லந்தனா கமாரா

 ஒரு பிராந்தியத்தில் இயற்கையாக தோன்றியிராத, ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பகுதியில் பல்கிப்பெருகி, இந்த புதிய வாழ்விடங்களில், பூர்வீக பல்லுயிர் பாதிப்பு, பொருளாதார இழப்புக்கள் , மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவித்தல் போன்ற பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற தாவரங்களே  ஆக்கிரமிப்பு தாவரங்கள்.(Invasive plants).

  உணவுப் பொருட்கள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் இறக்குமதியாகும் போது அவற்றுடன் கலந்து இப்படியான ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகள் தவறுதலாக ஒரு புதிய சூழலுக்கு அறிமுகமாகும்.. பல  சந்தர்ப்பங்களில், அலங்கார, மலர் வளர்ப்பு அல்லது விவசாய பயன்பாடுகளுக்கு வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட  தாவரங்களும் ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாறிவிடுவதுண்டு

 உதாரணமாக வெப்பமண்டல அமெரிக்க புதர் லந்தானா (Lantana camara லந்தனா கமாரா) 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு அலங்கார தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது; இது இப்போது கிராமங்கள், விளைநிலங்கள், நகர்புறங்கள், அடர் காடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளை ஆக்கிரமித்திருக்கிறது.

ஆக்கிரமிப்பு  தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக  பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’  Phenotypic plasticity  எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய  வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.. பெரும்பாலும், மனிதர்களாலும், சாலைப் போக்குவரத்து, மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றினால் ஆக்கிரமிப்பு தாவரங்கள்  பல்கிப் பெருகுகின்றன.

 .2015 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் ,  குரோமோலேனா ஓடோராட்டா, லந்தானா மற்றும்  தோட மரமாக அறிமுகமான குடை மரம் எனப்படும் மீசோப்சிஸ் எமினி (Siam weed Chromolaena odorata, lantana and umbrella tree Maesopsis eminii) ஆகியவற்றினால்  அச்சூழலின் இயல் தாவரங்களுக்கு உண்டாகியிருக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகள் கண்டறியபட்டது. இது சமீபத்திய ஒரு முக்கிய உதாரணம்

குடை மரம்

2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு  ஆய்வு இந்தியாவில் மட்டும் சுமார் . 200 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனங்கள்  உள்ளதால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக இந்தியாவையும் சுட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்ட லந்தானாவுடன், பார்த்தீனியம், சியாம் களை, மெக்ஸிகன் பிசாசு (ஏகெரடினா அடினோஃபோரா-Ageratina adenophora ) மற்றும் கருவேலம் (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா- Prosopis juliflora) ஆகியவை இந்தியாவின் மிகவும் மோசமான ஆக்கிரமிப்புகளில் சில. வெங்காயத்தாமரை (ஐக்கோர்னியா கிராசிப்ஸ்- Eichhornia crassipes) பல உள்நாட்டு நீர் நிலைகளை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது., பொன்னாங்கண்ணி கீரை போலவே இருக்கும்  அலிகேட்டர் களையான  (ஆல்டர்னான்திரா பிலாக்ஸீராய்டெஸ்-Alternanthera philoxeroides) இந்தியாவில் நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு வாழ்விடங்களை  வெகுவாக ஆக்கிரமித்திருக்கிறது. இவற்றில் மிக குறிப்பிட்டு சொல்லும்படியான உலகளாவிய இடையூறுகளை கொடுத்துக் கொண்டிருப்பது பார்த்தீனியம் களைச்செடி

உலகளவில், ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிரில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறது. சில ஆக்கிரமிப்பு களைகள் உள்ளூர்  பொருளாதாரத்தை எதிர்மறையாகவும் பாதிக்கலாம்.  

இக்களைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வழங்கக்கூடும் என்றாலும், விவசாயத்தில் விளைச்சலைக் குறைக்கின்றன, . சில ஆழமான வேரூன்றிய ஆக்கிரமிப்பு களைகள் மண்ணிலிருந்து  ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளுகின்றன. இன்னும் சில பயிர்களை தாக்கும் பூச்சி இனங்களுக்கு உணவுகளை வழங்குகின்றன.

அலிகேட்டர் களை

  மேய்ச்சல் நிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல களைகள் பூர்வீக தீவன தாவரங்களுடன் போட்டியிடுகின்றன, மேய்ச்சல் நிலங்களில் ஆக்கிரமிப்பு களைகளிலிருந்து தீவன இழப்பு அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.  மகரந்தச் சேர்க்கை களில் இடையூறு மற்றும் பழ உற்பத்தியில் இழப்பு ஆகியவையும் இவற்றின் ஆக்கிரமிப்பால் எற்படுகின்றன.

 காலநிலை மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்பு தாவர  இனங்களால் உண்டாகி இருக்கும்  சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் பெரும்பாலும் சர்வதேச அளவில் இல்லாமல் உள்நாட்டு அளவில் தான் கவனிக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த செயல் திட்டம் கொண்டு வரப்பட்டால் இவற்றை மெல்ல மெல்ல குறைக்கவும் அழிக்கவும் முடியும்

வெங்காய தாமரை