சாம்ராஜை 2018 டிசம்பர் விஷ்ணுபுரம் விழாவில்  சந்தித்தேன், மேடையில்  இருந்தபோதும், அரங்கிற்கு வெளியே சந்தித்து கவிதைகளைக்குறித்து உரையாடியபோதும் ,எப்போதும் எங்கு இருந்தாலும்  வார்த்தைக்கு வார்த்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட இயல்பான பகடியில் உடனிருந்தவர்களுக்கும் அரங்கிலும் சிரிப்பு ததும்பிக்கொண்டிருந்தது. மேடையில் அற்புதங்கள் பற்றிச்சொல்கையில் ’ஏசுநாதரைவிட’ என்றதெல்லாம் அத்தனை ரசிக்கும் படியிருந்தது. வாழ்வை இத்தனை இலகுவாக எதிர்கொள்ளும் ஒருவரை நான் சந்தித்து வெகுவருஷமாயிற்று (அல்லது  சந்த்தித்திருக்கவேயில்லை). வாய்கொள்ளாச்சிரிப்புடனேயே அவரை இப்போதும் என்னால் நினைவுகூற முடிகின்றது

 வாழ்வுக்கணங்களை போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் சாம்ராஜின் கவிதைகளுக்கு நான் ரசிகை

விழாவில் நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் வாங்கிவந்தேன், இன்று 9/1/19 மாலை கல்லூரியிலிருந்து வந்ததும் வழக்கமான வீட்டுவேலைகளுக்கு பின்னர் அதைஒரேமூச்சில்  வாசித்து முடித்ததும்  இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

விழாவில் பேசும்போதே மலையாளத்திரைப்படங்களுக்கும் அவருக்குமான அணுக்கத்தைப்பற்றி சொல்லியிருந்தாரென்பதால் எனக்கும் அப்படியே என்பதால்  வாசிப்பில் ஆழ்ந்திருந்தேன். மலையாள பாஷைக்கும் திரைப்படங்களுக்கும் நானும் அவரளவிற்கே ரசிகையாதலால் இப்புத்தகத்தில் சாம்ராஜ் சொல்லியிருப்பவற்றை வாசிப்பது நானே என்னுடன் நிலைக்கண்ணாடியில் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது.

இந்த புத்தகம் என் மகிழ்வை பலமடங்காக்கி இருக்கிறது.

எனக்கும் மலையாளபாஷைக்குமான உறவை சொல்லிக்கொள்ள யாருமில்லை இங்கு. ஜெ வின் தளத்தில் ஒருமுறை எழுதினேன் கொஞ்சமாக

எனவேஇந்தபுத்தகம் எனக்கு  மிகப்பிரியமான ஒன்றாய் நானே எழுதினதுபோல மயக்கத்தை தருமொன்றாக இருந்தது

மலையாளிகள் அதிகம் புழங்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்தவள் என்பதால்  சின்னவயதிலெயே மலையாளம் அங்கும் இங்குமாக காதில் விழுந்துகொண்டே இருந்தது

என் சகோதரர்கள் திருச்சூரில் வியாபாரம் செய்தார்கள் வெகுகாலம் முன்பு அப்பாவீட்டிலும் மலையாளிகள் வாடகைக்கு குடியிருந்தனர்

ஆனாலும் அப்பாவுக்கு மலையாளிகள் மீது வெறுப்பு இருந்தது ( அப்பாவிற்கு இப்பிரபஞ்சத்தில் அனைவரின் மீதும் வெறுப்பு இருந்தது , இருக்கிறது) கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பக்கூடாது போன்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவார்

அப்பா எதை மறுக்கிறாரோ அதில் எனக்கு கடும் விருப்பம் உண்டாகும் அப்படியே மலையாள விஷயத்திலும்

அங்கும் இங்குமாக சில மலையாளிகளிடம் சிநேகிதம் வைத்துக்கொண்டேன்  யாத்ரா சித்திரம் வரவேழ்பு என்று மலையாளப்படங்களாக பார்த்தது பள்ளிப்பருவத்தில்

மஞ்சில் விரிஞ்ச பூக்களில் ஷங்கரும் நரிமாமாவும அறிமுகமானர்கள். அந்தபடத்திலிருந்து ஜீப் எனக்கு இந்த நாள் வரை பிரியமான வாகனம். சொல்லிக்கொண்டேயிருக்கிறேன் ஒரு ஜீப் வாங்கனும்னு இன்னும்

ஷங்கரை பிற்பாடு மிக அந்தரங்கமான ஒரு காரணத்தினால் பிடித்திருந்தது. முகில் மாலைகள் வெகுகாலத்துக்கு விழியோரம் நனஞ்சொழுகிக்கொண் டேயிருந்தது

பூர்ணிமா அங்கிருந்து தமிழ்படக்கதாநாயகியானதும் பெயருக்குப்பின்னால் பாக்கியராஜை சேர்த்துக்கொண்டதுமெல்லாம் அறப்பிழை

பல்கலையில் படிக்கையில் துரதிர்ஷ்டவசமாய் யாரும் மலையாளிகள் உடனில்லை. ஆய்வை முடித்து நான் படித்த பாலக்காட்டுச்சாலையிலிருக்கும் அதே கல்லூரியில் பணிபுரியத்துவங்கியதும் மீண்டும் மலையாளப்பிராந்து தலைக்கேறியது

மலையாள மாணவர்களிடம் பாஷையைக்கற்றுக்கொள்ளத்துவங்கினேன். கல்லூரி காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்கு முடியும்

வீட்டின் புழக்கடையில் தான் கல்லூரி மதியம் கல்லூரி முடிந்து  1. 20க்கு நடந்து வீட்டுக்கு வந்ததும் தொலைகாட்சியில் 1.15க்கு போடும் மலையாளப்படம் பார்ப்பேன். தினம் தவறாமல் இது நடந்தது  சோஃபாவில் சம்மணம் கட்டிக்கொண்டு அமர்ந்து மடியில் சாப்பாட்டுத்தட்டை வைத்துக்கொண்டு  எச்சில்கை உலர்ந்து காய்ந்துபோகும் வரை முழுப்படமும் பார்ப்பேன் இப்படி ஒரு ஒன்றரை வருடங்களில் நன்றாகவே மலையாளப்படங்கள் பரிச்சயமானது

இந்த மலையாள வட்டு என் வீட்டினரை அச்சமூட்டியது.  வாழ்வின் எல்லாக்கணங்களுமே கல்யாணத்தை நோக்கியே நகர்த்தபட்ட அக்காலகட்டத்தில், கொங்குப்பகுதியைச்சேர்ந்த, பெண்கள் அதிகம் படிக்க சாத்தியமில்லாத ஒரு குடும்பத்தில் அதிகம் படித்ததும், மலையாளம் பேசுவதும் அதில் பித்துப்பிடித்ததும் என் திருமணம் நடக்காமல் போவதற்கான காரணமாகுமென்றெல்லாம் அப்பா மிகைக்கற்பனை செய்துகொண்டிருந்தார். அப்படியெல்லாம் இல்லாமல் துரதிர்ஷ்டவசமாக கல்யாணம் நடந்து அபுதாபி சென்றேன்

அங்கு  மருந்துக்குக்கூட தமிழர்கள் யாருமில்லை  அத்தனை திசையிலும் மலையாளிகள் ஆனால் சோதனையாக எல்லாரும் மாப்ளாஸ் என்று சொல்லப்படும் இஸ்லாமிய மலையாளிகள்

எனக்கு அந்த மலையாளம் மனசிலாக நெடுங்காலமாயிற்று

கொஞ்சம் வேகமும் அதிகம்  அவர்கள் பேசுகையில். எங்களுடன் வீட்டைபகிர்ந்துகொண்டிருந்த ஒரு குடும்பத்துக்குழந்தைகள் என்னை ’மூத்தம்மே’ என்றே விளித்தன, //எந்தா சேச்சி கண்னடை இட்டிருக்குனு காழ்ச்சி கொறைவுண்டோ/? பாங்கு விளிக்குன்ன சப்தம்கேட்டோ ஏச்சி இப்படி விரைவாகவே பேசினார்கள்

முதலில் கலக்கமாக இருந்தது பொள்ளாச்சியில் கேட்டிருந்த  அ மதுர பாஷை கொஞ்சம் கரடுமுரடானது போல

பின்னர் அதுவும் பழகியது

தினம் ஏசியானட் ஆசிரியரைக்கொண்டு மலையாளம் படித்தேன் அந்த 6 வருடங்களில்

இப்போது சரளமாக மலையாளம் பேசுவதற்கு அப்போது  பார்த்த மலையாளத்திரைப்படங்களே காரணம்

சுரேஷ் கோபியிடமிருந்துதான் பல சீத்த வார்த்தைகள் கற்றது. பா, புல்லே விலிருந்து தெண்டி தெம்மாடி  வரைக்கும் அவர்தான் ஆசிரியர்

சுகோ  படங்களை (சரண் அப்பா விசனப்படும்/ கோபப்படும் அளவிற்கு) ரசித்துப்பார்ப்பேன்.அபுதாபி வாழ்வில் நான் இன்றும் திரும்பிப்பார்த்து புன்னகைக்கமுடியும் விஷயமென்று ஒன்றிருந்தால் அது மலையாளப்படங்களை தொலைக்காட்சியிலும் அல்கத்தாரா என்னும் ஒரு விடியோ கேசட் கடைக்கரன் எனக்கென்ன எடுத்து வைத்திருக்கும் புதிய மலையாளப்படங்களை தன்னந்தனியே அமர்ந்தும் மகன்களை மடியிலிருத்திக்கொண்டும் பார்த்திருந்த நாட்கள் மட்டும்தான். மணவாழ்வு காலடியிலிட்டு மிச்சமின்றி தேய்த்து நசுக்கிய பலவற்றில் நல்லவேளையாக மலையாளம் இல்லை. அது  யாருமறியாத  ஒரு ரகசியம் போல உள்ளே ஒளிந்திருந்தது எந்தக்காயமும் படாமல்.

சாம்ராஜ் எழுதியிருக்கும் எல்லாப்படங்களையும் நான சிலமுறையாவது பார்த்திருக்கிறேன் பலேறி மாணிக்யம் தவிர்த்து.

லாலேட்டனைப்பத்தி சொல்லும்போது சாம்ராஜ்  ’’வெயிலைப்போல என்றைக்கும் உள்ள மோகன்லால்’’ என்றது அழகு. ஆம் பெரிதாக தோற்ற மாறுபடுகள் இருக்காது லாலேட்டனிடம், இருப்பினும் திரையில் எப்போதும் நாம லாலேட்டனைத் தவிர்த்து அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தை பார்த்துவிடுகிறோம்

கமல் ரஜினியிடம் அப்படியில்லை  என்ன பாத்திரம்னாலும்  ஏற்று நடிக்கும் ரஜினையும் கமலையும் உணர்ந்தவாறே இருப்பேன்

இயல்பாக பகடி கலந்துசொல்லிக்கொண்டே வரும் சாம்ராஜ்  எதிர்பாராமல்  எடை கூடிய ஒரு சொல்லாட்சியை பிரயோகித்து  திகைத்துபோகச்செய்கிறார்

// உண்மை என்று நாம் நம்புவது எத்தனை சதமானம் உண்மை // மாதிரி

இன்னும் செம்மீன் தமிழுக்கு கொண்டு வரனூம்னு சொல்பவர்கள் இருப்பதை சாம்ரஜுடன் நானும் சேர்ந்து வியக்கிறேன்

’’இத்தர மாத்ரமே மலையாள சினிமாவில்’’  சாம்ராஜ் சொன்னது எப்பொவும் நானும் நினைப்பதுதான். இயல்பா உலகில் இருக்கும் சகமனுஷங்களை ஏன் தமிழ் சினிமாவில் அதிகம் காட்டலைன்னுட்டு

எல்லாருமே அதிமானுடர்களாகத்தான் காட்டப்படறாங்க அதிமானுடர்களா தேவதுதர்களா கடவுளாதான் தான் அங்க நிஜ வாழ்விலும் இருக்காங்க

கேரளாவில அப்படியில்லவேயில்லை

நடிகர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் சாதாரணர்களா இருக்காங்கங்கறதை எனக்கு முதலில் நம்பவே மிடியலை

1 மாதம் நான் ஒரு பயிற்சியின் பொருட்டு திருவனந்தபுரத்தில் தங்கியிருக்கும் போது தமிழகத்தின் ஆர்ப்பாட்டமெல்லாம் கேரள அரசியலில் இல்லையென்றே தோன்றியது எனக்கு. பல்கலையில் ஒரு இளம்பேராசிரியையுடன் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன், பின்னரே அறிந்தேன் அப்பெண் முன்முதல்வரொருவரின் மகளென்று. இங்கே வார்டு கவுன்சிலர் அலப்பறையே தாங்க முடியாததென்னும் சூழலில் எனக்கு இது பெருவியப்பளித்தது

அதைப்போலவே தமிழ்சினிமாத்துறையிலிருக்கும் இளைஞர்கள் அனுபவிக்கும் கஷ்டப்பாடுகளையும் மலையாளத்துறையுடன் ஒப்பிட்டும் சாம்ராஜ் சொல்லியிருப்பதும் சத்தியம்தான்

நார்த் 24 காதம் எனக்கு மிகப்பிடித்த ஒருபடம். ஃபகத்தை நான் டையமண்ட் நெக்ல்ஸ் படப்பிடிப்பு   இங்கே வீட்டு வாசலில் சிலநாட்கள் நடந்தபோது பார்த்தேன் முதலில்.  ம்தல் பார்வையில் அப்படி ஒன்னும் சிலாக்கியமாக தோண்றவில்லை. மேலும் அவருடன் கூட இருந்த  நடியின் இடுப்புக்கு கீழிறங்கிய கேசத்தில் நிலையழிந்திருந்தேன். அவரைத் தேடி மம்முட்டியும் மறுநாள் வந்தபோதான் யாரு என்னன்னு  விசாரிச்சேன். ஃபாசிலின் மகனென்று அப்போதான் தெரியும்

இப்போ ஃபகத்தைபோல அத்தனை அழகா இயல்பா நடிக்கற உடல்மொழியிலேயே பாத்திரத்தின் உணர்வுகளைக் நமக்கு காண்பிக்கற ஒருத்தரும் இல்லை. மகேஷிண்டபிரதிகாரம் படத்தின் துவக்கக்காட்சியில் நீல வாரிட்ட ஹவாய்செருப்பை கரையோரம் கழற்றி வைத்துவிட்டு, மேல்சட்டையின்றி ஆற்றில் முங்கிக்குளித்து, நீரில் அடித்துவரப்பட்ட இரண்டு நட்சத்திரப்பழங்களை சேகரித்துக்கொண்டு ஃபகத் கரையேறும் அக்காட்சியில் அப்படியே நடிக்க தமிழிலும் பிறமொழிகளிலும் இனி ஒருத்தர் பிறந்துதான் வரணும்

 மலையாளத்திலும் சேர்த்து. டொவினோ தாமஸ் கொஞ்சம் கிட்டக்க வராருன்னு நினைக்கிறேன் மாயாநதியிலெல்லாம் பிரமாதமா இருந்தது அவர் நடிப்பு.

24 காதத்தில் பிரமாதமா பண்ணியிருப்பாரு ஃபகத். கொஞ்சம் கொஞ்சமா அவரின் ஆளுமை மாறிட்டு வரத பார்க்கறவங்க நுட்பமா உணரமுடியும். ஸ்வாதியும்  நல்லா பண்ணியிருக்கும் அதில். ’ செம்பான் ஜோஸ் வீட்டில் குட்டிப்பாப்பா பிறந்திருக்கற காட்சியெல்லாம்  ரொம்ப நல்லாயிருக்கும்

த்ரிஷ்யம் பிடிச்ச அளவுக்கு பாபநாசம் எனக்கும் பிடிக்கலை ஆசான் ஜெ வசனங்கறதுனாலதான் பார்த்தேன். லாலேட்டனுக்கும் மீனாவுக்கும் நல்ல சேர்ச்சை கமலை விடவுமே.சாம்ராஜ் சொல்லியிருப்பது போல //ஒரு மொழியின் நுட்பத்தை, கலாச்சாரத்தை மற்றொருமொழிக்கு கடத்துவது சாத்தியமிலை// ரொம்ப சரி. த்ருஷ்யத்தின் எதோவொன்று பாபநாசத்தில் மிஸ்ஸிங் என்பதை விட த்ருஷ்யம் பார்த்த த்ருப்தி பாபாநாசம் பார்த்ததில் குறைந்து அல்லது மாசுபட்டுப்போனது போலிருந்தது. பாபநாசம் கமலுக்கு ஏத்தபடி தன்னை மாத்திக்கிட்டது  த்ருஷ்யம். அதான் சோபிக்கலை

அப்புறம் மஞ்சு வாரியர். சாம்ராஜைப்போலவே எனக்கும் அவங்களைப் பிடிக்கும்.ஆறாம் தம்புரானில் உன்னிமாயாவின் பரிசுத்த அழகை அப்படியே மனசில் வச்சுருக்கேன். சின்னமுகத்தில் மாறி மாறி உணர்சிகளை  அற்புதமாகக்காட்டும் திறமை உள்ளவர் மஞ்சு

 அவங்க ரகசிய திடீர் கல்யாணத்தைக்குறிச்சு இந்தியா டுடே தமிழ்பதிப்பில் என்ன அவசரம் இந்தபெண்ணுக்கு? என்று எழுதினாங்க அப்படியேதான் ஆச்சு இல்லையா?. காவ்யாவை அவங்க  அபரிமிதமான கேசத்தின் பொருட்டு மாத்திரம்தான் அதுவரைக்கும் யட்சின்னு சொல்லிட்டுஇருந்தேன். செரிக்கும் யட்சியானு அவளு

இதோ அயூபிண்ட புஸ்தகம் குறித்து சாம்ராஜ் எழுதியதை வாசிக்கும் போது அதே திரைப்படம்  தொலைக்காட்சியில் ஒடிட்டு இருக்கு

’’ஞான்’’ படத்தப்பத்தி சொல்லறப்போ,  பட்டாம்பினு ஒரு ஸ்தலத்தை சொல்லியிருக்கிறார் சாம்ராஜ். நம் ரேவதியுடன் லாலேட்டன் இரட்டை வேஷத்தில் அபிநயிச்ச ஒரு சித்திரத்தில் ’’ஜனிச்சது பட்டம்பியிலா’’ என்பார். அது நினைவுக்கு வந்த்து

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்னும் பேரில், முண்டு கட்டிக்கொண்டிருக்கும் சேச்சிகளை character assassinate பண்ணுவதை நிறுத்தனும் நாமும்

உதயனானு தாரம் நான் மிக ரசிச்ச ஒரு படம்

மீனாவும் லாலேட்டனும் விரும்பி ஆனா திருமணம் செஞ்சுக்காம போயிட்டு பின்னர் மீனா விதவையானபின்னால் ஒருக்கில் அவங்க ஒரு தாமரைக்குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து பேசும் படம் ஒண்ணும் என் மனசில் உள்ளே ரொம்ப ஆழத்தில் இருக்குஅழகா

ஆயாள் கதைஎழுதுகையானு, மாயாநதி சார்லி மகேஷிண்டெ பிரதிகாரம் இப்படி பெரிய நீள பட்டியல் இருக்குஎன்கிட்டே

மலையாளப்படம் பார்க்கையில் தனியே பார்த்தாலும் உடன் மிகபிரியமான ஒருத்தரின் கைகளைக்கோர்த்துக்கொண்டு பார்க்கறதுபோல  இருக்கும். அப்படித்தான் இந்த புஸ்தகம் வாசிக்கும் போதும் இருந்தது. சாம்ராஜின் இந்த புத்தகம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது வாசிக்கையில்

 எப்போதும் மலர்ந்து, இதயத்திலிருந்து சிரித்தபடி இருக்கும் சாம்ராஜ், பகடியை  வெகு சரளமாக வெளிப்படுத்தும் சாம்ராஜ், கவிஞர் சாம்ராஜ், மலையாளப்படங்களை என்னைப்போலவே விரும்பிப்பார்க்கும் சாம்ராஜ் இப்படி அவரின் வேறுபட்ட பரிமாணங்களை இப்போது நான் அறிந்திருந்தாலும், அன்று விஷ்ணுபுரம் நிகழ்வில்  குணமாக்க முடியாத தசைத்தளர்வினால் நலிவுற்றிருக்கும் வல்லபியின் நாற்காலியின் சக்கரத்துக்கு அருகில் முழந்தாளிட்டு அவளுக்கு இணையாக அமர்ந்து வாஞ்சையுடன் அவளிடம் பேசிக்கொண்டிருந்த சாம்ராஜ் என்னும் அவ்விளைஞரையே நான அதிகம் நேசிக்கிறேன்

யாவற்றிற்கும் வந்தனம் சாம்ராஜ்