நிலத்தாவரங்களில் சதாவரிக்கிழங்கு மற்றும் பீட்ரூட் (asparagus and beets) போன்ற ஒரு சிலவற்றை தவிர பிற தாவரங்கள் கடல்நீரின் உப்பின் அளவில் பத்தில் ஒரு பங்கைக்கூட தாங்கிக்கொண்டு வளரமுடியாது. ஆனால் எப்போதும் மிக அதிக அளவில் உப்பு இருக்கும் நிலத்திலும் செழித்து வளரும் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சில குறிப்பிட்ட வகை தாவரங்கள்  உள்ளன..

உதாரணமாக வட அமெரிக்காவின் சதுப்பு நில உப்புப்புல்லான  ஸ்பார்டினாவின் வேர்கள் எப்போதும் கடல்நீரிலேயே அமிழ்ந்திருக்கும், (Spartina alterniflora

இவ்வாறு உப்பு அதிகமுள்ள கடல் முகத்துவாரங்கள்,, அலையாத்திக்காடுகள் சதுப்பு நிலங்கள்  கடலோரப் பகுதிகள் உப்புப் பாலை நிலங்கள் போன்ற சூழல்களில் வளரும் தாவரங்கள்  உவரி நிலத்தாவரங்கள் அல்லது ஹேலோஃபைட்ஸ் (Halophytes) எனப்படுகின்றன உவரி நிலங்கள் சதுப்புநிலமாக இருக்கையில் அங்கு வளர்பவை சதுப்பு நிலத் தாவரங்கள் /அலையாத்தி தாவரங்கள் அல்லது உப்புத் தாவரங்கள் என அழைக்கப்படும்.

பூமியின் மொத்த தாவரங்களில் இரண்டு சதவீதமே உப்புத்தாவரங்கள்.  இவ்வகைத்தாவரங்கள் மிக அதிக உப்பை தாங்கும் தகவமைப்புகள் கொண்டுள்ளமையாலும்,  அச்சூழலின் பாதகங்களுக்கு  இயற்கையாகவே எதிர்ப்புச்சக்தியையும் கொண்டுள்ளதாலும் அவற்றிற்கு அச்சுழலில் போட்டித்தாவரங்கள் இருக்காது எனவே அவை  அங்கு செழித்து வளரும்

 உவர்நிலத் தாவரங்கள் இருப்பது 16ம் நூற்றாண்டில் தான்  கண்டறியப்பட்டது. 1563..ல் ஜெர்மானிய பழங்குடி இனத்தை சேர்ந்த தாவரவியலாளர் ரெம்பெர்ட் டோடென்ஸ் (Rembert Dodoens) Plantago maritima  என்னும் உப்புச்சூழலில் வாழும் தாவரத்தை குறித்து முதன் முதலில் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டார்.

பின்னர் 1576 ல் பிரெஞ்சு தாவரவியலாளரும் முதன்முதலாக ஒருவித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்களுக்கிடையேயான வேறுபாடுகளை விவரித்தவருமான  லொபெலியஸ் (Lobelius) சலிகோமியா  (Salicomia) என்னும் கடலோர உப்புத்தாவரமொன்றை குறிப்பிட்டார். அயர்லாந்த்தின் தாவரவியலாளரான ஸ்லோன் 1695ல் (Sloane) அவிசென்னியா சதுப்பு நிலத்தவரத்தையும அதன் சிறப்பு வளரியல்புகளையும் விவரித்தார்.

தனது 15 ம் வயதிலேயே மலைகள் உருவாவது குறித்த கருதுகோள்களை முன்வைத்த தாவரவியலாளர் பீட்டர் சிமன் பல்லாஸ் (Peter Simon Pallas) .1809 ல்  இவ்வகையான் தாவரங்களுக்கு ஹேலோஃபைட்டுகள்  என்று பெயரிட்டார்,

சதுப்புநிலங்களில் அதிக உப்பு மட்டுமல்லாது சல்ஃபேட்டுக்களும் கார்பனேட்டுக்களும் , பைகார்பனேட்டுக்களும்  அதிக அளவில் இருக்கும் மண்ணின் pH அளவும் மிக அதிகமாக இருக்கும் அத்துடன்  சீர்குலைந்த காற்றோட்டம்   கொண்ட மோசமான மண் அமைப்பும்  அவ்வாழிடங்களில் காணப்படும்

தகவமைப்புக்கள்  

எளிதில் நீரை  உறிஞ்சிக் கொள்ளும் வசதியற்ற நிலங்களில் வளரும் இவை பாலை நில தாவரங்களுக்கான  தகவமைப்புக்களையும் கொண்டிருக்கும் 

சதுப்பு நிலங்களில் சீரற்ற காற்றோட்டம் இருக்குமாதலால் பூமிக்கு மேல் வளரும் நுண் துளைகளை கொண்டிருக்கும் Pneumatophores எனப்படும்.  காற்று அல்லது  சுவாச வேர்களை  இத்தாவரங்கள் உருவாக்கிக்கொண்டு   அவற்றின் மூலம்  சுவாசிக்கும்

சதுப்புநிலங்களின் தளர்வான மண்ணில்  இவை வேரூன்றி உறுதியாக நிற்க முடியாததால் சாதாரண வேர்களுடன் கூடுதலாக  பொய்க்கால் மற்றும் முட்டு வேர்களையும்  கொண்டிருக்கும் (stilt & prop roots)    எடுத்துக்காட்டாக பொய்க்கால் வேர்களை கொண்டிருக்கும்  ரைசோஃபோராவை சொல்லலாம் ( Rhizophora mucronata ).

சில சமயங்களில் இந்த தாவரங்களின் மிக அகலமான உறுதியான  துணைவேர்கள் தண்டின் அடிப்பகுதியில் இருந்து உருவாகி  இவற்றை தாங்கி நிற்கும் இத்தகைய அகன்ற வேர்கள் பலகை வேர்கள் அல்லது உதைப்பு வேர்கள் எனப்படும்   (Root buttresses)

 இவற்றின் இலைகள் தடித்து முழுமையாக சதைப்பற்றுடன் சிறிய அளவில் இருக்கும். கடற்கரையோர உவர்நிலத்தாவரங்களின் இலைகள் பெரும்பாலும் பளபளப்பாக இருக்கும் இலைகளின் மேற்பரப்பில் வளரிகள்  (trichomes) எனப்படும் நுண்முட்கள் போன்ற வளர்ச்சிகள் காணப்படும். நீரடியில் மூழ்கி இருக்கும் உவர்நிலத்தாவரங்களின் இலைகள் மெல்லியதாக காணப்படும்

இவற்றின் கனிகளும் விதைகளும் எடையற்று இருக்கும் கனியின் வெளிச்சுவற்றில் காற்றுத்துளைகளும் காற்றறைகளும் காணப்படும் எனவே  நீரில் மிதந்தபடி இருக்கும் இவற்றின் விதைகள் கனிகள் மற்றும் முளைத்த இளம் நாற்றுகள் நீரோட்டத்தில் கலந்து புதிய சூழல்களை அடைந்து அங்கு வளரும்

  பொதுவாக அனைத்து உவரிநில தாவரங்களிலும் காணப்படும் தகவமைப்பென்பது அவற்றில் இருக்கும் உப்புச்சுரப்பிகள்தான் இவை தாவர உடலில் சேரும் உப்பை சேகரித்து பின்னர் இலைகள் அல்லது தண்டின் வெளிப்புறம் வழியாக  வெளியேற்றிவிடும்

சில உவர்நிலத்தாவரங்களின் இலைகளின் வெளிப்பகுதியில் நுண் பைகள் அமைந்திருக்கும் இவற்றில் வெளியேறும் உப்பு  சேகரமாகி பின்னர் சூழலில் கலந்துவிடும் இன்னும் சில தாவரங்களோ உறிஞ்சி எடுத்துக் கொண்ட அத்தனை உப்பினாலும் எந்த பாதிப்புமின்றி இருக்கும்

கடற்கரையோரம் வளரும் உவர் நிலத் தாவரங்களில் விவிபேரி  (vivipary) எனப்படும் கனி மரத்தில் இருக்கையிலேயே அதன் விதைகளிலிருந்து நாற்றுகள் முளைவிடுவது நிகழும். விதையின் கரு கனியிலிருந்தே தான் வளரத்தேவையான உணவையும் நீரையும் எடுத்துக்கொள்ளும்.. பின்னர் நன்கு வளர்ந்து கூரான உறுதியான கத்தி போன்ற கூம்பு வேர்களுடன்  கனியிலிருந்து விடுபட்டு நிலத்தில் குத்திட்டு  விழுந்து அங்கு ஊன்றி வளர தொடங்கும்.

வகைகள்

இந்த வகை தாவரங்கள் சதைப்பற்றானவை, சதைப்பற்றில்லாதவை மற்றும் சதுப்பு நிலத்தில் வாழ்பவை கடல்நீரில் வளர்ப்பவை என பல வகைப்படும்

 பயன்கள்

இயற்கையாக உப்புத் தன்மைக்கு ஏற்ற வளரியல்பை கொண்டிருக்கும்  இத்தாவரங்கள்  பாதகமான சூழலில் வளரும் தாவரங்களின் அழுத்த சகிப்புத்தன்மையை (stress tolerance) புரிந்துகொள்வதற்கான மாதிரித்தாவரங்களாக  கருதப்படுகின்றன.

இவை பெருமளவில் மண்ணரிப்பை தடுப்பதுடன்,  கடல் நீர் நன்னீர் நிலைகளில் கடக்காவண்ணம் உயிர்வேலியாக காத்து நிற்கின்றன இத்தாவரங்கள் கரையோர சூழலை காத்து   சூழல் சமனிலையையும் பாதுகாக்கின்றன.

 இவற்றில் சில தாவரங்கள் கால்நடை தீவனங்களாக பயன்படுகின்றன. சிலவற்றில் இருந்து உயிரி எரிபொருளும் கிடைக்கின்றன

Suaeda monoica என்னும் தாவரத்தின் சதைப்பற்றான இலைகளை பல பறவைகள் உணவாக கொள்கின்றன. சோமாலியாவிலும் கென்யாவிலும் இவற்றை ஒட்டகங்களும் ஆடுகளும் உண்கின்றன

suaeda monoica

 

 பலநூறு நீர்வாழ் பறவைகளுக்கும் உயிர்களுக்கும் இவை புகலிடங்களாகவும் வாழிடங்களாகவும் இருக்கின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இவற்றின் மருத்துவப்பயன்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

உவர் நிலத்தாவரங்களில் கடினமான தண்டுகளை கொண்ட குறு மரங்களும், மரங்களும் கண்டல் தாவரங்கள் அல்லது அலையாத்தி தாவரங்கள் (Mangroves) என அழைக்கப்படுகின்றன. இவை செறிந்து வளர்ந்திருக்கும் காடுகள் கண்டல் அல்லது அலையாத்தி காடுகள் எனப்படும்.(Mangrove forests)

உப்பு, வெப்பம், அலை, சேறு என்று எவ்விதமான பாதகங்கள் இருக்கும் நிலப்பரப்பாக இருந்தாலும், அலையாத்தி காடுகள்  எளிதில் வளர்ந்துவிடும். பெரும்பாலும் ஆறுகள், கழிமுகங்களின் இடைப்பட்ட பகுதிகளிலேயே இக்காடுகள் உருவாகும். 

தமிழ்நாட்டில் 44.83 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் உள்ளன . கங்கையாற்று படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரியது. .கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை. சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும். குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன

முத்துப்பேட்டை

 உலக அளவில் 112  நாடுகளில் அலையாத்திக்காடுகள் உள்ளன.  இவற்றின் சூழல் முக்கியத்துவம் அறிந்து தற்போது இவை இல்லாத நாடுகளிலும் செயற்கை அலையாத்திக்காடுகள் உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.