கலாநிதி மாறன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 2021 ல் வெளியானது ரஜினியின் ’’அண்ணாத்தே’’. கோவிட் தொற்று காலத்துக்கு பிறகு திரையரங்குகளில் திரையிடப்பட்டதாலும், தீபாவளி  ரிலீஸ் என்பதாலும் வழக்கமாக இருக்கும் அதீத எதிர்பார்ப்பை விட இந்த முறை மிக அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்களும் பொதுமக்களும் காத்திருந்தார்கள். முதல் சில நாட்களில் டிக்கட் விலை பல்லாயிரங்களில் இருந்தது.

ரஜினியுடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, பாண்டியராஜன், ஜகபதி பாபு,, லிவிங்ஸ்டன், கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், யோகி பாபு என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை என்று எதுவும் இல்லை. பாசமலர் உள்ளிட்ட பல பழைய படங்களை, ரஜினியின் பழைய படங்கள், அண்ணன் தங்கை செண்டிமெண்டில் எடுக்கப்பட்ட அஜித் மற்றும் கார்த்தி ஆகியோர் படங்களை எல்லாம் எடுத்து கலக்கி கொடுக்கப்பட்ட திரைக்கதை நிறைவை கொடுக்காவிட்டால் போகிறது எரிச்சலை கொடுக்கிறது.

அலுப்பூட்டும் தொடர் நாடகம் பார்க்கும் உணர்வு முதல்பாதியிலேயெ வந்துவிடுகிறது. மிக தளர்ந்திருக்கும் ரஜினியும் அவருடன் காதல் காட்சிகளில் ஒட்டாமல் நடித்திருக்கும் நயன்தாராவும்,  படு பயங்கரமான ஒப்பனையில் கண்ணைப் பறிக்கும் நிறத்திலான ஆடைகளில் மீனா மற்றும் குஷ்புவும், சகிக்க முடியாத நகைச்சுவை என்னும் பேர் கொண்ட காட்சிகளில் லிவிங்ஸ்டனும் பாண்டியராஜனுமாக காட்சிக்கு காட்சி சொதப்பலும் எரிச்சலுமாக இருக்கிறது

அண்ணன் ரஜினி மீது அத்தனை உயிரை வைத்திருக்கும் தங்கை ஊர் நடுவே ’’உன் முடிவுதாண்ணா என் முடிவும், உன் விருப்பம் தாண்ணா என் விருப்பமும்’’ என்று நிஜமாகவே மைக் வைத்து சொல்லிவிட்டு, கல்யாணத்துக்கு முந்தின நாள் காதலனுடன் அண்ணனிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போவதும், அதையும் மன்னிக்கும் பாசக்கார அண்ணன் திடீரென்று ஏழையாகும் தங்கைக்கு. அவளுக்கு தெரியாமல் உதவி, சிக்கலிலிருந்து மீட்பதுதான் படத்தின் கதையாம்.

 டைட்டில் காட்சியில் படம் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது, வன்முறை நிறைந்தது என்று காட்டுகிறார்கள். பார்வையாளர்கள் மீது காட்டப்பட்ட வன்முறைதான் அது என்பது பிறகே தெரிகிறது

எக்கச்சக்க உணர்ச்சி பொங்கல்கள் படம் முழுவதும். தங்கை, அண்ணன்,அண்ணனின் காதலி, பாட்டி  என ஒருவர் பாக்கி இல்லாமல் நெஞ்சை கசக்கி பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.

ரஜினி நயனின் காதல் காட்சிகள் என்னும் பெயரில் ’’பட்டூ. காள்ஸ் என்னும் கொஞ்சல்கள் எல்லாம் தலைவலிக்க வைக்கும் அளவுக்கு செயற்கை.சூரி தனியே காமடி பண்ண முயற்சிக்கிறார் மொத்த படமும் பார்வையாளர்களை பார்த்து சிரிப்பதால் தனியே காமெடி எடுபடவில்லை.

  ரசிகர்களின் துவக்க கூச்சல்களும்  ஆரவாரங்களும் அடங்கிய பின்னர் அரங்கில் மயான அமைதி நிலவுகிறது. ரஜினி என்னும் பிம்பம் அவர் நடிக்க வந்தபோது பிறந்தே இருக்காத இன்றைய இளைஞர்களின் நெஞ்சில் உருவாக்கும் எழுச்சி அவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து உருவாகியதுதான். ரஜினி நடிக்கவேண்டும் என்பதில்லை ஒரு திரைப்படத்தில் அவரது புகைப்படமோ அவரது பெயரோ இடம் பெற்றிருந்தாலும் கூச்சலிட்டு அதை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்னும் போது திரைக்கதை தேர்வில் அவர் இன்னும் எத்தனை சிரத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

அண்ணன் தங்கை செண்டிமெண்ட்டில் புதிதாக  என்ன?  என்று ரஜினி  கதை சொல்ல படுகையில் ஏன் கேட்கவில்லை? படப்பிடிப்பில் அரைத்து, புளித்து , நொதித்து கள்ளாகிவிட்ட காட்சிகளே மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகையில்  கூட ‘’ஏன் இதையே  எடுக்கிறோம். புதிதாக ஒன்றும் இவற்றில் இல்லையே? என்று  ஏன்  அவர் கேட்கவில்லை, 

திரைக்கதை  அபத்தம், காட்சிகள் அபத்த களஞ்சியம் என்றால் பாடல்களும் இசையுமாவது கேட்கும்படியாக இருக்கலாம் அதுவும் இல்லை, இசை பாடல் இயக்கம், ஒப்பனை ,கதை என எதுவுமே உருப்படியாக இல்லை 

படத்துக்கான எதிர்வினைகளில் ரசிகர்கள் ஏமாற்றத்தை கோபமாகவும் அழுகையாகவும் வெளிப்படுத்தினார்கள். இயக்குனர் சிவாவை சகட்டுமேனிக்கு வசை பாடினார்கள்

ரஜினி தன் வயதுக்கேற்ற பாத்திரங்கள் இருக்கும்படி  சொல்லப்படும் கதைகளை கேட்க ஏன் முன்வருவதில்லை. கடைசி காட்சியில் தங்கையான கீர்த்தி சுரேஷிடம் ’’நீ வயசுக்கு வந்தப்போ கூட’’  என்று துவங்கி ரஜினி பேசும் வசனங்களெல்லாம் தணிக்கை செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இரண்டு பெண்களை பெற்ற ரஜினிக்கு சக்தி வாய்ந்த ஊடகத்தில் பேசும் இந்த வசனத்தை பற்றி ஆட்சேபமேதும் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது

தர்பார், கபாலி, காலாவிலிருந்தே திரைக்கதை என்ற  ஒன்றே இல்லை என்பதை ரஜினி இன்னும் கவனிக்கவில்லை. இளமையை இழந்து விட்ட பின்பு கதையில் கவனம் செலுத்த வேண்டியது தான் வெற்றிகரமாக இருந்த அதே துறையில் கண்ணியமாக  நீடித்திருக்க ஒரே வழி என்பதும் ரஜினிக்கு தெரியவில்லையா?

என் துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?என்று ரஜினி முன்பு பாடலில் தெரிவித்திருக்கிறார். முதல் காட்சிகளிலிருந்து ஆயிரங்களும் நூறுமாக ரசிகர்கள் செலவு செய்திருக்கும் பணத்திற்கும் அதன்பொருட்டு அவர்கள் சிந்தி இருக்கும் ஒவ்வொரு சொட்டு வியர்வைக்கும் பதிலாக ரஜினி செய்திருப்பது வெறும் அநியாயம் மட்டுமே.