லோகமாதேவியின் பதிவுகள்

காணிநிலம் வேண்டும்

தினம் நாட்குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன் பின்னர் சில காரணங்களால் வேறுசில விஷயங்களை prioritize செய்ததில் தினசரி நடந்தவற்றை எழுதுவது நின்றே போனது. பின்னர் இருந்த சோர்வான மனநிலையில் ஏதும் எழுதவோ வாசிக்கவோ இல்லை. 3 நாட்கள் விடுமுறையில் வந்திருந்த சரண் எப்போதும் போலான அம்மாவை காணும் ஆவலில் ,என்னை தேற்றியதோடு இந்த வலைப்பூவை துவங்கிக் கொடுத்து அவசியம் தினசரி எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் எப்போதும் போல மகிழ்ச்சியான அம்மாவாக இருக்கணும் எனும் அன்புக்கட்டளை இட்டுச்சென்றிருக்கிறான்

அதிகாலை துவங்கி இரவு 8 மணி வரையிலான அலைச்சல் மிகுந்த மிக மீண்ட நாள் இன்று. சரணை மீண்டும் விடுதியில் விட்டுவிட்டு வந்தது, என்னை இன்னும் சிறு பெண்ணைப்போல எண்ணிஅரைமணிக்கொருதரம் நலம்விசாரித்துக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும் இருக்கும் மித்ராவை அவளின் சீர்கெட்ட உடல்நிலையுடன் கண்டது. எனக்கு மிகப்பிரியமான பவானியை அவள் திருமணத்தின் பொருட்டு சென்று பார்த்து அவள் இனி இந்தியாவிலிருந்துபுறப்பட சிலநாட்களே இருக்கிறது என்னும் கசக்கும் உண்மையை அறிந்தது உள்பட பல காரணங்களால் நான் உளச்சோர்வுடன் இருந்தேன் எனினும் இரவு வீடு திரும்பி காரின் முகப்பு வெளிச்சத்தில் ஒளிரும் பச்சிலைகளும் சின்ன சின்ன உருண்டைக்காய்களுமாய் தெரிந்த புன்னைமரத்தைக்கண்டதும் என் சோர்வெல்லாம் மறைந்துவிட்டது
இந்த வீடு எனக்குத்தரும் நம்பிக்கையும் ஆசுவாசமும் வேறேதுவும் யாரும் எப்போழுதும் அளித்ததில்லை
பல வருடங்களுக்கு முன்னர் இந்தியா வந்து 2வருடங்களாகிய காலகட்டத்தில் இங்கே வீடு கட்ட நான் முடிவு செய்தபோது ஆதரிக்க யாருமில்லாததைவிட அத்தனைபேரும் எதிர்த்தார்கள், உலகமே தாழ்பணிந்து நகரமயமாக்கலுக்கு பின்னால் சென்று கொண்டிருக்கையில் பொள்ளாச்சியிலிருந்து இரு மகன்களுடன் ஒரு குக்கிராமத்திற்கு செல்வதான என்முடிவை பைத்தியக்காரத்தனமென்றே அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்
எனினும் என் முடிவில் உறுதியாய் இருந்தேன் அப்போதைய உடல்நிலையையோ அரசுப்பணி அமையாததால் கல்லூரியின் பணிச்சுமைஉள்ளிட்ட பல பிரச்சினைகளோ எதுவும் எனக்கு முக்கியமாக இல்லாமல் இந்த வீட்டைக்கட்ட எல்லா முயற்ச்சிகளையும் செய்தேன்
பள்ளிப்பிராயத்திலிருந்தே இதுபோல பசுமரங்கள் சூழ்ந்த ஒரு வீடு என் கனவு
பாரதியை எழுத்து எழுத்தாக மனனம் செய்திருந்த பள்ளிப்பருவத்தில் மிகக்கவரந்த பாடல்கள் என்றால் காணி நிலம் வேண்டுமென்னும் பராசக்திக்கு பாரதியின் விண்ணப்பக்கவிதையும், கண்ணம்மா எனும் காதலிக்கு எழுதிய காற்றுவெளியிடையும் தான்
நிலவூறித்ததும்பும் விழிகளும் அமுதூற்றினை ஒத்த விழிகளும் பத்தரைமாற்றுபொன்னொத்த மேனியுமாய் வர்ணித்து,வையத்தில் தானுள்ள மட்டிலும் அவளன்றி வேற்று நினைவில்லை எனச்சொல்லும், காதல் ததும்பி வழியும் இந்த கவிதையே, இந்த நிமிடம் வரையிலும் நான் வாசித்த ஆகச்சிறந்த காதல் கவிதை
காணிநிலம் வேண்டும் கவிதை வாசிக்க வாசிக்க அந்த காட்சிகள் மனதில் விரிந்துகொண்டெ செல்லும் பக்கதிலேயே இருக்கும் பத்துப்பனிரெண்டு தென்னைமரங்களும், கத்தும் குயிலோசையும், பாட்டுக்கலந்திட பத்தினிப்பெண்ணொருத்தியும், முத்தாய்ச்சுடரும் நிலவும்,தென்னங்கீற்றும், தூய வெண் மாடங்களும், அங்கே காவலிருக்கும் அன்னையுமாய் என் மனதிலும் அப்படி ஒரு இயற்கையுடன் இணைந்த மாளிகை வாசிக்கும் தோறும் மனதில் எழுந்து வந்து, ஆழ்மனதில் அச்சித்திரம் அப்படியே பதிந்துவிட்டிருக்கிறது
வீடு கட்டுகையிலேயே 12 தென்னை மரங்களை எண்ணி நட்டு வைத்தேன்.
சிறிதாக 4 அறைகளுடன் சிமிழ் போல ஒரு வீடும் சுற்றி மரம்செடிகொடியுமாய் திட்டமிட்டு வீட்டைக்கட்டினேன்
புன்னை தென்னை வேம்பு பலா, வெற்றிலை குமிழி,தேக்கு,வாழை செம்பருத்தி, நெல்லி மா,மூங்கில்,மந்தாரை அரப்பு விளா,சாம்பங்காய், கொய்யா,எலுமிச்சை, மல்லிமுல்லை கீரைகள், பனை,கமுகு,சப்போட்டா,சந்தனம்,சென்பகம்,பென்சில் மரம், நாரத்தை,நொச்சி,ஜூனிபர்,சைகஸ்,ஆடாதொடை, கனகாம்பரம்,முட்டைபழமரம்,பேஷன் பழக்கொடிமுருங்கை, பூஜைக்கான மலர்களுக்காக பல செடிகள், கிண்ணம் கிண்ணமாய் 2 வண்ணங்களில் பூத்துதள்ளும் அலமண்டா,ரோஜாக்கள்,பப்பாளி,மல்பெரி, மர, பாட்டில் பிரஷ், இலுப்பை, இலவம் மகிழம்,மலைவேம்பு,என்று எனக்கு பிரியமான எல்லாம் வைத்து வளர்த்திருக்கிறேன்
கத்தும் குயிலோசை மட்டுமன்றி எண்ணிலடங்கா பறவைகளின் குரலிலேயே விடிகிறது என் எல்லாக்காலைகளும். புன்னைமர நிழலின் குளிர்ச்சியில் இருக்கும் தொட்டித்தண்ணீரைஅருந்த வரும் மரங்கொத்தியும், காகமும்,கிளிகளும் புறாக்களும் எத்தனை எத்தனை அழகு
பலாவில் குடி இருக்கும் நாரைகள் இரண்டும்,மலைவேம்பின் பழங்களை கொத்தித்தின்ன வரும் கிளிக்கூட்டமும்,பட்டுப்பூச்சிகளும் ஓணான்களும் தட்டாரப்பூச்சிகளும், எறும்புக்கூட்டங்களும், பச்சோந்திகளூமாய் பல்லுயிருக்கும் புகலிடமானது இவ்வீடு
நட்டு வைத்துநீரூற்றீய எனக்கு எந்த வஞ்சமும் இன்றி காயும் பழமும் இலையும் காற்றுமாய் அள்ளி அள்ளிதந்துகொண்டிருகின்றன இம்மரங்களூம் செடிகளும்
என்னிடம் இருந்து ஏதும் எதிர்பார்க்காத, என்னை எப்போழுதும் வஞ்சிக்காத, நிராகரிக்காத, என்னை ஒருகணமும் தாழ்வாக எண்ணவைக்காத என் பிரிய மரங்கள்  , துரோகங்களாலும் வஞ்சங்களாலும் நிரைந்து வழியும் இவ்வுலகிலிருந்து மூச்சுத்திணறியபடி மாலை நான் வீடு திரும்புகையில் கிளையசைத்து , குதூகலமாய் வரவேற்கும் மரங்களும்,ஓய்வான வேளைகளில் கயிற்றுக்கட்டிலில் தென்னைமரத்தடியில் அமர்ந்து பாடல்கள் கேட்டுக்கொண்டும், புத்தகம்வாசித்துகொண்டும், இருக்கும் என்னை, அன்னையின் ஸ்நேகத்துடன் குனிந்துபார்த்தவாறிருக்கும் இவற்றை விட எனக்கு என்ன ஆ்றுதல் இருக்கும்?
பொழியும் நிலவினில் மகன்களுடன் கதைபடித்துக்கொண்டு கதை சொல்லிக்கொண்டு, பின்னிரவு வரையிலும் விழித்திருந்தபடி, விண்மீன்களையும் சிவப்பும் பச்சையுமாய் கண்சிமிட்டிக்கொண்டு இறங்கியபடியோ மேலேறிக்கொண்டோ இருக்கும் விமானங்களை வேடிக்கை பார்த்தவாரோ, அன்றி பிடித்த உணவினை சமைத்து உண்டபடியோ கழித்த எண்ணற்ற அற்புத கணங்களுகெல்லாம நான் என்ன கைமாறு செய்துவிட முடியும் இம்மரங்களுக்கும் செடிகளுக்கும்
எளியதும் நம் கண்முன்னே கையருகில் இருக்கும் ஒன்று அரியதாக இருக்க முடியாதென்றும் .அருகிலிருப்பது என்றுமே அரிதானதாயிறாது என்றுமே நாம் நம்பத்தலைப்பட்டிருக்கிறோம், அப்படி இல்லை எனபதை நான் , தாவரங்களுடனான இவ்வீட்டின் வாழ்வனுபவத்தில் சொல்கிறேன்

இயற்கையுடன் இணைந்த பசுமை சூழ்ந்த இருப்பிடம் தரும் உற்சாகமும்,அவை மீள மீள தரும்  வாழ்வின் மீதான பிடிப்பையும் அனுபவித்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்,

1 Comment

  1. kavitha

    Dear mam , it’s me KAVITHA your student 96_99 batch. It’s amazing. feeling very proud to have teachers like u. Very effective thoughts. No words to explain or to wish u. Pls continue this

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑