்பாக நின்றிருந்த ஒருவர் தீர்த்தம் வாங்கியபின்னும் நகராமல் கையை நீட்டியபடியே நின்றிருந்தார். நகருங்கோ, என பட்டர் சொன்னதும் விபூதி கொடுங்க என்றார். பட்டர் முறைத்துவிட்டு பெருமாள் ’’இந்த ஷேத்திரத்தில தீர்த்தம் மட்டும் தான் நீங்க இப்போ சொன்ன வார்த்தையை இங்கே எங்கயும் சொல்லப்படாது’’ என்றார்., கோவில்களில் அறிந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் வேண்டிய எளிய அடிப்படை விதிகளைக்கூட தெரிந்துகொள்ளாமல் இருப்பது நான் மட்டுமல்ல எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்குமளவிற்கு இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. விபூதி கேட்டவரைப்பார்த்து மிகப்பிரியமாக புன்னகைத்துவிட்டு தீர்த்தம் வாங்கி, சடாரி வைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

கோபுரத்தில், எங்கள் வீட்டு அகத்தி மரத்துக்கு வருபவை போலவே அளவில் பெரிய பச்சைக்கிளிகள் ஏராளமிருந்தன, கூடவே அணில்களும். பிராகாரமெங்கும் கிளிகளுடையதும், குளத்தின் சுற்றுச்சுவரில் பக்தர்கள் வைக்கும் தானியங்களுக்காக வரும் புறாக்களுடையதுமாக நிறைய இறகுகள் அங்குமிங்குமாக கிடந்தது. இங்கு வந்ததின் நினைவாகஅங்கிருந்த ஒரு குஞ்சுக்கிளியின் பூஞ்சிறகொன்றினை எடுத்துக்கொண்டேன். குருதிச்சாரல் புத்தகத்திற்குள் அச்சிறகிருக்கிறது இப்போது, இனி எப்போதும்

காஞ்சியில் இன்னும் பல கோவில்களுக்கும் சென்றோம். பெருமழை பெய்துகொண்டிருக்கும் பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு இங்கு முகத்திலறையும் வெயிலில் அலைந்து உடல் களைத்தாலும் உள்ளம் குளிர்ந்திருந்தது. இனி துவங்கப்போகும் கல்வியாண்டிற்கான ஒட்டுமொத்த உற்சாகத்தையும் சக்தியையும் இந்தக்கோவிலிலிருந்து திரட்டிக்கொண்டேன்.

வெண்முரசினுடனேயே வாழ்ந்துவருதாகவே எப்போதும் உணர்பவள் நான், குருதிச்சாரலில் தூது வந்த கிருஷ்ணரின் கோவிலுக்கு நானும்வந்ததில், வெண்முரசிற்கு இன்னும் நெருக்கமானதுபோல உணர்கிறேன், அதற்காகவேதான் வந்தேன்.

(13-ஜூன் -2016)

தியடோர் பாஸ்கரன் இணையவழிச்சந்திப்பு

திரு தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான இணைய வழி கூடுகை 12/9/2020 அன்று விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினால் ஒருங்கிணைக்கபட்டது. நிகழ்வு மிக சிறப்பானதாக நிறைவானதாக  இருந்தது. இந்த நோய்தொற்றுக்காலத்திலும் இணையம் வழியே திரு முத்துலிங்கம் , திரு நாஞ்சில் நாடன், திரு தியடோர் பாஸ்கரன்  என மிக முக்கியமான் ஆளுமைகளுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடவும் பலவற்றை அறிந்துகொள்ளவும் முடிந்ததில் மகிழ்ச்சி.

விஷ்ணுபுரம் விழா, ஊட்டி,குரு நித்யா ஆசிரமத்தின் காவிய முகாம், ஈரோடு கூடுகைகளைப்   போல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக நடத்தப்படும் எல்லா விழாக்களையும் போலவே இணைய வழிகூடுகைகளும் மிகச்சிறப்பாக நேரஒழுங்குடன், முறையாக நடப்பது ஆச்சர்யமளிகின்றது.  பொதுவாக ஒழுங்குடன்  இருப்பதாக சொல்லப்படும்  கூட்டங்களில் காணப்படும் செயற்கையும், வெற்றுச்சம்பிரதாயமும், உயிரற்ற தன்மையும், இறுக்கமும் இல்லாமல் இங்கு  சிரிப்பும் பாட்டும் மகிழ்ச்சியும் சுதந்திரமும் கூடவே முறையான ஒழுங்கும் இருப்பதுதான் வியப்பு.

திரு ராஜகோபாலன் வழக்கம்போலவே மிகச்சிறப்பாக மலர்ந்த முகத்துடன்  நிகழ்ச்சியை  நடத்தினார்.  அவருக்கு பின்னிருக்கும் அன்னை யானையும் குட்டியும் தும்பிக்கைகளால் தொட்டுக்கொள்ளும் சித்திரம் அழகு

தியடோர் பாஸ்கரனை போல மிக முக்கிய ஆளுமைகளை இப்படி ஏராளமானோர் சந்திக்கையில்  பன்முக ஆளுமையும் அனுபவசாலியுமான அவரிடமிருந்து பலவற்றை கற்றுக்கொள்ள முடிகின்றது. சூழல்மீதான் அவரது கரிசனமும் அறிவும் பிரமிப்பளிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்து தமிழ் நாளிதழில் சென்னையின் காணாமல் போகும் நீர்நிலைகளைக்குறித்தான அவரது கட்டுரையொன்றைக்குறித்து நான் அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்து. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னரனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார். மிக சின்ன விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் என்பதற்கான் சான்று அந்நிகழ்வும். கடந்த ஆகஸ்ட் மாதமும் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள்  மத்திய அரசின் விஞ்யான் பிராசார் ஏற்பாடு செய்திருந்த ஒரு இணையவழிகூடுகையில் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக மிக முக்கியமான சூழல் பதுகாப்பு குறித்த  உரையாற்றுகையில் நானும் கேட்க கொடுத்து வைத்திருந்தது

Slipper orchid வகையில் அரிதான ஒன்றான Paphiopedilum druryi குறித்தும், நாய்கள் பூனைகள் காட்டுயிர்களை குறித்துமான அவரது கருத்துக்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்லாது மிக முக்கியமனவையும் கூட.

Paphiopedilum druryi

ராணுவ அதிகாரி போன்ற மிடுக்கான தோற்றமும், பொருத்தமான ஆழ்ந்த குரலுமாக வசீகரமான ஆளுமை அவர், குறிப்பாக  அந்த கம்பீர மீசை. அவரது மனைவியை அறிமுகப்படுத்தியதும் அப்படித்தான், அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் புரிதலையும் அந்த சிலமணி நேரங்களிலேயே உணர முடிந்தது.

அவர்களின் செல்லப்பூனையின் குரல் அவ்வப்போது மெல்லிசாக கேட்டுக்கொண்டிருந்தது. அவரது மனைவியும் காமிராவின் முன்னால் வருகையில் பூனையை கீழே விட்டுவிட்டு வந்துவிட்டார். அது ஒரே செல்லச்சிணுங்கலும் புகாருமாக குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. பின்னர் தாளமுடியாமல் தாவி மேசைக்கு வந்தேவிட்ட அதை அவரும் வாரி எடுத்து   மடியிலிருந்திக்கொண்டார்.  அவ்வப்போது இணையவழி கணவருக்கு தெளிவாக வந்து சேராத கேள்விகளை இவர் தள்ளி இருந்து  மெல்லிய குரலில் மீண்டும் சொல்லுவதும், இவரும் முழுநிகழ்விலும் மனைவியின் பக்கமாகவே ஒரு செவியை குவித்து வைத்துக்கொண்டதுமாக அவர்களது அன்னியோன்யம் மனதுக்கு மிகவும் நிறைவளித்தது

 அவர் பேசிக்கொண்டிருந்ததை ஒரு screen shot எடுத்து சேமித்து வைத்துக்கொண்டேன். அவருக்கு பின்னால் அடுக்கபட்டிருந்த புத்தகங்களும் சிறிய கண்ணாடிக்குடுவை நீரில் செருகப்பட்டிருந்த அழகிய பூங்கொத்துக்களும், புத்தர் சிலையும், வாஞ்சையுடன் அவரது மனைவி அணைத்துகொண்டிருந்த பூனைக்குட்டியுமாய்,   இயற்கைமீதும் உயிர்களின் மீதும்  கரிசனம் நிறைந்த  அவரது ஆளுமையைக்குறித்தும் அந்த ஒரு காட்சியே முழுக்க சொல்லிவிட்டது.

பச்சைபுல்வெளிகளைக் குறித்தான அவரது கருத்து மிக முக்கியமானது.  பலவகைப்படும் Ground cover plants எல்லாவற்றையும் நிரந்தரமாக அப்புறப்படுத்திவிட்டு புற்களை மட்டும் நிரப்பி, பெரும் நீர்ச்செலவில் அதை வளர்த்தி , அதை அழகு எனக்கொண்டாடுவதில் எனக்கும் பெரும் ஒவ்வாமை இருக்கின்றது.   ஒழுங்கற்ற பல்லுயிர்ப்பெருக்கின் அழகுதானே இயற்கையென்பது?

 காட்டுயிர் பாதுகாப்பு என்றாலே சிங்கம்,புலி, கரடி யானைகளின் பாதுகாப்பு மட்டுமல்ல  flora and fauna இரண்டும் சேர்ந்ததே  காட்டுயிரென்பதை தியோடர் பாஸ்கரன் அவர்கள் சொல்லுகையில் அது பலருக்கும் சென்று சேர்கிறது.

 எனவே தான், நான் எப்போதும் ஆதங்கப்படும் களைச்செடிகளின் அழிவு குறித்தும் பாதுகாப்பைக் குறித்தும் அவரிடம் கேட்க நினைத்தேன் WWF India வின் குழுவிலும் இருந்திருக்கும், இத்துறையில் அனுபவமிக்க அவரது கருத்துக்கள் எல்லாமே சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் மிக முக்கிமானது.

பத்து வருடங்களுக்கு முன்பு வெகு சாதாரணமாக சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் வேலிகளிலும் செறிந்து காணப்பட்ட நூற்றுக்கணக்கான களைச்செடிகள் இப்பொது அரிதாகவே காணக்கிடைக்கின்றன. அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் அவற்றை இழந்துகொண்டே இருக்கிறோம்

NBR  எனபடும் Nilgiri Biospehere reserve ஒரு மாபெரும் தாவர பொக்கிஷம். சில வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் மட்டுமே வளரும் endemic வகை தாவரங்களை காணும் பொருட்டு   மாணவர்களுடன் அங்கு சென்றிருக்கையில் சாலையின் இருபுறமும் ஆட்கள் செடிகளை வெட்டி துப்புரவாக்கிக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியாகி காரணம் கேட்கையில் மறுநாள்  ஒரு அரசியல் தலைவரின் வருகையின் பொருட்டு சாலைகள் தூய்மைப்படுத்தப்படுவதாக சொன்னார்கள்.  நீலக்குறிஞ்சி மலைமுழுதும் மலர்வதால் நீலகிரி எனப்பெயர் பெற்றிருக்கும் அம்மலையின் அரிய தாவரங்களையெல்லாம் அங்கு வரவிருக்கும் ஒரு பிரபலத்தின் பொருட்டு அகற்றுவதும் அழிப்பதுமெல்லாம்  எத்தனைஅநீதி?

கல்லூரியிலும் நான் பொறுப்பேற்றுக்கொண்டிருந்த ’அமுக்கரா, சர்ப்பகந்தி, திப்பிலி, வெப்பாலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்தை கல்லூரித்தலைவரின் ’’பார்க்க அழகாக இல்லை’’ எனும் அபிபிராயத்தினால் அகற்றிவிட்டு பச்சைக்கம்பளம் விரித்தது போல கொரியன்  புல்வெளியை அமைத்திருக்கிறார்கள். ஒருவாரம் வரை வேருடன் செடிகள் பிடுங்கப்படுவதையும் திரும்பத்திரும்ப இருவித்திலைத்தாவரங்கள் எதுவும் முளைத்து விடாமலிருக்க நிலம் முழுவதும் ரசாயன களைக்கொல்லி அள்ளிக்கொட்டப்படுவதையும் திகைத்துப்போய் பார்த்தபடி இருந்தேன்.  நீர்தெளிப்பான்கள் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த பச்சைப்புல்வெளியை கடந்துதான்  தினமும் வகுப்புக்கு செல்வேன் வேதனையுடன்.

தியோடர் பாஸ்கரன் அவர்களைப்போல  இயற்கைச்சூழல் மீதும், உயிர்களின் மீதும் அக்கறைகொண்டிருக்கும்  ஒருசில செல்வாக்குள்ள அதிகாரிகளாவது இப்போது செயலாக இருந்தால் மீதமிருக்கும் காட்டுயிர்களையாவது காப்பாற்றலாம். இந்த நிகழ்சிக்கு பிறகு பலர் என்னிடம் களைச்செடிகளை குறித்து ஆர்வமாக பேசுகிறார்கள்.  இப்படி விஷ்ணுபுரம் நிகழ்வுகள் ஏற்படுத்திக்கொடுக்கும் திறப்புக்களுக்கும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகளுக்குமாக, திரு ஜெயமோகன் அவர்களுக்கும்,  திரு ராஜகோபாலன், ஆஸ்டின் செளந்தர், மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட நிகழ்வு நல்லபடியாக நடக்க காரணமாயிருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

குள்ளச்சித்தன் சரித்திரம்-யுவன்

 

குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் வேம்பு குறித்து விஷ்ணுபுரம் விழாவில் கேட்ட ஒரு வரி உள்ளேயே  உறுத்திக்கொண்டு இருந்தது. அதன்பொருட்டே அப்புத்தகத்தை தேடத்துவங்கி  மிகுந்த பிரயாசைக்கு பிறகு கிடைக்கப்பெற்றேன். உண்மையில் எங்குமே குள்ளச்சித்தன் சரித்திரமும் பகடையாட்டமும் கிடைக்கவே இல்லை. அலைந்து திரிந்து யார் யாரிடமோ சொல்லி எப்படியோ சென்னையிலிருக்கும் சகோதரர் யோகீஷ்வரனின் உதவியால் தருவித்தேன். நான் எதிர்பார்த்திருந்ததும் என் மனதில் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து (வேம்புவை மையமாகக்கொண்டு) நானே உருவக்கிக்கொண்டிருந்த சித்திரமும், இப்புத்தகம் கொடுத்த வாசிப்பனுபவமும் முற்றிலும் வேறு எனினும் நான் பல ஆண்டுகளாக தொடர்புடைய சித்தர்கள் கதையாக இது இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

சமீபத்தில் நான் வாசித்த வெளியேற்றம், ஊர்சுற்றி, நினைவுதிர்காலம் இவற்றுடன் குள்ளச்சித்தன் சரித்திரம் வாசிக்கையில்  இவையெல்லாமே தொடர்ந்துவரும்  ஒரே கதையின் தொடர்ச்சி என்று கூட உணர்ந்தேன். நினைவுதிர்காலத்தின் விசிலிசைக்கலைஞனைக்கூட, (ஆற்றில் மறைந்துபோனானே அவனை) குள்ளச்சித்தனின்  நெருப்பைக்குடித்துக்கொண்டு எரிந்துகொண்டிருந்த அந்த இளம் இசைமேதை ப்ருத்வியுடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். அருந்தவத்தை, ஊர்சுற்றியில் வரும் ஒரு பெண்பயணியுடன், இப்படி நானாகவே ஒரு தொடர்சியை உருவாக்கிக்கொண்டேன் .

பல வரிசையில் புள்ளிகளிட்டு எங்கோ துவங்கி எங்கெங்கொ நுழைத்து, வளைத்து ஒவ்வொன்றையும் சுற்றியும் இணைத்தும்  கோடுகளிட்டு இறுதியில் அழகிய வசீகரிக்கும் வடிவிலான ஒரு நெளிக்கோலம் போடுவதைபோல சிகப்பி, அய்யர், வேம்பு, ஆலாஸ்யம், சித்தர், முத்துசாமி, மௌல்வி, செய்யது ராமாமிர்த்தம்மாள்,பென்குவின் கழுகு புலி பழனி, ராமநாதன் என்று கதைமாந்தர்களை காட்டிகொண்டெ வருகிறீர்கள், ஒவ்வொருவரும் பிறருடன் எப்படியோ எங்கேயோ தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணியில் சந்திக்கிறார்கள் இறுதியில் காணக்கிடைக்கும் அந்த கோலம் அத்தனை அழகு. எல்லாப்புள்ளிகளும் தனித்தனியாக தெரிகின்றது எல்லாமே ஒற்றைக்சரடொன்றினால் இணைக்கவும் பட்டிருக்கிறது.

சாமான்யர்களும், காலங்கள் கடந்த நினைவுகளும், ஜென்மவாசனையும், சாமான்யர்கள் இயங்கவியலா தளங்களில் இயங்குபவர்களுமாக கதை வசீகரம். அழுக்குசாமி சித்தர் வாழ்ந்து மறைந்த  வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவளென்பதாலும் ஒரு ஆசிரியையாக சித்தர்களை குறித்து அனேக வருடங்களாக பாடமெடுத்துக்கொண்டிருப்பவளாகவும் கதைக்குள் நான் ஆழ்ந்திருந்தேன் வாசிக்கையில்.

  நான் பிறந்து வளர்ந்த வேட்டைக்காரன்புதூரில் இப்போதும் அழுக்குசாமி சித்தரின் ஜீவசமாதி,  பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது, சிறுமியாக ஆத்தா அப்பாரின் கைகளைபிடித்துக்கொண்டு அங்கு சென்ற நினவுகளும் சித்தரைக்குறித்து கேட்டிருந்த ஏராளம் கதைகளும் குள்ளச்சித்தனை வாசிக்கையில் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.

குதிரை வியபாரத்திலிருந்த என் அப்பாரு எப்போதும் வீட்டில் இருந்ததில்லை திடீரென வருவார் சிலநாட்கள் இருப்பார் மீண்டும் வியாபாரத்திற்கு சென்று விடுவார். அப்படி வீடு தங்கும் நாட்களில், இரவுகளில் வீட்டு முன்திண்ணையில் இருந்த  பளபளப்பாய் மினுங்கும் ஈட்டி மர பெஞ்சில் என்னையும் சேர்த்து ஒரு கருப்புக்கம்பளியில் போர்த்திக்கொண்டு ராமாயணமும் மகாபாரதமும்  , திகம்பரராக அக்கிராமத்திற்கு வந்த அழுக்குச்சாமி சித்தர் கதையையும் சொல்லிக்கொண்டிருப்பார். அப்பாருவிடமிருந்து வீசும் புகையிலை வாசனையும், கம்பளியும் கதையும் கொடுக்கும் கதகதப்புமாக அவர் அணைப்பிலேயே நான் உறங்கிய இரவுகள் அனேகம்.

ஆத்தாவும் எத்தனையோ முறை சித்தரைபற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவரை உடைஉடுத்தச்செய்ய ஊர்ப்பெரியவர்கள் பட்ட பாட்டையும்,  இரண்டு முறை ரெட்டைப்பிள்ளைகள் பிறந்து இறந்துபோனதும், அழுக்குசாமி சித்தர் தன் உடலின் அழுக்குகளை திரட்டி அதையே மருந்தாகத் தந்து அதை உண்டபின்னரெ என் அப்பா அழுக்குராசு பிறந்து தங்கியது பின்னர் மூன்றுஅத்தைகளும் இரண்டு சிற்றப்பன்களுமாய் குடும்பமும் வறுமையும் பெருகியது, சித்தர் இரவுகளில் உடல்பாகங்களை தனித்தனியெ கழட்டி வைத்துவிட்டு கிடந்த கோலம், பலருக்கும் அழுக்கையே தீர்வாக அளித்தது, ஒரே சமயத்தில் கிராமத்திலும் வேறு பல இடங்களிலும் அவரைக்கண்ட கதைகள், அவரது மேல் துண்டை வாங்கிக்கொண்டு கோர்ட்டுக்குச் சென்று  வழக்குகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகள் ,அவரால் தூக்கிவிடப்பட்டு பெரிய மனிதர்களானவர்கள் இப்படி கதைகளின் வழியே கேட்டுக்கேட்டு சித்தர் என் இளமைப்பிராயத்திலிருந்து என்னுடனேயெ இருக்கிறார். அப்போதிலிருந்து இப்போதுவரை நான்  அடிக்கடி செல்லும் கோவிலும் இந்த சித்தர் கோவில்தான். முன்பு கோவிலினருகில் கரைபுரண்டோடிக்கொண்டிருந்தது ஆறு, இப்போது அது வெறும் புதர்மண்டிய மந்தைத்தடம்.

சித்தர் கோவிலைக்குறித்து உதிரி உதிரியாக பல நினைவுகள் எனக்குள் இருக்கும் குள்ளச்சித்தனில் சொல்லியிருப்பது போலவே. அந்த ஆற்றுநீரில் அப்பாருவின் கண்காணிப்பில் விளையாடியது, மீன் பிடித்தது ஒரு அண்ணனின் திருமணம் அக்கோவிலில் நடந்தபோது மணப்பெண்ணுடன் கருக்கிருட்டில் ஆற்றிற்கு குளிக்க வந்து  விசையுடன் இருந்த ஆற்றுத்தண்ணீரில் புதுப்பெண்ணின் சந்திரப்பிரபை அடித்துச்செல்லபட்டது, அப்போதிலிருந்து அங்கிருக்கும் மகிழமரங்கள் அதனடியில் நான் உணரும் விளங்கிக்கொள்ள முடியாத பிறருக்கு விளக்கியும் சொல்ல முடியாத மனஅமைதி, அங்கிருக்கும் சித்தர் திருவுருவின் ஓவியங்கள்,  இப்படி

இப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் என் மகனின், அங்கு நடைபெறுவதாக இருக்கும் திருமணத்தை பல்லாயிரம் முறை மனக்கண்ணில் காட்சியாக்கி பார்த்தபடிக்கிருப்பேன் அங்கிருக்கையிலெல்லாம்.

என் மனதின் அடியாழத்தில் இருந்த நினைவுகளையும் குள்ளச்சித்தனின் கதையையும் கலந்தேதான் நான் வாசித்தேன் என்பதால் புதுவிதமான வாசிப்பனுபவம் கிடைத்தது.

அந்த வேம்பு,  அய்யர் அய்யருடன் வேம்பு உடன்கட்டை ஏறியது இவையெல்லாம் எனக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டுபண்ணுகின்றது நினைக்கையிலெல்லாம். இந்தகதையை மட்டும்  விரிவாக்கி  வேறு கதையாக  யுவன் எழுதியிருக்கிறாரா?எனக்கே அப்படி ஒரு மயக்கா? நான் அவரது எழுத்துக்களை தேடித் தேடி  இப்போதுதான் (சுரேஷ் பிரதீப்பின் ‘ நினைவுகளை தொடுத்தெழுதும் வரலாறு’’ க்குபின்னர்)  வாசிக்கத்துவங்கியிருக்கிறேன். 

எங்கோ ஆதரவற்றிருந்த, அய்யரால் ஒத்தாசை செய்யபட்ட, பெண் தன்மையுடன் ஒரு உதவியாள் பல வருட விஸ்வாசம் பின்னர் அதுவே ஒருதலையாக விருப்பம் பின்னர் அய்யரின் மறைவு வேம்புவும் உடன்கட்டைஏறுவது என்று விரிவாக ஒரு கதையை யுவன் எழுதிவிட்டதாக நானே  நினைத்துக்கொண்டு  அந்த கதையை வாசிக்கும் உத்தேசத்துடன்தான் இப்புத்தகத்தை பிரித்தேன்.

கதைமொழி எளிமை எந்த ஜாலங்களும் இல்லை, சரளமும் கூட உரையாடல்களின் இயல்புத்தன்மை இக்கதைக்கு பெரும் பலம்.  உரையாடல்களின் வழியே சொல்லப்பட்டவைகளை அதே உணர்வுநிலைகளில் யுவன் அல்லது கதைமாந்தர்கள் உத்தேசித்தை சரியாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. முன்பின்னாக மாற்றிச்சொல்லப்பட்டிருக்கும் சில தகவல்களை நிகழ்வுகளை, பிறிதொருவரின் பார்வையில் கோணத்தில் மீண்டும் சொல்லப்பட்டிருந்தவைகளை வாசிக்கையிலும்  எந்த குழப்பமும் இல்லாமல் கதை மனதுக்குள் செல்கின்றது.

முத்துசாமியின் மறைவு குறித்து வெகுநேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்தில் பெருங்கொன்றைகள் இப்போது பூத்திருக்கின்றன. வகுப்புக்களுக்கு செல்கையில் அடர்மஞ்சள் கொத்துக்களிலிருந்து மலர்கள் மெல்ல மெல்ல  ஓசையின்றி மிதந்து உதிர்வதை பார்த்துக்கொண்டே செல்வேன். அவற்றிற்கு உதிர்வதில் எந்த புகாரும் இல்லை அவை உதிர்கையிலேயே காப்பிக்கொட்டை நிறத்தில் நுண்விதையொன்றின் வடிவில் அதே மரத்தில் தங்களை விட்டுச்செல்கின்றன . மலர் உதிர்வதைப்போல இயல்பாக உதிர்வது என்பதைகுறித்து அடிக்கடி நினைத்துக்கொள்ளுவேன் முத்துச்சாமி மண் மறைந்தது அப்படித்தான் இருந்தது.

குள்ளச்சித்தன் சரித்திரம் குறித்த என் புரிதல் மிகவும் நேரடியானதும் எளிமையானதும் தான். எனினும் யுவனின் இக்கதையை நான் வாசிக்கவில்லை கேட்கவில்லை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குள் இக்கதை சித்தர் குறித்த நினைவுகளில்  பலவற்றை கிளர்த்தி விட்டது..

இக்கதைகுறித்து ஜெ எழுதிய ‘’மாற்று மெய்மையின் மாய முகம்” .

மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑