கடந்த வருடம் எனக்கும் என் அம்மாவிற்குமாய் தீவிரசிகிச்சை அளித்த ஒரு  மருத்துவருக்கு நான் எழுதிய ஒரு கடிதம்இது.   தவிர்க்க முடியாதபடி மருத்துவத்திற்கு ஆளாகவேண்டியுள்ள  நோயாளிச் சமூகத்தின் பிரதிநிதியாக என் trigeminal neuralgia விற்கு பிறகு  மீண்டும் அவரிடம் குடும்பமாய் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டி இருந்ததால் இரண்டிற்கும் சேர்த்து இந்த நன்றிக்கடிதத்தை கோவை மருத்துவர்  திரு பாலகுமார் அவர்களுக்கு எழுதினேன்.

எனக்கு ஏற்பட்ட வலியை எங்களூரில் பல் வலியென்று கண்டுபிடித்து (?) root canal சிகிச்சைக்கெல்லாம் என்னை தயார் படுத்தினார்கள். பின்னரே நான் அவரிடம் மருத்துவ ஆலோசனைக்காக வந்தேன். 20 நிமிடங்களில் இது ஒரு நரம்பு,  அதன் பாதுகாப்பிற்கென இருக்கும் மேற்பூச்சை இழப்பதால் வரும் கடுமையான வலி  என்னும் மிகச்சரியானதோர் கண்டறிதலுக்கு  வந்து, சரியான ஆலோசனை வழங்கினார். Remarkable diagnosis!!

MRI ,  CT எல்லாம்  எடுக்க சொல்லவில்லை.மிகத்துல்லியமான கண்டறிதல், அதற்கான குறிப்பிட்ட வலிநிவாரணியைப் பரிந்துரைத்தார்.. ஒரு வேளை இதற்கு மேலதிக சில பரிசோதனைகள் செய்ய வேண்டுமெனச்சொல்லியிருந்தாலும் கட்டுப்பட்டிருப்பேன். எனினும் அப்படி சொல்லாமல் எளிமையான முறையில் மிக விலைகுறைந்த   (20 மாத்திரைகள் 11 ரூபாய்கள்) சரியான மருந்துகளை பரிந்துரைத்தார். கோவை தற்போது medical capitol என்று அழைக்கப்பட்டாலும் அங்கும் நோயாளிகளை கசக்கிப்பிழியும் அறமற்ற மருத்துவமனைகளே ஏராளம் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் குடும்ப மருத்துவர் வசந்திற்கு அடுத்து அறத்தின் பேரிலான  நிலைப்பாட்டுடன் சிகிச்சை அளிப்பது இவர்தான்

எனக்குப்பின்னர் வெகு சில நாட்களிலேயே என் பெற்றோர்களுக்கும் சிகிச்சை அதிலும் என் அம்மாவிற்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோயாளியான அம்மாவை 75 வயதிற்கு பின்னரான இந்த இருதய அடைப்பிலிருந்தும் அதன் உடனான சில கோளாறுகளிலிருந்தும் மீட்டெடுத்து உயிரளித்தது மருத்துவ இயலின் எல்லைகள் தாண்டிய ஒரு சிகிச்சை.

அவரிடம் மிகச் சிறப்பானதென்னவென்றால் நம்பிக்கை ஊட்டும்  உடல் மொழி.  அம்மா அப்பாவை மெல்ல தொட்டு அல்லது தட்டியபடி புன்னகையுடன் பேசும் அந்த உடல்மொழியிலேயே  உடல்நிலை பெரும்பாலும்  சீராகிவிடும்., அவ்வப்போது நல்ல தமிழிலும் பேசுகிறார்..

இந்தியாவில்  பெரிய சிக்கல். டாக்டர்களின் ஈகோ   என்பார் ஜெயமோகன். செகண்ட்ஒப்பீனியன் கேட்பதை பெரிய குற்றமாகவே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனமுவந்து அம்மாவை அம்மாவின் விருப்பத்திற்குரிய மருத்துவரிடம் காட்டவேண்டுமென்றால் காட்டசொல்லியதையும் நினைவு கூறுகிறேன்.. இரண்டாம் கருத்தை நாடினார் என்பதற்காகவே நோயாளிகளை தண்டிக்கும் டாக்டர்களைப்பற்றி நாம் ஏராளம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  அறத்துடன் திறமையும் பெருந்தன்மையும் சேர்ந்த ஒரு மருத்துவராக அவர் மேல் என் மதிப்பு பலமடங்கு கூடி இருக்கிறது இப்போது.

நோய்களுக்கு சிகிச்சைசெய்யும்போது நோயாளியின் மனதில் உள்ள அவநம்பிக்கையை போக்குவதையும் ஒரு சிகிச்சையாகவேசெய்யவேண்டுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், ,.   உடல்நோய்களின் விளைவாக அவநம்பிக்கையிலும் வாழ்வு குறித்த எதிர்மறைசிந்தனையிலும் இருக்கும் நோயாளிகளை. வாழவேண்டுமென்ற விருப்புறுதி நோக்கி தள்ளிச்செல்வது மருத்துவரின் உடல்மொழியே.( ஜெயமோகன்) அதுவே நோய்களுக்கு முதல் மருந்து. அது அவரிடம் இருக்கிறது.

.  என் அம்மாவைப்போல முதுமையில் வலியின் முன் மண்டியிட்டு மன்றாடி   மருத்துவரிடம்   உடலை பலர் ஒப்படைக்கிறார்கள்.    நோய் எனும் அந்த ராட்சத வல்லமைக்கு சரியான  பதில் சொல்கிற ஒரு சில திறன் வாய்ந்த மருத்துவரகளில் அவரும் ஒருவர்.  அம்மா அடைந்த வேதனைகளிலிருந்து அவர்களை விடுவித்து. குணப்படுத்தினார். அவருக்கும் அவருடன் இணைந்திருந்த மருத்துவர்களுக்கும் என் நன்றிகள்.  ஒரு நேர்மையான திறமையான மருத்துவராக தனது பங்கை சரியாக செய்த ஒருவருக்கான நன்றிக்கடிதம் இது.

மருத்துவத்துறையின்  இந்த அறமின்மைக்கு மாற்றாக அவர் வெகு சீக்கிரம் துவங்கப்போகும் சொந்த மருத்துவமனை,    இருக்குமென்பதால் அதற்கு  “அறம் ” என்றே கூட பெயரிட்டுவிடலாம்.

மருத்துவத்துறை பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டநிலையில் எந்த  தகிடு தத்தங்களும் இல்லாமல் எளிய மருந்துகளின் மூலமாகவும் நம்பிக்கையான உரையாடல்களாலும் மாத்திரமே  வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்பதற்கும்  என்னைப்போன்றவர்கள் முற்றிலும் நம்பிக்கையிழக்காமலிருப்பதற்கும்  திரு பாலகுமாரும்,திரு வசந்த் அவர்களுமே காரணம்.  எதிர்காலத்தில்இவரும்  திரு ஆல்வாவாகவே எளிய மக்களின் வாழ்வில் அறியப்படுவார் என்றே நம்புகிறேன், விரும்புகிறேன்,. அவரின் எதிர்கால புதிய சொந்த மருத்துவமனைக்கு என் வாழ்த்துக்களுடனும் ,மீண்டும் அனைத்திற்குமான நன்றிகளுடனும்

லோகமாதேவி

 

 

,