தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம்.

ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான பின்னணியையும் பொருளையும் கொண்டிருக்கும். தாவர வகைப்பாட்டியலின் தந்தையென கருதப்படும் லினேயஸினால் 17ஆம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட இப்பெயர்கள் இன்று வரை எந்த குழப்பமும் இல்லாமல் உலகெங்கிலும் பயன்பாட்டிலும் இருக்கின்றது. அதிலொன்றுதான் சங்குபுஷ்பம் எனப்படும் Clitoria ternatea. பெயரை மட்டுமல்லாது இச்செடியை குறித்து அறிந்து கொள்ள வேறு பல முக்கிய விஷயங்களும் உள்ளன.

சங்கு போன்ற தோற்றத்தில், அடர்நீல நிறத்தில் இருக்கும் இம்மலர் பூஜைக்குகந்ததாகவும், தாவர மருத்துவத்தில் மிக முக்கியமானதொன்றாகவும் இருக்கின்றது.

குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதம்பரநாத மாமுனிவர் இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது.


பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும், கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய” – நற் 221/1,2.

(நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர், ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய)


”தண் புன கருவிளை கண் போல் மா மலர்” – நற் 262/1

(குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது)


”பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி” – குறு 110/4

(மயில்தோகையின் ஒளிரும் கண்ணினைப்போன்ற கருவிளம்பூவை ஆட்டி)
”கருவிளை முரணிய தண் புதல் பகன்றை”–அகம் 255/11

(பகன்றையும் கருவிளையும் நிறத்தால் மாறுபட்டவை)
மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
கண் என கருவிளை மலர – ஐங் 464/1
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294

அழற்படுகாதையில் இளங்கோவடிகள் நால்வகைச்சாதியினரில் உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளனை உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனக்குறிப்பிடுகிறார்.
திருத்தில்லையில் பட்டினத்தாரும் ’’காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி’’ என்கிறார்.

இலக்கியங்களில் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் தலைவியும், தோழியும் குவித்து விளையாடி தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் இதுவும் ஒன்று.

ஆசியாவில் தோன்றி, தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களிலும் காணப்படுகின்ற இத்தாவரத்திற்கு ‘’காக்கணம், உயவை, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சங்குப்பூ ,சங்கு புஷ்பம், கன்னிக் கொடி, இரிகன்னு, கருவிளை, காக்கரட்டான், சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதை, ஸ்வேதா’’ எனவும் பெயர்களுண்டு.
கிரிகணிக்கி, கிர்குணா என்று கன்னடத்திலும், ஷேங்கபுஷ்ப என்று மராத்தி மற்றும் கொங்கணியிலும், கோகர்ணிகா, அர்த்ரகர்ணி என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகின்ற இக்கொடி அவரை, துவரை, உளுந்து போன்ற பயறு வகைகளின் குடும்பமாகிய ஃபேபேசியே’வை சேர்ந்தது. இலங்கையில் இது நீல காக்கணை.

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் அபராஜிதாவும், ஆண்டாள் ’கார்க்கோடப் பூ” என்பதுவும் இதே மலரைத்தான். ”கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார் இதை அரவிந்த அன்னை. நீலக்குருவியொன்றை ’’கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம்’’ என்கிறார் ஜெயமோகன் வெண்முரசின் நீலத்தில்

இதன் ஆங்கிலப்பெயர்கள்; Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea, Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea.

சிவாலயங்களில் காலை, மாலை, பகல் பூஜைகளுக்கென்று தனித்தனியே மலர்களை குறிப்பிடும் ஆகமம் சங்குபுஷ்பத்தை பகல்நேர பூஜைக்கு உகந்ததாக குறிப்பிடுகின்றது. ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவனுக்கு செய்யப்படும் விசேஷபூஜையில் மிக முக்கியமானதாக கருதப்படுவதும் வெண்சங்கு புஷ்பமே. அதற்குப்பிற்குதான் வில்வமும், கொன்றையும், மகிழமும், மல்லிகையும்.

கோயம்புத்தூர், கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமேஸ்வரர். ஆலயம் சங்குபுஷ்பம் இருந்த காட்டை அழித்து கட்டப்பட்டதால் இறைவனுக்கு சங்கீஸ்வரன் என்றே பெயர். இவரை வழிபட்ட விஜயநகரப் பேரரசுக்கு சங்கவம்சம் என்ற பெயரும் உண்டு.

பிரபஞ்சம் உருவாவதில் தொடங்கி, நோயை, நோய் தீர்க்கும் வழிகளை, நோய் அணுகாதிருக்கும் வழிமுறைகளை, உணவை, மரணத்தை, இயற்கையை, மண்ணை, என வாழ்க்கையின் அனேக துறைகளை உள்ளடக்கிய நூலான சரக மகரிஷி தொகுத்தளித்த சரகசம்ஹிதையில், கற்கும் திறன், பகுத்தறிவு, ஞாபகத்திறன் ஆகியவற்றை அதிகரிக்க உதவும் நான்கு மூலிகைகளாக வல்லாரை, அதிமதுரம், சீந்தில்கொடி, சங்குபுஷ்பம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது…

Clitoria ternatea near the fence.


சங்குப்பூச்செடி, காடுகள், தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக காற்றில் பரவிவரும் சிறு விதைகளால் முளைத்து வளர்கின்றது. ஈரப்பதமான மண்ணில் செழித்து வளரும் ஏறு கொடி வகையை (Climber) சார்ந்த இவை, மாங்களையோ கொழுகொம்புகளையோ பற்றிக்கொண்டும் பற்றுக் கொம்பில்லாதபோது தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவியும் வளரும். இச்செடி இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் மலர்களையும் உடையது. 4×3 செமீ அளவில், நன்றாக விரிந்து மலர்ந்திருக்கையில், சங்கைப்போல தோன்றும் இதன் மலர்கள் வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட இருக்கின்றன. நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட செடிகளும் அரிதாக வளர்வதுண்டு. சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10 தட்டையான விதைகள் இருக்கும். ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள் இக்குடும்பத்தின் பிற தாவரங்களைப்போலவே வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி மண்ணை வளமாக்குகிறது.

வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளிலுமே இலை, வேர், மலர்கள், விதை ஆகிய அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுபவை.

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் செடியான இதன் மலர் உள்ளிட்ட அனைத்து பாகங்களில் இருக்கும் பல வேதிப்பொருட்களில் ternatins , triterpenoids, flavonol glycosides, anthocyanins , steroids, Cyclic peptide-cliotides ஆகியவை மிக முக்கியமானவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும் anthocyanins வகையைச்சேர்ந்த delphinidin. என்னும் நிறமியால் உணடானது.

தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ் 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும் Clitoria ternatea தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora, செருவிளை (கரிசண்ணி, வெள்ளைக்காக்கணம்) எனவும் அழைக்கப்படுகின்றன…

இதன் (Genus/Generic name) பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பின் பகுதியான clitoris என்பதை குறிக்கின்றது.

இச்செடி முதன் முதலாக 1678 ல் Johann Philipp Breyne எனும் ஜெர்மானிய தாவரவியலாளரால் இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’வில் கண்டறியப்பட்டபோது Flos clitoridis ternatensibus என்று பெயரிடப்பட்டது.

பிறகு David krieg என்பவர் 1698’ல் நீல நண்டுகளுக்கு பெயர்பெற்ற மேரிலாண்டில் கிடைத்த சங்கு புஷ்ப செடிகளை, Clitoria mariana என்னும் பெயரில் குறிப்பிட்டு உலர்தாவரமாக்கினார். இந்த ஹெர்பேரியம் இன்றும் Edinburg ,Royal botanical garden அருங்காட்சியகத்தில் ல் பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கின்றது.

ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக பெண்ணுறுப்பைக்குறிக்கும் பெயரை ஒரு தாவரத்திற்கு வைத்ததற்கு, தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்து Vexillaria, Nauchea போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள். ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் இன்று வரையிலுமே நிலைத்திருக்கிறது. தாவரங்களுக்கு இருபெயரிடும் binomial முறையைக்கொண்டு வந்தபோது லினேயஸ் Genus எனப்படும் பேரினத்துக்கு அதே clitoria வையும் Species எனப்படும் சிற்றினத்திற்கு ternatea என்பதையுமே வைத்தார்.

பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இம்மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும். வேகமாக வளரும் இயல்புடைய, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்.

கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது. அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத இப்பகுதியை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant) இன்னும் இருக்கின்றது.

மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்த பத்து வாயுக்களும் நம் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன, இவையே நம் உடலை பாதுகாப்பவையும் கூட. இவற்றில் பிராணன், ஆபானன், வியானன், உதாதனன், சமானன் ஆகியவை பஞ்சபிராணன் எனப்படும். உடம்பில் நடுப்பகுதியில் உள்ள, உணவை செரிக்க உதவும் சமானன் வாயுவின் பணியில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யக்கூடிய ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது.

சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனஅமைதியின்மை, உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கும் சங்கு புஷ்பக் கொடி நிவாரணமளிக்கின்றது. ஆயுர்வேதத்தில் மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ரத்தக்குழாய் அடைப்புக்கும், யானைக்கால் வியாதிக்கும் இதன் விதைகள், வேர்கள், மலர்ச்சாறு ஆகியவை சிறந்த மருந்தாகும். சங்கு புஷ்பக் கொடியின் விதை மற்றும் வேர்ப் பகுதிகள் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது. மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம். சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும். சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தையும் இச்சாறு குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இயற்கை மருத்துவமுறை இது.

சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் சேர்த்து பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களையும் விதைகளையும் கூட உணவில் சேர்த்துக்கொள்லாம்.

பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும் சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறதென்பதை அறிகையில் மனித உடல் உறுப்புக்களின் வடிவிலிருக்கும் தாவர பாகங்கள் அதே உடலுறுப்பின் குறைகளை, நோய்களை தீர்க்குமென்பதைச்சொல்லும் doctrines of signature என்பதின் முக்கியத்துவத்தை நினைக்கவேண்டியிருக்கிறது.

மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிப்பொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று.

மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களை அமைதிப்படுத்துகின்றது. வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

மலர்ச்சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும்.
செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகள் அதிகமென்பதால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு தற்போது நல்ல வரவேற்பிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில் அரிசிச்சோற்றை நீலநிறமாக்க சங்குப்பூச்சாறு பயன்படுத்தப்படுகின்றது.

மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும் உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில் dok anchan எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும் நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தின் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பும் சங்குப்பூவைக்கொண்டு செய்யப்படுகிறது.

பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். பலநாடுகளில் இம்மலரின் சாறை ஜின் போன்ற பானங்களிலும் சேர்த்து, நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிப்போன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)

இத்தனை அழகிய, எளிதில் வளரக்கூடிய நலம்பயக்கும், நோய்தீர்க்கும் பக்கவிளைவுகளற்ற சங்குப்பூச்செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும் வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யப்படுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் அதிகம் விற்பனையில் இருக்கின்றன.