ஆதியோகியும் ஆதிகுருவுமான சிவபெருமான் உரு, உரு-அரு, அரு(வம்) என்ற மூன்று விதங்களிலும் வழிபடப்படுபவர். தொன்மையான சிவஸ்தலமான சிதம்பரத்தில் தாண்டவக்கோனாகிய நடராஜப் பெருமான் உருவாகவும், ஸ்படிக லிங்கமாக உள்ள சந்திரமௌளீஸ்வரர் அரு-உருவாகவும், சிதம்பர ரகசியம் எனும் வெட்டவெளி அருவாகவும் மூன்று விதமாகவும் வழிபடப்படுகிறார். இது மட்டுமல்லாமல், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், லிங்கோத்பவர், பிக்ஷாடனர் போன்ற பல்வேறு வடிவங்களிலும் கூட சிவபெருமான் வழிபடப்படுகின்றார்.

சிந்து சமவெளி அகழ்வாய்வில் கிடைத்த லிங்க வடிவம்

எனினும் உலகம் முழுவதுமே சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியமானது. இந்தியாவிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  பரவியுள்ள லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. 

ஹம்பி

 ரிக் வேதத்தில் லிங்கம் பற்றீய குறிப்புக்களோ சொல்லோ இல்லை மாரக ருத்ரன் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதர்வவேதத்தில்  சொல்லப்பட்டிருக்கும் ஸ்தம்ப வழிபாடு என்பது லிங்கத்தின் வடிவையே குறிப்பதாக கொள்ளப்படுகின்றது. உபநிஷங்களில்தான் லிங்கம் எனும் சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தம்பமே புத்த ஸ்தூபிகளீன் வடிவினை அடிப்படியாக கொண்டு லிங்க வ்டிவாகி இருக்கலாமென்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

புத்த ஸ்தூபி

சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ்வழிபாடு இருந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பிரயபாஸ் (Prayapas) என்ற பெயரில் ரோமானியர்கள் சிவலிங்க வடிவத்தை வணங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ரோமானியர்களுக்கு முன்னர் சிவலிங்க வடிவத்தை பாபிலோனாவிலும், பண்டைய காலத்து நகரமான மெசபடோமியா (Mesopotamia), ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவிலும் வழிபாட்டு வந்திருக்கிறார்கள். அயர்லாந்தில் ’ஊழின் கல்’ என்றழைக்கப்படும் லிங்க வடிவினை 500 வருஷங்களுக்கு முன்பே வணங்கி வந்திருக்கிறார்கள்.  

stone of Destiny-Ireland

தொல்காப்பியத்தில் ‘கந்தழி’ என்றும், சங்க இலக்கியங்களில் ‘கந்துடை நிலை’என்றும் சிவலிங்கம் சுட்டப்படுகின்றது.

சிவலிங்கம் என்றால் சிவனின் அருவுருவ திருமேனி அதாவது உருவத்திற்கும் அருவத்திற்கும் இடைப்பட்ட ஒரு அடையாளமேயாகும். இதை,

காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

                                                                                  -என்கிறார் சேக்கிழார்.

லிங்க புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி அண்ட சராசரங்களையும் கீற்பகுதி அண்டசராசங்களை தாங்கி நிற்கும்  அளப்பரிய சக்தியையும் குறிக்கும் என செல்லப்படுகிறது. சிவ புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிறிதிற்கும் சிறிதான – பெரிதிற்கும் பெரிதான சகலத்தையும் உள்ளடக்கிய ஒரு ஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறது.  இதனையே மாணிக்கவாசகர் ”அணுவிற்குள் அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்’’ என கூறுகிறார்.

சிவலிங்க வடிவம் சுயம்புவாக உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றெனும் கருத்தும் உள்ளது. இயற்கையோடு இசைந்த, நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமே லிங்கமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்கள் சொல்கின்கிறன.  தவஞானிகளின் ஆற்றல்களாலும், மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பிரம்மாண்டமான பேராற்றல் இயற்கையிலேயே லிங்க வடிவத்திற்கு உள்ளது என அறிவியலும் சொல்கின்றது.

25 அடி உயர லிங்கம்-ஜிரோ பள்ளத்தாக்கு அருணாச்சலபிரதேசம்

  சுவாமி விவேகானந்தர் பிரான்ஸில் 1900  ல் நடந்த ’சமயங்களின் சரித்திரங்கள்’ என்ற மாநாட்டில் சிவலிங்கம் என்பது யுப ஸ்தம்பம் அல்லது யுப கம்பம் அதாவது வேதங்களின் சாரங்களை அடிப்படையாகக் கொண்ட மகா பிரம்மத்தின் அடையாளச் சின்னமே எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

லிங்கம் என்றால் அடையாளம் என்று பொருள். அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போதும் சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் வெளிப்படுகின்றன. மூவரின் ஆற்றலையும் உள்ளடக்கிய வடிவமே லிங்க வடிவம் என்கிறது ஸ்ரீருத்ரம்.


சிவதியானத்தில் முதல்படி நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் இருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது.  அருணகிரிநாதர் இதனால்தான் “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.


உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்கிற, அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதைத்தான் அத்வைத விளக்கமான  “தத்துவ மஸி” — நான் அது ஆதல். “அஹம் பிரமாஸ்மி” – நானே கடவுள் என வேதங்களும் சொல்கின்றன. ’தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே ’ என்கிறது  திருமந்திரம்.

இமயமலையில் பனி லிங்கமாகவும், இயற்கையில் விளைந்த பாணலிங்கமாகவும் சிவலிங்கங்கள் உள்ளன. மார்க்கண்டேயருக்கு  என்றும் பதினாறு ஆயுளைக் கொடுத்தது சிவலிங்க வழிபாடேயாகும். வேடுவனாக இருந்த ஒருவனை கண்ணப்பராக்கியதும் சிவலிங்கமே!

லிங்க வடிவின் அமைப்பு

அடிப்பகுதி, நடுப்பகுதி, ஆவுடையார், மேல்பகுதி ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும் லிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. லிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.

ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் வெளியில் தெரியும ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன.

இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி  தாராபாத்திரம்  எனப்படும்  மூலவருக்கு மேல் தொங்கவிடப்பட்டிருக்கும் குடம்போன்ற பாத்திரத்தில் நீர் அல்லது பால் நிரப்பி லிங்கத்தின் மீது சொட்டும்படி அமைக்கப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும். ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.

’’பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம்’’ என்று இதை விளக்குகின்றது சிவ புராண மந்திரம்

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும். ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு..யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!

“ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா”
என்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம். “ஆத்ம யோனி” என்றால் ஆத்மா செல்லும் பாதை.

எல்லா சிவலிங்கத்திலும் ஆவுடையார் இருக்காது, மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு. நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது. கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். பாணாசுரன், மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்து வழிபட்டிருந்ததால்  அந்த லிங்கங்களில் எப்போதும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.

பாணலிங்கம்

இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான். நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் இவை கீறல் போன்ற ரேகையுடன், பளபளப்பாக, நீள் உருண்டை வடிவம் கொண்டதாக இருக்கின்றன. நாவற்பழத்தின் அடர்நிறம், தேன் நிறம், வண்டு நிறம், காவி, நீல, பச்சை, பழுப்பு  முதலிய பலவண்ணங்களில் பாணலிங்கம் இருக்கும்.

 திருப்பெருந்துறையில் மணிவாசகர் ஆலயத்தில் மேலே லிங்கமில்லாது வெறும் ஆவுடையார் மட்டும் இருக்கும்

சிவலிங்கத்தின் பீடமும் பலவகையான முறையில் அமைந்திருக்கும். பீடம் நாற்கோணமாயிருந்தால் இயக்கச் சத்தியாகும். பீடம் அறு கோணமாயிந்தால் கிடத்தற் சத்தியாகும். பீடம் வட்டமாயிருந்தால் இருத்தற் சத்தியாகும்

பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் லிங்கங்கள் வர்த்தமானக லிங்கம் எனப்படும்

ஆத்ய லிங்கம்  எனபவை பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் லிங்கங்கள்.

சிவலிங்கத்தின் ருத்திர பாகமாகிய மேற்பகுதி உருண்டை அல்லது எட்டு மூலை அல்லது 16 மூலை என்ற முறையிலும் அமைவதுண்டு.

சிவலிங்கத்தின் உச்சி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட நான்கு வகை லிங்கங்களாவன;,

ஆட்யலிங்கம் – சிவலிங்கத்தின் உச்சி அர்த்த சந்திரன் வடிவில் இருக்கும்.

அநாட்யலிங்கம் – உச்சி வெள்ளரிப் பழம் போல் இருக்கும்.
சுரேட்யலிங்கம் – உச்சி கோழி முட்டை வடிவில் இருக்கும்.
சர்வசமலிங்கம் – உச்சி குடை வடிவில் இருக்கும்.

சர்வசமலிங்கத்தில் மட்டும் முகலிங்கங்கள் எனப்படும், நான்கு அல்லது ஐந்து முகங்களைக் கொண்ட லிங்கம் அமைக்கப்படும்.

சதாசிவமூர்த்தம் எனப்படும் சிவலிங்கம் ஈசானம் என்னும் நடு உச்சிமுகம், தற்புருடம் (கிழக்கு), அகோரம் (தெற்கு), வாமதேவம் (வடக்கு), சத்தியோசாதம் (மேற்கு) ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டதாகும்.

 நான்கு முகங்கள் கொண்ட சிவலிங்கம் – ஈசானம் என்னும் உச்சிமுகம் தவிர, ஏனைய  நான்கையும் கொண்டிருக்கும்

மும்முக லிங்கத்தில், தற்புருடம்,வாம்தேவம்,அகீரம் ஆகியவை மட்டுமே அமைந்திருக்கும்

இரண்டு முக லிங்கத்தில் தற்புருடம், சத்தியோசாதம் ஆகிய இரண்டு மட்டும் அமைந்திருக்கும் .

ஒருமுக லிங்கத்தில் தற்புருடம் மட்டும் இருக்கும். கிழக்கு நோக்கியுள்ள இந்த முகம் பொன் நிறமானது. கோயில்களில் ‘நிருதி’ என்னும் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இவற்றை ‘நிருதி லிங்கம்’ என்பர். மனிதனை வாகனமாகக் கொண்டவர் நிருதி எனும் தேவன். அவரால் வழிபடப்படும் இந்த லிங்கத்தை வணங்குபவர்கள், ராஜயோகத்துடன், மனிதர்களை அடக்கி ஆளலாம் என்கிறார்கள்.

திருவண்ணாமலை அருணா சலேச்வரர் மூலஸ்தானம் அருகில் உள்ள நிருதி மூலையில் ஒருமுகலிங்கம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சபையிலும் ஒருமுகலிங்கம் இருக்கிறது

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் லிங்கத்துக்கு முகம் இல்லா விட்டாலும், வெள்ளி, தங்கக் கவசங்களில் கண், மூக்கு, வாய் முதலியவற்றை அமைத்து அணிவிக்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் கவசத்துடனான முகலிங்கம் உள்ளது.

.திருக்கோயில் கருவறையில் சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்தாற்போல உலோகத்தால் அமைத்து வழிபடுவதும் பின்வரும் ஐந்து கலைகளைச் சுட்டுவதன் பொருட்டேயாகும்.

  1. ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து விடுவிக்கும் நிவிர்த்திக் கலை
  2. ஆன்மாக்களை முத்திக்குச் செலுத்தும் பிரதிட்டாக் கலை
  3. பந்த நிலை  நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைக் கொடுக்கும் வித்தியா கலை
  4. அனுபவ ஞானம் பெற்ற ஆன்மாக்களுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய எல்லாவற்றையும் சாந்தமாகச் செய்வதற்கான சாந்தி கலை .
  5. விருப்பு, வெறுப்பு நீங்கிச் சாந்தமாக நின்ற ஆன்மாக்களுக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற நிலையை உண்டாக்கும் சாந்தியதீத கலை

தொன்மையான கோவில்களில் நான்முகலிங்கத்தினருகில் இரட்டைபாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்  அமைப்பை அறிவியலாளர்கள் DNA Helix அமைப்புடன் ஒப்பிடுகிறார்கள்.  

சிவலிங்கத்திலேயே நமசிவாய என்ற மந்திரத்தை அமைத்துக் காட்டும் முறையும் உண்டு. மேற்குமுகம் ஆகிய சத்தியோசாதம் ‘ந’, வடக்கு முகம் ஆகிய வாமதேவம் ‘ம’, தெற்கு முகம் ஆகிய அகோரம் ‘சி’, கிழக்கு முகம் ஆகிய தற்புருடம் ‘வா’, உச்சி முகம் ஆகிய ஈசானம் ‘ய’ – என்ற ஐந்தெழுத்து, ஐந்து முகங்ளாயின.

  ..

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க ரூபத்தில் வழிபாடு செய்வதே சிறந்தது’ என்று மகாபாரதத்தில் வியாசர் அருளியிருக்கிறார்.  அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மையும் கொண்டது  லிங்க வடிவங்கள் என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன.

அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்தி காத்துவரும் ஆற்றலின் வடிவம லிங்கம்.. இக்கருத்து நவீன விஞ்ஞான யுகத்திலும் பொருந்தி வருவதை அணுக்கரு உலைகள்(Nuclear Reactors) லிங்க வடிவிலிருப்பதிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணம். சிவ புராணம், ஸ்கந்த புராணம் என எல்லாவற்றிலும் லிங்கத்தை பற்றிய வரலாறு உள்ளது! பிருகு முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

“திருமூலர்” லிங்க வடிவத்தை   பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே”

அடுத்த பகுதியில் லிங்கங்களின் பல்வேறு வகைகளைக் குறித்து காணலாம்