2019 ல் வெளி வந்த போர் குறித்தான திரைப்படம் கேசரி. தர்மா ப்ரொடக்‌ஷனில் கரன் ஜோஹரும் சேர்ந்து தயாரித்த படம் இது. அக்‌ஷய் குமார் நாயகனாகவும்  பரினிதி சோப்ரா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1897செப்டம்பர் 12 ஆம் தேதி  ஏறக்குறைய பத்தாயிரம் வரை இருந்த ஆஃப்கான் பழங்குடியினருக்கும் (அப்போதைய பிரிடிஷ் ராணுவத்திலிருந்த) 21 பேர் மட்டுமே கொண்ட சீக்கிய படையினருக்கும் நடந்த மிக உணர்ச்சிகரமான, வீரமான, நம்மில் பலர் அறிந்திருக்காத ஒரு போரைப்பற்றியது

80 கோடி தயாரிப்புச்செலவில் உலகம் முழுக்க ஹோலிப்பண்டிகை அன்று  ஜீ ஸ்டுடியோவால் திரையிடப்பட்டது. படம் வெளியான சில வாரங்களிலேயே அதிக வசூலான பாலிவுட் திரைப்பட வரிசையில் இணைந்தது

உண்மைக்கதையான இது எந்த மாற்றமும் இன்றி எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் ஆஃப்கான் எல்லையில் இருந்த சரகரி கோட்டையில் 20 சீக்கியர்கள் மட்டுமே கொண்ட ஒரு  படைப்பிரிவு அமைத்திருந்தது. ஹவல்தார் இஷார் சிங் என்னும் சீக்கியர் இந்திய ஆஃப்கான் எல்லையில் இருந்த  குலிஸ்தான் கோட்டையில் புகழ்பெற்ற படைவீரராக இருந்தவர். அவரது பிரபல்யத்தைக்கண்ட, இந்தியர்கள் கோழைகள் என்னும் தீர்மானமான முடிவில் இருந்த  அவரது பிரிட்டிஷ் உயரதிகாரி அவர் மீது பொறாமைகொண்டார். ஒரு நாள் அவரது கோட்டை அருகிலேயே முல்லா என்னும் ஒரு ஆஃப்கன் பழங்குடித்தலைவன், கட்டாயத்திருமணத்தில் விருப்பமில்லாமல் இனத்தை விட்டு தப்பியோடிய ஒரு பெண்ணை அவளது கணவனை விட்டே கொல்லச்சொல்கிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த இஷார் சிங் அவரது மேலதிகாரியின் கட்டளையையும் மீறி அந்த பெண்ணை அவளது கணவனைக்கொன்று காப்பாற்றுகிறார்.

இந்த ஒரு காரணத்தினாலேயே இஷார் சிங்கை மேலதிகாரியின் கட்டளையை மதிக்காத குற்றத்தின் பொருட்டு குலிஸ்தானுக்கும் லாக்கர்ட் கோட்டைக்குமிடையிலிருக்கும் சரகரி கோட்டைக்கு இடமாற்றம் செய்கிறார்.அங்கு 20 சிப்பாய்கள் மட்டுமே இருந்தாலும் ஒழுங்கின்மையே பிரதானமாக இருக்கிறது. அங்கு பொறுப்பேற்றுக்கொண்டு அனைவரின் அன்புக்கும் உரியவராகி ஒழுங்கான ஒரு படைப்பிரிவை தயார் செய்கிறார் இஷார் சிங்.

விரைவிலேயே இஷார் காப்பாற்றிய அதே பெண்னை சரகிரி கோட்டைக்கு முன்பாகவே வெட்டிக்கொன்று பத்தாயிரம் பழங்குடியினருடன் முல்லா போருக்கு வருகிறான். வரும் பொழுது பிறர் இவர்களின்  உதவிக்கு வரும்  எல்லா வழியையும் அடைத்தும் விடுகிறான்

அப்போது 21 பேர் மட்டுமே இருக்கும் அப்படைபிரிவில் தனது காவி நிற (kesari)  டர்பனை அணிந்துகொண்டு உணர்ச்சிகரமான உரையாற்றும் இஷார் 21 பேரிடத்திலும் சாகும் வரும் வரை போரிடும் உறுதியை உருவாக்குகிறார்.

மிககுறைந்த ஆட்களே அப்படைபிரிவில் இருப்பதால் படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே அனைவரும் நமக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள். குள்ளமான சமையல்காரர், எப்போதும் சிரிக்கவே சிரிக்காத ஒருவர், 6 வாரமே ஆன மகளின்  கைகளின் அச்சு பதிந்திருக்கும் அஞ்சல் அட்டையை எடுத்து எடுத்து பார்த்துக்கொள்ளும் ஒருவர், சகிக்க முடியாத இசையை அடிக்கடி வாசிக்கும் ஒருவர் என்று அனைவரும் நமக்கு விருப்பமானவர்களாகிவிடுகிறார்கள் இந்த போருக்கு முன்பே. செல்லுமிடங்களிலும் போர் நடைபெறும் போதும் கற்பனையில் தன் மனைவியுடன் அடிக்கடி இஷாரும் பேசிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்

21பேரும் பல ஆஃப்கனியர்களை கொன்று தாங்களும் உயிரைவிடுவதும் இறுதிக்காட்சியில் மானசீகமாக தன் மனைவியுடன் பேசியபின்னர் தீயில் பழுக்க காய்ச்சிய வாளுடன் பலரை கொன்றுவிட்டு தன் டர்பனை யாரும் தொடாமல் பார்த்துக்கொண்டு இஷாரும் உயிர்விடும் காட்சிகளில் நம் அனைவரும் கண் கலங்குவோம்.

இஷார் சிங்கிற்கு பிரிட்டிஷ் படைகளின் மிக உயரிய விருதான விக்டோரியா க்ராஸ் என்னும் விருது அளிக்கப்பட்டது. இறந்து போன 21 சிப்பாய்களுக்குமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் 2 நிமிட அமைதி காத்ததும் குறிப்பிடத்தக்கது. .ராணுவ வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத நிகழ்வு சீக்கிய படையினரின் இந்த சரகிரி போர். இனிமையான பல பாடல்களும் இத்திரைப்படத்தில் இருக்கின்றது.

nationalism patriotism heroism  என எல்லாம் கலந்த பிரமாதமான் நடிப்பை தந்திருக்கிறார் அக்‌ஷய்குமார். படத்தொகுப்பு பிண்ணனி இசை ஒளிப்பதிவு உடையமைப்பு என எல்லாம் பிரமாதம் கேசரியில்

.சீக்கியர்கள் போற்றும் அவர்களது விழுமியங்களையும் வீரத்தினூடே சொல்லும் படமிது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் பரவலாக போற்றப்படும் போர் நினைவுப்படமான இதனை நம் இளைஞர்கள் அவசியம் காணவேண்டும்.