நவம்பர்  12 ஆம் தேதி அமேஸான் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட ’சூரரைப்போற்று’  நடிகர், தயாரிப்பாளர் சூர்யாவின் 2D Entertainment  சொந்த தயாரிப்பில், சுதா கோங்குராவின் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படம், இதில் சூர்யாவுடன் மலையாள நடிகை அபர்ணா பாலகிருஷ்ணன், ஊர்வசி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் கருணாஸ்  ஆர் எஸ் சிவாஜி, காளி வெங்கெட் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர். இசை ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா , வசனங்கள் விஜயகுமார். ஒரே சமயத்தில் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளிலும் சூரரைப்போற்று வெளியாகி இருக்கிறது.

Air Deccan  – ஏர்டெக்கான் நிறுவனத்தின் தலைவர் திரு கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அவரது simply fly நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.

எளிய கிராமத்துப் பின்னணி கொண்ட நெடுமாறன் ராஜாங்கமான சூர்யா ராணுவ விமான பைலட்டாகிறார். மரணப்படுக்கையில் இருக்கும், சொந்த  கிராமத்தை முன்னெடுக்க பல முயற்சிகளை சாத்விகமாக செய்து தோல்வியுற்ற, தன் தந்தையை பார்க்க வர விமான பயணக்கட்டணம் அதிகமென்பதால் அவ்வாய்ப்பை தவறவிட்டு தந்தையை இறுதியாக காணமுடியாமலாகும்  மாறன் தானே சாமான்யர்களும் குறைந்த கட்டணக்களில் பயணிக்கும்   பட்ஜெட் விமான நிறுவனம் துவங்க முடிவு செய்வதும், அதை சாதமாக்க அதே தொழிலில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் செய்யும் சதிகளும், இம்முயற்சியில் மாறன் சந்திக்கும் தோல்விகளும், சோதனைகளும், நிதி உள்ளிட்ட பல தடைகளும், அனைத்தையும் மாறன்  முறியடித்து நினைத்தபடியே விமான சேவையை துவங்குவதும் தான் முக்கிய கதை. இடையில் காதல், குடும்பம், குழந்தை, நட்பு, தந்தையுடன் கருத்துமோதல்  செண்டிமெண்ட் என பலவற்றை சேர்த்திருக்கிறர்கள்.

மோகன் பாபு தெலுங்கு நெடியுடன் பேசும் வசனங்களும் காட்சிகளும் ஓகே ரகம் தான் இந்த பாத்திரத்துக்கு ஏன் அவரை மெனெக்கெட்டு அழைத்துவந்தார்கள்?. கருணாஸும் காளி வெங்கட்டும் வழக்கம் போல அப்பாவி பாத்திரங்களில் ஒரு மாற்றமுமின்றி  வந்து போகிறார்கள்

விமான நிறுவனம் ஒன்றை சொந்தமாக தயாரிக்கும் ஒருவரின் கனவைக்குறித்த படமென்பதால் அந்த தொழிலைக்குறித்த பிரத்யேக சிக்கல்கள் நெளிவு சுளிவுகள், போட்டிகள் என்று படத்தின் மையக்கரு  அதிகம் தொழிநுட்பம் சார்ந்ததாகவே இருப்பதும் ,சாமான்யர்களுக்கு புரியாத பல காட்சிகளும் வசனங்களுமாக, படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை சென்றடையவில்லை.  

கோபிநாத்தின் சுயசரிதையை அப்படியே திரைப்படமாக்கவில்லை தழுவல் மட்டுமே என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கின்றது. தழுவல் என்றான பின்னர் ஏன் அத்தனை சிக்கலான காட்சிகளை கொடுக்க வேண்டும். தழுவலில் ஏன் பொம்மி ஒரு நகரத்தில் பேக்கரி தொழிலை துவங்கி இருப்பதாக காட்டியிருக்கக்கூடாது? கதையின் ரியல் நாயகன் கோபிநாத் ஒரு பிராமணர் ஆனால் மாறனுக்கு அப்படியான சாதி அடையாளங்கள் ஏதும் காட்டப்படவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மதுரைத்தமிழனாகவே காட்டப்படுகிறார். இத்தனை  வணிகரீதியான மாற்றங்களிருக்கையில் இந்திய விமான சேவையின் வரலாற்றில் மிக முக்கியமான அடையாளம் கொண்டிருக்கும் டெக்கான் ஏர் நிறுவன உரிமையாளரின்  சுயசரிதைக்கு ஏன் போகவேண்டும். வழக்கமான கற்பனைக்கதையாகவே எடுத்திருக்கலாமே ?

மாபெரும் விமான நிறுவனத்தை உருவாக்கும் சூர்யாவின் நெடுமாறன் பாத்திரத்தின் ’உன்னதமாக்கல்’ கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. இத்தனை பெரிய நிறுவனம் துவங்க இருக்கும் ஒரு  கிராமத்து இளைஞன், லஞ்சம் கொடுக்காமலும், எந்த குறுக்கு வழியிலும் போகாமலும், கோடிகளை ஒருவர் கொடுக்கையிலும் மறுப்பது போலவும் காட்டியிருக்கிறார்கள். விஜய் மல்லையா அளிப்பதாக சொல்லும் பெருந்தொகையை மாறன் மறுப்பதை மட்டும் காட்டும் திரைகதை ஏர் டெக்கான் விஜய்மல்லையாவுடனே பிறகு இணைந்ததை சொல்லவில்லை

இயக்குநர் சுதா  தெலுங்கு தேசமென்பதால் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் தூக்கலாகவே இருக்கின்றது. குறிப்பாக ஊர்மக்கள் 100, 200 என்று பணம் அனுப்பி சூர்யாவின் தொழிலுக்கு உதவுவது,  பணம் அனுப்ப ஊரே திரண்டு வருவது, மாற்றி மாற்றி போனில் பாசம் காட்டும் காட்சிகளிளெல்லாம் ஆந்திர நெடி அடிக்கின்றது

அதிலும் ஊர்வசி கண்ணீரும் கம்பலையுமாக  மாறனுக்கு கொடுக்கும் உணர்வுபூர்வமான அழுத்தம் மாறனோடு சேர்த்து நமக்கும் பதட்டத்தை அளிக்கின்றது. ‘’ ஜெயிச்சுருவியில்ல மாறா, ஜெயிச்சுருடா ஊரே உன்னைத்தான் நம்பி இருக்கு’’ என்று அவர் பிழிந்து ஊற்றுகையில் நமக்கே  பயத்தில் நெஞ்சடைக்கின்றது, அத்தனை ஓவராக பாசம் காட்டும் ஊர்மக்கள் சூர்யாவின் சிறு தோல்விக்கே அவரை இகழ்ந்து பேசி தூக்கி வீசுவதும் பின்னர் மறுபடியும் பாட்டிகளும் தாத்தாக்களும் குழந்தை குட்டிகளும் பொண்ணு மாப்பிள்ளையுமாக விமானத்தில் வந்து, காது வளர்த்தி பாம்படம் போட்ட பாட்டிகள் சூர்யாவை நெட்டிமுறித்து வாழ்த்துவதுமாக படம் செண்டிமெண்ட் ட்ராக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பறந்து கொண்டே இருக்கிறது. விமான நிலையத்தில் சூர்யா பணம் கேட்டுக்கெஞ்சி அழும் காட்சிகளும் அதிகப்படிதான். மசாலா நெடியை குறைத்திருக்கலாம். தெலுங்கு டப்பிங் படம்பார்க்கும் உணர்வு வந்துகொண்டே இருக்கிறது

பெண்பார்க்க கதாநாயகன் செல்லும் காட்சிகள் ஏராளம் பார்த்திருக்கிறோம் இதில் முதல் காட்சியிலேயே மாப்பிள்ளையை பார்க்க நாயகி செல்வது புதுமை. அபர்ணா நன்றாக நடித்திருக்கிறார் முற்றின முகம் என்பதால் சூர்யாவுக்கு அக்காபோல இருக்கிறார்.   துவக்க காட்சிகளின் அதிரடி இயல்புகள் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு காணாமல் போய் , கணவனுக்கு உணவை ஊட்டிவிடும் குழந்தையை பார்த்துக்கொள்ளும்,, தோல்வியில் துவண்டுபோகையில் கணவனுக்கு உத்வேகம் தரும் நஷ்டமேற்பட்டால் கடன் ,தரும் கைக்குழந்தையுடன் தனியே விமானத்தில் பயணிக்க தயாராகும்    உன்னத மனைவியாகிவிடுகிறார்.

கணவன் ஒரு பொது இடத்தில் எதிர்பாரா சிக்கலில் இருக்கையில் பிரசவ வலி வர, தான் பார்த்துக்கொள்வதாக தைரியமாக சொல்லிச் செல்வதும், கடைவீதியில் இருக்கையில்  வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் டென்ஷனாகும் மாறன் மனைவியை மறந்து பைக்கில் புறப்பட எத்தனிக்கையில் தான் ஆட்டோவில் வந்துவிடுவதாகவும் மாறன் போகலாமென்றும் சொல்லும் காட்சியும் சிறப்பு. இப்படியான நல்ல புரிதல் உள்ள, அழகிய, கேட்கையிலெல்லாம் கடனளிக்கும், கனவுகளுக்கு கைகொடுக்கும், காதலிக்கும்,  சாப்பாடு ஊட்டிவிடும்  மனைவிக்கான ஏக்கத்தை பொம்மி பாத்திரம் இளைஞர்களுக்கு அளித்திருக்கிறது

பல வருடங்களுக்கு பிறகு கருணாஸுடனும் முதல் முறையாக ஊர்வசியுடன் முழுப்படத்திலும் சூர்யா இதில் நடிக்கிறார். ஊர்வசி மிகத் தளர்ந்திருக்கிறார்.

உடலைக்கட்டுக்குள் வைத்து பாத்திரத்திற்கு பொருந்தும் தோற்றத்துடன் இருக்க கடுமையான  உணவுகட்டுப்பாட்டில்  இருந்ததற்கு சூர்யாவிடம் நல்ல பலன் தெரிகின்றது. சீருடையில் பிரமாதமாக  இருக்கிறார். வயதையே யூகிக்க முடியாத உடற்கட்டும் இளமையும்  வலிமையுமாக வருகிறார். பாராட்டுக்கள்

சொந்தக்குரலில் மதுரைத்தமிழில் சரளமாக பேசும் அபர்ணா, சூர்யாவிடம் உணர்வுபூர்வமாக உச்சஸ்தாயியில்  ஆக்ரோஷமாக பேசும் மொட்டைமாடிக் காட்சி வசனங்களில் மட்டும் மலையாள நடிகை என்பதை காட்டிவிடுகிறார். தாய்மொழியின் வலிமையல்லவா அது!

சென்சாரில் U சான்றிதழ் வாங்கி இருந்தும் சூர்யா ஆபாச வசவுகளை ஏராளமாக பேசுகிறார். சிவகுமார் சார் கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?

கோபமும், கனவுகளும், வேகமும் வெற்றிக்கான துடிப்பும் நிறைந்த  இளைஞனாக, மாறனாகவே மாறி இருப்பதற்கும், அகரம் அமைப்பின் மூலமாக ’’தனது பெரிய கனவு’’ என்னும் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 70 பேரை இலவசமாக விமானத்தில் பயணம் செய்ய வைத்து, அந்த பயணத்தில், வெய்யோன் சில்லி’யென்னும் அருமையான பாடலை நடுவானில் விமானத்தில் ரிலீஸ் செய்திருப்பதற்கும், புத்திசாலித்தனமாக இணையத்தில் படத்தை வெளியிட்டு சொந்த தயாரிப்பில் நஷ்டம் வராமல் பார்த்துக்கொண்டதற்கும், படத்தை அமேஸானுக்கு விற்ற தொகையில் 5 கோடிகளை கொரோனா பணியாளர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளித்ததற்குமாக சூர்யாவை போற்றுவோம்.