லோகமாதேவியின் பதிவுகள்

Category: வாசிப்பு (Page 1 of 3)

வெண்முரசென்னும் உறவின் நிறைவு,

புஷ்கரவனத்தில் குடிலின் முன்பு நின்றிருந்த செண்பக மரத்தின் அடிமர நிழல்,  அந்தியில் ஏற்றி வைத்த மண் அகல் விளக்கொளியில் முற்றம் வரை விழுந்திருந்ததை கண்டுகொண்டிருந்த  ஆஸ்திகனுக்கு அன்னை மானசாதேவி அன்று சொல்லத்துவங்கிய கதை, மானசாதேவியின் நூற்றெட்டு நாகஸ்தலங்களில் ஒன்றில் வழிபடும் சீர்ஷனுடன் பயணித்து, மற்றுமொரு அன்னை, ஆயர்குடிப்பிறந்த அழகை, ஆழிப்பால் பெருக்கின் அலையை,, கரியோனை, அணிச்சங்கனை,தேவர்க்கிறைவனை,அலைமலர் கண்ணனைப் பாடும் இனிய தாலாட்டில் நிறைவுற்றிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் எங்களுடனேயே வெண்முரசும் வளர்ந்தது, திகழ்ந்தது, இனி எந்நாளும் எங்களுடனும் இனி வரும் தலைமுறையுடனும் என்றென்றுமென இருந்து கொண்டுமிருக்கும்

இம்மாபெரும் படைப்பின் நிறைவைக்குறித்து நான் உண்மையில் அஞ்சிக்கொண்டிருந்தேன். முதலாவிண்னை வாசிக்க வேண்டாமென்று கூட நினைத்திருந்தேன். வருடங்களாக  என்னுடன் மிக அணுக்கமாக இருந்த வெண்முரசின் நிறைவு எனக்குள் ஒரு வெறுமையை, மாளாத்துயரை, பொருளின்மையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அப்படி இல்லாமல் கமுகும், மஞ்சளும் செங்கீரையும், மூங்கிலும்,அசோகமும் ஆலும், அருகும், நிலவும் குளிரும், நீள்பீலியும், கானும், கடலும், வானும் வளியும், கரியோனின் நீலமலர்க்காலடி படிந்த பொன்பரப்பும், பால் உலர்ந்த கன்னங்களுக்கிடப்பட்ட ஓராயிரம் முத்தங்களுமாய், பூத்தெழுந்த பொன்மலரை பாடிப்புகழும் தாலாட்டுடன் இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஆம் நிறைவு என்று வாசிக்கையில் உணரும் உண்மையான் பொருளே வெண்முரசின் நிறைவுதானென்று எண்ணுகிறேன்.

வெண்முரசு துவங்கிய போதும் அழகு, எங்களுடனேயெ இத்தனை வருடங்கள் வளர்ந்தபோதும் அழகு, இளமழை   பொழிந்துகொண்டிருக்கும்  இருள்பிரியா இக்காலையில் நிறைவுற்ற போதோ இன்னும் பேரழகு.  அவ்வன்னையின் தாலாட்டு ஓய்ந்த பின்னரும் அது சென்றடைந்த இடத்திலேயே இருக்கும் சீர்ஷனைப்போல வெண்முரசு நிறைவடைந்த பின்னரும் அது என்னை அழைத்துச் சென்று  விட்டிருக்கும்  அவ்வுலகிலேயே நிறைவுடன் இருக்கிறேன்.

மகாபாரதக்கதையில் மிகஇளம் வயதிலேயே  பித்துக்கொண்டிருந்த,  ஒரே மகனுக்கும் சந்தனுபரீக்‌ஷித் என்றெ பெயரிட்டிருக்கும் என் சகோதரி சங்கமித்ரா எங்களின் இளம்வயதில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் எனக்கும் இன்னும் சில தோழிகளுக்குமாக ஈரமணலில் குச்சியொன்றினால் ஒரு மரம் வரைந்து அடித்தண்டை சந்தனுவென்றும், அதிலிருந்து கிளைவிரித்துச்சென்ற முழுமகாபாரதக்கதையையும் சுருக்கமாக விளக்கிய கணம்தான் மகாபாரதக்கதைகளுக்கான விதையொன்று மனதில் விழுந்த கணம். வெண்முரசு நிறைவுற்றிருக்கும் இக்கணம் வரையிலும் அம்மரம் வளர்ந்தபடியேதான் இருந்தது

வெண்முரசு போன்ற பெரும்படைப்பொன்று நிகழ்ந்த காலத்தில் நானும் இருப்பதும், அதை முழுமையாக,வாசித்ததும், அம்மொழி எனக்கு புரிந்ததுமே என் வாழ்வின் ஆகசிறந்த விஷயங்களாகியிருக்கின்றன. என் வாழ்வையே வெண்முரசுக்கு முன்னும் பின்னுமென இரண்டாக பகுத்துக்கொள்ளலாம் அத்தனைக்கு பெரும் அகமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் படைப்பு இது. துவங்கிய நாளிலிருந்தே தினமும் என் காலைகள் வெண்முரசினோடுதான் புலர்ந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் சிலநாட்களைத்தவிர வேறெப்போதும் வெண்முரசை வாசிக்காமல் இருந்ததேயில்லை

சொல்லப்போனால்  அஸ்தினாபுரியிலும் காசியிலும் மகதத்திலும் அங்கத்திலும் சொல்வளர்க்காட்டிலுமேதான் நான் வாழ்ந்துகொண்டிருந்தேன் அவ்வப்போது அவ்வுலகின் திரைவிலக்கி இவ்வாழ்வில் அன்னையும், ஆசிரியையுமாக இருந்தேனென்றே சொல்லலாம். வெண்முரசின் தாக்கமும் எனக்கு மிக அதிகம் இருந்தது. குறிப்பாக வெய்யோனும் மாமலரும். அப்போதெல்லாம் காலையில் வாசித்த அத்தியாயம் ஏற்படுத்திய உளஎழுச்சிகளிலிருந்து, அன்றைக்கு இரவு வரையிலுமே கூடவிடுபடமுடியாமலிருந்திருக்கிறேன்.

வகுப்பில் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் போதும் உள்ளத்தின் ஒருபகுதியில்  வெண்முரசின் எதோவொரு நிகழ்வொன்றின் பொருட்டான துயரோ, மகிழ்வோ பொருளின்மையோ, சீற்றமோ இருந்துகொண்டிருந்த நாட்கள் பற்பல. வாசிக்கையில் உடல்மெய்ப்புக்கொண்ட பலநூறுகணங்களை இப்போதென நினைவிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

எப்போதும் வெண்முரசின் அத்தியாயங்களை நேரிடையாக தளத்தில் சென்று வாசிக்காமல்,  நான் வெண்முரசை மின்னஞ்சல் வழி தொடர்ந்து கொண்டிருந்ததால் உள்பெட்டியில் சென்று, மின்மடலை திற்ந்தே வாசிப்பேன். மீள் வசிப்பே தளத்தில். அது இம்மாபெரும் படைப்பு எனக்கே எனக்கெனெ எழுதப்பட்டு மின்மடலாக அனுப்பப்பட்டிருக்கிறது என்னும் ஒரு மகிழ்வையும் அங்கீகாரத்தையும் எனக்களித்து வந்தது பலநாட்கள் கண்விழித்திருந்து 12.01 க்கு காத்திருந்து வாசித்திருக்கிறேன்.

காலையில் வாசித்துவிட்டு மகன்களுக்கு சொல்ல இன்னொருமுறையும் வாசித்துவிட்டு, பயணங்களிலும், கல்லுரியில் வகுப்புகளுக்கான இடைவேளையிலும் மீள மீள வாசித்திருக்கிறேன்

மாமலர் நிகழ்ந்து கொண்டிருக்கையில் டெங்கு காய்ச்சலால் கொத்துக்கொத்தாக பலர் எங்களூரிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் உயிரிழந்து கொண்டிருந்தார்கள். எனக்கும் அக்காய்ச்சல் தொற்றி, உள்ளூரில் ஒரு சிறிய மருத்துவமனையில் 1 வாரமிருந்த போதும் தினம் வெண்முரசை வாசித்துக்கொண்டிருந்தேன். என் ரத்த அணுக்களின் அளவு  3000த்திலிருந்து மிக வேகமாக குறைந்த ஒரு  அதிகாலையில் உடனே ஆம்புலன்ஸில் என்னை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையின் டெங்கு சிறப்புப் பிரிவில் அனுமதிக்க வேண்டுமென்னும் ஒரு அவசரநிலையின் போது கண்ணீருடன் என் சகோதரி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யச்சென்ற இடைவெளியிலும் அன்றைய வெண்முரசின் அத்தியாயத்தை வாசித்தேன். கோவைக்கு சென்று கொண்டிருக்கையில், வண்டியின் விரைவும் அந்த  ஒலிப்பானின் சத்தமும் கடும்காய்ச்சல் கொடுத்த தலைவேதனையுமாக கனவும் நனவும் கலந்த ஒரு பயணத்தில் என்னுடன், உறவை முடித்துக்கொண்டு விடைபெற்ற கசனும், கண்ணீரும் சினமுமாக தேவயானியும் உடனிருந்தார்கள். நான் இறந்துவிடுவேனோ என்னும் அச்சமும், விடுதியில் இருந்த மகன்களின் நினைவும் எவ்வளவு இருந்ததோ அதற்கிணையாகவே , தேவயானியின் இறப்புக்கு நிகரான அந்த கைவிடப்பட்ட தருணமும் அது அளித்த துயரும் இருந்தது அப்போது.  இப்போதும் ஆம்புலன்ஸின் ஒலி கேட்கையில் எனக்கு கசனும் தேவயானியும்  // மீண்டெழும் வாய்ப்புள்ள இறப்பென்பது மாளாத்துயர்ப்பெருக்கு// என்னும் வரியும் நினைவுக்கு வரும்.

நானும் உடழலிந்து வெறும் உள்ளமென இருந்த நாட்கள் அவை. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அந்த 3 நாட்களில் எனக்கு அலைபேசி கொடுக்கப்படவில்லை அதன்பொருட்டான என் அதி தீவிர முயற்சிகளை கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் ஒருவர் கேலியாக என்னிடம் ’’இப்படி மகாபாரதம் படிச்சே ஆகனும்னு அடம்பிடிச்சீங்கன்னா அப்புறம் கருடபுராணம் வாசிக்கவேண்டி வந்துரும்’’ என்றார் சிரித்தபடி. அதற்கு நான் புன்னகைக்கக்கூட செய்யாததால்  ’’ஏம்மா, எப்பவோ நடந்த எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதானே மகாபாரதம், அதுக்கு ஏன் இப்படி மெனக்கெடறீங்க? என்றார்.  அவருக்குபுரியும்படி சொல்ல என்னிடம் பதிலில்லை ஆனால் எனக்கு அலைபேசியை  கொடுக்கும்படி  செவிலியரிடன் சொல்லி விட்டுச் சென்றார் அவர்

மானசாதேவியின் மடியில் படுத்து கதை கேட்ட ஆஸ்திகனைப்போலவே சிறுவர்களாக  என்னிடம் கதைகேட்டு வெண்முரசின் கூடவே வளர்ந்து இன்று தோளும், மார்பும், அகமும் விரிந்த இளைஞர்களாக  என் இரு மகன்களும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் காலை 8 மணிக்கு வரும் பள்ளி வாகனத்துக்கு 7.30க்கே தயாராகி தெருமுனையிலிருக்கும் அரசப்பெருமரமொன்றின் புடைத்த வேர்களில்  மூவருமாக அமர்ந்து வெண்முரசை வாசிப்போம் வாகனத்தின் மஞ்சள் நிறம் கண்ணுக்கு தென்படும் வரையில் கதை போய்க்கொண்டிருக்கும். முடியாத கதையின் நினைவுகள் கண்களில் நிறைந்திருக்க கனவிலென வண்டியேறிச்செல்லும்  பெரியவன் சரண் மாலை வீடுதிரும்பி என் கைகளைப்பிடித்தபடி சாலையைக் கடக்கும்போதே ’’அப்புறம் என்னாச்சு சொல்லு சொல்லு’’ என்றபடியே வருவான் அந்த முழுநாளும் அவன் மனதில் வெண்முரசேதான் நிகழ்ந்து கொண்டிருந்திருக்கும்

 9 ஆம் வகுப்பில் பூரிசிரவசின் மேல் பெரும் அபிமானமும் அணுக்கமும்  அவனுக்கு ஏற்பட்டிருந்த அந்தக்காலத்தில், விடுதியில் தங்கவேண்டி வரும்  எதிர் காலத்தின்  பயிற்சியாக   திங்கட்கிழமை பள்ளி விடுதியில் விட்டு வெள்ளியன்று வீடு திரும்பும் ஒரு ஏற்பாட்டை 3 மாதங்கள் செய்தேன். வீட்டிலிருந்து பள்ளி செல்லும் இளையவன் தருண் மதிய உணவு இடைவேளையில் அண்ணனை சந்திக்கும் போது கொடுக்க அன்றன்றைக்கான வெண்முரசின் நிகழ்வுகளை ஆங்கிலத்தில் சிறு சிறு குறிப்புகளாக ஒரு துண்டுப்பேப்பரில் எழுதி கொடுத்துவிடுவேன், 11, 12 வகுப்புக்களை இருவரும் கோவையில் ஒரு பள்ளி விடுதியில் இருவரும் தங்கிப்படிக்கையில், மாதமொருமுறை வெளியே அழைத்துச்செல்லலாமென்னும் ஞாயிறுகளிலும் சிறுவாணி அணைக்கு செல்லும் மரங்கள் சூழ்ந்த அந்தச்சாலையில், பள்ளிக்கு வெளியே சிறுபடிகளுடன் கூடிய  பீடத்துடன் ஒரு கொடிமரம் இருக்கும் அங்கு அமர்ந்து மணிக்கணக்காக, ஒருமாத வெண்முரசின் கதைகளை பேசுவோம். பிற மாணவர்கள் குடும்பமாக கோவையின் உணவு விடுதிகளுக்கும் மால்களுக்கும் திரைப்படங்களுக்குமாக சென்ற பல நாட்களில் நாங்கள் மூவரும் அஸ்தினபுரியிலும் இந்திரபிரஸ்தத்திலுமாக இருந்தோம். வெண்முரசால் நானும் மகன்களும் இன்னும் அணுக்கமானோம்.

மகன்களுக்கு மட்டுமல்லாது மிக நெருங்கிய நண்பர்களுக்கும் அலைபேசியில் பலமணிநேரம் வெண்முரசின் முக்கியப்பகுதிகளை சொல்லி இருக்கிறேன். ஒருமுறை ராமேஸ்வரத்திற்கு  பொள்ளாச்சியிலிருந்தே காரில் சென்று வந்த பயணம் முழுவதும் உடன்வந்த குடும்பத்தினருக்கும் சேர்த்து வெண்முரசை வழியெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது துருவனின் கதை நிகழ்ந்துகொண்டிருந்தது. உணவுக்காக சாலையோரம் நின்றிருந்த போது அந்த வாடகைக்காரின் ஓட்டுனர் என்னிடம் தான் வாழ்க்கையில் கதையே கேட்டதில்லை என்றும் இந்தகதையை தெய்வமே சொல்லிக்கொண்டு வந்ததுபோலிருப்பதாகவும் சொன்னார் இனி மீதிக்கதையை தான் எப்படி தொடர்ந்து வாசிப்பதென்றும் கேட்டார். உளமகிழ்ந்து உங்களின் தளத்திற்கு சென்று எப்படி வாசிப்பதென்பதை சொல்லிக்கொடுத்தேன் அவருக்கு

.அவருக்கு கதையில் வரும் ’’கத்தியை குத்தி, சுழற்றி பின்னர் உருவி வெளியே எடுப்பது’’ என்பது போல வரும் ஒரு   சொற்றொடரை குறித்து பெரும் பிரமிப்பு இருந்தது அதை சொல்லிக்கொண்டே இருந்தார்

எங்களது கோடைவிடுமுறைகள் எல்லாமே வெண்முரசுடன் தான் கழிந்தன. இளநாகனின் பயணமொன்றின் போது அவன் ஒரு மூதாட்டியின் இல்லத்தில் கம்பரிசிக்கூழ் அருந்துவதை வாசித்தபின்னர்,நினைத்துக்கொண்டதுபோல  புத்தகத்தையும் கையில் எடுத்துக்கொண்டு மெல்ல நடந்தே பக்கத்து ஊருக்கு சென்று அங்கு சாலையோரம் விற்கப்பட்ட கம்பங்கூழை வாங்கி அருந்தியபின்னர் கதை சொல்லியபடி, கேட்டபடியே வீடு வந்தோம்.

மழைப்பாடல் புத்தகமாக வந்த சமயத்தில் அதை எடுத்துக்கொண்டே மகாபலிபுரம் கடற்கரையொட்டிய ஒரு விடுதியில் தங்கசென்றிருந்தோம். அங்கு அலைகளின் அருகிலமர்ந்து 5 நாட்களில் மழைப்பாடலை முழுமையாக வாசித்தோம். ’’இத்தனை செலவு செய்து அங்கு வந்தும் இந்த புத்தகத்தை படிக்கறதுக்கு பொள்ளாச்சியிலேயே இருந்திருக்கலாமென்னும்’’ கணவரின் அங்கலாய்ப்புக்கும், கோபத்திற்கும்   அப்போது அஸ்தினபுரியிலும் மதுராவிலும் காசியிலும், காந்தாரத்திலும் இருந்த நாங்கள் எதிர்வினையாற்றவே இல்லை. இப்படி வெண்முரசுடன் கழிந்த இனியநாட்களின் பலநினைவுகள் ஏராளமாக  எங்களுடன் இருக்கின்றது

சென்ற மாதத்திலிருந்து முதற்கனலிலிருந்து மீள் வாசிப்பை துவங்கி இருக்கிறோம். வெண்முரசு நிறைவெனும் துயர் அதிகம் ஏற்பட்டிருக்காததற்கு இந்த மீள் வாசிப்பும் ஒரு காரணம். பூரிசிரவஸின் முறிந்த காதல்களுக்கு  கண்ணீர் விட்டழுத அன்றைய சரண், இப்போது எனக்கு கதையை சொல்லிக்கொண்டிருக்கிறான். மீண்டும் ஒரு முறை வாழக்கொடுத்து வைத்ததுபோலிருக்கிறது மகன் சொல்லச்சொல்ல வெண்முரசை நான் இப்போது கேட்கையில்.

வெண்முரசு ஏற்படுத்திய அதே பிரமிப்பும் மகிழ்வும் வெண்முரசின் வாசகர்களும் எனக்களித்தார்கள். வெண்முரசு ஒரே ஒருவரால் எழுதப்பட்ட பெரும்படைப்பென்பதை நம்பவே நம்பாத ஒரு தலைமுறைக்கு அது ஜெயமோகன் என்னும் ஒற்றை மனிதரால் மட்டுமே எழுதபட்டதென்று சொல்லும் சாட்சிகளாகவே வாசகர்களாகிய நாங்கள் இருப்பதாக நினைத்துக்கொள்வேன்.   

 

முதன்முதலாக வெண்முரசு கூடுகைக்கு விஜயசூரியனின் இல்லத்திற்கு சென்று அங்கு அத்தனை தோழமையும் அத்தனை புரிதலுமாக ஆணும்,பெண்ணும் வாசிப்பில் மகிழ்ந்திருக்க முடியுமென்பதை வாழ்வில் முதன்முதலாக கண்ட பிரமிப்பு எனக்கு இன்னும் இருக்கின்றது. அதுபோன்ற சந்தர்ப்பங்கள் என் குடும்பத்து பெண்களுக்கெல்லாம் கற்பனைக்கெட்டாதவை, எனக்கு எப்படியோ வெண்முரசால் அருளப்பட்டவை

.சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரின் சித்தர் கோவிலுக்கு ஒருமுறை பேருந்தில் சென்று கொண்டிருக்கையில் ஜெயமோகனும் அருண்மொழியுமாய் ஒரு ஐரோப்பிய பயணத்திலிருந்த புகைப்படங்களை நண்பரொருவர்  அனுப்பியிருந்தார். மகன்களுடன் அவற்றைப் பார்த்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கையில் அருகில் அமர்ந்திருந்த ஒரு கிராமத்துப் பெண்மணி உங்களிருவரின் புகைப்படத்தை தொட்டுக்காட்டி’ யாரு கண்ணு உன்னோட அண்ணனும் நங்கையாளுமா?‘ என்றார்கள். மனம் சட்டென்று பூரித்து, நிரம்பி, மூச்சடைத்தது, சமாளித்துக்கொண்டு ’ஆம்’என்றேன்.

 முதல் சந்திப்பிலேயே சின்னப்பிள்ளைக்கு சொல்லித்தருவதைப்போல அன்புடனும் பொறுமையுடனும் எனக்கு தமிழ் தட்டடச்சு செய்ய கற்றுக்கொடுத்த மீனாம்பிகையிலிருந்து, சொந்த சகோதர சகோதரிகளைப்போல இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்க தயாராக  உலகெங்கிலும் இருக்கும் அத்தனை நண்பர்களுடன்  நானும் வெண்முரசு குடும்பத்தின் ஒர் அங்கம் என்பதைத்தவிர பெருமையான, சிறந்த  விஷயம் எனக்கு வேறோன்றுமே இல்லை

வெண்முரசை வீட்டிற்கு வெளியே மரங்களுக்கு அருகிலும், அடியிலும் அமர்ந்தேதான் பெரும்பாலும் வாசித்திருக்கிறோம். மகன்களுடன் மரங்களும்,செடிகொடிகளும் சேர்ந்து வெண்முரசை கேட்டுத்தான் வளர்ந்தன. அன்று சிறு கன்றுகளாக வைத்திருந்தவை இன்று வீட்டைவிட உயரமான பெருமரங்களாகி விட்டிருக்கின்றன. மாமலர் துவங்குகையில் பூக்கத்துவங்கிய புன்னைக்கு மாமலர்ப்புன்னை என்றே பெயர். சொல்வளர்க்காடு துவங்குகையில் நட்டுவைக்கப்பட்ட ஏழிலைப்பாலையும், இந்திரநீலத்தில் பாளைவிட்ட தென்னையொன்றும், காண்டீபத்தின் போது மலரத்துவங்கிய கொடிச்சம்பங்கியும், வெண்முகில் நகரின் மீது படர்ந்து மலர்ந்த ருத்ரமல்லியுமாய் என் மகன்களுக்கு நான் விட்டுசெல்லவிருப்பது கதைகேட்டுக்கேட்டு வளர்ந்து இவ்வீட்டை சூழ்ந்திருக்கும் பசுமையையும், வெண்முரசென்னும் உறவுகளையும் மட்டும்தான்

வாசிப்பென்பது இத்தனை பெரிய இயக்கமாக, ஒரு கொண்டாட்டமாக இருப்பதெல்லாம் வெண்முரசைப்போன்ற ஒரு பேரிலயக்கியத்திற்க்குத்தான் சாத்தியம். என்னைபோல் வீட்டுக்கும், வேலைசெய்யும் இடத்துக்கும் தவிர வேறெங்கும் செல்லும் சாத்தியங்களும், சுதந்திரமும் அற்ற பெண்ணுக்கு வெண்முரசு திறந்து விட்டிருக்கும் வாயில்கள் ஏராளம்.

 வெண்முரசின் சொற்களெல்லாம் எங்களின் மனதில் பல்லாயிரம் விதைகளாக, நிறைந்து முளைத்து வளர்ந்து கொண்டெ இருக்கின்றது. ஆலெனப்பெருகி அருகென தழைத்தபடியெ இருக்கும் வெண்முரசு வாழ்வில் கொண்டுவந்திருக்கும்  நன்மாற்றங்களுக்கும், நிறைவிற்கும், மகிழ்விற்கும் இனிமைக்கும், துயருக்கும், கனிவிற்கும் இன்னும் எல்லாவற்றிற்குமாய் மனம் நிறைந்த நன்றிகள்

  வெண்முரசின் கழிமுழையின் தாளம் என் இறுதிக்கணம்  வரையிலும் இதயத்துடிப்பிற்கு இணையாகவே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் ஒவ்வொரு வருடமும் இறுதிவருட படிப்பை முடித்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றுக்கொண்டு பிரியும் மாணவர்களை நினைத்துக்கொண்டு தனித்தமர்ந்திருக்கையில் உணரும் இனிய துயரே இன்று எனக்கிருக்கிறது,  ஒருவேளை எனக்கு பெண் பிறந்திருந்து அவளுக்கு விருப்பமானவருடன் அவளது திருமணம் முடிந்து அவள் சென்றிருந்தாலும் இப்படித்தான் உணர்ந்திருப்பேனாயிருக்கும்.  

// நிறைவின்மை என்னும் கூரலகு கொண்ட மரங்கொத்தி.

முடிவின்மையை ஏந்தி அமைதிகொண்டிருக்கிறது காடு//

ஈரோடு வெண்முரசு சந்திப்பு

ஈரோடு, காஞ்சிகோவில் பண்ணை வீட்டில் வெண்முரசின் சிறப்புக்கூடுகையில் கலந்துகொண்ட பின்னர் இப்போதுதான் ஊர் திரும்பினேன். இதற்கு முன்னர் விஷ்ணுபுரம் விழாக்களிலும், ஊட்டி காவியமுகாம்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன் எனினும் இந்தக்கூடுகை மிகச்சிறப்பானதொன்றாக இருந்தது. திரு ஜெயமோகனின் எழுத்துக்களில் அனைத்தையுமே நான் வாசிப்பவள் அதுவும் மீள் மீள வாசிப்பவள் எனினும் ’வெண்முரசு’ என்னும் மாபெரும் படைப்பினைக்குறித்த பிரமிப்பே எனக்குள் முழுமையாக நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் மீள் வாசிப்பில் எனக்கு பல புதிய விஷயங்கள்  தெரிய வந்துகொண்டே இருக்கின்றது.. எனவே இந்த வெண்முரசுக்கான சிறப்புக்கூடுகையில் நான மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.

முதல் நாள் ஜெ இல்லாவிடினும் வழக்கம் போலவே சரியான நேரத்தில் ஏற்கனவே கலந்துகொள்பவர்களுக்கு தெரிவித்திருந்தபடி முதல் அமர்வு துவங்கியது. திரு. மது ,வெண்முரசின் தரிசனங்களும் படிமங்களும் குறித்துப்பேசினார்.  ’’தண்நிலவும் கங்கையும், வழுக்கும் குளிர் நாகங்களும் சந்தனக்காப்புமாய் குளிர்ந்திருக்கும் சிவனை அனலோன் என்கிறோம்’’ என்னும் அவர் தமிழாக்கம்செய்த அந்த அழகிய சமஸ்கிருதப்பாடலுடன் துவங்கினார் குந்தி பீஷ்மர் சந்திப்பு சுப்ரியையின் எஞ்சும் நஞ்சு, முதற்கனலில் விதைத்தவை இன்று முளைத்து கிளைபரப்பி வளர்ந்திருப்பது என்று அழகாகப் போனது அவர் உரை..  குறிப்பாக சுழற்சி தரிசனம் குறித்து வெகு அருமையாக சொன்னார்.

அனைத்து அமர்வுகளிலுமே திரு கிருஷ்ணன்  வலுவான ஆதாரபூர்வமான தகவல்கள் நிறைய  அளித்தார். அவரை இதற்கு முன்னரே பல ஆண்டுகளாக, நிகழ்வுகளை கச்சிதமாக ஒருங்கிணைப்பவராக, மட்டுறுத்துனராக, உரைகளில் ஆழ்ந்து மட்டுறுத்துவதையே மறந்தவராக, உங்களின் மிக நெருங்கிய அன்பு நண்பராக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்தக்கூடுகையில் அவரின்  legal expertise என்னவென்பதை உணர முடிந்தது.

Biological  தந்தை யாரென்பதற்கான  DNA   சோதனைகளுக்கான சட்டம், பிறழ் உறவில் பெண்னை குற்றவாளியாக இணைக்கக்கூடாது எனும் சட்டம், கர்ணனை least crime committed  என்று சொல்லலாம் இப்படி ஒவ்வொருஅமர்விலும் வெண் முரசு தொடர்பான பல சட்ட நுணுக்கங்களை விளக்கமாக கூறினார்

அடுத்த அமர்வில் பாரி, வெண்முரசின்  உச்சதருணங்கள் குறித்துப்பேசினார். அரிஷ்டநேமி இளையயாதவர் குசேலர்,புஷ்கரன் என்று மிக முக்கிய கதாபாத்திரங்களின் உச்ச தருணங்களை விளக்கினார். பல வருடங்கள் ஊழ்கத்திலிருந்த இளைய யாதவரின் பீலிவிழி  அவருக்குப்பதிலாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்ததை,  இளைய யாதவருக்கும் குசேலருகும் இருந்த உறவை, புஷ்கரன்  என்னும் ஆளூமையைக்குறித்தெல்லாம் பேசினார்.

அந்த அமர்விலும் நிறைய கலந்துரையாடினோம். கர்ணனுக்கும் சுப்ரியைக்குமான கசப்பு அவள் சேடி இறந்தபோது அவளின் வஞ்சமும் இறந்துவிடுவது இப்படி கலந்துரையாடலிலும் அதிகம் புதிய கோணங்களும் புதுப்புது அர்த்தங்களும் கிடைத்தன பலரிடமிருந்து

அடுத்ததாக ராகவ் சொற்களின் எண்ணிக்கை குறித்து மிக விரிவான ஒரு ஆய்வு செய்திருந்தார். அது மலைப்பாக இருந்தது மொத்த வார்த்தைகள் இதுவரை வெண் முரசிலெத்தனை, குறிப்பிட்ட சில வார்த்தைகள் எத்தனை முறை உபயோகத்திலிருக்கிறது, எப்படி ஒரு குறிப்பிட்ட வார்த்தையை சுலபமாக தேடி எடுக்கலாம் என்றெல்லாம் விளக்கினார்.

பின்னர் ராஜமாணிக்கம் அவரகளின் ‘  வெண்முரசில் தந்தைமை’’ அமர்வு துவங்கியது. அது தீப்பிடித்தது போல பலராலும் பலவிதங்களில்  அனல் பறக்க விவாதிக்கப்பட்டு கூட்டுஉரையாக இருந்தது. குறிப்பாக பாரி, ’திருதிராஷ்டிரர் பெரும் தந்தையா அல்லது வெறும் தந்தையா’ என்று எடுத்துக்கொடுத்தது  வெகு ஆர்வமாக மிகஆவேசமாகக்கூட விவாதிக்கப்பட்டது. திருதிராஷ்டிரர், தீர்கதமஸ், துரோணர்,ஜாததேவன் சாத்யகி விதுரர், யயாதி என்று தந்தையரின் பட்டியலும் விவாதமும் மிக சுவாரஸ்யமாக நீண்டுகொண்டே போனது.

பிறகு மறுநாளின் அமர்வில் ஜெ’வும் இருந்தார். அந்தியூர் மணி அவர்களின் ‘’ பிற இலக்கியஙகளிலிருந்து வெண்முரசில் எடுத்தாளப்பட்டவை’’ என்னும் உரையும், பாண்டிச்சேரி தாமரைக்கண்ணனின்  மாமழை குறித்த அருமையான் உரையும், வேணுவின்  ‘’ நீலம் மலர்ந்த நாட்களும்,  மதிய உணவிற்குபின்னர் ஜெ’வின் உரையுமாய் அன்றைக்கும் மிக அருமையான ஒரு நாளாகவே இருந்தது.

இந்த இரண்டு நாட்களுக்குப்பின்னர் இப்போது நினைக்கிறேன் நான் வெண்முரசை மிக நேரடியாக வாசித்திருக்கிறேன் என்று. வெண்முரசென்னும் ஒரு மாபெரும் அரண்மனையின் கதவுகளைத்திறந்து நேராக உள்ளே விடுவிடுவென்று சென்று கொண்டிருந்திருக்கிறென் அந்த மகத்தான படைப்பின் பலதளங்களையும் அடுக்கைகளையும் மறை பொருட்களையும் நான் அறிந்திருக்கவே இல்லை

வெண்முரசு வாசிப்பில் இத்தனை இத்தனை சாத்தியங்கள் இருக்கின்றது, பிரம்மாண்டமான் இப்படைப்பை இத்தனைஇத்தனை  கோணங்களில் வாசிக்க முடியுமென்பதைத் தெரிந்துகொண்டேன்  ஒவ்வொரு கூடுகையிலும் புதியவர்கள் இளைஞர்கள்,   மற்றும் பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் மகிழ்ச்சியாக இருந்தது.

விஷ்ணுபுரம் விழா எப்படி வருடந்தோறும் நடைபெறுகின்றதோ, அப்படி வெண்முரசுக்கும்  அவசியம் நடத்தினால் இன்னும்  பல வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஒரு வேண்டுகோளாகக் கேட்டுகொள்கிறேன்.

என்னைபொருத்தவரை மிக plain ஆக இருந்த  வெண்முரசு வாசிப்பு இன்று மிகப்பெரிய சித்திரமாகிவிட்டிருக்கிறது.

உறிஞ்சுதாளில் சொட்டிய மைத்துளி  ஊறி, விரிந்து பரவிச்செல்வதுபோல பல கோணங்களிலும் வாசிப்பின் சாத்தியங்கள் விரிந்து வருவதை பலரும் ஆச்சரயத்துடன் இந்த இரண்டு நாட்களும் உணர்ந்தோம்.   வழக்கம் போல சரியான நேரத்திற்கு உணவும் தேனீரும்சிற்றூண்டிகளும்   வழங்கப்பட்டது, வாழையும் கரும்பும் சேனையும் மஞ்சளுமாக அருமையான சூழலில் இருக்கும் பண்ணை வீட்டில் இக்கூடுகை நடந்தது இன்னும் சிறப்பாக இருந்தது

இவற்றை எற்பாடு செய்தவர்களுக்கும் பலவேலைகளை விருப்பத்துடன் செய்தவர்களுக்கும் அமர்வுகளில் உரையாற்றியவர்களுக்கும், திருஜெயமோகனுக்கும் நன்றியை தவிர சொல்லிக்கொள்ள வேறென்ன இருக்கிறது?

பெருமாள் முருகனின் கூளமாதாரி

கூளையன் என்னும் மாதாரிச்சிறுவன் பண்ணையக்காரரிடம் வருடக்கூலிக்கு விடப்படுகிறான். ஆடுகளை மேய்ப்பதும் சில்லறைவேலைகளை செய்வதும் பழையதை உண்பதும் வசவுகளை வாங்கிக்கொள்வதுமாக செல்லும் அவலவாழ்வுதான் எனினும் அவனுக்கும் அவனையொத்த அடிமைகளுடன் நட்பும் உறவுமாக ஒரு உலகிருக்கிறது. அவ்வுலகில் அவன் மகிழ்ந்திருக்கிறான். ஆடுகளுக்கு பெயரிட்டு அவைகளுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு அவைகளுடன் தாய்மொழியில் எப்போதும் பேசிக்கொண்டும் அதட்டிகொண்டும் இருக்கும் எளியவன் கூளையன்

அதிகாலையில் சாணம் அள்ளி, வாசல் பெருக்கி கைபடாமல் துணிசுற்றி மேல்சாதியினருக்கு பால் போசியை கொண்டு சென்று,  பட்டி நீக்கி ஆடுகளை மேய்க்கக்கொண்டு போவது தேங்காய்சிரட்டையில் காபிகுடிப்பது, வசவுகளையும் அடிகளையும் சராமாரியாக வாங்கிக்கொள்வதுமாய்  இருக்கும் கூளையன் என்னும் அறியாச்சிறுவனே கதைநாயகன்

சட்டியில்  கிழவனின் மலமும் மூத்திரமும் அள்ளும் நெடும்பன், சீக்குபண்ணயக்காரியின் கைக்குழந்தையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு  ஆடுமேய்க்க வரும் செவுடி,அவளின் நோயில் வெளுத்திருக்கும் தங்கை பொட்டி,  எருமைகளையும் மேய்க்கும் வவுறி, கள் தரும் மணி, பூச்சி  நாய், வெயில் மழை இரவு நிலவு மண்ணில் குழிபறித்து விளையாடும் பாண்டி, கிணற்று நீச்சல் பனம்பழம் புளியங்காய் பாறைச்சூட்டில் வறுத்த காடை முட்டைகள், இவர்களாலும் இவைகளாலும் ஆனது கூளையனின் உலகு

நாவல் முழுக்க பரந்துவிரிந்திருக்கும் மேட்டாங்காடும் பண்ணயக்காரர்களின் அழிச்சாட்டியமும்   மாதாரிகளின் அவலவாழ்வும்  விரிவாக அக்களத்திற்கேயான வாழ்வுமுறைகளின் விவரிப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது

மாட்டுக்கறி உண்னும்பொருட்டு  கூளையனுக்கு கிடைக்கும் ஒரு ராத்திரி விடுதலையை இன்னுமொரு நாள் அவனாக நீட்டிப்பது, கிழங்குப்பணத்தை அவனையே வைத்துக்கொள்ள பண்ணயக்காரர் சொல்லுவது இந்த இரண்டு இடங்களே  நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருவதாக இருக்கின்றது முழு நாவலிலும்

பண்ணையக்காரரின் அத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேளாதவன் போலவே இருக்கும் கூளையன் தேங்காய் திருடி எதிர்பாரா பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் கிணற்றில் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்படும் கூளையன் இறுதியில்  பன்ணையக்காரரின் மகன் செல்வத்தை கிணற்று நீரில் முக்கி கொல்வதில் முடிகின்றது கதை

விவசாயம் கூலிவாழ்க்கை, கிராமத்டு வாழ்வு, சாதி வேறூபாடுகள், ஆடுமாடு வளர்ப்பிலெல்லாம் பரிச்சயமுள்ளவர்களால் எளிதில் தொடரமுடியும் கதைஇது

அத்தைய வாழ்வில் அறிமுகம்கூட இல்லாதவர்களால் இந்நாவல் விரிக்கும் களத்தையும் விவரிக்கும் கதையையும் கற்பனையில் சித்தரித்துக்கொள்வது கடினமென்றே எனக்கு தோன்றுகிறது

 மைனாக்களை வேடிக்கை பார்ப்பது, மாட்டுக்கறி இரவிற்கு பிறகு தங்கைதம்பியை பிரிய மனமின்றி  தவிப்பது, பீடி குடித்துப்பழகுவது  ஆமரத்துக்கள் இறக்க கோவணத்தை அவிழ்த்துவிட்டு மரம்ஏறி அங்கிருந்து தெரியும் காட்டைப்பார்ப்பது  பனம்பழங்களை பொறுக்கி கிழங்குபோடுவது புளியம்பழம் உலுக்குவது இரவில் திருட்டுத்தனமாக பார்க்கும் தலைவர் படம் பட்டி ஆடு காணமால் போவது தேங்காய் திருடிமாட்டிக்கொள்வது என ஒரு மாதாரிச்சிறுவனின் வாழ்வை அப்படியே நம்மால் காணமுடியும்

கதையோட்டம் தொடர்ந்து சீராக இருப்பதில்லை சில சமயம் தேங்கி நிற்கிறது, சில சமயம் பீறீட்டு பாய்கிறது சில சமயம் வறண்டும் போகிறது

வளர்த்த வீரனின் கறியை திங்கமறுக்கும் கூளையன் நண்பனாகவும் இருந்து முள்ளுக்குத்தாமல் பழம் பொறுக்க செருப்பை தந்த, பட்டிக்காவலில் அப்பனுக்கு தெரியாமல் மச்சுக்குள் வந்து படுத்துக்கொள்ளச் சொன்ன,  கள்ளிறக்குகையில் துணை இருந்த, பள்ளிக்கூட கஷ்டத்தை கன்ணீருடன் பகிர்ந்துகொண்ட செல்வத்தை கிணற்று நீரில் அறியாமலும் தவிர்க்கமுடியாமலும் முக்கிக்கொல்வதுடன் முடியும் இக்கதை, வாசிக்கையில் பல இடங்களில்  காய்ந்த வயிற்றில் மிளகாய்கள் நீச்சம் போட்டு மிதக்கும் கம்மஞ்சோற்றுக்கரைசல்  இறங்குவது போல் குளுகுளுவென்றும் ஆங்கரமாய் அடிக்கும்வெயிலைப்போல கடுகடுவென்றும்  மாறி  மாறி கூளையனின் வாழ்வை சொல்கிறது, ஆசிரியரே சொல்லியிருப்பதுபோல் சொல்லாத பல கதைகளும் உள்ளது சொல்லப்பட்ட இக்கதையினுள்ளே

அற்றைத்திங்கள்

அற்றைத்திங்களில்  பெளர்ணமி கடந்து இரண்டு நாட்களான அந்நிலவு முதல் அத்தியாயத்திலிருந்து இறுதியான  23 ஆம் அத்தியாயம் வரைக்குமே  தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது., நாம் பயணிக்கையில் நம்மைத்தொடரும் நிலவு அவ்வப்போது கட்டிடங்களிலும் மரங்களிலும் மறைவது போல இங்கும் சில அத்தியாயங்களில் அது மறைந்தாலும் இறுதியில் மீண்டும்  குட்டைகளுக்குள் நீர்ப்பிம்பமாக வெளிவந்து விடுகின்றது.  காடுகள் அடர்ந்திருந்ததிற்கும்,அதனுள் பூர்வகுடியினர் மகிழ்ந்திருந்ததற்கும், நாகரீகம் என்னும் பெயரில் அத்தனைக்கும் ஆசைபட்டவர்களால் மெள்ள மெள்ள அவையெல்லாம் அழிந்துகொண்டிருப்பதற்கும், அனைத்திற்கும்  யுகங்களைக்கடந்த  மவுனசாட்சியாய் அந்நிலவு இருக்கிறது .  அட்டைப்படத்திலுமிருக்கிறது ஓர் பாலெனப்பொழியும் நிலவு கனிமங்கள் சுரண்டப்படுவதை மேலிருந்து பார்த்தபடி.  நினைத்திருக்குமாயிருக்கும் நல்ல வேளையாய்  தன்மேல் கால்பதித்த மனிதன் இன்னும் கரைத்தழிக்க வரவில்லையென்று     

நல்ல கதை , கதையென்று தட்டச்ச தயக்கமாயிருக்கிறது ஏனெனில் இதில் புனைவெதுவுமே இல்லை பெயர்களும் சில இடங்களும் வேண்டுமானால் புனையப்பட்டவையாயிருக்கலாம் மற்றவையெல்லாமே கசக்கும் உண்மையல்லவா? குடியிருக்கும் வீட்டின் கூரையை ஓட்டையிடும் நம் முட்டாள்தனத்தைப்பதிவுசெய்திருக்கும் புத்தகம் இது.

அழகாக கட்டமைக்கபட்டிருக்கிறது நாவல், புதிய யுகத்தைச்சேர்ந்த கொதிக்கும் குருதியுள்ள ஒரு இளைஞன் , ஒரு யுவதி, மிக மெல்லிய கோடாக சொல்லப்பட்டிருக்கும் அவர்களுக்கிடையேயான காதல், இணைந்து பணியாற்றும் சூழலில், அசாதாரண நிகழ்வுகளில்  அவர்களின் நெருக்கம் கூடுவது, பூர்வகுடியினரின் இயற்கையோடு இணைந்த வாழ்வும், அவ்வாழ்விற்கு  மெல்ல,மெல்ல ஆனால் மிக வலுவாக வந்துகொண்டிருக்கும் ஆபத்தும்,  அதிகாரதுஷ்பிரயோகமும், பிரபலங்களின் ஆதிக்கமும் வெளிநாட்டுச்சக்திகளின் பேராசையும், காடுகளும், பூர்வகுடியினரின் வாழ்வும் அழிவதற்கு காரணமாவதும், மனச்சாட்சியுள்ள சிலரின் கையாலாகாத எதிர்ப்புமாக கதை சொல்லப்படுகிறது.

 விளிம்பு நிலை மக்களின் தேவைகளை ஆதிக்கச்சக்தியினர்  வேலைவாய்ப்பாகவும் வெள்ளித்தட்டாகவும்  நிறைவேற்றி பதிலுக்கு வாழ்வாதாரங்களை விலைபேசுவதையும் புரியவைக்கும் கதையோட்டம். நேர்க்கோட்டில் கதையைச்சொல்லிச்செல்லாமல், குடும்பத்தை, அங்கிருப்பவர்களின் உணர்வுகளை ஆசாபாசங்களை, அக்கறையை,   அன்னியசக்திகளின் திட்டங்களை, மின்னஞ்சலும் கடிதங்களும் இன்றைய செய்திகளுமாய் இடையிடையே காட்டுவது , இப்படி  சொல்லவந்ததை தெளிவாக முன்கூட்டியே கட்டமைத்து பின்னர் அதற்கேற்ப  கதையைக்கொண்டுசென்றிருப்பது நல்ல உத்தி

பரணியின் அம்மா ஒரு typical  அம்மா மற்றும் மாமியார். அவரது பாத்திரம் மிக உயிர்ப்புடன் சித்தரிக்கபப்ட்டிருக்கிறது. கணவன் என்ற ஒற்றைப்பிம்மத்திற்குள் வாழ்வை அடக்கவேண்டியிருப்பது, அம்புலி என்னும் விளி தேய்ந்து தற்போது  பேச்சுக்கள் மொட்டையாக எழும்பி அடங்குவது, மிக, மரநிழலில் வாகனத்தை நிறுத்துவது, இருவரின் சம்பாஷணை போய்க்கொண்டே இருக்கையில் எழுத்தின் வடிவத்தை கொஞ்சம் போல மாற்றிக்கொடுத்ததிலேயே அது தொழிலாளர்களின் போராட்டமுழக்கமென்றும், தொழிலாளர்கள் சார்பாக பேசும் ஒருவரின் மனக்குமுறலென்றும் வாசிப்பவர்களுக்கு புரியும்படி எழுதி இருப்பது, அழகாக அத்தியாயங்களை முடிப்பது இப்படி பல நுண்ணிய,  அழகியவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்

மரங்களைக்கட்டித்தழுவிக்கொண்டு அவற்றை காப்பாற்றிய சிப்கோ இயக்கத்தையும், மணலில் புதையும் போராட்டத்தையும் கூட தொட்டுச்சென்றிருக்கிறது நாவல். BUFFER ZONE,  MONOCULTURE, காப்புக்காடுகள், புலிகளின் அழிவு, யானைகளின் வழித்தடம் இப்படி என் துறை தொடர்பான பலவறையும் வாசித்ததில் நான் அற்றைத்திங்களுக்கு இன்னும் நெருக்கமானேன். (நானும் பரணி நட்சத்திரமென்பதாலும் சிறுமியாயிருக்கையில் வந்த பிரைமரிகாம்ப்ளெக்ஸுமாய், என்னையும் கதையின் நாயகியாய் பாவித்துக்கொண்டதில்  இன்னும் கூடுதல் அணுக்கமும்  கிடைத்தது.) ):

தேனடைகளை கொஞ்சம் மிச்சம் வைக்கும் பூர்வகுடியினரின்  sustainbale harvesting  முறைகளை நானும் அவர்களுடன் இருக்கையில் கவனித்திருக்கிறேன். கிழங்குகளை அகழ்ந்தெடுக்கையில் 3ல் ஒரு பங்கு மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். கிழங்குகளிலிருந்தே இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற. டாப்ஸ்லிப்பின் 35 tribal settiment  களில்  பலவற்றில் நான் பல காலம் செலவழித்திருக்கிறேன்.

பெண்ணியம் தொடர்பான சில செய்திகளும் இதில் சொல்லி இருப்பது போலவே நடைமுறையில் இருப்பவைதான்.  மான்களின் கர்ப்ப காலத்தில் அவற்றை வேட்டையாட மறுக்கும் அவர்களின் இயற்கை சார்ந்த அறத்திற்கும் மதக்கலவரங்களின் போது மாற்று இனத்தைச்சேர்ந்த கர்ப்பிணியின் கருக்குழந்தையை கைவிட்டு எடுத்து வெளியே வீசிய  மனிதர்களின் வெறித்தனத்திற்கும் என்ன பிழையீடிருக்கிறது நம்மிடம்? காட்டுமிராண்டி என்னும்  சொல்லை வசையாக பயன்படுத்த தகுதியற்றவர்கள் நாம்

கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கில் ஒரு பயிற்சியின் பொருட்டு அடர்ந்த வனப்பகுதியிலிருந்த நாட்களில், அப்போது  காடு முழுவதும் பூத்திருந்த மூங்கில் பூக்களை, அது ஒரு அபூர்வ நிகழ்வென்பதால் என் மாணவர்களுக்கு காட்ட கொஞ்சம் எடுத்துச்செல்ல அனுமதி கேட்ட போது அங்கிருந்த பூர்வகுடியினைச்சேர்ந்த ஒரு இளைஞன் திட்டவட்டமாக மறுத்ததும், கீழே உதிர்ந்துகிடந்த சில மலர்க்கொத்துக்களை பெருமுயற்சியின் பேரில்  அங்கிருந்த என் ஆசிரியர் வாங்கித்தந்ததும் நினைவிற்கு வந்தது. அத்தனைக்கு அவர்கள் காடுகளை சொந்தமென்று நினைத்து வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இளைஞனின்  சின்னஞ்சிறிய 30/40 வீடுகளே இருக்கும் ஊரின் பெயர் கருவறை. எத்தனை பொருத்தமிது இல்லையா?

 இயற்கை அன்னையின் கருவறையிலேயே இன்னும் இருக்கும் படி அருளப்பட்டவர்களை விரட்டிவிட்டு கனிம வளக்கொள்ளையிலிறங்கியிருக்கும் பேராசைக்காரர்களின் கதையென்பதால் உணர்வுபூர்வமாகவே 2 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன் இதை.

ஒரு பகுதியில் குறிப்பிடிருந்ததைபோலவே பூர்வகுடியினர் என்றால் இலையாடைகளுடனிருப்பார்கள் என்று முதன் முதலாக என் ஆய்வினைத்துவங்கிய போது நினைத்துக்கொண்டு சோலையாறு வனப்பகுதிக்கு சில ஜெர்மானிய நண்பர்களுடன் காட்டில் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி புடவை கிழிந்து சோர்ந்து நாங்கள் அவர்களின் குடியிருப்பிற்குள் செல்கையில் அன்றைய தினம் அவர்களின் பண்டிகை என்பதால் மிக நேர்த்தியாக உடுத்திக்கொண்டு handbag  போட்டுக்கொண்டு நகச்சாயம் கூட பூசிக்கொண்டிருந்த அவர்கள் எங்களை பூர்வகுடியினரைப்போல வேடிக்கை பார்த்த கதையையும் நினைத்துக்கொண்டேன்Ecotourism போல இப்போது துவங்கப்பட்டு நல்ல லாபம் தந்துகொண்டிருக்கும் religious tourism  பற்றியும் ஆசிரியர் கலைச்செல்வி ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

வனத்துறை அதிகாரிகளே வனத்தை அழிக்க உடந்தையாயிருப்பதையும் பூர்வகுடியினரின் மொழியிலேயே சொல்லி இருப்பது சிறப்பு.வனத்துறையில் அதிகாரியாயிருக்கும் என் மாணவன் சொல்லுவான் காட்டுத்தீ பெரும்பாலும் அதிகாரிகள் ஏற்படுத்துவது என்று, மிக முக்கியமான விலைஉயர்ந்த மரங்களை வெட்டி கடத்திவிட்டு அந்த இடத்திற்கு தீ வைத்துவிட்டு சாம்பலாகிபோனதென்று கணக்கு காட்டப்படுவதை  எந்தக்கோடையிலும் சாதாரணமாகக்காணலாம்

            இறுதியில் பெற்றோரின் பாசத்தை இயற்கையுடன் ஒப்பிட்டது அழகு. பிணந்தின்னிக்கழுகுகளும் உடும்பைப்பிடித்த நரியும் படிமங்களாக எனக்குப்பட்டது. குணாவிடம் கதறி அழுத பரணியைபோல வாசித்து முடித்தபின்னர் மனம் கையலாகாத்தனத்தில் கதறியது. வேறேதும் செய்ய இயலாததால்.

சமூக அக்கறையுடன் சொல்லபட்டிருக்கும் ஒரு மிக அழகிய கதை அற்றைத்திங்கள் முழுக்கதைக்கும் சாரமாய் இருக்கிறது ‘’பெருங்காட்டின் ஒற்றைத்துளி’’ எனும் பசுமூங்கிலில்  முடையப்பட்ட முறத்தினை சொல்கையில். .

ஒரு சில தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன, மாக்கல்லுபந்தம் உக்கடத்தீ இவையெல்லாம் என்னவென்று எனக்குப்புரியவில்லை,  அப்படி பலருக்கும் புரியாமல் போயிருக்கும் வாய்ப்பிருப்பதால், அவற்றிற்கெல்லாம்  கதையிலேயே விளக்கம் சொல்லி இருந்திருக்கலாம். மரவள்ளிகிழங்கென்றே இதுவரை வாசித்திருக்கிறேன் ’’மரவல்லி’’ யென்றல்ல, ஒருவேளை அப்படியும் ஒரு வழங்கல் இருக்குமோ என்னமோ, பின்னர் ஒரு இடத்தில் புலி வேட்டைக்கு வரும் ஆங்கிலேயெ அதிகாரிகளைக்குறித்தான ஒரு பத்தியில் துரைசாணி என்று ஒரு ஆண் அதிகாரியை குறிப்பிடபட்டிருக்கிறது  பொதுவில் துரையின் மனைவியே துரைசாணி

நினைவுதிர்காலம் -யுவன்

டிசம்பர் 2019 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஊர்சுற்றி கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தேன். கானல் நதியை பொள்ளாச்சியிலிருந்து கும்பகோணம் வரையிலான ஒரு பயணத்தில்  தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். ஊர்சுற்றியை எனக்கு முன்பே வாசித்திருந்த  நண்பர்களுடன் அதைக்குறித்து அவ்வப்போது பேசிக்கொண்டும் கதையைக்குறித்து சிலவற்றை  விவாதித்துக்கொண்டும்   ஒரு வார இறுதியில்வாசித்தேன். கடந்த திங்கட்கிழமை நினைவுதிர்காலத்தை துவங்கினேன். நேற்று வாசித்து முடித்தேன்.

யாரிடமும் வாசிப்புக்குறித்து பகிர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை . அப்படி ஒரு நிறைவு எனக்குள்.

எந்த புத்தகம் வாசித்தாலும் கதையும் மொழிநடையும் சில வர்ணனைகளும் வாசிக்கையில் நானே கட்டமைத்துக்கொண்டசில காட்சிகளும் உள்ளே மீள மீள நிகழ்ந்துகொண்டிருக்கும். பின்னர் கதையைக்குறித்து எழுதுவேன் அல்லது யாரிடமாவது பேசுவேன்

நினைவுதிர்காலம் அப்படியல்லாது வேறுபட்ட உணர்வுநிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்கே எதை நம்ப முடியவில்லை என்றால் இந்தக்கதை எனக்கு புரிந்துவிட்டதுதான். இசைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது . கொங்குபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என் வாழ்வு முழுக்க இசை போன்ற நுண்கலைக்கான exposure எள்ளளவும் இன்றி காடும் தோட்டமும் வீடும் வேலையுமாய் இருந்தது.  தப்பிப்பிழைத்து எப்படியோ கல்லூரியும் பல்கலையும் போய் படித்தேன் என்றாலும் அடிப்படிஅயில் அதே கிராமத்து உழைக்கும் வர்க்கத்து மனுஷிதான் நான்.

இசைக்கும் எனக்குமான தொடர்பென்றால் எப்போதாவது திரையிசைப்பாடல்களை கேட்பதும் ’நல்லாருக்கே’ என்றோ ’சகிக்கலை இந்தப்பாட்டு’ என்றோ சொல்லுவதோடு முடிந்துவிடும். மற்றபடி இசைக்கு என்னையும் எனக்கு இசையையும் துளியும் பரிச்சயமில்லை

இந்தக்கதை முழுக்க, (இதைக்கதை என்று சொல்லலாமாவென்றும் தெரியவில்லை) இசையை , ஒரு இசைமேதையை அவரது உறவுகளை அதன் சிக்கலான பல அடுக்குகளை அவரது வாழ்வு முழுமையை இசையின் பற்பல நுட்பங்களை பல வகையான இசையை இசையாளுமைகளை சொல்லியது.  வாழ்நாளில் பள்ளிப்பருவத்தில் கணேஷ் குமரேஷின் துவக்ககால கச்சேரியொன்றைத்தவிர வேறு இசைதொடர்பான கச்சேரிகளுக்கு கூட போயிறாத என்னை இக்கதை முழுவதுமாக கட்டிப்போடுவிட்டது.

இக்கதை முழுவதையும் என்னால் அனுபவித்து ரசித்து ஆழ்ந்து வாசிக்க முடிந்ததில் எனக்கே ஆச்ச்சர்யம்தான்

ஏறத்தாழ  250 பக்கங்கள் கொண்ட முழுக்கதையையும் நேர்காணல் உரையாடல் வடிவிலேயே கொண்டு வந்திருப்பதும் எந்த இடத்திலும் சிறிதும் தொய்வின்றி கொண்டு போயிருப்பதும் சிறப்பு.

வறட்சியான ஜீவனற்ற கேள்வி பதில்களாக இல்லாமல் சாமார்த்தியமான பொருத்தமான சரியான சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்கு சற்றும் குறைவில்லாத பதில்களுமாய் துவக்கத்திலிருந்தே கதையுடன் ஒட்டுதல் வந்திவிட்டிருந்தது. மேலும் ஆஷாவையோ திரு ஹரிஷங்கரையோ குறித்து தோற்றம் எப்படியிருக்குமென்று எந்த அபிப்பிராயமும் இல்லாததால் அவர்களைக்குறித்து எனக்குள் ஒரு கற்பனைச்சித்திரம் உருவாகிவிட்டிருந்தது. அவரை  பல இடங்களில் நுட்பமாக வர்ணித்துமிருந்ததால் அவரின் ஆளுமைக்கு எனக்குள் சரியான வடிவமொன்று அமைந்துவிட்டிருந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறை அந்த வீடு  அவரின் செல்லப்பிராணிகள் சமையலுக்கு உதவும் பெரியவர் சமையலில் என்ன பதார்த்தங்கள் அதில் அவர் விரும்பி உண்ட இனிப்பு ஒரு விளக்கைபோடுவது அதை  அணைத்து மஞ்சள் விளக்கை போடுவது  பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தி மாயம் போல வந்து கவிழ்ந்துவிடுவது,இடையிடையே அவர் ஓய்வறைக்கு செல்வது, ஆஷாவின்  கார் கோளாறாவது, அவ்வப்போது இடையிடும் சில விருந்தினர்கள் அங்கிருக்கும் அலமாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என்று விலாவாரியான விவரிப்புக்கள் இருந்ததால் நானும் அந்த அறையில் அமர்ந்திருந்தேன் என்றே சொல்லலாம். எப்பேர்ப்பட்ட ஆளூமை அவர் என்னும் பிரமிப்பு இன்னும் அகலவில்லை

மூத்த சகோதரரின் மீது மனக்குறை இருப்பினும்  மரியாதைக்குறைச்சலோ மலினமான அபிப்பிராயமோ துளியும் அற்றவர். அவரது ஆளுமை எனக்கு அவர் மீது பெரிதும் மரியாதை கொள்ள வைத்தது.

தில்லி சுல்தானின் அரசவையில் ஆஸ்தான பாடகராக இருந்த அவரது முத்தாத்தாவின் கதை மெய்ப்புக் கொள்ள வைத்துவிட்டது. அக்கதையை வாசிக்கையில் வாசிப்பதுபோலவே இல்லை எனக்கு  ஒரு புராதன கருப்பு வெள்ளைத்திரைப்படத்தில் நானும் ஒரு பாத்திரமேற்று அங்கே அக்கச்சேரியில் இசையைக்கேட்டபடிக்கு அமர்ந்திருந்தேன்.

கிராமத்தில் அழியில் எதிர்ப்பட்டவருக்கென ருத்ரவீணை வாசித்த அவரது முன்னோர், கோளாறாகி ரயில் நின்று விட அப்போது புழுதியில் அமர்ந்து அந்த கிழவனாருடன் சேர்ந்து கச்சேரி செய்த அண்ணா, விசிலிலேயே இசைத்த நண்பர், காரணமறியா அவரது தற்கொலை, காணாமலே போன இன்னொரு தோழன் என்று ஒரு புனைவுக்கதையின் எல்லா சுவாரஸ்யங்களும் இருந்தது இதில்.  பல முக்கியமான வேலைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கச்சொன்னது கதை என்னை

தெய்வீகமான முப்பாட்டன்கள்,  நேர்மையையே முக்கியமாக கொண்டிருந்த, தகப்பனார் மாபெரும் இசைமேதையான அண்ணா அவரது சில சறுக்கல்கள், அவர் மீது  இவருகிருக்கும் ஒரு மாற்றுக்கூடகுறையாத மரியாதையும் பக்தியும் ஆஷாவின் அந்தரங்க வாழ்வைக்குறித்துத் தெரிந்துகொண்ட சில விஷயங்களுமாக நினைவுதிர்காலம் என்றென்றைக்குமாய் மனதில் வரி வரியாக நினைவிலிருக்கும் கதைகளொலொன்றாகிவிட்டது

பல பக்கங்களில்  அற்புதமான கவிதைகளை பத்திகளாக கொடுத்திருந்தது போலிருந்தது. பத்திகளின் வரிகளை மடக்கி கவிதைகளாக்குவதைத்தான்  வாசித்திருக்கிறேன் இது முற்றாக எதிராயிருந்தது. உதாரணமாக  கச்சேரி நாளன்று அவரது மனநிலையைப்பற்றி சொல்லும் பத்தியை சொல்லுவேன்

// கச்சேரி நாளில் செவிகளில் ஒருவிதக்கூர்மை அதிகரிப்பது, அதிகாலைப்பொழுதின் நிர்மலமான அமைதியின் பரப்பில் ஒவ்வொரு ஒலியாக சொட்டி குமிழிகளையும் வளையங்களையும் உருவாக்குவது, புத்தம் புதிய காகம், முதன்முறையாக காதில் விழும் சைக்கிள் ஒலி, அந்தக்கணம் தான் பிறந்து உயர்ந்தது போன்ற ஜன்னலோர மரக்கிளை//

அபாரம்

இப்படி பல பக்கங்களில் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசித்தென்

சத்தியத்தில் அடிக்கோடிட்டு வாசிக்கும்படியான புத்தகங்களை அரிதாகவே கிடைக்கப்பெறுகிறேன்

ஸ்ரீஹரிஷங்கர் அவரது மனைவி ஊர்மிளாவைப்பற்றிச்சொல்லியவற்றை வாசிக்கையில் மட்டும் அங்கெயே மனம் நின்று விட்டது. அவ்வரிகளை மீள மீள வாசிப்பேன். பின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேறு ஏதேனும் வழக்கமான இல்பேணுதலுக்கு சென்று விடுவேன் மனம் மட்டும் கடுமதுரம் ஒன்றை சாப்பிட்ட தித்திப்பில் நிறைந்திருக்கும் எப்படியாகப்பட்ட பேரன்பு அது என்று சிலாகித்துக்கொண்டேயிருக்கும் மனம்

இருவருமாக கருப்புக்கார் ஒன்றைத்துரத்திச்செல்லும் அந்த கனவிற்கு பின்னர் உங்கள் மனைவியிடன் உங்களுக்கும் அதே போன்ற கனவே வந்ததென்று சொன்னீர்களா என்னும் கேள்விக்கு // பளிங்கு பொன்ற மனம் அது வீணாக கலக்குவானேன் . அவளை பிரியமாக அணைத்துக்கொண்டேன்//  என்கிறார் அறியமால் கண் நிறைந்தது எனக்கு வாசித்ததும்

/ மாயப்பிரசன்னத்தின் வசம் சொந்தக் கவலைகளை ஒப்படைத்துவிட்டு அடைக்கலமாகிவிடும் மார்க்கம் எவ்வளவு இதமாயிருக்கிறது//

 இவ்வரிகளிலும் மனம் சிக்கிக்கொண்டது கொஞ்ச நேரத்திற்கு

ஹிந்துஸ்தானி இசையுலகம் எனக்கு முற்றிலும் பரிச்சய்மற்றது என்பதை விடவும் அந்நியமானது என்றே சொல்லுவேன்.என்னால் இந்தக்கதையுடன் இத்தனை ஆழ்ந்துபோக முடிந்ததின் ஆச்சரயம் இன்னும் நீடிக்கிறது . ஸாரங்கியும் வயலினும் குரலிசையும் மொஹர்சிங்கும் மேண்டலினும் ஜுகல்பந்திகளும்  ராகங்களும் அதில் புகுத்தப்ட்ட புதுமைகளும் மேல் கீழ்ஸ்தாயிகளும் தாளமும் ஸ்வரமுமாக எனக்கு அறிமுகமற்ற ஆனால் மிகவும் வசீகரமான ஒரு உலகிலிருந்தேன் வாசிக்கையிலும் இதோ இப்போதும்

எதேச்சையாக கானல் நதிக்கு பின்னரே நான் இதை வாசிக்கும்படி அமைந்துவிட்டது

கானல்நதி தஞ்செய் முகர்ஜி என்னும் ஆளுமையைபற்றியது. அதில் என்னால் பெரிதாக இறங்க முடியவைல்லை

இப்படி கதையைக்குறித்து எழுதிக்கொண்டேபோனால் கதை வந்திருக்கும் 286 பக்கங்களையும் விட அதிகமக எழுதுவேன் போலிருக்கின்றது. அத்தனைக்கு இக்கதையைக்குறித்துச் சொல்ல எனக்குள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.. இசையை கொஞ்சமும் அறிந்திராத ஒரு வாசகிக்கு இந்த கதை இத்தனை பரவசமளிக்குமென்றால் அதன் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

மண்ணும் மனிதரும்

’மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரபீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் ‘ என்ற தலைப்பில்  தி.ப. சித்தலிங்கையாவால்    மொழி பெயர்க்கபட்ட நாவலில்  மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களை வாழ்நாளெல்லாம் ஊர்விட்டு ஊர் அலைக்கழித்த சூழலையும் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

1840 தொடங்கி 1940 வரை வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் அக்குடும்பத்தின் உறவுகளை சுற்றத்தை நட்பை தொடரும் இருதலைமுறைகளை சொல்லுகிறது ’மீண்டும் மண்ணுக்கே’ என்னும் பொருள்படும் தலைப்பில் கன்னடத்தில் எழுதப்பட்ட இந்நாவல்

மிக விரிவான தளத்தில் எழுதபட்டிருக்கும் இந்நாவலின் கதை புரோகிதம் செய்துவாழும் அந்தணரான ஐதாளரின் குடும்பத்தை மையமாக கொண்டிருக்கிறது.  ஐதாளரின் தந்தை சிக்கனம் கருதி நல்ல பெருமழை பெய்யும் காலத்தில் ஐதாளருக்கு  செய்து வைக்கும் கல்யாணத்தில் நாவல் துவங்கி ஐதாளரின் பேரன் ராமனின் கல்யாணத்தில் முடிகின்றது

கழிமுகத்தில் ஒரு சிறு வீட்டைத்தவிர வேறெந்த சொத்துக்களும் இல்லாத புரோகிதம் செய்யப்போகும் இடத்திலேயே அன்றைய உணவை முடித்துக்கொள்ளும்  ஐதாளரும்  கடும் உழைப்பாளியான குழந்தைகள் இல்லா அவரது மனைவி பார்வதியும் சிறுவயதிலேயே கணவரை இழந்து குறைபட்டுபோன ஐதாளரின் சகோதரி சரஸ்வதியுமே  முதல் தலைமுறை மாந்தர்களாக  துவக்கத்தில் வருகின்றனர்.

ஐதாளர் குழந்தையின்பொருட்டு செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் அதில் பிறந்து செல்லம் கொடுக்கப்பட்டு திசைமாறிப்போன லச்சன் அவன் மனைவி நாகவேணி ஆகியோர் இரண்டாம் தலைமுறை

கழிமுக வீட்டை விட்டு பெருநகரத்துக்கு  கல்வியின் பொருட்டு இடம்பெயரும் அவர்களின் மகன் ராமன்   மூன்றாம் தலைமுறை  என நீளும் கதையில் 18   மற்றும் 19  ஆம் நூற்றாண்டின் காலச்சூழலை மிக நன்றாக அவதானிக்க முடிகின்றது.

பல்வேறுபட்ட குணச்சித்திரங்கள் உள்ள பாத்திரங்களின் வாயிலாக அன்றைய மாந்தர்களுக்கு மண்ணின் மீதான பெருவிருப்பு இருந்ததையும் பெண்களின் அயராத உழைப்பால் குடும்பங்கள் தலை நிமிர்வதையும் தெளிவாக காணமுடிகின்றது

ஐதாளரின் திருமணத்திற்கு வர துணியாலான குடைபிடிப்பவர்களே ஊரின் பெருந்தனக்காரர்களென்னும் வரியிலிருந்தே அக்காலத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஏழை அந்தணர் வீடுகளில் உணவுப்பழக்கம் எப்படியென்பதையும் மிக சாதரணமாக சொல்லிச்செல்கிறார் கதாசிரியர் கணவர் புரோகிதம் பண்ணப்போகும் வீட்டில் சாப்பிடுவதால் பெண்களிருவரும் அவடக்கீரை தாளித்தோ அல்லது உருளைகிழங்கோ வெள்ளரிக்காய்களோ இருக்கும் மிக எளிய உணவை ஒரு பொழுது உண்டுவிட்டு இரவில் பிடி அவலை நனைத்து சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர்.   கடும் உழைப்புக்கு சற்றும் பொருந்தாத ஏழ்மை.  மாவடு தேடி நல்ல வெய்யிலில் பலகிலோமீட்டர் தூரம் நடந்து கிடைத்த மாங்காய்களை  ஊறுகாய் போடுவதும் சித்தரிக்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சூரனே சொல்லுவதுபோல ’பிராமணர்களுக்கு எதற்கு குறைவென்றாலும் நாக்குக்கு மட்டும் அப்படி  வேண்டியிருக்கிறது’

பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளை நினைக்கவும் முடியாது இக்காலத்துப்பெண்களால் வீட்டைப்பெருக்குவது பற்றுப்பாத்திரங்களை தேய்ப்பது கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் வைப்பது வயலில் வேலை செய்வது வண்டல் மண்ணை அரித்து சட்டி சட்டியாக கொண்டு வந்து சேர்ப்பது நீர்பாய்ச்ச ஏற்றமும்  கபிலையும்  இறைப்பது தினப்படி  வீட்டை மெழுகுவது தோட்டத்தில் விதைப்பது நாற்று நடுவது அறுப்பது புன்னைக்காய்களை சேகரித்து எண்ணை எடுப்பது பால் கறப்பது கடல் நீரைகாய்ச்சி வீட்டு சமையலுக்கு தேவையான  உப்பெடுப்பது வெள்ளத்தில் அடித்து வரும் மரக்கட்டைகளை உயிரைப் பணயம் வைத்து விறகுக்கென சேர்ப்பதென்று முடிவில்லாமல் நீள்கிறது இவர்களின் உழைப்பின் பட்டியல். அசாத்தியமான உடல்வலிமையுடன் மனவலிமையும் உள்ளவர்களாயிருந்திருக்கிறார்கள் அப்போதைய பெண்கள். வெயிலும் மழையும் வெள்ளமுமாய் ஓயாமல் வாழ்வை அலைக்கழித்தாலும் பெண்கள் யாவரும் மூன்று தலைமுறைகளிலுமே புரிதலும் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் விசாலமனதும் உளளவர்களாகவே இருக்கிறார்கள்

கணவர் எந்நேரம் வீடுதிரும்பினாலும் எந்த கேள்வியும் கேட்காமலிருப்பது புத்திரபாக்கியத்துக்கென மறுதிருமணம் செய்யும் போதும் எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது அத்திருமணத்திற்கென்று அப்பளம் இடத்துவங்குவதென்று பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனைகளையும் அவர்களுக்கு நடந்துகொண்டிருந்த அநீதிகளையும் அப்போதைய வாழ்வின் இயங்குமுறைககளாகவே சொல்லிச்செல்கிறது இந்நாவல்

அப்போது வழக்கத்திலிருந்த குறுநிலங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த  பெரிய முதலீடுகள்  இல்லாத விவசாய முறைகளையும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த முடி மணங்கு சேர் கோர்ஜி என்னும் அளவை முறைகளும் கதையில் பல இடங்களில் சொல்லப்படுகின்றன.

எத்தனை ஏழ்மையிலிருப்பினும் அந்தணர்களான அவர்களுக்கு கீழிருக்கும் தாழ்த்தபட்டவர்களோடு இணைந்தே விவசாயம் நடந்திருக்கிறதென்பதும் ஐதாளரின் குடும்பத்திற்கு சூரனும் பச்சியும் செய்யும்  பிரதிபலன் எதிர்பாராத தொடர் உதவிகளிலிருந்து புலனாகின்றது,

இறந்த மாட்டின் சவத்தை பறையர்கள் வந்து எடுத்துச்செல்லும் வழக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

கழிமுகத்தில் அமைந்திருக்கும் ’’கோடி’’ கிராமமே கதைக்களமென்பதால் அப்பொழுது படகுகளுக்கு மஞ்சி என்னும் பெயரிருந்ததும் பாய்மரப்படகில் ஒரு வகை பத்தொமாரி என்பதும் கோடா என்பது மிகபெரிய பாய்மரப்படகென்பதும் ஐதாளரின் பார்வையில் துறைமுகப்பகுதியை விவரிக்கையில்  குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து  இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்காத பெயர்களையும் விஷயங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்

பிள்ளை இல்லாதவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொள்வது அப்போதும் நடைமுறையிலிருந்திருப்பதை சரஸ்வதியும் பார்வதியுமாய் ஐதாளரிடம் அதுகுறித்து பேசுவதிலிருந்து தெரிகிறது. எதிர்பாரா விதமாக ஐதாளர் சுவீகாரத்திற்கு முனையாமல் சத்தியபாமையை இரண்டாம் திருமணமே செய்துகொள்வது அந்தப்பெண்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

 இரண்டாவதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப்போகும் போதும் பார்வதி அவள் கன்னடபிராமணர்களில்   ’கோட’ அல்லது ’சிவள்ளி’ இவற்றில் எந்தப்பிரிவை சேர்ந்தவளென்பதில் கவலை கொள்வதிலிருந்து அப்போது சாதிவேற்றுமைகள் மட்டுமன்றி  குடும்பங்களுக்குள் நுண்ணிய சாதீய அடுக்கின் சிக்கல்களும்  இருந்திருக்கிறதென்பதை அறியலாம்.

திருமண ஊர்வலத்தில் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு பந்தங்களை கொடுத்து கூட்டம் அதிகமானதுபோல் காட்டுவது பாட்டியன்னம் என்னும் பாட்டிமை அன்று மணமகளுக்கு நடக்கும் சடங்கு  தாசிகள் பொன் பெற்றுக்கொண்டு சலாமிடுவது பெரும் அந்தஸ்தாக கருதப்படுவது  போன்ற விவரணைகளிலிருந்து அப்போதிய திருமணங்களின் போது   நடக்கும் பலவகையான முறைமைகள் வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

 லச்சன் பிறந்த பிறகு அவனை பள்ளிக்கூடம் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனை சேர்ப்பதென்பது இழிவு என்று பெரியவர்கள் யாவரும் ஒன்றே போல அபிப்பபிராயப்படுவதிலிருந்து தீண்டாமை 18 ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயிலும் மிகத்தீவிரமாக நிலவி வந்திருப்பதை உணரலாம்.

மெல்ல மெல்ல வட்டிக்கு பணம் கொடுக்கும் வழக்கம் வருவதை, ஆடம்பரத்துக்கு விருப்பப்படும் குடும்பங்கள் பெருகுவதையெல்லாம் சீனப்பன், சீனப்பய்யராக மாறுவதுபோன்ற நுட்பமான கதாபாத்திர மாற்றங்களின் மூலம் சொல்லத் துவங்குகிறார் கதாசிரியர்.

 காட்சிகள் மாறிக்கொண்டே வந்து லச்சன் தட்டுக்கெட்டு திசைமாறி தீய வழக்கங்களுக்கு அடிமையாகி, அவனால் அவன் மனைவியின் உடல்நிலையும் பாழாவதை பார்க்கிறோம், 500 ரூபாய் பணம் கொடுத்தால் மணியக்காரர் பதவி கிடைக்கும் என்னும் வரிகளில்  லஞ்சம் கொடுக்கும் சூழல் 19 ஆம் நூறாண்டில் மெல்ல துவங்கியிருப்பதை உணரலாம்

பீட்ஸா இந்தியக்குக்கிராமங்களிலும் புழக்த்திலிருக்கும் இக்காலகட்டத்தில் நாவலில் காப்பி என்னும் பானம் மெல்ல கலாச்சாரத்துக்குள் நுழைவதையும் பல ஆச்சாரமான குடும்பங்கள் அதை வீட்டுக்குள்ளே  அனுமதிக்காமலிருந்ததையும் வியப்புடன்  வாசிக்க முடிகின்றது.

காலங்கள் மாறி  வருகையில் லச்சனின் மனைவியான நாகவேணி சரஸ்வதியை, பார்வதியை போலல்லாமல் தன்னந்தனியே கணவனின்றியும் வாழ்த்துணிகையில் பெண்களின் மனோநிலையும் மாறிக்கொண்டு வருவதை நாம் அறியலாம்.

 சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் ராமன் அப்போதைய சுதந்திர உணர்வெழுச்சி மிக்க இளைஞர்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்

எத்தனையோ க‌ஷ்டகாலங்கள் மாறி மாறி வந்தாலும் மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைப்பெண்களும் அந்த ஓட்டு வீட்டுக்கே திரும்புகிறார்கள் அம்மண்ணே அவர்களை  பிணைக்கிறது வாழ்வுடன் ’’மீண்டும் மண்ணிற்கே’’ என்னும் கன்னட தலைப்பும் ’’மண்ணும் மனிதரும்’’ என்னும் தமிழாக்க தலைப்பும் மிகபொருத்தமாக கதையின் மூன்று தலைமுறை மாந்தர்களையும் நமக்கு காட்டித்தருகின்றது

வேளாண்மையும் தொற்றுநோயின் இறப்புக்களும் ஏழ்மையுமாக முதல் தலைமுறை ஆங்கிலக்கல்வியும் புதிய கலாச்சாரமும் கிடைக்கப்பெறும் இரண்டாம் தலைமுறை  பெருநகரங்களுக்கு கல்வியின் பெயரால் இடம்பெயரும் அங்கு வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாம் தலைமுறை என மாறிவரும் தலைமுறைகளின் மூலம் மாறி வந்திருக்கும் இந்திய சமூக வாழ்வினையும்   சொல்லும் இந்நாவல் இறுதியில்  ராமன் சரஸ்வதி என்னும் அவனின்  பாட்டியின் பெயருடன் துடைப்பமும் கையுமாக வீட்டுப்பொறுப்பை நிர்வகிக்க வல்லவள் என்னும் சித்திரத்தைக் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்வதுடன் நிறைவடைகிறது.   

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைக்காக ஐதாளர் மறுதிருமணம் செய்துகொள்ளுவதும் பின்னர்  சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறைக்காரனான நவீன சிந்தனையுளவனான ராமனும் பிற காரணங்களை விட வீட்டுபொறுப்பில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக காட்டியிருப்பதும்  காலங்கள் எத்தனை மாறினாலும் பெண்களின் இடமென்று ஆண்கள் நிர்ணயம் செய்துவைத்திருப்பது சமையலறையும் படுக்கையறையும் தானென்பதையும் அன்றும் இன்றும் என்றும் இது ஆண்களின் உலகே என்பதை இந்நாவலும் காட்டும் இடமென்பதாகவும் கொள்ளலாம்

இந்நாவல் நமக்கு அக்காலத்திலிருந்த  சாதீய அடுக்குகள் தீண்டாமை தொற்று நோய்கள் பெண்களின் வாழ்வு முறை ஆண்களின் அதிகாரம் புதுக்கலாச்சாரங்கள் மெல்ல மெல்ல சமுகத்தில் நுழைவது என பலவற்றைச் சொல்கிறது.

சிவரம காரந்தின் பாட்டி தனது தள்ளாத வயதில் விருப்பு வெறுப்புகளின்றி இக்கதையை  அவருக்கு சொல்லியதால் கதையிலும் எந்த பாரபட்சமும் சார்பும் இன்றி கதை மாந்தர்கள்  அனைவரும் நடுநிலையுடன்  சித்தரிக்கபட்டிருக்கின்றனர்

மண்ணும் மழையும் பெண்களும் ஏழ்மையும் இசையும் இயற்கையுமாக அழகிய நாவல் இது. ராமனும்  அவன் தாயும் ஓர் இரவில் பொழியும் நிலவின் புலத்தில் நனைந்தபடி  கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருகாட்சி  சம்சாரம் ஒரு நரகமென்றாலும் அதிலும் ரசிக்கத்தக்க விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் இருக்கும் என நமக்கு இக்கதை உணர்த்தும் ஒரு அழகுச்சாட்சி. அக்காட்சி  ஒரு கவிதையையைப்போல  கதையில் தீட்டப்பட்டிருக்கும்.

ஞானபீட விருது சாகித்ய அகாடமி விருது என பலவற்றைப் பெற்ற அறிஞரான சிவராம காரந்தின் கன்னட மொழிவளத்திற்கு சற்றும் குறையாமல் தமிழில் மிகசிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு தி ப சித்தலிங்கையாவிற்கு வாசிக்கும் அனைவரின் நன்றிகளும் கட்டாயம்  உரித்தாகும்

நிலத்தில் படகுகள்

விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய ஜேனிஸ் பரியத்தின் ‘ நிலத்தில் படகுகள் ‘’ கதைத்தொகுப்பை இன்று  2 மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் கவர்ந்த கதைகள்னு இதிலிருக்கும் எல்லாவற்றையுமே சொல்லலாம். வழக்கத்தைக்காட்டிலும் மெதுவாக வாசித்தேன்.

கதைக்களமும், கதாபாத்திரங்களின் பெயர்களும், உணவு வகைகளும், பானங்களும், கலாச்சாரமும், மொழியும், நம்பிக்கைகளும், அவர்களின் இடர்களும், துயர்களும், வாழ்வுமுறையும் மிக வேறுபட்டது நான் இதுவரையிலும் வாசித்தவற்றிலிருந்தும் என் வாழ்வுமுறையினின்றும். அதுவே மிகவும் வசீகரித்தது.  ஜேனிஸ் மண்மகள்தான்.  வாழ்ந்த இடத்தின் ஆன்மாவை இப்படி எழுத்தில் உள்ளபடியே கொண்டுவருவது அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. திரு விஜயராகவன் துவங்கி  திரு.சிறில் அலெக்ஸ் வரையில் மொழிபெயர்த்தவர்கள் கதைகளின் ஆன்மாவை கொஞ்சமும் சிதைக்காமல் மெருகேற்றியிருப்பதும் வியப்பளித்தது.

நீர்த்துளிகளைக்கொண்டிருக்கும் கூரிய ஊசியிலைகளுடனிருந்த  பைன் மரஙக்களுக்கிடையிலும், ரோடோடென்ரான் மலர்க்கொத்துக்களை பார்த்தபடிக்கும், வாசற்படிக்கு இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட்களை கடந்தும், மலைச்சரிவெங்கும் அடுக்கடுக்காக  தெரியும் வயல்வெளிகளிலும்,  வெடிக்க காத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டா  மரங்களை தாண்டியும்,  ஷில்லாங்கிலும்,  போம்ரெங் குக்கிராமத்திலும், லிக்குமீரிலும், சந்த்பாரியின்  விஸ்தாரமான தேயிலைத்தோட்டங்களிலும் நடந்துகொண்டும், விடுதிகளில் நூடுல்ஸும், பன்றி இறைச்சியும், கிரீம் பன்களும் சாப்பிட்டுகொண்டும் கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் அல்லது நானும் அக்கதைகளுக்குள்ளேயே, கனவுகளில் வரும் எண்களிலிருந்து சூதாட்டத்தில் வெற்றிபெறுவதை கணிக்கும் தையல்காரர் சுலைமானாகவும், தங்க மாஸிர் மீன்களை பிடித்துக்கொண்டிருக்கும்  மாமா கின்னாகவும் குளிர்காயும் கரி அடுப்பின் கங்குகள் அணையும் வரை மகனுக்கு பழங்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவாகவும், பயணப்பைக்குள் சிவப்பு சம்பா அரிசியை மறைத்து வைக்கும் பாரிஷாவாகவும், கிராம்பும் சிகரெட்டும் மணக்கும் தோழியாகவும் இன்னும் பலராகவும் இருந்தேன்

முதல்பக்கத்திலிருந்தே கதைகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிவிட முடிந்தது. மந்திரங்கள், நீர்த்தேவதைகள், விசித்திரமான  நம்பிக்கைகள், குதிரைகள் பாய்ந்துவிழுந்து இறக்கும் ஏரிகள், மணக்கும் தேவதாரு மரங்கள் என பக்கத்துக்குப்பக்கம் மிகப்புதிய நான் இதுவரையிலும் வாசித்து அறிந்திராத பிரதேசங்களில் நடக்கும் கதைகளென்பதால் புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை

நேரில் விழாவில் சந்தித்து பேசியிருந்ததாலென்று நினைக்கிறேன், பல இடங்களில் ஜேனிஸையும் அவரது பால்யம் மற்றும் பதின்மவயது நினைவுகளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது

இஸ்ரேலுக்கு கணவன் விட்டுச்சென்ற இரவில் பள்ளிப்பருவத்து காதலனைதேடிச்செல்பவள் , விடுமுறைக்கு செல்கையில் தனது காதலனை வேறு யாரும் அபகரித்துக்கொள்ளாலிருக்கனும் என்று விசனப்படும்  சிறுமி, புதிய லினன் துணியைபோல மணக்கும் பள்ளித்தோழி, காதலனை சடுதியில் மாற்றிக்கொள்ளும் இன்னொருத்தி, ஒரேயொரு மதியநேர பைக்பயணத்தில் விடுதலையை அறிந்துகொள்ளும் மற்றுமோர் சிறுமி, சாரா கிரேஸ், மெல்வின் என்று ஜேனிஸ்  அறிமுகபடுத்தும் பெண்கள் மிக வசீகரமானவர்கள், இனி என்றும் மறக்கமுடியாதவரகளும் கூட

மந்திரங்களும், நம்பிக்கைகளும், நோயும், கலவரமும், மலைத்தொடர்ச்சிகளும், செழிப்பான மண்ணும், தாவரங்களும், துயரங்களும், காதலும், பிரிவும், மர்மங்களும், முத்தங்களும், இறப்பும் இக்தைகளெங்கும்  தூவியிருப்பது போலிருந்ததுது. இப்படி nativityயுடன் கதைகளை படித்து வெகுகாலமாகிவிடது

எல்லாக் கதைகளுமே மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன என்றாலும் ஆகச்சிறந்ததென்று விஷால்ராஜாவின் கதையைச்சொல்லுவேன்

கதைகளுக்குள் ஆழ்ந்துவிட்டதால் வாசித்து முடிந்து சமையலறைக்கு இரவுணவு தயாரிக்கச் செல்கையில் என் வீடே எனக்கு மிகப்புதிதாக தெரிந்தது கதைக்களங்களிலிருந்து  என் மனம் இன்னும் விலகவேயில்லை சமைக்கபிடித்திருந்த  கரண்டி வழவழப்பான செதில்களை உடைய கா பாவாக தோன்றியது,  விளக்கு வெளிச்சத்தில்  ஜன்னல் வழியே கூரிய நுனிகள் கொண்ட பைன் மரமாக  இருந்தது என் பிரியத்துக்குரிய புன்னை

  இக்கதைகளில் வரும், பிடித்துவிட்டால் பிறகு ஒருபோதும் விடவே விடாத நீர்த்தேவதையைப்போல என்னை இந்த கதைகளும்  ஒரேயடியாக பிடித்துக்கொண்டு விட்டன

கங்காபுரம்

 கவிஞர், எழுத்தாளர்  வெண்ணிலாவின் வரலாற்று நாவலான கங்காபுரம் முதல் நாவல் என்று சொல்லிவிடவே  முடியாதபடிக்கு  நல்ல செறிவான கதையோட்டத்துடன் இருக்கின்றது. சிக்கலான பழைய வரலாற்றை சொல்லும் நூலென்றாலும்  அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் புரியும்படி அதிகம் அடர்த்தியில்லாத எளிய  மொழி நடை, அருமையான வர்ணனைகள் மற்றும் கதாபாத்திர சித்தரிப்புக்கள், வரலாற்றுக்கதைகளில் வாசகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வீரம், காதல், இறைமை, அரசியல் புகைச்சல், போட்டிகள், சதி, உளவு என அனைத்தையும் சரி விகிதத்தில்  கலந்து திகட்டாமல் கொடுத்து மிகச்சிறப்பானதொரு தொடக்கத்தை அளித்து விட்டி்ருக்கிறார் வெண்ணிலா!

எனக்கு வரலாற்று நாவல்களில் எப்போதுமே தனிப்பட்ட பிரியமுண்டு. அம்மா வரலாற்று ஆசிரியை அப்பா தமிழாசிரியர்.  எனக்கும் அக்காவிற்கும் சங்கமித்திரை லோகமாதேவி என்றே பெயர். சிறுமியாக இருக்கையிலேயே எனக்கு வரலாறு, குறிப்பாக சோழப்பேரரசுடையது பரிச்சயமாயிருந்தது. முன்பும் இவ்வரலாற்றை வாசித்தறிந்திருக்கிறேன் என்றாலும் கங்காபுரம் சோழப்பேரரசின் மற்றோரு பரிமாணத்தை காட்டியது. அதுவும் மிக சுவாரஸ்யமாக!

பேரரசி லோகமாதேவியின் நானறியாத முகமொன்றை முதன்முதலில் கங்காபுரத்தில் தான் காண்கிறேன். பிள்ளைப்பேறற்றவர் என்னும் கரிசனமும் ராஜேந்திரனின் அரசியல் வாழ்வில் அவர்களால் ஏற்பட்ட தொய்வுமாய் அவர்மீது கலவையான, கசப்பும் விருப்பும் கனிவும் கலந்த ஒரு அபிப்பிராயம் உண்டாயிருந்தது.

பல வர்ணனைகள் உவப்பாக இருந்தன. குறிப்பாக பெண்களின் உடை, ஆபரணங்கள், மலர் சூடிக்கொள்ளுவது, இறையுருவங்களின் அலங்காரங்கள் இவையெல்லாம். ஆர்வமாக  வாசித்தேன்  சில குறிப்பிட்ட பக்கங்களை மீள மீள வாசித்தேன.  நங்கை குளித்து விட்டு கரையேறுகையில் குளமும் கூடவே வரும் அந்த கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது

சதுரத்தடிகளார் பச்சிலையில் விளக்கேற்றும் காட்சியும் அப்படித்தான் எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானதொன்றாகிவிட்டது வீட்டில் ஒரு மூலிகைத்தோட்டம் இருக்கிறது அதில் இருக்கும் பேய்மிரட்டி என்னும் துளசிக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு செடியின் பசும்  இலைகளை திரியைப்போலவே விளக்கேற்றுவோம்.

மரங்களின் வகைகளை தெரிவு செய்யும் முறைகள் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள் ஆர்வமூட்டின.  மிகமுக்கியமான தாவரவியல் தகவல்கள் இருந்ததால் கங்காபுரம் எனக்கு பிரியப்பட்டதொன்றாகி விட்டது. மரங்களில்  மலரமைப்பின் இனப்பெருக்க உறுப்புக்களல்லாது ஆண் பெண் என இனம் கண்டுகொள்ளுவது, முப்பழங்கள் எனப்படும் கடுக்காய் நெல்லி தான்றிக்காய்களை கொண்டு செய்யப்பட்ட பல தயாரிப்புக்கள்  உள்ளிட்ட பலவற்றை குறிப்பெடுத்து கொண்டிருக்கிறென். அவற்றைக்குறித்து இன்னும் விவரங்கள் அறிந்துகொண்டு கட்டுரை எழுத உத்தேசித்து இருக்கிறேன்.

புஷ்பவிதி என்னும்  நூலில் பூசனைகளுக்கு பயன்படுத்தப்படும் தோஷமற்ற மலர்களைக்குறித்து சொல்லியிருப்பவற்றை மிகச்சரியாக சொல்லி இருக்கிறது கங்காபுரம்.. கங்காபுரம் மிக முக்கியமான ஒரு ஆவணம். இதன் பின்னிருக்கும் ஆசிரியரின்  ஏராளமான உழைப்பையும் யூகிக்க முடிந்தது

ஜெ அவர்களின் குருநித்யா கூடுகையொன்றிற்காக ஊட்டி வந்திருந்தபொது அறிமுகமான  சிற்ப சாஸ்திர நிபுணர் திரு சுவாமிநாதன் அய்யா அதன்பிறகு எனக்கும் பலவற்றை கற்றுக்கொடுத்திருந்தார். குறிப்பாக கோவில் கட்டுமான விதிகளை. அவற்றைக் குறித்து கொஞ்சம் தெரிந்திருந்ததால் கங்காபுரத்தின் அந்த இடங்கள் எனக்கு வாசிக்க  விருப்பதுக்குகந்தைவையாக இருந்தன. ஜெ தளம் வாயிலாக இப்படி பல முக்கியமான ஆளுமைகளை  அறிந்து கொண்டிருக்கிறேன். அவருக்கு  என் வாழ்நாள் முழுவதுமே நன்றி சொல்லிக்கொண்டிருப்பேன் போலிருக்கிறது

தஞ்சைப்பெரிய கோவிலைக்குறித்து பலநூறு நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. தஞ்சைபெரியகோவிலால் மறக்கப்பட்ட புறக்கணிக்கப்ட்ட கோவிலொன்றக்குறித்தும் அதிலிருந்து துவங்கி சொல்லப்பட்ட சோழப்பேரரசின் கதையையும் இப்போதுதான் கங்காபுரத்தில் அறிந்துகொண்டேன். ராஜேந்திரசோழனின் மனைவியின் பெயர் சுத்தமல்லி என்பதுவும் எனக்கு இதுவரை தெரிந்திருக்கவில்லை. எத்தனை அழகிய பெயர்!

  அரசகுடும்பத்தினர், அமைச்சர்கள் பேசுகையில் வரும் சொல்லாட்சி குடிமக்கள் அவர்களுக்கிடையில் பேசுகையில் தேவைக்கேற்ப மாறுவதே தெரியாத  நுட்பமான மாறுதல்களுடன் இருந்தது, ராஜேந்திரர் வீரமாதேவியிடன் பேசுகையிலும் அப்படியே.  பெரிதாக வாசிப்பவர்களுக்கு வித்தியாசம் தோன்றும்படி இல்லாது கதையோட்டத்திலேயே நாங்களும் இழுத்துக்கொண்டு போவதைப்போல இணைந்திருக்க முடிந்தது.

அட்டை வடிவமைப்பும் மிக நேர்த்தி. இறுதியில் glossary இருந்தது வசதியாக இருந்தது. பண்டாரம் என்னும் சொல்லுக்கெல்லாம் பொருளறிந்து கொண்டபின் வாசிப்பு இலகுவானது. இண்டை என்னும் சொல்லுக்கு பொருளைத் தேடி, வழக்கத்துக்கு மாறான நீண்ட தண்டான ’இண்டு’ உடைய  தாமரையே ’இண்டை’ என புதிதாக அறிந்துகொண்டேன். இப்படி பல புதிய திறப்புக்களும் கங்காபுரம் எனக்களித்தது

இரண்டாம் பாகம் சடுதியில் முடிந்துவிட்டதோ என்று தோன்றியது. இன்னும் சிலரை குறித்து விவரமாக சொல்லி இருக்கலாமே என்று நினைத்தேன். குறிப்பாக அழகி.  ஒரு நல்ல படைப்பு இன்னும் இன்னும் என வாசகர்ளை எதிர்பார்க்க வைப்பதுதானே!.

கங்காபுரம் வாசித்துமுடித்த பின்னர் லோகமாதேவியைக்குறித்தே அதிகம் நினைத்துக்கொண்டிருந்தேன் பிள்ளையில்லாதவர் என்னும் உண்மை என்னை என்னவோ கஷ்டபடுத்தியது. மிகப்புதிதாக தெரிந்துகொண்ட இந்த பெரிய விஷயம் எப்படியோ இருந்தது. மறுபிறப்புக்கள் இருந்திருந்தால் அவர் மீண்டும் மீண்டும் பிறந்து பேரன்னையாகவே வாழ்ந்திருப்பாரெண்ணிக்கொண்டே உறங்கிய அன்று அதிகாலை கனவொன்று கண்டு விழித்தேன் பெரும்பாலும் கனவுகள் நிறைய வரும் எனக்கு, அவை மறக்காமல் நினைவிலும் இருக்கும். என் கனவுகளை எழுதிவைக்கவே தலைமாட்டில் நோட்டுப்புத்தகங்களை வைத்திருக்கிறேன்  

அன்றைய கனவில் அரண்மனையைப்போலவோ அல்லது ஷாப்பிங் மாலைப்போலவோ ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தின் திறந்தவெளி முற்றத்திலிருந்த நீள அகலமான  படிக்கட்டில் என் மூத்த மகனுடன் அமர்ந்திருக்கிறேன் அறிமுகமற்ற இரு ஆண்கள் என்னிடம் பேச வருகிறார்கள். அந்த வழியே வந்த ஒரு பெரிய ஆடம்பரக்காரில் இருந்த புஷ்டியான, செல்வந்தர் வீட்டுபெண் போன்ற தோற்றம்  உடைய ஒரு இளம்பெண் எங்களைக் கூப்பிட்டு தன் சித்தியான ராணி தற்போதுஅங்குதான் இருப்பதாகவும் நாங்கள் கொஞ்சம் தள்ளிப்போய் பேசும்படியும் சொல்லுகிறாள். நான் மனம் குன்றிப்போகிறேன் ஆனாலும் உடனே விலகிச் செல்கையில் கால்களை ஒருக்களித்து அமர்ந்தபடி ஒரு முதியபெண் சற்றுத்தொலைவில்  திண்ணைபோன்ற உயரத்திட்டில் சற்று இருட்டில் அமர்ந்திருப்பதை பார்க்கிறேன். நல்ல களை  முகத்தில் கேரள தரவாட்டு  மூத்தம்மையைபோல, வெள்ளிநிறக்கூந்தல் அலையலையாக நெளிந்துபடிந்திருக்கிறது. தந்தநிறத்தில் தூய புடவையணிந்திருக்கிறார். என்னை  அவரருகில் அமரும்படி சைகை காட்டுகிறார் அமர்கிறேன் அவர் பாதங்களை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறதெனக்கு செய்கிறேன் அவர் மலர்ந்து புன்னகைதபடி ’’இந்தா நல்லா ஆசிவாங்கிக்கோ’’ என்று தன் கால்களைநீட்டுகிறார். வெண்ணிற சிறிய சுருக்கங்கள் நிறைந்த பாதங்கள் பாதங்களின் நடுவில் நாட்டியமாடுபவர்களைப்போல குங்குமத்திலகமிருக்கிறது. மெட்டியைப்போல சிறு வளையமும்  ஒரு விரலில். நான் பாதங்களை தொட்டு வணங்குகையில் உடைந்து கதறி அழுகிறேன், அழுதபடியே இருக்கையில் என் பாரங்கள் குறைவது போலிருக்கிறது, விழித்துக்கொண்டேன். லோகமாதேவியிடம்தான் ஆசிவாங்கினேனா என காலையில் நினைத்துப்பார்த்தேன் .

என்னை பாதித்த, கடைசிக்கணம் வரையிலும் நினவிலிருக்கும் கதைகளில் கங்காபுரமும் உண்டு.

இன்று முழுநிலவு. பவளமல்லிகள் உதிரத்துவங்கியிருக்கும் நறுமணமிக்க இந்த  பின்னிரவில் தென்னைகளின் அடியில் அமர்ந்து நிலவின் புலத்தில் கங்காபுரத்தை உணர்வு பூர்வமாக வாசித்தது பெரும் மனநிறைவை அளிக்கின்றது.

ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு

செப்டம்பர் 18 லிருந்து 29 வரை 12 நாட்களாக அகநி வெளியீடு, ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் 12 தொகுப்புக்களாக வந்திருக்கும் நாட்குறிப்பை குறித்த இணைய வழி தொடர் அறிமுக ஆய்வரங்கத்தை நடத்தினார்கள். மாலை 7 மணிக்கு மேல் என்பதால் வகுப்புகளை முடித்துவிட்டு நானும் எல்லா நாட்களிலும் கலந்துகொண்டேன். நான்  முதன்முதலாக கலந்துகொண்ட/கேட்ட வரலாற்று உரைகள் இவையே. நான்காம் நாளிலேயே அகநிக்கு அனுப்பாணை பிறப்பித்து 12 தொகுதிகளையும் வாங்கிவிட்டேன் அத்தனை சிறப்பாக  இருந்தது அறிமுக ஆய்வரங்கமும், நாட்குறிப்பின் உள்ளடக்கமும்.

ஒவ்வொரு தொகுதியையும் ஒவ்வொரு ஆளுமைகள் என  டாக்டர் சுதா சேஷையன், திரு இந்து என். ராம்,  பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், கவிஞர்,சாம்ராஜ், (2 தொகுதிகள்), ஆய்வாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், திரு.கோம்பை அன்வர், முனைவர் பக்தவச்சல பாரதி, திரு சீனிவாசன் நடராஜன், பேராசிரியர் இ. சுந்தர மூர்த்தி, எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் ஆகியோர் பேசினார்கள்.

ஒவ்வொரு ஆளுமையும் அவரவர் கோணத்திலிருந்து ஒவ்வொரு தொகுதியின் மிக முக்கியமான பகுதிகளை எடுத்துக்கூறினார்கள், குறிப்பாக ஜோடி குரூஸ் அவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பிலிருந்த கடல்வணிகம் பற்றி கூறியது வெகு சிறப்பாக இருந்தது, அவர் குரல் ஆனந்தரங்கம்பிள்ளையின் குரலாகவே ஒலித்தது. ”வேகமாக வந்து துறையை பிடிச்சுட்டான். தீனி சேகரிக்க போன கப்பல்” போன்ற சொற்றொடர்களை அவர் கடல்வாழ்விலேயே இருந்தவராதலால்   மிகச் சிறப்பாக விளக்கினார். Ship chandling எனப்படும் கப்பல் நகர்கையிலேயே எரிபொருள், குடிநீர், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை சேகரிப்பதே தீனி சேகரித்தல் என பிள்ளையவர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது போன்ற பலவற்றை விளக்கினார். 12 பேச்சாளர்களுமே ஆனந்தரங்கம் பிள்ளை வாழ்ந்த காலமெனும் கடலுக்குள் எங்களை இழுத்துச்சென்ற அலைகள் என்றால் ஜோ டி குரூஸ்  பேரலையென வந்தார். கடல்வணிகம் குறித்து சொல்லுகையில் அவருடைய பாவனைகள் எல்லாம் அத்தனை அழகு.

ஜோ டி குரூஸ்

ஆனந்தரங்கம் பிள்ளை அவர் வாழ்ந்த காலத்தின் சூழலை ஆழ்ந்து கவனித்து அதிலே தன்னை உணர்வுபூர்வமாக பிணைத்துக்கொண்டு 25 நீண்ட வருடங்களை மிக விளக்கமாக பதிவு செய்திருப்பது ஆச்சர்யமளிக்கின்றது.  பேரேடுகளில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்புகள், 1736ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பித்து, 1761. ஜனவரி 12  வரை எழுதப்பட்டிருக்கிறது.

அப்போது இந்தியர்களுக்கு நாட்குறிப்பெல்லாம் எழுதும் வழக்கம் இருந்திருக்காது. பிரெஞ்ச் ஆட்சியாளர்களின் அந்த வழக்கம் பிள்ளையையும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

கலகத்தாவில் ஒரு சிற்றறையில் நூற்றுக்கணக்கானவர்களை அடைத்து வைத்து மறுநாள் திறக்கையில், மூச்சுத்திணறியே பலர் உயிரிழந்த black hole tragedy, தண்டனையாக பலரை தூக்கிலிட்டது, கசையடி கொடுத்தது, காதுகளை அறுத்தது, மிகப்பெரும் ஆளுமைகள் தலை கொய்யப்பட்டது, கொள்ளை, கொலை, சூது, ஊழல், என பல உச்சதருணங்களை பதிவு செய்திருக்கிறார். .

என்னை மிகவும் கவர்ந்தது அவரது மொழிநடை. முன்னூறு வருஷங்களுக்கு முந்தைய பேச்சுவழக்கில்  எழுதியிருப்பதால் பின்தொடர ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகவும் பின்னர் பழகியும்  பிடித்தும் விடுகிறது. அவர் பன்மொழிப்புலமை கொண்டிருந்ததால் பல மொழிகளை அவராகவே கலந்தும் பிரயோகித்திருக்கிறார் உதாரணமாக அறிவித்தான் என்பதை ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து ’டிக்ளரித்தான்’ என்கிறார். //’உட்டாவுட்டியா’ அங்கே போய் சேர்ந்துட்டான்// என்கிறார் வெகுவேகமாக என்பதை. பரபத்தியமென்பது கடன், பதிலாமி என்பது மானக்கேடு, நடுக்காம்பீறோ என்று நடு அறையை, இப்படி. இவர் உபயோகபடுத்தியிருக்கும் சொற்களைக் குறித்தே தனியாக விரிவான  மொழியியல் ஆய்வை துவங்கலாம்.

பல இடங்களில் கவித்துவமாகவும் , துணிச்சலாகவும் எழுதியிருக்கிறார்

//ஆனாலின்றைய தினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்காரச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்//

//அவர்களைப் பின் தொடர அனுப்பி வைக்கப்பட்ட உளவாளி அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் பின் தொடர்வதனை உணர்ந்த ஒரு குதிரைக்காரன் அவனை நோக்கி வேகமாக வந்து வாளினால் தாக்க முயன்றான். உளவாளி தன் கையில் வைத்திருந்த தடியினால் ஓங்கி அடித்து குதிரைக்காரனின் வாளைத் தட்டி கீழே விழ வைத்துவிட்டு, உடனடியாக கடலூரின் செயிண்ட் டேவிட் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த கவர்னரிடம் இதனைக் குறித்துக் கூற, அவனுக்கு இரண்டடி அகல இடுப்புத் துணியும், ஏழு பகோடாப் பணமும், இருபது நாழி அரிசியும் பரிசாக வழங்கப்பட்டன//

//அதே நாளில் சிறிது நேரம் கழித்து ஐம்பதிலிருந்து அறுபதுவரையுள்ள மராத்தா குதிரைப்படையினர் பாகூருக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது//

 //பின்னர் நம்பியானும் இன்னும் நான்கு பிராமணர்களும் அவர்களது அக்ரஹாரத்திற்கும், பிற தெருக்களில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ‘ஈஸ்வரனுக்கு பூஜை புனஸ்காரங்கள் எதுவும் நடக்காது. ஈஸ்வரன், பராசக்தியின் மீது ஆணையாக நீங்கள் வீட்டில் ஒன்றும் சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

வியாழன், ஜூன் 11-1739, சித்தார்த்தி வருடம் ஆனி//

//செவாலியே டூமாஸ், பாண்டிச்சேரியின் கவர்னர் கீழ்க்கண்ட உத்தரவை இன்றைக்குப் பறையடித்து அறிவித்தார். ‘நகர எல்லைக்குள்ளோ அல்லது கடற்கரையிலோ அல்லது செயிண்ட் பால் சர்ச்சின் தெற்காக ஓடும் உப்பாற்றின் கரையிலோ அல்லது பொதுச் சாலையிலோ மலஜலம் கழிக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் எவரும் ஆறு பணம் அபராதம் செலுத்த வேண்டும். அதில் இரண்டு பணம் இந்தச் செயலைக் கையும், களவுமாகப் பிடிப்பவர்களுக்கும் மீதிப்பணம் கோர்ட்டின் நிதியிலும் சேர்க்கப்படும்.இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டு மனமுடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது//.

இப்படி  ஒவ்வொரு சம்பவமாக ஒவ்வொரு பக்கங்களிலும் அவர் விளக்கமாக எழுதியிருக்கும் எல்லாமே வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.. ஒரு கூட்டத்தில் கலவரமென்று எழுதுகையில் அந்த கூட்டத்திலிருந்த பலவகைப்பட்டவர்களையும் குறித்து தனித்தனியாக எழுதுகிறார். அக்கால சமூகத்தைப் பற்றிய மாபெரும் ஆவணம் இது.

ட்யூப்லெக்ஸும் மதாமும்  ஒரு கலியாணத்திற்கு வருகை தந்ததை, //அவர்கள் கலியாணப்பந்தலில் அமர்கையில், மாப்பிள்ளை பெண்ணை விசாரிக்க எழுந்திரிக்கையில், இனிப்பு சாப்பிடுகையில், மீண்டும் கலியாணத்திலிருந்து புறப்படுகையில் என்று 21 குண்டுகளை நான்கு முறை முழங்கியதையும் கல்யாணத்துக்கு வந்ததற்காக துரைக்கு ரூபாய் ஆயிரமும் மதாமுக்கு  நூறும் பன்னீரும் சர்க்கரையும், தாம்பூலமும் வைத்து கொடுக்கப்பட்டது// என்று எழுதியிருப்பதை  படிக்க அத்தனை சுவையாக இருக்கின்றது.

Wet mothers எனப்படும் பாலூட்டும் தாய்களை பற்றிய பதிவும் ஆச்சர்யமூட்டியது. பிரெஞ்சு குழந்தைகளின் நலனுக்கென தமிழ்ப்பெண்களை பாலூட்டவென அமர்த்தியிருக்கிறார்கள். இதை நான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

சந்தா சாஹிப் செங்கல்லை  துணிபோட்டு மூடி குரான் என பொய் சத்தியம் செய்தது, ’’மூட்டை தூக்க வா கூலிதருகிறென் என்று சொல்லி உள்ளே வந்ததும் மொட்டையடித்து காலில் விலங்கு பூட்டி, ஏமாற்றியும் கடத்தியும் அடிமைகள் பிடிக்கப்பட்டது, காரைக்காலை கைப்பற்ற நடந்த போராட்டம், மன்னருக்கு பிரெஞ்சுகாரர்கள் வெகுமானங்கள் அனுப்பி வைத்தது, பீரங்கி குண்டுகள் போட்டது, எத்தனை குண்டுகள் என்ற எண்ணிக்கை, மிக நீளமான வால்நட்சத்திரம் தெரிந்தது, போரே செய்யாமல் எப்படி கிளைவ் வெற்றி பெற்று பெரிய புகழுக்குள்ளாகினாரென்பது, இப்படி அவர் பதிவு செய்திருக்கும் அனைத்திலிருந்தும் கிடைக்கும் சித்திரம் அப்படியே அந்த காலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறது. சாம்ராஜ் சொன்னதுபோல அன்றைக்கு இருந்த பிரஞ்சு அரசு இயந்திரத்தின் மிக முக்கியமான, பெரிய பல்சக்கரம் ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள்.

 முக்கியம் முக்கியமல்ல என்று பாகுபாடில்லாமல் அவரைச்சுற்றிலும் நிகழ்ந்த நுட்பமான பல்லாயிரம் தகவல்களை உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார். இத்தனை வருடங்கள் தொடர்ந்து எழுத அவருக்கிருந்த தைரியமும் ஒழுங்கும் வியப்பளிக்கின்றது.

நோட்டமிடுவது, போரிடுவது,  வரிவசூல், ஊழல், வெற்றி தோல்வி, அரசு நிர்வாகம் என விரிந்து விரிந்து அப்போதைய  அரசை, சமூகத்தை , பண்பாட்டை குறித்த பெரும் சித்திரத்தை கொடுக்கிறது இந்த நாட்குறிப்புக்கள்.

ஆனந்தரங்கம் பிள்ளை

அவரது குடும்பவிவரங்களையும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி இருக்கிறார் ஜோதிடம் பார்த்தது, எண்ணெய் தேய்த்துகுளித்தது, காலாற நடக்க நினத்தது, மூல நோய் இருந்தது, போன்ற மேலோட்டமான தகவல்கள் இருக்கின்றன. தம்பி மகனை எப்போதும் சிரஞ்சீவி எனவும், மாமனாரை மிக மிக மரியாதையாகவும் குறிப்பிடும் பிள்ளை தனக்கு ஆகாதவர்களை இஷ்டம்போல் வைதும் எழுதுகிறார். தனக்கு 22 வயதில் முதல் குழந்தை பிறந்ததையும் பின்னர் 38ஆவது வயதில் பிறந்த கடைசி மகனையும் பற்றி விவரங்களையும், அவர்கள் பிறந்தபோது பிறருக்கு அவர் மகிழ்ந்தளித்த வெகுமானங்களையும் சின்ன பொன்னாச்சி, நன்னாச்சி. அய்யாவு என குழந்தைகளின் பெயர்களையும், அவர்களின் ஜாதகக்குறிப்புக்களையும் கூட பதிந்திருக்கிறார்.

தனக்கு நிகராக அதிகாரத்தில் தன் தம்பி மகனை கொண்டு வர அவர் செய்யும் முயற்சிகள், அவரது மகள் இறந்துபோவது, தம்பி மகனை கூடவே வைத்திருந்து ஆவணங்களை எழுதச்சொல்லிக்கொடுப்பது, ஆகியவை நாட்குறிப்பிலிருந்து நமக்கு தெரிய வருகின்றது. பிள்ளையவர்களின் கடைசி மூன்று மாத குறிப்புக்களைக்கூட அவரது தம்பி மகனே எழுதியிருக்கலாமென கருத இடமுள்ளது. பிற செய்திகளுடன் ஒப்பிடுகையில் தனது சொந்த வாழ்வை  மிக விரிவாக பிள்ளையவர்கள் பதியவில்லை. தான் வாழ்ந்த அந்த சூழலையே தன் சொந்த வாழ்வைக்காட்டிலும் அக்கறையுடன் கவனித்திருக்கிறார்.

ஈரானிய ஜாதி என்கிற ஒரு சொற்பிரயோகம் ஜாதிகளைக்குறித்த இன்றைய அடையாளங்களுடன்  ஒப்பிடுகையில் மிக வித்தியாசமாக இருக்கின்றது. 98 சாதிகளைப்பற்றிய குறிப்புக்களும் பிள்ளையவர்களின் நாட்குறிப்பில் தெளிவாகவும் விவரமாகவும் பதிவாகி இருக்கிறது. திருமணங்களில் ஆயுதம் தாங்கிய வீரர்களை ஊர்வலத்தில் அணிவகுத்துவர வாடகைக்கு அமர்த்துவது குறிப்பிட்ட ஒரு சாதியின் தனிப்பட்ட உரிமையாக இருந்திருக்கிறது.

ஒரு கவர்னர் // இவர்களை மோசம் பண்ணுவதை தவிர வேறு வழியில்லை, நம்பிக்கைகுகந்தமாதிரி நடந்துகொண்டு பின்னர் மோசம் பண்ணிவிடு’// எனச்சொல்லிய செய்திகளையும் அவர்  துணிச்சலாக எழுதியிருக்கிறார்

பிரெஞ்சு படையில் மராட்டியப்படைவீரர்கள் இருந்ததை பிள்ளையவர்களின் குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது, வேதபுரீஸ்வரர் கோவிலை இடிக்கும் பதட்டமான காலகட்டத்தின் போது //நிறுத்தினால் நல்லது, நிறுத்தாவிட்டால் இன்னும் நல்லது// என்கிறார். சந்தாசாஹிப்பின் குடும்பங்களில் நடைபெற்ற திருமணங்களை பற்றிய  தகவல்களும் வாசிக்க மிக அருமையானவையாக இருந்தன.

மிக செல்வாக்கான, ஏறக்குறைய ஒரு மன்னரைப்போல சொந்தமாக கப்பலும், துணி மற்றும் சாராய வியாபாரங்களும், செய்துகொண்டிருந்த, பலல்க்கில் பவனி வந்த, கவர்னர் மாளிகைக்குள்ளேயே செருப்பணிந்துபோகும் உரிமை இருந்த, தங்கப்பூண்போட்ட கைத்தடி வைத்திருந்த, கவர்னர்களே பிள்ளையை எதிர்கொண்டு கட்டித்தழுவி வரவேற்பதும், விடைகொடுக்க வாசல்வரை வரும் கெளரவத்தையும் கொண்டிருந்த,  மிக முக்கியமான் பொறுப்புக்களிலிருந்த பிள்ளையவர்கள் மின்சாரமில்லாத அந்த காலத்திலும் நள்ளிரவு வரை அரசாங்ககாரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பணிச்சுமையிலிருந்தும், இப்படித் தொடர்ந்து 25 வருடங்கள் நாட்குறிப்பை,  மிக மிக விவரமாக தெளிவாக அவரது செல்வாக்கான காலத்தை மட்டுமல்லாது  வாழ்வின் இறுதியில் அவரது பதவி பறிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, கடனாளியாக நின்ற கடைசி நிமிஷம் வரையிலுமே  கைப்பட எழுதி பதிவுசெய்திருப்பதன் காரணத்தை யூகிக்கவே முடியவில்லை. இந்தப்பணிக்கென அவர் செலவிட்டிருக்கும் நேரத்தை குறித்து எண்ணுகையிலும் பிரமிப்பாக இருக்கிறது.

பிள்ளையவர்கள் சொல்லி இருக்கும் இரவில் நடந்த திருமணங்கள் குறித்து சொல்லுகையில் திரு கு,ஞானசம்பந்தம் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நள்ளிரவில் பால் வடியும் மரங்களின் அடியில் நடைபெறும் திருமணங்களைக் குறித்தும் சொன்னார்.

  வீட்டுபெண்களை, கலவரங்களின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சாத்தியங்களிலிருந்து தப்புவிக்க வெடிமருந்துகொண்டு குடும்பத்தினரே கொல்லுவது, பேசிக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருப்பவனின் கழுத்தை வெட்டியவன், பின்னர் ஆயுதத்துடன் சரண்டைவது என்பதுபோன்ற  அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் ஏராளம் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு விருந்தில் கைதிகளும் அழைக்கப்பட்டு ஒரே மேசையில் அமர்ந்து சமமாக சாப்பிட்டது, சந்தா சாஹிப் துரையிடம் பணம் கேட்பது, அக்கினி மாந்தியம் என்னும் நோய்க்கான மருந்தை ட்யூப்லெக்ஸ் பலருக்கு கொடுத்துவந்தது, ஒட்டு மாம்பழங்களின் சுவையும் அவற்றை உருவாக்கும்  முறையும், ரகசிய பயணங்கள், .ரகசிய கொள்ளைத்திட்டம் என பலதரப்பட்ட பதிவுகளை பார்க்கமுடிகின்றது நாட்குறிப்பில்.

ஏறக்குறைய ஆயிரம் கப்பல்களின் பெயர்களை, அந்தந்த கப்பல்களின் மாலுமிகளின் பெயர்களுடனும், கப்பல் வேலையாட்களின் பெயர்களுடனும் அவர் சொல்லி இருப்பது பிரமிப்பூட்டுகிறது. அதிகம் வெளியே சென்றிருக்காத பிள்ளை, இருந்த இடத்திலிருந்தபடிக்கே   சுமத்ரா தீவுகளில் நடந்தவற்றை, பிரான்ஸில் நடந்தவற்றையெல்லாம் நுட்பமாக, விஸ்தாரமாக எழுதி ஆச்சர்யபடுத்துகிறார். பிரெஞ்சு அதிகாரிகளின் பதவி வரிசைகளை  வரிசையாக சொல்லும் பிள்ளையின் நினைவாற்றலும் அறிவும் வியப்பளிக்கின்றது

 மதாமின் அம்மா  இறந்த போது கறுப்பு உடையுடன் நடந்த ஊர்வலம் ,இரவு முழுதும் வெடிகள் வெடித்தது என்பது போன்ற விவரணைகளை பிள்ளையின் மொழியில் வாசிக்கையில் எப்படி எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் வாழ்வை என்ற எண்ணம் தவிர்க்கவே முடியாமல் ஏற்படுகிறது அதில் இன்னொரு முக்கியமான குறிப்பையும் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்.  இறந்துபோன அந்த அம்மாள் பிள்ளையிடம் தான் வாங்கிய கடனை வட்டியுடன் ஒரு பையில் போட்டு அவருக்கு திருப்பி கொடுக்கும்படியும், கடனை எதிலும் எழுதி வைத்துக்கொள்ளும் வழக்கமில்லாத பிள்ளையை சற்று கவனமாக இருக்கும்படியும் சொல்லச்சொல்லி தன் இளைய மகனிடம்  இறப்புக்கு முன்னர் சொல்லி இருக்கிறார்.  துபாஷியாக இருந்தவரின் மீது துரைகளுக்கு அன்பிருந்தது போக, துரையின்  மாமியாரான அந்த பிரெஞ்சு பெண்மணிக்கும் பிள்ளையின் மீதான இந்த கரிசனத்தை அறிந்துகொள்ளுகையில் பிள்ளையவர்களை குறித்த ஒரு பிரியம் நமக்கும் ஏற்பட்டுவிடுகிறது. கூடவே கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்திருக்கும் அந்த அம்மாளின் நேர்மையும் கவனிக்க வைக்கிறது.

நடந்த விஷயங்ளை அப்படியே எழுதியிருக்கும் பிள்ளை பல நிகழ்வுகளை குறித்த தனது யூகங்களையும், கருத்துக்களையும் வருத்தங்களையும் கூட  பதிந்திருக்கிறார்.  

பிராமணர்களுக்கு உணவளிக்க ஒரு கிராமமே தானமாக கேட்கப்படுகையில் எப்படி நாசுக்காக பதிலளிக்க வேணும் என பிள்ளையே துரைக்கு ஆலோசனை சொல்லுகிறார்

எந்தெந்த சாதிகளிலிருந்தெல்லாம் ஆட்களை படையில் சேர்க்கலாமென்னும் விவாதத்திலும் பிள்ளையே தேவையானவற்றை பரிந்துரைக்கிறார். பிள்ளையவர்களின் செல்வாக்கை இப்படி பல செய்திகளின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆற்காடில் சின்னமை நோய் பரவி, ஆயிரக்கணக்கில் இறப்பு நிகழ்ந்ததை, அச்சமயத்தில் பல பெண்களுக்கு  அருள் வந்ததை, முதலில் இகழ்ச்சியாக பேசிய இஸ்லாமியர்களும் பின்னர் வீட்டு வாசலில் வேப்பிலைக்கொத்தை செருகி வைத்துக்கொண்டதை,  ஒரு ’அம்மன்’ தனக்கு நகைவேண்டுமெனக்கேட்டு அதை கொடுக்கவும் தயாரானதையெல்லாம் சொல்லும் பிள்ளை  ஒரு  அம்மனைக்குறித்து கிண்டலாக எழுதியிருக்கும் கடிதமொன்றை  புன்னகையுடனே தான் வாசிக்க முடியும்

அரசர் கொடுத்தனுப்பிய உணவை மறுத்த விருந்தினருக்கு  தண்டனையாக அரசர் முன்னிலையில் மீண்டும் முழுக்க சாப்பிட வைத்த நெருக்கடியான நிகழ்வை, பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்கார்களுக்கும் விடுதிகள் இருந்ததை, திருமணமாகாத பெண்களுக்கு நிதி உதவி செய்யும் திட்டமிருந்ததை  இப்படி ஒன்றுவிடாமல் பதிவுசெய்திருக்கிறார் பிள்ளை..  

இறுதிப்பகுதிகளில் கலவரம், சண்டை, கொள்ளை மக்களின் துன்பம் பிண்டாரிகள் என்கிற வடஇந்தியகொள்ளையர்கள் என்று பல முக்கியமானவற்றை குறித்தும்  எழுதியிருப்பவர், தான் முன்புபோல மதிக்கப்படாமல் போனதைக் குறித்த  புலம்பல்களை சொன்னாலும் வேலியே பயிரை மேயுதென்றும்  துணிந்து சொல்லுகிறார் சீதாராம ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துக்கொண்டது, பிரெஞ்சு கவர்னர்கள் கூட ஜோசியத்தை நம்பியது, 20 நாட்கள் இடைவெளியில் எல்லாம் ஜோசியம் பார்த்த செய்திகள், //படைவீரர்களும் ஜனங்களும் சோற்றுக்கும் கஞ்சிக்கும் வழியில்லாமலிருந்த காலத்தில்// கொள்ளையில் கிடைத்த நெல்மூட்டைகளை குறித்தும் பிள்ளை எழுதுகிறார்

  அவரது குடும்ப உறுப்பினரின் இறப்பு, தொடரும் கருமாந்திர காரியங்கள்,  ஊரில் கடைகளே இல்லாமல் போனது, அவரது உடல் நலிவுற்றது எனஅவரது வாழ்வையும், அதைப்போலவே  ஏறி இறங்கிய பிரெஞ்சு அரசையும் ஒருசேரச்சொல்லும் இந்த நாட்குறிப்பு பெரும்  வரலாற்றுப்பொக்கிஷம்

பிரெஞ்சுகாரர்களே குடும்பம் குடும்பமாக வேறிடம் தேடிப் போகையில்  பிள்ளை அங்கேயெ இருப்பதும். அத்தனை செல்வாக்குடன் இருந்த பிள்ளை பதவி இழந்து குற்றம், சாட்டப்பட்டு, கடன்பட்டு வீழ்ந்ததும் அவராலேயே எழுதப்பட்டிருப்பதும்  நெகிழ்ச்சியடைய செய்கிறது.  

12 நாட்களுமே பல அரசு அதிகாரிகளும், பேராசிரியர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சென்னை,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களிருந்தும், கென்யா, கலிஃபோர்னியா, இஸ்ரேல்,சிங்கபூரிலிருந்தும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டார்கள். இறுதி நிகழ்வில் அய்யா கி ரா வந்து பேசி நிகழ்வை மறக்க முடியாத ஒன்றாக செய்தார். பிரெஞ்சுப்பெண்னை மணம் செய்திருக்கும் நீதியரசர் திரு தாவீது அன்னுசாமி, உடையார்பாளையம் ஜமீன் குடும்பம், ஆனந்தரங்கம் பிள்ளையின் குடும்பத்தினர்  என ஒவ்வொரு நாளும் முக்கியஸ்தர்களும் வந்து சிறப்பித்ததால் தினம் நிகழ்வு களைகட்டியபடியே இருந்தது.

அய்யா கி.ரா

அத்தனை தொகுதிகளையும் முழுக்க படிக்க பலகாலம் ஆகுமென்றாலும் இந்த தொகுப்புக்கள் அவசியம் வீட்டில் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தே உடனே வாங்கினேன்..

 வாசிப்பென்பதே அரிதாக போயிருக்கும் இந்தக்காலத்தில் அகநி வெளியீடாக இந்த பெரும்படைப்பு வந்திருப்பதும் வியப்பளிக்கின்றது.  ஒவ்வொரு தொகுதியின் சாரமும் கூடவே  கொடுக்கப்பட்டிருப்பது மிக சிறப்பு. ஆங்காங்கே அடைப்புக்குறிக்குள் சில சொற்களுக்கான விளக்கங்களையும் கொடுத்திருப்பதால் வாசிப்பு மேலும் எளிதாகயிருக்கிறது. தொகுப்புக்களின் இறுதியில் பிள்ளையவர்கள் பயன்படுத்தியிருக்கும் பிறமொழிச்சொற்கள், அவற்றின் மூலச்சொல், பொருள் என பட்டியலிட்டிருப்பதும், சொல்லகராதியையும், பெயர்ச்சொல்லடைவையும் இணைத்திருப்பதும்  மிக பயனுள்ளதாக இருக்கிறது. செம்பதிப்புக்கான அனைத்து இலக்கணங்களையும் இத்தொகுப்பு நூல்கள் கொண்டிருக்கின்றன

பல அரசாங்க கடிதங்கள், கோட்டைகளைக்குறித்த விவரங்கள், ஆனந்தரங்கப்பிள்ளையின் வீடு, நாட்குறிப்பின் முகப்பு, பிள்ளை பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள், அப்போது பாண்டிச்சேரியின் நுழைவுவாயிலாக  இருந்த  செயின்ட் லூயி கோட்டையின் முகப்பு  உள்ளிட்ட  மிக முக்கிய அரிய புகைப்படங்கள் 90 பக்கங்களிலான பின்ணிணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மொழிநடையை சிறிது எளிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும்  பிள்ளையவர்களின் செய்திகளில்  எந்த மாற்றமும் பிழைகளும்  வந்துவிடாமல் கவனமாக இருந்திருக்கிறார்கள். வரலாற்றை பாடபுத்தகங்களில், நாவலில், திரைப்படங்களில் இதுவரை அறிந்துகொண்டதற்கும் இப்படி 300 ஆண்டுகளுக்கு முன்பாக மிக முக்கிய ஆளுமை ஒருவர்  கைப்பட தமிழில் எழுதியதை வாசித்து அறிந்துகொள்வதற்குமான வேறுபாட்டை வாசித்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்

கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் வெண்ணிலா, முனைவர் திரு ராஜேந்திரன் இ.ஆ.ப ஆகியோர் முதன்மை பதிப்பாசிரியர்களாக இருந்து இப்பணியை செய்திருக்கிறார்கள்.. இவர்களுக்கும்,  பதிப்பாளர் திரு முருகேஷ், ந.மு. தமிழ்மணி மற்றும் துணைப்பதிப்பாசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

நிகழாக்காலம் -சுரேஷ் பிரதீப்

நிகழாக்காலம் வாசித்து முடித்தேன் இரண்டாம் முறையாக.  சில பகுதிகளை துண்டு துண்டாக முன்பே வாசித்திருந்தும் இப்போது முழுவதுமாக வாசித்தேன். சனியன்று விமான நிலையத்தின் வரிசை நாற்காலிகளில் பெரும்பாலும் காலியாக இருந்தது அதிலொன்றில் அமர்ந்து இதை வாசித்தேன் 65 சதமானம். மிச்சத்தை பின்பு நேற்று கல்லூரியில் வகுப்புக்களுக்கு இடையில் வாசித்தேன். புரியாத பகுதிகளை நேற்று இரவு மீள் வாசிப்பு செய்தேன். இப்போது கதையில் புரியாமை ஏதும் இல்லை எனினும் ஏன் இவையெல்லாம் இவற்றுக்கு இடையில் வந்தது என்று புரியலை இப்பொவும்

ஆனா. முன்பே  சுரேஷ் சொல்லியிருப்பதை நினைத்துக்கொண்டேன்.இதிலும் குணா எழுதும் கடிதம் ஒன்றில்   இப்படி வரும் ‘’ காலமும் நிகழ்வும் தொடர்பினை கைவிடும்போது வரும் விந்தை’’ ன்னு. அதான் எனக்கு புரியலை போலிருக்கு.அருமையான கதை. சுரேஷ் எழுதினதிலேயே இதுதான் நீளம் அதிகம்னு நினைக்கிறேன். Loved it totally

 சக்தி குணா வரும் முழுக்கதையும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதே போல் ரிஷ்டெப் செடிக்கதையும். அது ஒரு fairytale போலிருக்கு. குணா படித்து முடித்து வாலிப வயது வரையுலும் அவன் வாழ்வில் நடந்த பலவறை விரிவாக சொல்லியிருக்கீங்க. அவன் வாழ்வில் குறுக்கிட்ட பெண்கள் அவன் காயப்படுத்திய பெண்கள் அவ்னை காயப்படுத்திய பெண்கள்  என விஸ்தாரமாகவே இருந்தது சக்தியின் பால்யகாலத்து நட்பிலிருந்து, நஸ்ரியா நிலோஃபர், உறவுகளில் சுகன்யா நதியா மலர் அலுவலகத்தில் ஸ்வப்னா பக்கத்து வீட்டில்  மஞ்சுளா என்று அலைக்கழிக்கிறார்கள் குணாவை ஒவ்வொருத்தியும்.

ஒரு கடிதம் எழுதி துவங்கும் நாவலையும். அப்படியே பதில்கடிதமொன்றில் முடியும் நாவலையும் இப்போதுதான் வாசிக்கிறேன் நான். நல்ல முயற்சி.குணாவும் சுரேஷும் வேறு வேறில்லை எனவே சுரேஷ் சுரேஷுக்கு எழுதும் கடிதம் துவங்கி வைக்கின்றது நாவலை

நாவலின் துவக்கம் ஒரு திரைப்படத்தின், அதுவும் தமிழ் திரைபப்டத்தின் துவக்கம் போலவே இருந்தது. கோழிகளும் சேவல்களும், பனி பெய்யும் அதிகாலை, உறக்கம் கலையாத குழந்தைகள். சாணி போடும் மாடுகள் குளிக்க செல்லும்பெண்கள்  டீக்கடை என்று டிபிகல் சினிமா ஓப்பனிங்.

கதை முழுக்க வரும் கதைமாந்தர்கள் பேசும் slang  கதையுடன் வாசிப்பவர்களை ஒன்றச்செய்கின்றது.

வழக்கம் போலவே கதையுடன் நான் என் வாழ்வையும் என்னையும் பல இடங்களில் பொருத்திப்பார்த்துக்கொண்டேன். சுகந்தி தன்னந்தனியே வீடுகட்டியது தனிமை அவளுக்குள் வைராக்கியத்தை உண்டு பண்ணியது எலாம் தேவிக்கும் பொருந்தும். தனிமை முதலில் பயமுறுத்தியது, பின்னர் பழகியது பின்னர் பிடித்து விட்டது. இப்போ நானும் தனிமையும்’சேர்ந்து’’ வாழ்கிறோம்

//உடலில் பளிச்சென்று தெரியும் கூறுகளை மட்டுமே கண்ணுக்குப் புலப்படச் செய்யும் அந்தியைப் போன்றவள்.

// அம்மா அப்பா நான் மூவரும் நின்றிருந்தோம். எங்களுக்கு இடையே பொட்டலின் காற்று கடந்து சென்று கொண்டிருந்தது.//

// கீறினால் கிழிந்துவிடும்படியான மனப்படலங்கள் எதையும் அந்த உரையாடலில் தொட்டுவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள்//

//கார்களின் உள்ளே பொழியும் இளநீலம்//

இருவரும் பற்றிக்கொண்டிருந்த சரடின் ஒரு முனையை அவள் ஏற்கனவே விட்டு விட்டிருந்தாள்இவையெல்லாம் கவனிக்க வைத்தது. நான் மிகவும் ரசித்தவையும் கூட

//. நஸ்ரியா பெண்களுக்குரிய இயல்பான முறையில் என்னைக் கைவிடத் தொடங்கினாள்//

// புதுத்தகப்பன் என்பதால் அந்த சதைப்பிண்டத்தை ஞானபீட விருதினைப் போல அவர் ஏந்தியிருந்தார்.// இதெல்லாம் கஷ்டமாயிருந்தது ரொம்ப வாசிக்கும் போது

குழந்தையை அப்படி சதைப்பிண்டம்னு சொல்லலாமா ? அதுபோலவே பெண்களுக்கு ஸ்நேகிச்ச ஆண்களை கைவிடுதல் இயல்புன்னு அப்படி பொதுவில் சொல்லமுடியாது இல்லியா

பாலூட்டிக்கொண்டே பெற்றுக்கொண்டுமிருந்தாள்னு சொல்லியிருக்கீங்க இல்லியா அதும் அறிவியல்ரீதியா சாத்தியமில்லை பாலூட்டுதல் ஒரு இயற்கை வழி கர்ப்பத்தடைதான்.  மிக அரிதாகவே அபப்டி கருவுருதல் நிகழும் பாலூட்டும் தாய்மார்களுக்கு. இது சுரேஷ்க்கு தெரிஞ்சிருக்கலாம்  ஒருவேளை அத்தனை அறிவியல் பின்புலம் தேவையில்லை இந்த கதைக்குன்னு நினச்சுருக்கலாம் நீங்க

ஆத்தா கொடுக்கும் புளியின் செம்பழம் எனக்கும் சாப்பிடனும்னு ஆயிருச்சு. வீட்டுக்கு திரும்பும் தெருமுனையில் இருக்கும் மரத்திலிருந்து அப்பப்போ உதிர்ந்து கிடக்கும் பழங்களை நான் இப்பொவும் சீசனில் பொறுக்கி சாப்பிடுவேன்.

’நெருப்பை தாண்டும் முயற்சியில் இருக்கும் பாம்பைபோல சென்று சென்று திரும்பிக்கொண்டிருக்கும் புள்ளி’’ இதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா  இருக்கு

டிவி பத்தி கேட்கும் கேள்வி பத்தி ஏற்கனவே சுரேஷிடம் பேசியிருப்பதை நினைவு கூர்ந்தேன்

பள்ளியில் கர்த்தர் சுரேஷைப்போலவே எனக்கும் பிரியமானவர்.ஒரு போட்டொ வச்சிருந்தேன் கிழிஞ்சு நார் நாரா போறவரைக்கும் .  கழுத்துக்கு கீழே புரளும் நெளிக்கூந்தலுடன் கருணை ததும்பும்  முகத்துடன் அஞ்சல் முத்திரையுடன்  கர்த்தர் இருக்கும் அந்த புகைப்படம் அன்பென்பதை அறியாத அப்பருவத்தில் எனக்களித்த பாதுகாப்பு உணர்வினையும் நிம்மதியையும் எழுதி விளக்கிவிட முடியாது

மழைக்காற்றை குளிர்பட்டுன்னு சொன்னதும் நல்லாருக்கு

மஞ்சள் கலர் சுரேஷுக்கு பிடிக்காது போலிருக்கு

நதியாக்கு எழுதி கிழிக்கும் கடிதத்திலும் நஸ்ரியா கேண்டினில் முக்கிய விஷயம் பேசறப்போ போட்டுக்கொண்டு வருகையிலும் அப்படித்தான் எனக்கு தோணுது அவர் எழுதியிருக்கறதை பார்த்தா

எஞ்சினீயரிங் கல்லூரி அட்மிஷன் விடுதி இதெல்லாம் சமீபத்தில் மகனை கொண்டு போய் விட்டுவிட்டு வந்ததால் அவற்றுடன் இணைத்து பார்த்துக்கொண்டேன்

சக்தி அரசடி குளத்தில் துணி துவைத்துக்கொண்டிருக்கையில் குணா போய் பார்க்கும் காட்சி அற்புதம் ராஜ்கபூர் நர்கீஸ் சந்திப்பை நினச்சுட்டேன்.

மலர்விழியும் தோழிகளும் குணாவை பெண் வேடமிட்டு ரசித்து விளையாடும் பகுதி  தேவைக்கும்கொஞ்சம் அதிகமான நீளம்னு தோண்சுச்சு.

மையெழுதினா கண்களில் மர்மம் கூடும்னு சொன்னதும் அழகு. எனக்கும் அப்படி தோணும் கவர்ச்சியும் மர்மமும் கூடிரும் கண்ணெழுதிட்டானு நினைப்பேன்.

ஏன் சுகந்தி மகனுடனான தன் பிரியத்தை காட்டாமல் தன்னையே கட்டுபடுத்திக்கிட்டானு புரியலை. அவனை யாரையும் சாராமல் வளர்க்கனும்னு நினைச்சாளா/?

 ஆற்றுத்தண்ணீரை சேம்பிலையில் கோரிக்குடிக்கும் அக்காட்சி மலையாளப்படத்தை நினவு படுத்தியது.

ஹாஸ்டலில் யூகலிப்டஸ் மரங்கள் பெரியம்மா வீட்டில் ஊஞ்சல் கட்டியிருக்கும் புன்னை,  பூசன மரங்கள்( மல்பெரியா?) இப்படி நிறைய பச்சை பிடிச்சுருக்கு கதைக்குள்

சுனதன் கதையையும் கதைக்குள் என்னால் பொருத்திக்க முடியலை. என் புரிதல் திறன் குறைவென்பது காரணமாயிருக்கலாம். உங்களுக்கு நடந்த பைக் விபத்தும் இருக்கே கதையில்/?

// முற்றத்தில் காயும் ஈரத்தவிட்டை
சூரியனும் பின்னர் காற்றும் வனைவது போல// loved this very much

ஸ்வப்னாவுடனான உறவுக்கு பின்னர் கண்ணீர் வழிய அவன் இருக்கையில் மனம் சங்கடப்பட்டது . அந்த சமயத்தில் குணாவை  அணைத்துக்கொள்ளனும்னு தோணுச்சு என்னமோ

// கொஞ்சம் நாகரிகக் கனிவுடன் பேசினாலே தங்களுடைய பலகீனமான பக்கங்களைத் திறந்து படிக்கத் தரும் பெண்களைப் போன்றவள் அல்ல ஸ்வப்னா./ இது என்னவோ என்னை புண்படுத்தியது காரணமின்றி அல்லது காரணத்துடன்

சொல்முகம் கலந்துரையாடலில் கவனித்தேன் பலரும் அக தரிசனம புறதரிசனம் என்றெல்லாம் பேசியதை அப்படி தரிசனஙக்ளையோ படிமங்களையோ கதைகளில் தேடிக்கண்டடையத்தெரியாத, கதைகளை நேரடியாக் புரிந்துகொள்ளும் எளிய வாசகி நான்

எனக்கு இக்கதை அல்லது கதைகள் பிடிச்சிருக்கு. இடையிடையே வருபவற்றை தொடர்புபடுத்திக்க தெரியலைங்கறது வாசகியா என்னோட குறை

பலமுறை புன்னகைச்சபடியேதான் வாசிச்சேன்

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑