செழியன்,  ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ’To let’’  திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். 21 பிப்ரவரி 2019,ல் திரைக்கு வந்த இதுவே இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம். பிரேமா செழியன் இப்படத்தை தயாரித்துள்ளார். 25 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்ட, பாடல்கள் இல்லாத ஒரு அழகிய தமிழ்திரைப்படம் இது

மிக எளிய திரைக்கதை. திரைப்படத்துறையில் கதாசிரியனாகும் பெரும் கனவுடன் இருக்கும், தற்போது கிடைக்கும் சின்ன சின்ன திரைத்துறை சார்ந்த வேலைகளை செய்துவரும் இளங்கோ என்னும்  இளைஞன்,  வேற்று மதத்தை சேர்ந்த காதல் மனைவியுடனும் இளம் மகனுடனும் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். IT துறையில்  பணிபுரிபவர்கள் அதிக வாடகை கொடுக்க முடியும் என்பதால் அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர் வீட்டை வடகைக்கு கொடுக்க முடிவு செய்து இவர்களை ஒரு குறிப்பிட்ட, வெகு சமீபத்திலிருக்கும் ஒரு தேதிக்குள் காலி செய்ய சொல்வதும் வீடுதேடி இவர்கள் குடும்பமாக அலைவதும், வீடு கிடைப்பது  சார்ந்த துயரங்களுமே கதை

மொத்தம் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள். செழியனின் உதவியாளரும் கவிஞர் விக்ரமாதித்யனின் மகனுமான  சந்தோஷ் இளங்கோவாகவும் , அவர் மனைவி அமுதாவாக நடனக்கலைஞர் ஷீலாவும்,  குட்டிப்பையன் தருணாக சித்தார்த்தும், வீட்டின் உரிமையாளராக நாடகக்கலைஞர் ஆதிரா பாண்டிலட்சுமியும் நடித்திருக்கின்றனர்.பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோரும்  நடிப்பில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் மிகச்சாதாரண 3 அறைகள் இருக்கும் வீடுதான் கதைக்களம். மிகச்சிறிய பேசுபொருள் ஆனால் மிக அழகாக திரைமொழியை கையாண்டு இதை ஒரு அற்புதமான திரைப்படமாக செழியன் உருவாக்கியிருக்கிறார்.

 இப்படத்தில் பிண்ணனி இசையும் இல்லை. இயல்பான வாகனப்போக்குவரத்து ஒலிகளும் தொலைக்காட்சி, வானொலிச் சத்தங்களும், மகன் ஏதேதொ மிளற்றியவாறே விளையாடும் ஓசைகளும்  அமைதியுமே படத்தை நடத்திக்கொண்டு போகின்றது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவுக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்.

குடியிருக்கும் அவ்வீட்டின் கதவு திறக்கையில் துவங்கி அதே கதவை மூடுகையில் முடிகின்றது திரைக்கதை.  சந்தோஷ் மற்றும் அமுதா தமிழ்திரையுலகிற்கு  நம்பிக்கையூட்டும் புது வரவு. ’’திட்டமாட்டியே’’ என்று தயக்கமாக துவங்கி உரையாடுவதும், அவமானத்தை கணவனிடம் கொட்டித்தீர்ப்பதுவும் வீடு வீடாக கனவுகளுடன் சென்று பார்ப்பதுமாய்  ஷீலா அசத்துகிறார். மூக்கும் முழியும் நீளப்பின்னலுமாய் லட்சணமாய் பாத்திரத்துக்கு பாந்தமாய் பொருந்தி இருக்கிறார்..

சந்தோஷ் அபாரமான இயல்பான நடிப்பு. அமுதாவிடம் கடுமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆதிரா ‘’உங்ககிட்டெ பேசலீங்க.‘’ என்று  இவரிடம் சொல்கையில் ஆத்திரத்துடன் ’’நானும் உங்ககிட்டெ பேசலீங்க!’’ என்று கத்துவதொன்றையெ சொல்லலாம் அவரின் அருமையான நடிப்பிற்கு உதாரணமாக. பல காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்வு, சின்ன சின்ன ரொமான்ஸ், மகனின் படிப்பு எதிர்காலம் என கவலைப்படுவது, அவ்வபோது பூசலிட்டுக்கொள்வது என அவர்களின் வாழ்வை மிக அண்மையிலென நாமும் அவ்வீட்டிலிருந்தே காண்கிறோம், ஒவ்வொரு முறை வீடு கிடைப்பதற்காக அலைபேசி ஒலிக்க காத்திருக்கையில் ’’கடவுளே, வீடு கிடைச்சுடனும்’’ என்று நாமும் பிரார்த்திக்க துவங்கிவிடுவோம். அந்த சுட்டிப்பையன் சுவற்றில் வரையும் படங்களும் அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கின்றது. அழகிய வீடொன்றை வர்ணங்களில் வரைந்துகொண்டிருக்கும் அச்சிறுவன் பிற்பாடு அப்பா அம்மாவுடன் பள்ளியிலிருந்து நேராக வீடு வீடாக தேடிக்கொண்டிருந்ததில் பழகிப்போய் அழகிய வீடு ஒன்றை வரைந்து அதில் to-let என்றும் எழுதுகிறான். நகர வாழ்வின் போதாமைகளும் பொருளியல் சிக்கல்களும், பெரியவர்களுடையதை மட்டுமல்லாது, வளரும் ஒரு அறியாக்குழந்தையின் கனவுகளையும்   சிதைத்து விடுவதை இயல்பாக  காட்டும் காட்சியது.

அவ்வபோது அவ்வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் ஒரு குருவி ஒருநாள் மின்விசிறியில் அடிபட்டு செத்துப்போவதைப்போல அவர்களின் எளிய வாழ்விலான கனவுகளனைத்தும் சொந்தமாக வீடும் பொருத்தமான வாடகைவீடும் இல்லையென்னும் காரணத்தினால் அடிபட்டுப்போகின்றது.

ஜன்னல் வழியே எதிர்வீட்டின் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருப்பது, சின்ன தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது, விருப்பம் போல சுவற்றில் வரைந்து மகிழ்வது என்று எல்லாவற்றிலிருந்தும் வீடு மாற்றும் நிர்பந்தம் காரணமாக அச்சிறுவன் விலகிக்கொண்டெ வருவது வலிதருகின்றது. ’’அப்பா! இந்த tv  நம்மளுதா, இந்த வண்டி நம்மளுதா என்றெல்லாம் கேட்டு ஆமென்று பதில் சொல்லும் தகப்பனிடம் ’’அப்புறம் ஏம்ப்பா இந்த வீடு மட்டும் நம்பளுதில்லை? ’’ என்று கேட்கையில் அதற்கான பதில் அந்த அப்பாவிடமும் நம்மிடமும் இல்லையென்பதை வருத்தத்துடன் உணருகிறோம்

அந்த வீட்டு எஜமனியம்மாவான ஆதிராவின் கண்டிப்பும் கடுமையுமான நடிப்பு மிகப்பிரமாதம்.  அதட்டலும் அலட்சியமுமாய் அசத்துகிறார். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதை நம்பவே முடியாது, பெரிய அவமதிப்புக்களை சாதாரணமாக அவர்  நிகழ்த்துகையில் கூனிக்குறுகியபடி அமுதாவுடனேயே நாமும் படியிறங்கி வந்து அறைக்கதவை தாளிட்டுக்கொண்டு அழுவோம்.

பணம் தொடர்பான ஒரு சின்ன மனஸ்தாபத்தின் பின்னர் கிரைண்டரில் மாவரைத்துக்கொண்டிருக்கும் அமுதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாக்கட்டிலிருந்தும் இளங்கோ நோட்டுக்களை எடுத்துக்கொடுப்பதும், வீட்டை காலி செய்கையில் ஒட்டடை படிந்திருக்கும் மனைவியின் தலையிலிருந்து மென்மையாக அவற்றை  அப்புறப்படுத்துவதுமாய், நெருக்கடியிலும் அடுத்த கனம் என்னவென்று முன்முடிவு செய்ய இயலா வேதனையிலும் கூட அவர்களுக்கிடையேயான  காதல் இழையோடும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும் விதம்அழகோ அழகு

எளிய தளத்திலியங்கும் மனிதர்களின் பிரச்சனைகளை கண் முன்னே கொண்டுவந்து காட்டி நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் செழியனுக்கு வாழ்த்துக்கள். பெருநகரமென்னும் இயந்திரத்தில் சின்னசின்னதான அந்தரங்க வாழ்வின் கனவுகள் எந்த மிச்சமுமின்றி நசுக்கப்படுவதை சொல்லும் படமிது. இந்தப் படத்துக்கு  2017 கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது 65வது தேசிய திரைப்படவிழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும், கோவா வில் நடைபெற்ற 49வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பரிந்துரை விருதினையும் பெற்றது. ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

 தென்னிந்திய சினிமாவின் மரபான பாடல், நடனம், நகைச்சுவை, ஆபாச வசனங்கள் என்னும் எவ்விதக்கேளிக்கைகளும் இல்லாத இத்திரைப்படம் பல ஊர்களில் திரையிடப்படவேயில்லை என்பது வருத்ததிற்குரியது. திரைமொழியை ஒரு உன்னதக்கலை என்று  உணர்ந்தவர்கள் அவசியம் தேடிப் பார்க்க வேண்டிய ஒன்று TOLETtolet